ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச

நல்லூர் திருவிழா முடியும் வரை தேர்தல் பிரச்சாரம் யாழில் இல்லை – நாமல் ராஜபக்ச விளக்கம்!

நல்லூர் தேர்திருவிழா முடிவடையும் வரை யாழ்ப்பாணத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

தேர்த்திருவிழா முடிவடையும் வரை தனது அரசியல் நடவடிக்கைகளிற்காக தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

நல்லூர் தேர்திருவிழா முடிவடையும் வரை நான் யாழ்ப்பாணத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என தீர்மானித்துள்ளேன்,யாழ்ப்பாணத்தினதும் நல்லூர் ஆலயத்தினதும் கலாச்சார முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டே நான் இவ்வாறு தீர்மானித்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

 

புனிதமான தருணங்களில் பாரம்பரியங்களை பேணுவது அவசியம் என நான் கருதுகின்றேன் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

“வடக்கு கிழக்கினை இணைப்பதற்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது”- நாமல் ராஜபக்ச உறுதி !

“வடக்கு கிழக்கினை இணைப்பதற்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.

பேலியகொட வித்யாலங்கார பிரிவேனாவிற்கு நேற்று விஜயம் மேற்கொண்டு ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

இது குறித்து நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளதாவது” ஏனைய அரசியல் கட்சிகளைப் போன்று, தேர்தல் நேரத்தில் ஆதாயம் பெறுவதற்காக நாங்கள் எங்கள் கொள்கைகளை மாற்றுவதில்லை.

 

மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்க முடியாது. வடக்கு கிழக்கையும் இணைக்க முடியாது. அவ்வாறு செய்தால் நாடு பிளவடையும் எனவே இந்த நாட்டை பிரிக்க நான் அனுமதிக்கமாட்டேன். வெளிப்படையாக அதனையே கூறுகிறேன்.

 

2015ம் ஆண்டு நாட்டின் வளர்ச்சி நிறுத்தப்பட்டது. ஆட்சியில் இருந்தது நல்லாட்சி அரசாங்கம்.

எனவே எங்கு நாட்டில் வளர்ச்சி தடைப்பட்டதோ அங்கிருந்து எனது பயணத்தை ஆரம்பிப்பேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது எமது பொறுப்பு” இவ்வாறு நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குகிறார் நாமல் ராஜபக்ச!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள மகிந்த ராஜபக்சவின் உத்தயோகபூர்வ இல்லத்தில் இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் இந்த அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளது.

கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இந்த அறிவிப்பினை ஊடகங்கள் முன்பாக வெளியிட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் கட்சியின் ஸ்தாபகர் பசில் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை தனிப்பட்ட காரணங்களால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா நேற்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கடிதத்தினையும் தம்மிக்க பெரேரா கட்சித் தலைமைக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச இதனை உறுதிப்படுத்தியிருந்தார்.

 

இந்நிலையில் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

நாமல் ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதி, மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்டு முதல் தடவையாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்.

 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் 2020ஆம் ஆண்டு தொடக்கம் 2022 ஆண்டு வரை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஷ பணியாற்றியிருந்தார்.

 

தற்போது இலங்கை வரலாற்றில் மிகக்குறைந்த வயதுடைய ஜனாதிபதி வேட்பாளராக என்ற பெருமையை நாமல் ராஜபக்ச தனதாக்கிக்கி கொண்டுள்ளார்.