பிரேமலால் ஜயசேகர

பிரேமலால் ஜயசேகர

“ஓர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினருக்கே இந்த கதி என்றால் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் நிலைமையினை யோசித்துப்பாருங்கள்” – நாடாளுமன்றில் இரா.சாணக்கியன் !

“ஓர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினருக்கே இவ் கதி என்றால் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் நிலைமையினை.” என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக இன்று நாடாளுமன்றில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த செயற்பாடு மிகவும் தவறான ஒன்றாகும். ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நேர்ந்த ஒரு இடையூறான செயற்பாடாகவே இது கருதப்படுகிறது.

நாடாளுமன்றுக்கு வருகைத் தந்து, உரையாற்றிவிட்டு நீதிமன்றில் முன்னிலையாவதாக அவர் கூறிய நிலையிலேயே இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த காலங்களில் கொலை குற்றத்திற்காக நீதிமன்றில் தண்டனை பெற்ற பிரேமலால் ஜயசேகர, நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டிருந்தார். ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலைக் குற்றத்திற்காக தண்டனை அனுபவித்த சிவநேசத்துறை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு சிறையில் இருக்கும்போதுகூட வருகைத் தந்தார்.

இவ்வாறான பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு இன்று நாடாளுமன்றுக்கு வருகை தருவதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் பின்னணியை நீதிமன்றம் விசாரிக்கட்டும். எனினும், கட்சி பேதம் பாராமல் அவரது சிறப்புரிமை மீறப்பட்டமைக்கு எதிராக நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸாரைப் பார்த்து அடையாளத்தை உறுதிப்படுத்துமாறுக் கூறுவது நியாயமான ஒன்றாகும். ஏனெனில், அவரது தந்தையார் இரண்டு பொலிஸாரினால்தான் கொழும்பில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

எனவே, தன்னை பின் தொடர்ந்து பொலிஸார் வருவது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு சந்தேகம் எழுவதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அத்தோடு, இன்று நாடாளுமன்றுக்கு வருகைத்தந்து உரையாற்றிவிட்டு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு சபாநாயகர் அறிவித்திருக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் இன்று இதுதொடர்பாக கருத்து வெளியிட்டிருந்தார். ஆனால், ஏனைய உறுப்பினர்களும் இதற்கெதிராக குரல் கொடுத்திருக்க வேண்டும்.

நாம் இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். கடந்த காலங்களில் நாடாளுமன்றில் தாக்குதல் நடத்தினார்கள். முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய மீது தண்ணீர் போத்தல்களினாலும், புத்தகங்களினாலும் தாக்குதல் நடத்தினார்கள்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வில் சில்வா, அரச அதிகாரியொருவரை மரத்தில் கட்டி வைத்தார். இவையணைத்துக்கும் காணொளி ஆதாரங்கள்கூட இவற்றுக்கெதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை என்ன?

ஏன், கடந்தாண்டு மே 9 ஆம் திகதி பிரதிபொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுடன் மஞ்சள் நிற டி சேட் அணிந்து வந்த நபர் ஒருவர், போராட்டக்கார்கள் மீது தாக்குதல் நடத்தினார். இவர் கைது செய்யப்பட்டரா?

அத்தோடு, வெறுப்பு பிரசாரம் குறித்து இன்று சமூக செயற்பாட்டாளர் புருனோ திவாகர கைது செய்யப்பட்டுள்ளார். உண்மையான வெறுப்புப் பிரசாரத்தை பார்க்க வேண்டுமாக இருந்தால், அன்று மஹிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையில் வைத்து ஆற்றிய உரையைப் பாருங்கள்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனக்காக பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவரைக்கூட பயன்படுத்தாத ஒருவர். ஓர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினருக்கே இவ் கதி என்றால் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் நிலைமையினை இவ்வளவு காலம் அவர்கள் அனுபவிப்பதை யோசித்து பாருங்கள்.

இன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு நேர்ந்த நிலைமையை பார்த்தால், நாட்டுக்கு எவ்வாறு முதலீட்டளார்கள் வருவார்கள்? என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரேமலால் ஜயசேகரவுக்கு அமைச்சுப்பதவி !

துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக பிரேமலால் ஜயசேகர பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரேமலால் ஜயசேகர பொதுதேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து விடுதலை செய்யப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேறிருந்தார்.

2015 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றின் போது நபரொருவரை சுட்டுக் கொலை செய்தமை உள்ளிட்ட குற்றங்களுங்காக பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு  2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவரை விடுவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.