தள மாநாடு

தள மாநாடு

புளொட் தள மாநாடும் ஜென்னியின் வெளியேற்றமும்! – பாகம் 23

புளொட் தள மாநாடும் ஜென்னியின் வெளியேற்றமும்!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 23 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 11.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 23

தேசம்: இப்ப நீங்கள் முழு வீச்சாக இந்த பின்தள மாநாட்டை நடத்துவதற்கான சகல முயற்சிகளையும் எடுத்து இருக்கிறீர்கள். பின்தள மாநாட்டில்…

அசோக்: பின் தள மாநாடு அல்ல தள மாநாடு…

தேசம்: மன்னிக்க வேணும். தள மாநாட்டில் எல்லாரும் கலந்து கொண்டார்களா? எப்படி என்ன மாதிரி?

அசோக்: நாங்கள் வட கிழக்கு மாவட்டங்கள் அனைத்திலும் புளொட் தோழர்களை சந்தித்து உட்கட்சிப் போராட்டம், மாநாடு, அதன் அவசியம் பற்றி உரையாடுகிறோம். ஒவ்வொரு மாவட்டங்களிலும் போய் மாணவர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், பெண்கள் அமைப்புக்கள் என எல்லா அணிகளோடும் நாங்கள் கதைக்கிறம். அங்க இருந்து தெரிவு செய்யப்பட்ட முன்னணி தோழர்களை யாழ்ப்பாணம் வரவழைத்து அவர்களை கொண்டு மாநாட்டை நடத்துவதற்கு நாங்கள் உத்தேசிக்கிறோம்.

தேசம்: தனிய மாவட்ட அமைப்பாளர்கள் என்று இல்லாமல் முன்னணி தோழர்களை, விரும்பின ஆட்களும்…

அசோக்: ஓம். அந்தந்த மாவட்டம் தெரிவு செய்து அனுப்பும். நாங்கள் தெரிவு செய்வதில்லை. அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த தோழர்களே மாநாட்டில் தங்களின் பிரதிநிதிகளாக கலந்து கொள்ளும் தோழர்களை தெரிவு செய்து அனுப்புவார்கள். நான் நினைக்கிறேன் எண்பத்தி ஆறாம் ஆண்டு பெப்ரவரி கந்தரோடை கிராமத்தில் ஒரு பாடசாலையில் ரகசியமாக 6 நாட்கள் அந்த தள மாநாடு நடந்தது.

தேசம்: எத்தனை பேர் கலந்து கொண்டார்கள்…

அசோக்: எல்லா மாவட்டங்களிலிருந்து சுமார் 200 தோழர்கள் வந்திருப்பார்கள். அதற்கு பூரணமான ராணுவ பாதுகாப்பு சின்ன மென்டிஸ் தான் கொடுத்தது. மெண்டிஸ் தான் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டேன் என்றும் ஆனா மாநாடு நடப்பதற்கான பாதுகாப்பு எல்லாத்தையும் தான் செய்வதாக சொல்லிவிட்டார். அது எங்களுக்கு உதவியாக இருந்தது.

தேசம்: அதுவே ஒரு பெரிய விஷயம்…

அசோக்: ஆறு நாட்களும் பாதுகாப்பு தந்தார்.

தேசம்: நீங்கள் இந்த மாநாடு நடத்துகிறீர்கள் என்று சொல்லி பின் தளத்துக்கும் தெரியும் உமா மஹேஸ்வரனுக்கும் தெரியும்.

அசோக்: எல்லாருக்கும் தெரியும். மாநாடு நடக்கும் போது படைத்துறைச் செயலர் கண்ணன் தளத்தில்தான் நின்றவர். நாங்கள் மாநாடு நடாத்துவது பற்றி பின் தளத்தில் முகுந்தன் ஆட்களுக்கு தெரியும். தள மத்திய குழு உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் இந்த மாநாடு பற்றி பின் தள மத்திய குழுவுக்கும், முகுந்தனுக்கும் நாம் அறிவித்திருந்தோம்.

தேசம்: அவர்கள் அச்சுறுத்தல் விடுக்கலயா?

அசோக்: ஒன்றும் நடக்கவில்லை. எந்த பதிலும் கிடைக்கவில்லை.

தேசம்: ஏனைய அமைப்புகளாலும்…

அசோக்: அப்படி எதுவும் நடக்கவில்லை. அதற்கான சந்தர்ப்பம் இல்லை. அந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது.

தேசம்: அந்த விவாதத்தில் எது முக்கியமாக இருந்தது.

அசோக்: பின்தள படுகொலைகள். தலைமையினுடைய எதேச்சதிகார அராஜக போக்குகள் தொடர்பாக கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டது. மத்திய குழுவும், தலைமையும் மாற்றப்பட வேண்டும் என்று சொல்லியும் ,அதன் மீதான நம்பிக்கை இல்லை என்று சொல்லியும் புதிதாக நிர்வாகம் வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்தோடு புளொட்டில் நடந்த படுகொலைகள் சித்திரவதைகள் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பாக விசாரணை நடாடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் புளொட்டின் சீர்குழைவுகளுக்கு காரணமான முகுந்தனின் மூல உபாயம் அற்ற அரசியல் இராணுவ போக்குகளை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சரியான அரசியல் இராணுவ மூல உபாயங்கள் வகுப்பதற்கான அடிப்படைகளை உருவாக்கவேண்டும் என்றும் அத்தோட தீர்மானிக்கபட்டது. உண்மையிலேயே மிக சிறப்பான கோட்பாட்டு அரசியல் சார்ந்த மாநாடு என்றுதான் சொல்ல வேணும்.

தேசம்: தள மாநாட்டுக்கு முதலே செல்வம் அகிலன் கொலை நடந்து விட்டதா?

அசோக்: ஓம். மாநாட்டுக்கு முதலே செல்வம், அகிலன் படுகொலை விட்டது. அந்தக் கொலைகள் தொடர்பாக விசாரணைகள் நடத்த வேண்டும் என்று சொல்லியும் அதில் சிவராம், வெங்கட் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லியும் பின் தளத்தில் நடந்த படுகொலைகள் தொடர்பாக விசாரணை கமிஷன் போட வேண்டும் என்று சொல்லியும் முடிவுகள் எடுக்கப்படுகின்றது.

தேசம்: என்னென்ன தீர்மானங்கள் நீங்கள் முக்கியமாக எடுத்தீர்கள்?

அசோக்: ஒரு பதினாறு பதினேழு முக்கிய தீர்மானங்கள். தலைமை இழைத்த அரசியல் கோட்பாட்டு மற்றும் நடைமுறைத் தவறுகள். இதுவரை தோழர்கள் வைத்திருந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் அதுல சொல்லப்படுது. அதில 17 பேர் கொண்ட அரசியல் வழிகாட்டி குழு ஒன்று தெரிவு செய்யப்படுது. அவர்கள் பின் தளம் போய் இந்த தீர்மானங்களை முன் வைத்து அங்கொரு பின்தள மாநாட்டை பின் தள தோழர்களின் ஒத்துழைப்போடு நடாத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

தேசம்: பின் தளத்தில்…

இது தள மாநாடு. ஏனென்றால் நாங்கள் மாத்திரம் தீர்மானிக்க இயலாது தானே. பின் தளத்தில் பயிற்சி முகாங்களில் இருக்கும் தோழர்கள், மற்றய ஏனைய தோழர்களும் இருக்கிறார்கள்தானே. அவர்களை உள்ளடக்கிய பின் தள மாநாடு நடத்தத்தானே வேண்டும். அதுதானே முழுமையான ஜனநாயக பூர்வமான செயற்பாடாக இருக்க முடியும். இதன் மூலமே ஜனநாயக மீட்புக்காக ஒரு புதிய வடிவத்தை உருவாக்க முடியும் என நாங்க நம்புகிறோம்.

தேசம்: தெரிவு செய்பட்ட அந்த முக்கியமான தோழர்கள் ஞாபகம் இருக்கா?

அசோக்: எல்லா வெகுன அமைப்புக்களிருந்தும் ஜன நாயக அடிப்படையில் தேர்தல் மூலம்தான் இந்த தோழர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். பிரசாத்…

தேசம்: பிரசாத் இப்ப எங்க இருக்கிறார்.

அசோக்: பிரசாத் லண்டனில் இருக்கிறார்.

தேசம்: வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவரா?

அசோக்: இல்லை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர், கிராமம் மறந்துட்டேன். தீபிநேசன் அமெரிக்காவிலயோ கனடாவிலயோ இருக்கிறார். பெண்கள் அமைப்பில் இருந்து கலா, தொழிற் சங்கத்தில் இருந்து கௌரிகாந்தன், முத்து, ராஜன், ஐ பி மூர்த்தி, சத்தியன் மாணவர் அமைப்பிருந்து தீபநேசன், டேவிட் அர்ச்சுனா ஏனைய அமைப்புக்களிலிருந்து தவநாதன் செல்வம் , துரைசிங்கம் , எல்லாளன், இப்படி 17 தோழர்கள். பெயர்கள் ஞாபகம் இல்லை. மொத்தம் 17 பேர் அதோட நாங்கள் நான்கு பேர் சென்றல் கமிட்டீ.

தேசம்: இங்கேயும் ஒரு பெண் தோழர்தானா…

அசோக்: இல்லை. ஜெயந்தி என்ற தோழரும் இருந்தவங்க என நினைக்கிறேன்.

தேசம்: முத்து என்டுறது?

அசோக்: சிறிதரன். லண்டனில் இருக்கிறார்.

தேசம்: ராஜன்?

அசோக்: ராஜன் கனடாவில் இருக்கிறார்.

தேசம்: ஜென்னியும் வருகின்றாரா?

அசோக்: இல்லை. முன்றாம் நாள் மாநாட்டிலிருந்து வெளியேறி விட்டாங்க என நினைக்கிறேன்.

தேசம்: அவர் ஏன் வெளியேறினவர்…?

அசோக்: குற்றச்சாட்டுகள் அவங்க மீதும் வந்தது. குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட உடன் அவர் வெளியேறிட்டாங்க. முகுந்தனின் விசுவாசி என்றும் தளத்தில் தோழர்களை உளவு பார்த்ததாகவும் அவங்க மீது குற்றச்சாட்டுக்கள் வந்ததென நினைக்கிறேன். பல விடயங்கள் ஞாபகம் இல்லாமல் இருக்கிறது.

தேசம்: தள மாநாடு நடந்து உடனடியாக அங்க போனீர்களா அல்லது?

அசோக்: தள மாநாடு முடிந்தவுடன் எல்ரீரீஈ, ரெலோ பிரச்சனை தொடங்கி விட்டது. அதனால் உடனடியாக பின் தளம் போக முடியவில்லை.

தேசம்: எண்பத்தி ஆறு ஏப்ரலில் ரெலோவுக்கு எதிரான தாக்குதல்கள்…

அசோக்: நாங்கள் பின் தளம் போவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் போது புலிகளின் ரெலோ மீதான தாக்குதல் பயங்கரமாக தொடங்கிவிட்டது.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் போகல.

அசோக்: அதுக்குள்ள மாட்டுப்பட்டு விட்டோம் நாங்கள். அது முடிந்ததற்கு பிற்பாடுதான் நாங்கள் பின் தளம் போறம்.

தேசம்: மூன்று நான்கு மாதங்கள் அதற்குள்ளேயே இருந்திருக்கிறீர்கள்.

அசோக்: அதுக்கு பிற்பாடுதான் மன்னாருக்கு எல்லாரும் போறம். அங்கிருந்துதான் பின்தளம் சென்றது.

தேசம்: ஒரேயடியா போகிறீர்கள்…

அசோக்: இதுல ஒன்று சொல்லவேண்டும். அந்த மாநாட்டில் கண்ணனும் கலந்து கொள்கிறார். அவர் பார்வையாளராக கலந்து கொள்கினறார்.

தேசம்: படைத்துறைச் செயலாளர் கண்ணன்…

அசோக்: ஓம்.

தேசம்: அவர் மீதும் குற்றச்சாட்டு வந்திருக்கும் தானே…

அசோக்: அவர் மீது தனிப்பட்ட வகையில் குற்றச்சாட்டு இல்லை.

தேசம்: இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு 4 மாதத்திற்கு பிறகு தான் பின் தளம் போகிறீர்கள்…

அசோக்: சரியாக ஞாபகம் இல்லை. நான்கு மாதங்கள் இல்லை. குறைவு என நினைக்கிறேன்.

தேசம்: அப்போ இந்த குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் உமாமகேஸ்வரன்…

அசோக்: உமாமகேஸ்வரன் அவர் சார்ந்த உளவுத்துறை. முழுக்க முழுக்க தலைமை மீதும், மத்திய குழு மீதும் குற்றச்சாட்டுக்கள் விமர்சனங்கள் வைக்கப்பட்டது. புளொட்டின் அமைப்பு வடிவம், மேலிருந்து அதிகார உருவாக்கம், சமத்துவம், ஜனநாயகம்,தோழமை அற்ற தன்மை பற்றியெல்லாம் . அரசியல் கோட்பாடு சார்ந்து ஆரோக்கியமான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. உண்மையிலேயே இப்ப நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.

தேசம்: அப்போ நீங்கள் இவர்கள் செய்த சிபாரிசு அல்லது தீர்மானங்களில் இப்ப இருக்கிற மத்திய குழு உறுப்பினர்கள் திருப்பியும் மத்திய குழுவில் இருப்பதற்கு சம்மதம் வழங்கப்பட்டதா? அல்லது பின் தளத்தில் மத்திய குழுவை முழுமையாக கலைத்துவிட்டு முற்றிலும் புதிய மத்திய குழுவை உருவாக்குவதுதான் நோக்கமா?

அசோக்: மத்திய குழுவை முழுமையாக கலைப்பதுதான் நோக்கம். அதில் நாங்களும் சம்பந்தப்பட்ட ஆட்கள் தானே. நாங்கள் நல்லவர்கள் அவர்கள் பிழையான ஆட்கள் என்று இல்லை. ஒட்டுமொத்தமாக மத்திய குழு அது எங்களையும் சாரும். புளொட்டின் தலைமை செய்த தவறுகள் என்ற அடிப்படையில் நாங்களும் குற்றவாளிகள்தானே. எனவே மத்திய குழு முழுமையாக கலைக்கப்பட்டு பின்தளத்தில் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்பபடும் தோழர்களும், தளத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட தோழர்களும் தலைமை அரசியல் வழிகாட்டி குழுவாக செயற்பட்டு புதிய மத்திய குழுவை உருவாக்குவார்கள் என்பதுதான் தீர்மானம்.