சர்வதேச நீதிமன்றம்

சர்வதேச நீதிமன்றம்

இஸ்ரேல் , பலஸ்தீன  பகுதிகளை ஆக்கிரமித்திருப்பதும், அங்கு குடியேற்றம் செய்வதும் சட்டவிரோதமானது – சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

இஸ்ரேல் , பலஸ்தீன  பகுதிகளை ஆக்கிரமித்திருப்பதும், அங்கு குடியேற்றம் செய்வதும் சட்டவிரோதமானது என்பதால் அதனை விரைவில் திரும்பப் பெற வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை, சர்வதேச நீதிமன்றம் நேற்று (19.07.2024) பிறப்பித்துள்ளது. இதற்கமைய, சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் ஆலோசனைக் கருத்தின் காரணமாக, சர்வதேச சட்டத்தின் கீழ் இஸ்ரேலுக்கான ஆதரவு பலவீனப்படுத்தப்படலாம்.

அதேவேளை, சர்வதேச நீதிமன்றத்தின் தலைவர் நவாஃப் சலாம், பலஸ்தீனப் பிரதேசத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு குறித்து 15 நீதிபதிகள் கொண்ட குழு வழங்கிய கட்டுப்பாடற்ற ஆலோசனைக் கருத்தை நேற்று வாசித்துள்ளார்.

இதற்கமைய, மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் இஸ்ரேலிய குடியேற்றங்களை கட்டியெழுப்புதல் மற்றும் விரிவுபடுத்துதல், அப்பகுதியின் இயற்கை வளங்களைப் பயன்படுத்துதல், நிலங்களை இணைத்தல், நிரந்தரக் கட்டுப்பாட்டை விதித்தல் மற்றும் பலஸ்தீனியர்களுக்கு எதிரான பாரபட்சமான கொள்கைகள் உட்பட பல கொள்கைகள் சர்வதேச சட்டத்தை மீறும் வகையில் உள்ளதாக நீதிபதிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும், சர்வதேச நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவை மறுக்கும் விதத்தில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன்படி, “யூத மக்கள் தங்கள் சொந்த நிலத்தினை ஆக்கிரமிப்பவர்கள் அல்ல, எமது நித்திய தலைநகரான ஜெருசலேமிலிலோ, யூதேயாவிலோ மற்றும் சமாரியாவில் உள்ள எங்கள் முன்னோர்களின் நிலத்திலும் நாங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் இல்லை” என்று நெதன்யாகு கூறியுள்ளார்.

மேலும், பல இஸ்ரேலிய அரசுப் பேரவையின் அமைச்சர்கள் மற்றும் குடியேறிய தலைவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை கடுமையாக கண்டித்துள்ளனர். அதுமாத்திரமன்றி, சிலர் இதற்கு பதிலடியாக மேற்கு கரையை உடனடியாக முறையாக இணைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

 

இந்நிலையில், மே மாதம், தெற்கு காசாவின் ரஃபா மீதான தாக்குதலை நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், நீதிமன்றத்தை மீறி காசா, ரஃபா உள்ளிட்ட இடங்களில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் – சர்வதேச நீதிமன்றம் உத்தரவு!

காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.

 

மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும் பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.

 

மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும் பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

யூலியன் அசான்ஜ் – மக்ஸின் குஸ்ஸிநோவ்: ஒருவருக்கு கதாநாயகன் மற்றவருக்கு துரோகி – தொடரும் சர்வதேச படுகொலைகள்!

இவ்வாரம் சர்வதேச அரசியல் சூழலில் மிக முக்கியமான வாரம். சர்வதேச அரசியலில் யார் எந்தப் பக்கம் நிற்கின்றார்கள் என்பதைப் பொறுத்தே அதன் சாதக பாதகங்களும் அமையும். பல் துருவ அரசியல் வலுப்பெற்று அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் இராணுவ அரசியல் ஆளுமையின் பலம் முன்னைய நிலையிலிருந்து சற்று பலவீனப்பட்டுப் போயுள்ளதன் பின்னணியில் இவற்றைக் காணலாம்.

மேற்குலகின் முழு ஒத்துழைப்புடன் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக்கு 53 நாடுகளும் மூன்று நிறுவனங்களும் இணைந்து தொடுத்துள்ளன. பெப்ரவரி 19இல் ஆரம்பமான இவ்வழக்கில் 76 ஆண்டுகள் பாலஸ்தீனிய மண் சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்டது மற்றும் பாலஸ்தீனிய மக்கள் மீதான ஆக்கிரமிப்பின் சட்டத்தன்மை பற்றியும் சர்வதேச நீதிமன்றம் முடிவெடுக்க உள்ளது. சர்வதேச நீதிமன்றத்தின் முடிவுக்கு, இஸ்ரேவேலின் ஊழல் குற்றவாளியும் இனப்படுகொலை பிரதமருமான பென்ஜமின் நெதன்யாகு கட்டுப்படப்போவதில்லை.

ஆனாலும் இந்த இனப்படுகொலைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கிவரும் அமெரிக்க, பிரித்தானிய, மேற்குலக மற்றும் ஐரோப்பிய அரசுகள் தொடர்ந்தும் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கும் இனச்சுத்திகரிப்புக்கும் துணை போனால் அவர்கள் போட்டிருக்கும் ஜனநாயகப் போர்வை முற்றாகப் பொசுங்கிவிடும். சர்வதேசத்தில் அவர்களும்; கொலையாளிகளாகவும் காட்டான்களாகவுமே பார்க்கப்படும் நிலையுள்ளது. அதனால் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் தற்போது இஸ்ரேலை சற்று கண்டிக்க ஆரம்பித்துள்ளன. யுத்த நிறுத்தம் என்பது தீண்டத்தகாத சொல்லாக இருந்த நிலைமை மாறி யுத்த நிறுத்தம் வேண்டும் என்று கோரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அப்படியிருந்தும் ஐநாவில் அல்ஜீரியாவால் கொண்டுவரப்பட்ட உடனடி யுத்த நிறுத்தத் தீர்மானத்தை மீண்டுமொரு தடவை இன்று பெப்ரவரி 20 அமெரிக்கா எதிர்த்து வாக்களித்துள்ளது. பிரித்தானியா வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

பாலஸ்தீனத்தில் 30,000 உயிர்கள், பெரும்பாலும் குழந்தைகளும் பெண்களும் கொல்லப்பட்ட போதும் ஒரு இனமே அழிக்கப்பட்டு வருகின்ற போதும் மனித உரிமைகள் பற்றி மூச்சுக்காட்டாமல் இருந்த அமெரிக்க நேட்டோ அணி ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி பெப்ரவரி 17இல் சிறையில் மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ந்து போனது. மேற்கு நாட்டு ஊடகங்கள் அனைத்தும் ரஸ்யாவை ‘பறையா ஸ்ரேட் – paraiah state’ என்று கூப்பாடு போட்டன. பல மேற்கு நாட்டு ஊடகங்கள் இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் கொண்டுவரப்பட்ட வழக்குப் பற்றி மௌனமாக இருக்கின்றன. ஆனால் பிரேஸில் ஜனாதிபதி லூல டி சில்வா காஸாவில் நடைபெறுவது இனப்படுகொலை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

எதியோப்பியாவில் நடைபெற்ற ஆபிரிக்க ஒன்றிய நாடுகளின் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த போதே பிரேஸில் ஜனாதிபதி லூல இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் அன்று ஹிட்லர் யூதர்களுக்கு செய்த அநீதியை இஸ்ரேல் தற்போது பாலஸ்தீனியர்களுக்கு இழைக்கின்றது என்றும் அன்று ஹிட்லர் செய்தது ஹொலக்கோஸ்ட். இன்று இஸ்ரேல் செய்வதும் ஹொலக்கோஸட் என்றும் ஒப்பிட்டு பெப்ரவரி 19இல் கருத்து வெளியிட்டார். ஒரு கண்ணியமிக்க அரசுத் தலைவர் இஸ்ரேலை இவ்வளவு பச்சையாகச் சாடியது இதுவே முதற்தடவை. இதே கருத்துப்பட துருக்கியின் ஆட்சித் தலைவர் ஏடவானும் கண்டித்ததும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பிரேஸில் – இஸ்ரேல் ராஜதந்திர உறவுகள் அடிமட்டத்துக்குச் சென்றுள்ளது.

இந்த அமளிதுமளிகள் அரங்கேறுவதற்கு சில தினங்களுக்கு முன் சரியான திகதி இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை, ரஷ்யரான மக்ஸின் குஸ்ஸிநோவ் என்பவர் ஸ்பெயினில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதுடன் அவர் மீது வாகனத்தையும் ஏற்றியுள்ளனர். ரஷ்ய இராணுவ ஹெலிகொப்டரை ஓட்டிச்சென்ற ரஷ்யர் மக்ஸின் குஸ்ஸிநோவ் உக்ரைனில் ஓகஸ்ட் 9, 2023இல் தரையிறங்கி உக்ரைனிடம் இருந்து 500,000 டொலரை சன்மானமாகப் பெற்றார். இதனை மிகப்பெரிய தேசத்துரோகம் என ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அறிவித்ததுடன் அதற்கான தண்டணை வழங்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தார். கொல்லப்பட்டவர் விளாடிமிர் புட்டினால் சுட்டிக்காட்டப்பட்ட ரஷ்ய ஹெலிகொப்டரைக் கடத்திச் சென்று கூட இருந்த இரு ரஷ்ய வீரர்களைப் படுகொலை செய்த மக்ஸின் குஸ்ஸிநோவ் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு துரோகி உக்ரைனுக்கும் நேட்டோ அணிக்கும் கதாநாயகனாக இருந்து இப்போது தியாகி ஆகிவிட்டார் மக்ஸி;ன் குஸ்ஸிநோவ்.

அலெக்ஸி நவால்னி, மக்ஸின் குஸ்ஸிநோவ் ஆகியோரின் மரணங்கள் பற்றி அவர்களது மனித உரிமைகள் பற்றி நேட்டோ அணி புலம்பிக்கொண்டிருக்கையில் உலகின் மிகப் பிரபல்யமான ஊடகவியலாளரான யூலியன் அசான்ஜ் யை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவது பற்றிய வழக்கு பிரித்தானிய நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் ஊடகவியலாளர் யூலியன் அசான்ஜ்யை விடுவிக்குமாறு கோரிய போதும் அதை எதனையும் பொருட்படுத்தாமல் யூலியன் அசான்ஜை சிறையில் வைத்துள்ளது, தன்னை மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் காவலாளியாகக் காட்டிக்கொள்ளும் பிரித்தானியா.

அன்றைய ஈராக் ஜனாதிபதி சதாம் ஹசைனிடம் பேரழிவு ஆயதங்கள் உள்ளது என அமெரிக்காவும் – பிரித்தானியாவும் கூட்டாகச் சதி செய்து ஈராக்கைத் தாக்கி அந்நாட்டை அதன் எண்ணை வளத்தை அபகரிக்க சின்னனாபின்னமாக்கினர். ஈராக்கில் அமெரிக்க இராணுவம் அப்பாவி மக்கள் மீதும் மிக மோசமான தாக்குதல்களை நடத்தியது. இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி அவர்களைச் சித்திரவதை செய்தது. இவற்றை அம்பலப்படுத்தியதற்காக தலைசிறந்த ஊடகவியலாளரான யூலியன் அசான்ஜ் மீது அமெரிக்கா தேசத் துரோகக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. இவர் அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அலெக்ஸி நவால்னி போல் மரணத்தைத் தழுவுவார் என யூலியன் அசான்ஜ் உடைய மனைவி அச்சம் வெளியிட்டுள்ளார்.

அத்தோடு யூலியன் அசான்ஜ்யை படுகொலை செய்ய அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இக்குற்றச்சாட்டை யூலியன் அசான்ஜ்க்கு நீண்டகாலம் தனது தூதரகத்தில் அடைக்கலம் கொடுத்த ஈக்குவடோரும் உறுதிப்படுத்தியுள்ளது. யூலியன் அசான்ஜ் ஒரு நாள் அலெக்ஸி நிவால்னி போன்றோ அல்லது மக்ஸின் குஸ்ஸிநோவ் போன்றே ஆகலாம் என்ற நிலையேற்பட்டுள்ளது.

மேற்குலகு விதந்துரைக்கும் மனித உரிமைகள், ஜனநாயகம் என்பதெல்லாம் அவரவர் நலன்சார்ந்ததே. “ஊருக்குத் தான் உபதேசம் உனக்கில்லையடி” என்றும் கொள்ளலாம் இல்லையேல் “படிப்பது தேவாரம் இடிப்பது சிவன்கோயில் என்றும் கொள்ளலாம்”.

அன்று இனவாத பிரிட்டோரியா அரசோடு இணைந்து நெல்சன் மண்டேலாவை பயங்கரவாதி என்று முத்திரை குத்திய பிரித்தானியா இறுதியில் அதே நெல்சன் மண்டேலாவுக்கு தன்னுடைய நாட்டிலேயே சிலை எழுப்ப நிர்ப்பந்திக்கப்பட்டது. பாலஸ்தீனியர்கள் இனப்படுகொலைக்கு செய்யப்படுவதற்கு ஒத்துழைக்கும் பிரித்தானியா எதிர்காலத்தில் பாலஸ்தீன அரசை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. பிரித்தானியா உலகில் மிக மோசமான குரூரமான காலனித்துவத்தை ஈவிரக்கமின்றி விஸ்தரித்த நாடு. ஆனால் அரசியல் சூழல்கள் மாற்றமடையும்போது அதற்கேற்ப மாறி தன்னுடைய குறைந்தபட்ச நன்மதிப்பை முற்றிலும் இழக்காமல் காப்பாற்றிக் கொண்டுள்ளது.

தற்போது நான்கு மாதம் கழிந்தபின் முன்வைக்கின்ற யுத்தநிறுத்தக் கோரிக்கையும் தன்னுடைய ஜனநாயகப் போர்வை பொசுங்கி தான் அம்பலப்பட்டுப் போவேன் என்ற அச்சமே. அது போல் யுலியன் அசான்ஜ் நாடுகடத்தல் வழக்கில், அவர் நாடுகடத்தப்பட்டால் உலகில் கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரத்துக்கு விழும் மிகப்பெரும் அடியாக அது அமையும். அது வரலாற்றில் பிரித்தானியாவின் நீதித்துறைக்கு ஏற்படும் மிகப்பெரும் கறையாக அமையும். ஏனைய நாடுகளும் பிரித்தானிய சட்டத்துக்கு இணங்க ஊடகவியலாளர்களை படுகொலை செய்வதை நியாயப்படுத்தும்.

“இஸ்ரேலை போரை நிறுத்துமாறு கூறாத சர்வதேச நீதிமன்றம் ஓர் அர்த்தமற்ற மாயை“ – அமைச்சர் டக்ளஸ்

தமிழ் அரசியல் தரப்புக்களினால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் சர்வதேச நீதிமன்றம் தொடர்பான எதிர்பார்ப்புக்கள் அர்த்தமற்றவை என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் அர்த்தமற்ற மாயைகளை தொடர்ந்தும் நம்பிக்கொண்டிருக்காமல் தீர்வுகளை அடைவதற்கான நடைமுறைச் சாத்தியமான முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

காஸா மீது இஸ்ரேல் முன்னெடுத்து வருகின்ற தாக்குதல் தொடர்பாக தென்னாபிரிக்காவினால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த போதே ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் மேற்கண்டாவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 14 வருடங்களுக்கு மேலாக சர்வதேச நீதிமன்றத்தின் ஊடகா தமிழ் மக்களுக்கு நீதி பெற்றுத் தரப்படும் என்ற கோஷங்களை சில தமிழ் தரப்புக்கள்; மக்கள் மத்தியில் விதைத்து வருகின்றன.

குறிப்பாக இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற உயிரிப்புக்களுக்கான நீதி மற்றும் காணாமல் போனோருக்கான பரிகாரம் போன்றவற்றை சர்வதேச நீதிமன்றத்தின் மூலமே பெற்றக்கொள்ள முடியும் எனவும் உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கை கொள்ள முடியாது எனவும் சொல்லுகின்ற தமிழ் அரசியல் தரப்புக்கள், தமிழ் மக்கள் மத்தியில் சர்வதேச நீதிமன்றம் தொடர்பான மாயையை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

தற்போது, இஸ்ரேல் விவகாரத்தில் தென்னாபிரிக்காவினால் சர்வதேச நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கிற்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பானது, சர்வதேச நீதிமன்றின் சிந்தனை மற்றும் பார்வை எத்தகையது என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றது.

ஆயிரக்கணக்கான மக்களை தினமும் அழித்துக் கொண்டிருக்கிற தாக்குதல்களை நிறுத்துமாறு உலகின் அதியுச்ச நீதிமன்றக் கட்டமைப்பான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிடவில்லை. இனப்படுகொலை மற்றும் யுத்த குற்றம் தொடர்பான சர்வதேச நியமங்களை மதித்து நடக்குமாறு சொல்லியிருக்கிறது.

காஸாவில் குறுகிய பிரதேசத்தில் பல லட்சம் அப்பாவி மக்கள் செறிந்து வாழ்கிறார்கள் என்பதோ, தாக்குதல் தொடர்ந்தால் அப்பாவி மக்களின் அழிவுகள் தவிர்க்க முடியாதவை என்பதோ சர்வதேச நீதிமன்றிற்கு தெரியாத சமாச்சாரங்கள் இல்லை.

அப்படியிருந்தும் தாக்குதலை நிறுத்துமாறு தீர்ப்பில் சொல்லப்படவில்லை.

இவ்வாறான சம்பங்கள் ஊடாக, சர்வதேச கட்டமைப்புக்களின் மனோநிலையையும் அவற்றின் நிகழ்ச்சி நிரல்கள் எத்தகையவை என்பதையும் எமது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

இஸ்ரேல் மீது தென்னாபிரிக்கா பதிவு செய்த இனப்படுகொலை வழக்கு – சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு !

இஸ்ரேலுக்கு எதிராக தென்னாபிரிக்காவினால் பதிவு செய்யப்பட்ட இனப்படுகொலை வழக்கிற்கு சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த வழக்கானது, இன்று(26) சர்வதேச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. காசா மீதான தாக்குதலில் இனப்படுகொலை செய்ததாக தென்னாபிரிக்கா இஸ்ரேல் மீது வழக்குத் தாக்கல் செய்தது.

இந்நிலையில், காசாவில் இஸ்ரேல் நடத்தும் போரில் இனப் பேரழிவு தொடர்பான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வதேச நீதிமன்றம் இன்று (26) இஸ்ரேலுக்கு தீர்ப்பளித்துள்ளது.

அத்தோடு, பலஸ்தீனர்களுக்கு இனப் பேரழிவு நடவடிக்கைகளின் போது தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை இருப்பதாகவும் சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், இனப் பேரழிவுக்கு எதிரான சட்டத்தின் கீழ் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய பிரிவினர் என்றும் சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் போரில் இஸ்ரேல் காசாவின் பெரும்பகுதியை தரைமட்டமாக்கி விட்டதுடன், 1.9 மில்லியன் மக்களை தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றிய நிலையில், குறைந்தது 25,900 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

 

இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் – சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா குற்றச்சாட்டு !

இஸ்ரேலிற்கு எதிராக தென்னாபிரிக்க சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

இனப்படுகொலை தொடர்பான சாசனத்தின் கீழ் தென்னாபிரிக்கா வழக்கு தாக்கல் செய்துள்ளதை ஐசிஜே உறுதி செய்துள்ளது.

இனப்படுகொலை இடம்பெறுவதை தடுக்கவேண்டிய கடப்பாடுள்ளதாக தென்னாபிரிக்கா தெரிவித்துள்ளது.

காசாமீதான இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக சிக்குப்பட்டுள்ள மக்களின் நிலைமை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள தென்னாபிரிக்கா கண்மூடித்தனமான படைபல பிரயோகமும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களை பலவந்தமாக வெளியேற்றுதலும் இடம்பெறுவதாக குறிப்பிட்டுள்ளது.

மனித குலத்திற்கு எதிரான குற்றம் யுத்த குற்றங்கள் போன்றவை இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகின்றன இனப்படுகொலை அல்லது அதனுடன் தொடர்புபட்ட குற்றங்கள் என தெரிவிக்ககூடிய சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் அறிக்கைகள் வெளியாகின்றன என தென்னாபிரிக்கா தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என நிராகரித்துள்ளது.