தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு !

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுமாறு எதிர்க் கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.

இதன்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கம் இடையில் நாளை ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

குறித்த கலந்தரையாடலுக்காக எதிர்க் கட்சிகளுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய அழைப்பை ஏற்று அக்கட்சியின் பிரதிநிதி ஒருவரை இதில் பங்கேற்க வைக்க தீர்மானித்துள்ளது.

அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் , அவரின் பங்கேற்பு தற்போது நிச்சயமற்ற நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் அவர் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியுடன் கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

60 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு ஆலயக் கிணற்றில் வீசப்பட்டுள்ளனர் – நாடாளுமன்றத்தில் சிறீதரன் !

மண்டைதீவு தூமையார் ஆலயக் கிணற்றில் 60 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு ஆலயக் கிணற்றில் வீசப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்டபாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அண்மையில் கொக்குதொடுவாயில் பல பெண் போராளிகளின் உடல்கள் எனக் கூறப்படும் பல மனித எச்சங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

எமது நாட்டில் எங்கு தோண்டினாலும் எலும்புக் கூடுகளே இன்று மீட்கப்படுகின்றன.

இந்த நாட்டில் எங்கு பார்த்தாலும் தமிழ்ப் போராளிகளின் உடல்கள் எடுப்பது போல இந்த மண்டைதீவு தூமையார் ஆலயக் கிணற்றையும் துப்புரவு செய்தால் சுமார் 60க்கும் மேற்பட்ட இளைஞர்களின் உடல்களை தோண்டி எடுக்க முடியும்.

இதன் காரணமாகவே இலங்கை இராணுவத்தினர் அந்த இடத்தில் உள்ள மக்களின் காணிகளைப் பறித்து வைத்திருக்கின்றனர்.

சில காணிகளை விடுவிக்காமலும் இருக்கின்றனர். மண்டைதீவில் சதாசிவம் செந்தில் மணி, வைரவநாதன் மகேஸ்வரி உள்ளிட்ட பலரின் காணிகளை இராணுவத்தினர் பலவந்தமாக பிடித்து வைத்திருக்கின்றனர்.

இதனால் குறித்த காணிகளுக்குச் சொந்தக்காரர்கள் இலங்கையின் பல பிரதேசங்களில் அகதிகளாக வாழ்கிறார்கள்.

நல்லிணக்கம் குறித்து அதிகம் பேசும் அரசாங்கம், சமாதானம் பேசும் அரசாங்கம் தொடர்ந்தும் அப்பாவி மக்களது காணிகளை அபகரிக்க நினைப்பது மிக மோசமான செயற்பாடுகளாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“தமிழர்களை தமிழர்களே ஆள வேண்டும்.”- தேர்தல் பிரச்சாரத்தில் எம்.ஏ. சுமந்திரன் !

அதிகாரப்பகிர்வு என்ற பேர்வையில் மாயாஜால வித்தை காட்டி தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை வெருகல் பிரதேச சபையில் தமிழரசுக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே எம்.ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழ் மக்கள் கோரும் சமஷ்டி தீர்வு என்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தெற்கில் எவ்வாறான மாற்றம் ஏற்பட்டாலும் தம்மைத் தாமே ஆள அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்ற வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் நிலைப்பாட்டில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களது இந்த நிலைப்பாடு எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் வெளிப்படுத்தப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தை தமிழ்க் கட்சிகள் தவறவிடக்கூடாது.” – மஹிந்த ராஜபக்ஷ அறிவுரை !

தேசிய பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க இந்த சந்தர்ப்பத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறவிடக்கூடாது என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் இந்த சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்பதோடு, வேற்றுமைகளை மறந்து ஜனாதிபதியுடன் உரையாற்ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அன்றும் சரி, இன்றும் சரி தேசிய பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் தாம் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 10 எம்.பிக்களுக்கு இரட்டைக் குடியுரிமை – பறிபோகுமா பதவி…?

இரட்டைக் குடியுரிமை தொடர்பான விவகாரம் இலங்கை நாடாளுமன்றத்தில் பலத்த விவாதங்களை தோற்றுவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாயராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருடைய இரட்டை பிராஜாவுரிமை தொடர்பான விவகாரங்கள் பெம் பரபரப்பை ஏற்படுத்தியருந்தன. இந்த பின்னணியில் அண்மையில் புதிதாக நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தின் கீழ் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக செயல்பட முடியாது என வலியுறுத்துகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் இரட்டைக் குடியுரிமை உள்ளவரா இல்லையா என்பது குறித்து உடனடியாக முடிவெடுக்க முடியாது என இது தொடர்பில் குறிப்பிட்டுள்ள தேர்தல் ஆணைக்குழு , அத்தகையவர்களை உடனடியாக இராஜினாமா செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளது.

 

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் 10க்கும் மேற்பட்ட இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் இருக்கலாம், ஆனால் அவர்கள் யார் என்பதை அறியும் முறைமை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் யார் என்று கூறக்கூடிய பட்டியல் எவரிடமும் இல்லை, அவர்கள் தாமாக முன்வந்து தாமே இரட்டை குடியுரிமை பிரஜைகள் என்று அறிவிக்கும் வரையில் அவர்கள் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களா என்பதை அறிய அரசாங்கத்திடமோ அல்லது ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடமோ எந்த முறையும் இல்லை.

2015ஆம் ஆண்டு இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதற்குத் தடை விதிக்கப்பட்ட போது, ​​நோர்வே மற்றும் கனடாவில் இரட்டைக் குடியுரிமை பெற்ற 10 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களும், சுவிஸ் குடியுரிமை பெற்ற சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரும் இருந்ததாக இலங்கையின் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் என்னிடம் கூறினார்.

இணையத்தளங்கள் மற்றும் அந்த நாடுகளில் இருந்து அவர்களைப் பற்றிய தகவல்களைக் கண்டறிய முயற்சித்தாலும், எந்தவொரு நாடும் தனது பிரஜைகள் பற்றிய தகவல்களை மூன்றாம் தரப்பினருக்கு வெளியிடுவதில்லை அல்லது வழங்குவதில்லை என்றும் கம்மன்பில கூறினார்.

“முடிந்தால் ஒரு விமானத்தையேனும் இந்தியாவில் இருந்து பலாலிக்கு கொண்டுவந்து காட்டுங்கள்.“ – கூட்டமைப்பினருக்கு அமைச்சர் நிமல் சிறிபால சவால் !

பலாலி விமான நிலையத்திற்கு முடிந்தால் ஒரு விமானத்தையாவது கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று (22) வியாழக்கிழமை சிவில் விமான சேவைகள் மீதான ஒழுங்குவிதிகள் மற்றும் இலங்கை தொலைக்காட்சி சேவைகள் மீதான ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்

பலாலி விமான நிலையத்திற்கு  பெருமளவான நிதி செலவழிக்கப்பட்டுள்ளது. அந்த விமான நிலையத்திற்கு விமானங்களை கொண்டு வருவதற்காக அதனை திறந்து வைத்தோம். பலாலி விமான நிலையத்தின் சேவைகளுக்காக யாழ்ப்பாணத்தில் வசிக்கும் இளைஞர்களையே நியமித்தோம்.

விரைவில் அதனை  திறக்குமாறும் விமான நிலையத்திற்கு விமானங்களை கொண்டு வருவதாகவும் பல்வேறு நிறுவனங்கள் உறுதியளித்தன. ஆனால் கடந்த காலங்களில் எவரும் விமானத்தை கொண்டு வரவில்லை.விமானங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்க முடியுமென்றால் முதலில் விமானங்களை கொண்டு வாருங்கள். அதற்கு பின்னர் தேவையான வேலைகளை நாங்கள் செய்கின்றோம் என்றார்.

இதன்போது  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சிறிதரன் குறுக்கிட்டு இந்தியாவின் இந்திய எயார்வேஸ் நிறுவனம் மற்றும் இண்டிக்கா என்பன விமானத்தை கொண்டு வர தயாராகவே இருக்கின்றன. இதனால் யாரும் விமானத்தை கொண்டு வரவில்லை என்று கூற வேண்டாம்.  என்றார்.

மீண்டும் உரையாற்றிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறுகையில்,

விமானம் வரும் என்று நாங்கள் பார்த்துக்கொண்டே இருந்தோம். பல்வேறு செய்திகளையும் அனுப்பினோம். ஆனால் வரவில்லை. பிரச்சினைகள் இருந்தால் பேசி தீர்த்துக்கொள்ளலாம். உண்மையிலேயே விமானங்களை கொண்டு வர முடியுமென்று உறுதிப்படுத்தினால் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம். அங்கு பெருமளவில் செலவழிக்கப்பட்டுள்ளது.

வேண்டுமென்றால் இந்தியாவுடன் மற்றும் இந்திய விமான சேவையுடன் கதைத்து விமானங்களை அனுப்புமாறு கூறுங்கள். பிரச்சினைகள் இருந்தால் எங்களுடன் கதைக்குமாறு கூறுங்கள். முடிந்தால் ஒரு விமானத்தையேனும் கொண்டுவந்து காட்டுங்கள். நாங்கள் எங்கள் பக்கத்தில் செய்ய வேண்டியவற்றை செய்துள்ளோம். ஆனால் அந்தப் பக்கத்தில் எதுவும் செய்யப்படவில்லை என்றார்.

“நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றினைந்து ஜனாதிபதி, பிரதமர் வீடுகளின் முன்பாக போராட வாருங்கள்.” – நாடாளுமன்றில் சாணக்கியன் !

ராஜபக்சக்கள் தவறாக எனது தலைமுறையுடன் வம்பிழுத்து உள்ளார்கள் என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில்  நேற்று (06) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள வெறுப்பினை நாடாளுமன்றத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு ஆளும் தரப்பின் பிரதம கொறோடா உட்பட ஆளும் தரப்பினர்கள் செயற்படுகிறார்கள். கோ ஹோம் கோடா என்பதை 225 உறுப்பினர்களும் செல்ல வேண்டும் என மாற்றிவிடுவது இலகுவானது.

நாடாளுமன்றம் ஒழுங்கு முறைக்கமைய செயற்படுவதில்லை. 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் விரட்டியடிக்க வேண்டும் என்பதை நாட்டு மக்களுக்கு காண்பிக்கும் வகையில் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. தவறான தலைமுறையினரிடம் மோதியுள்ளீர்கள் என குறிப்பிட்டு இளம் தலைமுறையினர் போராட்டத்தில் ஈடுப்பிடுகிறார்கள்.

நாடாளுமன்றம் தொடர்பில் மக்கள் மத்தியில் காணப்படும் அதிருப்தி எமக்கும் உண்டு. பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களை எடுத்துக்கொண்டால் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடுபவர்கள், மோசடியாளர்கள், கொலைகாரர்கள், கடத்தல்காரர்களுக்கு வேட்பு மனு வழங்கப்பட்டு அவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைத்துள்ளார்கள்.

225 உறுப்பினர்களில் பெரும்பாலானோர் திருடர்களாகவும், மோசடியாளர்களாகவும் இருக்கும் போது நாட்டு மக்கள் 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் விமர்சிப்பது சாதாரணமானது. ஜனாதிபதி கோட்டாபா ராஜபக்ஷவையும், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வீட்டுக்கு அனுப்பி நாட்டு மக்கள் எதனை எதிர்பார்க்கிறார்கள். நாடாளுமன்ற முறைமை பலப்படுத்தப்பட வேண்டும்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் ஊடாக நாடாளுமன்ற அதிகாரத்தை முழுமையாக இல்லாதொழித்து விட்டு இன்று 42 பேர் சுயாதீனமாக செயற்படுகிறார்களாம். நாடாளுமன்ற அதிகாரத்தை முழுமையாக ஜனாதிபதிக்கு வழங்கி விட்டு இன்று சிறுபிள்ளை போல் இங்கு வந்து அழுகிறார்கள். பிரச்சினையை தீவிரப்படுத்தி கொண்டு செல்ல அரசாங்கம் முயற்சிக்கிறது.

நாடாளுமன்ற அமர்வு ஆரம்பிக்கும் போது தற்போதைய பிரச்சினைக்கு நாடாளுமன்ற மட்டத்தில் ஏதாவது தீர்வு கிடைக்கப்பெறும் என மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒழுங்கு முறைக்கு அப்பாற்பட்ட வகையில் முன்னெடுக்கப்படுகிறது. நாடாளுமன்றமும் வேண்டாம் என மக்கள் கருதும் நிலைப்பாட்டை தோற்றுவிக்கவே ஆளும் தரப்பு முயற்சிக்கிறது.

நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் ஆளும் தரப்பினருக்கு சார்பானவர்கள். மக்கள் ஜனாதிபதிக்கு எதிராக மாத்திரம் போராடவில்லை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும் போராடுகிறார்கள் என்பதை காண்பிக்கவே ஆளும் தரப்பினர் முயற்சிக்கிறார்கள். சித்திரை புத்தாண்டு விடுமுறை காலத்தில் மக்கள் சோர்வடைந்து போராட்டங்களை மறந்து வழமையான சூழ்நிலைக்கு திரும்புவார்கள் என அரசாங்கம் கருதுகிறது.

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் எரிபொருள் கிடைப்பதால் நெருக்கடி சற்று தணியும் ஆனால் அது நிரந்தர தீர்வாக அமையாது. மேல்மாகாண மக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். கிராமத்தில் உள்ளவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு சோர்வடைந்து விட்டார்கள். இல்லாவிடின் பேரூந்துகளில் வந்து கொழும்பை முற்றுகையிடுவார்கள். களுத்துறை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட மக்கள் போராட்டத்தை கைவிட கூடாது.

மக்கள் தன்னிச்சையாக போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள், எதிர்தரப்பினர் போராட்டத்தில் ஒன்றினைந்தால் ஆளும் தரப்பினர் எவரும் வீடு செல்ல முடியாது. வீதியில் நின்று போராட்டத்தில் ஈடுப்படும் தாய் அடிப்படைவாதியா, மேல்மாகாண மக்கள் போராட்டத்தை கைவிட கூடாது. போராடத்திற்கு தீர்வு காணாமல் அதனை முன்னெடுத்து செல்லவும் அல்லது நாட்டில் பிரச்சினையை தீவிரப்படுத்தி இராணுவ ஆட்சியை முன்னெடுப்பது ஜனாதிபதியின் நோக்கமாக உள்ளது.

நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றினைந்து ஜனாதிபதி, பிரதமர் வீடுகளில் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட வேண்டும். எத்தனை இலட்ச மக்களை விரட்டியடிக்க முடியும். அமைச்சு பதவிகளை துறந்து விட்டதாக குறிப்பிடுகிறார்கள் ஆனால் தொடர்ந்து அரச வாகனங்களை பயன்படுத்திக்கொண்டுள்ளார்கள்.

பிள்ளையான் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் வாகனத்தில் வருகை தந்துள்ளார். பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் வரை நாட்டு மக்கள் போராட்டத்தை தொடர வேண்டும். இதுவே சிறந்த வாய்ப்பு எனக் குறிப்பிட்டுள்ளார்.

“கூட்டமைப்பு உறுப்பினர் மீதான தாக்குதல் அரச அராஜகத்தையும் பொலீசாரின் வக்கிரத்தையும் காட்டுகிறது.” – சுகாஷ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிக்கோ மற்றும் அவரது சகோதரிகளை அரச ஆதரவுக் கட்சியினரும் பொலீசாரும் இணைந்து தாக்குதல் நடத்தியமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

இது அரச அராஜகத்தையும் பொலீசாரின் வக்கிரத்தையும் அரச ஆதரவுக்கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் கொடூர முகத்தையும் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி நிற்கின்றது. இத் தாக்குதலை ஜனநாயகத்தையும் சட்ட திட்டங்களையும் மதிக்கின்ற அரசியல் இயக்கமாகிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் ஏற்கமாட்டாது.

தனியாள் பிரச்சனைகள் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகத் தீர்க்கப்பட வேண்டுமே தவிர காடைத்தனமாகவல்ல என்பதைச் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகின்றோம்.

சட்டத்தைக் கையிலெடுத்தவர்களுக்கு எதிராகச் சட்டம் தன் கடமையைச் செய்யவேண்டும் என்று கோருகின்றோம். அரச அராஜகத்தை நாங்கள் ஒருபோதும் மௌனமாகக் கடந்துசெல்லத் தயாரில்லை-என்றார்

“ஜனாதிபதியை சந்திக்க அனுமதி வழங்கப்படாததை தொடர்ந்தே போராட்டத்தில் ஈடுப்பட்டோம்.” – இரா.சாணக்கியன்

“ஜனாதிபதியை சந்திக்க நேற்று முன்தினம் ஜனாதிபதி செயலகம் சென்றிருந்த போது அதற்கு அனுமதி வழங்கப்படாததை தொடர்ந்தே போராட்டத்தில் ஈடுப்பட்டோம். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (24) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“கடந்த இரண்டு வார காலப்பகுதியில் திருகோணமலை மாவட்டத்தில் பன்குளம் மொறவௌ பிரதேச செயலக பிரிவில் யானையொன்று உயிரிழந்துள்ளது. இது துரதிஷ்டவசமானது. இவ்விடயம் குறித்து வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க அவரிடம் தொலைப்பேசியில் உரையாடினேன். இச்சம்பவம் குறித்து ஆராய்வதாக அவர் குறிப்பிட்டார்.

ஒரே இடத்தில் 14 நாட்கள் இருந்த நிலையில் அந்த யானை உயிரிழந்துள்ளது. யானையின் தந்தம் வெட்டப்பட்டுள்ளதாகவும், யானைக்கு உரிய மருத்து சிகிச்சையளிக்கப்படவில்லை எனவும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. காலநேரம் போதாத காரணத்தினால் இவ்விடயம் குறித்து அதிகம் பேசமுடியவில்லை. இவ்விடயத்தை நான் சபையில் சமர்ப்பிக்கிறேன். இதனை அமைச்சர் பெற்றுக்கொள்ள வேண்டும். தாளம் என்ற சூழல் அமைப்பு இச்சம்பவம் குறித்து பல விடயங்களை சான்றுப்படுத்தியுள்ளது.

அதற்கு மேலதிகமாக யானை – மனித மோதலுக்கு யானை வேலி அமைக்கும் கொள்கையுடன் அரசாங்கம் வந்தது. ஒரு இலட்சம் கிலோமீற்றர் யானை வேலி அமைப்பதாக குறிப்பிட்டுக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இதுவரையில் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை வேலி அமைப்பதற்கு 24 மில்லியன் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது. யானை வேலி அமைக்காமல் யானை – மனித மோதலுக்கு தீர்வு காணவும் முடியாது. வனஜீவராசிகளை பாதுகாக்கவும் முடியாது.

அதேபோல் தற்போது மின் விநியோகம் தடைப்படும் போதும் மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் யானை வேலிகளில் பொருத்தப்பட்டுள்ள மின்கம்பிகளுக்குமான மின் விநியோகம் துண்டிக்கப்படுகிறதாக குறிப்பிடப்படுகிறது. விசேடமாக புல்லுமலை பிரதேசத்தில் பதுளை பகுதியில் யானை மின்வேலிகளுக்காக மின் விநியோகம் துண்டிக்கப்படுகிறது. மின் விநியோகம் துண்டிக்கப்பட வேண்டுமாயின் பகல் பொழுதில் துண்டித்து இரவு வேளைகளில் துண்டிக்காமலிருக்குமாறு கோரிக்கை விடுக்கிறோம்.

வெள்ளை வேன் விவகாரம் தொடர்பில் கடந்த வாரம் நான் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்ட விடயம் குறித்து பொலிஸ் ஊடக பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. உண்மையில் கவலைக்குரியது, பொலிஸ் ஊடகப்பிரிவு சுயாதீனமாக செயற்பட வேண்டும். சிவில் செயற்பாட்டாளர் செஹான் நாலக கடத்த முற்பட்ட போதும் வெள்ளை வேன் போன்ற வேனும் அம்பாறை மாவட்டத்தில் இளைஞர் ஒருவரை கடத்த முற்பட்ட போதும் வெள்ளை வேன் போன்ற வேனும் பயன்படுத்தப்பட்டுள்ளதையே குறிப்பிட்டோம்.

இவ்விடயம் குறித்து பொலிஸ் முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். அதனை விடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் சமூக வலைத்தளங்களின் பதிவேற்றங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊடக அறிக்கை விடுவது எந்தளவிற்கு சுயாதீனமானது. ஜனாதிபதியை சந்திக்க நேற்று முன்தினம் ஜனாதிபதி செயலகம் சென்றிருந்த போது அதற்கு அனுமதி வழங்கப்படாததை தொடர்ந்தே போராட்டத்தில் ஈடுப்பட்டோம்.

நாடாளுமன்ற உறுப்பினர்களை புகைப்படம் எடுக்கும் அரச புலனாய்வு பிரிவினர் மட்டக்களப்பு பிரதேசத்தில் எந்தவகையில் செயற்படுவார்கள் என்பது தெளிவாகின்றது. ஜனாதிபதியை எந்நேரமும் சந்திக்க முடியும் என தற்போது குறிப்பிடுகிறார்கள். நாங்கள் முறையாக அனுமதி பெறவில்லையாம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஜனாதிபதியை சந்திக்க பலமுறை கடிதம் அனுப்பியுள்ளார். அதற்கு இதுவரை ஜனாதிபதி பதிலளிக்கவில்லை.

ஜனாதிபதி, ஜனாதிபதி செயலகத்தில் உள்ளதை அறிந்து கொண்டதன் பின்னரே அவரை சந்திக்க ஜனாதிபதி செயலகம் சென்றோம். நாம் வருவதை அறிந்துக்கொண்டதன் பின்னர் அவர் புகையிரத பெட்டிகளை காணசென்று விட்டார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை எம்மால் எந்நேரமும் நாடாளுமன்றில் சந்திக்க முடியும். தமிழ் மக்களை பிரிநிதித்துவப்படுத்தும் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கும் நோக்கம் ஜனாதிபதிக்கு கிடையாது. அவர் தமிழர்களின் ஜனாதிபதி அல்ல என்ற நோக்கில் உள்ளாரா என்று என்ன தோன்றுகிறது.

எமது செயற்பாடு வெட்கமடைய கூடியதாம் நாட்டில் மின்துண்டிப்பு தீவிரமடைந்துள்ளது. உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் இருளில் கல்வி கற்கிறார்கள் இதற்கே வெட்கப்பட வேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

“ஹபாயா’ சர்ச்சை இனப்பிரச்சினைக்கு வழிவகுக்கக்கூடாது.” – இரா.சம்பந்தன் வலியுறுத்தல் !

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் மீண்டும் எழுந்துள்ள ‘ஹபாயா’ சர்ச்சையால் அதிருப்தியடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், இது இனப்பிரச்சினைக்கு வழிவகுக்கக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் மீண்டும் எழுந்துள்ள ‘ஹபாயா’ சர்ச்சை தொடர்பில் ஊடகங்களிடம் பேசிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.  மேலும் பேசியுள்ள அவர்,

தமிழ்பேசும் மக்கள் என்ற ரீதியில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அத்தியாவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, ஒவ்வொரு இனத்தினுடைய உரிமைகளையும் மற்றைய இனம் மதிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

‘ஹபாயா’ அணிந்து வந்திருந்த குறித்த முஸ்லிம் பெண் ஆசிரியர் உண்மையில் அதிபர் மீது தாக்குதல் நடத்தியிருந்தால் அது தவறான விடயம் எனவும், இந்தக் கருமத்தை நாம் சமாதானமாகத் தீர்க்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“ஒருவரையொருவர் மதித்து மற்றவர்களுடைய கருமத்துக்கு – சுயமரியாதைக்கு – இறைமைகளுக்குப் பாதகம் இல்லாமல் நாம் செயற்பட வேண்டும். அனைவரும் இந்தக் கடமையை ஒற்றுமையாகச் செய்ய வேண்டும் என நான் மிகத் தயவாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

பிரச்சினையை நாம் வளர்க்கக்கூடாது. தமிழ்பேசும் மக்கள் என்ற வகையில் வடக்கு – கிழக்கு என்பது எமது சரித்திர ரீதியான வதிவிடம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்த அடிப்படையில் இறைமையை நாம் பாதுகாப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும்” – என்றார்.