ஜனாதிபதி அனுர குமார

ஜனாதிபதி அனுர குமார

ஒரு மோசமான இனவாதி தான் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க – சுகாஸ் சாடல் !

உதய கம்பன்பில ஒரு இனவாதி என அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரை விட ஒரு மோசமான இனவாதி தான் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற வேட்பாளருமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

 

அராலியில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார நடவடிக்கையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

இணைந்திருந்த வடக்கு – கிழக்கினை நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு பிரித்தவர்கள் ஜேவிபியும் அனுரவும். சந்திரிகாவினுடைய ஆட்சி கலத்தில் அனுரகுமார விவசாய அமைச்சராக இருந்தபோதுதான் செம்மணியில் 600 இளைஞர்கள் கொன்று புதைக்கப்பட்டார்கள்.

 

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அனுரகுமாரவின் கட்சியும், அநுரகுமாரவும்தான் கொழும்பிலே சிங்கள மக்களை திரட்டி, முள்ளிவாய்க்காலில் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த வேண்டும். இல்லாவிட்டால் பிரபாகரன் தப்பி விடுவார் என மஹிந்தவிக்கு அழுத்தம் கொடுத்து கொத்துக்கொத்தாக தமிழ் மக்களை கொன்று குவித்தமைக்கு காரணமானவர்கள் இந்த ஜேவிபி.

 

இப்போது உதய கம்மன்பில மீது, அநுரகுமார பழி போட்டுவிட்டு தான் தப்பி விடுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.

 

அநுர ஜனாதிபதி ஆவதற்கு முன்பு சொல்லி இருந்ததார் ஈஸ்டர் தாக்குதல்தாரிகளை தனக்குத் தெரியும் என்று. அப்படி என்றால் ஏன் அவர்களை இதுவரை கைது செய்யவில்லை.

 

ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகள் ராஜபக்ச குடும்பம் என்றால், மத்திய வங்கியின் ஊழல் குற்றவாளிகள் ரணில் விக்ரமசிங்கமும் அவருடைய தரப்பினரும். ஆகவே அனுரகுமார திசாநாயக்க சிங்கள மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமாக இருந்தால் ராஜபக்ச குடும்பத்தினரையும், ரணில் விக்ரமசிங்க தரப்பினரையும் மறியலுக்குள் போடட்டும்.

 

தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமாக இருந்தால் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வினை வழங்கிவிட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும், இனப் பிரச்சனைக்கும் ஒரு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு ஒரு சர்வதேச விசாரணையை நடத்தட்டும். அதற்குப் பின்னர் நாங்கள் அனுரகுமாரவை நம்புவதை பற்றி யோசிப்போம் என அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி அனுர குமாரவின் செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கரிசனை!

நாட்டில் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் விமானப்படையினருக்கு அழைப்புவிடுக்கும் வகையில், ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.

 

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அளவுகோல்களுக்குப் புறம்பாகப் பிறப்பிக்கப்படக்கூடிய இத்தகைய கட்டளைகளால் மனித உரிமைகள் பாதுகாப்பில் எதிர்மறையான தாக்கம் ஏற்படக்கூடும் என அந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

 

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது பிரிவின் கீழ் 2024 செப்டெம்பர் 26ஆம் திகதியிடப்பட்டு வெளியிடப்பட்ட 2403/47ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் ஊடாக (முன்னைய அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்ட இக்கட்டளை மாதாந்தம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. செப்டெம்பர் 24ஆம் திகதி முதல் ஒரு மாதகாலத்துக்கு இலங்கையின் ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்திலும் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் அனைத்து உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

 

இதுகுறித்து, தமது கரிசனையை வெளிப்படுத்தியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் உயர்நீதிமன்ற நீதியரசர் (ஓய்வுபெற்ற) எல்.ரீ.பி.தெஹிதெனிய, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக சுட்டிக்காட்டியுள்ளார்.