டக்ளஸ் தேவானந்தா

டக்ளஸ் தேவானந்தா

டக்ளஸ் தேவானந்தாவின் அடாவடி மற்றும் சண்டித்தன அரசியல் தமிழ் மக்களிடம் செல்லுபடியாகாது !

டக்ளஸ் தேவானந்தாவின் அடாவடி மற்றும் சண்டித்தன அரசியல் தமிழ் மக்களிடம் செல்லுபடியாகாது முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொன்னாவெளி கிராமத்தில் கடந்த 05 ஆம் திகதி மக்களின் நியாயமான போராட்டத்தை முறியடிக்க 06 பேரூந்துகளில் மக்கள் அழைத்து வரப்பட்டனர்.
குறித்த விடயம் தொடர்பாக ஊடக சந்திப்பொன்றை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
குறித்த ஊடக சந்திப்பில் தெரிவிக்கையில்,
முதலில் நாம் 06 பேரூந்துகளில் வந்திருந்த மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் அவர்கள் தமிழ் மக்கள் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள் அவர்களுக்கு காசு ஒரு ஆளுக்கு ஆயிரம் ரூபா தருவதாகவும் அட்டை பண்னைக்கான அனுமதிபத்திரம் தருவதாகவும் பல பொய்களை கூறி பொன்னாவெளி கிராம மக்களின் போராட்டத்தை முறியடிக்கும் நோக்கிலேயே அழைத்து வரப்பட்டனர்.
இருப்பினும் 06 பேரூந்துகளில் வந்திருந்த வேறு பிரதேச மக்கள் பொன்னாவெளி கிராமத்தில் இடம்பெறும் போராட்டத்தின் உண்மை நிலையை அறிந்து போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை இதற்கு அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.
அதேபோல் ஜெயபுரம் மற்றும் முழங்காவில் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பொன்னாவெளி மக்களுக்காக தமது நேர்மையான செயற்பாட்டை செய்திருந்தனர் அவர்களுக்கும் எமது நன்றியை தெரிவித்திருந்தார்.
அமைச்சர் இந்த நாட்டில் வடக்கில் நம்பி ஒருட ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஒரு அமைச்சரின் அடாவடித்தனமான செயலாக இச் செயல் அமைந்துள்ளது மீண்டும் பல விசேட பாதுகாப்புகளுடன் பொன்னாவெளி கிராமத்திற்கு செல்ல உள்ளதாகவும் மக்களின் உரிமைபோராட்டத்தை அடக்கு முறை மூலம் நடத்திச்செல்லப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவரது இவ்வாறான செயல் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வையே பாதிக்கும் வடக்கில் கடல் தொழில் அமைச்சரால் வாக்கு எண்ணிக்கை வீழ்ச்சியடையும் என தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய பொன்னாவெளி மக்கள் – இரத்து செய்யப்பட்டது நிகழ்வு !

கிளிநொச்சி பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் மக்களின் எதிர்ப்பால் திரும்பினார். குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (05) பகல் இடம்பெற்றுள்ளது.

 

பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

 

கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னாவெளி பகுதியில் சீமெந்து தொழிற்சாலைக்கான சுன்னக்கற்களை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில், இன்றைய தினம் அமைச்சர் குறித்த தொழிற்சாலையை ஆரம்பித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

 

இதன்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும், போராட்டக்காரருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் பொலிசார் கட்டுப்படுத்தியிருந்தனர்.

 

தொடர்ந்தும் போராட்டம் இடம்பெற்றதுடன், திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றது.

 

ஆயினும், மக்களின் தொடர் எதிர்ப்பினால் குறித்த நிகழ்வு இரத்து செய்யப்பட்டு அமைச்சர் திரும்பியுள்ளார்.

அமைச்சர் பதவியை கைவிட்டுவிட்டு கடற்தொழிலாளர்களுடன் இணைந்து போராடுவேன் – டக்ளஸ் தேவானந்தா

எல்லைதாண்டிய இந்திய மீன்பிடியாளர்கள் விடயம் தொடர்பில் அழுத்தங்கள் இந்திய தரப்பிலிருந்து இலங்கை அரசின் மீது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அமைச்சு பதவியை இராஜினாமா செய்து எமது கடற்றொழிலாளர்களுடன் இணைந்து நியாயமான தீர்வுக்காக போராடுவேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

 

நேற்று (27) யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் இந்திய தூதருடனான சந்திப்பு போது கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டள்ளார்.

 

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

இந்திய தூதுவருடனான சந்திப்பின் போது பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் அதிகாரப் பரவலாக்கம் அல்லது அதிகாரப் பகிர்வு தொடர்பில் கலந்துரையாடியிருந்தேன்.

 

குறிப்பாக நான் நீண்டகாலமாக எதை கூறிவந்தேனோ அதுதான் இன்று ஜதார்த்ததாகயுள்ளது என்றும் அதையே இன்று ஏனைய தரப்பினர் ஏற்றுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியிருந்தேன்.

 

அதேநேரம் அன்று நான் கூறியதை சக தமிழ் இயக்கங்கள் கட்சிகள் ஏற்றிருந்தால் இன்று இந்த அழிவுகள் இழப்புகள் அவல நிலைகள் ஏற்பட்டிருக்காது என்பதையும் எடுத்துக் கூறியிருந்தேன்.

 

இதேவேளை நாட்டின் எதிர்கால அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்பது தொடர்பாகவும் விரிவாக இந்திய தூதருடன் கலந்துரையாடியிருந்தேன்.

 

அதைவிட மிகப்பிரதானமானது சமீபத்தில் ஜேவி்பியின் தலைவர் இந்தியா சென்று பலதரப்பட்டவர்களுடன் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் பேச்சுக்களை நடத்தியிருந்தார். ஆனாலும் அவர் இலங்கை கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் எதுவிதமான கருத்தையும் எடுத்தக் கூறியிருக்கவில்லை.

 

அதேபோன்று சமீபத்தில் யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இந்திய தூதுவர் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். அச்சந்தர்ப்பத்தில் கூட எமது வடக்கு கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் அதே பகுதி தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் என்று கூறித்திரியும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட எதுவும் தெரிவித்திருக்கவில்லை.

ஆனால் என்னுடனான சந்திப்பின்போது இந்திய மீன்பிடியாளர்களின் எல்லைமீறிய அத்துமீறிய சட்டவிரோத கடல் நடவடிக்கைகள் தொடர்பில் எடுத்துக் கூறியிருந்ததுடன் அதனால் எமது கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தேன். குறிப்பாக எமது கடல் வளங்கள் சுறண்டப்படுவது தொடர்பிலும் எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவது தொடர்பிலும் சுட்டிக்காட்டி அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தேன்.

 

ஆனால் அதை தொடர்வதற்கான அழுத்தங்கள் தொடர்ந்தும் இந்திய தரப்பிலிருந்து இலங்கை அரசின் மீது முன்னெடுக்கப்படுமாக இருந்தால் எனது அமைச்சு பதவியை இராஜனாமா செய்து எமது கடற்றொழிலாளர்களுடன் இணைந்து போராடுவேன் எனவும் தெரிவித்தார்.

 

“இதனிடையே இலங்கை எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத தொழில் நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட மீனவர்கள் சட்டரீதியாக தண்டிக்கப்பட்டமை தொடர்பில் தமிழகத்தில் போராடடங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” அது தொடர்பில் அமைச்சரிடம் ஊடகவியலாளர் கருத்து கேட்டபோது,

 

போராட்டம் செய்வது அவர்களது உரிமை. அதேநேரம் அவர்கள் தமது கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள். ஆனால் சட்டரீதியாக இதை பார்க்க வேண்டும். 2018 இல் இது தொடர்பான சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் ஒரு தடவை எல்லை மீறியிருந்தால் எச்சரிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்படுவர் என்றும் அதற்கு மேல் மீண்டும் எல்லை தாண்டியிருந்தால் சட்டரீதியான தண்டனை வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அதற்கேற்ப தற்போது ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பத்தில் எல்லைதாண்டி உள்நுழைந்த வந்தவர்கள் சட்டரீதியாக தண்டிக்கப்பட்டுள்ளனர். இதில் படகு ஓட்டி உரிமையாளர்கள், தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்த நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அவர்களுக்கு சுட்டுவிட்டது போலுள்ளது.

 

என்னைப் பொறுத்தளவில் எமது நாடு, எமது கடல், எமது மக்கள் அதற்கே எனது முன்னுரிமை என்பதாகும். அதுவே நியாயம் என்றும் கருதுகின்றேன் என தெரிவித்தார்.

தமிழர்களின் அரசியல் உரிமை தொடர்பாக ஜேவிபி எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளது…? – டக்ளஸ் தரப்பு கேள்வி !

இந்திய தரப்பினரை சந்தித்து கலந்துரையாடிய ஜேவிபியின் தலைவர் வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியல் நிலை தொடர்பில் எவ்வாறான கருத்தை கொண்டுள்ளார் என வெளிப்படுத்த வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயத்துரை சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ் ஊடக மையத்தில் இன்றையதினம் (16) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இணைந்த வடக்கு கிழக்கு பிரதேசம் தமிழர்களின் தாயக பிரதேசம் தொடர்பில் ஜே.வி.பி. எவ்வாறான கருத்தை கொண்டுள்ளது என பல சந்தர்ப்பங்களில் கேள்வி எழுப்பப்பட்டபோதும் அவர்களிடமிருந்து தமிழர் தாயக பிரதேசம் தொடர்பாக எவ்விதமான தெளிவூட்டல்களும் வெளியிடப்படவில்லை.

இணைந்த வடக்கு கிழக்கை நீதிமன்றத்தினூடாக தனித்தனி மாகாணங்களாக பிரிப்பதற்கு ஜே.வி.பி.யே முக்கிய காரணமாக செயற்பட்டது.

ஆனால் ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு நடைபெறலாம் என்ற கருத்து நிலவும் சூழலில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஜேவிபி எழுச்சி பெற்று வருவதாக ஊடகமொன்றிற்கு கூறியுள்ளார்.

ஆனால் தமிழர்களின் அரசியல் உரிமை தொடர்பாக ஜேவிபி எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்பதை சரத்பொன்சேகா கூட தெரிவிக்க முயலவில்லை.

ஆகவே வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பாக ஜே.வி.பியின் நிலைப்பாட்டை நட்புடன் எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.

தேசிய கீதம் பாடப்படுகின்ற போது மாணவர்கள் அதிகளவான கவனத்தையும் மரியாதையையும் செலுத்தவது அவசியம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தேசிய கீதம் பாடப்படுகின்ற சந்தர்ப்பங்களில் மாணவர்கள் அதன் மீது அதிகளவான கவனத்தையும் மரியாதையையும் செலுத்தவது அவசியம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேசிய தெரிவித்தார்.

யா / அச்சுவேலி புனித திரோச பெண்கள் கல்லூரியில் இடம்பெற்ற பிரிவெனா மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான இலவச பாடநூல் மற்றும் பாடசாலை சீருடைத் துணிகள் பகிர்ந்தளிக்கும் தேசிய நிகழ்வில் பிரதம விருந்தினராக இன்று புதன்கிழமை (14) கலந்து கொண்டு பிரதம அதிதியாக உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்

மேலும் தெரிவிக்கையில்,

பொதுவாக அரசியலோ , பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் அரசியல்வாதிகளின் மனோநிலையிலிருந்து நான் முற்றிலும் வேறுபட்டவராகவே இருக்கின்றேன்.

இதேநேரம் எமது வடக்கு மாகாணத்தின் கல்வி செயற்பாடுகளின் மேம்பாட்டுக்கும் அதனை பாதுகாப்பதற்கும் கல்விசார் அதிகாரிகள் அதிகளவான ஊக்குவிப்புகளை வழங்கிவருகின்றனர்.

ஆனாலும் நான் அறிகின்ற வகையில் உயரதிகாரிகளின் இந்த முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்புகள் கிடைப்பதில்லை என தெரியவருகின்றது. இந்த நிலை இல்லாது போக வேண்டும். அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் நான் கவனத்தில் எடுத்து கொள்வதுடன் வடக்கின் கல்வி தரத்தை மேலும் வலுப்படுத்த என்னாலான முழுமையான ஒத்துழைப்புகளையும் எந்த வேளையிலும் வழங்க தயாராகவே இருக்கின்றேன்.

மேலும் பன்மைத்துவம் சமத்துவம், சம உரிமை போன்றவை கடந்த காலங்களில் கொள்கையளவில் மாத்திரம் இருந்தமை தான் நாடு பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு காரணமாக இருந்தது , இனிவருங்காலத்தில் இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களும் மனப்பூர்வமாக உணர்ந்து கொள்ளும் வகையில் கொள்கை ரீதியான தீர்மானங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றார்.

“13ஆம்திருத்தம் முற் செடியில் மாட்டிய சேலையைப் போல் உள்ளதால் அதனை நாம் கிழியாமல் எடுக்க வேண்டும்.” – டக்ளஸ் தேவானந்தா

“13ஆம்திருத்தம் முற் செடியில் மாட்டிய சேலையைப் போல் உள்ளதால் அதனை நாம் கிழியாமல் எடுக்க வேண்டும்.” ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை இந்தியா ஒப்பந்தத்தின் பயனாக இலங்கையில் அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தம் தற்போது முற் செடியில் மாட்டிய சேலையைப் போல் உள்ள நிலையில் அதனை கிழியாமல் எடுத்து செய்ய வேண்டியதை செய்வதே எமது இலக்காக இருக்க வேண்டும்.

இதை ஏன் நான் உதாரணமாக கூறினேன் என்றால் பதின்மூன்றுக்கு எதிரானவர்கள் தென் இலங்கையில் இருக்கின்ற நிலையில் பதின்மூன்று தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் ஆரவாரப்பட்டால்  தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும்.

இலங்கை இந்தியா ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் நான் இலங்கைக்கு வந்தாலும் தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பதற்காக தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாக தேசிய நல்லிணக்கம் ஊடாக பிரச்சனை அணுகுதலை இன்று வரை செயல்படுத்திக் கொண்டு வருகிறேன்.

பிரேமதாச காலத்தில் வாகனங்களில்  (சிறீ)  எழுத்துப் பதிவிடுவது தமிழ் மக்களின் முதலாவது போராட்டமான சிறீ எதிர்ப்பு போராட்டத்தை அப்போதைய தமிழ் தலைவர்கள் முன்னெடுத்தனர்.

ஆனால் குறித்த போராட்டத்தை நீடிக்க விடாமல் இரவோடு இரவாக பிரேமதாசா அரசாங்கத்தோடு கச்சிதமாக பேசி கலவரங்கள் ஏற்படாத வகையில் (சிறீ )  தீர்மானத்தை இல்லாமல் செய்தோம்.

இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால் நமது நாட்டில் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற நிலையில் அவர்களின் விருப்பத்தை மீறி தீர்மானங்களை மேற்கொள்வது  கஷ்டமான காரியம்.

அதேபோன்றுதான் 13 வது திருத்தம் தொடர்பில் சிங்கள மக்களை குழப்புவதற்கு தென்னிலங்கை அரசியல்வாதிகள் செயல்பட்டு வரும் நிலையில் அவர்களின் உசுப்பேத்தல்களுக்கு தமிழ் தரப்புகள் கூக்காடு போட்டால் அரசாங்கத்துக்கு இடையூறுகள் ஏற்படும்.

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்கான ஆரம்ப கட்ட தீர்மானங்களை மேற்கொண்டுள்ளார்.

பதின்மூன்றை நடைமுறைப்படுத்துவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமற்ற நிலையில் பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் அதனை நடைமுறைப்படுத்த முடியும்.

ஆகவே பதின் மூன்று தொடர்பில் தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்து தந்திரமான முறையில் அதனை நடைமுறைப்படுத்துவதே சிறந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.

13 ஆவது திருத்த சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

முதற்கட்டமாக ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரம், நிர்வாக ஏற்பாடுகளினூடாக காலத்திற்கு காலம் இல்லாமல் செய்யப்பட்ட அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு மீள கையளிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் காணி விடுவிப்பு மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்றவை நல்லெண்ணத்தினை வெளிப்படுத்துவதற்கான முயற்சிகளாக இருக்க வேண்டும் எனவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதிக்கும் தமிழ் தரப்புகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாக இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் விவகாரங்களை தீர்ப்பதற்கான அமைச்சரவை உப குழுவின் பிரதிநிதி மற்றும் தமிழ் அரசியல் கட்சித் தலைவர் என்ற வகையில், ஜனாதிபதியின் கலந்துரையாடல்களில் இரட்டை வகிபாகத்தினை கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 13 ஆவது திருத்த சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஈடேற்ற முடியும் எனவும் கூறியுள்ளார்.

 “தமிழ் இனம் தோற்று விட்டதாக யாருமே கருதக் கூடாது.” – நாடாளுமன்றத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !

“தமிழ் இனம் தோற்று விட்டதாக யாருமே கருதக் கூடாது.” அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வாக மாவட்ட அபிவிருத்தி சபையை பரிசீலிப்பது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று நாடாளுமன்றில் தெரிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்களை தீர்க்கும் வகையில், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக, மாகாணங்களின் அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன.

அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற முடியும் என்பதையே நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். அதுவே அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைச் சாத்தியமான வழிமுறையாகவும் இருக்கின்றது.

இவ்வாறான சூழலில் 80 களின் ஆரம்பத்திலேயே தமிழ் மக்களினால் ஏகோபித்த குரலில் தட்டிக்கழிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி சபை தொடர்பாக பிரஸ்தாபிப்பதற்கு நாம் தயாராக இல்லை.

2009 ஆம் ஆண்டு இந்த நாட்டில் நிறைவடைந்த யுத்தம் என்பது, இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னர் சிலரால் முன்னெடுக்கப்பட்ட தவறான வழிமுறைக்கு கிடைத்த தோல்வியாகவே அனைவரும் கருத வேண்டுமே தவிர, தமிழ் மக்கள் தோல்வியுற்ற சம்பவமாக அதனை யாரும் கருதக்கூடாடது.

தமிழ் மக்கள் மத்தியிலும், சிங்கள மக்கள் மத்தியிலும் இருக்கின்ற சில இனவாத சக்திகள், தங்களின் அரசியல் நலன்களுக்காக, தமிழ் மக்கள் தோல்வியடைந்து விட்டார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இதுவே பிரச்சினைகள் இன்னும் தீராமல் இருப்பதற்கு காரணமாக இருக்கின்றது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்
எவ்வாறெனினும், தமிழ் மக்களின் நியாயமான நிலைப்பாட்டினை தற்போதைய ஜனாதிபதி தெளிவாக புரிந்து வைத்திருக்கின்மை, பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரின் செயற்பாடுகளில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றமை மகிழ்ச்சியளிக்கின்றது” எனவும் தெரிவித்துள்ளார்.

குருந்துார் மலை , வெடுக்குநாரி மலை விவகாரங்களுக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !

முல்லைத்தீவு குருந்துார் மலை மற்றும் வவுனியா வெடுக்குநாரி மலை விவகாரங்களை சுமுகமாக தீர்த்து வைக்கும் வகையில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, விஜதாஸ ராஜபக்ஷ ஆகியோர் எதிர்வரும் நவம்பர் முதலாவது வாரத்தில் குறித்த பகுதிகளுக்கான நேரடி விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து, அவற்றுக்கு நியாயமான தீர்வினை வழங்கும் வகையில், ஜனாதிபதி தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவின் முதலாவது சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (25.10.2022) நடைபெற்றது.

இதன்போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

அவற்றுள் தமிழ் மக்களின் வரலாற்று தொன்மைமிகு குருந்தூர்மலை, வெடுக்குநாரி ஆலயம் தொடர்பான விவகாரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய குறித்த இரண்டு அமைச்சர்களும் கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.

ஏற்கனவே, திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் விதுர விக்கிரமநாயக்க ஆகியோர் நேரடியாக சென்று, ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வர்த்தக நிலையங்களை அமைப்பதற்கு பொருத்தமான இடத்தினை சம்மந்தப்பட்ட தரப்புக்களின் சம்மதத்துடன் அடையாளப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“தமிழ் தலைமைகள் மக்களின் அவலங்களில் குதூகல மகிழ்ச்சியடைகின்றன.” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

“எமது நடைமுறைச் சாத்தியமான அரசியல் வழிமுறை பட்டிதொட்டி எங்கும் நெருப்பாக பற்றிக்கொள்ளும் வகையில் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.” என  அமைச்சரும் ஈபிடிபி கட்சியின் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா தமது கட்சியின் ஆதரவாளர்களுக்கு எடுத்து விளக்கியுள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

ஏமாற்றும் தமிழ் தலைமைகள் மக்களின் அவலங்களில் குதூகல மகிழ்ச்சியடைகின்றன. அவலங்களை தீர விடாது தடுத்து வைத்து அவர்கள் அடுத்த தேர்தல் வெற்றி குறித்து கனவு காண்கிறார்கள். ஆனால், ஈ.பி.டி.பி. யினராகிய நாம் அவலங்களை தீர்த்து வைத்து, மக்களின் மாற்றத்தை நோக்கி பயணிக்க விரும்புகிறோம்.

எங்காவது ஓரிடத்தில் நெருப்பு எரிகின்றது என்றால், அதில் அவர்கள் எண்ணை ஊற்றி பற்றி எரிய வைக்கிறார்கள். ஆனால், நாம் எரிகின்ற இடத்தில் தண்ணீரை ஊற்றி எரியும் நெருப்பை நிரந்தரமாக அணைய வைக்க விரும்புகிறோம்.

இதுவே எமக்கும் ஏனைய சுயலாப தமிழ் அரசியல் கட்சி தலைமைகளுக்கும் இருக்கும் வேறுபாடு. எமது நடைமுறைச் சாத்தியமான அரசியல் வழிமுறை பட்டிதொட்டி எங்கும் நெருப்பாக பற்றிக்கொள்ளும் வகையில் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.