பா.உ இராமநாதன் அர்ச்சுனா

பா.உ இராமநாதன் அர்ச்சுனா

தையிட்டி விகாரை: பிச்சைக்காரன் புண்ணை குணப்படுத்த மாட்டான் பா உ அர்ச்சுனா !

தையிட்டி விகாரை: தமிழ் தலைவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயக்கம் ! பிச்சைக்காரன் புண்ணை குணப்படுத்த மாட்டான் பா உ அர்ச்சுனா !

 

யாழ். தையிட்டி விகாரை இடித்து அகற்றக் கோரும் போராட்டம் சமூக வலைத்தளங்களில் செய்திகளில் பேசப்பட்ட அளவுக்கு மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. உடனடியாக அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி தையிட்டியில் நேற்று புதன்கிழமை இரண்டாவது நாளாகவும் பிசுபிசுத்துப் போனதொரு கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

”பௌத்தம் உன் மதம். வழிபடு. தையிட்டி என் மண். வழி விடு !”, ”சட்டவிரோத விகாரை கட்டுமானத்தை உடனடியாக அகற்று” , ”கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை நிறுத்து” போன்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் போராட்டம் இடம்பெற்ற பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையை வழமை போல் வாக்குவாதம் ஏற்பட்டு முறுகலான நிலை தோற்றுவிக்கப்பட்டது.

இதேவேளை யாழ்ப்பாணம் – தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையை அகற்ற முடியும் என அரகலயா போராட்டத்தில் முன்னின்ற மக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந் போராட்டத்தில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்த விகாரையின் கட்டுமானம் நிறைவடைந்துள்ளது ஆகவே இந்த விகாரையை அகற்ற முடியாது என பலரும் பல்வேறு கருத்துக்ளை முன்வைத்து வருகின்றனர். ஆனால் தென்னிலங்கையில் இருந்த பல சட்டவிரோதமான விகாரைகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையினுடைய வழக்கின் மூலம் வீதி அபிவிருத்திக்காக அகற்றப்பட்டிருக்கின்றது.

எனவே அவர்களுக்கு ஒரு நீதி, இங்கிருக்கின்ற மக்களுக்கு ஒரு நீதி என்றால், சிங்களப் பேரினவாதத்தினுடைய ஆக்கிரமிப்புப் போக்கும் தமிழருக்கு எந்த ஒரு இடத்தையும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற நிலைமையும், தமிழ் மக்கள் எந்தவொரு இடத்திலும் தங்களின் பூரண இனச்சுதந்திரத்துடன் வாழ முடியாத ஒரு சூழ்நிலையியை ஏற்படுத்துகின்ற சிந்தனையை இது வெளிப்படுத்துகின்றது’’ எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தையிட்டி விகாரை விவகாரத்தை முன்னிலைப்படுத்தி இனவாத கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி வரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறி தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் உறுப்பினர் அஜித் ரணசிங்க தெரிவித்துள்ளதுடன் இதுதொடர்பாக அவர் பொலிசில் முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்துள்ளார் .

இதேவேளை நேற்றைய தினத்தில் தொடர்ந்த தையிட்டி விகாரை தொடர்பான போராட்டத்திலும் விகாரையை அகற்ற சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பில் எந்தவொரு பேச்சுக்களும் கலந்து கொண்ட தலைவர்களால் முன்னெடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பா.உ இராமநாதன் அர்ச்சுனா, பிச்சைக்காரன் காயத்தை குணப்படுத்த மாட்டான். ஏனெனில் அப்போதா தான் அதை வைத்து பிச்சை எடுக்கலாம். அந்த பிச்சைக்காரன் போலத்தான் பல அரசியல்வாதிகள் தையிட்டி பிரச்சினையை தீர்க்காமல் வைத்திருந்தால் தான் தங்களால் அரசியல் செய்ய முடியும் என்பதற்காகவே அதனை தீர்க்காது தூண்டி விடுகின்றார்கள் என குற்றஞ்சுமத்தியுள்ளார்.

ராஜபக்சக்களின் வழியில் யாழ். தேர்தல் மாவட்டத்திலிருந்து புதிதாக ஒரு கோமாளி – பா.உ அர்ச்சுனாவை விளாசும் இளங்குமரன் !

ராஜபக்சக்களின் வழியில் யாழ். தேர்தல் மாவட்டத்திலிருந்து புதிதாக ஒரு கோமாளி – பா.உ அர்ச்சுனாவை விளாசும் இளங்குமரன் !

தமிழர்களுக்கென தனி மதிப்பு உள்ளது. அந்த மதிப்பை சீர்குலைப்பதற்கு அவ்வப்போது துரோகிகளும், கோமாளிகளும் வந்துசெல்வதும் வழமை. அப்படித்தான் இம்முறையும் கோமாளியொன்று நாடாளுமன்றம் வந்துள்ளது என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரதேசவாதம்பேசி தமிழர்களை பிரித்தாள்வதற்காக கைக்கூலியாக வந்துள்ள இந்த நபர், கத்தரிதோட்ட வெருளிகள் பற்றி கதைப்பது வெட்கக்கேடு. என்.பி.பிக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை புரிந்துகொள்ள பக்குவமில்லாத அரசியல் கோமாளி, தற்போது விமர்சன அரசியலை முன்னெடுத்து வருகின்றது. சமூகவலைத்தளங்களில் பிரபல்யமடைவதற்காக வீரவசனங்களை பேசி, தன்னையும், தன்னை சூழவுள்ள ஒரு சிலரை பற்றி மட்டுமே பேசும் கோமாளிகளெல்லாம் தலைவர்களாக முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

எமது மலையக உறவுகள் தமிழர்களின் சுயநிர்ணய கோரிக்கைக்கு எதிராக நின்றதில்லை. உரிமைப் போராட்டங்களைக்கூட ஆதரித்துள்ளனர். தென்னிலங்கையில் மஹிந்தவும், அவரின் சகாக்களும் பின்பற்றிய அதே அரசியல் பாணியை, வடக்கில் செய்வதற்கு இந்த கோமாளி முற்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

 அயோக்கியனாக மாறிய அர்ச்சுனா ! அமைச்சர் சந்திரசேகரிடமும் மலையக மக்களிடமும் மன்னிப்புக் கோருகின்றனர் ஈழத்தமிழர்கள் !

அயோக்கியனாக மாறிய அர்ச்சுனா ! அமைச்சர் சந்திரசேகரிடமும் மலையக மக்களிடமும் மன்னிப்புக் கோருகின்றனர் ஈழத்தமிழர்கள் !

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை தாக்குவதற்காக அண்மையில் காணொளி ஒன்றில் பா.உ இராமநாதன் அர்ச்சுனா “நாங்கள் கப்பல் ஓட்டியவர்கள், நீங்கள் கப்பலில் வந்தவர்கள்” என மலையக தமிழர்களை இழிவுபடுத்தும் வகையிலான மொழியாடல்களை பயன்படுத்தியிருப்பது பலரையும் அருவருப்படைய வைத்துள்ளது.

பா உ அர்ச்சுனா ஊசி அர்ச்சுனாவாக இருந்த போதே தன்னுடைய சாதியத் திமிரை அப்பப்போ காட்டியதை தேசம்நெற் பல தடவைகள் அம்பலப்படுத்தியிருந்தது. 42 பாகை வெப்பநிலையிலும் ரை கட்டிவரும் அர்ச்சுனா தன்னை எப்போதும் கண்காணியாகவே கனவு காண்கின்றார். மற்றவர்களை முட்டாளாகவே காண்கின்றார். பெரும்பாலான முட்டாள்களுக்கு தாங்கள் முட்டாள்கள் என்று விளங்குவதற்கான அறிவு கூட இருப்பதில்லை. அந்த ரகத்தைச் சேர்ந்த டொக்கடர் முட்டாள் தான் இந்த அர்ச்சுனா என்கிறார் சமூக செயற்பாட்டாளர் சோலையூரான். இவ்வாறானவர்களைத் தெரிவு செய்கின்ற அளவுக்கு யாழ்ப்பாணத் தமிழ் தேசியத்திடம் அரசியல் வற்றிப் போய்விட்டது எனவும் சோலையூரான் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இவ்வாரம் பாராளுமன்ற அமர்வின் போது பா.உக்களான இராமநாதன் அர்ச்சுனா மற்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்போது, கழுதைகள் குதிரைகளோடும் தான் யாழ் மக்கள் போட்டோ எடுப்பார்கள் ஆனால் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், சந்திரசேகருக்கு தமிழ்பேச தெரியாது, என்.பி.பியின் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர்கள் கத்தரி தோட்டத்து வெருளிகள் என பல வேண்டத்தகாத விடயங்களை கூறினார் இராமநாதன் அர்ச்சுனா. இதே கருத்துப்பட ஐபிசி யும் கீதபொன்கலனும் உரையாடல்களில் கருத்து வெளியிட்டு இருந்ததை தேசம்நெற் சுட்டிக்காட்டியிருந்தது.

இவ்வாறான நிலையிலேயே பாராளுமன்றத்துக்கு வெளியிலும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை தமிழ் ஒழுங்காக பேச தெரியாதவர், மலையக பின்புலத்தை சேர்ந்தவர் வசைபாடியுள்ளார் பா.உ இராமநாதன் அர்ச்சுனா. குறிப்பாக நீங்கள் கப்பலில் வந்த வெள்ளைக்காரர்கள் தான் உங்களை கொண்டு வந்தார்கள் போன்ற சொற்பிரயோகங்களை பயன்படுத்தி வழமையான யாழ்ப்பாண சாதிய மேலாதிக்க தமிழ்தேசிய தலைமைகளின் எண்ண ஓட்டத்துக்குள் தானும் இணைந்தவர் என்பதை மீள உறுதிப்படுத்தியுள்ளார் பா.உ அர்ச்சுனா.

கிளிநொச்சியில் உள்ள அதிகப்படியான மலையக தமிழ் மக்களின் வாக்குகளில் பாராளுமன்றத்திற்கு தெரிவான பா.உ சிறீரன் கிளி ஊடகவியலாளர் தமிழ்செல்வனை தோட்டக்காட்டான் என குறிப்பிட்டு தன் யாழ்ப்பாண சாதிய திமிரை காட்டியிருந்ததார். மேலும் மலையக பின்னணியை சேர்ந்த யாருமே தமிழரசுக்கட்சியின் அரசியலுக்குள் நுழைந்துவிடாமலும் கச்சிதமாக பார்த்துக் கொள்கிறார். இந்த நிலையில் வழமையான மலையக தமிழர்களை அடக்கி ஒடுக்கும் தமிழ்தேசிய வாதிகளின் கூட்டணியில் பா.உ அர்ச்சுனாவும் இணைந்துள்ளார் என பல தரப்பினரும் குற்றச்சாட்டி வருகின்றனர்.

இதேவேளை, புலம்பெயர் தமிழர் எல்லாம் கழிப்பறை கழுவத்தான் செல்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அரச்சுனா தெரிவித்தமைக்கு வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சமாச உப தலைவர் நாகராசா வர்ணகுலசிங்கம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

அர்ச்சுனா அமைச்சர் சந்திரசேகரை நோக்கி கூறிய “இக்கூற்றுக்காக முழுத் தமிழினமும் இலங்கைத் தமிழர்கள் அமைச்சரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஏனென்றால் இதை அமைச்சர் ஒருவருக்கு எதிரான கூற்றென்று ஒதுக்கி விட முடியாது. ஒரு சமூகத்துக்கு எதிரான கூற்று” என்கிறார் கனடாவில் இயங்கும் பதிவு இணையத் தளத்தின் ஆசிரியர் நவரட்ணம் கிரிதரன்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “உண்மையில் அவர் கூறியிருந்திருக்க வேண்டியது ‘நாங்கள் கப்பலோட்டியவர்கள். நீங்கள் எமக்கு வழிகாட்டியாகவிருந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி மண்ணிலிருந்து வந்தவர்கள்’ என்றே.

சுதந்திரமடைந்த நாட்டில் நாடற்றவர்களாக்கப்பட்டார்கள். அதற்கு எம் தமிழ்த் தலைவர்கள் , ஜி.ஜி.பொன்னம்பலம் உட்படப் பலரும் உடந்தையாகவிருந்தார்கள் என்பது வரலாறு. வடகிழக்கு எல்லைகளில் குடியேறி அதன் காரணமாகவும் துன்பத்தினை அனுபவித்தவர்கள் அவர்கள். இந்நிலையில் இவ்வாறானதொரு கூற்று அம்மக்கள் மீது ஏவிவிடப்பட்ட கேவலமான, துவேசம் மிக்க வசையாகவே கருதப்படும்.

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நீண்ட காலமாகப் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர். ஒரு புரட்சிகர அமைப்பின் போராளியாக இருந்தவர். இந்நிலையில் அவரைப்பார்த்து இவ்விதம் வசை பாடியிருப்பது கண்டிக்கத்தக்கது. வருந்தத்தக்கது. மன்னிப்புக் கேட்கப்பட வேண்டியது. கூறியவர் கேட்காதிருந்தாலும் , நாம் அனைவரும் மலையக மக்களிடம் மன்னிப்புக் கேட்போம்: ‘எம்மை மன்னித்து விடுங்கள்’ என்கிறார் கனடாவில் இயங்கும் பதிவு இணையத் தளத்தின் ஆசிரியர் நவரட்ணம் கிரிதரன்.

அர்ச்சுனாவுடைய கூற்று ஈழத்தமிழ் சமூகத்தை அதிர்ச்சி அடையச் செய்துள்ளதுடன் வெட்கித் தலைகுனியவும் செய்துள்ளது. ஈழத்தமிழர்களின் பல்வேறு தளங்களில் செயற்படுபவர்களும் பா உ அர்சுனாவின் சாதியவாதம், பிரதேச வாதம், இனவாதம் என்பனவற்றை மிக வன்மையாகக் கண்டித்து கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். அர்ச்சுனா இதுவரை பல்வேறு கழிசறையான மொழியாடல்களைக் கையாண்ட போதும் தற்போது பயன்படுத்திய வார்த்தைகள் அர்ச்சுனா எப்படிப்பட்ட மனிதர் என்பதை அம்பலப்படுத்தி உள்ளது. தமிழ் தேசியத்தை முன்நிறுத்தும் அர்ச்சுனா மலையகத் தமிழர்களை கள்ளத் தோணிகள் என்கிறார், சிறிதரன் வடக்கத்தையான் என்கிறார், கஜேந்திரகுமாரோ மலையகத் தமிழர்களின் வாக்குரிமையைப் பறித்தவர்களின் பரம்பரையில் நின்று அரசியல் செய்கின்றார்.

அர்ச்சுனாவின் முதலமைச்சர் கனவு ! போராட்டங்களுக்குத் தடை ! ஜனாதிபதி யாழ் வருகின்றார் ! – குடி நீர் பிரச்சினை பேசப்படுமா ?

அர்ச்சுனாவின் முதலமைச்சர் கனவு ! போராட்டங்களுக்குத் தடை ! ஜனாதிபதி யாழ் வருகின்றார் ! – குடி நீர் பிரச்சினை பேசப்படுமா ?

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பொதுமக்கள் சந்திப்பு போன்ற நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நாளை வருகை தரவுள்ளார். இதன்போது யாழ் மாவட்டத்தின் எதிர்காலத்தைப் பாதிக்கின்ற குடி தண்ணீர் பிரச்சினை பேசப்படுமா என யாழ் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். என்பிபி பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் இது தொடர்பில் உறுதியான தீர்வு ஒன்றை முன்வைக்க வேண்டும். மேலும் இந்தக் குடி தண்ணீர் மோசடி மற்றும் யாழ் நகரின் மத்திய கழிவகற்றல் பொறிமுறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி மோசடிகள் பற்றியும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசப்பட வேண்டும்.

ஜனாதிபதியின் வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் உள்ளிட்டவை அழைப்பு விடுத்திருந்தன.

இந்த நிலையில் போராட்டம் நடத்துவதை தடை செய்யக்கோரி காவல்துறையினர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத் தலைவர், ஆர்ப்பாட்டக் குழுவின் யாழ் மாவட்ட தலைவர், தற்காலிக சுகாதார உத்தியோகத்தர் சங்க தலைவர், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் ஆகிய ஐவரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்புக் கட்டளை அனுப்புவதற்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே அனுராதபுரம் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல் வற்புறுத்தல் மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டு நேற்று இரவு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த கைதானது அநுராதபுரம் பொலிஸாரால் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகராட்சி மன்றத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை தனக்கு எதிரான விடயங்களை முன்நிறுத்தி முதலமைச்சராகிவிடலாம் என்ற எண்ணத்தில் சிறகடித்துப் பறக்கின்றார் பா உ அர்ச்சுனா. தான் முதலமைச்சரானால் முதலாவது வேலையாக கலாச்சார மண்டபத்தின் பெயரை ‘யாழ்ப்பாணத் தமிழர் கலாச்சார மையம்’ எனப் பெயர்மாற்றுவேன் எனச் சூளுரைத்துள்ளார். ரென்ட்டுக்கு ஏற்றமாதிரி கொள்கை விளக்கம் வைக்கின்ற பா உ அர்ச்சுனா முதலமைச்சர் என்பது யாழ் குடாநாட்டுக்குள் என்பது போலவும் யாழ்ப்பாணத் தமிழனுக்கு மட்டும்தான் கலாச்சாரம் இருப்பது போலவும் கருத்துக்களை முன்வைத்த வருகின்றார். மேலும் புலித்தோல் போர்த்திய தமிழ் தேசியவாதிகள் போல் தன்னுடைய வாக்கு வங்கியை நிரப்ப ‘தேசியத் தலைவரையும், மாவீரர்களையும் துணைக்கு அழைக்கின்றார். இதில் எந்தப் புலிக்குட்டி உண்மையான புலிக்குட்டி என்ற குழப்பத்தில் மக்கள் 2009 முதல் இருக்கின்றனர். இப்ப இன்னுமொரு புலிக்குட்டியும் முதலமைச்சர் கனவோடு களமிறங்கி உள்ளது. ‘அப்ப தலைவர் கனவில வந்து எலெக்சனும் மண்ணாங்கட்டியும் எல்லோரும் பகிஸ்கரியுங்கோ என்று சொன்னா கேட்பினமோ?’

ஜனாதிபதி அனுராவின் வருகையைத் தொடர்ந்து, பாதை திறப்புக்கள், காணி விடுவிப்புக்கள், யாழ் குடிநீர்ப் பிரச்சினை, மீனவர்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் நல்ல செய்திகளை யாழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை இலக்கு வைக்கும் பா.உ அர்ச்சுனா !

உள்ளூராட்சி தேர்தலை இலக்கு வைக்கும் பா.உ அர்ச்சுனா !

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனது கட்சியில் இணைந்து போட்டியிடுவதற்கு, யாழ் மாவட்ட சுயேச்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர், தனது கட்சியில் இணைய விரும்புபவர்களுக்கு படிவமொன்றையும் வெளியிட்டுள்ளார்.

குறித்த படிவத்தை நிரப்பி அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள அவர், உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிட விரும்பினால் தனது கட்சியில் இணைந்து கொண்டு போட்டியிட முடியுமென்றும் தெரிவித்துள்ளார்