அச்சமூட்டும் டிரம்பின் வரிக்கொள்கை – அமெரிக்கா பயணமாகிறார் அமைச்சர் விஜித ஹேரத் !
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது இரண்டாவது பதவிக் காலத்தின் முதல் உரையில், காங்கிரஸின் இணைக் கூட்டத்தில் தனது கடுமையான வரிக் கொள்கைகளை வெளியிட்டிருந்ததுடன் , அமெரிக்கா நீண்ட காலமாக பல நாடுகளிடமிருந்து அதிக வரிகளை எதிர்கொண்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டினார். ஏப்ரல் 2 முதல் கனடா, மெக்ஸிகோ, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் மீது தனது நிர்வாகம் வரிகளை விதிக்கும் என்று அவர் அறிவித்திருந்தார்.
கடந்த ஆண்டு, அமெரிக்கா இலங்கையிலிருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்தது, ஆடைத் துறையின் 70% க்கும் அதிகமான பொருட்கள் அமெரிக்காவிற்குச் சென்றன, இதனால் அந்த நாடு இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக மாறியிருந்த நிலையில் ட்ரம்பின் அறிவிப்பு இலங்கை பொருளாதாரத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கூறப்படுகின்றது. இலங்கை அமெரிக்காவிலிருந்து 330 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்கின்றது.
அமெரிக்கா இலங்கைக்கான நேரடியான வரிக்கொள்கையை அறிவிக்காவிட்டாலும் ஏனைய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரி அதிகரிப்பு இலங்கையிலும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், 2025 ஏப்ரல் 02 முதல் நடைமுறைக்கு வரும் வரிகள் குறித்து அமெரிக்க வர்த்தக அலுவலகத்துடன் கலந்துரையாடுவதற்காக இலங்கை தூதுக்குழு அடுத்த மாதம் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைமை ஸ்திரமின்றி இருப்பதால், ஏற்றுமதிகள் மீதான இத்தகைய வரிகளை இலங்கையால் தாங்க முடியாது என்று அமைச்சர் ஹேரத் சுட்டிக்காட்டியதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்திற்குள் செயல்படும் இலங்கைக்கு, அதிகரித்த கட்டணங்களைத் தாங்க முடியாததால், வரிச் சலுகை கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.