பயங்கரவாத தடைச் சட்டம்

பயங்கரவாத தடைச் சட்டம்

சிவாஜிலிங்கத்துக்கு எதிரான பயங்கரவாத தடைச்சட்ட வழக்கை நிராகரித்தது கொழும்பு மேல் நீதிமன்றம் !

 

சிவாஜிலிங்கத்துக்கு எதிரான பயங்கரவாத தடைச்சட்ட வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதோடு அவ்வழக்கினை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு மன்றுக்கு நியாயாதிக்கம் கிடையாதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

2020 வருடம் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் அங்கத்தவரான திலீபன் எனப்படும் ராசையா பார்த்தீபன் என்பவரின் 33ஆம் நினைவு தினத்தை நினைவுகூருமுகமாக கோண்டாவிலைச் சேர்ந்த கோகுல வீதியில் சிவாஜிலிங்கம் நினைவு தீபத்தை ஏற்றி நினைவுகூர்ந்தார்.

 

அதனூடாக அவர், இனங்களுக்கிடையே முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சித்ததாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் 27ஆம் பிரிவின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட 29.08.2011ஆம் திகதி 1721/2 என்ற வர்த்தமானியின் கீழ் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் 3(ஊ) பிரிவின் கீழ் குற்றம் ஒன்றை புரிந்ததன் விளைவாக, அவ்வொழுங்கு விதிகளின் நான்காம் பிரிவின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றமொன்றை செய்ததாக ம.க.சிவாஜிலிங்கத்தின் மீது மேல் மாகாணத்தின் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

கடந்த பெப்ரவரி 5ஆம் திகதி இவ்வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் குற்றப்பத்திரிகை சட்ட விரோதமானது எனவும் இவ்வழக்கினை விசாரிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு நியாயாதிக்கம் இல்லை எனவும் பூர்வாங்க ஆட்சேபனை குற்றம் சாட்டப்பட்டவரின் சார்பில் நீதிமன்றத்தின் முன்னிலையாகிய சட்டத்தரணிகளால் வாதம் முன்னெடுக்கப்பட்டது.

 

இலங்கை அரசியல் யாப்பின் 154 P (3) பிரிவின் பிரகாரம், குற்றங்கள் நடந்ததாக கூறப்படும் பிரதேச எல்லைக்குள் நியாயாதிக்கம் கொண்ட மாகாண நீதிமன்றம் மட்டுமே மேற்குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்ற ஏற்பாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன.

 

எனவே, குற்றம் புரியப்பட்டதாக கூறப்படும் நியாயாதிக்க எல்லைக்குள் அமைந்திருக்காத கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இவ்வழக்கினை தாக்கல் செய்வதற்கும் விசாரணை செய்வதற்கும் சட்ட ஏற்பாடுகள் அமைவாக இல்லை என்றும் சட்டத்தரணியினால் சமர்ப்பணம் மேற்கொள்ளப்பட்டது.

 

அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான வழக்குகள் நியாயாதிக்கம் எவ்வாறு இருப்பினும் மேல் மாகாண மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யமுடியும் என்ற வகையில் அமைந்துள்ள 27ஆம் பிரிவின் கீழ் பாதுகாப்பு அமைச்சரினால் பிரகடனப்படுத்தப்பட்ட ஒழுங்குவிதிகள் செல்லுபடியற்றன என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது. ஏனென்றால், வியாக்கியானங்கள் சட்டத்தின் 17(1) (சி)இன் பிரகாரம், எச்சட்டத்தின் கீழும் மேற்கொள்ளப்படும் ஒழுங்குவிதிகள் மூலச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரண்பாடாக அமையக்கூடாது என்று விதந்துரைக்கப்பட்டிருக்கிறது.

 

எனினும், இவ்வழக்கில் குறிப்பிடப்பட்ட ஒழுங்கு விதிகள் மூலச்சட்டமான பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரண்பாடாக மேல் மாகாண மேல் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்யும் அதிகாரத்தினை சட்டவிரோதமாக சட்டமா அதிபருக்கு கொடுத்திருக்கிறது.

 

எனவே குறித்த ஒழுங்குவிதிகள் சட்டவலு அற்றவை என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.

 

அத்துடன் இவ்வுலகை நீற்றுச்சென்ற சக மனிதர்களின் அல்லது உறவினர்களின் நினைவு தினத்தை அனுஷ்டிப்பதை எந்த சட்டமும் தடைசெய்யலாகாது என்றும் இது தனிமனித சுதந்திரத்தையும் கலாசார மரபுகளையும் சமய மற்றும் பண்பாட்டு மரபுகளையும் சிதைக்கும் ஒரு செயல்.

 

மேலும் 33 வருடங்களுக்கு முன் மரணித்த அகிம்சை வழிப் போராளிகளை நினைவுகூரும் ஒரு செயல் எவ்வாறு பயங்கரவாத செயலாக அமையும்? அது எவ்வாறு இனங்களுக்கிடையே முரண்பாட்டினை தோற்றுவிக்கக்கூடும் என்கிற வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

 

இந்நிலையில் குறித்த வழக்கு நீதிமன்றத்தின் கட்டளைக்காக நேற்றைய தினம் நியமிக்கப்பட்டிருந்தது.

 

இத்தீர்ப்பின் பகுதிகளை வாசித்த மேல் நீதிமன்ற நீதிபதி இலங்கை அரசியல் யாப்பின் சட்ட ஏற்பாடுகளுக்கும் மற்றும் குற்றவியல் சட்டங்களுக்கும் அத்துடன் மாகாணங்களின் மேல் நீதிமன்ற விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழும் குறித்த நியாயாதிக்கம் குற்றங்கள் இழைக்கப்பட்டதாக கூறப்படும் மாகாணத்தின் மேல் நீதிமன்றத்துக்குத்தான் நியாயாதிக்கம் உள்ளது என்று வியாக்கியானம் செய்யப்பட்டது.

 

எனவே, இவ்வழக்கினை விசாரிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு நியாயாதிக்கம் இல்லை என்று குறிப்பிட்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, மேற்குறித்த வழக்கினை நியாயாதிக்கம் உள்ள ஒரு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தினார்.

 

அத்துடன் ம.க. சிவாஜிலிங்கத்தை வழக்கிலிருந்து முற்றாக விடுதலை செய்தார்.

 

குற்றம் சாட்டப்பட்டவரான ம.க. சிவாஜிலிங்கத்தின் சார்பாக சட்டத்தரணிகள் சுரங்க பண்டார, லக்ஷ்மன் அபேவர்தன ஆகியோருடன் சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் -மனித உரிமைகள் கண்காணிப்பகம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

 

அத்துடன், குறித்த சட்டத்தை நீக்கும் வரையில், அதன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என அந்த கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

1983 முதல் 2009 ஆம் ஆண்டு வரையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் இறந்தவர்களை நினைவு கூர்ந்தமைக்காக 9 தமிழர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

சிறுபான்மை சமூக உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை தன்னிச்சையாக தடுத்து வைத்து சித்திரவதை செய்வதற்கு நீண்டகாலமாக இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

 

இந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தை, மாற்றியமைப்பதாக இலங்கை அரசாங்கம் சர்வதேச நட்பு நாடுகள், வர்த்தக பங்காளிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு பலமுறை உறுதியளித்துள்ளது.

 

எனினும் இதுவரை அது நடைமுறைக்கு வரவில்லை. ஏற்கனவே தொடர்ச்சியான அரசாங்க பாகுபாட்டை எதிர்கொள்ளும் ஒரு சமூகத்தை மேலும் இது ஓரங்கட்டுவதாக அமைந்துள்ளதென என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் துணை ஆசிய இயக்குநர் மீனாட்சி கங்குலி கூறியுள்ளார்

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ‘நல்லிணக்கம்’ பற்றி கருத்துரைக்கின்ற போதிலும், அவரது அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இனப்பிளவுகளை ஆழப்படுத்த மட்டுமே உதவுவதாக அவர் விமர்சித்துள்ளார்.

தமிழ் மக்கள் மீது திணிக்கப்படுகின்ற பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது திணிக்கப்படுகின்ற பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர் உள்ளிட்டவர்களை மட்டு சிறைச்சாலைக்கு சென்று சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தர்.

 

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்கள் மீது திணிக்கின்ற பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வோம்.

 

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 25, 27 ம் திகதி தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியைச் சேர்ந்த இருவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இதில் அரசாங்கமே நினைவு கூறலாம் என தெரிவித்துவிட்டு வடக்கு கிழக்கிலே மூதூர் சம்பூரை தவிர தவிர அனைத்து நீதிமன்றங்களிலும் தடை உத்தரவு பெறுவதற்கு பொலிசார் முயற்சி எடுத்து போது அனைத்து நீதிமன்றங்களிலும் நினைவு கூறுவதற்கு உரிமை உண்டு என தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

அதேவேளை விடுதலைப்புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பு என்ற வகையில் அந்த அமைப்பின் சின்னங்கள் இல்லாமல் அந்த நினைவேந்தல் நடைபெறமுடியும் எனவும் கட்டளை வழங்கப்பட்டது.

 

இந்த நிலையில் அந்த நினைவேந்தலில் கலந்துகொண்டு அதனை ஒழுங்கு செய்த ஒரே ஒரு காரணத்திற்காக இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

தமிழ் மக்கள் நியாயமில்லாத பயங்கரவாத தடைச் சட்டத்தை தெரிந்து அதனுள் போகாது நடந்து கொண்ட போதும் அவர்கள் மீது குறிவைக்கப்படுகின்றது.

 

இதனை தமிழத் தேசிய மக்கள் முன்னணியாக கடுமையாக எதிர்க்கின்றோம்.

 

இந்த பயங்கரவாதத்தை மக்கள் மீது திணிக்கின்ற செயற்பாடுகளுக்கு அடிபணியாது நாங்கள் இதை எதிர்நோக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். நாங்கள் இதனை எதிர்கொள்வோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படுவது கவலையளிக்கிறது – அமெரிக்கா

பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவதாக வெளியாகும் தகவல்கள் கவலையளிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

அமைதியான வழியில் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் கைதுசெய்யப்படுவதும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் நடத்தப்படும் விதம் குறித்து பல தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.

 

ஆகவே கருத்து சுதந்திரத்தையும் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் மனிதாபிமான ரீதியில் நடத்தப்படுவதையும் உறுதிப்படுத்துவது அவசியம் எனவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

 

அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பிறந்தநாளுக்கு கேக் வெட்டியதற்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளார்கள் – சாணக்கியன் விசனம் !

நல்லிணக்கம் பேசும் ஜனாதிபதி நல்லிணக்கத்திற்கு மாறாக இறந்தவர்களை நினைவுகூருவோரை கைதுசெய்யும் பொலிஸாரின் செயற்பாடுகளை அவர் கண்டு மௌனமாக இருப்பாரானால் அவரின் செயற்பாடுகளை அவர் ஏற்றுக்கொள்கின்றார் என்றே பார்க்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

 

இன்று (29) மட்டக்களப்பு வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகரை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் அண்மையில் தரவை துயிலும் இல்லத்தில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்து அவருடன் கலந்துரையாடியுள்ளார்.

 

மாவீரர் துயிலும் இல்லம் என்ற பதாகை வைக்கப்பட்டதன் காரணமாக மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் உட்பட நான்கு பேரை கைது செய்து அவர்கள் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் பொலிஸார் வழக்கு தொடுத்துள்ளதாகவும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

 

குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டு இரண்டு தினங்களை கடந்துள்ள நிலையில் இதுவரையில் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தாமை குறித்து கேள்வியெழுப்பியபோதிலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளதன் காரணமாக அவர்களை மூன்று தினங்கள் வைத்து விசாரணை செய்த பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த முடியும் என பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

 

பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்த மாட்டோம் என்று சர்வதேசத்திற்கு கூறிவிட்டு இங்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

இதேபோன்று வவுணதீவு பிரதேசத்தில் பிறந்த நாளுக்கு கேக்வெட்டியவர்களையும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்து வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் இந்த நாட்டில் இவ்வாறான செயற்பாடுகள் ஒருபோதும் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

 

இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்று அவர் இது தொடர்பான நடவடிக்கையெடுக்காவிட்டால் அவர் நல்லிணக்கம் பேசும் ஜனாதிபதி நல்லிணக்கத்திற்கு மாறாக இறந்தவர்களை நினைவுகூருவோரை கைது செய்யும் பொலிஸாரின் செயற்பாடுகளை அவர் கண்டு மௌனமாக இருப்பாரானால் அவரின் செயற்பாடுகளை அவர் ஏற்றுக் கொள்கின்றார் என்றே பார்க்க வேண்டும்.

 

இராணுவத்துடன் இணைந்து கடந்த காலத்தில் தமிழ் மக்களை கொலைசெய்தவர்கள் வெருகல் பகுதியில் சிவப்ப மஞ்சல் கொடிகளைகட்டி நிகழ்வுகளை செய்யும் போது அவர்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படுவதில்லை.

 

எதிர்வரும் காலங்களில் ஆலயங்களில் கூட சிவப்பு, மஞ்சள் கொடிகளைக்கட்டி நிகழ்வுகளை செய்யும் போது அதுவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றமாக சொல்வார்களா என்பது தெரியாது என தெரிவித்தார்.

மாவீரர் தின நினைவேந்தல் – மாணவன் உட்பட 7 பேர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது !

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள இளைஞர் உட்பட 7 பேர் கடந்த 2 நாட்களில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவீரர் நினைவேந்தல் நிகழ்விற்கு வாகனங்கள், ஜெனரேட்டர் மற்றும் ஸ்பீக்கர்களை வாடகைக்கு எடுத்ததற்காக சிலர் கைது செய்யப்பட்டனர்,

 

மற்றவர்கள் நவம்பர் 27 அன்று சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகள் மற்றும் ஒலிபெருக்கிகளை கொண்டு சென்றதற்காக கைது செய்யப்பட்டனர்.

 

இதில் பலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் மேலும் சிலரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கூறியுள்ளார்.

 

பயங்கரவாத தடை சட்டத்தில் பயங்கரவாதம் என வரையறுக்கப்படாத வாகனங்களை வாடகைக்கு எடுப்பது கூட பயங்கரவாதமாக கூறப்பட்டுள்ளதாக என்றும் அம்பிகா சற்குணநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.

 

மேலும் நினைவு கூறுபவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைப்பது, அரசாங்கத்தின் மீதான தமிழர்களின் அவநம்பிக்கையை மேலும் அதிகரிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

போருக்கு பின் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதானோர் எண்ணிக்கை 2500 ஐ தாண்டியது !

போருக்கு பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2500ஐ தாண்டி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2009 டிசம்பர் 31 முதல் 2022 டிசம்பர் 31 வரை 13 வருடங்களில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2793 என இலங்கை பொலிஸ்பிரிவின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

தடுப்பு காவல் உத்தரவுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2473 என்பதோடு, 184 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இதன்படி, “வோச் டோக் டீம்” உறுப்பினர் யுதன்ஜய விஜேரத்ன, பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக கடந்த மார்ச் 13ஆம் திகதி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வு பிரிவுக்கு தகவல் கோரிக்கை ஒன்றை அனுப்பியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பொதுச் செயலாளர் கட்டடத்தின் ஆறாவது மாடி, கொழும்பு 01, இல, 101, சைத்திய பூசா தடுப்பு நிலையம்,  தங்காலை பழைய சிறைச்சாலை வளாகம், இல, 149 கிருலப்பனை மாவத்தை, கொழும்பு 05,  புடானி கெபிடல் கட்டடம், வவுனியா காவல்துறை அலுவலக வளாகம்,  ஓமந்தை அரசமுறிப்பு தடுப்புக் காவல் நிலையம் எனும் ஏழு இடங்களில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை பயங்கரவாத விசாரணைப் பிரிவுத் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பயங்கரவாத சட்டங்களில் கைது செய்யப்பட்டவர்கள் வெளியில் தெரியாத இடங்களில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகின்றனர் என்பதற்கான நம்பகமான ஆதாரங்கள் மனித உரிமை அமைப்புகள் பலமுறை வெளிப்படுத்தியிருந்தது.

சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் மற்றும் இலங்கையின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் இணைந்து  மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்ட அறிக்கையில் காவல்துறை, இராணுவம், கடற்படை மற்றும் பல்வேறு துணை இராணுவக் குழுக்களால் நாடு முழுவதும் சுமார் 220 இடங்கள் சித்திரவதை இடங்களாக பராமரிக்கப்பட்டு வருவதனை வரைபடமாக வெளிப்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“புதிய சட்டம் கருத்து சுதந்திரத்தின் சாவு மணி’ – கிளிநொச்சியில் சிவில் அமைப்புக்கள் போராட்டம்!

கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும், அவர்கள் தங்களது கடமைகளை சுயாதீனமாகவும், சுதந்திரமாகவும் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும், ஊடகவியலாளர்கள் பழிவாங்கப்படும் சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும் போன்ற விடயங்களை வலியுறுத்தி, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக ஊடகவியலாளர்கள், சிவில் அமைப்புக்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் “புதிய சட்டம் கருத்து சுதந்திரத்தின் சாவு மணி, பொருளாதார நெருக்கடியில் சிக்குண்ட நாட்டை ஜனநாயக நெருக்கடிக்குள்ளும் தள்ளாதீர், நல்லாட்சிக்கே சட்டத்தை உருவாக்குங்கள் அடக்கி ஒடுக்க உருவாக்காதீர்கள்.” போன்ற பதாதைகளை ஏந்தி இருந்தனர்.

“மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தை சிறைக்கு கொண்டு செல்லவே பயங்கரவாத தடைச் சட்டத்தை ஜனாதிபதி ரணில் கொண்டுவருகிறார்.” – சிறீதரன்

“மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தை சிறைக்கு கொண்டு செல்லவே பயங்கரவாத தடைச் சட்டத்தை ஜனாதிபதி ரணில் கொண்டுவருகிறார்.” என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று (16) கட்சியின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் உரையாற்றும்போது இவ்வாறு கூறிய அவர், மேலும் பேசுகையில்,

அடுத்தடுத்த வாரங்களில் மிக மிக ஆபத்தான பயங்கரவாத தடைச் சட்டம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு கொண்டுவரப்படும்போது, அது விவாதத்துக்கு விடப்படும். அப்போது அதற்கு பெரும்பான்மை பலம் தேவைப்படும்.

இந்நிலையில் இப்போது, பெரும்பான்மை வாக்குகளை அளிக்கக்கூடிய மஹிந்த ராஜபக்ஷ குடும்பமே இந்த சட்டத்துக்குள் அகப்பட்டு சிறை செல்லும் நிலை ஏற்படலாம்.

ஏற்கனவே, ஜே.ஆர். ஜெயவர்தனவினால் பாராளுமன்றத்தில் பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தை வைத்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை கொன்று குவித்துத் தள்ளியுள்ளனர்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உள்ள எதிர்கால சிந்தனை வேறு; மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்திடம் உள்ள எதிர்கால சிந்தனைகள் வேறு. அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டால் இந்த சட்டத்தை பயன்படுத்தக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

ரணில், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியாக தான் வரவேண்டும் என்பதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றார். அவ்வாறான முயற்சிகளில் எந்த ஒரு தேர்தலையும் தற்போது நடத்துவதற்கு அவர் தயாராக இல்லை.

ஏற்கனவே, இருந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை விடவும் மிக மிக ஆபத்தான சட்டமாகவே இப்புதிய சட்டம் உள்ளது. தனிநபர் கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நாங்கள்  முற்று முழுதாக எதிர்க்கிறோம் அதனை நிராகரிக்கின்றோம் – எம்.ஏ.சுமந்திரன்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை முற்றாக எதிர்க்கிறோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்கிற புதிய சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்புச் சட்டம் 40 வருடங்களுக்கு மேலாக நாட்டிலே அமுலில் இருக்கின்றது. ஆறு மாத காலத்திற்காக ஒரு தற்காலிக சட்டமாக கொண்டுவரப்பட்டு பின்னர் சில வருடங்களுக்கு பிறகு 81 ஆம் ஆண்டு அது நிரந்தரமான சட்டமாக மாற்றப்பட்டது.

மிகவும் மோசமான ஒரு சட்டம் பலராலே அப்படியாக விமர்சிக்கப்படுகின்ற சட்டம் அதை நீக்குவதாக. தற்போதைய  ஜனாதிபதியே பிரதமராக இருந்தபோது 2017 ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.

அதற்கு பிறகு தான் பயங்கரவாத தடை சட்டத்தை மாற்றி பயங்கரவாத  தடுப்புசட்டம் வர்த்தமானியில்  பிரசுரிக்கப்பட்டது. அது  மக்கள் பிரதிநிதிகளோடும் பொது அமைப்புகளோடும் கலந்துரையாடப்பட்டு அந்த வேளையிலே பல தவறுகளை சுட்டிக்காட்டி  பல திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

2018 ம்ஆண்டு  குண்டு வெடிப்பை சாட்டாக காட்டி அதனை நிறைவேற்றாமல் கைவிட்டார்கள். இப்பொழுது கொண்டுவந்திருக்கின்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம். பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு ஒப்பானது அல்ல. இப்பொழுது இருக்கின்ற பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை விட மோசமானதாக காணப்படுகின்றது.

தமிழ் மக்களுக்கு  ஏற்கனவே நடந்த அத்துமீறல்கள் தொடர்பில் பொறுப்பு கூறல்களை கூறுவது எல்லாவற்றையும்  இருப்பதையும் விட மோசமாக கொண்டு வரப்படுகின்றது. பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நாங்கள்  முற்று முழுதாக எதிர்க்கிறோம் அதனை நிராகரிக்கின்றோம் அதற்கு எதிரான சட்டநடவடிக்கை எடுப்போம்.

அதற்கு மேலாக புதிய சட்டம் கொண்டுவரப்படுவதாக இருந்தால் அது முதலிலே பொது அமைப்புகளோடு பேசி இணங்கப்பட வேண்டிய விடயம்.ஆனால் இதில் இன்னொரு விடயத்தை குறிப்பிட வேண்டும். பயங்கரவாத தடுப்புசட்டம் நீக்கப்படல் சம்பந்தமாக மனித உரிமை ஆணைக்குழு ஏற்கனவே சென்ற வருடம் ஒரு சிபார்சினை முன் வைத்திருக்கின்றது.

அதாவது பயங்கரவாதத்திற்கான ஒரு விசேட சட்டம் தேவையில்லை என்று. எனவே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற புதிய சட்டம் அரசாங்கம் கொண்டு வருவதை நாங்கள் எதிர்க்கின்றோம் குறிப்பாக  அரசாங்கமானது தான் செல்லுகின்ற பாதை ஜனநாயகத்துக்கு விரோதமானது என்பதை அறியும்.

தேர்தல்கள் நடத்தப்படாமல் ஜனநாயக பாதையில் இருந்து அரசாங்கம் விலகி மாகாண சபை தேர்தலை பலகாலம் முடக்கி வைத்து தற்பொழுது உள்ளூராட்சி சபை  தேர்தலையும் அறிவிக்கப்பட்ட பிறகு கூட அதனை நடத்தாது நிதி நிலைமையை காரணம் காட்டி நாட்டில் ஒரே ஒரு நபர்  தடுத்து வைத்திருக்கின்றார் .

இந்த செய்கையின் மூலமாக இது ஒரு ஜனநாயக ஆட்சி முறை இல்லை ஒரு தனி மனித சர்வாதிகார ஆட்சி நாட்டிலே நடக்கின்றது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணமாக இருக்கின்றது.

ஆகையினால் இந்த மோசமான  சூழலிலே இப்படியான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற ஒரு விசேட சட்டத்தை கொண்டு வந்து அரசாங்கத்துக்கு எதிராக நியாயமான எதிர்ப்பை தெரிவிக்கின்ற மக்களை அடக்குவதற்கும் ஒடுக்குவதற்கும் தண்டிப்பதற்குமான செயற்பாட்டிலே அரசாங்கம் இறங்கி இருக்கின்றது இதனை வன்மையாக கண்டிக்கின்றோம் இதனை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஈடுபடுவோம் என்றார்.