ஜனாதிபதி தேர்தல் 2024

ஜனாதிபதி தேர்தல் 2024

தமிழர் தரப்பிற்கு நேரம் பேசும் சக்தி இந்த தேர்தலில் அதிகமாக உள்ளது – நாடாளுமன்ற உறுப்பினர் M.Aசுமந்திரன்

தமிழர் தரப்பில் பேரம் பேசும் சக்தி அதிகமாக இருக்கும் இச் சந்தர்ப்பத்தில் எண்ணிக்கையில் குறைவாக இருக்கின்ற எமது வாக்குகளே முடிவைத் தீர்மானிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் M.Aசுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்றைய தினம் இடம்பெற்ற ‘மக்கள் கருத்துக் களம்‘ என்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

புத்திசாலித்தனமாகச் சிந்தித்து பிரதான மூன்று வேட்பாளர்களையும் குறைந்தபட்சம் ஒரு தீர்வுக்காவது இணங்கச் செய்ய வேண்டும்.

ஆயுதப் போராட்ட காலத்தில் இருந்த சூழல் தற்போது இல்லை என்பதால் தற்போதைய நிலைமைகளுக்கேற்ப அதனை ஜனநாயக சூழலாக மாற்றியமைத்துப் பயணிக்க வேண்டும். மூலோபாயத் திட்டங்களுடன், மிகக் கடினமான முறையில் தென்னிலங்கைத் தரப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதுடன், எமது வாக்குப்பலத்தினைத் தீர்மானிக்கும் சக்தியாக மாற்றி இந்தத் தேர்தலைச் சந்திக்க வேண்டும்.

வாக்குகளைப் பிரயோசனமான முறையில், அதுவும் பெரும்பான்மையினர் மூன்றாகப் பிரிந்து இருக்கும் போது நாங்கள் தீர்மானிக்கிற சக்தியாக எங்களுடைய வாக்குகளைத் திரட்ட முடியும் என்றால் அது எங்களுக்கு மிகவும் பலமானதாக இருக்கும்” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் என்ற மூலோபாயம் பயனற்றது – இரா.சம்பந்தன்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் என்ற மூலோபாயம் பயனற்றது எனவும் தென்னிலங்கையில் உள்ள தலைவர்களுடன் பேச்சுக்களை முன்னெடுத்தே இறுதியான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் எனவும் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு கொழும்பிலுள்ள ஆர்.சம்பந்தனின் இல்லத்தில் அவரைச் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வழங்கி வருகின்ற ஆணையைத் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் நிராகரித்து வருகின்ற நிலையில் தேர்தல்களை நடத்தப்படுவதற்கு அப்பால் தமிழ் மக்களின் ஆணையை ஏற்றுக்கொள்வதற்கான அழுத்தங்களையும் பிரயோகிக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

அதன்படி, தமிழ் மக்கள் தொடர்ச்சியாக தமது நீண்டகால அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை அடிப்படையாக் கொண்டே ஒவ்வொரு தேர்தல்களிலும் ஆணையை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் அவர்கள் வழங்கி வரும் ஆணையைக் கருத்தில் கொள்ளாது கருமங்களை முன்னெடுக்கின்ற செயற்பாடுகளே நடைபெறுவதாகவும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே, ஐரோப்பிய ஒன்றியக்குழு உட்படச் சர்வதேச சமூகம் தேர்தல்களை நடத்துவதற்கான அழுத்தங்களை கொடுப்பதற்கு அப்பால் தமிழ் மக்கள் வழங்கும் ஆணையை உறுதிப்படுத்துமாறு அழுத்தங்களை அதியுச்சமாகப் பிரயோகிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்திள்ளார்.

அத்தோடு, இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் செய்து கொண்ட உடன்பாடுகளையோ, சர்வதேசத்துடன் செய்து கொண்ட உடன்பாடுகளையோ ஏற்று நடைமுறைப்படுத்துவதாக இல்லை எனவும் சம்பந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரசியலமைப்பில் உள்ள விடயங்களைக் கூட அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதில் தொடர்ச்சியாக தயக்கம் காட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழ் மக்கள் உள்ளக சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் எனவும் ஆகவே அந்த உரித்து தொடர்ச்சியாக மறுக்கப்படுகின்றபோது நிச்சயமாக வெளியக சுயநிர்ணய உரித்தை கோருவதற்கான நிலைமைகளே உருவாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களின் வரலாற்றில் பொதுவேட்பாளர் போன்ற விடயங்களை எப்போதுமே முன்னிறுத்தியது கிடையாது எனவும் அவ்விதமான நிலையில் தற்போது பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது பொருத்தமற்ற அணுகுமுறையாகவே இருக்கும் எனவும் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தும் தீர்மானத்துடன் இணைந்து செயற்பட தயார் – ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தும் தீர்மானத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக தமிழ் தேசிய சக்திகளுடன் இணைந்து செயற்பட ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது.

முன்னணியின் தலைவர் த.சித்தார்த்தனின் தலைமையில் நேற்று (04) நடைபெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான தீர்மானத்தை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஏனைய அங்கத்துவக் கட்சிகளுடன் இணைந்து ஏற்றுக்கொண்டதுடன், அதனை முன்கொண்டு செல்வதற்கான முழு ஆதரவினையும் வெளிப்படுத்தியிருந்ததாக அந்த கட்சி வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும் சமூக வாழ்வின் எதிர்பார்ப்புகளையும் நாளாந்தம் முகம் கொடுத்து வரும் நெருக்கடிகளையும் தென்னிலங்கை அரசியல் சமூகத்தின் தொடர்ச்சியான ஏமாற்றுத்தனங்களையும் உறுதியாக வெளிப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இத் தீர்மானமானது ஒரு சில அரசியல் கட்சிகளினதும், ஒரு சில சமூக செயற்பாட்டுக் குழுக்களினதும் தீர்மானமாக அன்றி, தமிழ் தேசியப் பரப்பில் இயங்கும் அனைத்துத் தரப்பினரதும் ஏகோபித்த கோரிக்கையாக முன்னெடுக்கப்படுவது அவசியம் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனை தமது கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் ஏற்றுக்கொண்டதுடன், அதனை முன்கொண்டு செல்வதற்கும், அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தரப்பிலிருந்து பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் தீர்மானத்தை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் ஆதரித்துள்ளதாக கட்சியின் தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அண்மையில் யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று முன்தினம் (03) இடம்பெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு கூட்டத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க தீர்மானிக்கப்பட்டது.

 

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் , பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியன ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகளாகும்.

ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது சாத்தியம் இல்லை – இராஜாங்க அமைச்சர் கே.மஸ்தான்

தமிழர்கள் தமிழ் கட்சிகள் மற்றும் அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள் புத்திஜீவிகள் என எல்லோரும் ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது சாத்தியம் இல்லை என்ற முடிவினை எடுப்பார்கள் என எண்ணுகின்றேன் என கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கே.மஸ்தான் தெரிவித்தார்.

 

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தமிழர் தரப்பில் பொது வேட்பாளரினை நியமிப்பது தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

ஜனாதிபதி தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் அக்டோபர் மாதம் முதலாம் இரண்டாம் கிழமைகளில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதன் காரணமாக இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

என்னை பொறுத்தவரை ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் தரப்பிலான பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டு வெற்றி அடைவார் என்றால் பரவாயில்லை. ஆனால் ஜனாதிபதி தேர்தலினை பொறுத்த வரை தேசியக் கட்சியைச் சார்ந்த ஒருவரே வெற்றி பெறுவார்.

 

எங்களை பொறுத்தவரை நாங்கள் ஆதரிக்கின்ற ஜனாதிபதியை வெற்றி அடைய வைப்பதற்கான முயற்சிகளை நாங்கள் எடுப்போம்.

 

மேலும் தமிழ் தரப்பில் பொது வேட்பாளர் என்ற விடயம் என்பது எந்த விதத்தில் சாத்தியம் அல்லது இதன் ஊடாக என்ன நன்மை கிடைக்கும் என்று எமக்குத் தெரியவில்லை.

 

கடந்த காலங்களில் ஏதோவொரு பிரதான வேட்பாளர்கள் ஒருவரையே ஆதரித்துள்ளனர். அதுவே சரியானதாக அமையும் என நான் எண்ணுகின்றேன். ஒருமித்த கருத்துடன் ஒரு ஜனாதிபதி வேட்பாளரை போடுவதன் மூலம் வெற்றியை நோக்கி செல்வதாக இருந்தால் பரவாயில்லை ஆனால் அது சாத்தியமில்லை.

 

எனவே தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற முயற்சி ஏன் ஏற்பட்டுள்ளது என்பது புரியவில்லை.

 

மேலும் தமிழ் கட்சிகள் மற்றும் அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள் புத்திஜீவிகள் என எல்லோரும் ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது சாத்தியம் இல்லை என்ற முடிவினை எடுப்பார்கள் என எண்ணுகின்றேன்.

பொது தமிழ் பொது வேட்பாளர் காலத்தின் தேவை என்கிறார் சிறீதரன் !

தமிழ் மக்களின் திடமான அரசியல் கொள்கைக்கு பொது தமிழ் பொது வேட்பாளர் காலத்தின் தேவை என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

 

கிளிநொச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற புதுவருட நிகழ்வில் கைவிசேஷம் வழங்கி வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

 

தொடர்ந்து தெரிவிக்கையில்,

 

தமிழர்களின் தேசிய அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதித் தேர்தலில் பல ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கியிருந்தோம்.

 

ஆனால் அவர்கள் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றவில்லை. ஆதரவளித்த பல பேர் தோல்வியடைந்தனர்.

 

வெற்றி பெற்ற மைத்திரி உள்ளிட்டோர் தமிழ் மக்களின் அரசியல் தீர்வை பெற்றுத்தரவில்லை. இதனால் தான் நீண்ட நெடும் அனுபவத்தின் அடிப்படையில் பெரும்பாலனவர்கள் மத்தியில் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான கருத்து நிலவி வருகிறது.

 

தமிழ் வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் தமிழர்களுக்கு நீதி வேண்டும். சர்வதேச விசாரணை வேண்டும். தமிழர்களுக்கு இறையாண்மை வேண்டும் என்பதை சர்வதேச ரீதியில் ஒரு செய்தியை சொல்ல முடியும் என தெரிவித்தார்.

 

கச்சத்தீவு தொடர்பாக கருத்துத் தெரிவித்த சிறிதரன் எம்.பி.,

 

இந்தியாவின் ஆளுகைக்குள் கச்சதீவு இருந்தாலும் ஒப்பந்தத்தில் கச்சதீவு இலங்கைக்குரியது.

 

வடக்கு தமிழ் கடற்றொழிலாளர்கள் கச்சதீவில் தொழிலில் ஈடுபடுகின்றனர்.

 

தமிழ் நாட்டில் இருக்கின்ற சகோதரர்கள் ஈழத்தின் தொப்புள் கொடி உறவுகளை பாதிக்க விடமாட்டார்கள். தமிழ் நாட்டில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரமே இது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சிங்கள தேசிய இனவாதத்தை உடைக்க தமிழ் தரப்புக்கள் பிரதான போட்டியாளர்களான சஜித், அநுரவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் – தயான் ஜயதிலக்க

உள்நாட்டில் நீண்டகாலமாக அரசியலில் புரையோடிப்போயிருக்கின்ற சிங்கள, பௌத்த தேசிய இனவாதத்தினை களைவதற்கு பொருத்தமான தருணம் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழ் தரப்புக்கள் பிரதான போட்டியாளர்களான சஜித், அநுரவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்று இராஜதந்திரியான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

 

அத்துடன், தமிழர்களின் அரசியல் போக்கு அவரோணகத்தில் சென்றுகொண்டிருக்கையில், தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துகின்ற முயற்சியானது பொருத்தமான வியூகமாக அமையப்போவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

வடக்கு,கிழக்கை தளமாகக் கொண்டு செயற்படும் தமிழ் அரசியல் கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான முஸ்தீபுகளை எடுத்துள்ள நிலையில் அதுதொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு உபாயங்களை முன்னெடுத்துள்ளனர். இருப்பினும் அந்த உபாயங்களால் தமிழ் மக்களுக்கு போதுமான அளவில் பிரதிபலங்கள் கிடைத்திருக்கவில்லை.

 

அவ்வாறான பின்னணியில் தற்போது தமிழ் அரசியல் தரப்புக்கள் அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமது தரப்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு முயற்சிக்கின்றார்கள்.

 

அனைத்துக் கட்சிகளும் இந்த விடயத்தில் ஒருமித்து நின்று செயற்பட்டுவதற்கு முன்வருகின்ற பட்சத்தில் சாத்தியமானதொரு வியூகமாகும்.

 

ஆனால் கள யதார்த்தத்தின் அடிப்படையில் தமிழ் தரப்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தும் வியடத்தில் அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் இடையில் ஏகமனதான நிலைமைகள் வரப்போவதில்லை.

 

இதன்காரணமாக, தமிழ் கட்சிகளுக்கு இடையில் காணப்படுகின்ற உறவுகள் தற்போதைய நிலைமையை விடவும் மோசமானதாகவே அடையப்போகின்றது.

 

அவ்விதமான நிலைமையில், நிறுத்தப்படும் தமிழ் வேட்பாளரால் அதியுச்ச கோரிக்கையான சுயாட்சி உள்ளிட்டவற்றை முன்வைப்பது மிகக் கடினமானதாகவே அமையும்.

 

1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு 1977இல் தேர்தலுக்கு முகங்கொடுத்த நிலைமைகள் தற்போது இல்லை. தமிழர்களின் அரசியல் போக்கு அவரோகணத்திலேயே உள்ளது. அவ்விதமானதொரு சூழலில் பொதுவேட்பாளர் முடிவானது பொருத்தமான நகர்வாக அமையாது.

 

மேலும் தென்னிலங்கையில் அடுத்த ஜனாதிபதி தோதலில் பிரதான வேட்பாளராக இருக்கப்போகின்றவர்கள் சஜித் பிரேமதாசவும், அநுரகுமார திஸாநாயக்கவுமே.

இவர்கள் இனவாதத்துக்கு எதிராக ஒன்றுதிரண்ட ‘அரகல’வின் சக்தியை அறிந்தவர்கள். ஆகவே அவர்கள் மீண்டும் சிங்கள, பௌத்த இனவாத விடயங்களை மையப்படுத்தி அரசியல் செய்வதற்கு விளைய மாட்டார்கள்.

 

அவ்விதமான சூழலில் நாட்டில் தற்போது, சிங்கள, பௌத்த இனவாதத்தினை அரசியலில் இருந்து துடைத்தெறிவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலை தமிழ்த் தரப்பினர் சரியாக பயன்படுத்த வேண்டும்.

 

ஆகவே,அவர் சஜித், அநுர ஆகியோருடன் நீண்டகாலமாக காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கான குறுகிய மற்றும் நீண்டகால தீர்வுகள் சம்பந்தமாக பேச்சுக்களை முன்னெடுத்து தீர்வினை எட்ட வேண்டும்.

 

அதேநேரம், ஸ்பெயினின் கட்டலோனியாவில் நடைபெற்ற விடயத்தினையும், குர்திஸ்லாந்தில் ஏற்பட்ட நிலைமைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

அதுமட்டுமன்றி, பிரித்தானிய பிரமர் தட்சருக்கு எதிராக போராடிய சின்பிங் அமைப்பின் வியூகத்தினையும் முன்னுதாரணமாகக் கொண்டு தீர்மானங்களை எடுக்கவும் முடியும்.

 

அதனடிப்படையில் தமிழ்த் தரப்பு பொருத்தமான தருணத்தினை பயன்படுத்தும் வகையில் தீர்மானங்களை மேற்கொள்வதே பொருத்தமானது என்றார்.

தேர்தல் நடவடிக்கைகளுக்கு பணம் சேர்க்க 200 மதுபான அனுமதிபத்திரங்கள் – நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாச !

எப்.எல். உரிமம் 4 இன் கீழ் 200 மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 15 பேருக்கு ஏற்கனவே இந்த அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு விட்டதாகவும், இதற்காக 2 கோடி ரூபா கப்பமாக அறவிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(19) பாராளுமன்றத்தில் வெளிக்கொணர்ந்தார்.

 

தற்போது 6 மதுபான உற்பத்திசாலை அனுமதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளது. இதனை கருத்திற்கொண்டே மது வரி ஆணையாளராக குணசிறி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தலை இலக்காக் கொண்டு பணம் சேகரிப்பதான செயற்பாடா இது என்ற சந்தேகம் எழுவதால் இதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 

நாட்டின் 41 இலட்சம் பாடசாலை மாணவர்களின் நலனை கருதியே இது சம்பந்தமாக கேள்வி எழுப்புகிறேன். வரப்பிரசாதங்களுக்குட்பட்டு தான் பொய்யான விடயங்களை முன்வைக்கவில்லை. சொல்வதை பொறுப்புடன் சொல்கிறேன்.

 

இந்த சட்டவிரோத உரிமப் பத்திரங்கள் அனைத்தும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் திரும்பப் பெறப்படும். இது தொடர்பான விரிவான விசாரணை தேவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க – நாமல் ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின், ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் ரணில் விக்கிரமசிங்க உள்ளடக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு முன்பதாக நடத்தப்படுமென தாம் எதிர்பார்க்கின்றோம்.

 

எமது கட்சியின் எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர்களில் ரணில் விங்கிரமசிங்கவும் ஒருவர். எமது கட்சியின் ஆதரவுடனே அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

 

எனவே ரணில் விக்கிரமசிங்க எங்களுடன் இணைந்து செயற்படுகின்றார்.

 

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கின்றோம்.

 

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்கள் பட்டியலில் ரணில் விக்கிரமசிங்கவின் பெயரும் உள்ளது என்பதை கூறிக்கொள்கின்றோம்” என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.

“தமிழ் மக்கள் எதிர்வரும் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.” – இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

“தமிழ் மக்கள் எதிர்வரும் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்த அவர்,

 

“தமிழ் மக்களைப்பொறுத்த வரையில் ஒரேயொரு தெரிவுதான் இருக்கின்றது. இந்தத் தேர்தலை பகிஸ்கரிப்பதுதான். அதனையே நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

 

தமிழ் அரசியலில் வரப்போகின்ற ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்கின்ற கதை ஒன்று ஒரு சிலரால் பரப்பப்படுகின்றது.

 

அந்த விடயம் தொடர்பாக ஒரு சில தரப்புகள் பெயர்களை கூட முன்மொழிந்திருக்கின்றார்கள் குறிப்பாக சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுடைய பெயரைத் தானாகவே வந்து முன்மொழிந்திருக்கின்றார்.

 

முக்கியமாக ஈ.பி.ஆர்.எல்.எப் தரப்பின் தலைவர் மற்றும் இன்னுமொரு அணி மனோ கணேசன் ஆகியோரை நிறுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கின்றார்கள்.

 

முதலாவதாக இந்த ஜனாதிபதி தேர்தல் போட்டியிட்டு வெல்லக்கூடிய தரப்பு சிங்களத் தரப்பு. அதில் நான் நினைக்கின்றேன் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.

 

அந்த சிங்களத் தரப்பு யாராக இருந்தாலும் கடந்த காலங்களில் தமிழ் மக்களினுடைய அரசியல் தீர்வு சம்பந்தப்பட்ட விடயமாக இருக்கலாம் பொறுப்புக் கூற சம்பந்தப்பட்ட விடயமாக இருக்கலாம்.

 

ஏன் தமிழ் மக்களுடைய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அல்லது பாதுகாப்பு சம்பந்தமின்மை தொடர்பான இன்று இருக்கக்கூடிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஊடாக வரக்கூடிய மோசமாக நிலையாக இருக்கலாம்.

 

அரசியல் கைதிகளினுடைய நிலையாக இருக்கலாம் எங்களுடைய சொந்த காணிகளை பறிக்கின்ற விடயங்களாக இருக்கலாம் தாயகத்தில் தொடர்ச்சியாக சிங்களமைப்படுத்துகின்ற வேலை திட்டங்களாக இருக்கலாம்.

 

இவை அனைத்தும் சம்பந்தமாக சிங்களத் தரப்பினரால் நிறுத்தக்கூடிய அனைத்து தரப்புகளும் தமிழ் மக்களின் பக்கமாக இருந்தது கிடையாது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.