மனித உரிமை மீறல்கள்

மனித உரிமை மீறல்கள்

“விடுதலைப்புலிகளின் கைப்பொம்மையாக கனடா செயற்படுகிறது.” – சரத் வீரசேகர காட்டம் !

“விடுதலைப்புலிகளின் கைப்பொம்மையாக கனடா செயற்படுகிறது.” என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

 

முன்னாள் ஜனாதிபதிகளான  மஹிந்தராஜபக்ச,கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் மீது பொருளாதாரத் தடையை கனடா விதித்துள்ளமைக்கு கடும் கண்டனங்களை தெரிவித்த போதே  முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் மீது கனடா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. மேலும், சுனில் ரத்நாயக்க, சந்தன ஹெட்டியாராச்சி ஆகியோருக்கு எதிராகவும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இலங்கையில் நடைபெற்றது சிவில் யுத்தமென கனடா கூறுகிறது. ஆனால் இலங்கையில் நடைபெற்றது சிவில் யுத்தமல்ல.

முன்னாள் ஜனாதிபதிகளான  மஹிந்தவும், கோட்டாவும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் தனிப்பட்டவகையில் அவர்களுக்கு இல்லாத நிலையில் எந்த அடிப்படையில் தடை விதிக்கப்பட்டது.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் இருக்கிறதா? பிரிவினைவாதிகளை சந்தோஷப்படுத்துவதற்காக இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

சுனில் ரத்னாயக்கவுக்குக் கிடைக்கப்பெற்ற பொதுமன்னிப்பை எதிர்க்கும் கனடா, முன்னாள் விடுதலைப் புலிக உறுப்பினர்களை பொதுமன்னிப்பில் விடுவிக்கும்போது மாத்திரம் ஏன் எதிர்ப்பதில்லை. எதற்காக இந்த இரட்டை நிலைப்பாடு?

மனித உரிமை மீறலை கனடா செய்திருக்கிறது. எனவே மனித உரிமை மீறல் தொடர்பில் பேச கனடாவுக்கு அருகதை இல்லை. சர்வதேச ரீதியில் தடைச் செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் கைப்பொம்மையாகக் கனடா இருப்பதாக வரலாற்றில் பதியப்படும் எனவும் தெரிவித்தார்.

ராஜபக்சக்கள் மீதான தடையின் பின்னணியில் கனேடிய பிரதமர்..?

கனேடிய பிரதமர் அலுவலகத்தின் வற்புறுத்தலின் பேரில் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளின் பெயர்கள் தடைபட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மனித உரிமை மீறல்களில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்ல, அதற்கு தலைமை வகித்தவர்களும் இணைக்கப்பட வேண்டும் என கனேடிய பிரதமர் அலுவலகம் கருதுகின்றது.

போரின் போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்காக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த மற்றும் கோட்டாபய ராஜபக்சவுக்கு கனடா பயணத் தடை விதித்திருந்தது.

இதேவேளை கனடாவில் உள்ள புலம்பெயர் தமிழர்களின் அழுத்தம் காரணமாக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன என உயர்ஸ்தானிகர் ஹர்ஷ நவரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கோரிக்கையை அவர் பின்பற்றவில்லை என்பதனாலேயே இந்த நிலைமைக்கு வழிவகுத்தது என்றும் கூறியுள்ளார்.