யாழ் போதனா வைத்தியசாலை

யாழ் போதனா வைத்தியசாலை

‘கன்னி கழியாத என்டொஸ்கோபி’ – டொக்டர் த சத்தியமூர்த்தி “அம்பியா? அந்நியனா?” தொடரும் குற்றச்சாட்டுகள்: “நான் உண்மைகளைச் சொன்னால் கொல்லப்படலாம்” யாழ் டொக்டர் வி நாகநாதன்

யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த சத்தியமூர்த்தி தன்மீது வீண்பழிகள் சுமத்தியதாக அவ்வைத்தியசாலையில்; தற்போதும் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றும் டொக்டர் வி நாகநாதன் யூலை 25 அன்று குற்றம்சாட்டியுள்ளார். பணிப்பாளர் டொக்டர் சத்தியமூர்த்தி இவ்வாறு பலர் மீதும் பாய்ந்துள்ளதாகவும் அவர் தனது குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளார். அதிகாரத்தில் உள்ளவர் கையில் உள்ள முட்டை கூட அம்மிக்கல்லையும் உடைக்கும் எனத் தெரிவிக்கின்றார், மிகுந்த மனவுறுதி கொண்ட டொக்டர் வி நாகநாதன். பணிப்பாளர் டொக்டர் சத்தியமூர்த்தியால் ஓகஸ்ட் 2017இல் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில், டொக்டர் வி நாகநாதன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று குற்றம்சுமத்தி அவரை தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்ததோடு அவருக்கு வழங்கவேண்டிய சம்பளத்தையும் இடைநிறுத்தி வைத்;திருந்தார். பணிப்பாளர் டொக்டர் சத்தியமூர்த்தி அதற்குப் பின் 2023 இல் இன்னுமொரு குற்றச்சாட்டையும் டொக்டர் வி நாகநாதன் மீது எழுப்பியிருந்தார். டொக்டர் வி நாகநாதன், தனது முகநூலில் தங்களுடைய ஸ்தாபனப் பணிக்கோவைக்கு மாறாக தகவல்களை வெளியிடுவதாக குற்றம்சாட்டி அக்கடிதத்தை சுகாதார அமைச்சுக்கு அனுப்பி இருந்தார்.

யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டொக்டர் சத்தியமூர்த்தி, டொக்டர் வி நாகநாதனுக்கு எதிராக பனிப்போர் தொடுக்க என்ன காரணம்? இதற்குப் பின்னாலும் ஒரு மோசடி அம்பலப்படுத்தப்பட்டது காரணமாக இருந்துள்ளது. டொக்டர் த சத்தியமூர்த்தி, டொக்டர் வி நாகநாதனை தற்காலிகமாக இடைநிறுத்தி அவரது சம்பளமும் நிறுத்தப்பட்ட ஓகஸ்ட் 2017க்கு ஆறு மாதங்கள் முன்பாக பெப்ரவரி 2017இல் “கைபடாத என்டஸ்கோபி இயந்திரம்: கன்னி கழிவது எப்போது” என்ற யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊழல் மோசடியை அம்பலப்படுத்தும் அகரன் என்பவர் எழுதிய கட்டுரை புதுவிதி என்ற பத்திரிகையில் வெளியாகி இருந்தது. அக்காலகட்டத்தில் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக இருந்தவர் இன்றும் அதே பதவியில் இருப்பவர் டொக்டர் த சத்தியமூர்த்தி. இந்த ஊழல் குற்றச்சாட்டுக் கட்டுரை பணிப்பாளர் டொக்டர் த சத்தியமூர்த்தியை வெகுவாகப் பாதித்திருக்கும் என்பது பொதுப்புத்திக்கு தெரிந்த விடயம். “இக்கட்டுரையை அகரன் என்ற பெயரில் எழுதியது புலனாய்வு ஊடகவியலிலும் தேர்ச்சி பெற்ற டொக்டர் வி நாகநாதன் அல்லது இவர் இக்கட்டுரைக்கான தகவலை அகரன் என்ற புனைப்பெயரில் எழுதியவருக்கு வழங்கியிருக்கு வேண்டும்” என்ற எண்ணப்பாடு அங்கு இருந்து என்கிறார் டொக்டர் வி நாகநாதன். ஆனால் அவர் அதனைத் தான் எழுதியதாகவோ அல்லது அதற்கான தகவல்களை வழங்கியதாகவோ குறிப்பிட மறுத்துவிட்டார். இந்தப் பின்னணியிலேயே டொக்டர் விநாகநாதன் சக மருத்துவர்களோடும் சக மருத்துவப் பணியாளர்களோடும் தகாதமுறையில் நடப்பதாகவும் இவருக்கு மனநோய் இருப்பதாகவும் குற்றம்சாட்டி பணிப்பாளர் த சத்தியமூர்த்தி இவரைத் தற்காலிகமாக வேலையிலிருந்து நிறுத்தியதுடன் அவருடைய சம்பளத்தையும் எவ்வித மனிதாபிமானமும் காட்டாமல் நிறுத்தியுள்ளார்.

டொக்டர் த சத்தியமூர்த்தியால் வைக்கப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளையும் நீண்ட போராட்டத்தினூடாக வெற்றிகொண்ட டொக்டர் வி நாகநாதன் மருத்துவத்துறையில் யாழ் வைத்தியசாலையில் கட்டமைப்பு ரீதியான (பழிவாங்கல்கள்) செயல்கள் இடம்பெறுவதாகக் குற்றம்சாட்டினார். இன்றும் இக்குற்றச்சாட்டுக்களை வைத்துவிட்டு அவர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு பணிக்குத் திரும்புகின்றார். டொக்டர் த சத்தியமூர்த்தியின் நிர்வாகத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் – பணியில் உள்ளவர்கள் ஒரு நச்சுச் சூழலிலேயே பணியாற்றுவதாக தெரிகின்றது. தானோ சத்தியமூர்த்தியோ ‘ஒரு குட் மோர்னிங்’ கூடப் பரிமாறிக்கொண்ட ஞாபகம் தனக்கில்லை என்கிறார் டொக்டர் வி நாகநாதன்.

பணிப்பாளர் டொக்டர் த சத்தியமூர்த்தி குற்றச்சாட்டுகளை டொக்டர் வி நாகநாதன் மீது மட்டும் எழுப்பவில்லை. இவ்வாண்டு ஏப்ரலில் டொக்டர் என் ஜெயகுமரன் தொழில்முறை தவறி தன்னால் சிகிச்சை அளிக்கப்பட்ட புற்றுநோய் நோயாளிகளை யாழ் வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதாக டொக்டர் த சத்தியமூர்த்தி குற்றம்சாட்டி கடிதம் அனுப்பி இருந்தார். பொது அறிவின் அடிப்படையில் மகரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமான யாழ் நோயாளிகள் தொடர்ந்தும் மகரகம சென்று செக்அப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நோயாளிகள் அலைக்கழியாமல் அந்தச் செக்அப்பை யாழிலேயே செய்ய முடியும். ஆனால் அதனைச் செய்யாமல் டொக்டர் ஜெயக்குமரன் மீது குற்றம்சுமத்தி த சத்தியமூர்த்தி கடிதம் எழுதியது ஏன்? என்ற கேள்வி அண்மையில் டான் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் கேட்கப்படவில்லை. த சத்தியமூர்த்தியும் அதற்கான விளக்கத்தை அளிக்கவில்லை. “எனது கடமையைச் செய்கிறேன். குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பது எனது பொறுப்பல்ல என்ற வகையிலேயே அப்பதில் அமைந்தது.

டொக்டர் அர்ச்சுனா எய்த அம்பில் சிக்கிய டொக்டர் கேதீஸ்வரன், டொக்டர் இந்திரகுமார், டொக்டர் மயூரன், டொக்டர் பிரணவன் வரிசையில் டொக்டர் த சத்தியமூர்த்தி தொடர்ந்தும் பலரினால் குற்றம்சாட்டப்பட்டு வருகின்றார். முள்ளிவாய்க்கால் முடிவுவரை மருத்துவப் பணியில் ஈடுபட்டு பல உயிர்களைக் காத்தவர் டொக்டர் த சத்தியமூர்த்தி. இவர் மனித உரிமைக் கவுன்சிலில் அரசுக்கு சாதகமாக சாட்சியமளித்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அதனை யாரும் ஒரு தவறாகக் கருதவில்லை. தொடர்ந்தும் அவர் மக்களுக்கு சேவை வழங்க வந்திருப்பதை பலரும் வரவேற்றனர். அதன் காரணமாக இன்னும் பலருக்கும் டொக்டர் த சத்தியமூர்த்தி மீது ஒரு மென்போக்கு உள்ளது.

டொக்டர் என் ஜெயக்குமரன் யாழ் போதனா வைத்தியசாலையில், இடம்பெற்ற ஊழலை அம்பலப்படுத்தியதற்காகவே அவர் குடும்பத்தின் மீது கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டு, குடும்பத்துடனேயே யாழில் இருந்து உயிருக்கு அஞ்சி ஓட நிர்ப்பந்திக்கப்பட்டார், இச்சம்பவம் டொக்டர் பவானி பணிப்பாளராக இருந்த போது அவரின் பின்னணியில் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. 2012 இல் இடம்பெற்ற அச்சம்பவத்திற்கும் டொக்டர் பவானிக்குப் பின் 2015இல் பணிப்பாளராக பொறுப்பேற்ற டொக்டர் த சத்தியமூர்த்திக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. டொக்டர் ஜெயகுமரனுக்கும், டொக்டர் சத்தியமூர்த்திக்கும் எவ்வித முன் விரோதமும் இல்லை. அப்படியிருந்தும் டொக்டர் த சத்தியமூர்த்தி எதற்காக டொக்டர் என் ஜெயகுமரனைக் குற்றம்சாட்டி அக்கடிதத்தை ஏப்ரல் 2024இல் எழுதினார். டொக்டர் த சத்தியமூர்த்தி அப்பாவி ‘அம்பியா ?’மாபியா கும்பலைத் திருப்திப்படுத்த அந்த முறையற்ற கடிதம் அனுப்பப்பட்டதா? இல்லை அவர் ‘அந்நியனா’ அவரும் மாபியா கும்பலின் பிரதிநிதியா?
டொக்டர் த சத்தியமூர்த்தி யாழ் சைவ வேளாள மேட்டுக்குடியைச் சேர்ந்தவரல்ல. யாழ் போதனா வைத்தியசாலைக்கு இவர் பணிப்பாளராக நியமிக்கப்பட்டதில் யாழ் சைவ வேளாள மேட்டுக்குடிக்கு எப்போதும் ஒரு புகைச்சல் இருந்துள்ளது. இன்றும் இப்புகைச்சல் இருக்கின்றது. கிளிநொச்சியில் வாழ்ந்த மலையகப் பின்புலத்தைக் கொண்ட வறுமைப்பட்ட குடும்பத்திலிருந்து மேலெழுந்தவர் டொக்டர் த சத்தியமூர்த்தி. அவர் பணிப்பாளராகப் பொறுப்பேற்றதன் பின் யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு சாதகமான பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகள் அனுமதிக்கப்பட்டு வந்த குற்றச்சாட்டுகளும் உள்ளது. அவ்வாறான பல குற்றச்சாட்டுகளில் கை படாத என்டோஸ்கோபி இயந்திரம், கன்னி கழியாது சில ஆண்டுகள் அங்கு இருந்ததும் ஒன்று.

யாழில் பரீட்சை எடுத்து மருத்துவம் கற்கும் யாழ் மருத்துவ மாணவர்கள், ஏனைய தமிழ் மாவட்டங்களில் இருந்து மருத்துவம் கற்க வருகின்ற மாணவர்களை கிஞ்சித்தும் மதிப்பதில்லை எனத் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தில் மருத்துவத்துறைக்குத் தெரிவு செய்யப்பட்ட பெயர் குறிப்பிட விரும்பாத டொக்டர். ஏனைய தமிழ் மாவட்டங்களில் மருத்துவத்துறைக்கான வெட்டுப்புள்ளி யாழ் மாவட்டத்தைவிட குறைவாக இருப்பதால் அவர்கள் பகிடிவதை என்ற பெயரில் பல்கலைக்கழகம் புகுந்தகாலம் முதல் நையப்புடைக்கப்பட்டு இரண்டாம் தரமானவர்களாகவே கணிக்கப்படுகின்றனர். அவர்கள் மருத்துவர்களாகி பதவிகளைப் பொறுப்பேற்றாலும் இந்தப் பேதமை அவர்களின் ஆழ்மனங்களில் இருக்கின்றது என்றும் அந்த வன்னி டொக்டர் தெரிவிக்கின்றார். அப்படி இருக்கையில் கிளிநொச்சியிலிருந்து மலையகப் பின்னணியோடு மருத்துவரான த சத்தியமூர்த்தி தன்னுடைய பதவியைத் தக்க வைப்பதென்பதே மிகுந்த நெருக்கடியானது.

நிலைமை இப்படி இருக்கையில், டொக்டர் த சத்தியமூர்த்தி அங்கிருந்து யாழ் மருத்துவ மாபியாக்களுக்கு எதிராக குறிப்பிடத்தக்க நடவடிக்கை எதனையும் எடுத்திருக்க முடியுமா? என்ற கேள்வி தவிர்க்க முடியாதது. பல்வேறு இன்னல்கள் மத்தியிலும் தான் அடைந்த அந்த முக்கிய பதவியை தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலும் யாராக இருந்தாலும் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. அதனால் டொக்டர் த சத்தியமூர்தி அங்கு வெளித்தெரியாத மருத்துவ மாபியாக்களின் சூழ்நிலைக் கைதியாக ஒரு ‘அம்பி’யாக இருக்க வாய்ப்புள்ளது. இல்லையேல் டொக்டர் த சத்தியமூர்த்தியும் மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை கொண்டு அதற்கு அடிமைப்பட்டு அவரும் ஒரு ‘அந்நியனாக’ மருத்துவ மாபியாக்களில் ஒருவராக மாறியிருக்கலாம். டான் தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டது போல் “நான் எனது கடமையைச் செய்கிறேன். வரும் குற்றச்சாட்டுகள் பற்றி அக்கறையில்லை” என்று தொடர்ந்தும் தத்துவம் பேச முடியாது. வடக்கில் உள்ள பதினைந்து லட்சம் வரையான மக்களின் மருத்துவம் உயிர்வாழ்வு யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக த சத்தியமூர்த்தியின் முடிவுகளில் உள்ளது. அவர் வடக்கு தமிழ் மக்களுக்கு பொறுப்புக்கூறக் கடமைப்பட்டுள்ளார். 2015 முதல் அவர் சம்பாதித்த அசையும் அசையாச் சொத்துக்களை வெளிப்படுத்தி யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த 2015 முதல் என்ன நடந்தது என்று சத்தியம் பேச வெண்டும்.

கடற்தொழில் அமைச்சராக இருந்தாலும், வடக்குக்கு பொறுப்பான அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா செயற்பட்டு வருகின்றார். தமிழ் தேசியம் பேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் புறம்தள்ளப்பட்டு அமைச்சராக இருந்தாலும் மக்களால் அணுகக் கூடிய ஒருவராக டக்ளஸ் தேவானந்த பார்க்கப்படுகின்றார். யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்திய அபிவிருத்திச் சங்கமும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதிகளின் கைகளிலேயே உள்ளது. இவர்களோடு நெருங்கிய ஒருவர் தேசம்நெற்க்கு இன்று தெரிவிக்கையில், “டொக்டர் த சத்தியமூர்த்தியின் கைகளும் சுத்தமான கைகள் அல்ல. ஆனால் அங்கு பணிப்பாளர் பொறுப்பை ஏற்பதற்கு அவரிலும் பார்க்க மோசமானவர்களே உள்ளனர்” எனத் தெரிவித்தார். தாங்கள் டொக்டர் த சத்தியமூரத்தியை பணிப்பாளர் பதவியிலிருந்து இறக்குவதற்கு கோரியதாக குறிப்பிட்ட சமூக செயற்பாட்டாளர், அதனால் தான் தாங்கள் அவரை மகாணப் பணிப்பாளர் பதவியிலிருந்து நீக்கியதாகவும் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

டொக்டர் சத்தியமூர்த்தியின் தொழில்முறைக்கு முரணாண செயற்பாடுகள், தனிப்பட்ட பழிவாங்கள்கள் தொடர்பில் GMOA – ஜிஎம்ஓஏ டொக்டர் மதிவாணன் 30 வரையான பக்கங்களைக் கொண்ட அறிக்கையை தயாரித்து சுகாதார அமைச்சுக்கு வழங்கியுள்ளார். இந்த விசாரணை தொடர்பிலேயே வெளிநாட்டில் கற்கைகளுக்காகச் சென்றிருந்த த சத்தியமூர்த்தி கற்கையை இடைநிறுத்தி அவசர அவசரமாக நாடு திரும்பினார். டொக்டர் அர்ச்சுனா பதவியை பொறுப்பேற்க முன்னமே அவரை யாழில் இருந்து விரட்ட விடாமுயற்சி எடுத்த ஜிஎம்ஓஏ, இறுதியில் அர்ச்சுனாவை வெளியேற்றும்வரை தென்மராட்சி மக்களின் உயிரைப் பணயம் வைத்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டது. ஆனால் டொக்டர் த சத்தியமூர்த்தி விடயத்தில் அவரைக் குற்றம்சாட்டுகின்ற அந்த அறிக்கை வெளியே வராமலேயே மூடி மறைக்கப்பட்டது. இந்த அறிக்கை மருத்துவ மாபியாக்கள் டொக்டர் த சத்தியமூர்த்தியை சூழ்நிலைக் கைதியாக்கும் ஆயதமா? என்ற கேள்வி எழுப்பப்படாமலிருக்க வாய்ப்பில்லை.

கபிடல் தொலைக்காட்சியின் அதிகாரம் நிகழ்ச்சியில் யூலை 25 டொக்டர் வி நாகநாதன், நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஷியா உல் ஹஸனுடன் மேற்கொண்ட உரையாடல் மருத்துவத்துறையை குறிப்பாக மருத்துவ மாபியாக்களின் பழிவாங்கல் செயற்பாடுகளை அம்பலப்படுத்தி உள்ளது. டொக்டர் வி நாகநாதன் மேலும் தெரிவிக்கையில் சிறுநீரக மாபியாக்கள், கருவள மாபியாக்கள் எனப் பல்வேறு ஊழல்கள் பற்றியும் பேசினார். மேலதிக தகவல்களை வெளியிடுவது தனது உயிருக்கும் ஆபத்தாக முடியும் என்கிறார் டொக்டர் வி நாகநாதன். வரும்நாட்கள் அவருடைய பணிக்கும் உயிருக்கும் சவாலாக அமையுமா? என்பதை காலம்குறித்துக்கொள்ளும்.

தமிழ் தேசியம் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள்: த சித்தார்த்தன், எஸ் சிறிதரன், எம் சுமந்திரன், செ அடைக்கலநாதன், செ கஜேந்திரன், இவர்களின் அடிப்பொடிகள் தேசியம் பேசாதவர்கள்: ரா அங்கஜன் அவர் அடிப்பொடிகள், இவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு ரமேஸ் பத்திரண சென்று மக்களின் குறைகளை விசாரிப்பதை விரும்பவில்லை. அதற்குக் காரணம் டொக்டர் த சத்தியமூர்த்தி, டொக்டர் கேதீஸ்வரன், டொக்டர் இந்திரகுமார், டொக்டர் மயூரன், டொக்டர் ராஜீவ் போன்றவர்கள் இவர்களுக்குக் கொடுத்த அழுத்தம். இவர்களோடு மலையகப் பெண்களுக்கு குளியல் அறையை மறுத்து அவர்கள் வெளியே நீராடுவதை சிசிரிவியில் பதிவுசெய்து அச்சிறுமிகளை துன்புறுத்திய ஆறு திருமுருகன் நெருங்கிய நட்பிலும் உள்ளார். அண்மையில் அபயம் என்ற அறக்கட்டளை மேலுமொரு ஸ்கானிங் மெசினை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அன்பளிப்புச் செய்திருந்தது.

மேற்குறிப்பிட்டவர்களுடைய பிறந்த தினங்களில் பாராட்டு நிகழ்வுகளில் ஆளுக்கு ஆளாள் துதிபாடும் ஆறுதிருமுருகன் தனது பெயருக்கு வெள்ளையடிக்க அந்த ஸ்கானிங் மெசின் வழங்கப்பட்ட புகைப்படத்திலும் தன்னைச் செருகிக் கொண்டார். ஆனால் அந்த மெசினை வாங்கிக்கொடுத் கொடைவள்ளல் அங்கில்லை. இந்த ஸ்கானிங் மெசினில் யாருடைய கையாவதுபடுமா? அல்லது அதுவும் என்டோஸ்கோபி மற்றும் சாவகச்சேரியில் உள்ள மெசி;ன்கள் போல் மூடிக்கட்டி வைக்கப்படுமா என்பதை காலம் தெளிவாகச் சொல்லும். வழித்தேங்காயை தெருப்பிள்ளையாருக்கு உடைத்துவிட்டு அதனை பொறுக்கிக்கொண்டு சென்று விற்கும் மாபியாக்கள் எல்லாம் ஓரணியில் திரள்கின்றனர். இவர்களுக்கு வக்காலத்து வாங்க கள்ள உறுதி முடிப்பதை கண்டுகொள்ள வேண்டாம் என்று கேட்ட குமாரவடிவேல் குருபரன் தலைமையிலான அப்புக்காத்துக்கள் பைலும் கையுமாகச் சுற்றுகிறார்கள். தமிழ் தேசியத்தை இனி கடவுளாலும் காப்பாற்ற முடியுமா?

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதன் மூலம் வடக்கில் சிறந்த சுகாதார கட்டமைப்பை உறுதிப்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி கூறினார்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கான மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டடத்தை இன்று (24) திறந்துவைத்ததை தொடர்ந்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில்  பிரசவித்த குழந்தையை கைவிட்டு சென்ற சிறுமி அடையாளம் கண்ட பொலிஸார் – 25 வயது இளைஞன் கைது !

யாழ்.போதனா வைத்தியசாலையில்  பிரசவித்த குழந்தையை கைவிட்டு சென்ற 15 வயதுடைய சிறுமி நேற்று செவ்வாய்க்கிழமை (14)  பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த வாரம் 15 வயதான பாடசாலை மாணவி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தாயரும் குறித்து சிறுமியுடன் உதவிக்கு நின்றுள்ளார்.

சிறுமிக்கு குழந்தை பிறந்ததும் மறுநாள், தாயும் சிறுமியும் குழந்தையை வைத்தியசாலையில் கைவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சிறுமி நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் என கண்டறிந்து , அது தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் , குழந்தையை பிரசவித்த சிறுமியையும் அவரது தாயாரையும் கண்டறிந்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் , மாணவியை வன்புணர்வுக்குட்படுத்தி, கர்ப்பமாக்கிய மல்லாவி பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞனை கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களால் கவனயீர்ப்புப் போராட்டம் !

யாழ்.மாவட்டத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகள் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களால் இன்று போதனா வைத்தியசாக்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் புத்திஜீவிகள் வெளியேறுவதை தடுப்பதிலும், அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு உள்ள தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதிலும், தரமான மருந்துகள் அரச வைத்தியசாலைகளில் இருப்பதை உறுதிப்படுத்துவதிலும் அரசாங்கம் காட்டும் மெத்தனப் போக்கைக் கண்டித்தே இப்போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா – ஒருவர் பலி !

கொரோன தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் புத்தூர் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான 5 பேருக்கு யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் ஒட்சிசன் வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு காய்ச்சலுக்கு சிகிச்சைப்பெறச் சென்ற ஒருவருக்கு கொவிட் தொற்றுக்குரிய அறிகுறி காணப்பட்டதையடுத்து அவருக்குச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக விடுதிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு கொவிட் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 3 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அனைவரும் தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையின் மாடியிலிருந்து கீழே வீசப்பட்ட 3 மாதம் நிரம்பிய கருவின் சடலம் !

யாழ்.போதனா வைத்தியசாலையின் 22ஆம் இலக்க மேல் மாடி விடுதியிலிருந்து கீழே வீசப்பட்ட
3 மாதம் நிரம்பிய கருவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நீர்க்குழாய் ஒன்று உடைந்த நிலையில் அதன் ஊடாக சிசுவின் சடலம் கீழே விழுந்துள்ளது.
சட்டவிரோதமாக கருத்தரித்த யாரோ ஒருவர் இந்தக் கருவை பிரசவித்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற வாள்வெட்டு கும்பல் – நித்திரைக்கு சென்ற பொலிஸார் !

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற வன்முறை கும்பல் போதனா வைத்தியசாலை காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதுடன், பொருட்களை வாளால் வெட்டி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடா்பாக மேலும் தொிய வருவதாவது.

யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத அறை பக்கம் உள்ள நுழைவாயிலுக்கு அருகில் பட்டா வாகனத்தில் வந்த சிலா் கதவால் ஏறி குதித்து வைத்தியசாலைக்குள் நுழைய முற்சித்துள்ளனா்.

இதனை அவதானித்த வைத்தியசாலை காவலாளி அவா்களை தடுக்க முயன்ற போது காவலாளி மீது தாக்குதல் நடத்த முயன்றதுடன், அவா்கள் வந்த பட்டா வாகனத்திலிருந்து வாளை எடுத்து காவலாளியை வெட்ட முயற்சித்ததுள்ளனா்.

இதனையடுத்து சுதாகாித்துக் கொண்ட காவலாளி அவா்களை தடுக்க முயன்ற நிலையில், அங்கிருந்த கதிரை, மேசை போன்றவற்றை வாளால் வெட்டி சேதப்படுத்திய வன்முறை கும்பல் பின்னா் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இந்த சம்பவம் தொடா்பாக பொலிஸாா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா்.

இது ஒரு புறம் இருக்க வடக்கு மாகாணத்தின் திரும்பும் திசையெல்லாம் ராணுவத்தினர் – பொலிசாரும் அதிகமாக உள்ளனர். அதே நேரத்தில் ஒவ்வொரு சந்திக்கு சந்தி போக்குவரத்து போலிசாரும்  கடமையில் தான் உள்ளனர். இவர்களுக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படை என்ற பெயரிலும் ராணுவத்தினர் உலாவி கொண்டிருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் தெரியாத வகையில் இந்த வாள்வெட்டு குழு இயங்கிக் கொண்டிருக்கின்றதா..? திரும்பும் திசையெல்லாம் பாதுகாப்பு பிரிவு என்ற பெயரில் ராணுவத்தினரும் – பொலிசாரும்  இருக்கின்றனர். இப்படி இருந்தும் கூட வடக்கின் பல பகுதிகளிலும் குறிப்பாக முக்கியமான நகர் பகுதிகளில் கூட வாள்வெட்டுச்சசம்பவங்கள் நடப்பதன் பின்னணியின் பாதுகாப்பில் உள்ள பொலிசார் மற்றும் இராணுவத்தினரின் அசமந்த மற்றும் கண்மூடித்தனமான போக்கும் ஒரு காரணம் எனலாம்.

“யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவு விடயம் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை.”- த.சத்தியமூர்த்தி

யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவு விடயம் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

யாழ் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் பாதுகாப்பான முறையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உள்ள எரியூட்டியில் எரிக்கப்பட்டது. இதே நேரம் நாட்டில் ஏற்பட்ட கொரோனா சூழ்நிலை காரணமாக கொரோனா நோயாளர்கள் பயன்படுத்தும் அனைத்து உடைமைகளும் எரிக்க வேண்டிய நிலை காணப்பட்டது. இதனால் அதிகளவில் மருத்துவக் கழிவுகள் எரியூட்டப்பட்டிருந்த நிலையில் எரியூட்டி இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.

தற்போது, நாம் வைத்தியசாலைக்கு என தனியான ஒரு எரியூட்டி இயந்திரத்தினை பெற்று வைத்தியசாலைக்கு அண்மையில் அதனைப் பொருத்தி அதனை பயன்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு யாழ்ப்பாணமாநகர சபையுடன் கலந்துரையாடி கோம்பையன் மடல் பகுதியில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அமைத்து அதனை செயற்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம்.

இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்னர் ஆளுநரின் செயலாளரிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் கிடைத்துள்ளது. கோம்பையன் மடல் பகுதியானது எரியூட்டி அமைப்பதற்கு பொருத்தமான இடம் இல்லை எனவும் மாற்று இடம் ஒன்றினை தெரிவு செய்யுமாறு கோரப்பட்டிருந்தது.

வடக்கு மாகாண ஆளுநருடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி அதற்கான தீர்வினை முன்வைப்போம். குறிப்பாக எரியூட்டி நிலையத்தினை அமைத்து அதனை செயற்படுத்துவதற்கும் ஒரு குறிப்பிட்ட அளவு நிதி தேவைப்படுவதோடு, மருத்துவ கழிவுகளை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு வைத்தியசாலைகளில் தேங்க விடாது தனியார் நிறுவனங்களிடம் கொடுத்து எரிப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் இந்த மருத்துவ கழிவுகள் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக வெற்றிகரமான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை !

யாழ்.போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக வெற்றிகரமான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சிறுமிக்கு அவரது தாயார் வழங்கிய சிறுநீரகம் பொருத்தப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் பி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சத்திரசிகிச்சை நிபுணர் தம்பிலி தவசேந்தன் தலைமையிலான மருத்துவ குழுவினர் வெற்றிகரமான சத்திரசிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.

சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தனியார் மருத்துவ பீடங்களை வடக்கில் உருவாக்க வேண்டும் – மருத்துவர் சி.யமுனாநந்தா

வடக்கில் தனியார் மருத்துவ பீடங்களை உருவாக்குவதே வடக்கில் நிலவும் வைத்தியர்கள் பற்றாக்குறையை நிவர்த்திசெய்வதற்கான தீர்வாக அமையும் என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்தார் வடக்கில் காணப்படுகின்ற வைத்தியர்கள் பற்றாக்குறை நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

வடபகுதியில் வைத்தியர்கள் பற்றாக்குறை இருப்பதாக அண்மைக்காலங்களில் பொதுமக்களின் பங்களிப்புடன் ஆர்ப்பாட்டங்கள் முல்லைத்தீவு மாவட்டத்திலே நடாத்தப்பட்டிருக்கின்றது. குறிப்பாக, யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து வைத்தியர்கள் அங்கு கடமைக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.  ஆனால் யாழ் போதனா வைத்தியசாலையில் சுமார் 80க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் கடமையாற்றுகின்றார்கள். குழந்தை மருத்துவம் உட்பட சிறு குழந்தைகளுக்கு உரிய சிறப்பு மருத்துவர்கள், இதய சிகிச்சைக்குரிய மருத்துவர்கள், சிறுநீரக சிகிச்சை நிபுணர்கள் கடமையாற்றுகிறார்கள் தற்போது மருத்துவத்துறை நன்கு விருத்தியடைந்துள்ளது

ஒவ்வொரு மருத்துவ நிபுணருக்கும் குறைந்தது மூன்று மருத்துவர்கள் பணியாற்றினால் மாத்திரமே அந்த பிரிவினை சிறப்பாக செயற்படுத்த முடியும் யாழ் போதனா வைத்தியசாலையானது மிகவும் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகின்றது. தற்போதுள்ள பணிப்பாளரின் அயராத முயற்சியின் காரணமாக அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து
வருகின்றது .

இதனால், மருத்துவ படிப்பு மட்டுமல்ல மருத்துவபடிப்பின் பின் பட்டப்படிப்பு அதேபோல தாதிய பயிற்சி போன்ற பல்வேறு துறைகளில் யாழ் போதனா வைத்தியசாலை விருத்தியடைந்து வருகின்றது. யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து வைத்தியர்களை வேறு வைத்தியசாலைக்கு மாற்றும் போது சில சேவைகள் இடைநிறுத்த படக் கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது. இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டுமேயானால் புதிதாக பல மருத்துவர்களை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. குறிப்பாக, யாழ் மாவட்டத்தில் தனியார் மருத்துவ பீடம் ஒன்றை உருவாக்கும் பட்சத்தில் இந்த குறைபாட்டை நீக்கலாம்.

ஏனென்றால், இன்று மருத்துவம் உலகளாவிய ரீதியில் அதிகளவில் விருத்தியடைந்து காணப்படுகின்றது ஒவ்வொரு துறையிலும் பல மருத்துவர்கள் உள்ளார்கள் அவர்களின் கீழ் பணி புரிவதற்கும் பல மருத்துவர்கள் தேவை. அதே போல் மருத்துவ நிபுணர்கள் இளைப்பாறும் போது புதிய மருத்துவ நிபுணர்கள் உருவாக்கப்பட வேண்டும். எனவே எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க போராட்டங்களை கைவிட்டு புதிதாக மருத்துவ பீடங்களை உருவாக்குவதற்குரிய முயற்சியில் ஈடுபடவேண்டும் அரசாங்கத்திடம் போதியளவு பணம் இல்லாத படியினால் தனியார் மருத்துவ பீடங்களை உருவாக்குவதே இந்த காலகட்டத்தில் தேவையாக உள்ளது என்றார்.