விஜயதாச ராஜபக்ச

விஜயதாச ராஜபக்ச

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் அரகலயவில் ஈடுபட்டவர்களை இலக்குவைத்து உருவாக்கப்படவில்லை – நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச

“புனர்வாழ்வு பணியக சட்டமூலம் தொடர்பில் கரிசனை உள்ள எவரும்  இது குறித்து கலந்துரையாட முன்வரலாம்.” என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

இந்த சட்டமூலத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் அரகலயவில் ஈடுபட்டவர்களை இலக்குவைத்து அவர்களை தண்டிப்பதற்கு அரசாங்கம் முயல்கின்றது என சிலர் கருத்துவெளியிட்டுள்ளனர். எனினும் அவ்வாறான நோக்கம் எதுவுமில்லை. புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தை அரகலயவில் ஈடுபட்டவர்களை இலக்குவைத்து உருவாக்கவில்லை.

யுத்தத்திற்கு பிந்தைய காலகட்டத்தில் நபர்களை புனர்வாழ்விற்கு உட்படுத்துவதற்கான  கட்டமைப்பு எதுவும் இருக்கவில்லை. இதன் காரணமாக நபர்களை புனர்வாழ்விற்கு உட்படுத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கு அரசாங்கம் முயல்கின்றது.

புனர்வாழ்வு செயற்பாடுகள் நடைமுறையில் உள்ளன பல புனர்வாழ்வு நிலையங்கள் உள்ளன. முக்கியமான புனர்வாழ்வு பணியகம் கந்தக்காட்டில் உள்ளது.

நீதிமன்றம் தனது கருத்தினை வழங்கியதும் அது சபாநாயகரிடம் கையளிக்கப்படும். அதனை நாடாளுமன்றத்திற்கு தெரிவிப்பார், குறிப்பிட்ட சட்டமூலம் குறித்து அச்சம் உள்ளதால் பலர் அது குறித்த தங்கள் கரிசனைகளை வெளியிட்டுள்ளனர்.

இந்த சட்டமூலம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு முன்னர் கலந்தாலோசனைகளை மேற்கொள்ள நான் திட்டமிட்டுள்ளேன். நாங்கள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்போம் கரிசனை உள்ள எவரும்  இது குறித்து கலந்துரையாட முன்வரலாம் என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்

“ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தமைக்காக ஜனாதிபதி தகாத வார்த்தைகளால் என்னை மிரட்டினார். ஒரு நாட்டின் தலைவரிடமிருந்து இதனை எதிர்பார்க்கவில்லை.” – விஜயதாச ராஜபக்ச

“ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தமைக்காக ஜனாதிபதி தகாத வார்த்தைகளால் என்னை மிரட்டினார். ஒரு நாட்டின் தலைவரிடமிருந்து இதனை எதிர்பார்க்கவில்லை.” நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(16.04.2021) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் நான் தெரிவித்த கருத்துகளுக்காக ஜனாதிபதி எனக்கு அச்சுறுத்தல் விடுத்தார். ஜனாதிபதி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார். நாடு ஒன்றின் தலைவரிடமிருந்து நான் இதனை எதிர்பார்க்கவில்லை.

இதன்போது ஜனாதிபதியின் பாணியிலேயே நான் பதிலளித்தேன். தற்போது எனது மற்றும் எனது குடும்பத்தவர்களின் உயிர்களின் பாதுகாப்பு குறித்து நான் அச்சமடைந்துள்ளேன்.“ எனவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தமைக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மிரட்டியதாக அவர் கூறியதைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ மேலதிக பாதுகாப்பை கோரியுள்ளார்.

இது தொடர்பாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச  பொலிஸ்மா அதிபரிடம் இது தொடர்பான  கடிதத்தை கையளித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் உட்பட அரசாங்கத்தின் சில திட்டங்கள் மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக குரல் கொடுத்ததால் தான் ஜனாதிபதி மிரட்டியதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டது, இது போர்ட் சிட்டிக்குள் ஒரு தனி சீன காலனி அமைக்க வழிவகுக்கும் எனவும்  அரசாங்க தரப்பு உறுப்பினராக இதுபோன்ற ஊழல்களையோ அல்லது நாட்டின் சில பகுதிகளோ விற்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தமை நோக்கத்தக்கது.

“உயிர்த்தஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்காக முஸ்லீம் அமைப்பு வழங்கிய 920 மில்லியனிற்கு என்ன நடந்தது ? ” – பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச கேள்வி !

உயிர்த்தஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு வழங்குவதற்கு என முஸ்லீம்வேர்ல்ட் லீக் என்ற அமைப்பு வழங்கிய 920 மில்லியனிற்கு என்ன நடந்தது என பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த கேள்வியை எழுப்பியுள்ள விஜயதாச ராஜபக்ச இதுதொடர்பில் விளக்கமளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்தக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ,

உயிர்த்தஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் நலன்களிற்காக வழங்கப்பட்ட நிதி என்பதால் அதற்கு என்ன நடந்தது என அறிவது கட்டாயமான விடயமாகும்.

2019 ஜூலை மாதம் இடம்பெற்ற தேசிய சமாதான மாநாட்டில் முஸ்லீம்வேர்ல்ட் லீக்கும் கலந்துகொண்டது .  அந்த அமைப்பின் தலைவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஐந்து பில்லியன் டொலர்களை வழங்கினார் என ஊடகங்கள் தெரிவித்திருந்தன என்பதை கூறியுள்ள விஜயதாச ராஜபக்ச அந்த நிகழ்வில்  மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ச சந்திரிகா குமாரதுங்க போன்றவர்கள் கலந்துகொண்டிருந்ததையும்  சுட்டிக்காட்டியுள்ளார்.