தமிழரசுக் கட்சி

தமிழரசுக் கட்சி

தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாக தெரிவு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு – சுமந்திரன் வெளியிடுள்ள தகவல் !

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிருவாகத் தெரிவு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை முடிவுக்கு கொண்டுவருவதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்ட போதும் அதன் பிரகாரம் மாவை. சேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன் ஆகியோர் உட்பட நால்வரின் தரப்பு சமர்ப்பனங்கள் இடம்பெறவில்லை. அதற்கான காரணங்களும் தெரியாதுள்ளது என்று அக்கட்சியின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கினை இணக்கப்பாட்டுடன் முடிவுக்கு கொண்டுவருவதற்கு கட்சி மட்டத்தில் நடவடிக்ககைள் எடுக்கப்பட்டிருந்தபோதும், கடந்த 19ஆம் திகதியில் மீண்டும் 11 நாட்களுக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கருத்து வெளியிட்டுள்ள சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கட்சியின் நிருவாகத் தெரிவுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கினை இணக்கப்பாட்டுடன் முடிவுக்கு கொண்டுவருவதென எமது மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன் பின்னர் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

தொடர்ந்து, கடந்த 14ஆம் திகதி வவுனியாவில் இடம்பெற்ற அரசியல் உயர்பீடக் கூட்டத்தின் போது பதில் சமர்ப்பணங்களை எதிராளிகள் சமர்ப்பிப்பதென தீர்மானிக்கப்பட்டு சமர்ப்பணங்கள் தொடர்பான வரைவுகளும் ஏனைய எதிராளிகளின் சட்டத்தரணிகளுடன் பகிர்ந்துகொள்ளப்பட்டது.

இவ்வாறான நிலையில் கடந்த 19ஆம் திகதி மாவை.சேனாதிராஜா, யோகேஸ்வரன், சிறிதரன், குகதாசன் ஆகிய நால்வர் சார்பான பதில் சமர்ப்பணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த நிலைமையால் தற்போது வழக்கு 11 தினங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நால்வரும் இணக்கப்பாடு எட்டியதன் பின்னர் எதற்காக தங்களது சமர்ப்பணங்களை செய்வதற்கு தவறியுள்ளார்கள் என்பது தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றார்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கு இணக்கம் என்கிறார் சிறீதரன்!

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் நிறுத்தப்படுவதற்கு கொள்கையளவில் இணக்கம் தெரிவிக்கும் அதேநேரம், கட்சியின் தீர்மானமும் முக்கியமானது என்று இலங்கைத் தமழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான முயற்சிகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான முன்முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

 

தற்போதைய நிலையில், ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றவர்கள் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட எந்தவொரு விடயங்களிலும் கரிசனைகளைக் கொண்டவர்களாக தம்மை வெளிப்படுத்தவில்லை.

 

ஆகவே, எந்த அடிப்படைகளுமின்றி தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரிப்பது பொருத்தமற்றதொரு முயற்சியாகும். அந்த வகையில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பொதுவேட்பாளரை நிறுத்துகின்றமை பொருத்தமான அணுகுமுறையாகும்.

 

அந்த முயற்சிக்கு நான் கொள்கை அளவில் இணக்கம் தெரிவிக்கின்றேன். எனினும், இலங்கைத் தமிழரசுக்கட்சியினுள் இந்த விடயம் சார்ந்து கலந்துரையாடி கட்சியாக தீர்மானம் எடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகின்றது.

ஆகவே, குறித்த விடயம் சம்பந்தமாக கட்சியாக கூடி ஆராய்ந்து தீர்மானிக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது என்றார்.

இதேவேளை தமிழரசுக் கட்சியின் இன்னுமொரு முக்கிய உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தமிழர் சார்பில் பொது ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்குவதன் பின்னணியில் ராஜபக்சக்கள் இருப்பதாக சந்தேகம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழரசு கட்சி தலைவர் தெரிவை ரத்து செய்ய உடன்படுவதாக அதிபர் சட்டத்தரணி கே.வி தவராசா அறிவிப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்சபை கூட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தலைவர் மற்றும் செயலாளர் தெரிவுகளை இரத்துசெய்ய உடன்பட்டுள்ளதாக அதிபர் சட்டத்தரணி கே.வி தவராசா தெரிவித்துள்ளார்.

 

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவானது இன்றையதினம் திருகோணமலை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், ”கடந்தமாதம் 21 ஆம் மற்றும் 27 ஆம் திகதிகளில் இடம்பெற்ற பொதுச்சபை கூட்ட தெரிவுகளை இரத்துசெய்யக்கோரி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 

இதன்படி மனுதாரர்களின் கோரிக்கைக்கு அமைவாகவும், கட்சியின் நலன்கருதியும் குறித்த கோரிக்கைகளுக்கு நாங்கள் உடன்பட்டோம். இதற்கு காரணம் இது ஒரு கட்சி சார்ந்த பிரச்சினை மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சினை.

இந்த வழக்கு நீடிக்குமாக இருந்தால் அது சமூகத்திற்கு செய்யும் துரோகமாகும். இதன்படி வழக்கானது எதிர்வரும் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

மேலும், வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த கட்சி உறுப்பினர்கள் நீதிமன்றுக்கு முன்னிலையாகியுள்ள நிலையில் தமது கோரிக்கைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

 

 

எனினும் எம். எ சுமந்திரன் நீதிமன்றுக்கு முன்னிலையாகாத நிலையில் அவரது நிலைப்பாடு தொடர்பில் கலந்தாலோசித்து முடிவை எடுப்போம்.” என்றார்.

தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவை இரத்துச் செய்யக் கோரிய வழக்கு – நீதிமன்றம் கட்டாணையை நீடித்து கட்டளை !

தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவை இரத்துச் செய்யக் கோரியும், மாநாட்டை தடை செய்யக்கோரியும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது இன்றைய தினம் (29) மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது கட்டாணையை நீடித்து கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

குறித்த கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.,

 

ஜனநாயகத்தின் சிறந்த பண்பின் ஓர் அங்கமாக இருக்கின்ற கட்சியின் யாப்பு இங்கு முக்கியத்துவம் பெறுகின்றது. கட்சியின் யாப்பு என்பது கட்சியின் கட்டமைப்புக்களினாலும், கட்சியின் நிர்வாகிகளினாலும், கட்சியின் அனைத்து அங்கத்தவர்களினாலும் பின்பற்றப்பட்டேயாக வேண்டும் என்ற கருத்தில் மாற்று கருத்து இல்லை.

 

நீதிமன்றுக்கு நீதி வேண்டி வருவதற்கான அனைத்து உரிமைகளும் உங்களுக்கு இருக்கின்றது. ஆனால் இங்கு வருவதற்கு முன்பு கட்சி மட்டத்தில் தீர்க்க முடிந்த பிரச்சினைகளை அங்கேயே தீர்த்து விடுவதுதான் சிறந்த ஒரு ஜனநாயக பண்பு எனவும் மக்களின் நலன்கருதி இரு தரப்பும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வருமாறும் யாப்பில் திருத்தங்கள் ஏதும் இருப்பின் அதனை இந் நீதிமன்றில் இருதரப்பும் இணங்கும் பட்சத்தில் தமது வழிமொழிகளை சமர்ப்பித்து சட்ட ரீதியாக இணக்கப்பாட்டை எட்ட முடியும் எனவும் குறித்த கட்டாணையானது தொடர்ந்தும் நீடிக்கப்படுவதாகவும் நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது.

 

இலங்கை தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவு யாப்பு விதிகளுக்கு முரணானது எனவும், இடம்பெறவுள்ள மாநாட்டுக்கு தடை விதிக்கக்கோரியும் கடந்த 15 ஆம் திகதி திருகோணமலை மாவட்ட நீதிமன்றி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதன்போது மாநாட்டை நடாத்துவதற்கு இரண்டு வாரங்களுக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றானது கட்டானையொன்றினை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழரசுக் கட்சியை புலி அரசுக் கட்சியாக்கும், ‘றோ – புலிகளின்’ நாடகம் அரங்கேற முன்னரே அம்பலம் !

எழுபது ஆண்டு வரலாற்றைக் கொண்ட தமிழரசுக் கட்சி, நடாத்திய ஒரேயொரு அரையும் குறையுமான ஜனநாயகத் தேர்தலோடு கட்சியின் அதிகாரத்தை புலத்தில் வாழும் புலிகள் கைப்பற்றமுனைந்துள்ளனர். தமிழரசுக் கட்சித் தேர்தலுக்கு முன்னரேயே கட்சி பிளவுபடும் என்பதையும் எம் ஏ சுமந்திரன் தேர்தலில் தோற்றால் வெளியேற்றப்படுவார் என்பதையும் தேசம்நெற் எதிர்வு கூறியிருந்தது. இதனை உறுதிப்படுத்தும் பல விடயங்கள் தேர்தல் நடந்தது முதல் தற்போது வரை நடந்தேறிவருகின்றது.

எம் ஏ சுமந்திரனின் பின்னணியில் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களின் உறுப்புரிமைகள் பற்றி யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் மட்டும் இதனை உறுதிப்படுத்தவில்லை. புலத்து புலிகள் குறிப்பாக ‘றோ’ புலிகள் சற்று மிடுக்காகவே உறும ஆரம்பித்துள்ளன. கனடா, லண்டன், சுவிஸ் நாடுகளில் புலத்துப் புலிகள் தமிழரசுக் கட்சியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான அதிரடி முயற்சிகளில் இறங்கியுள்ளனர். மிக விரைவில் ஏனைய நாடுகளிலும் தமிழரசுக் கட்சியின் கிளைகள் ஆரம்பிக்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர். தாயகத்தின் வடக்கு – கிழக்கிலும் இதற்கான வேலைத்திட்டங்கள் முடக்கிவிடப்படவுள்ளது என தேசம்நெற் க்குத் தெரியவருகின்றது. இதற்கு மணி கட்டுவது போல் மார்ச் 10 ஆம் திகதி ஒன்றுகூடல் ஒன்றுக்கு தமிழரசுக் கட்சியின் பெயரில் ‘ரோ புலிகள்’ அழைப்பு விடுத்துள்ளனர்.

இது தொடர்பான தேசம்திரை காணொளியை காண கீழே உள்ள லிங்க்ஐ கிளிக்செய்யவும்..,

தமிழரசுக் கட்சியை புலியரசுக் கட்சியாக்கும், ‘றோ – புலிகளின்’ நாடகம் அரங்கேற முன்னரே அம்பலம்!

எழுபது ஆண்டு வரலாற்றைக் கொண்ட தமிழரசுக் கட்சி, நடாத்திய ஒரேயொரு அரையும் குறையுமான ஜனநாயகத் தேர்தலோடு கட்சியின் அதிகாரத்தை புலத்தில் வாழும் புலிகள் கைப்பற்றமுனைந்துள்ளனர். தமிழரசுக் கட்சித் தேர்தலுக்கு முன்னரேயே கட்சி பிளவுபடும் என்பதையும் எம் ஏ சுமந்திரன் தேர்தலில் தோற்றால் வெளியேற்றப்படுவார் என்பதையும் தேசம்நெற் எதிர்வு கூறியிருந்தது. இதனை உறுதிப்படுத்தும் பல விடயங்கள் தேர்தல் நடந்தது முதல் தற்போது வரை நடந்தேறிவருகின்றது. எம் ஏ சுமந்திரனின் பின்னணியில் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களின் உறுப்புரிமைகள் பற்றி யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் மட்டும் இதனை உறுதிப்படுத்தவில்லை. புலத்து புலிகள் குறிப்பாக ‘றோ’ புலிகள் சற்று மிடுக்காகவே உறும ஆரம்பித்துள்ளன.

கனடா, லண்டன், சுவிஸ் நாடுகளில் புலத்துப் புலிகள் தமிழரசுக் கட்சியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான அதிரடி முயற்சிகளில் இறங்கியுள்ளனர். மிக விரைவில் ஏனைய நாடுகளிலும் தமிழரசுக் கட்சியின் கிளைகள் ஆரம்பிக்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர். தாயகத்தின் வடக்கு – கிழக்கிலும் இதற்கான வேலைத்திட்டங்கள் முடக்கிவிடப்படவுள்ளது என தேசம்நெற் க்குத் தெரியவருகின்றது. இதற்கு மணி கட்டுவது போல் மார்ச் 10 ஆம் திகதி ஒன்றுகூடல் ஒன்றுக்கு தமிழரசுக் கட்சியின் பெயரில் ‘ரோ புலிகள்’ அழைப்பு விடுத்துள்ளனர்.

யார் இந்த ‘றோ’ புலிகள்:

முன்னாள் ரிஆர்ஓ பொறுப்பாளர் ரெஜி, அதனைத் தொடர்ந்து இறுதி யுத்தத்தில் இருந்து தப்பித்து வந்ததாகவும், இல்லை விநாயகதத்pன் குடும்பம் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்து பின்னர் அவர்கள் புலனாய்வுக்காக விடுவிக்கப்பட்டதாக சொல்லப்படும் விநாயகம் – சங்கீதன் அணியினரும் இணைந்து பிரித்தானியாவில் வரலாற்று மையம் என்ற ஒரு அமைப்பை 2009 இறுதி யுத்தத்திற்குப் பின்னர் உருவாக்கி இருந்தனர். இவர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் பிரித்தானிய தமிழ் போறம் என்ற பிரிஎப் க்கு எதிராக போட்டியாக மாவீரர் தினத்தை நடத்தியும் இருந்தனர். வெளிநாடுகளில் புலிகளை ஒருங்கிணைத்து செயற்பட ஒரு திட்டத்தை இவர்கள் தயாரிக்க முயன்ற போதும் அது தொலைபேசி உரையாடல்கள் ஸ்கைப் மீற்றிங்குகளுடன் முடிந்து போய்விட்டது.

அதற்குப் பின் அண்மைக்காலமாக வரலாற்று மையத்தை பின்புலமாகக் கொண்ட ‘நிலா – திவாகரன்’ அணி இந்திய உளவுப் பிரிவான ‘றோ’ தமிழீழம் பெற்றுத் தரும் என்று டெல்லியிலும் தமிழகத்திலும் மாநாடுகளை நடத்தி அதுபற்றிய சந்திப்பு ஒன்றை இவ்வாண்டு ஜனவரி 28இல் நோத் ஹரோவில் ஏற்பாடு செய்திருந்தனர். அச்சந்திப்பிலும் அவர்களுடைய ‘அரச அறிவியல்’ தெளிவின்படி ‘றோ’ தமிழீழம் பெற்றுத்தரும் என்று அடித்துச் சொன்னார்கள். மோடியின் கோசலத்தின் தாக்கம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை அவர்களிலும், அவர்கள் வெளியிட்ட முஸ்லீம் எதிர்ப்பு மாநாட்டு அறிக்கையிலும் தெளிவாக பார்க்கக் கூடியதாக இருந்தது.

மீண்டும் லண்டனில் மார்ச் 10இல் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழரசுக் கட்சியின் ஒன்றுகூடல் அழைப்பிதழை ‘நிலா – திவாகரன்’ அணியினரே ஏற்பாடு செய்துள்ளனர். இவர்கள் வெளியிட்ட முதலாவது ஒன்றுகூடல் அழைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தராகச் செயற்பட்ட போஸின் தொடர்பிலக்கமும் இருந்தது.

அது தொடர்பில் தேசம்நெற் நேற்று பெப்ரவரி 25இல் போஸ் உடன் தொடர்பு கொண்டு, “இலங்கையில் தமிழரசுக் கட்சி மீது வழக்குகள் தொடரப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட தலைவர் சிறீதரனின் தலைமைப் பதவியே கேள்விக்குள்ளாகி உள்ள நிலையில் எவ்வாறு தமிழரசுக் கட்சி லண்டனில் ஒரு ஒன்றுகூடலை ஏற்பாடு செய்ய முடியும் ?” என்று கேட்ட போது, “அதே கேள்வி தான் தன்னிடமும் உள்ளது” எனத் தெரிவித்த போஸ் “தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று தான் நாங்கள் இயங்கினோமே அல்லாமல் தமிழரசுக் கட்சிக்கு என்று இங்கு எந்தக் கட்டமைப்பும் இல்லை” என்றும் “அவ்வாறு தமிழரசுக் கட்சியின் பெயரில் அழைப்பு விடுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை” என்றும் தெரிவித்தார்.

அவ்வாறானால் உங்களுடைய பெயர் எவ்வாறு அழைப்பிதழில் உள்ளது எனக் கேட்டதற்கு நிலாவும் சிறிவாஸ் என்பவரும் தன்னோடு போனில் தொடர்பு கொண்டு இது பற்றி உரையாடியதாகவும் “அவ்வாறான ஒரு சந்திப்பு செய்யத்தான் வேண்டும் ஆனால் அதற்கு இது நேரமில்லை. வழக்குகள் முடிந்து தாயகத்தில் கட்சி செயற்பட ஆரம்பிக்கும் போதே அதனை மேற்கொள்ள முடியும்” என்று தான் தெரிவித்ததாக போஸ் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தன்னுடைய உடன்பாடில்லாமலேயே அவர்கள் தன்னுடைய தொடர்பிலக்கத்தை வெளியிட்டதற்கு நிலாவோடு தொடர்பு கொண்டு கண்டித்ததாகவும் தன்னுடைய பெயரை உடனடியாக நீக்க வேண்டும் என்று கோரியதாகவும் தெரிவித்தார். அதன்படி பெப்ரவரி 25இல் வெளியிட்ட புதிய அழைப்பிதழில் போஸின் பெயர் நீக்கப்பட்டு இருந்தது.

அந்த அழைப்பிதழில் இருந்த மற்றைய இருவர்: சிறிவாஸ் மற்றும் கேதீஸ். சிறிவாஸ் தமிழரசுக் கட்சியின் செயலாளராகச் செயற்பட்ட ஆவரங்கால் சின்னத்துரையின் மகன் ஆவார். தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கிய போது தேர்தலில் போட்டியிட தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தை பயன்படுத்த முயன்றனர். ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி ஆனந்தசங்கரி தமிழீழ விடுதலைப் புலிகளை ஏகபிரதிநிதிகள் என்று ஏற்கமறுத்த முரண்பாட்டினால் தமிழர் விடுதலைக் கூட்டணியையும் உதயசூரியன் சின்னத்தையும் வழங்க மறுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து லண்டனிலிருந்த ஆவரங்கால் சின்னத்துரையை தாயகத்துக்கு அழைத்து தமிழரசுக்கட்சியையும் அதன் வீட்டுச் சின்னத்தையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் நோக்கங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தினர்.

சின்னத்துரை சிறிவாஸ் தமிழீழு விடுதலைப் புலிகளின் நல்ல விசுவாசியாகவும் அவர்களின் அரசியல் செயற்பாடுகிளிலும் முன்னின்றவர். தற்போது தமிழரசுக் கட்சி என்ற பெயரில் அழைப்பிதல் வெளியிட்டுள்ளார். அக்கூட்டத்தில் தேசம்நெற் ஊடகவியலாளராகக் கலந்துகொள்ள முடியுமா? என்று கேட்டபோது “சமஸ்டிக் கொள்கையை ஏற்று கட்சியின் விதிமுறைகளை ஏற்றுக்கொள்பவர்கள் கட்சியின் உறுப்பினர்களானால் மட்டுமே அந்த ஒன்று கூடலில் கலந்துகொள்ள முடியும்” எனத் தெரிவித்தார். “அப்படியானால் நீங்கள் தமிழீழக் கொள்கையை விட்டுவிட்டீர்களா?” என்று கேட்டேன். அதற்குப் பதிலளித்த அவர் “யுத்தம் தீவிரமாக நடந்த காலகட்டத்தில் தமிழீழம் கிடைக்க வேண்டும் என்று விரும்பினேன். இப்போது அதற்கு சாத்தியமில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டேன். சமஸ்டிக் கொள்கையை ஏற்றுக்கொள்பவர்கள் யாரானாலும் தமிழரசுக் கட்சியில் இணையலாம்” என்றார்.

“நீதி மன்றம் கட்சியின் செயற்பாடுகளை முடக்கி விட்டுள்ள நிலையில் நீங்கள் ஏன் அவசரப்பட்டு இந்த ஒன்றுகூடலை நடத்துகிறீர்கள் ?” என்று கேட்ட போது, “லண்டனில் கட்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு எந்தத் தடையும் இல்லை” எனத் தெரிவித்தார். “தமிழரசுக் கட்சியை புலத்தில் உள்ள புலிகள் கைப்பற்றுவதற்கான சதித்திட்டமா இது ?” எனத் தேசம்நெற் கேட்டபோது அப்படியல்ல என்றவர், “புலிகள் சமஸ்டிக்கொள்கையை ஏற்றுக்கொண்டு வரவிரும்புகிறார்கள். அவர்களை நாங்கள் உள்வாங்குவோம்” என்றார். அது போல், “ரொலோ மற்றும் புளொட் அமைப்புகளும் தங்கள் அமைப்புகளை விட்டுவிட்டு தமிழரசுக் கட்சியில் இணையலாம்” என்றார். அப்படியானால் “தமிழரசுக் கட்சி இனி புலி அரசுக்கட்சியாகி விடுமா? வெளிநாட்டு கிளைகளில் இருந்தும் கட்சியின் மத்திய குழுவுக்கு உறுப்பினர்கள் அனுப்பப்டுவார்களா?” என்று கேட்டதற்கு “சமஸ்டிக்கு உடன்படும் புலிகள் தமிழரசுக் கட்சியில் இணையலாம். லண்டனில் இருந்து ஐவர் மத்திய குழுவுக்கு அனுப்பப்படுவார்கள் அவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை இருக்கும்” என்றார் சின்னத்துரை சிறிவாஸ்.

சின்னத்துரை சிறிவாஸ் மேலும் தெரிவிக்கையில் தமிழரசுக் கட்சியின் தேர்தல் முடிவுகளின் பின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட சிவஞானம் சிறிதரன் மற்றும் எம் ஏ சிறிதரனுடன் பேசியதாகவும் அவர்கள் இருவரும் ஊடகங்கள் குறிப்பிடுவது போல் அல்லாமல் இணைந்து பயணிக்கவே விரும்புவதாகவும் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் போடப்பட்ட வழக்குகளுக்குப் பின்னால் எம் ஏ சுமந்திரன் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அப்படியானால் இந்தக் குழப்பத்திற்குப் பின் யார் உள்ளனர் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க சின்னத்துரை சிறிவாஸ் மறுத்துவிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில் “எம் ஏ சுமந்திரன் அளவுக்கு கட்சிக்குள் தகுதியானவர்கள் யாரும் இல்லை. சுமந்திரனை வெளியேற்றும் நோக்கத்தில் இந்த ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்படவில்லை” எனத் தெரிவித்தார். “ஆனால் எம் ஏ சுமந்திரனை புலத்து புலிகள் நேற்று பெப்ரவரி 25இல் ஏற்பாடு செய்த எழுச்சிநாள் கூட்டத்தில் ‘தேசியத் துரோகி’ என்று அறிவித்துள்ளனரே ?” என்று கேட்ட போது, “புலத்து புலிகள் அவ்வாறு கூறவில்லை. சிலர் அக்கருத்துடன் உள்ளனர். இலங்கையில் உள்ள கட்சியின் சில உறுப்பினர்களே அதனை எழுச்சி மாநாட்டில் கூறியுள்ளனர்” என்றார்.

“தமிழரசுக் கட்சிக்குள் புலிகளை உள்வாங்குகிறீர்கள் அதே சமயம், எம் ஏ சுமந்திரன் அளவுக்கு கட்சிக்குள் தகுதியுள்ளவர் இல்லை என்கிறீர்கள்? இதுவென்ன விசித்திர அரசியல்?” எனத் தேசம்நெற் கேட்டபோது ஊடகங்கள் உண்மையான விடயங்களை அறிந்திருக்வில்லை எனத் தெரிவித்தார் சின்னத்துரை சிறிவாஸ். ஊடகங்கள் உண்மையை அறியவில்லையா அல்லது சிறிவாஸ் புலிகளின் ‘டபிள் ஏஜென்டா’ என்பது விரைவில் தெரியவரும்.

தமிழரசுக் கட்சியில் ஏற்பட்டுள்ள இன்றைய குழப்பங்களுக்கு மாவை சேனாதிராஜாவின் பதவிமோகமே காரணம் என்று பெயர் குறிப்பிடவிரும்பாத மற்றுமொரு தமிழரசுக் கட்சி ஆதரவாளர் தெரிவித்தார். அதே சமயம் எம் ஏ சுமந்திரன் மற்றவர்களை அனைத்துச் செல்வதில்லை என்றும் அவரிடம் ஆளுமையும் திறமையும் இருந்த போதும் அவரது எதேட்சதிகாரம் ஆபத்தானது என மற்றுமொருவர் தெரிவித்தார். அவர் சிறிதரனிடம் மற்றவர்களை அனைத்துச் செல்லும் பண்பு இருப்பதாகவும் அது முக்கியமானதும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இந்த தமிழரசுக் கட்சியின் ஒன்றுகூடல் அழைப்பிதழில் இருந்த மற்றையவர் கேதீஸ், வரலாற்று மையத்திலிருந்த ஒரு ‘றோ புலி’. இவர் ‘நிலா – திவாகரன்’ அணியின் ‘றோ – தமிழீழம் எடுத்துத் தரும்’ என்று நம்புகின்ற ஒரு தூண். அவர்கள் ஏற்பாடு செய்த ‘மாறிவரும் உலக ஒழுங்கில் ஈழத்தமிழர்களும் இந்தியாவும் மேற்குலகமும்’ என்ற ஜனவரி 28 நடந்த சந்திப்பின் ஏற்பாட்டாளர்களில் ஒருவர். இவர்களின் ‘றோ – தமிழீழம்’ கதையாடலில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவால் உருவாக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கட்சியும் இணைந்துள்ளது. தன்னையொரு வல்லரசாக ஆக்கிக்கொண்ட இந்தியாவுக்கே கதைசொல்லி தமிழீழம் வாங்கலாம் என்று நம்பிய ஆர்வக் கோளாறுகளுக்கு, தமிழரசுக் கட்சியைக் கைப்பற்றி விடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டதில் எந்தத் தவறும் இருக்கவில்லை. இந்த றோ – புலிகள் விக்கினேஸ்வரனுக்கு காவடி எடுத்தது அனைவருக்கும் தெரியும். அதே காலகட்டத்தில் புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்து தற்போது றோ வின் பராமரிப்பில் தமிழ்நாட்டில் உள்ள சீன எதிர்ப்பு ஆய்வாளர் மு திருநாவுக்கரசு எழுதிய வட்டுக்கோட்டை தீர்மானம் 2 என்று ஒரு காவடியையும் எடுத்தனர். அது தொடர்பான நூல் ஒன்றை தமிழ் தேசிய பற்றாளர்களான சிவஞானம் சிறிதரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரைக் கொண்டு வெளியிட்டனர். காலத்துக்கு காலம் இந்த ஆர்வக்கோளாறுகளின் குறும்புகள் தமிழ் மக்களின் அரசியலை மலினப்படுத்துவதாக அமைகின்றது.

2009 வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தமிழீழம் பெற்றுத் தருவார் என்று நம்பிய அவர்களின் ‘அரச அறிவியல்’ தெளிவை நாங்கள் குறைத்துமதிப்பிடவில்லை. ஆனால் ‘மதியுரைஞர் பாலசிங்கம்’ அவர்களை சிஐஏ ஏஜென்ட் என்றும் அவருக் ‘அரச அறிவியல்’ போதாது என்பதும் கொஞ்சம் ரூ மச். ஆனால் மோடி ஜீ யின் கோசலம் பருகி வளர்த்த ‘அரச அறிவியல்’படி ‘றோ தமிழீழம் பெற்றுத் தரும்’ என்று ஜனவரி 28இல் ஒற்றைக் காலில் நின்று சன்னதம் ஆடிவிட்டு 28 நாள் கழிந்து. தமிழீழத்தை கைவிட்டு தமிழரசுக் கட்சியின் சமஸ்டியை ஏற்றுக்கொள்ளுங்கள், கட்சியில் சேருங்கள் என்று அழைப்பு விடும் அந்தர் பல்டி அடிப்பதற்கு றோ புலிகளால் மட்டுமே முடியும்.

தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் போய், தமிழர்களின் தாகம் றோத் தமிழீழம் ஆகி இப்போது தமிழர்களின் தாகம் சமஸ்டி என்று தொடங்கின இடத்திலேயே வந்து நிற்கிறது.

தமிழரசுக் கட்சியின் 17 ஆவது தேசிய மாநாட்டை நடத்த யாழ். மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு !

எதிர்வரும் 19 ஆம் திகதி இலங்கை தமிழரசுக் கட்சியின் 17 ஆவது தேசிய மாநாட்டை நடத்த தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரகாரம், தேசிய மாநாட்டை நடத்த நீதிமன்றத்தால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுவை சேர்ந்த பீட்டர் இளஞ்செழியன் சார்பில் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் இது தொடர்பான மனுவை தாக்கல் செய்திருந்தார்.

தேசிய மாநாடு நடத்துவதாயின், 21 நாட்களுக்கு முன்னர் அறிவிக்க வேண்டும் என்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் யாப்பின் பிரகாரம், எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள மாநாடு 21 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்படாததால், குறித்த மாநாட்டுக்கு தடை கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனு மீதான அடுத்த கட்ட விசாரணைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ளன.

இதேவேளை, திருகோணமலையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை தமிழரசு கட்சியின் மாநாட்டுக்கும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று முன்னெடுக்கப்பட்டது.

விசாரணைகளை தொடர்ந்து திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி மா. கணேசராஜா இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளார்.

05 பேர் கொண்ட நிர்வாக சபையின் தெரிவுகள், யாப்பின் படி இடம்பெறவில்லை என்பதால், மாநாட்டை நடத்த இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரரால் கோரப்பட்டிருந்தது.

“இம்முறை 100க்கும் மேற்பட்ட வட்டாரங்களில் தமிழரசுக் கட்சி வெற்றி பெறும்.” – இரா.சாணக்கியன்

“இம்முறை 100க்கும் மேற்பட்ட வட்டாரங்களில் தமிழரசுக் கட்சி வெற்றி பெறும்.” என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

மழையுடன் ஆரம்பித்துள்ள பல நிகழ்வுகளை வெற்றிகரமாகவே முடித்துள்ளோம். இதற்கு சிறந்த உதாரணமாக, பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியினை குறிப்பிடலாம். தமிழரசு கட்சி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட எந்தவொரு வேட்பு மனுவும் நிராகரிக்கப்படவில்லை.

குறிப்பாக, சொல்லப்போனால், இந்த தேர்தலை பொறுத்தவரையில், அதிகளவான உள்ளூராட்சி சபைகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 76 வட்டாரங்களில் வெற்றி பெற்ற எமக்கு, இம்முறை 100க்கும் மேற்பட்ட வட்டாரங்களில் தமிழரசுக் கட்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை.

கடந்த காலங்களில் பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்ட போதும், ஆட்சியமைப்பதில் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்திருந்தோம். எனினும், எங்களுடைய தந்திரமான நடவடிக்கை காரணமாக இம்முறை எந்தவொரு ஒட்டுக்குழுவின் ஆதரவும் இல்லாமல் ஆட்சியமைக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

“யாரும் கூட்டணி அமைக்கலாம். ஆனால் மக்கள் ஆதரவு எமக்குத்தான்.” – இரா.சம்பந்தன்

“உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலத்தில் நான் எதிர்ப்பு அரசியல் செய்ய விரும்பவில்லை.” என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுடன் மேலும் சில கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி ஒன்று உருவாகியுள்ள நிலையிலும் கூட்டமைப்பு என்ற பெயரிலேயே செயற்படப்போவதாகத் தெரிவித்திருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் 5 தமிழ்க் கட்சிகளைக் கொண்டு உருவான புதிய கூட்டணி தொடர்பில் நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை.

பல கட்சிகள் உருவாகலாம், கட்சிகளைப் பயன்படுத்தி பல கூட்டணிகள் கூட்டமைப்புக்கள் அமையலாம். ஆனால், தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சி எது என்பதைத் தேர்தலில் மக்கள் தங்கள் வாக்குகளால் நிரூபித்துக் காட்டுவார்கள்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.), தமிழ்த் தேசியக் கட்சி மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய 5 தமிழ்க் கட்சிகளும் இணைந்து புதிய கூட்டணிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.

எவரும் ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்திக் கட்சிகள், கூட்டணிகள் கூட்டமைப்புக்கள் அமைப்பதை நான் எதிர்க்கவில்லை. ஆனால், தேர்தலில் பல கட்சிகள் போட்டியிட்டால் அது மக்களைத்தான் தாக்கும் மக்களைப் பலவீனப்படுத்தும்.

தமிழ் மக்கள் இந்தக் கருமத்தில் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். இலங்கைத் தமிழரசுக் கட்சி நீண்டகால வரலாற்றைக் கொண்ட கட்சி. தமிழ் மக்களின் பாரம்பரிய கட்சி, 1949 ஆம் ஆண்டு தொடக்கம் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் கட்சி.

தமிழ் மக்களுக்காக அறவழியில் போராடி பல தியாகங்களைச் செய்த கட்சி. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலையொட்டி கொழும்பில் எனது இல்லத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய தமிழரசுக் கட்சி செயற்படுகின்றது.

ஆனால், கூட்டமைப்பின் ஏனைய இரு பங்காளிக் கட்சிகளும் (ரெலோ, புளொட்) அந்தத் தீர்மானத்துக்கு எதிர்மறையாகச் செயற்படுகின்றன. இது தொடர்பில் நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை.

தமிழ் மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு செயற்படும் இலங்கைத் தமிழரசுக் கட்சியை மக்கள் ஆதரிப்பார்கள் என்பது எனது திடமான நம்பிக்கை. எனவே, உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலத்தில் நான் எதிர்ப்பு அரசியல் செய்ய விரும்பவில்லை.

இதுவரை காலமும் நடந்த விடயங்கள், நடக்கின்ற விடயங்கள் ஆகியவற்றைத் தமிழ் மக்கள் கவனமாகச் சிந்தித்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என உறுதியான முடிவை எடுக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்” எனவும் தெரிவித்துள்ளார்.