சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம்

அச்சமூட்டும் டிரம்பின் வரிக்கொள்கை – அமெரிக்கா பயணமாகிறார் அமைச்சர் விஜித ஹேரத் !

அச்சமூட்டும் டிரம்பின் வரிக்கொள்கை – அமெரிக்கா பயணமாகிறார் அமைச்சர் விஜித ஹேரத் !

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது இரண்டாவது பதவிக் காலத்தின் முதல் உரையில், காங்கிரஸின் இணைக் கூட்டத்தில் தனது கடுமையான வரிக் கொள்கைகளை வெளியிட்டிருந்ததுடன் , அமெரிக்கா நீண்ட காலமாக பல நாடுகளிடமிருந்து அதிக வரிகளை எதிர்கொண்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டினார். ஏப்ரல் 2 முதல் கனடா, மெக்ஸிகோ, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் மீது தனது நிர்வாகம் வரிகளை விதிக்கும் என்று அவர் அறிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு, அமெரிக்கா இலங்கையிலிருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்தது, ஆடைத் துறையின் 70% க்கும் அதிகமான பொருட்கள் அமெரிக்காவிற்குச் சென்றன, இதனால் அந்த நாடு இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக மாறியிருந்த நிலையில் ட்ரம்பின் அறிவிப்பு இலங்கை பொருளாதாரத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கூறப்படுகின்றது. இலங்கை அமெரிக்காவிலிருந்து 330 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்கின்றது.

அமெரிக்கா இலங்கைக்கான நேரடியான வரிக்கொள்கையை அறிவிக்காவிட்டாலும் ஏனைய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரி அதிகரிப்பு இலங்கையிலும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், 2025 ஏப்ரல் 02 முதல் நடைமுறைக்கு வரும் வரிகள் குறித்து அமெரிக்க வர்த்தக அலுவலகத்துடன் கலந்துரையாடுவதற்காக இலங்கை தூதுக்குழு அடுத்த மாதம் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலைமை ஸ்திரமின்றி இருப்பதால், ஏற்றுமதிகள் மீதான இத்தகைய வரிகளை இலங்கையால் தாங்க முடியாது என்று அமைச்சர் ஹேரத் சுட்டிக்காட்டியதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்திற்குள் செயல்படும் இலங்கைக்கு, அதிகரித்த கட்டணங்களைத் தாங்க முடியாததால், வரிச் சலுகை கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 இலங்கை முன்னேற்றப் பாதையில் – IMF நிர்வாக இயக்குநர் வாழ்த்து

இலங்கை முன்னேற்றப் பாதையில் – IMF நிர்வாக இயக்குநர் வாழ்த்து

இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை வாழ்த்துவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அனுர திசாநாயக்கவுடன் காணொளி தொழில்நுட்பம் மூலம் நடத்தப்பட்ட சந்திப்பு பற்றி அவர் தனது ‘X’ கணக்கில் ஒரு பதிவில் கூறினார்.

முதலீட்டை ஈர்த்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதன் அவசியம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக அவர் மேலும் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டுதலின் கீழ் தொடர்ச்சியான சீர்திருத்தங்களின் முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அவர் தனது ‘X’ கணக்கில் தெரிவித்தார்.

IMF இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் ஆதரவளிப்பதில் உறுதியான பங்காளியாக இருக்கும் – ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் முடிவில் சர்வதேச நாணய நிதியம் !

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்வதற்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன்,  சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீற்றர் ப்ரூயர் உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவினர் மற்றும் IMF பேச்சுவார்த்தைகளுக்கான நியமிக்கப்பட்ட இலங்கையின் பிரதிநிதிகள் குழுவினரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

கலந்துரையாடலை முடித்துக்கொண்டதன் பின்னர் விசேட அறிக்கை ஒன்றை இன்று (04) வெளியிட்டுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன், இந்த தூதுக்குழுவின் தலைவராகப் பணியாற்றினார்.

குறித்த அறிக்கையில்,

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் நிதி சவால்கள் தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் இலங்கையின் பொருளாதார குழுவுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டோம்.

2022 ஆம் ஆண்டில் இலங்கை எதிர்க்கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் கடின வெற்றிகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

“சீர்திருத்த முயற்சிகளுக்கான அதிகாரிகளின் அர்ப்பணிப்பு, எம்மை ஊக்குவிக்கிறது.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் ஆதரவளிப்பதில் உறுதியான பங்காளியாக உள்ளதுடன் நாட்டின் பொருளாதார சீர்திருத்த இலக்குகளை அடைவதில் உதவ தயாராக உள்ளது.

சர்வதேச நாணய நிதியகத்தின் ஆதரவு திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வுக்கான திகதியை நிர்ணயிப்பதற்காக சர்வதேச நாணய நிதிய குழு இலங்கையின் பொருளாதார குழுவுடன் அதன் நெருங்கிய ஈடுபாட்டைத் தொடருந்தும் பேணுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார மீட்சிக்கு அடித்தளமாக இருக்கும் நிர்வாக மேம்பாடுகளில் இன்னும் பின்தங்கி உள்ள இலங்கை !

சர்வதேச நாணய நிதியத்தின்  நிர்வாக சபை எதிர்வரும் 12 ஆம் திகதி இலங்கையின்  மூன்றாவது கொடுப்பனவை அனுமதிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய வேலைத்திட்டத்தின் கீழ் இந்த அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறாயினும், இலங்கை அதன் பொருளாதார மீட்சிக்கு அடித்தளமாக இருக்கும் நிர்வாக மேம்பாடுகளில் இன்னும் பின்தங்கியே உள்ளதாக வெரிட்டே நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதன்படி, 2023 டிசம்பரில் புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு மே மாத இறுதிக்குள் இலங்கை 25 வீதக் கடப்பாடுகளை நிறைவேற்ற தவறியுள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நிறைவேற்ற வேண்டிய 63 பொறுப்புகளில் 32 பொறுப்புக்கள் நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்16 பொறுப்புகளை நிறைவேற்றவில்லை எனவும் 15 பொறுப்புக்கள் குறித்து தகவல்கள் எதுவும் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே நிறைவேற்றப்படாத 16 உறுதிமொழிகளை ஆராயும்போது அவற்றில் 7 நிபந்தனைகள் நிதி மேலாண்மையுடன் சம்பந்தப்பட்டவை எனவும் கூறப்படுகின்றது.

மேலும், 6 நிபந்தனைகள் நிதி வெளிப்படைத்தன்மை விடயத்திலும், 3 நிபந்தனைகள் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுடனும் தொடர்புடையவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாணய நிதியத்தின் விருப்பத்துக்கு அமைய நாட்டின் அரசியலமைப்பு இயற்றப்படவில்லை. -பேராசிரியர் சரித ஹேரத்

சர்வதேச நாணய நிதியத்தின் விருப்பத்துக்கு அமைய நாட்டின் அரசியலமைப்பு இயற்றப்படவில்லை.ஆகவே அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

 

கொழும்பில் புதன்கிழமை (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் தெரிவித்ததாவது,

 

சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்திட்ட நடவடிக்கைகள் நிறைவுப் பெறும் வரை எந்த தேர்தலையும் நடத்த போவதில்லை என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது.

 

சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் செயற்பாடுகள் எதிர்வரும் ஜூலை மாதம் நிறைவடைவதாக குறிப்பிடப்படுகிறது.பொதுத்தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.

 

எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.அதற்கு முன்னர் எந்த தேர்தலும் நடத்தப்படாது என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு தான் ஜனாதிபதி அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

சர்வதேச நாணய நிதியத்தின் விருப்பத்துக்கு அமைய நாட்டின் அரசியலமைப்பு இயற்றப்படவில்லை.ஆகவே அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

 

தேர்தல் வாக்கெடுப்புக்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் ஜூலை மாதம் முன்னெடுக்கும்.

 

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் தொடர்பில் சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி ஊடாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட தீர்மானித்துள்ளோம் என்றார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை தற்போது மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தில் திருத்தங்களை செய்வோம் – சஜித் பிரேமதாச

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை தற்போது மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான  அரசாங்கம் திருத்தங்களை மேற்கொள்ளுமென அந்த கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் தொடர்பான கட்சியின் நிலைப்பாட்டை, நிதியத்தின் பிரதிநிதிகளுடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது தான் அவர்களுக்கு எடுத்துரைத்ததாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது காணப்படும் பிரச்சனைகளுக்கான நேரடி தீர்வுகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடியுள்ளது.

இதன்படி, தற்போதைய சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தில் ஐக்கிய மக்கள் சக்தி எதிர்காலத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமென அவர் உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் உள்ள ஏனைய அரசியல் கட்சிகள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டாலும் தமது கட்சி நிச்சயம் மேற்கொள்ளுமெனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவுடனான சந்திப்பை சில அரசியல் கட்சிகள் புறக்கணித்திருந்ததாக சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாணய நிதியத்தை மீறி எங்களால் செயற்படமுடியாது – அரசாங்கம் திட்டவட்டம் !

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய கடன் வழங்குநர்களுடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டைத் தவிர்த்து, நாட்டின் பொருளாதாரத்தை ஒரு தினத்திற்கும் முன்னெடுத்துச் செல்ல முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போதே, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

“சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டத்தை செயல்படுத்தாவிட்டால், யார் அரசாங்கத்தை நிர்வகித்தாலும் எந்த ஜனாதிபதி நாட்டை ஆண்டாலும் அரசாங்கத்தின் ஆயுட்காலம் இரண்டு வாரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு விடும். தடம் புரண்டிருந்த நாட்டின் பொருளாதாரத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் கடந்த வருடத்தில் மீள நிவர்த்தி செய்துள்ளது. பிறந்துள்ள புதிய வருடம் தீர்க்கமான ஒரு வருடமாகும்.

 

தற்போது நிலவும் பொருளாதார சவால் 2027 ஆம் ஆண்டு வரை தொடரும். சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டம் 2027 ஆம் ஆண்டு நிறைவு பெறும் வரை சட்டப்படி செயற்பட்டாலே நெருக்கடியை நிவர்த்தி செய்ய முடியும்.

சர்வதேச இணக்கப்பாட்டுடனான சட்டங்கள் மற்றும் நிதி முறைமைக்கு இணங்க நாடு என்ற ரீதியில் நாம் நிதி சந்தைக்கு சென்று பிணைமுறியை விநியோகித்து கடனைக் கோரினாலும் 2027 ஆம் ஆண்டு எமக்கு 1500 மில்லியன் டொலர்களை மட்டுமே கடனாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

2027 ஆம் ஆண்டு வரை மூன்று, நான்கு வருடங்களுக்கு இந்த சவால்கள் தொடரும்.

பெருமளவு இறக்குமதியிலேயே தங்கியுள்ள பொருளாதாரத்தை கொண்டுள்ள எமது நாடு எரிபொருள், உரம், மருந்து, இரசாயன பொருட்கள், அரிசி, மா, சீனி, கிழங்கு, வெங்காயம், பருப்பு, மிளகாய் உள்ளிட்ட நுகர்வு பொருட்கள் மற்றும் இயந்திரங்கள், வாகனங்கள் போன்றவற்றையும் இறக்குமதி செய்தே ஆக வேண்டும்.

அவற்றை இறக்குமதி செய்வதற்காக அரசாங்கத்தின் கையிருப்பின் அடிப்படையில் கடன் பத்திரத்தை விநியோகிப்பது அவசியம். இந்த பொருட்களைக் கொள்வனவு செய்யாமல் இரண்டு வாரங்களையும் எம்மால் முன்னெடுத்துச் செல்ல முடியாது.” என்றார்.

இலங்கை வளர்ச்சியை நோக்கி பயணிக்க 16 அம்சங்களை உள்ளடக்கிய பரிந்துரைகளை வெளியிட்டுள்ள சர்வதேச நாணய நிதியம் !

இலங்கை பொருளாதார வளர்ச்சியை நோக்கி பயணிப்பதற்கான பதினாறு அம்சங்களை உள்ளடக்கிய நிர்வாக ஆளுகை மதிப்பீட்டை சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு 2.9 பில்லியன் கடனுதவியை சர்வதேச நாணய நிதியம் வழங்கியிருந்த நிலையில், அது தொடர்பான முதலாம் கட்ட மீளாய்வு அண்மையில் நடைபெற்றிருந்தது.

இந்த நிலையில், தற்போது பதினாறு அம்சங்களை உள்ளடக்கிய நிர்வாக ஆளுகை மதிப்பீட்டை சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் அடுத்த ஆண்டின் இறுதிக்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய பதினாறு அம்சங்களை உள்ளடக்கிய வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் காணப்படும் நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் அரசாங்க செயல்பாடுகளுக்குள் வேரூன்றிய ஊழல் சிக்கல்களை நிவர்த்தி செய்வது இந்த மதிப்பீட்டின் நோக்கமாக அமைந்துள்ளது. இதன்படி, இலஞ்சம் மற்றும் ஊழலுக்கெதிரான ஆணைக்குழுவுக்கு ஆணையாளர் நாயகம் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோரை இணைத்துக் கொள்ளும் பணிக்காக அடுத்த மாதமளவில் சுயாதீன நிபுணர்களை உள்ளடக்கிய ஆலோசனை குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமென நிதியத்தின் நிபந்தனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஊழியர் சேமலாப நிதியத்தின் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் புதிய நிர்வாகமொன்றை அமைப்பது குறித்த அமைச்சரவை பத்திரம் எதிர்வரும் ஜுன் 2024 ஆம் ஆண்டில் சமர்பிக்கப்பட வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

வரிச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளல், பொதுக் கொள்முதல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளல் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களை குறித்த அறிக்கையில் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இவற்றை வெற்றிகரமாக முன்னெடுப்பதன் மூலம் இலங்கை பொருளாதார வளர்ச்சியை நோக்கி பயணிக்குமென நிதியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery

Gallery

IMF உடனான பயணம் நல்லதல்ல எனக்கூறும் பெரும்பான்மையான இலங்கையர்கள் – ஆய்வில் வெளியாகியுள்ள தகவல் !

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தம் இறுதியில் நாட்டின் பொருளாதாரத்தில் சாதகமான விளைவை ஏற்படுத்தும் என இலங்கை சனத்தொகையில் 28% மட்டுமே நம்புவதாக வெரிட்டி ரிசர்ச் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

வெரிட்டி ரிசர்ச் கடந்த ஜூன் மாதம் 1008 இலங்கைப் பிரஜைகளை உள்ளடக்கிய கணக்கெடுப்பை நடத்தியது. கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 45% பேர் சர்வதேச நாணய நிதியத்துடனான பயணம் நல்லதல்ல என்று கூறியுள்ளனர்.

ஐஎம்எஃப் உடனான இந்த ஒப்பந்தம் நல்லதாக இருக்குமா இல்லையா என்பது குறித்து தங்களால் திட்டவட்டமான கருத்தை தெரிவிக்க முடியாது என்று கணக்கெடுப்பில் பங்கேற்ற 27% பேர் கூறியுள்ளனர். 28 வீதம் பேர் மட்டுமே IMF ஒப்பந்தம் நாட்டின் பொருளாதாரத்தில் சாதகமான விளைவை ஏற்படுத்தும் என நம்புகின்றனர்.

இதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) புதிய உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்படமாட்டாது என நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்லவில் நேற்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதியமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுக் கடனை மேம்படுத்துவதற்கான அடிப்படைத் தேவையாக இருந்த உள்நாட்டுக் கடன் உகப்பாக்கம் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், எனவே வெளிநாட்டுக் கடனை மேம்படுத்துவதையும் விரைவில் முடிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

“சர்வதேச நாணய நிதியத்தின் கடன் பிடிக்குள் சிக்கியுள்ள இலங்கையில் காலனித்துவ ஆட்சியே நடக்கிறது.” – அனுரகுமார விசனம் !

இலங்கைக்கு அதன் வரிவிதிப்பு அல்லது நிதிக் கொள்கைகளை தீர்மானிக்க சுதந்திரம் அல்லது இறையாண்மை இல்லை என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய பிக்கு முன்னணி ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,

“வரிவிதிப்பு, நிதிக் கொள்கைகள் போன்றவற்றின் அனைத்து முடிவுகளும் அமெரிக்க தலையீட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கேற்ப செய்யப்படுகின்றன.

நாடாளுமன்றத்திற்கு பொது நிதி அதிகாரம் இருப்பதாக கூறப்பட்டாலும், இலங்கையில் வரிகளை சுமத்துவதற்கும், மாற்றுவதற்கும் மற்றும் நீக்குவதற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கு அதிகாரம் உள்ளது.

மத்திய வங்கி திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டு நாள் விவாதத்தை எதிர்க்கட்சிகள் கோரியபோது, அது சாத்தியமில்லை, விவாதம் இரண்டு நாட்களுக்கு நீடித்தால், சர்வதேச நாணய நிதியம் வழங்கிய காலக்கெடுவை பாதிக்கும்.

இது, சட்டங்களைத் திணிப்பதும், பொது நிதி மீதான கட்டுப்பாடும் இனி நாடாளுமன்றத்தின் கீழ் இல்லை என்பதை இது காட்டுகிறது. அத்துடன் தற்போதைய ஆட்சி காலனித்துவ ஆட்சிக்கு ஒத்ததாக இல்லையா?  எனவே மக்களின் சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்கான புதிய போராட்டம் தற்போது தேவைப்படுகிறது.” என்றார்.