ஹரிணி அமரசூரிய

ஹரிணி அமரசூரிய

எங்களை மக்கள் பாதுகாக்கிறார்கள் – பிரதமர் ஹரிணி அமரசூரிய !

எங்களை மக்கள் பாதுகாக்கிறார்கள் – பிரதமர் ஹரிணி அமரசூரிய !

 

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அரலகங்வில மகாவலி திரையரங்கில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய. இந்த அரசாங்கம் மக்களால் தெரிவு செய்யப்பட்டு, மக்களால் பாதுகாக்கப்பட்டு, நாட்டில் மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் கடந்த தேர்தலில் இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தனர். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு நமது அரசுக்கு உள்ளது. அதற்காக அனைத்து துறைகளிலும் ஆய்வு செய்யப்பட்டு தரவுகளின் அடிப்படையில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இந்த நாட்டின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்க அரசு சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

முந்தைய அரசுகளின் கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகளில் ஆசிரியர்களுக்கான சரியான திட்டம் இல்லை. ஆசிரியர்களின் மனப்பான்மையை வளர்ப்பதிலும், ஆசிரியர் பயிற்சி அளித்து, ஆசிரியர்களின் தொழில் திறனை மேம்படுத்துவதிலும், நவீன கல்வி அறிவை அவர்களுக்கு வழங்குவதில் நமது அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. என்றார்

பிரதமரின் அறிவிப்பை மீறிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

பிரதமரின் அறிவிப்பை மீறிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற மாணவர் கௌரவிப்பு நிகழ்வு ஒன்றில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்து கொண்டமை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர், கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய முன்னதாக பாடசாலைகள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்தப்படுவதை ஏற்க முடியாது என் றும் அரசியல்வாதிகள் பாடசாலை விழாக்களில் கலந்துகொள்ளக்கூடாது என்றும் தடை விதித்திருந்தார்.

இந்தநிலையில் கல்வி அமைச்சரின் அறிவிப்பையும் மீறி அமைச்சர் சந்திரசேகர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளமை தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிடப்பட்டு வருகின்றனர்.

பாடசாலை கல்வியை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் !

நாட்டின் பாடசாலை கல்வியை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் உலக வங்கியின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று பிரதமர்  ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் கல்வி அமைச்சில் இடம்பெற்றது.

கடந்த பல வருடங்களாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலைகளை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் விசேடமாக பாடசாலை மாணவர்களின் சுகாதாரத்தை கட்டியெழுப்புதல் தொடர்பில் பிரதமர் இதன்போது தனது விசேட அவதானத்தை செலுத்தினார்.

அத்துடன் நாட்டின் இரண்டாம் நிலைக் கல்வியை முன்னிட்டு தகவல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

கல்வி உயர் கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

அழுத்தமில்லாத கல்விக்காக மாணவர்களின் நம்பகத்தன்மையை நிலைநாட்ட அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளேன் – கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய!

அடுத்த மறுமலர்ச்சி யுகத்திற்கு ஏற்ற பிரஜைளை உருவாக்கக்கூடிய மன அழுத்தமில்லாத கல்விக்காக மாணவர்களின் நம்பகத்தன்மையை நிலைநாட்ட அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் தனது அமைச்சுப் பதவியை இன்று (20) பொறுப்பேற்றுக்கொண்ட போதே அவர் இதனை சுட்டிக்காட்டினார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், கல்வி போன்றதொரு விடயத்துடன் தொடர்புடைய அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.

விடயத்தின் ஆழத்தை தான் முழுமையாக புரிந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய அரசின் கொள்கைகளின்படி, கல்விக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டு, பாடசாலைக் கல்வியானது முறையாகவும் கால ஒழுங்கிலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றார்.

குழந்தைகள் மகிழ்ச்சியுடன் கல்வி கற்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் எனவும், தற்போது கல்வித்துறையில் நிலவும் பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், மக்கள் அனைவரினதும் கணிசமான ஆதரவு அதற்கு அவசியம் என்றும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளராக கே. எம். ஜி. எஸ். என். களுவெவவும் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

நாட்டில் ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து தூய்மையான அரசியலை முன்னெடுப்பதே எமது பிரதான நோக்கமாகும் – ஹரிணி அமரசூரிய

நாட்டில் ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து தூய்மையான அரசியலை முன்னெடுப்பதே எமது பிரதான நோக்கமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய  தொிவித்துள்ளாா்.

 

வளமான நாடு சுகமான வாழ்வு என்றும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனம் இன்று காலை வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்த ஹரிணி அமரசூரிய,

 

தேர்தல் நடைபெறும் போது போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் கொள்கை பிரகடனத்தை வெளியிடுவது வழக்கமானதே.ஆனால் நாட்டின் தற்போதைய நிலையில் நாட்டிற்கு பொருத்தமான மக்களுக்கு தேவையான கொள்கை திட்டமொன்றே அவசியமாகின்றது.

 

கொள்கை பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளதை பலர் ஆட்சிக்கு வந்ததும் மறந்துவிடுகின்றனர்.இது இன்று நாட்டில் அரசியல் கலாசாரமாக உள்ளது.

 

பலர் கட்சிமாறுகின்றனர் கொள்கைப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளதனை முற்றாக மாற்றுகின்றார்கள். மக்களால் தெரிவு செய்யடுகின்ற ஆட்சியாளர்களினால் மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள்.

 

தேர்தல் ஒன்று இடம்பெறும் போது மக்கள் மத்தியில் உரையாற்றும் வேட்பாளர்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மக்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை.அதன்பின்னர் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிட்ட அனைத்து விடயங்களும் அங்கு செயலற்றுபோகின்றது.

 

இவ்வாறான அரசியல் கலாசாரத்தை மாற்றுவதே தேசிய மக்கள் சக்தியின் நோக்கமாகும்.நாட்டில் ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து தூய்மையான அரசியலை முன்னெடுப்பதே எமது பிரதான நோக்கமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய மேலும் தொிவித்தாா்.

“இனநல்லிணக்கம் பற்றி பேசிவிட்டு ஒரு தலைப்பட்சமாக செயற்பட்டால் தமிழ் மக்கள் எவ்வாறு சட்டம், ஒழுங்கு மீது நம்பிக்கை கொள்வார்கள்? – ஹரிணி அமரசூரிய கேள்வி !

இன நல்லிணக்கம் தொடர்பில் ஒருபுறம் கதைத்து விட்டு, பிறிதொரு புறம் தமிழ்ப் பிரதிநிதிக்கு எதிராகச் செயற்படும் போது தமிழ் மக்கள் எவ்வாறு சட்டம், ஒழுங்கு மீது நம்பிக்கை கொள்வார்கள் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய கேள்வியெழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (08) இடம்பெற்ற நிதி, பொருளாதார உறுதிப்படுத்துகை மற்றும் தேசிய கொள்கைகள் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்ட கேள்வியை அவர் எழுப்பினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அவர் கைது செய்யப்பட்ட விதம் முற்றிலும் தவறானது.

இதன் மூலம் தமிழ் மக்களுக்கு வழங்கும் செய்தி என்ன? இன நல்லிணக்கம் தொடர்பில் ஒருபுறம் கதைத்து விட்டு, பிறிதொரு புறம் தமிழ் பிரதிநிதிக்கு எதிராக செயற்படும் போது, தமிழ் மக்கள் எவ்வாறு சட்டம், ஒழுங்கு மீது நம்பிக்கை கொள்வார்கள்?

குற்றமிழைப்பவர்களை சமமாக நடத்த வேண்டும். நாடாளுமன்றத்தில் இந்த வித்தியாசத்தை அவதானித்தோம். ஆளும் தரப்புக்கு ஒரு சலுகையும் எதிர்க்கட்சிக்கு பிறிதொரு சலுகையும் என அரசாங்கம் மனம்போன போக்கில் செயற்படுகிறது” என்றார்.

“ஜனாதிபதி ரணிலின் சிம்மாசன உரை பழைய புராணம் தான்.”- தேசிய மக்கள் சக்தி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை விளக்க உரையில், புதிதாக எதுவும் கூறப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் சிம்மாசன  உரைக்கு பின்னர் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஹரிணி அமரசூரிய இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

அரசியல் வரலாற்றில் இருந்ததையே மீண்டும் இந்த உரையில் முன்வைத்துள்ளது. அத்துடன் அரசியல் ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றத்தையே அந்த உரையில் முன்வைத்ததாகவும் தெரிவித்தார்.

“மஹிந்த ராஜபக்ஷ போராட்டக்காரர்களை  கலந்துரையாடலுக்கு அழைத்தமை நகைச்சுவையானது”- ஐக்கிய மக்கள் சக்தி

“மஹிந்த ராஜபக்ஷ போராட்டக்காரர்களை  கலந்துரையாடலுக்கு அழைத்தமை நகைச்சுவையானது” என தேசிய மக்கள் சக்தியின்  நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

போராட்டக்காரர்களை கைக்குழந்தைகளாகக் கருதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பின்னர் அவர்களை கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளமை நகைச்சுவையானது.

இணக்கமற்ற இருவருக்கு இடையில் திருமணம் நடைபெற்றால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதை போலவே இந்த அழைப்பு காணப்படுகிறது.  எனவே முழு அரசாங்கமும் பதவி விலகுவதற்கான நேரம் இது.

தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாகவே பொதுமக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆகவே பொதுமக்கள் தற்போது கற்பிக்கும் முக்கியமான அரசியல் பாடத்தை அரசாங்கம் உணர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய கேட்டுக்கொண்டார்.