பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ்

பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ்

கொழும்பில் தமிழர்களை மட்டும் இலக்கு வைத்து பொலிஸ் பதிவு – பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் வழங்கியுள்ள விளக்கம் !

கிருலப்பனை, வெள்ளவத்தை, தெஹிவளை, பம்பலப்பிட்டி, நாரஹேன்பிட்டி, கொட்டாஞ்சேனை, மட்டக்குளிய மற்றும் மோதர பொலிஸ் எல்லைகளுக்குள் மீண்டும் பதிவு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக நாடாளுமன்றில் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பதிவு நடவடிக்கைள் ஏன் இடம்பெறுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியிருந்தார்.

யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னரும் கொழும்பில் வசிக்கும் தமிழர்களிடம் பொலிஸார் விபரம் கோருவது குறித்தும் மனோ கணேசன் கேள்வியெழுப்பியிருந்தார்.

மேலும் குறித்த விபரத்தில் என்ன சமயத்தவர் என்று கேட்பது தீபாவளி பொங்கலுக்கு வாழ்த்து அனுப்பவா என்றும் மனோ கணேசன் கேள்வியெழுப்பியிருந்தார்.

இதேநேரம் குறித்த பதிவு நடவடிக்கைகளுக்கான விண்ணப்பங்கள் சிங்கள மொழியில் மாத்திரமே உள்ளதாகவும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இது தொடர்பில் பேசிய பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இன்று பாராளுமன்றத்தில் , அதிகரித்து வரும் குற்றச் செயல்களை அடுத்து இலங்கையின் முழு மக்களும் பொலிஸில் பதிவு செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.

“எந்த இனத்தவர் என்பதை பொருட்படுத்தாமல் முழு மக்களையும் பதிவு செய்ய முடிவு செய்துள்ளோம். மூன்று மொழிகளிலும் அச்சிடப்பட்ட பதிவு படிவங்கள் விநியோகிக்கப்படுவதை நான் பார்க்கிறேன்,” எனவும் அவர் தெரிவித்தார்

எவரையும் எந்த நேரத்திலும் அடையாளம் காணக்கூடிய வகையில் இலங்கை மக்கள்தொகையின் இணையத் தரவுத்தளத்தை நாங்கள் உருவாக்குவோம் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

புதிய இணைய பாதுகாப்பு சட்டமூலம் குறித்த 07 பரிந்துரைகளை வெளியிட்டுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு !

அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய இணைய பாதுகாப்பு சட்டமூலம் குறித்த 07 பரிந்துரைகள் அடங்கிய கடிதத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசுக்கு அனுப்பியுள்ளது.

மக்களின் இணையப் பாதுகாப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை அங்கீகரித்த அதேவேளை, முன்மொழியப்பட்ட சட்டம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது.

இணைய செயற்பாடுகள் தொடர்பாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன், இந்த சட்டமூலம் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்துடன் இணைந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

1 துன்பத்தின் உணர்வுகள் அளவு வேறுபடலாம் என்பதனால் நபர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாகக் கருதப்படும் அறிக்கைகளை குற்றமாக்குவதை இந்த சட்டமூலம் தவிர்க்க வேண்டும்.

2 முன்மொழியப்பட்ட சட்டமூலம் அதன் அரசியல் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் நியமன பொறிமுறையின் மூலம் நியமிக்கப்பட வேண்டும்

3 நபர்களுக்கு எதிராக எடுக்கப்படும் பாதகமான முடிவுகளுக்கான நடைமுறைகளை வகுக்கும் சட்டமூலத்தில் உள்ள விதிகள், இயற்கை நீதியின் விதிகளுக்கு இணங்க, அவர்கள் கேட்கும் வாய்ப்பை வழங்குவதை உறுதிசெய்யும் வகையில் திருத்தப்பட வேண்டும்.

4 1883 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க தண்டனைச் சட்டத்தில் ஏற்கனவே காணப்பட்ட குற்றங்களைச் செய்ய மற்றவர்களைத் தூண்டும் ‘தடைசெய்யப்பட்ட அறிக்கைகள்’ தொடர்பாக விதிக்கப்பட்ட தண்டனைகளின் பகுத்தறிவு, நியாயத்தன்மை மற்றும் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் கணிசமாக திருத்தப்பட வேண்டும்.

5 இணைய பயனர்கள் அநாமதேயமாக இருக்கவும், பகடி, நையாண்டியில் ஈடுபடவும் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் விதத்தில், சாதாரணமான இணைய கணக்குகளை வகைப்படுத்துவதற்கான தெளிவான அளவுகோல்கள் சட்டமூலத்தில் சேர்க்கப்பட வேண்டும்.

6 பொலிஸ் விசாரணைகளுக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படக்கூடாது, ஏனெனில் அவர்கள் பகிரங்கமாகப் பொறுப்பேற்காத தனிப்பட்ட நபர்களாக இருக்கலாம்.

7 இந்த சட்டமூலத்தை ஊடாக சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான புதிய குற்றத்தை அறிமுகப்படுத்தியதை வரவேற்கிறது மற்றும் அத்தகைய குற்றத்தை தனி சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்த நீதி மற்றும் குழந்தைகள் விவகாரங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சுடன் பணியாற்ற வேண்டும்

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை சுட முயற்சி ..? – அறிக்கையை கோரும் பொது பாதுகாப்பு அமைச்சு !

யாழ்ப்பாணத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொலிஸாருக்கு இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் அறிவுறுத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நாளை (திங்கடகிழமை) நீதிமன்றில் உண்மைகளை அறிவிக்கவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை புலனாய்வாளர் தாக்கிச் சுட முயற்சி செய்ததாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பாக காணொளிகள் வெளியாகி இருந்தன.

கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வடமாச்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மக்களைச் சந்தித்துக் கொண்டிருந்த போதே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.