தீபச்செல்வன்

தீபச்செல்வன்

இலங்கையில் படைப்பாளிகளுக்கு அரசாங்கம் அச்சுறுத்தல் – சர்வதேச மன்னிப்புச் சபையிடம் தீபச்செல்வன் முறைப்பாடு!

இலங்கையில் தன்னைப் போன்ற படைப்பாளிகளுக்க அரசாங்கம் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ள இலங்கை தமிழ் எழுத்தாளர் தீபச்செல்வன் அறிவு வெளிப்பாடு மீதான ஒடுக்குமுறையை தடுக்குமாறு யுனஸ்கோ மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (UNESCO) பணிப்பாளர் நாயகம் ஓட்ரி அஸூலே மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஆக்னஸ் காலமர்ட் ஆகியோருக்கு இலங்கை எழுத்தாளர் தீபச்செல்வன் கடிதங்களை எழுதியுள்ளார்.

 

இக் கடிதங்களின் பிரதிகளை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் மற்றும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் ஆகியோரிடம் கையளித்தார்.

 

குறித்த கடிதத்தில் அவா் மேலும் தொிவித்துள்ளதாவது,

 

“நான் இலங்கையை சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளன். கிளிநொச்சியை பிறப்பிடமாகக் கொண்ட நான், போர்ச் சூழலில் பிறந்து வளர்ந்து பல்கலைக்கழகக் கல்வியை முடித்து தற்போது ஒரு பாடசாலை ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.

 

போர் நடைபெற்ற காலத்தில் அதன் விளைவாக நான் ஒரு எழுத்தாளனாக வெளிப்பட்டேன். போரின் துயரங்களையும் போரில் என்னைச் சார்ந்த சமூகம் எதிர்கொள்ளும் உரிமை மறுப்புக்களையும் எழுத உந்தப்பட்டேன். புகழ், வருமானம் போன்ற நோக்கங்கள் இல்லாமல் மனித உயிர்கள் அழிக்கப்பட்டும் எனது தேசத்தில் இல்லாமல் ஆக்கப்படுபவர்களின் மனசாட்சியாய் இறுதிக்குரலாய் என் எழுத்துகள் வெளிப்பட்டன.

 

“பதுங்கு குழியில் பிறந்த குழந்தை“ என்பது 2008ஆம் ஆண்டில் வெளியான என் முதல் கவிதை நூல். உரிமைக்கான போராட்டத்தில் தன் பிள்ளையை இழந்த தாய் அவன் நினைவுகளுக்காக முன்னெடுக்கும் வாழ்வையும் போராட்டத்தையும் பேசுவது நடுகல் என்ற என் முதல் நாவல். போரில் தாய் தந்தையை இழந்து தப்பும் ஒரு குழந்தை எந்தச் சூழலிலும் கல்வியைக் கைவிடாது பல்கலைக்கழகம் சென்று அங்கு மாணவத் தலைவராகிய நிலையில் அரச படைகளால் அவன் கொல்லப்படும் கதையைப் பேசுவது பயங்கரவாதி என்ற என் இரண்டாவது நாவல்.

 

பயங்கரவாதி என்ற எனது இரண்டாவது நாவல், விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள் உருவாக்கம் செய்கிறதா என்ற கோணத்தில் இலங்கை அரசின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு என்னிடம் கடந்த ஜூன் மாதம் விசாரணையை மேற்கொண்டது. சுமார் இரண்டு மணி நேரம் இந்த விசாரணை நடந்தது. இதற்கு முன்பு நான் தலைமை தாங்கி நடாத்திய ஒரு புத்தக வெளியீட்டிற்காகவும் மூன்று மணிநேரம் விசாரணையை பயங்கரவாத தடுப்ப்ப் பிரிவு மேற்கொண்டது.

என் நாவலில் வரும் கதாபாத்திரங்கள் உண்மையானவையா? பிரதான கதாபாத்திரமாக வரும் மாறன் என்பவர் யார்? அவர் எங்குள்ளார் என விசாரணை நடாத்தப்பட்டது. இலங்கையில் கடந்த காலத்தில் பல எழுத்தாளர்கள்இ ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கருத்துச் சுதந்திரத்தின் மீது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டது. இந்த நிலையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணை என்னையும் என் குடும்பத்தினரையும் மாத்திரமின்றி என்னைப் போன்ற படைப்பாளிகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

 

இலங்கையில் நடந்த மேலாதிக்கத்திற்கான போர் மற்றும் உரிமைக்கான போராட்டத்தில் சந்தித்த இழப்புக்கள், தியாகங்கள், அனுபவங்கள் குறித்து இலக்கியங்கள் எழுதுவது இந்த தீவின் எதிர்கால அமைதிக்கும் சுபீட்சத்திற்கும் அவசியமானது. உலகின் எந்தவொரு தேசத்திலும் எழும் படைப்புக்களும் இலக்கியங்களும் உலக மக்கள் அனைவருக்குமான அறிவு மற்றும் படைப்பாக்கச் சொத்தாகும். அந்த வகையில் வரலாற்றினதும் கடந்த கால கசப்பக்களினதும் விளைவாக எழும் இலக்கியங்களை தடுக்க முற்படுவது அறிவுவெளிப்பாடு மீதான ஒடுக்குமுறையுமாகும்.

 

பொருளாதார நெருக்கடி போன்ற சூழலிலும் தமிழ் சிறுபான்மை எழுத்தாளர்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 15 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் இத்தகைய செயற்பாடுகளை தடுக்க தாங்கள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

 

இலங்கைத் தீவின் கலாசார பண்பாட்டு மற்றும் படைப்புக்கள்மீது மிகுந்த மதிப்பும் கரிசனையும் கொண்டுள்ள தங்களின் கவனம் இலங்கைத் தீவில் எழுத்தாளர்களின் சுதந்திரத்தை பாதுகாப்பதுடன் தமிழ் பேசும் மக்களின் இருப்பையும் சுதந்திரத்தையும் காத்து நிற்கும் என்றும் எதிர்பார்த்து வேண்டி நிற்கின்றேன்” என்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘பயங்கரவாதி’ நாவல், விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்யும் நோக்கில் எழுதப்பட்டதா…?

“பயங்கரவாதி” எனும் நாவலை வெளியிட்டிருந்த எழுத்தாளரான தீபச்செல்வன் அதன் நீட்சியாக இலங்கை புலனாய்வுத்துறையினரின் கெடுபிடிகளுக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான அவருடைய சமூக வலைத்தள பதிவு வருமாறு..,

‘பயங்கரவாதி’ நாவல், வி டு த லைப் பு லி களை மீளுருவாக்கம் செய்யும் நோக்கில் எழுதப்பட்டதா எனக் கேட்டு பயங்கரவாத தடுப்புப் பிரிவு இன்று என்னிடம் விசாரணையை முன்னெடுத்திருந்தது.

கிளிநொச்சி பரந்தனில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவில் இன்று இரண்டு மணி நேர விசாரணை இடம்பெற்றது. பயங்கரவாதி நாவல் தொடர்பில் பல கேள்விகளை இதன்போது பயங்கரவாத தடுப்புப் பிரிவு எழுப்பியுள்ளது.
நாவலில் இடம்பெறும் மாறன் என்ற கதாபாத்திரம் யார்? இப்போது எங்கே உள்ளார்? என்றும் நாவலில் இடம்பெறும் இராணுவக் கதாபாத்திரங்கள் யாரைக் குறித்துள்ளன என்றும் கேட்டார்கள். அனைத்து கதாபாத்திரங்களும் கற்பனையானவை என்று நான் பதில் அளித்திருந்தேன்.

இதேவேளை இந்த நாவலில் விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்யும் கருத்துக்கள் உள்ளனவா என்றும் விசாரணை செய்யப்பட்டது. அப்படியான கருத்துகள் நாவலில் இல்லை என்றும் கடந்த காலத்தில் நடந்த விடயங்களையே நாவல் பேசுவதாகவும் பதில் அளித்தேன்.
போரில் தாய். தந்தையரை இழந்த ஒரு குழந்தை அதிலிருந்து தப்பி கல்வி கற்று பல்கலைக்கழகம் செல்வதையும் அங்கு மாணவத் தலைவராகும் அந்த இளைஞன் பின்னர் போரால் கொல்லப்படுவதையும் எனது நாவல் பேசுவதாக விளக்கமளித்தேன்.
யாழ் பல்கலைக்கழகத்தில் சில மாணவத் தலைவர்களும் மாணவர்களும் கொல்லப்பட்ட நிலையில் அந்தப் பின்னணியை வைத்து மாறன் என்ற கதாபாத்திரம் உருவாக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டேன்.

பிழையான இராணுவத்தினர் மத்தியில் உள்ள நல்ல இராணுவ அதிகாரிகளையும் வி டு தலைப் பு லி களால் காப்பாற்றப்பட்ட இராணுவ சிப்பாய்களையும் பற்றி பயங்கரவாதி நாவல் பேசுகிறது என்றும் இதனை சிங்கள மக்கள் வாசித்தால் தமிழர்களை புரிந்து கொள்ள வழி வகுக்குமே தவிர, இன வேறுபாட்டை ஒருபோதும் ஏற்படுத்தாது என்றும் எடுத்துரைத்தேன்.

எந்த சூழ்நிலையிலும் கல்வியை கைவிடாத மாறன் என்ற கதாபாத்திரம் வழியாக இந்த நாவல் கல்வியை பேசகிறது என்றும் இனிவரும் காலத்தில் போரும் மரணங்களும் அழிவுகளும் இடம்பெறக் கூடாது என்பதை வலியுறுத்தவே இந்த நாவலை நான் எழுதியுள்ளேன் என்றும் தெளிவுபடுத்தினேன்.
இதுவும் ஒரு வகையில் போராட்டம் என்றே உணர்கிறேன். அன்பும் ஆதரவும் தரும் உறவுகள் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.” என குறித்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.