டொனால்ட் ட்ரம்ப்
டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி பதவியிலிருந்து விடுபடவிருக்கும் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார்.
அமெரிக்க ஜனாதிபதியாக அவருக்கு வரும் 20-ம் திகதி முறைப்படி பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படுகிறது. இதனையொட்டி, அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக அவர் பதவி ஏற்க வழிவகை செய்ய அவரது வெற்றியை அங்கீகரித்து சான்றிதழ் அளிக்கு நிகழ்வு அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்தது.
அப்போது, நாடாளுமன்றத்தின் அருகே திரண்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள், நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்றனர். இதனால், ஏற்பட்ட கலவரம், மோதலில் 4 பேர் உயிரிழந்தனர்.
இதற்கு ட்விட்டரில் ட்ரம்ப் வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்ட கருத்துகளே காரணம் எனக் கூறப்பட்டது. இதனால், அவரின் தனிப்பட்ட ட்விட்டர் (@realDonaldTrump)கணக்கு முடக்கப்பட்டது. உடனே, @POTUS என்ற அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரபூர்வ கணக்கிலிருந்து ட்ரம்ப் ட்வீட் செய்யத் தொடங்கினார். ஆரம்பத்தில் அப்பதிவுகள் நீக்கப்பட்டன.
இந்நிலையில், நேற்று (08.01இ2021) அமெரிக்க ஜனாதிபதிக்கான @POTUSஎன்ற ட்விட்டர் கணக்கும் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.
மீண்டும் வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துப் பதிவிடலாம் என்பதால் அந்தக் கணக்கை நீக்குவதாக ட்விட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அந்தக் கணக்கில் பதிவிடப்பட்ட அத்தனை ட்வீட்களும் நீக்கப்பட்டன. ஏற்கெனவே, ட்ரம்ப்பின் ஃபேஸ்புக் கணக்கை காலவரையறையின்றி முடக்குவதாக கடந்த வியாழக்கிழமையன்று அந்நிறுவனம் அறிவித்தது. ட்விட்ச், ஸ்னாப் சாட் உள்ளிட்ட மற்ற சமூக ஊடகங்களும் ட்ரம்ப்பின் கணக்குகளை நீக்கியிருந்தன.
அமெரிக்க ஜனாதிபதியின் ட்விட்டர் கணக்கு உள்ளிட்ட சமூக வலைதளக் கணக்குகள் முடக்கப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் “தனது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு, ஜனாதிபதியின் கணக்கு என அனைத்தையும் முடக்கிய ட்விட்டர் நிறுவனத்தை ட்ரம்ப் வெகுவாகச் சாடியுள்ளார். ட்விட்டர் நிறுவனம் பேச்சு சுதந்திரத்தைத் தடை செய்வதாகவும், தன்னைப் பேசாமல் அமைதியாக இருக்கச் செய்வதற்காக தனது கணக்கை நீக்கியிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ட்விட்டர் ஊழியர்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் தீவிர இடதுசாரிகளுடன் கைகோத்து அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் வெகுண்டெழுந்துள்ளார்.
எதிர்காலத்தில் தனது சொந்தக் கருத்துகளைச் சுதந்திரமாகப் பதிவு செய்யும் வகையில், சொந்த சமூக வலைதளத்தை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார். ட்ரம்ப்பின் இந்த ட்வீட்களும் நீக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா தான் தங்களது மிகப்பெரிய எதிரி எனக் கூறிய வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் “அமெரிக்காவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் வடகொரியா மீதான வெறுப்புப் பார்வை மாறப்போவதில்லை” என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையேயான பூசல் பலகாலமாக அனைவரும் அறிந்ததே.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர் வரும் 20ம் திகதி ஜனாதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ளார்.
இந்நிலையில், வடகொரிய ஜனாதிபதி கிம்மின் அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இது தொடர்பாக கொரிய மத்திய செய்தி ஏஜென்சி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
வடகொரியா மீது வாஷிங்டன்னின் பார்வையில், கொள்கையில் ஒருநாளும் எந்த ஒரு மாற்றமும் வரப்போவதில்லை. ஆகையால் எதிரிகளை சமாளிக்கும் வகையில், அணுஆயுதங்கள், ஸ்பை செயற்கைகோள்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் என அனைத்தையும் அதிகளவில் தயாரித்து இருப்பில் வைக்க வேண்டும்.
நமது அரசியல் கொள்கை நம்முடைய புரட்சிகரமான வளர்ச்சிக்கு மிகப்பெரிய எதிரியாக இருக்கும் அமெரிக்காவை சமாளிக்கும் வகையில் அமைய வேண்டும்.
இவ்வாறு கிம் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2019ல் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், வடகொரிய ஜனாதிபதி கிம் நேருக்கு நேர் சந்தித்துப் பேசினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“டிரம்ப் தனது பதவிக்குரிய வேலையைச் செய்வதை விட புலம்புவதிலும், புகார் செய்வதிலும் அதிக நேரத்தை செலவிடுகிறார்” என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் வருகிற 20-ந் தேதி அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். ஆனால் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் இன்னமும் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக உள்ளார்.
எந்தவித ஆதாரங்களையும் வழங்காமல் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டி வருகிறார். இதற்கிடையில் ஜோர்ஜியா மாகாணத்தில் தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கும் வகையில் கள்ள வாக்குகளை தயார் செய்ய மாகாண உள்துறை மந்திரியை டிரம்ப் மிரட்டும் காணொளி பதிவு வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தநிலையில் ஜோர்ஜியா மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கு போட்டியிடும் 2 ஜனநாயக கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஜோ பைடன் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் ஜனாதிபதி டிரம்ப் தனது பதவிக்குரிய வேலையைச் செய்வதை விட புலம்புவதிலும், புகார் செய்வதிலும் அதிக நேரத்தை செலவிடுவதாக காட்டமாக கூறினார்.
இதுபற்றி அவர் கூறுகையில், டிரம்ப் ஏன் இன்னும் ஜனாதிபதி பதவியை விரும்புகிறார் என்று எனக்கு தெரியவில்லை. அவர் வேலை செய்ய விரும்பவில்லை. ஏதாவது ஒரு பிரச்சினை குறித்து புலம்புவதிலும், புகார் கூறுவதிலும் தான் அதிக நேரத்தை செலவிடுகிறார் என்றார்.
இதற்கிடையில் ஜனாதிபதி பதவியை தக்கவைக்க நரகத்தை போல போராடுவேன் என கூறியுள்ள டிரம்ப், ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்வில் சபை உறுப்பினர்களின் வாக்கெடுப்பை உறுதிப்படுத்த இந்த வாரம் நாடாளுமன்றம் கூடும்போது, குடியரசு கட்சி எம்.பி.க்கள் அதனை நிராகரிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோபைடன் வெற்றி பெற்றார். அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக வருகிற 20-ந்தேதி பதவி ஏற்கிறார். ஆனால் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் இன்னமும் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக உள்ளார். மேலும் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.
இதனிடையே டொனால்ட் டரம்ப் இன்னும் சில தினங்களில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற உள்ள நிலையில் அமெரிக்க அரசு துறைகள் தொடர்ந்து இயங்குவதற்கு தேவையான சில முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றம் நிறைவேற்றி வருகிறது.
அந்த வகையில், 2021-ம் ஆண்டுக்கான, 740 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ பட்ஜெட்டை உறுதி செய்யும் “தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம் 2021” என்கிற பாதுகாப்பு கொள்கை மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒருமனதாக நிறைவேறியது.
இதனை தொடர்ந்து அந்த மசோதா ஜனாதிபதி டிரம்பின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இந்த மசோதா நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக உள்ளதாக கூறி, ட்ரம்ப் தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்தார்.
இந்த மசோதாவின் 230-ம் பிரிவு அமெரிக்காவின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதாக உள்ளது என்றும் ராணுவ மையங்களின் பெயர்களை மாற்றுவது, அவசரகால முடிவெடுக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லாதது என பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் மசோதாவில் இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டார்.
இந்த தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம் கடந்த 60 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த மசோதாவிலிருந்து கிடைக்கும் நிதி மூலமே பாதுகாப்புப் படையினருக்கு ஊதியம் அளிப்பது முதல் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவது வரை அனைத்தும் மேற்கொள்ள முடியும். எனவே இந்த மசோதாவுக்கு ட்ரம்ப் மறுப்பு தெரிவித்ததற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது.
அமெரிக்க அரசியலமைப்பை பொறுத்தவரையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 3-ல் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் ஜனாதிபதியின் வீட்டோ அதிகாரத்தை நிராகரிக்க முடியும். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சியினரை பெரும்பான்மையாக கொண்ட பிரதிநிதிகள் சபையில் டிரம்பின் வீட்டோ அதிகாரத்தை நிராகரிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.
அங்கு 322 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் 87 பேர் எதிராகவும் வாக்களித்தனர். டிரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்த, 109 உறுப்பினர்கள், தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதன் மூலம் அந்த தீர்மானம் பெருவாரியான வித்தியாசத்தில் நிறைவேறியது. இது, ஜனாதிபதி டிரம்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. அதேசமயம் குடியரசு கட்சியினரை பெரும்பான்மையாக கொண்ட செனட் சபையில் இந்த தீர்மானம் நிறைவேறாது என டிரம்ப் நம்பிக்கை கொண்டிருந்தார்.
இந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் நாளான நேற்று முன்தினம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் டிரம்பின் வீட்டோ அதிகாரத்தை நிராகரிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் நடந்த ஓட்டெடுப்பில் 81 உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் 13 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.
இதன் மூலம் செனட் சபையிலும் இந்த மசோதா எளிமையாக நிறைவேறியது. டிரம்பின் 4 ஆண்டு பதவி காலத்தில் அவரது வீட்டோ அதிகாரம் நிராகரிக்கப்படுவது இதுவே முதல் முறை. அதுவும் டிரம்ப் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகும் சில தினங்களுக்கு முன்பாக இது நடந்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த மாதம் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் ஜனாதிபதி டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாததோடு தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் பல்வேறு மாகாண கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் அனைத்துமே ரத்து செய்யப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்கக் கோரி டிரம்ப் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறுவதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
இதற்கிடையில் அமெரிக்க தேர்தல் சபை ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்தது. ஆனாலும் டிரம்ப் தரப்பு தேர்தல் முடிவை மாற்றி அமைப்பதற்கான தங்களது சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் தேர்தல் முடிவை மாற்றியமைக்க கோரி டிரம்ப் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில் பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ பைடனின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும், பென்சில்வேனியா மாகாணத்தின் தேர்தல் சபை உறுப்பினர்களை மாகாண சட்டமன்றம் தேர்வு செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தேர்தல் சபை உறுப்பினர்களின் வாக்குகள் வருகிற ஜனவரி மாதம் 6-ந்தேதி எண்ணப்பட உள்ள நிலையில், அதற்கு முன்பாக இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் எனவும் டிரம்ப் தரப்பு கோரியுள்ளது.
ஏற்கனவே அமெரிக்க பாதுகாப்புத் துறை மந்திரியாக பதவி வகித்து வந்தவர் மார்க் எஸ்பரை அந்த பதவியில் இருந்து அதிரடியாக நீக்கிய ட்ரம்ப் அவருக்கு பதிலாக தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குனர் கிரிஸ்டோபர் மில்லர் அப்பதவிக்கு பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் நவம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருக்கிறதுகிறது. ஜனாதிபதி ட்ரம்ப் 2-வது முறையாக குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜோ பிடனும் இதே கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.
இதற்கிடையில், ஜனாதிபதி ட்ரம்ப் இந்திய பயணம் மேற்கொண்ட போது பிரதமர் மோடியும் ட்ரம்பும் அகமதாபாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினர். அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரை கவர பிரதமர் மோடியின் உரை அடங்கிய அந்த வீடியோ ட்ரம்ப் தேர்தல் விளம்பரமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ வெளியான சில மணி நேரத்தில் வைரலாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதே நிலையில் முன்னதாக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரை கவர ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துத் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “அமெரிக்கா, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள். நீங்கள் எல்லாத் தடைகளையும் தாண்டி, ஞானத்தால் ஆசிர்வதிக்கப்படுவீர்கள்” என்று பதிவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.