யாழ்ப்பாணம் வாள்வெட்டு

யாழ்ப்பாணம் வாள்வெட்டு

வாள்வெட்டு குழுவினரை பாதுகாத்து பிணை எடுக்கும் சர்ச்சை பெண் சட்டத்தரணி சர்மினி

வாள்வெட்டு குழுவினரை பாதுகாத்து பிணை எடுக்கும் சர்ச்சை பெண் சட்டத்தரணி சர்மினி

 

கொள்ளையை தடுக்க வந்த நபரின் கைவிரல் வெட்டிய சந்தேகத்திற்குரிய பிரதான வாள்வெட்டுக்காரர்கள் மூவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 3ஆம் திகதி கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற வாள் வெட்டில் நபரொருவரின் கைவிரல் வெட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, காயமடைந்த நபர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு கைவிரல் பொருத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் கைதான சந்தேக நபர்களிடமிருந்து வாள்கள் மற்றும் ஹெரோயின் போதைபொருள் கைபற்றப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை இந்த வாள்வெட்டு குழுவின் தலைவனாக செயற்படும் நபரை சட்டத்தரணி சர்மினி பொலிஸில் தன் சொந்த வாகனத்தில் கொண்டு வந்து பாரப்படுத்தியுள்ளார்.

சம்பந்தப்பட்ட வாள் வெட்டுக்குழுவின் வழக்குகளுக்கு சட்டத்தரணி சர்மினியே ஆஜராவதாகவும் தெரியவந்துள்ளது. வழமையாகவே சட்டத்தரணி சர்மினி பாலியல் குற்றவாளிகளுக்கும் , சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் சமூகவிரோதிகளுக்குமே வழக்குகள் பேசுவதாக கூறப்படுகிறது.

இஞ்தேவேளை யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளிலும் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தம்முடைய பண பலத்தை பயன்படுத்தி பிணையில் வெளியே வருவது வாடிக்கையாகி விட்டதாக மக்கள் பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இவ்வாறு பிணையில் வெளியே வருபவர்கள் மீண்டும் தமது வாள்வெட்டு தொடங்கி போதைப்பொருள் கடத்தல் வரையான சமூக சீரழிவு செயற்பாடுகளிலும் தைரியமாக ஈடுபடுவதை அவதானிக்க முடிகிறது. காப்பாற்ற சட்டத்தரணி சர்மினி மற்றும் விஸ்வலிங்கம் திருக்குமரன் மற்றும் கனகரட்ணம் சுகாஷ் போன்றோர் இருக்கும்வரை சமூக விரோத நடவடிக்கைகள் தொடரும் .

யாழ் – மட்டு வாள் வெட்டுச் சம்பவங்கள் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது !

யாழ் – மட்டு வாள் வெட்டுச் சம்பவங்கள் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது !
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில்  இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞனொருவர் கைவிரல் துண்டாடப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொக்குவில் பகுதியிலுள்ள கடை ஒன்றின் களஞ்சியசாலையில், களஞ்சியசாலை பொறுப்பாளராக குறித்த இளைஞன் வேலை செய்து வந்துள்ளார்.  இந்நிலையில்  மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் வந்த இருவர், களஞ்சியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து  இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.  வாள்வெட்டில் இளைஞனின் கை விரல் துண்டாடப்பட்டுள்ள நிலையில், இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதேவேளை நேற்றைய நாடாளுமன்ற அமர்விலும் வடக்கு கிழக்கில் அதிகரித்துள்ள வாள்வெட்ட பிரச்சினைகள் பாரிய பேசுபொருளாக மாறியிருந்ததது. மட்டக்களப்பில் இடம்பெறும் வாள்வெட்டு குறித்து சபையில் கேள்வியெழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை சபாநாயகர் இடைநிறுத்தி, இது ஒரு ஒழுங்கு பிரச்சினை அல்ல ஆகையால் இது தொடர்பில் சபை ஒத்திவைப்பு மீதான பிரேரணையாக கொண்டு வந்து பேசலாம் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, சாணக்கியனுக்கு இது தொடர்பில் உரையாடுவதற்கு சபாநாயகரால் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்தநிலையைில், குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் “நாடாளுமன்ற உறுப்பினருக்கு முக்கியமான கேள்விகளை கேட்பதற்கு இடமுண்டு, அதேபோன்று நான் கட்சி தலைவராகவும் இருக்கின்றேன். ஆகவே, நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க உங்களுக்கு பொறுப்பு இருக்கின்றது, நீங்கள் காது கொடுத்து கேட்க வேண்டும். அங்கு துண்டு துண்டாக மக்கள் வெட்டப்படுகின்றார்கள். அதை இங்கு கூறாமல் எங்கு சென்று கூற முடியும்?
ஆகவே கிழக்கு மாகாணத்தை முன்னிறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் வழங்குங்கள்” என அவர் தெரிவித்தார்.
இந்த வாக்குவாதத்தில் பாராளுமன்ற உரைகள் சிறிது நேரம் தடைப்பட்டது. அப்போது மற்றுமொரு பா உ எழுந்து, முன்னர் ஒருவர் தான் கத்திக்கொண்டிருப்பார், இப்போது இருவராகி விட்டனர் என்ற தொனியில்
சிங்களத்தில் பா உ அர்ச்சுனாவையும் சாணக்கியனையும் சுட்டிக்காட்டி கருத்துத் தெரிவித்தனர்.
அண்மைக்காலமாக வட்டுக்கோட்டையில் சிலர் சாதிய வெறியர்களாக காடைத்தனங்களிலும் ஈடுபட்டு வருவது பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு உள்ளது. சாதிய வெறியாட்டங்கள், கொலை போன்ற செயற்பாடுகளிலும் குருவி என்கின்ற சாதியக் குழு ஈடுபட்டுள்ளமை பரவலாக அறியப்பட்டுள்ளது. குற்றவாளிகள் சுதந்திரமாக திரிவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் வட்டுக்கோட்டைப் பொலிஸார் இவர்கள் தொடர்பில் நடவடிக்கை எழுக்கவில்லை என்றும் பா உ க்களிடம் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தெற்கில் துப்பாக்கிச்சூடு – யாழில் புலம்பெயர்ந்தவர்களின் பணத்திமிரால் வாள்வெட்டு ! வன்முறைக்கு பஞ்சமில்லை !

“தெற்கில் துப்பாக்கிச்சூடு – யாழில் புலம்பெயர்ந்தவர்களின் பணத்திமிரால் வாள்வெட்டு ! வன்முறைக்கு பஞ்சமில்லை !

 

யாழ். வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் நேற்று மாலை மூவர் மீது மோசமான தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக தனது தந்தை மீதும், சகோதரன் மீதும், சகோதரனின் மகன் மீதும் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

வவுனியா பகுதியில் இருந்து வாகனத்தில் ஆட்களை அழைத்து வந்து வீட்டிற்குள் புகுந்து கம்பி, கற்களால் தாக்குதல் நடாத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாகனத்தில் வருகை தந்த தாக்குதல் கும்பல் வாகனத்திற்குள் வாள்களை மறைத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அடி காயங்களுக்குள்ளான மூவரும் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக மருதங்கேணி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் வாளுடன் பாடசாலை மாணவன் கைது !

யாழில் வாளுடன் பாடசாலை மாணவன் கைது !

யாழ் நகரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 27 வயதான இளைஞனே யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் இருந்து 60 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. யாழில் நீண்டகாலத்தின் பின் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஹெரோயினாக இது கருதப்படுகிறது.

இதேவேளை யாழ்ப்பாணம்  வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் வாள் ஒன்றுடன் 17 வயது பாடசாலை மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இளம் தலைமுறையினரிடையே அடுத்தடுத்து போதைப்பொருள் பாவனை, வாள்வெட்டு கலாச்சாரம் என்பன மிக வேகமாக தலைதூக்கி வருவதுடன் ஒரு அச்சமான ஓர் சூழல் உருவாகி வருகிறது. யாழ்ப்பாண வாள்வெட்டு பிரச்சினைகள் தொடங்கி போதைப்பொருள் பாவனை தொடர்பான வழக்குகள் வரை அனைத்திலும் அதிகமாக இளைஞர்களே கைதாகின்றமை எதிர்கால தலைமுறையினர் குறித்த அச்சத்தை பலரிடமும் ஏற்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

பெண்களுடன் சேட்டை புரிந்த இளைஞர்களை எச்சரித்த சாரதி மீது வாள்வெட்டு – யாழ்ப்பாணத்தில் சம்பவம்!

யாழ் . மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் பெண்களுடன் சேட்டை புரிந்த இளைஞர்களை எச்சரித்த தனியார் பேருந்து சாரதி மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

பேருந்து சாரதியான வினாசித்தம்பி ஜெகதீஸ்வரன் என்பவர் மீதே நேற்றைய தினம் திங்கட்கிழமை வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

 

கொழும்புத்துறை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தில் பயணிகளை ஏற்றி வந்த வேளை மணியந்தோட்டம் பகுதியில் பேருந்தை மறித்து சாரதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

தாக்குதலில் காயமடைந்த சாரதி யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

கடந்த வாரம் யாழ் . மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் 04 பேர் கொண்ட கும்பல் ஒன்று, பேருந்து நிலையத்திற்கு வரும் பெண்களுடன் அநாகரிகமாக நடந்து கொண்டு , தொந்தரவு செய்துள்ளனர்.

 

இதனை அவதனித்த சாரதி, குறித்த இளைஞர்களை கடுமையாக எச்சரித்து , அங்கிருந்து அப்புறப்படுத்தி இருந்தார்.

 

இந்நிலையில் , அன்றைய தினம் பெண்களுடன் அநாகரிகமாக நடந்து கொண்ட இளைஞர்கள் கும்பலை சேர்ந்தவர்கள் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்து, பயணிகள் சேவையில் ஈடுபட்டிருந்த பேருந்தை மறித்து வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

 

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து பணம் பெற்று யாழ்ப்பாணத்தில் வன்முறை செயல் – மூவர் கைது !

வெளிநாட்டில் வசிப்பவர்களிடம் பணங்களைப் பெற்று யாழில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டுவந்த வன்முறை கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள், வீடுகளுக்கு தீ வைப்புச் சம்பவங்கள் தொடர்பில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய மூன்று இளைஞர்களை நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.

 

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 03 மோட்டார் சைக்கிள்கள், இரண்டு வாள்கள் மற்றும் நான்கு பெற்றோல் குண்டுகள் என்பவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

 

யாழ்ப்பாணத்தில் இயங்கிய வன்முறை கும்பலுடன் சேர்ந்து இயங்கிய நபர் ஒருவர் தற்போது இலங்கையில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவில் வசித்து வரும் நிலையில், வெளிநாட்டில் உள்ள நபர்கள் இந்தியாவில் உள்ள நபருக்கு பெருந்தொகை பணத்தினை வழங்கி , யாழ்ப்பாணத்தில் தாக்குதல் சம்பவங்களை முன்னெடுத்து வருகின்றனர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், அவர்களுடன் சேர்ந்து இயங்கிய நபர்களையும் கைதுசெய்வதற்கு தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் நடக்கும் பல குற்றச்செயல்களுக்குப் பின்னால் இராணுவம் கடற்படை, விமானப்படை, பொலிஸார், உளவுப்பிரிவு ஆகியோர் உள்ளனர் – சிறீதரன் குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களுடன் ஈடுபடுகின்றவர்கள், சுதந்திரமாக நடமாடுவதாகவும் அதனை கட்டுப்படுத்தாமல், பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினர் அசமந்த போக்குடன் செயற்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொடிகாமத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

யாழ்ப்பாணம் இந்து கல்லுாரிக்கு அருகில் உள்ள எனது இல்லத்திற்கு முன்பாக 4 மோட்டார் சைக்கிள்களில் இனந்தெரியாத 9 பேர், முகத்தையும் மோட்டார் சைக்கிளின் இலக்கத்தகட்டையும் கறுப்பு துணிகளால் மறைத்தவாறு, வாள்களை சுழற்றிக் கொண்டு செல்வது எனது வீட்டின் கண்காணிப்பு கெமராவின் மூலம் அவதானிக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் நடக்கும் பல குற்றச்செயல்களுக்குப் பின்னால் இராணுவம் கடற்படை, விமானப்படை, பொலிஸார், உளவுப்பிரிவு பின்னணியில் இருப்பது வெளிப்படுத்துகின்றது.

யுத்தகாலத்தில் இராணுவத்தினரும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் மோட்டார் சைக்கிளில் கறுப்பு துணிகளை கட்டியவாறு வந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.

அதே பாணியில், உள்ளூர் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி இராணுவத்தினரோ, கடற்படையினரோ, விமானப்படையினரோ, பொலிஸாராரோ, அல்லது உளவுப்பிரிவினரோ இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பார்களோ என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள் செய்வதாகவும் குழுக்கள் செய்வதாகவும் காட்டிக்கொண்டு அவர்களை கைது செய்யாமலும் நடவடிக்கை எடுக்கமாலும் விட்டு யாழ்ப்பாணத்தை அச்ச சூழலுக்குள் வைத்திருக்க முற்படுகின்றனர்.

யாழ்ப்பாணம் தற்போது மிகப் பயங்கரமான சுழலில் உள்ளது. எனது வீட்டின் முன்பாக ஆயுதங்களுடன் நடமாடியமை தொடர்பாக நாளை மறுதினம் சபாநாயகருக்கும் எழுத்து மூலம் அறிவித்து உரிய தரப்புக்களுக்கும் விரைவில் தெரியப்படுத்துவேன்.

இதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க அரசாங்கம் தயங்கினால் யாழ்ப்பாணம் இன்னமும் மோசமான நிலைக்குச் செல்லும்” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வெடிகுண்டுகளுடன் கைதான வன்முறைக்கும்பலின் முக்கியமான நபருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் !

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்டமை, வாகனங்களுக்கு தீ வைத்தமை, நெல்லியடி பகுதியில் புடவைக்கடை ஒன்றிற்கு பெற்றோல் குண்டு வீசியமை உள்ளிட்ட வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து  சொகுசு கார் , மோட்டார் சைக்கிள்,  2 வாள்கள் மற்றும் உள்ளூர் தயாரிப்பு வெடிகுண்டு என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபரின் வன்முறை கும்பலை சேர்ந்த மேலும் ஐந்து சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நிலையில் , கைது செய்யப்பட்ட நபரை விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ். நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்திய வேளை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

ஐந்து வாள்களுடன் யாழ்ப்பாணத்தில் இளைஞன் கைது !

யாழ்ப்பாணத்தில் வாகன பதிவற்ற மோட்டார் சைக்கிளுடனும் ஐந்து வாள்களுடனும்  ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண நகர் பகுதியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அணியினர் , வீதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற நவாலி பகுதியை சேர்ந்த இளைஞனை சந்தேகத்தில் வழிமறித்து சோதனையிட்டுள்ளனர் .

அதன் போது குறித்த மோட்டார் சைக்கிளுக்கு வாகன பதிவு மேற்கொள்ளப்படாது , பதிவின்றி மோட்டார் சைக்கிள் காணப்பட்டமையால் , இளைஞனை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் இளைஞனின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து வாள்களையும் பொலிஸார் கைப்பற்றினர்.

இளைஞனை தொடர்ந்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் .

 

23 வயது இளைஞன் கொடூரமான முறையில் கொலை – யாழ்ப்பாணத்தில் சம்பவம்!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெடுந்தீவு 07 வட்டாரத்தைச் சமக்கீன் தேவராஜ் அருள்ராஜ் என்ற 23 இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்தாகப் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

முன்பகை காரணமாக நேற்றைய தினம் இரவு மது போதையில் சிலருடன் வாய்த்தர்க்கம் இடம் பெற்றதாகவும் அதன் பின்னர் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக நெடுந்தீவு வைத்தியசாலையில், ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.