“ஜனாதிபதியுடன் பேச்சு என்ற பெயரில் காலத்தை வீணடிக்க நாம் விரும்பவில்லை.” – இரா. சம்பந்தன்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் நேரில் பேச்சு நடத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்நேரமும் தயார் நிலையில் உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ அரச தலைவராக பதவியேற்று இரு வருடங்கள் கடந்த போதிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடன் இதுவரை உத்தியோகபூர்வ சந்திப்பை நடத்தவில்லை.

கடந்த வருடம் அரச தலைவர் செயலகத்தால் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில் அது இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இம்மாத இறுதி வாரத்தில் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த அரச தலைவர் தீர்மானித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், கூட்டமைப்பும் அதற்கான பதிலை வழங்கியுள்ளது.

இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் கருத்து வெளியிடுகையில்,

“ பேச்சுக்கான உத்தியோகபூர்வ அழைப்பு இதுவரை எமக்கு வரவில்லை. பேச்சு என்ற பெயரில் காலத்தை வீணடிக்க நாம் விரும்பவில்லை. இந்த விடயத்தை அரச தலைவருடனான சந்திப்பின் நேரில் தெரிவிப்போம்.

நிரந்தர அரசியல் தீர்வுக்கு வழி சமைக்கும் வகையில் அந்தப் பேச்சு இடம்பெற வேண்டும். அதை விடுத்து இனியும் ஏமாறத் தயாராக இல்லை. அனைத்துக் கருமங்களும் நல்லபடி அமைய வேண்டும் என்பதே எமது விருப்பம்” என்றார்.