வீதி விபத்துக்கள்

வீதி விபத்துக்கள்

வடக்கில் தொடரும் வாகன விபத்துக்கள் – யாழில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மரணம்!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்டசண்டிலிப்பாய் பாடசாலைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர்உயிரிழந்துள்ளார்.

 

இந்த விபத்து சம்பவம் இன்று (03) பிற்பகல் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

கீரியான் தோட்டம், பண்டத்தரிப்பு, சில்லாலை என்ற முகவரியில் வசிக்கும்பத்மநாதன் வசீகரன் (வயது 20) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வீதியில் சென்ற மோட்டார் வாகனம்  ஒன்று திரும்புவதற்கு சமிக்ஞை காண்பித்தபோது, யாழ்ப்பாணத்தில் இருந்து சில்லாலை நோக்கி பயணித்த குறித்த இளைஞனது மோட்டார்சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்த தொலைபேசி தொடர்பு இணைப்பு கம்பத்துடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அவரதுசடலம் தற்போது சங்கானை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 

பிரேத பரிசோதனைக்காக சடலமானது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.

இதேவேளை இலங்கையின் வடக்கில் ஒவ்வொரு நாளும் விபத்துக்கள் தொடர்பில் ஏதேனும் ஒரு விபத்து மரணம் சரி பதிவாகும் துர்பாக்கிய சூழல் உருவாகியுள்ளது. ஒன்றில் பேருந்து விபத்து அல்லது புகையிரத கடவையை கடக்கும் போது விபத்து , அல்லது மதுபோதையில் வாகனம் செலுத்தியதால் விபத்து என இது தொடர்கதையாகி வருவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆறு மாதங்களில் மொத்தம் 8,875 வீதி விபத்துக்கள் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !

நாட்டில் கடந்த ஆறு மாதங்களில் மொத்தம் 8,875 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன் இந்த விபத்துகளில் 1,043 உயிர்கள் பலியாகியுள்ளன. இந்த விபத்துக்களில் பெரும்பாலானவை பேருந்துகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளால் ஏற்பட்டதாக அரச போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பொலிஸாரால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, இவ்வருடம் ஜூன் 18ஆம் திகதி வரை வாகன விபத்துக்கள் மற்றும் விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புக்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, கடந்த ஆறு மாதங்களில் 902 விபத்துகளில் மரணங்கள் சம்பவித்துள்ளன , 1,856 விபத்துகளில் பாரிய காயங்களும், 3,951 விபத்துகளில் சிறு காயங்களும், 2,096 விபத்துகளில் சேதங்களும் பதிவாகியுள்ளன.

எனவே, இந்த விபத்துகளுக்கான காரணங்கள் குறித்து அரசு மற்றும் அனைத்து அரசு உதவி நிறுவனங்களும் தற்போது கவனம் செலுத்தி வருகின்றன.

குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவது மற்றும் போதைப்பொருள் பாவனையே விபத்துக்களின் முக்கிய அம்சமாகவும், விபத்துக்கள் அதிகரிப்பதற்கும் காரணம் என கண்டறியப்பட்டது.
இதன்படி, பொது பாதுகாப்பு அமைச்சு, இலங்கை பொலிஸ், தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு சபை, சுகாதார அமைச்சு, வீதி பாதுகாப்புக்கான தேசிய சபை, தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம், அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (DMT) ஆகியவை இணைந்து மது அல்லது போதையில் வாகனம் செலுத்தும் ஓட்டுநர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளன.

மே 18 அன்று மேல் மாகாணத்தில் இந்த முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டது. ஜூன் 12 முதல் 6 நாட்களுக்கு போதையில் வாகனம் ஓட்டிய ஓட்டுநர்கள் மீது மொத்தம் 1,781 பேருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. போதையில் வாகனம் செலுத்தியதற்காக கைது செய்யப்பட்ட 41 பேரில் பொது போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த 19 பேரூந்து சாரதிகள், 13 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் ஒன்பது முச்சக்கர வண்டி சாரதிகள் அடங்குகின்றனர்.

இந்த சாரதிகளின் ஓட்டுநர் உரிமங்கள் நீதிமன்றத்தால் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை இடைநிறுத்தப்பட்டதுடன், அவர்களில் பலருக்கு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இளம் மாணவியை வாகனத்தால் மோதி மரணத்தைத் தந்த ரெலோ மூத்த போராளி ஜேர்மனியில் மரணம்!

கட்டிளம் பெண்ணான வாழ்க்கை பற்றிய பல்வேறு கனவுகளோடு வாழ்ந்த மிதுலா அப்போது நெல்லுக்குளம் மகாவித்தியாலயத்தில் ஆண்டு ஒன்பதில் கல்வி கற்றுக்கொண்டிருந்தார். ஒரு ஆசிரியையாக வரவேண்டும் என்ற கனவோடு வாழ்ந்த மிதுலா, 1995 சூரயக்கதிர் இராணுவ நடவடிக்கையோடு, தங்கள் சொந்த ஊரான யாழ் தாவடி (கொக்குவில்) பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வன்னியில் பல பிரதேசங்களிலும் இடம்பெயர்ந்து வாழ்ந்தனர். இறுதியில் கொழும்பு செல்லாம் எனத் தீர்மானித்து வவுனியாவின் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்று முகாமில் தங்கியிருந்தனர். அப்படித் தங்கியிருந்த காலத்தில் தான் மிதுலா நெல்லுக்குளம் மகாவித்தியாலயத்தில் படித்தார். மிதுலாவோடு மூன்று வயது மூத்த சகோதரி ஒருவரும் இருந்தார். குடும்பப் பொறுப்பு மிக்க மிதுலா பொறுப்பில் தான் பண நிர்வாகம் இருந்தது. அவ்வளவு பொறுப்பு மிக்கவர். அவர் கடைசியாக எழுதிய பரீட்சையில் வழமைக்கு மாறாக முதலாம் பிள்ளையாகவும் வந்திருந்தார். படிப்பில் ஆர்வம் ஏற்பட்ட காலமது. மிதுலா தனது அக்காவுக்கு எழுதிய ஓட்டோகிராப்யை கீழே காணலாம்.

அத்தங்கையின் விரும்பம் போலவே அதையும் தாண்டி கல்வியில் ஒரு நிலைக்கு வந்துவிட்டார் சகோதரி கங்கா. இவ்வாறான அன்புக்கும் பாசத்திற்குமரிய தங்கையுடன் சந்தோசத்தை பகிர்ந்துகொள்ள அந்தத் தங்கை தன்னோடு இல்லை என்ற ஏக்கத்துடனேயே கங்கா இன்றும் தனது நாட்களை கடந்து செல்கின்றார். கங்காவிடம் இருந்த அந்தத் தங்கையைப் பிரித்தது ?

1997 செப்ரம்பர் 20 அதுவொரு சனிக்கிழமை மிதுலா தன்னுடைய சகோதரி கங்காவோடும் கங்காவின் நண்பியோடும் உல்லாசமாக வெளியே புறப்பட்டு நெரிக்குளம் மகாவித்தியாலய முகாமில் இருந்து வந்து செட்டிகுளம் பிரதான வீதிக்கு வந்தனர்.

அதே செட்டிகுளம் சந்திக்கு அருகில் உள்ள வீட்டில் வின்சன் என்றழைக்கப்படும் கந்தையா அகிலன் தன் நண்பர்களோடு மது அருந்தி குடிபோதையில் இருந்தார். இவர் ஒரு தமிழீழ விடுதலை இயக்கப் போராளியும் கூட. இலங்கை வாகன ஓட்டுனர் பத்திரம் இல்லாத இவர் இந்தியாவின் வாகன ஓட்டுனர் பத்திரத்தையே வைத்திருந்தார். இவருக்கு லொறி போன்ற பெரிய வாகனத்தை ஓட்டிய அனுபவமும் இருக்கவில்லை. அந்நிலையில் அங்கிருந்த லொறியை எடுத்து ஓட்டுகிறேன் என்று வீராப்பு பேசி லொறியை வேகமாக ஒட்டிக்கொண்டு செட்டிகுளம் வீதிக்குள் நுழைந்தார் வின்சன்.

அதேசமயம் மிதுலா, சககோதரி கங்கா, கங்காவின் நண்பி வீதியின் ஓரமாக நடந்துகொண்டிருந்தனர். கங்கா தூரத்தே ஒரு லொறி வேகமாக வருவதை கண்டுவிட்டார். ஆனாலும் தாங்கள் வீதியின் ஓரத்தால் செல்வதால் வேறு எதைப்பற்றியும் எண்ணவில்லை. நிகழப் போகும் அனர்த்தத்தம் பற்றி கிஞ்சித்தும் எண்ணியிருக்கவில்லை.

ஆம் வின்சன் மது போதையில் ஓட்டிவந்த லொறி இப்பெண்கள் மீது மோதி அருகில் சென்றுகொண்டிருந்த ரக்ரரையும் தாக்கி அப்பகுதியையே புழதி மண்டலமாக்கியது. அந்தப் புழதிக்குள் லொறியை ஓட்டி வந்த வின்சன் லொறியிலிருந்து இறங்கி அவ்விடத்தை விட்டே ஓடிவிட்டார். மிதுலா தலையில் ஏற்பட்ட பாரிய அடியினால் சிதைந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார். கங்காவின் நண்பி பாரிய காயங்களுக்கு உள்ளானார். கங்கா அதிஸ்ரவசமாக சிறிய காயங்களோடு உயிர் தப்பினார்.

விசயத்தைக் கேள்விப்பட்டு நெல்லிக்குளம் முகாமில் இருந்த மிதுலாவின் சகோதரன் மற்றும் நண்பர்கள் எல்லோரும் சம்பவ இடத்துக்கு ஓடிவந்து காயப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவும், இன்னும் சிலர் லொறியின் கண்ணாடிகளை அடித்து நொருக்கினர். அதில் மிதுலாவின் சகோதரனும் ஒருவர். அதற்குள் அப்போது வவுனியாவுக்கு ரெலோ பொறுப்பாளராக இருந்த குகனும் சம்பவ இடத்திற்கு வந்து தாங்கள், சம்பந்தப்பட்ட சாரதி வின்சனுக்கு தகுந்த தண்டணை வழங்குவதாக உறுதியளித்தனர். மரண நிகழ்வுக்கான ஏற்பாடுகளையும் குகன் ஏற்பாடு செய்திருந்தார். இறுதிக்கிரியைகளின் போது வின்சன் மயானத்திற்கு அழைத்து வரப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் வைத்து அடிக்கப்பட்டார்.

ஒரு உயிர் இழப்பை எவ்வளவு பணமும் ஈடு செய்யாது, இழப்பீடாக 50,000 ரூபாயை வழங்கினர். குடும்பத்தினர் அதனை ஏற்க மறுக்கவே, பணத்தை அங்கேயே வைத்துவிட்டுச் சென்றனர்.

காயப்பட்ட கங்காவின் நண்பி குணமடைய இரு ஆண்டுகள் ஆனது. காலங்கள் உருண்டோட வவுனியா ரெலோ பொறுப்பாளராக இருந்த குகன் இயக்க மோதலில் கொல்லப்பட்டார். மதுபோதையில் வாகனத்தை ஓட்டி கொலையைச் செய்த வின்சன் வவுனியா பொறுப்பாளரானார். இதனை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை. அதின் பின் வின்சன் எப்படியோ ஜேர்மனி வந்தடைந்தார்.

கங்காவும் பிற்காலத்தில் அங்கு வந்து சேர்ந்தார். காயப்பட்ட கங்காவின் நண்பியும் ஜேர்மனியிலேயே வாழ்வதாகவே அறிய வருகின்றது. ஆனால் இவர்கள் யாரும் ஒருவரை ஒருவர் சந்திக்கவில்லை.

இந்நிலையிலேயே ரெலோ இயக்கத் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் முகநூலில் கந்தையா அகிலன் மறைந்த செய்தியை வெளியிட்டு அஞ்சலியைச் செலுத்தி இருந்தார். அதற்கு மிதுலாவின் சகோதரி இடம் குறிப்பு கீழேபதிவு செய்யப்பட்டுள்ளது.

கந்தையா வின்சன் இந்த விபத்தை திட்டமிட்டு மேற்கொள்ளவில்லை. ஆனால் அவருடைய பொறுப்பற்ற செயல்: மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டியது, முன் அனுபவமில்லாமல் அந்த வாகனத்தை பொது வீதியில் ஓட்டியது இரண்டுமே இந்த விபத்துக்குக் காரணம். இந்தப் பொறுப்பற்ற மனிதரை ‘மூத்த போராளி’ என அவருக்கு ஒரு அந்தஸ்த்தை வழங்குவது இன்னமும் மோசமான செயல். இவ்வாறான சில்லறைத்தனமான பொறுப்பற்ற செயல்களால் தான் நாடு சீரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.

ஒவ்வொருவரும் தங்களளவில் பொறுப்புடன் செயற்பட்டால் மட்டுமே ஒரு ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியமைக்க முடியும். ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்கள் கட்சிகளில் உள்ள பொறுப்பற்ற மனிதர்களை தூக்கி எறியத் தயாராக வேண்டும். மக்களும் பொறுப்பற்றவர்களுக்கு வாக்களிப்பதை நிறுத்த வேண்டும். மாறாக மௌள்ள மாரிகள், முடிச்சவிக்கிகள், பொறுக்கிகள் என கோயில்களும் அரசியல் கட்சிகளும் கொடியவர்களின் கூடாரமாகிவிட்டது.

2019யைக் காட்டிலும் 2020இல் இலங்கையில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2019இல் 2840 ஆக இருந்து விபத்து மரணங்கள் 2020இல் 3590 ஆகா 26வீதத்தால் அதிகரித்துள்ளது. இவ்விபத்துக்களில் உயிரிழப்பவர்கள் பாதிக்கப்படுபவர்களில் 70 வீதமானவர்கள் பொருளாதார ரீதியாக சிக்கனமான போக்குவரத்தை பயன்படுத்துபவர்களாகவே உள்ளனர். விபத்துக்களில் கொல்லப்படுபவர்களில் 50 வீதமானவர்கள் இருசக்கர அல்லது முச்சக்கர வண்டிகளில் பயணிப்பவர்கள். வீதி விபத்துக்களில் கொல்லப்படுபவர்களில் பாதசாரிகள் மூன்றில் ஒரு பங்கினர். மேலும் 25,000 பேர்வரை விபத்துக்களில் காயமுறுகின்றனர். இலங்கையில் யுத்தத்திற்குப் பின் உடல் ஊனத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்றாக வீதி விபத்துக்கள் உள்ளன.

மேற்குறிப்பிட்ட புள்ளிவிபரங்கள் பொலிஸார் வீதி விபத்துக்களை பதிவு செய்த போது எடுக்கப்பட்ட புள்ளிவிபரம். ஆனால் வீதி விபத்துக்களில் காயப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சில நாட்கள், சில வாரங்கள், சில மாதங்கள் கடந்து இறந்தும் உள்ளனர். இவற்றையெல்லாம் பார்க்கின்ற போது 2020இல் வீதி விபத்துக்களில் இறந்தவர்களின் எண்ணக்கை 4,200க்கும் அதிகம் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி தினமும் பதினொருவருக்கு அதிகமானவர்கள் இலங்கையின் வீதிகளில் கொல்லப்படுகின்றனர்.

தெருக்களில் வாகனங்களின் அதிகரிப்பு (கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கையில் வாகன உரிமையாளர்களின் எண்ணிக்கை 70 வீதத்தால் அதிகரித்து இருப்பதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.) பராமரிப்பற்ற அல்லது பாராமரிப்பு குறைந்த வீதிகள், வாகன அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் போது நம்பகத்தன்மை மற்றும் உறுதிப்படுத்தல்களில் காட்டப்படும் அசிரத்தை, வீதிக் குற்றங்கள் முறையாகத் தண்டிக்கப்படாமை, பொதுப் போக்குவரத்து வளர்த்தெடுக்கப்படாமை என்பன வீதி விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்துவிடும் இவ்விபத்துக்கள் பல்லாயிரம் குடும்பங்களை உருக்குலைய வைக்கின்றது. அவர்களுடைய கனவுகளை வண்டிச் சக்கரத்தில் நசித்துவிடுகின்றது. வேகம் ஒரு போதும் விவேகமானதல்ல. உயிரினும் மேலானது எதுவுமில்லை. ஒரு வீதம் வேகத்தை அதிகரிப்பது உயிரிழப்பை நன்கு வீதத்தால் அதிகரிக்கின்றது. இன்னொரு உயிரைப் பறிக்கின்ற, எம்முயிரை பறிக்கின்ற வேகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம். வேகமாகச் சென்று நாம் எதனையும் சாதித்துவிடுவதில்லை. ஆகையால் விவேகத்துடன் நிதானத்துடன் வாகனத்தை ஓட்டுவோம்.

துரதிஸ்ட்டவசமாக அன்று மிதுலாவை மோதிய வாகனத்தை அடித்து நொருக்கிய அண்ணனும் கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகனவிபத்தில் கொல்லப்பட்டார். முன்னாள் போராளியான இவருடைய இன்னுமொரு சகோதரரும் மூத்த போராளியாக உயிர்நீத்தமை குறிப்பிடத்தக்கது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல்இ சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல்இ செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல்இ அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் ஓட்டுதல் ஆகிய குற்றங்களில் ஈடுபடும் வாகன சாரதிகள் நெடுஞ்சாலைகளில் கைது செய்யப்படுவதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். 2021 ஆம் ஆண்டில் அவர்களுக்கு எதிராக 79,904 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்இ 2020 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 66,252.

மிதுலா விபத்தில் கொல்லப்பட்டு கால்நூற்றாண்டுக்கு மேலாகி விட்டது. ஆனால் இலங்கையின் வீதிகள் இன்னமும் எமலோகத்திற்கான வீதிகளாகவே மாற்றப்பட்டு வருகின்றது. உலகெங்கும் வீதி விபத்துக்களில் 1.3 மில்லியன் மக்கள் கொல்லப்படுகின்றனர். இதனை மட்டுப்படுத்த 2030இல் வீதி விபத்துக்களை 50 வீதத்தால் குறைக்க வேண்டும் என்ற நோக்கோடு ஐநா பொதுச் சபை தீர்மானம் இயற்றியுள்ளது. ஆனால் இலங்கையின் வீதிகள் என்னவோ மரணப் பொறியாகவே மாறி வருகின்றது. பொறுப்பற்ற மனிதர்களை சாரதி இருக்கையில் இருந்து தூக்கியெறிவதே இதற்கு ஒரே தீர்வாக இருக்க முடியும்.

 

இலங்கையில் வீதிவிபத்துக்களால் வருடத்துக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி !

இலங்கையில் தினமும் வீதி விபத்துக்களால் 5 தொடக்கம் 10 பேர் வரை உயிரிழக்கின்றனர் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளரான பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ஊடகங்களிடம் நேற்று வீதிப்போக்குவரத்து விபத்துக்கள் தொடர்பாக பேசிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்படி வருடாந்தம் வீதி விபத்துக்களால் 3 ஆயிரம் பேர் மரணிக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், வீதி விபத்துக்களால் 15 ஆயிரம் பேர் அங்கவீனர்களாகின்றனர் என்றும், 20 ஆயிரம் பேர் காயமடைகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.