யாழ்ப்பாணம் – வன்முறை சம்பவங்கள்

யாழ்ப்பாணம் – வன்முறை சம்பவங்கள்

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த எங்களிடம் ஆளணி இல்லை – பொலிசார் முறைப்பாடு !

யாழ். மாவட்டத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதில் பொலிசாருக்கு ஆளணிப் பற்றாக்குறை காணப்படுவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டம் கடந்த புதன்கிழமை(31) யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்து இருப்பதாக தெரிவித்த பிரதேச செயலர்கள் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த காவல்துறை அதிகாரிகள் பல இடங்களில் காவல்துறை ஆளணிப் பற்றாக்குறை இருப்பதை சுட்டிக்காட்டியதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காவல்துறை ஆளணியை அதிகரிப்பதற்கு தனது தனிப்பட்ட செல்வாக்கை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் எனக்கு கடிதம் மூலம் ஒரு கோரிக்கையை விடுத்தால் தான் அதனை அதிபருடன் கலந்துரையாடி காவல்துறை ஆளணியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

குறித்த கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் காவல்துறை மா அதிபர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள், உதவிப் காவல்துறை அத்தியட்சகர்கள், காவல்துறை நிலைய பொறுப்பதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் பிரதேச செயலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.