விஜித ஹேரத்

விஜித ஹேரத்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல் தோல்விக்கு அஞ்சுகிறார் – ஜே.வி.பி குற்றச்சாட்டு!

“அரசாங்கம் தேர்தலைப் பிற்போட முயற்சி செய்கின்றது” என தேசிய மக்கள் சக்தியின் பிரசார செயலாளரும், கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” பொதுமக்கள் ஜனாதிபதித் தேர்தலையே எதிர்ப்பார்த்துள்ளனர். ஆனால் அரசாங்கம் தேர்தலை பிற்போடும் முயற்சியிலேயே உள்ளது.

அரசாங்கம் மீது மக்களுக்கு காணப்படும் நம்பிக்கையின்மை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது.

 

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தேர்தலை அறிவிப்பதற்கான அதிகாரம் கிடைத்துள்ளது. எனவே ஆணைக்குழு இனியும் பின்வாங்காமல் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

நாளைய தினம் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. தேர்தல் தோல்விக்கு அஞ்சியே ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க தேர்தலை பிற்போடுவதற்கான சதித்திட்ட முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றார்” இவ்வாறு விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தேர்தலை பிற்போடும் ரணிலின் திட்டமே 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் – விஜித ஹேரத்

“22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் இல்லை” என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

 

கொட்டகலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

 

இது குறித்து விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளதாவது,

22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் இல்லை.

 

தேர்தலை பிற்போடும் நடவடிக்கைகளில் ஒன்றாக ரணில் விக்ரமசிங்க திடீரென 22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தைக் கொண்டுவர முயற்சி செய்கின்றார்.

பெருந்தோட்ட மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்ட எந்தவொரு ஆட்சியாளரும் தோட்டத் தொழிலாளர்களை பொருட்படுத்தவில்லை.

 

ஜீவன் தொண்டமானை அருகில் வைத்து தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்கப்படும் என்றார். உள்ளது இன்று வரை கிடைக்காத நிலையில், இந்த ஆண்டும் அது கிடைப்பதற்கான அறிகுறியே இல்லை என, மீண்டும் மக்களை ஏமாற்றியுள்ளனர்.

 

தோட்டக் கம்பனிகளுக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் இடையில் முரண்பாட்டை உருவாக்கி சம்பளத்தை அதிகரிக்கவில்லை என தோட்டக் கம்பனிகளை குற்றம் சாட்டுவதையே அரசாங்கம் செய்து வருகின்றது” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அனுரகுமார ஜனாதிபதியானாலும் நாட்டின் தற்போதைய நிலைமையை மாற்றியமைக்க முடியாது – விஜித ஹேரத்

தமது கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியானாலும் நாட்டின் தற்போதைய நிலைமையை மாற்றியமைக்க முடியாது எனவும் இதற்கு சிறிது காலம் எடுக்கும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வீட்டு பொருளாதாரத்தை கவனமாக நிர்வகிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சமீபத்தில் நடைபெற்ற பொது பேரணியில் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; “சில நேரம் நினைத்துப் பார்க்கிறேன். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் முடியவில்லை, சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் முடியவில்லை. தேசிய மக்கள் சக்தி எப்படித்தான் இதனை தாங்குவது? எல்லோராலும் முடியாது என்றால், அதைச் செய்ய முடியாது தான்.

அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாவார், விஸ்வகர்மாவின் பலத்தினாலும் மந்திர சக்தியினாலும் இதை மாற்றுவதற்கு வழியில்லை.

கடின அர்ப்பணிப்பு செய்தால், பால் தேநீருக்குப் பதிலாக தேநீர் குடித்தால், தேவையற்ற செலவுகளைக் குறைத்து, நம் வீட்டுப் பொருளாதாரத்தை சிறிது நேரம் கவனமாக நிர்வகித்தால், அதைச் செய்வோம்.” என தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட தமிழர்களுக்கு உரிமை உண்டு – நாடாளுமன்றில் ஜே.வி.பி !

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு உறவினர்களுக்கும் தோழர்களுக்கும் உரிமை உண்டு என கூறியுள்ள தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், அவர்களின் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பலஸ்தீனப் போர் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது பேசிய அவர்,மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் தோழர்களுக்கு போரில் இறந்தவர்களை நினைவு கூர உரிமை உண்டு.

முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் சம்பூரில் நினைவேந்தல் நடத்தியதற்காக 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார்.

நக்பா சம்பவத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் நாளாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியுள்ளதாகவும், அதேபோன்று உள்நாட்டுப் போரில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு இலங்கையர்களுக்கும் உரிமை உண்டு எனவும் அவர் குறிப்பிட்டார்.

போரில் இறந்தவர்களை நினைவு கூரும் உரிமையானது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உரிமை எனவும், இலங்கையிலும் அந்த உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விசா தொடர்பில் விசனத்தை வெளியிட்ட இளைஞனுக்கு நெருக்கடி கொடுத்தால் விளைவு விபரீதமாக இருக்கும் – நாடாளுமன்றத்தில் ஜே.வி.பி

விசா விநியோகத்தில் இடம்பெறவிருந்த பாரிய மோசடியை தனி இளைஞர் ஒருவர் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

தவறுகளை அரசாங்கம் திருத்திக் கொள்ள வேண்டும் அதனை விடுத்து இந்த இளைஞனுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தினால் அரசாங்கம் மீண்டும் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.

சட்டத்தரணிகளும், நாட்டு மக்களும் ஒன்றிணைவார்கள் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற பிரிவிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடல் (விசேட ஏற்பாடுகள்)திருத்தச் சட்டமூலம் (பராட்டே) என்பன மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் உரையாற்றியதாவது,

 

நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்கள் 52 சதவீதமளவில் பங்களிப்பு செய்கிறார்கள்.தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தொழில் முயற்சியாளர்கள் பொறுப்புக் கூற வேண்டிய தேவை கிடையாது.ஆனால் அவர்கள் மீதே பொருளாதார நெருக்கடி சுமத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கைகளினாலும்,ஊழல் மோசடியாலும் நாடு வங்குரோத்து நிலையடைந்தது.

 

கொவிட் பெருந்தொற்றினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது.ஆனால் கொவிட் பெருந்தொற்றினால் எமது அண்மை நாடுகளான மாலைத்தீவு,பங்களாதேஷ் மற்றும் பூட்டான் உள்ளிட்ட நாடுகள் வங்குரோத்து நிலையடையவில்லை. பொருளாதார மீட்சிக்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அரசாங்கம் பேச்சளவில் குறிப்பிடுகிறது.ஆனால் செயலளவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

 

வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் சட்டமூலம் தற்காலிகமானதே,07 மாதங்களை வரையறுத்தே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.ஏழு மாத காலத்துக்குள் நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடையுமா என்பதை குறிப்பிட முடியாது,ஆகவே தொழில் முயற்சியாளர்களுக்கு 2 ஆண்டுகளேனும் நிவாரணம் வழங்க வேண்டும்.

வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகத்தில் இடம்பெறவிருந்த பாரிய மோசடியை இளைஞர் ஒருவர் தனித்து வெளிப்படுத்தியுள்ளார். அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமையை அந்த இளைஞர் பயன்படுத்தியுள்ளார்.இந்த இளைஞன் குறிப்பிட்ட விடயங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி,அதற்கு மக்கள் அவதானம் செலுத்தியதன் பின்னரே அமைச்சரவை பழைய முறைக்கு விசா விநியோகிக்க தீர்மானித்துள்ளது.

 

அரசாங்கம் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் அதனை விடுத்து இந்த இளைஞனுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால் சட்டத்தரணிகளும், நாட்டு மக்களும் அந்த இளைஞனுக்கு சார்பாக செயற்படுவார்கள். கடந்த கால நிகழ்வுகளையும் அரசாங்கம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

எதிர்வரும் நாடாளுமன்றை பெண் உறுப்பினர்களை கொண்டு நிரப்புவோம் – ஜே.வி.பி

எதிர்வரும் நாடாளுமன்றை பெண் உறுப்பினர்களை கொண்டு நிரப்புவோம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட மகளிர் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆண்கள் மட்டுமன்றி பெண்களுக்கும் நாடாளுமன்றில் அங்கம் வகிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தமது கட்சியில், நாடாளுமன்றத்தில் வேட்பாளர்களாக களமிறங்க பெண்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தேசிய மக்கள் சக்திக்கு அச்சம் கொண்டுள்ள அரசாங்கம், மேடைகளில் ஆரம்பம் முதல் இறுதி வரையில் கட்சியை குறைகூறி விமர்சனம் செய்வதாக விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டை மீண்டும் விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் – விஜித ஹேரத் குற்றச்சாட்டு!

நாட்டை மீண்டும் விற்பனை செய்யும் வேலைத்திட்டமே இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், உணவு மற்றும் வரி வசூல் மட்டுமே வரவுசெலவு திட்டத்தில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

 

பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கொண்டுவருவதாக 2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கூறப்பட்ட போதிலும் அது எதுவும் நடைமுறைக்கு வரவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

“மக்கள் மீதான தாங்க முடியாத வரிச்சுமையைத் தவிர, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் இருந்து எதுவுமே கிடைக்கவில்லை.” -ஜே.வி.பி

மக்கள் மீதான தாங்க முடியாத வரிச்சுமையைத் தவிர, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் இருந்து இலங்கை இதுவரை எதையும் பெறவில்லை என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கடன்களை மறுசீரமைக்கும் நம்பிக்கையுடன் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியதாகவும், 17 மாதங்களுக்குப் பிறகும் இலங்கையால் ஒரு டொலரில் மறுசீரமைக்கவோ முடி வெட்டவோ முடியவில்லை என்றும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையானது இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்ததன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி நிச்சயமற்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின்படி அரசாங்கம் பல்வேறு வரிகளை விதித்ததுடன் மின்சாரம், நீர் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகளை அதிகரித்தது, இது மக்களின் வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என்றார்.

“இலக்கு அரச வருமானம் அடையப்படவில்லை. அதிக வரிகளை விதிக்கவும், மின் கட்டணங்களை மேலும் அதிகரிக்கவும், IMF தொடர்ந்து அரசாங்கத்தை வற்புறுத்துகிறது. IMF அறிக்கையின்படி, இலங்கை எதிர்பார்த்த இலக்கை விட 15 சதவீதம் குறைவாகவே அரச வருவாயைப் பெறுகிறது.”

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வருமான வரிக் கோப்புகளைத் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. மின்சாரக் கட்டணங்களும் 22 சதவீதம் அல்லது முதல் அலகிற்கு 8 ரூபா வரை அதிகரிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“இலங்கையின் வைத்தியத்துறை கொள்ளை மற்றும் ஊழலில் ஈடுபடும் மாபியாவாக மாறியுள்ளது.” -ஜே.வி.பி குற்றச்சாட்டு !

“இலங்கையின் வைத்தியத்துறை கொள்ளை மற்றும் ஊழலில் ஈடுபடும் மாபியாவாக மாறியுள்ளது.” என தேசிய மக்கள் சக்தியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

திவுலப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஆசியாவின் சிறந்த சுகாதார வசதிகள் உள்ள நாடே இலங்கை என அந்த நாட்களில் பெரிதாக பேசிக்கொண்டோம்.ஆனால் இன்று வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு பயமாகவுள்ளது. மருந்து வில்லைகளை பாவிப்பதற்கு கெனூலா ஏற்றிக்கொள்வதற்கு பயமாகவுள்ளது. ஏன் ஏன்றால் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது தான் இன்றைய நாட்டின் நிலைமையாகும். சுகாதார அமைச்சு என்பது கொள்ளை மற்றும் ஊழலில் ஈடுபடும் மாபியா என்பது அறிந்த ஒன்றாகும்.

வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் மருந்துகளில் மாபியா உள்ளது. இலங்கைக்கு மருந்துகளை கொண்டு வரும் மாபியாக்கள் மில்லியன் பில்லியன் கணக்கில் சம்பாதிக்கின்றன. அதற்காகவே இன்று இவ்வளவு சண்டை போடுகிறார்கள் என்றார்.

“திருட்டு, ஊழல், வீண் விரயத்தை ஒழிக்காமல் I.M.F இன் மாயாஜாலத்தால் ஒன்றும் ஆகப்போதில்லை.” – ஜே.வி.பி

ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்காமல் சர்வதேச நாணய நிதியத்தின் மாயாஜாலத்தால் நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி கம்பஹாவில் நடத்திய மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் பதினைந்து நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும், எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பது, ரூபாவின் பெறுமதி குறைப்பு, அரச நிறுவனங்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட 15 நிபந்தனைகளை பூர்த்தி செய்ததன் பின்னரே பணம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு முன்னர் 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை இலங்கை பெற்றிருந்த போதிலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொருளாதாரம் வலுவாக இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

திருட்டு, ஊழல், வீண் விரயத்தை ஒழிக்காமல் சர்வதேச நாணய நிதியத்தின் மாயாஜாலத்தைக் காட்டினாலும் நாட்டைக் காப்பாற்ற முடியாது என்றும் அவர் கூறினார்.

நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு உற்பத்திப் பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும், அரசியல் கலாசாரத்தை மாற்றி குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.