சிறுவர் துஷ்பிரயோகம்

சிறுவர் துஷ்பிரயோகம்

பத்து வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை – தாயின் முறைப்பாட்டின் படி தந்தை கைது !

பத்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக மகளின் தந்தை நேற்று (22) இரவு கைது செய்யப்பட்டார்.

 

பசறை வெல்கொல்ல பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 45 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

 

பாதிக்கப்பட்ட சிறுமியின் நடத்தையில் கடந்த இரண்டு மூன்று தினங்களாக மாற்றங்கள் காணப்பட்டுள்ளன.

 

மாற்றம் குறித்து சிறுமியின் தாயார் கேட்டபோது, ​​கடந்த 19ஆம் திகதி தாய் வயல் வேலைக்குச் சென்ற போது தந்தையால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமி தனது தாயிடம் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

பின்னர், தாய் பசறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் படி, சந்தேகநபரான தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

சம்பவத்திற்கு முகங்கொடுத்த சிறுமி பசறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வைத்திய பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பசறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

15 வயதுச் சிறுமியைப் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 17 வயதான சிறுவன் – யாழ்ப்பாணத்தில் சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் 15 வயதுச் சிறுமியைப் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 17 வயதான சிறுவனொருவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிறுவனைக் கைது செய்த பொலிஸார் அவரை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்திய வேளை அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதி மன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாயாரின் கொடுமை தாங்காமல் மன்னார் மூலம் இந்தியா செல்ல முயற்சித்து யாழ்ப்பாண பொலிஸாரிடம் சரணடைந்த சிறுவன் !

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்து, பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த சிறுவன் மீள அவனது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த சிறுவனொருவன், தனது தாய் மற்றும் தாயின் இரண்டாவது கணவர் ஆகியோர் தன்னை அடித்து சித்திரவதை புரிவதாகக் கூறி யாழ் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்திருந்தான்.

சிறுவன் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது , சிறுவன் வடஇந்தியாவை சேர்ந்தவன் எனவும் , அவனது தாயார் கொழும்பிலுள்ள கஸினோவொன்றில் பணிபுந்து வருவதாகவும், இங்கு இலங்கையைச் சேர்ந்த நபருடன் தங்கி வசித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

அதேவேளை , சிறுவன் மன்னார் சென்று அங்கிருந்து கடல் வழியாக இந்தியா செல்வதற்கு திட்டமிட்டு , கொழும்பில் இருந்து வெளியேறி மன்னார் பேருந்தில் ஏறுவதற்குப் பதிலாக யாழ் பேருந்தில் ஏறி யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார் எனத் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து எங்கே செல்வதெனத் தெரியாமல் பொலிஸ் நிலையத்தில் சிறுவன் தஞ்சமடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

12 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர் கைது !

12 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் காலியில் உள்ள பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சந்தேகநபர் தனது வீட்டில் நடத்தும் வகுப்பில் கலந்துகொண்ட மாணவிகளில் ஒருவரே இவ்வாறு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

வகுப்பு முடிந்து ஏனைய பிள்ளைகள் சென்ற நிலையில் குறித்த மாணவி தனது சகோதரிக்காக காத்திருந்த நிலையில் சந்தேகநபர் சிறுமியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மதியம் 12.30 மணியளவில் வகுப்பு முடிந்ததும் தன்னை அறைக்கு அழைத்துச் சென்று தேநீர் அருந்தி உபசரித்து வன்புணர்விற்கு உட்படுத்தியதாக பாதிக்கப்பட்ட மாணவி காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சந்தேக நபர் மாணவியின் மார்பகங்களையும் புகைப்படம் எடுத்துள்ளார்.

இலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் நாளுக்கு நாள் கேள்விக்கு உள்ளாகும் நிலையில் இந்த வருடத்தின் கடந்த 8 மாதங்களில் மட்டும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 5000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை சிறுவர் பாதுகாப்பு சபை குறிப்பிட்டுள்ளமை கவனத்தில் கொள்ளத்தக்கது.

இலங்கையில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் – 8 மாதங்களில் 5000 முறைப்பாடுகள்!

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக இந்த வருடம் 5000 இக்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் காப்புறுதி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 5,456 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் காப்புறுதி அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

 

அவற்றில், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 1,296 முறைப்பாடுகளும், கடுமையான காயங்கள் தொடர்பாக 163 முறைப்பாடுகளும், கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 242 முறைப்பாடுகளும் பெறப்பட்டுள்ளன.

 

மேலும், சிறுவர்கள் பிச்சை எடுப்பது தொடர்பாக இதுவரை 196 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதுதொடர்பான முறைப்பாடுகள் பெரும்பாலும் கொழும்பு மற்றும் நகர்ப்புறங்களில் இருந்து பதிவாகியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல் மற்றும் இணையவெளியில் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்தல் தொடர்பாக 110 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

சிறுமிகள் தொடர்பில் 76 முறைப்பாடுகளும், சிறுவர்கள் தொடர்பில் 31 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பான தகவல்கள் பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பெரியப்பா கைது – யாழில் சம்பவம் !

தனது வீட்டில் தங்கி இருந்த சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குறித்த சிறுமியின் பெரியப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் வறுமை காரணமாக 17 வயதான தனது மகளை, தந்தையின் அண்ணாவின் வீட்டில் பெற்றோர் தங்க வைத்துள்ளனர்.

இந்நிலையில் சிறுமியின் பெரிய தந்தை நீண்ட காலமாக சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளார்.

இது குறித்து சிறுமி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, நேற்று பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சிறுமியின் பெரிய தந்தையை கைது செய்துள்ளதுடன், சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது !

பதினைந்து வயது சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் மாவட்ட சமுக பொலிஸ் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், தாம் கடமைபுரியும் வவுனியா மாவட்ட சமுக பொலிஸ் பிரிவின் உட்பட்ட பாடசாலை நிகழ்வுகளில் மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றுபவர் எனவும், குறித்த நபர் நகர்ப்புறத்தை அண்டிய பாடசாலை மாணவன் ஒருவனையே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுவன் வவுனியா போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

 

வவுனியா, குருமன்காடு பகுதியை சேர்ந்த 15 வயதான சிறுவனே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தபட்டுள்ளதுடன்,

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் ஈச்சங்குளம் பகுதியை சேர்ந்த 33 வயதான ஒருவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 வயது பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை – கண்டுகொள்ளாத அதிபரும் – யாழ்ப்பாணத்து கல்விச் சமூகமும் !

யாழ்ப்பாணம் தீவகப் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு, பாலியல் தொல்லை வழங்கியமைக்காக 42 வயதான ஆசிரியரொருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

7ஆம் தரத்தில் கல்வி கற்கும் 12 வயதான மாணவிக்கே குறித்த ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது தொடர்பில் மாணவி தன் தாயாரிடம் முறையிட்டதையடுத்து, தாயார் அதிபரிடம் விடயத்தைத் தெரியப்படுத்தியுள்ளார்.

எனினும், ஆசிரியருக்கு எதிராக பாடசாலைச் சமூகத்தால் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து, இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டதைத் தொடர்ந்து ஆசிரியர் நேற்றுமுன் தினம் கைதுசெய்யப்பட்டார்.

அவர் நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். இதனை தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

குறித்த விடயம் தொடர்பில் நெடுந்தியில் உள்ள சமூக ஆர்வலர் ஒருவரிடம் தேசம்நெட் மூலமாக விடயத்தை அறிந்து கொள்ள தொடர்பு கொண்ட போது “குறித்த ஆசிரியர் குற்றம் செய்தமை தொடர்பில் அதிபருக்கும் – ஏனைய ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்ட போதிலும் கூட பாடசாலையின் நட்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடும் என பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்களிடம் பாடசாலை சமூகத்தினர் கோரிக்கைகளை முன் வைத்ததாக ” குறித்த நபர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கைதான ஆசிரியர் ஏற்கெனவே வலிகாமம் பகுதி பாடசாலையொன்றில் கல்வி கற்பிக்கும்பொழுது சில மாணவிகளை பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.
எனினும், மாணவிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க முன்வரவில்வை. இதையடுத்து அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, அவர் மீளவும் ஆசிரியர் சேவையில் இணைக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவலையும் குறித்த சமூக ஆர்வலர் தெரியப்படுத்தியிருந்தார்.

பாடசாலை ஆசிரியர்களால் பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் வடக்கில் அண்மைய காலங்களில் அதிகரித்துள்ளது. சுய கௌவுரவம் குடும்பமான மானம், கல்வி சமூகத்தின் உயர்ந்த தரம், பாடசாலையின் பெருமை போன்ற விடயங்களை காரணம் காட்டி பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் குற்றவாளிகள் பலரும் பாதுகாக்கப்படுகின்ற ஒரு சூழல் தொடர்ந்தும் நீடிக்கின்றது. கடந்த வருடம் முல்லை தீவில் பாடசாலை ஆண் மாணவர்களுக்கு போதைப் பொருள் கொடுத்து சக மாணவிகளை குறித்த மாணவர்களின் துணையுடன் துஷ்பிரயோகம் செய்த தூண்டிய ஆசிரியர் அழுத்தத்தின் காரணமாக கைது செய்யப்பட்ட போதும் கூட இன்று விடுதலையாகி மீளவும் அவர் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். இது போலவே அண்மையில் பல சம்பவங்கள் யாழ்ப்பாணம் வவுனியா முல்லைத்தீவு உள்ளிட்ட பல பாடசாலைகளிலும் பதிவாகியுள்ளது. என்னிடம் இது தொடர்பாக இதுவரையில் இறுக்கமான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாத காரணத்தினால் குற்றவாளிகள் சுதந்திரமாக இதுபோன்றதான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் சமூக ஆர்வலர்கள் பலரும் அதிருப்தி வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

படம் :- கோப்பு

பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் கருக்கலைப்பு வழக்கு – 14 வயதில் குழந்தை பெறுவது சாதாரணமானது என தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

14, 15 வருடங்களில் திருமணம் செய்து கொள்வதும், 17 வயதில் குழந்தை பெறுவதும் சாதாரணமானது என்று வழக்கு ஒன்றின் விசாரணையின் போது குஜராத் நீதிமன்றம் கூறியுள்ளது.

பாலியல் பலாத்காரத்தில் பாகிக்கப்பட்ட 16 வயது சிறுமியின் 7 மாத கருவை கலைக்க அனுமதி கோரி அந்த சிறுமியின் தந்தை குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிபதி சமீர் ஜே. டேவ் தலைமையிலான பெஞ்சு இந்த வழக்கை விசாரித்தது.

அப்போது விசாரணையின் போது தான் 14-15 வருடங்களில் திருமணம் செய்து கொள்வதும், அதைத் தொடர்ந்து 17 வயதை அடைவதற்குள் குழந்தை பெறுவதும் கடந்த காலங்களில் சாதாரணமானது என்று நீதிபதி தெரிவித்தார்.இ

இந்த வழக்கு விசாரணையில் நீதிமன்றம், “நாம் 21 ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம்.. ஆனால் உங்கள் வீட்டில் இருக்கும் அம்மா அல்லது பாட்டியிடம் கேளுங்கள். அப்போதெல்லாம் (திருமணம் செய்ய) அதிகபட்ச வயதே 14-15 வயது தான்.. 17 வயதிற்கு முன்பே குழந்தை பிறந்துவிடும். ஆண்களுக்கு முன்பே பெண்கள் முதிர்ச்சியடைகிறார்கள். 4-5 மாதங்கள் என்பதெல்லாம் பெரிய வித்தியாசம் இல்லை. மனுஸ்ம்ருதியில் இதை தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். இதை ஒருமுறை படியுங்கள்” என்று நீதிமன்றம் தெரிவித்தது.

அதேநேரம் கருவுக்கு 7 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் கர்ப்பத்தை கலைக்க முடியுமா என்பது குறித்து அவர் தனது அறையில் மருத்துவர்களுடன் ஆலோசித்ததாகவும் நீதிபதி தெரிவித்தார். மேலும், வழக்கின் சூழலை கருத்தில் கொண்டு, ராஜ்கோட் மருத்துவமனையின் மருத்துவர் அந்த சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனையை நடத்த உத்தரவிட்டார்.

மேலும், அந்த சிறுமிக்கு ஆசிஃபிகேஷன் பரிசோதனையை நடத்துமாறும், மனநல மருத்துவரிடம் பரிசோதனை செய்து அந்த அறிக்கையை பெறுமாறும் டாக்டர்கள் குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிபதி மேலும் கூறுகையில், “இந்த சோதனைகளை நடத்தி, அதன் முடிவுகளை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைப்பது நல்லதுதானா என்பது குறித்து மருத்துவர்கள் குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.. மருத்துவ ரீதியாக கரு எப்படி இருக்கிறது என்பது குறித்த தகவல்களும் தேவை” என்று கூறி வழக்கு விசாரணையை ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

 

சிறுமிக்கு ஆகஸ்ட் 16ஆம் தேதி பிரசவம் நடக்கலாம் என மருத்துவர்கள் கூறுவதால் வழக்கை முன்கூட்டியே விசாரிக்கமாறு பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அதற்கு நீதிபதி, “தாய் அல்லது கருவில் ஏதேனும் கடுமையான நோய் இருந்தால், இந்த கோரிக்கையை நிச்சயம் பரிசீலனை செய்வோம். அதேநேரம் இருவரும் நலமாக இருந்தால் கருவை கலைக்க அனுமதிப்பது கடினம்” என்று நீதிமன்றம் தெரிவித்தது.

 

மேலும், கருவை கலைக்க உத்தரவிட்டாலும், அந்த செயல்முறையில்7 மாத கரு உயிருடன் பிறக்கும் சாத்தியம் குறித்தும் நீதிமன்றம் கவலை தெரிவித்தது. மேலும், தத்து கொடுக்கும் வழிகள் குறித்தும் பரிசீலனை செய்யுமாறு சிறுமியின் தந்தை தரப்பிற்கு நீதிமன்றம் அறிவுரை கூறியது.

கருக்கலைப்பு மருத்துவச் சட்டத்தின் படி, கருக்கலைப்புக்கான உச்சவரம்பு 24 வாரங்கள் ஆகும்.. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், கர்ப்பத்தால் பெண்ணின் உயிருக்கு அல்லது மன ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படும் என கருதினால் கரு கலைக்க அனுமதி தரப்படும். இருப்பினும், நீதிமன்றம் தனக்கு இருக்கும் பரந்த அதிகாரங்களைக் கொண்டு, பலாத்காரம் போன்ற சில அரிய வழக்குகளில் 24 வாரங்களுக்கு மேலும் கர்ப்பத்தை கலைக்க அனுமதி தர முடியும் என குறித்த இந்திய கருக்கலைப்பு  சட்டம் குறிப்பிடுகிறது.

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளில் காலதாமதம் – சிறுவர், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் !

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளின் விசாரணைகளில் ஏற்படும் காலதாமதங்களைத் தவிர்ப்பது தொடர்பில் சிறுவர், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

இவ்வாறான காலதாமதத்தினால் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும் சமூக, மன மற்றும் உடல்ரீதியான பாதிப்புக்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்த நிலைமையைத் தவிர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயவும் குழு தீர்மானித்தது.

 

சிறுவர், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி கௌரவ தலதா அத்துகோரள தலைமையில் அண்மையில் கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

 

2015 முதல் 2020 வரை நடைபெற்ற சிறுவர், பெண்கள் மற்றும் பாலின சமத்துவம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவால் எடுக்கப்பட்ட முடிவுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் இங்கு பரிந்துரைக்கப்பட்டது. கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டபோதும் இறுதி தீர்மானம் எட்டமுடியாமல் போன விடயங்கள் குறித்து மீளவும் கவனம் செலுத்தக் குழு தீர்மானித்தது.

 

பாடசாலை பாடநெறிகளில் சட்டம் ஒரு பாடமாக உள்ளடக்கப்பட வேண்டும் என்பது இக்குழுவில் அடையாளம் காணப்பட்டது. இதற்கு அமைய இந்த விவகாரத்தை கல்விக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தவும் இங்கு பரிந்துரைக்கப்பட்டது.

 

பெண்கள் வீட்டு வேலைக்கு வெளிநாடு செல்வதால் நாட்டுக்கு அந்நிய செலாவணி கிடைத்தாலும், பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவதால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் சமூக பிரச்சினைகளால் மறைமுகமாக அரசுக்கு ஏற்படும் செலவு குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. மேலும் பெண்களை வீட்டு வேலைக்கு அனுப்பாமல், அவர்களுக்கு தொழில்சார் பயிற்சி அளித்து, சிறந்த தொழில் துறைகளுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

 

அதுமட்டுமல்லாமல், வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்களின் சட்டப்பூர்வ பிரச்சினைகள் மற்றும் தூதரகங்களில் உள்ள முறைகேடுகள் காரணமாக உரிய முறையில் தீர்வு காணப்படாத வெளிநாட்டு ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்தும் மேலும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான செயல்முறையை ஒழுங்குபடுத்த ஒரு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. சில நாடுகளில் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு நிலையங்கள் இன்மையினால் இலங்கை தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து குழுவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. எதிர்காலத்தில் இந்தப் பிரச்சினைகளைக் கண்காணிப்பதற்கும் குழுவின் உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்தனர்.

 

இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹினி குமாரி விஜேரத்ன, உத்திக பிரேமரத்ன, ராஜிகா விக்கிரமசிங்ஹ, மஞ்சுளா திஸாநாயக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.