ENDLF

ENDLF

அன்புக்குரியவள் செல்வி புலிகளால் கடத்தப்பட்டு படுகொலை! துணைபோனவர்களும்!! ஆதரித்தவர்களும்!!! : பாகம் 29

 

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 29 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 13.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 29:

தேசம்: கடந்த உரையாடலில் நீங்கள் அமைப்பை விட்டு வெளியேறி பிறகு ஈ.என்.டி.எல்.எப் ஆரம்பித்து அதில் இருந்து வெளியேறினது பற்றி எல்லாம் கதைத்திருக்கிறோம். இப்ப கிட்டத்தட்ட நீங்கள் ஒரு நீண்ட ஒரு அரசியல் இடைவெளி ஒன்றுக்குள் வாறீர்கள். கிட்டத்தட்ட 86 ஆம் ஆண்டு கடைசியில் இருந்து அரசியல் வெற்றிடம் ஒன்று வருது. அந்த ஐந்து ஆண்டுகள் 87 களில் இருந்து 92ஆம் ஆண்டு பரிசுக்கு வரும்வரைக்கும் எப்படி அந்த சூழல் இருந்தது தமிழகத்தில்.

அசோக்: நாங்கள் ஈ.என்.டி.எல்.எப் தொடர்பாக முரண்பட்டு வெளியேறும்போது மிகுந்த பொருளாதார நெருக்கடி இருந்தது. நாங்கள் எந்தவித திட்டமிடலும் இல்லாமல் தானே இருந்தனாங்கள். பொருளாதார ரீதியாக மிக நொந்துபோன காலம் தான் அது. என்ன செய்வது என்று தெரியவில்லை. தெரிந்த தமிழகத்து இடதுசாரி தோழர்கள் பலர் எங்களுக்கு உதவிகள் செய்தாங்க. குறிப்பாக செம்பியன் என்றொரு தோழர். அடுத்தது ஏழுமலை என்றொரு தோழர்.

தேசம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர்களா?

அசோக்: செம்பியன் தோழர் அவர் கட்சி சார்ந்தவர் அல்ல. அந்த நேரத்தில் எக்ஸ்ரே ரிப்போட் என்ற வாராந்த சஞ்சிகை ஒன்றை வெளியிட்டு கொண்டிருந்தவர். அவர்தான் அதன் ஆசிரியர்.

அவருடைய உதவி கிடைத்தது. இவரும் தோழர் ஏழுமலையும் தோழர் டக்ளஸ் ஆட்களுக்கும் நிறைய ஹெல்ப் பண்ணினார்கள். தோழர் ஏழுமலை எக்ஸ்ரே ரிப்போர்ட் சஞ்சிகையின் காரியாலய பொறுப்பாளராக இருந்தார். இந்த பத்திரிகை காரியாலயம்தான் எங்களுக்கு பல நாட்கள் தஞ்சம் கொடுத்தது. இந்த தோழர்களை எல்லாம் வாழ்க்கையில் மறக்க முடியாது.

தேசம்: இது நீங்கள் எல்லோரும் ஒரு இடதுசாரி கருத்தியலில் இருந்தபடியால் அவர்களோடு தொடர்புகள் இருந்திருக்கு.

அசோக்: ஓம். அடுத்தது ஆரம்ப காலங்களிலேயே இந்தியாவுக்கு போன காலங்களிலேயே இலக்கிய அரசியல் நட்புகள் கூட இருந்தது.

தேசம்: பேனா நண்பர்களுக்கு ஊடாகவா?

அசோக்: இல்லை இல்லை. இந்தியாவில் ஏற்பட்ட உறவுகள். அரசியல் இலக்கிய உறவுகள். நிழல் திருநாவுக்கரசு…

தேசம்: இதெல்லாம் நீங்கள் மத்திய குழு கூட்டங்களுக்கு போகேக்கயா?

அசோக்: போகேக்க அந்தக் காலங்களில் ஏற்பட்ட உறவுகள். அப்போ அவங்களும் நிறைய ஹெல்ப் பண்ணினார்கள்.

தேசம்: யார் அப்படி சொல்லக் கூடிய ஆட்கள்?

அசோக்: தோழர்கள் நிழல் திருநாவுக்கரசு, ஜமாலன், காலக்குறி கான், சண்முகம், நீண்ட பயணம் சுந்தரம் நிறையபேர் இருந்தார்கள். நிறைய தோழர்கள் ஹெல்ப் பண்ணினார்கள். பத்திரிகையாளர் தீம்தரிகிட ஞாநி போன்றவர்களின் உறவுகள் இருந்தபடியால் எங்களுக்கு ஒரு ஆத்ம ரீதியான பலம் ஒன்று இருந்தது. தோழர் கேசவன், தோழர் பொதிய வெற்பன், எஸ்.வீ இராஜதுரை, வீரா.சந்தானம், போன்றவர்களின் உறவும் இருந்தது.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டுக்குள்ள இந்தியாவிலையும் ஒரு இடதுசாரி கருத்தியல் வலுப்பெற்று கொண்டிருந்தது அல்லது மார்க்சிச கட்சிகள் தமிழகத்தில் ஒரு போராட்டத்தை தொடங்குவது மாதிரியான சிந்தனைப் போக்குகளும் இருந்தது தானே.

அசோக்: எம். எல் குரூப்புகள் இருந்தது. மாக்சிச ஐடியோலொஜியோடு அரசியல் இலக்கிய சஞ்சிகைகள் வெளி வந்தகாலம் அது.

தேசம்: அவர்களோடு நீங்கள் இணைந்து வேலை செய்ய வேண்டும் என்று யோசித்தீர்களா?

அசோக்: நீண்ட காலமாகவே நான் போன காலத்தில் இருந்து மக்கள் யுத்த குரூப் – பீப்பிள்ஸ் வோரோடு (People’s War) எனக்கு உறவு இருந்தது. அதுல தான் எனக்கு நீண்ட பயணம் தோழர் சுந்தரம், தோழர் கேசவன் நிறைய தோழர்களின் உறவு எனக்கு இருந்தது. பெயர்கள் வேண்டாம். அந்த உறவுகள் ஒரு அரசியல் சார்ந்த உறவாக இருந்தது. அவர்கள் சின்ன சின்ன ஹெல்ப் எல்லாம் பண்ணினார்கள்.

தேசம்: இலக்கியம் சார்ந்த ஈடுபாடுகள் எப்படி இருந்தது அது எவ்வளவு தூரம்?

அசோக்: ஆரம்ப காலத்தில் எனக்கு இலக்கியம் தொடர்பான ஆர்வம் இருந்தபடியால் இலக்கியத் தொடர்பு நிறைய இருந்தது எனக்கு. என்னுடைய நண்பர்களும் இலக்கியவாதிகள் தான். அரசியல் சார்ந்தவர்கள் எல்லோரும் இலக்கியத்தோடு தொடர்பு கொண்ட தோழர்கள்தான். நாங்க அந்த நேரத்தில் பொங்கும் தமிழமுது என்ற சஞ்சிகை வெளியிட்டம் தானே டெசோவுக்கு. அந்த நேரம் நான் ஜெயகாந்தனை போய் பேட்டி கண்டேன். இலக்கிய ஆர்வத்தால்தான் அவரைப் பேட்டி கண்டேன். நீண்ட பேட்டி. அடுத்தது பொங்கும் தமிழமுதுதிற்காக அந்த நேரம் நான் நிறைய பேரை சந்தித்து எழுத வைத்தேன். அப்படி இலக்கிய உறவு ஒன்று இருந்தது. ஆனால் நான் இயக்கம் சார்ந்த இருக்கிறபடியால் அந்த உறவை என்னால் பேண முடியாமல் போய்விட்டது.

தேசம்: பிறகு அந்த இடைப்பட்ட காலத்தில் அந்த உறவுகள்…

அசோக்: அந்த உறவுகள் உதவிச்சு. அவங்க தான் எனக்கு துணையாக இருந்தவர்கள். நிழல் திருநாவுக்கரசு எல்லாம் மறக்க முடியாத தோழர்.

தேசம்: அதைவிட நான் நினைக்கிறேன் தமிழக எழுத்தாளர்களுக்கும் புலம்பெயர்ந்த அல்லது இலங்கை தமிழ் எழுத்தாளர்களுக்கும் இடையில் ஒரு தொடர்பாடல் அல்லது உறவு இருந்தது…

அசோக்: ஓம் அப்படியான உறவும் சூழலும் இருந்திருக்கு. ஒரு பக்கத்தில் பார்க்கப்போனால் அவர்கள் தங்களை இழந்து எங்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள். நாங்கள் அந்த நிலையில் இருந்தால் நான் நினைக்கல நாங்கள் உதவி செய்வோம் என்று. எங்களுக்கு தமிழ்நாட்டு மக்களும், இடதுசாரி இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் கொடுத்த ஒத்துழைப்பு இருக்குதானே, அந்த மனநிலை நான் நினைக்கவில்லை எங்களுக்கு இருக்கும் என்று. தங்களுக்கு சாப்பாடு இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மாதிரி. தோழர் நிழல் திருநாவுக்கரசு எல்லாம் வசதியான தோழர் இல்லை. பிஎச்டி செய்வதற்கு பதிஞ்சுபோட்டு வசதி இல்லாமல் பிஎச்டியை விட்டவர். குடவரைக் கோயில் ஓவியங்கள் தொடர்பாக ஒரு ஆய்வு செய்தவர். அப்படியான நெருக்கடியான சூழலிலும் எங்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தவர்கள். அவங்களை மறக்க இயலாது.

தேசம்: அதற்குப் பிறகு நீங்கள் பரிசுக்கு வந்த பிறகும் இலக்கிய செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தீர்கள். அதற்கு அங்க ஆதரவு…

அசோக்: நான் ‘அசை’ என்ற சஞ்சிகை வெளியிட்டேன் தானே. அதுக்கெல்லாம் முழு உதவி. நானும் நாவலனும் நடாத்திய இனியொரு இணையத்தளத்திற்கும் இந்த தோழர்கள் எழுதினாங்க. இங்க தோழர் யமுனா ராஜேந்திரன் செய்த உதவிகள் நிறைய. நான் கோட்பாட்டு ரீதியில் சிந்திக்கவும், எழுதவும் மிகவும் துணை நின்ற தோழர் அவர். அடுத்தது கோட்பாட்டு ரீதியாக பிற்காலத்தில் வளர்வதற்கான பின்புலமாகவும் அவங்க இருந்தார்கள். காலக்குறி சஞ்சிகை எல்லாம் கோட்பாட்டு ரீதியான சஞ்சிகை. கான் கொண்டு வந்தவர். அவர் சமீபத்தில்தான் காலமானவர்.

தேசம்: இந்தியாவில் இருந்த அந்த நான்கு ஆண்டுகளில் நிறைய பேரை வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைத்திருக்கிறீர்கள். அது எப்படி நடந்தது? ஏன் கேட்கிறேன் என்றால் ஒரு பொருளாதார பலம் இல்லாத நிலையில் ஏற்கனவே வெளிநாட்டுக்கு புலம் பெயர்ந்த தோழர்கள் உங்களுக்கு உதவி செய்தவையா? அது எப்படி அந்த ஏற்பாடு நடந்தது? வெளிநாடுகளுக்கு ஒரு காலகட்டத்தில் நான் நினைக்கிறேன் 90, 91 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெருந்தொகையான ஆட்கள் வெளிநாடுகளுக்கு வந்தவர்கள். அதில் குறிப்பாக புளொட் அமைப்பிலிருந்து வந்த ஆட்களும் நிறைய பேர் என்று நினைக்கிறேன். அது எப்படி நிகழ்ந்தது?

அசோக்: உருத்திரன் என்று ஒரு தோழர் இருந்தவர். அவர் புளொட்டில் இருந்தவர். அவர் சென்னையில் கம்யூனிகேஷன் சென்டர் ஒன்று வைத்திருந்தவர். அவர் குறைந்த செலவில் எல்லா தோழர்களையும் அனுப்பினார். அடுத்தது நாங்கள் வந்த பிறகு அங்க உள்ள தோழர்களை கூப்பிடுவது. முழுப் பணத்தையும் கொடுக்கத் தேவையில்லை. அப்போ குறிப்பிட்ட தொகைகளை கொடுத்து விட்டு பின் இங்கு வந்த பின் வேலை செய்து கொடுப்பது.

தேசம்: அப்போ நட்பின் அடிப்படையிலும் நம்பிக்கையின் அடிப்படையிலும் …

அசோக்: ஓம். நிறைய தோழர்கள் அப்படித்தான் வந்தவர்கள். லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வரக்கூடிய சூழல் எங்களுக்கு இருக்கவில்லை தானே. முதல் கொஞ்சம் காசு கொடுக்கறது பிறகு வந்து உழைச்சு மிச்சக்காசு கொடுக்கிறது. உருத்திரன் பக்கத்திலிருந்து அதற்கான உதவி கிடைத்தது.

தேசம்: உருத்திரன் அவர் இறந்து விட்டார் என்று நினைக்கிறேன்…

அசோக்: இறந்திட்டார். தீவுப் பகுதியை சேர்ந்த தோழர். நிறைய பேரை அனுப்பி இருக்கிறார்.

தேசம்: புளொட்டில் இருந்த சிலபேர் இந்தியாவின் மற்ற பகுதிகளில் வட இந்தியாவில் போயிருந்து இப்படியான உதவிகளை செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் அப்படியா? உருத்திரன் போல வேறு சிலரும் அந்த அமைப்புக்குள் இருந்தவர்களா?

அசோக்: அப்படி இருந்த மாதிரி நான் கேள்விப்படவில்லை. நான் அறிந்தவரை உருத்திரன் தான் அந்த காலகட்டத்தில் நிறைய ஹெல்ப் பண்ணினது. வேற ஆட்கள் ஹெல்ப் பண்ணின மாதிரி தெரியல. சில வேளை எனக்கு தெரியாமல் இருக்கலாம்.

தேசம்: எத்தனை பேர் அளவில் உங்களுக்கு தெரிய அந்தக் காலகட்டத்தில் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து இருப்பார்கள்? நீங்கள் இருந்த அந்த ஐந்து ஆண்டு காலப்பகுதியில் ?

அசோக்: எனக்கு தெரிய வெவ்வேறு ஏஜென்சிக்கால வந்த தோழர்கள் இருக்கிறார்கள். உருத்திரனுக்கால வந்த தோழர்களா?

தேசம்: இல்லை இல்லை பொதுவாக…

அசோக்: பொதுவா நாங்கள் ஒரு 100 -150 தோழர்கள் வந்திருப்போம். சில தோழர்களை ஐரோப்ப நாடுகளுக்கு கூப்பிட முடியாமல் போய்விட்டது. அந்தத் தோழர்களை வளைகுடா நாடுகளுக்கு அனுப்பி வைத்தோம். இலங்கைக்கு போன தோழர்களுக்கு அங்க இருக்க முடியாமல் போய்விட்டது. அவங்கள் கொழும்புக்கு போய் குறைந்த பயணச் செலவோடு ஏஜென்சிக்கு ஊடாக அப்படி நிறைய தோழர்கள் வளைகுடாவுக்கு போனவர்கள். வளைகுடாவுக்கு போனவர்கள் கூட சில தோழர்கள் ஐரோப்பாவுக்கு வந்து விட்டார்கள். ஏனென்றால் பெருந்தொகை காசு வேணும் தானே அந்த நேரம் வளைகுடாவுக்கு போறதுக்கு குறைந்த காசுதான்.

தேசம்: 87 ஆம் ஆண்டிலிருந்து 92 ஆண்டு அந்த இடைப்பட்ட காலம் வரைக்கும் நீங்கள் இலங்கைக்கு செல்லவில்லை…

அசோக்: பின்தள மாநாட்டுக்கு வந்ததற்கு பிறகு நான் இலங்கைக்கு செல்லவில்லை.

தேசம்: இன்றைக்கு வரைக்கும் செல்லவில்லை…

அசோக்: இன்றைக்கு வரைக்கும் போகவில்லை.

தேசம்: இந்த காலகட்டத்தில் தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் வருது. விடுதலைப் புலிகளுக்கும் முரண்பாடு வந்து ஒரு யுத்தம் நடக்கிறது இந்திய ராணுவத்தோடு. பிறகு 91 ஆம் ஆண்டு இந்திய ராணுவம் திருப்பி வருது. அதுக்குள்ள ராஜீவ் காந்தி கொலை செய்யப்படுகிறார். இவ்வாறு இலங்கை அரசியலைப் பொறுத்தவரைக்கும் அது மிக வேகமாக மாறிக் கொண்டிருக்கிற காலகட்டம். அதேநேரம் விடுதலைப் புலிகளின் கரங்கள் நாளுக்கு நாள் பலமடைந்து கொண்டு வருது. செல்வியும் அந்த நேரம் கடத்தப்படுறா…

அசோக்: அந்தக் கால கட்டத்தில் நாங்கள் ஒரு அரசியல் அனாதை தான். ஏனென்றால் இந்த கால கட்டத்தில் நாங்கள் எந்த அரசியலிலும் பெருசா ஆர்வம் காட்டவில்லை. எங்கட சொந்த வாழ்க்கை மிக மோசமாக இருந்த காலகட்டம் தானே. எங்களோட வந்த தோழர்களை காப்பாற்றுவது தான் எங்கட முயற்சியாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில்தான் 91 ஓகஸ்ட் 30 செல்வி புலிகளால் கடத்தப்படுகிறார். யுனிவர்சிட்டிக்கு முன்னால இருந்த ஆத்திசூடி லேனில் எனக்கு தெரிந்த நண்பர்களுடைய வீட்டில் தான் இருந்தவா. அப்போ புலிகளின் பெண்கள் பிரிவால் விசாரணைக்கு என்று அழைக்கப்பட்டு பிறகு என்ன நடந்தது என்று தெரியாது.

தேசம்: அதற்குப்பிறகு என்ன நடந்தது என்றே தெரியாது…

அசோக்: பிறகு கொலை செய்யப்பட்டு விட்டார்.

தேசம்: செல்வியை மீட்பது சம்பந்தமா அல்லது விடுவிப்பது சம்பந்தமா நீங்கள் ஏதாவது நடவடிக்கையில் ஈடுபட்டீர்களா?

அசோக்: கம்யூனிகேஷன் இல்லைதானே. கடத்தி ஒரு வாரத்துக்குப் பிறகு தான் இந்த சம்பவமே எனக்கு தெரியும். இப்படி அரெஸ்ட் பண்ணி விட்டார்கள் என்று. அதற்குப் பிறகு பல்வேறு மட்டங்களில் சிவத்தம்பி தொடர்பாக ஒரு கதை இருந்தது தானே அவருக்கு புலிகளோடு உறவு இருக்கு என்று. அவரோடு உரையாடிய போது அவர் தன்ற பக்கத்தில் உள்ள இயலாமையை சொல்லிக் கொண்டிருந்தார். ட்ரை பண்ணுறேன் ஆனால் தெரியும் தானே பிரச்சினைகள் என்று சொன்னார். பிறகு நாங்கள் இந்தியாவிலிருந்த விடுதலைப் புலிகள் சார்ந்த ஆட்களோடு எல்லாம் நாங்க நிறைய ட்ரை பண்ணினது. அந்த நேரம் பிபிசிக்கு தெற்காசிய பிரிவில் ஒருத்தர் இருந்தவர். விடுதலைப் புலிகளோடு மிக நெருக்கமாக இருந்தவர். அவர் எல்லாம் சொன்னார் நாங்கள் தீவிரமாக முயற்சி செய்கிறோம் என்று. எதுவுமே சாத்தியப்படவில்லை. அந்த நேரத்தில் ஃபாதர் இமானுவேல் வந்தவர். அவரையும் சந்தித்து கதைத்தேன். அவர் ஒரு புலியாகத்தான் கதைத்தார்.

தேசம்: லண்டனில் இருக்கிறார் நாடுகடந்த தமிழீழத்தில்…

அசோக்: ஓம். அப்ப ஒரு சிஸ்டர் தான் ஏற்பாடு செய்து தந்தவர் எனக்கு. அவர் சொன்னார் புலிகள் செய்திருக்க மாட்டார்கள். புலிகள் ஒரு புனிதமான அமைப்பு. அப்படி எல்லாம் கதைக்க வெளிக்கிட்டார். பிறகு சொன்னார் அப்படி நடந்து இருந்தால் நான் முயற்சி செய்கிறேன் என்று. தெரியும் தானே…

தேசம்: அவ்வளவு அக்கறை எடுக்கவில்லை…

அசோக்: அவர் அவ்வளவு அக்கறை எடுக்கவில்லை…

தேசம்: அதை விட உங்களுக்கு தனிப்பட்ட முறையில் புலிகளிலிருந்த சில நண்பர்களையும் உங்களுக்கு ஓரளவு தெரிஞ்சிருக்கும் என்று நினைக்கிறேன். இப்ப ரவி அருணாச்சலம் போன்றவர்கள்…

அசோக்: ரவி அருணாச்சலம் அதற்கு பிறகுதான் புலிகளுக்கு போனவர். வெளிநாடு வந்த பின். அந்த நேரம் இந்தியாவில் புலிகளில் இருந்த நண்பர்கள் தொடர்பு கிடைக்கவில்லை. புலம்பெயர்ந்து வந்த பிறகு சந்தித்தேன். குறிப்பாக நோர்வே ரஞ்சித், இப்ப லண்டனில் இருக்கிறார். அவருக்கு எங்களைக் போலவே புலிகள் தொடர்பாக விமர்சனம் இருந்தது. அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் சிலர் நினைத்திருந்தால் அந்த நேரத்தில் செல்வியை காப்பாற்றி இருக்கமுடியும். உதாரணமாக புலிகளின் மிக முக்கிய அதிகாரத்தில் இருந்தவர் நோர்வே சர்வேஸ்வரன். அவர் இப்ப கடைசியா 2009 வரைக்கும் புலிகளுடைய ஐரோப்பாவில் அதிகாரமிக்க தலைமையில் இருந்தவர். கே பி யோடு மிக நெருங்கிய உறவு. அவர் எல்லாம் நினைத்து இருந்தால் செல்வியை விடுவித்து இருக்கலாம் ஏனென்றால் புலிகளில் பவர்ஃபுல் ஆன ஆட்கள் இவர்கள்.

தேசம்: சிதம்பரநாதன், பத்மினி சிதம்பரநாதன் ஆட்கள்…

அசோக்: சிதம்பரநாதன் ஆட்கள் தொடர்பாக எல்லாம் நிறைய விமர்சனம் இருக்கு…

தேசம்: பல்கலைக்கழகங்களில் இருந்தவர்கள்…

அசோக்: அவங்கதான் பொங்குதமிழ் எல்லாம் செய்தவர்கள். யாழ்ப்பாண பல்கலைக்கழக மட்டத்தில் புலிகளுக்கு மறைமுகமாக வேலை செய்தவங்க. செல்வி கடத்தப்பட்டது தொடர்பாக புலிகள் பக்கத்தில் இருந்து யாரும் கதைக்க தயாரில்லை. இன்றைக்கும் கூட என்ன நடந்ததென கதைக்க தயாரில்லை . அந்த கால கட்டத்தில் புலிகளில் இருந்த பலருக்கும் இது தெரிந்திருக்கும்.

பெண்கள் பிரிவு என்ற படியால் தமிழினிக்கு எல்லாம் தெரிந்திருக்கும். தமிழினி இறந்து விட்டாங்க. ஆனால் யாருமே கதைக்கத் தயாரில்லை புலிகள் பக்கத்திலிருந்து . செல்வி கடத்தப்பட்டு இருந்த காலகட்டத்தில் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டி க்கு போன இடத்தில் எனக்கு தெரிந்த ஊடகவியலாளர் ஒருவர் கேட்டிருக்கிறார் தமிழ்ச்செல்வனிடம். அதற்கு தமிழ்ச் செல்வன் சொல்லி இருக்கிறது, அந்த கதையை விடுங்கள் என்று சொல்லி. மற்றது கவுண்டர் பாயிண்ட் பத்திரிகையாளரிடம் சொல்லுகிறார்கள் செல்வி இன்னும் கஸ்டடியில் தான் இருக்கிறார். விசாரித்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லி அந்த நேரம் அன்டன் பாலசிங்கமே பேட்டி கொடுத்திருக்கிறார். ஆனால் புலிகள் பக்கத்திலிருந்து யாருமே கதைக்கத் தயாரில்லை.

இன்றைக்கு மனித உரிமை பேசுற நோர்வே சர்வே எல்லாம் மிகமோசமான ஆட்களா இருந்தவங்க. சர்வே புலிகளின் அதிகாரத்தில் இருந்த காலகட்டத்தில் நானும் பரிசில் இருந்தன். ஊடகத் துறைக்கு எல்லாம் அவர்தான் பொறுப்பாக இருந்தவர். அதிகாரமிக்க நபர்களாகத்தான் இருந்தவர்கள். இன்றைக்கு ஜனநாயகம், மனித உரிமை பற்றி நோர்வேயில் இருந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

தேசம்: செல்வி கடத்தப்பட்டது கொலை எப்ப நடந்தது என்பதும் தெரியாது…

அசோக்: 91 ஓகஸ்ட் கடைசி காலம் 30 ஆம் திகதி மட்டில. முப்பது வருஷம் வருது.

தேசம்: அதற்கு பிறகு எந்த தகவலும் இல்லை? உத்தியோகபூர்வமாக புலிகள் அறிவிக்கவும் இல்லை.

அசோக்: ஒரு கட்டத்தில் செல்வியின் வீட்டுக்கு போய் சொல்லி உள்ளார்கள். செல்வி வீட்டார் அடிக்கடி புலிகளிடம் சென்று கேட்டுக் கொண்டு இருக்கும் போது புலிகள் ஒரு கட்டத்தில் வரவேண்டாம் முடித்தாச்சு என்று சொல்லிட்டாங்க.

தேசம்: ஆனால் என்ன காரணத்துக்காக என்று தெரியல. அவா ராணுவ ரீதியாக எந்த செயலிலும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை முழுக்க கலை இலக்கிய ஈடுபாடு தான்?

அசோக்: ஒன்றுமே இல்லை. அந்தக் காலத்தில கவிதைகள், மொழிபெயர்ப்பு நாடகங்கள் எல்லாம் செய்துகொண்டிருந்தவங்க… ரவி அருணாச்சலம் போன்றவர்களெல்லாம் செல்வி புலிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தவ அதனால தான் புலிகள் கொலை செய்தது என்று சொல்லிக் கொண்டிருந்தாங்க.

தேசம்: ரவி அருணாச்சலம் புலிகள் பற்றி விமர்சித்த ஒரு ஆள் தானே…

அசோக்: பிற்காலத்தில் புலிகளுடைய ஆதரவாளராக வந்த பிறகு இந்தக் கதைகள் சொன்னவர். செல்வி அந்த நேரம் மொழிபெயர்ப்பு நாடகங்கள் போட்டிருக்கிறா. அதிகாரத்துக்கு எதிரான மொழிபெயர்ப்பு நாடங்களை யாழ்ப்பாணம் யுனிவர்சிட்டியில் போட்டிருக்கிறா. தியேட்டர் சயன்ஸ் தானே செய்தவ செல்வி. அதிகாரத்துக்கு எதிரான நாடகங்கள் போடும்போது புலிகள் இயல்பாகவே தங்களுக்கு எதிரானது என்று கருதிக்கொண்டாங்க. அந்தத் தகவல்களை செல்விக்கு எதிராக புலிகளுக்கு பரிமாறினதில குறிப்பிட்ட ஆட்கள் இருந்திருக்காங்க.

தேசம்: குறிப்பிட்ட அந்த ஆட்கள் யா ர் சொல்ல முடியுமா?

அசோக்: எனக்கு சிதம்பரநாதன் மீது சந்தேகம் இருக்கு. அவரோட மிக நெருக்கமாக இருந்த பல பேர் இது பற்றி அவர்களோடு கதைத்துப் போட்டு மறுத்திருக்கிறார்கள். அவர் அப்படி அதில் சம்பந்தப் படவில்லை என்று சொல்லி.

தேசம்: யார் இந்த தகவல்களை புலிகளுக்கு கொடுத்தது என்பதில்…

அசோக்: இந்தக் குற்றச்சாட்டுகளை வைத்தபோது அவர் மறுத்ததாக அவரோடு நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் எனக்கும் நண்பர்களாக இருக்கிறார்கள், சொல்லி இருக்கிறார்கள்.

தேசம்: கிட்டத்தட்ட இலங்கை ராணுவம் மனித உரிமை மீறல்களை நடத்தியிருக்கோ கிட்டத்தட்ட அதே நிலைமையில்தான் எங்க பக்கத்திலும் நடந்திருக்கு. இல்லை அதிலும் பார்க்க மோசமாக நடந்திருக்கு.

அசோக்: இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். கேட்கலாம். புலிகளுடைய படுகொலை தொடர்பாக எதுவும் செய்யமுடியாது. குறைந்தபட்சம் இதுதொடர்பான வருத்தம் கூட யாரிடமும் இல்லை. இன்றைக்கு புலிகளின் மிக விசுவாசிகளாக படைப்பாளிகளாக, கவிஞர்களாக பெண்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் இருக்கிறார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கிறார்கள். பெண்கள் மீது புலிகள் செய்த படுகொலைகள் தொடர்பாக குறைந்தபட்ச மனவருத்தத்தை கூட வெளிப்படுத்தக் கூட தயாரில்லை. அவங்களும் பெண்கள் தான். படைப்பாளிகள், கவிஞர்கள் சொல்லப்படுகிற பெண்கள் கூட பெண்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் தொடர்பாக குறைந்தபட்சமாக மனவருத்தத்தை வெளிப்படுத்தவில்லை. இன்டைக்கு பேஸ்புக்ல பார்க்கலாம் புலிகள் உத்தமமானவர்கள், பிரபாகரன் மிக உத்தமமானவர் என பிழைப்பு இலக்கியம் செய்பவர்களை. அது அவங்கட சுதந்திரம். ஆனா குறைந்தபட்சமாக இந்த மனிதாபிமான கண்டனங்களை, மனவருத்தங்களைக் கூட வெளிப்படுத்த தயாரில்லை தானே. கொலை செய்த புலிகளை விட கொடிய மனநிலை கொண்டவங்க இவர்கள்.

தேசம்: ரவி அருணாச்சலத்தை விட வேறு யாராவது இப்படியான சம்பவங்களை ஏற்றுக்கொண்டு வெளிப்படையாக கருத்துகள் சொல்லி இருக்கிறார்களா?

அசோக்: இல்லை. நண்பர்கள் என்ற அடிப்படையில் ரவி அருணாச்சலம் கொலையை கண்டிக்கின்ற நபராக இல்லை. ஆரம்பத்தில் இருந்தவர். சரிநிகர் பத்திரிகையில் வேலை செய்யும்போது புலிகள் தொடர்பாகவும், பிரபாகரன் தொடர்பாகவும் மிக கடுமையான விமர்சனங்களை முன் வைத்ததில் ரவி அருணாச்சலமும் ஒராள். பல்வேறு புனை பெயர்களில் நிறைய விமர்சனங்களை வைத்தவர். காலப்போக்கில் ஐரோப்பாவுக்கு வந்தபிறகு அவருடைய முகம் மாறிவிட்டது. அவர் மட்டும் இல்லை கடந்த காலங்களில் புலிகளுடைய செயற்பாடுகளுக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை வைத்த பலர் காலப்போக்கில் தங்களுடைய தனிப்பட்ட நலன்களுக்காக மாறிவிட் டார்கள்.

ரோவின் திருவிளையாடல்கள்: தோழர் டக்ளஸ் – பரந்தன் ராஜன் முரண்பாடு மாணிக்கன் தாசன் அசோக் மீது துப்பாக்கிப் பிரயோகம் – குன்றக்குடி அடிகளாரிடம் அடைக்கலம்!!! – பாகம் 28

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 28 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 12.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 28:

தேசம்: ஈழ தேசிய ஜனநாயக முன்னணியின் ENDLF யின் உருவாக்கம் பற்றி சொல்லி இருந்தீர்கள். அது உண்மையா நீண்ட காலம் நீடிக்கவில்லை. அதுல முரண்பாடு வருது தோழர் டக்ளஸுக்கும் பரந்தன் ராஜனுக்கும். அது எந்த அடிப்படையில் அந்த முரண்பாடு வருது. அரசியல் ரீதியான முரண்பாடா? தனிநபர் பிரச்சினையா? அல்லது ஆளுமை சம்பந்தமான போட்டியா? ஏன் இந்த முரண்பாடு?

அசோக்: முதன்முதல் டக்ளஸ் தோழருடன் நாங்கள் அமைப்பு உருவாக்கம் தொடர்பாக கதைக்கும் போது அவர் கேட்டவர் ராஜன் இதுகுள்ள வாறாரா என்று. நாங்கள் சொன்னோம் அவருடன் நாங்கள் கதைத்திருக்கிறோம். அவங்களோட தோழர்கள் நிறைய பேர் வெளியேறிட்டாங்க. அவங்களையும் உள்வாங்க வேண்டும் என்று நோக்கம் இருக்குது. அவங்களுடனும் நிறைய நல்ல சக்திகள் இருக்கிறார்கள்.

அப்போ அவர் சில விமர்சனங்கள் வைத்தவர் ராஜனை பற்றி. சிறைக்குள் நடந்த பிரச்சனைகள் பற்றி…

தேசம்: இந்தப் போராட்டம் தொடங்குவதற்கு முதலே…

அசோக்: இல்ல. வெலிக்கடை சிறையில இவங்க எல்லாரும் ஒன்றாகத்தான் இருந்தார்கள். அப்போ அங்க புளொட்டில் இருந்த மாணிக்கதாசன், ராஜன் ஆட்கள் எல்லாம் நடந்துகொண்ட முறைகள் தொடர்பாக கடும் விமர்சனம் வைத்தார். அங்கேயே அவங்களுக்கு முரண்பாடு தொடங்கி விட்டது. அந்த முரண்பாடு தனிநபர் முரண்பாடாக கூர்மை அடைந்து விட்டது. அப்போ அவர் சொன்னார் சிக்கலாக இருக்கும் காலப்போக்கில் என்று.

அப்போ நாங்க சொன்னோம் தனிநபர் முரண்பாட்டுக் அப்பால் சுமூகமாக அமைப்பு ஒன்றை உருவாக்குவோம் என்றும் முரண்பாடுகள் வராமல் நாங்கள் பொறுப்பு நிற்கிறோம் என்றும், அந்த முரண்பாடுகள் வராம இருக்க அதற்கான எல்லா பொறுப்புகளையும் நாங்கள் எடுக்கிறோம் என்று சொல்லி அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் அவர் அமைப்பிற்குள் வந்தவர்.

இந்தக் காலகட்டத்தில் இந்தியா இலங்கை தொடர்பான விடயங்களில் கவனம் கொள்ளத் தொடங்குகிறது. காலப்போக்கில் இலங்கையில் இந்திய இராணுவத்தை இறக்கும் எண்ணம் உருவாகிறது. இதற்காக சில இயக்கங்களுக்கு இந்தியா பயிற்சி அளிக்க முடிவு பண்ணுகிறது. எங்களையும் அணுகுகிறது. நாங்களும் பயிற்சிக்காக செல்கிறம். பயிற்சி முடிந்து ஒரு மாதம் கழித்து சென்னை வந்து பார்த்தால் டக்ளசிக்கும் ராஜனுக்கும் முரண்பாடு கூர்மைடைந்து இருந்தது.

தேசம் : என்ன காரணத்தால் இந்த முரண்பாடுகள் ஏற்படுகிறது?

அசோக்: அந்தத் தனி நபர் முரண்பாடு இதுகுள்ள வந்து ஆளுமை செலுத்த தொடங்கிட்டுது. நாங்கள் அமைப்பு தொடங்கினதற்கு பிறகு பல்வேறு அரசியல் சக்திகள் இந்திய அரசு, ஏனைய அரசியல் தொடர்பான உறவுகளை, உளவுத்துறைகள் போன்ற அந்த உறவுகளை கமிட்டி மூலமாக அணுக வேண்டும் என்பதுதான் எங்கட விதி முறை.

ஏனென்றால் தனித்தனியாக அணுகினால் அவர்கள் தனித்தனியாக எங்களை கையாள வெளிக்கிடுவார்கள். உளவுத்துறை எப்பவுமே தனி நபர்களை வைத்து தான் எதையும் செய்கிறது. நாங்கள் அவர்களால் வாங்கப்படுவதே எங்களுக்கு தெரியாம இருக்கும். புளொட்டிலிருந்து தனி நபர்களாக உளவுத்துறைகளோடு உறவு வைத்திருந்தவர்களை குறிப்பாக ரோ எப்படி பயன்படுத்தியது எங்களுக்கு உள்ள படிப்பினைதானே. அதே தவறையும் ஆபத்தையும் மீண்டும் நாம் விடக்கூடாது என்பதில் நாங்க கவனமாக இருந்தம். இனிமேல் வந்து உளவுத்துறை தொடர்பாக ரோ, இந்திய பொலிஸ் துறை, ஐபி, கியூ பிரான்ச் போன்றவற்றோடு தனிநபர்கள் கதைக்கக் கூடாது என்று. அப்படியே அவங்க தனிநபரை கூப்பிட்டாலும், கமிட்டியில் முடிவெடுத்துப் போட்டு தான் போய் கதைக்க வேண்டும் என்று சொல்லி முடிவெடுத்திருந்தோம்.

இரரணுவக்கமிட்டி, அரசியல் கமிட்டி இணைந்து முடிவுகளை எடுக்கும்.எந்த சந்திப்புக்களும் தனிநபர் சார்ந்து இருக்கக் கூடாது என்பது எங்கட தீர்மானம். அவங்கள் வடிவாக தனிநபர்களை கையாளத்தொடங்கிட்டாங்க. ராஜனைத் தனிய சந்திக்கிறது, டக்ளஸை தனிய சந்திக்கிறது, உங்களுக்கு தனிய ஆம்ஸ் தாறம் என்கிறது. இப்படி இவர்கள் கையாண்டவுடன் அது பெரிய முரண்பாடாக போய்விட்டது.

ஒரு தடவை ஒரு தொகுதி ஆம்ஸ் தாறம் என்று தனியா ராஜனுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி ஆம்ஸ்சும் கொடுத்து விட்டார்கள். இது டக்ளஸ் தோழருக்கு தெரியாது. தெரிந்தவுடன் பிரச்சனையாகி விட்டது. எங்களுக்கு இந்தப் பிரச்சினையெல்லாம் பயிற்சிமுடித்து வந்தபின்தான் தெரியவருகிறது.

இந்த முரண்பாடுகள் பற்றி ராஜனோடு பேசுகிறோம். எந்த முடிவும் தனிநபராக எடுக்கமுடியாது கமிட்டிதான் முடிவு பண்ணவேண்டும் என்று.

மிலிட்டரி கொமிசாரில் கதைக்கப்பட்டு நாங்கள் ஆயுதம் வாங்குவதா இல்லையா என்று தீர்மானத்துக்கு வர வேண்டும் என்று சொல்கிறோம். இந்த முரண்பாடு கூர்மையடையுது. ராஜனுக்கு எங்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை சுமூகமாக நடக்கல. அப்போ நாங்கள் சொல்லுறோம் நாங்கள் வெளியேறுகிறோம் என்று. அதுக்கு முதல் இந்த காலகட்டத்தில் டக்ளஸ் தோழர் வெளியேறிட்டார். இதைப் பற்றி நாங்கள் ராஜனிட்ட கதைக்கும் போது ராஜனுக்கும் எங்களுக்கும் இந்த முரண்பாடு வருகிறது.

தேசம்: இது நான் நினைக்கிறேன்… நீங்கள் அறிக்கைவிட்டு ஒரு சில வாரங்கள் அல்லது நாட்கள்…

அசோக்: எங்களுக்கும் ENDLF க்குமான உறவுக்காலம் காலம் 6 மாதம் 7 மாதம் இருக்கும். அதுக்குள்ள முரண்பாடு வந்து நாங்கள் வெளியேறிட்டம்.

தேசம்: ஒருவகையில் அது நல்லம் என்று பார்த்தால் முதல் உமாமகேஸ்வரன் புளொட்டுக்குள்ள நடந்தவைகளை பார்க்கும்போது எவ்வளவு முன்னுக்கு அந்த பிரிவு முரண்பாடு நடக்குதோ அதால ஏற்படும் இழப்புகளும் குறைவு. இதே மாதிரியான பிரச்சனையை ஆரம்பத்திலேயே தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் எடுத்திருந்தால் இவ்வளவு பெருந்தொகையான தோழர்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள் அந்த வகையில இது ஓரளவுக்கு பரவாயில்லை என்றும் பார்க்கலாம்.

அசோக்: அதுல ஒரு நல்ல பண்பு என்ன என்று கேட்டால் நாங்கள் ராஜனுடன் கடுமையான முரண்பாடு வாய்த்தர்க்கம். நாங்கள் வெளியேறிய பின்னர் அதற்குப் பிறகு எங்கள் மீதான நடவடிக்கைகளோ தேடுதலோ குற்றச்சாட்டு எதுவுமே ராஜன் வைக்கேல. மிக கௌரவமாக அவரும் விலகிக்கொண்டார். நாங்களும் விலகிக் கொண்டோம். பிறகு ENDLF என்ற பெயரை தாங்களே எடுத்துக் கொண்டார்கள். அதற்குப் பிறகு தோழர்களை அடிக்கடி சந்திப்பேன். எந்த முரண்பாட்டையும் நாங்கள் வளர்த்துக் கொள்ள விரும்பவில்லை. நாங்கள் விலகிக் கொண்டோம். ஜனநாயக பூர்வமாக விலகிக் கொண்டோம்.

காலப்போக்கில் டக்ளஸ் தோழருக்கு நெருக்கடி வருகிறது. சூளைமேடு பிரச்சினை …

தேசம்: சூளைமேட்டில் என்ன பிரச்சினை?

அசோக்: சூளைமேடு சூட்டிங் பிரச்சனை இவர் மீது தான் குற்றம்சாட்டப்பட்டது. அந்த பிரச்சனையில் எல்லாம் மிக அழுத்தம் இருக்கிறது. அப்போ அவங்களுக்கு இந்தியாவில் தொடர்ந்து இருக்க முடியாத சூழல். எப்படியோ அவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் வேற இடத்துக்கு போக வேண்டும். அடுத்தது தொடர்ந்து அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கமும் இருக்கு. கட்டின அமைப்பும் சீர்குலைந்து போய்விட்டது. அப்போ நாட்டுக்கு போக வேண்டும் என்று முடிவெடுக்கிறார்.

தேசம்: நீங்கள் சொல்வதைப் பார்த்தால் எண்பத்தி ஆறு கால கட்டத்தில்தான் இது எல்லாம் நடக்குது.

அசோக்: எண்பத்தி ஆறு கடைசி காலகட்டத்தில்.

தேசம்: அப்போ அங்காள எண்பத்தி ஏழில் இந்திய ராணுவம் அங்க போகுது.

அசோக்: ஓம் அதற்கு முதல் தான் இது நடக்கிறது. அப்போ அவருக்கு இலங்கைக்குப் போய் அரசியல் செய்கின்ற நோக்கமெல்லாம் இருக்கிறது.

தேசம்: இந்த ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியை ராஜன் எடுத்த பிறகு, அந்த காலகட்டத்திலேயா ஈபிடிபி உருவாக்கப்பட்டது?

அசோக்: இல்லை இந்த காலகட்டத்தில்தான் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ன செய்கிறது என்று. இலங்கைக்கு போய் அரசியல் செய்கிற நோக்கமாக அசோக் சந்திரகுமார் 4- 5 பேரை இலங்கைக்கு அனுப்பி அதற்கான ஒரு பேச்சுவார்த்தை களத்தை உருவாக்குகிறார். உருவாக்கின பிறகு இவங்க தீர்மானிக்கிறார்கள் அங்கே போக வேண்டுமென்று. அப்போ அவர் எங்களையும் தங்களுடன் வந்து சேர சொல்லி கேட்கிறார். அதுல நான் மிக கவனமாக இருந்தேன். நான் சொன்னேன் எனக்கு உடன்பாடில்லை எனக்கு இந்த அரசியல் இனி வேண்டாம். நான் ஒதுங்கி இருக்கலாம் என்று.

பிறகு நான் தோட்டம் போட்ட வரலாறு வேற. என்னோட ஒரு 10 – 15 தோழர்கள் வந்துட்டாங்க. அவங்களை நான் காப்பாற்ற வேண்டிய தேவை வந்துவிட்டது. அந்த அடிப்படையில் நான்… அந்த வரலாறு வேற வரலாறு.

தேசம்: ஈபிடிபி ஒரு அறிக்கை விடுதா அந்த காலகட்டத்தில்?

அசோக்: ஓம் அது என்ன நடந்தது என்று கேட்டால், தோழர் ஈஸ்வரன் அவர் இங்கே இருந்து டக்ளஸ் தோழருடன் கதைக்கும்போது டக்ளஸ் தோழர் கேட்டிருக்கிறார் இப்படி ஒரு அமைப்பு ஒன்று தொடங்கப் போகிறோம் நீங்கள் சப்போர்ட் பண்ணுவீங்களா என்று. ஓம் என்று சொல்லியிருக்கிறார் போல. அதை டக்ளஸ் தோழர் தான் சொன்னார் அவர் ஓம் என்று சொன்னவர் என்று.

தேசம்: உங்களை கேட்கும்போது நீங்க மறந்துட்டீங்க…

அசோக்: நான் கிளியரா மறுத்துட்டேன். ஈஸ்வரன் தோழர் ஓகே பண்ணிட்டார் என்று தோழர் சொல்லுறார். ஈஸ்வரன் இந்தக் காலகட்டத்துக்குப் பிறகு நாட்டுக்கு போயிட்டார். அங்க புளொட்டால கடுமையாக தேடப்பட்ட உடனே அவர் மலையகத்துக்கு போயிட்டார். மலையகத்தில் போய் தலைமறைவாக இருக்கிறார். தம்பா என்று ஒரு தோழர். நல்ல அருமையான தோழர். டெசோவில் இருந்தவர். எல்லாருக்கும் உதவி செய்கிற தோழர். அவர் அங்க அரசாங்க தொழில் பார்த்துக் கொண்டிருந்தவர். அவருடைய பாதுகாப்பில் ஈஸ்வரனும் 4 – 5 தோழர்களும் தங்கிவிட்டார்கள்.

அந்த நேரத்தில்தான் தோழர் கொழும்பில போய் ஈபிடிபிய உருவாக்கி ஈபிடிபி சம்பந்தமாக ஒரு அறிக்கை விடுகிறார். அந்த அறிக்கையில் ஈஸ்வரன் தங்களோட இருக்கிறார் என்று அந்தக் கமிட்டியில் ஈஸ்வரனின் பெயரும் வருகிறது. அப்போ ஈஸ்வரன் தலவாக்கலையில் இருக்கிறார். இந்த அறிக்கைகள் எல்லாம் பத்திரிகையில் வந்தவுடன் ஈஸ்வரன் பார்த்துட்டு மறுப்பறிக்கை விடுகிறார். தனக்கும் ஈபிடிபி க்கும் தொடர்பு இல்லை என்று. அப்பதான் அந்த சிக்கல் வருகிறது.

தேசம்: ஈபிடிபியின் உருவாக்கத்தில் உங்களுக்கு எந்தவிதமான பங்களிப்பும் இல்லை…

அசோக்: இல்லை இல்லை. அது அவங்கட சொந்த உருவாக்கம். அவர்களுடைய முயற்சி. என்னை இணயுமாறு கேட்டது அவ்வளவுதான். ஈஸ்வரன் சொன்னார் தான் முதலே மறுத்தது என்று. அவங்களுக்குள்ள நடந்த உரையாடல் எனக்கு தெரியாது.

தேசம்: இப்ப தோழர் கிட்டத்தட்ட உங்கட தள மாநாடு அதுக்குப்பிறகு மத்திய குழு, பின்தள மாநாடு எல்லாம் முடிந்து ஒரு ஸ்தம்பித நிலைக்கு வந்த தான் இலங்கையில் நிறைய அரசியல் மாற்றங்கள் நடக்குது. இந்தியா விடுதலை புலிகளின் தாக்குதலை முடுக்கிவிட்டு இந்திய ராணுவம் இலங்கைக்கு இறங்குது. இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதுக்கு முதல்ல ஈழம் தேசிய ஜனநாயக முன்னணி என்று சொல்லி ஒரு கூட்டு உருவாக்கப்பட்டது தானே. அதுல புளொட், விடுதலைப் புலிகள், டெலோ, ஈபிஆர்எல்எஃப் போன்ற அமைப்புகள் இணைந்த ஒரு கூட்டு முண்ணனி உருவாகியதே…

அசோக்: அது வந்து 84 கடைசியில். ஈழ தேசிய ஜனநாயக முன்னணி – ENLF என்ற பெயரில் எல்லா இயக்கங்களையும் இணைத்து ஐக்கிய முண்ணனி ஒன்றை உருவாக்கும் நோக்கத்தோடுதான் தொடங்கப்பட்டது.

தேசம்: அதுல நீங்கள் ஈடுபடலையா?

அசோக்: நாங்கள் தளத்தில் தானே. பின் தளத்தில் புளொட் இந்த ஐக்கிய முண்ணனி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. ஈழ தேசிய ஜனநாயக முன்னணியின் உருவாக்கத்தில் அதன் பொறுப்பாளராக இருந்தது தோழர் முகிலன் என்று சொல்லி இப்போது பரிசில் இருக்கிறார். ஈரோஸ் தோழர். அவர்தான் அந்த கமிட்டியில் ஒருங்கிணைக்கிற செயலாளரா இருந்தவர்.

அதற்கு முதல் என்ன நடந்தது என்று கேட்டால் ஒவ்வொரு அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. அப்போ புளொட்டுடனும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. அதேநேரம் புலிகளுடனும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருந்தது. புளொட் சொன்னது தாங்கள் புளொட் என்ற அமைப்பு வரும்போது ரெலா (TELA – Tamil Eelam Lebaration Army – ஒவ்ரோய் தேவன் தலைமையில் இயங்கிய புளொட்டின் துணை இராணுவக்குழு) என்ற அமைப்பையும் உள்ள சேர்க்க வேண்டும் என்று சொல்லி. அவங்க சொல்லிட்டாங்க ரெலா வை சேர்க்க இயலாது அதை அமைப்பாக அங்கீகரிக்க இயலாது, ஐந்து முக்கிய அமைப்புகள் மாத்திரம்தான் அதுக்குள்ள வரலாமென்று, புளொட், எல்ரீரீஈ, ஈரோஸ், ஈபிஆர்எல்எஃப், அடுத்தது ரெலோ அமைப்பு. இந்த முரண்பாடுகளால் புளொட் ENLF இணைப்பில் சேரவில்லை.

தேசம்: இலங்கை – இந்திய ஒப்பந்தத்துக்குப்பிறகு அதுக்கு முதல் உங்களை தனிப்பட்ட முறையில் கேட்கிறேன். நீங்கள் ஈபிடிபி கூட போகவில்லை. ஈ.என் டி எல் எஃப் கூட போகல. தீப்பொறியோட போகல. என்ன விஷயம் உங்களைத் தடுத்தது. நீங்கள் தொடர்ச்சியாக அரசியலில் ஈடுபட்டு கொண்டிருக்கிறீர்கள். இன்றைக்கு வரைக்கும் அரசியல் செயற்பாடுகளில் ஏதோ ஒரு வகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஏன் இந்த அமைப்புகளுடன் போகல. ஈபிடிபியோடோ, ஈஎன்டிஎல்எஃப் கூட போகாததற்கு ஒரு காரணம் இருக்கும் என்று நினைக்கிறேன். சில நேரம் அவர்களின் தலைமையில் அரசியல் சித்தாந்தம். தீப்பொறியோடு ஏன் நீங்கள் போகல?

அசோக்: எனக்கு இயல்பாகவே தனிப்பட்ட உறவுகள் எல்லோரிடனும் இருந்தது. ஆனால் அவர்களுடைய அரசியல் தொடர்பாக ஆளுமை தொடர்பாக சந்தேகம் இருந்தது. ஏனென்றால் எல்லா தோழர்கள் மத்தியிலும் தங்களுடைய தவறுகளை ஏற்றுக்கொண்டு சுய பரிசீலனை செய்கிற போக்கு எப்பவுமே இருந்ததில்லை. அது டக்ளஸ் தோழராக இருந்தால் என்ன, ராஜன் ஆக இருந்தால் என்ன, ரகுமான் ஜானாக இருந்தால் என்ன நான் உட்பட. இந்தப் பண்பு இருக்காதவரைக்கும் தலைமைத்துவத்துக்கான எந்த அடிப்படையும் அவங்களிடம் இருக்காது. முதல் சுய விமர்சனம், விமர்சனம் எங்களுக்கு அவசியம். அது இருந்தால்தான் தலைமைக்குரிய குணாம்சம் வழிகாட்டியாக இருக்க முடியும்.

எனக்கு தெரியும் எல்லார்கிட்டயும் தங்களுடைய அதிகாரத்துக்கான போட்டி இருந்ததேயொழிய மக்கள் விடுதலைக்கான அமைப்பை உருவாக்கும் நோக்கம் யாரிடமும் இல்லை என்று. ஒரு வரலாறு ஒன்று இதுக்குத்தானே எல்லோருக்கும். இப்ப டக்ளஸ் தோழருடன் எனக்கு நெருக்கம் இருக்கு. ஆனா டக்ளஸ் தோழரின் அமைப்பை நம்பி போகவில்லை. ஏனென்றால் அந்த நேரத்தில் அமைப்புக்கள் அதன் தலைமைகள் மக்கள் விடுதலைக்கான எந்த வொரு முற்போக்கான கோட்பாடுகளையும் செயற்பாடுகளையும் கொண்டு இயங்க தயாராக இருக்கல்ல. இந்த புதிதாக உருவாகும் அமைப்புக்களும் அதே நிலைதான். எந்த வித்தியாசமும் இல்லை.

எங்களுக்கு படிப்பினையும், அனுபவமும் இருக்குத்தானே, எல்லாம் ஒரு பவர் பொலிட்டிஸ். மீண்டும் மீண்டும் நான் தவறுவிட விரும்பவில்லை. அதுக்குள்ள நான் போக விரும்பல. நான் நூறு வீதம் நல்லவனாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை எனக்கு. குறைந்தபட்சம் வாழ்க்கையில் ஒரு 50 வீதம் ஆவது நேர்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படி ஒரு 50 வீதம் மக்களுக்கு சேவை செய்கிற நோக்கமாக அமைப்பு இருந்திருந்தால் நான் போய் இருப்பேன். சில நேரம் என்னுடைய கணிப்பு பிழையாக இருக்கலாம். அதைவிட அவங்க நேர்மையான ஆட்களாக இருக்கலாம். ஆனால் என்னுடைய கணிப்பு அப்படித்தான் இருந்தது.

நாங்களும் வரலாற்று ரீதியாக ஒவ்வொரு ஆளையும் பார்த்துக்கொண்டு வாறம். எவ்வளவுதான் தனிப்பட்டவகையில் நல்ல மனிதர்களாக இருந்தாலும் அதிகார ஆசை தவறான திசைக்கு அவங்களை கொண்டு போய் விடுகிறது. இதே தவறை நான் தொடர்ந்து விட இயலாது. இதுவரை சந்தித்த கசப்பான அனுபவங்கள் தோல்விகள், வீழ்ச்சிகள் பற்றிய ஆய்வும், விமர்சனங்களும், என்னைப்பற்றிய சுயவிமர்சனங்களும் கட்டாயம் அவசியம். என்னை நானே குற்றம் சாட்டிக் கொண்டிருந்த காலம் அது. தொடர்ந்து தொடர்ந்து எங்களது கணிப்புக்கள் எதிர்பார்ப்புக்கள் தோல்விதானே கண்டது. மீண்டும் இதே தவறை நான் விட விரும்பவில்லை.

அந்த நேரத்தில எனக்கு அதிகார அரசியல் பற்றிய நிறைய அச்சம் இருந்தது. உண்மையில் பார்க்கப் போனால், அதிகாரம் கிடைக்க முன்னர் எல்லா மனிதர்களும் நல்லவங்களாத்தான் இருக்காங்க. முகுந்தனோ, ராஜனோ ஆரம்பத்தில் நல்லவங்கதான். அதிகாரம் கிடைக்கும்போது பிழையான மனிதர்களாக மாறிப் போறாங்க. இது தோழர் டக்ளசிக்கும் பொருந்தும். அதனால டக்ளஸ் தோழரோடு சேர்ந்து பின் முரண்பட நான் விரும்பவில்லை.

அடுத்தது என்னை நம்பி வந்த தோழர்களையும் திரும்பி அனுப்பி அவங்களுடைய பாதுகாப்பை, வாழ்க்கைக்கான பதிலை நான் தான் சொல்ல வேண்டும். அப்போ என்னோடு வந்த 10 – 15 தோழர்களை காப்பாற்றி நாட்டுக்கு அனுப்புவது தான் என்னுடைய கடமையாக இருந்தது. அந்த வெளியேறிய காலகட்டத்தில் தமிழ்நாட்டுத் தோழர்கள் நிழல் திருநாவுக்கரசு, செம்பியன், ஏழுமலை போன்றவங்க நிறைய உதவி செய்தாங்க. மறக்க முடியாத உதவிகள்.

தேசம்: அப்போ நீங்கள் முதல்ல சந்ததியர் வெளியேறும் போதோ நீங்கள் வெளியேறாமைக்காண முக்கியமான காரணம் உங்களை நம்பி வந்த தோழர்களா?

அசோக்: அது முக்கியம் தானே. போராட்டம் இயக்கம் பற்றிய எல்லாம் தோழர்களுக்கு நம்பிக்கை கொடுத்தவன் என்ற அடிப்படையில் என்னை நம்பி இயக்கத்திற்கு வந்த தோழர்களை கைவிட்டு நான் எப்படி செல்லமுடியும். முகாமில் இருந்து ட்ரெய்னிங் எடுத்தவர்கள். அவங்க என்னோட வெளியேறி வந்துட்டாங்க. அவங்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டும் தானே. அவங்களை காப்பற்ற வேண்டும். அவங்களுடைய பாதுகாப்புக்கான வாழ்க்கைக்கான உத்தரவாதத்தை கொடுக்க வேண்டும்.

நான் மட்டும் தப்பிப் போய் வெளிநாட்டுக்கு வந்து வாழுறதில் அர்த்தம் இல்லை தானே. ஆரம்ப காலத்தில் இருந்து விடுதலைப் போராட்டத்திற்கு வந்திட்டம். இந்த போராட்டத்தில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம் கடைசி வரைக்கும் போராட வேண்டும். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை சரியான வழியில் கொண்டு போக வேண்டும் இல்லாதபட்சத்தில் கடைசி வரைக்கும் நம்பி வந்த தோழர்களுக்கான உயிர் பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் கொடுக்க வேண்டும். இதுதான் என் நோக்கமாக இருந்தது. என்னோடு வெளியேறிய தோழர்களுக்காக கடைசி வரைக்கும் நான் அவங்களோடு இருந்தேன். வெளி நாடு வருவதற்கான பல வாய்ப்புக்கள் எனக்கு வந்தன. நான் எப்பவோ வந்திருக்கலாம்.

தேசம்: அமைப்புக்குள்ள நீங்கள் உள்வாங்கின பெரும்பாலான ஆட்களை பாதுகாப்பாக திருப்பி அனுப்பிட்டீங்க. எப்படி தளத்திலிருந்து 17 பேர் வந்து இருக்கிறீங்க நான்கு மத்திய குழு உறுப்பினர்கள் மற்றது உங்கட கிராமங்களில் இயக்கத்துக்கு உள்வாங்கின பல தோழர்கள் இருந்திருப்பார்கள். இவர்களுக்கு எல்லாம் பிறகு என்ன நடந்தது.

அசோக்: தளத்திலிருந்து வந்த அந்த தோழர்கள் ஓரளவு வளர்ந்தவர்கள் தங்கள் தங்களுக்கான வாழ்க்கையை அவங்களே தேடிக் கொண்டார்கள். எங்க கிராமத்து தோழர்களும் தனியாக சென்று பாதுகாப்பான ஒரு இடத்தில் வீடு எடுத்துதங்கி இருந்தாங்க. என்றாலும் எல்லோரும் பின் தளத்தில் மிகவும் கஷ்டம்தான் பட்டோம். தெரிந்தவர்கள், தமிழ்நாட்டு நண்பர்கள், முன்னர் வெளியேறி சுயமாக தங்கி இருந்த புளொட் தோழர்கள் என்றுபலரும் உதவி செய்தாங்க.

தேசம்: வந்த 17 தோழர்களில் தளத்துக்கு போகாமலே…

அசோக்: புலிகளின் கெடுபிடி இருந்த காலம் அது. தளத்துக்கு பல தோழர்கள் போகவில்லை. பிறகு குமரன் போனவர். அவர் விடுதலைப் புலிகளால் அரெஸ்ட் பண்ணப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டார். ஈஸ்வரன் தோழர் நாட்டுக்கு போனவர். மத்தவங்க எல்லாரும் தமிழ்நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அடுத்தது நாங்கள் ராஜனிட்ட இருந்து வெளியேறின போது தோழர்களிடம் சொன்னம் நீங்கள் வெளியேற வேண்டாம் என்று. எங்களோடு வருவதை விட ராஜனோடு இருக்கிறது பாதுகாப்பு. உயிர் பாதுகாப்பு. நாங்கள் ராஜனுடன் முரண்பட்டு வெளியேறும்போது நீங்கள் வெளியேற வேண்டாம் என்று சொல்லி விட்டோம். நீங்கள் வந்தீர்கள் என்றால் எங்களால் பாதுகாப்பு தர முடியாது. அப்போ நீங்கள் அங்க இருந்து கொண்டு நாட்டுக்கு போவதற்கான முயற்சியை செய்யுங்கள். என்று. நாங்களும் அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறோம். சரி வரும்போது சொல்லுகிறோம் வாருங்கள் என்று.

அப்படி இருந்தும் ஒரு 10 -15 தோழர்கள் எங்களுடன் வந்து விட்டார்கள். ராஜனும் பாதுகாப்பாக நிறைய தோழர்களை அனுப்பி வைத்தார். ஈ.என்.டி.எல்.எஃப் உருவாகி இந்திய ராணுவம் வந்தபோது நாட்டுக்கு போயிட்டாங்க தானே. எங்களோடு வந்த தோழர்கள் அவ்வளவு பேரையும் மிகப் பாதுகாப்பாக ஊருக்கு அனுப்பினோம். சில தோழர்களை படிப்பித்தோம். தோழர் அர்ச்சுனா ஜெகநாதன் என்னோடு துணையாக இருந்தார். பிறகு ஊருக்கு போயிட்டாங்க. எல்லாரையும் அனுப்பிட்டுத்தான் கடைசியாக நான் வந்து கப்பல் ஏறுகிறேன்.

தேசம்: எத்தனையாம் ஆண்டு அது…

அசோக்: 92 நடுப்பகுதி…

தேசம்: இது எண்பத்தி ஆறு கடைசி பகுதி நடக்குது. பிறகு 87 இருந்து நான்கு ஆண்டுகள்…

அசோக்: ஏனென்றால் நிறைய தோழர்கள் உடனடியாக போக முடியாது தானே. அவங்களை வைத்து தோட்டம் ஒன்று போட்டு… அந்த வாழ்க்கை என்பது சரியான கஷ்டம். மிகவும் மோசமான மன உளச்சல் கொண்ட காலம் அது. பொருளாதார ரீதியாக சரியாக கஷ்டப்பட்டோம். அப்போ தோட்டம் போட்டு ஒரு கொப்பரேடீவ் மாதிரி கூட்டுறவு கூட்டுப்பண்ணை போட்டு அந்த கிராம மக்களோடு வாழ்ந்து அது வேறு ஒரு அனுபவம். காணி பாதர் ஒருவர் தந்தவர். பொருளாதார வசதிகளையும் அவரே தந்தவர். இப்படி கொஞ்ச நாள் கழிந்தது.

ரா ஜீவ் காந்தி படுகொலையோடு எங்களுக்கும் பொலிஸ் நெருக்கடி வந்துவிட்டது.

தேசம்: அதற்குப் பிற்பாடு எண்பத்தி ஆறு காலப்பகுதியில் நீங்கள் வெளியேறின பிற்பாடு அமைக்கப்பட்ட புளொட் அமைப்பு இருக்குதானே அதில் நீங்கள் சார்ந்த யாராவது இருந்தார்களா. அல்லது இப்பவும் இருக்கினமா யாரும் சொல்லக் கூடியவர்கள்…

அசோக்: அதுல ஆனந்தி என்றொரு தோழர் இருக்கிறார். ஆரம்ப காலதோழர். புளொட்டில் இப்பவும் இருக்கிறார். நல்லவர். தானும் தன் பாடும். சமீபத்தில் புளொட் தோழர் ஒருவரோடு பேசிய போது ஆனந்தி புளொட் வரலாறு எழுத தொடங்கி உள்ளதாக சொன்னார். புளொட்டில கடைசி வரை இருந்து புளொட்டை பயன்படுத்தி, எல்லா தவறுகளுக்கும் உடந்தையாக இருந்துபோட்டு தனிப்பட்டபிரச்சனையால் வெளியேறி இன்று புளொட்டைபற்றியும் புளொட்தோழர்களைப் பற்றியும்மிக மோசமாக எழுதும் ஆட்கள்பற்றியும் அவங்கட உண்மை முகம் வெளிவரும் என்றார்.

தேசம்: ஆனந்தி எதில் எழுதுகின்றார்?

அசோக் : அவர் இப்பதான் எழுத தொடங்கி உள்ளார் என நினைக்கிறன். எதில் வருமோ தெரியவில்லை. அவர் எழுதுவது நல்லது. புளொட்டின் உள்ளும் புறமும் அவருக்கு தெரியும்.

தேசம்: அது நீங்கள் அந்த நான்கு ஆண்டு காலப்பகுதியில் புளொட்டால எப்படியான பிரச்சினை வருது..

அசோக்: நாங்கள் வெளியேறி ENDLF உருவாக்கிய காலத்தில் ஒரு நாள் நானும் ஆதவன் தோழரும் வீதியால் போய்க் கொண்டிருக்கும் போது மாணிக்கதாசன் ஜீப்பில் வந்து வெருட்டி எங்களை ஃபுல்லா வளைச்சாச்சு சுடுவதற்கு தயார். 5 – 6 பேர் ஜீப்ல வந்தார்கள். எங்ககிட்ட ஒன்றுமே இல்லை. நாங்க சைக்கிள்ல போனாங்க. அப்போ சத்தம் போட ஊர் ஜனங்கள் எல்லாம் வந்து வந்துவிட்டாங்க. அவங்க எல்லாம் வந்து பிரச்சினைபட்டவுடன் இவர்களால் ஒன்றும் செய்ய இயலாமல் போய்விட்டது. அப்போ எங்களுக்கு எச்சரிக்கை செய்தார்கள் எங்கேயாவது நடமாடுவதை கண்டால் வெடி வைப்போம் என்று.

அப்போ எங்களுக்கு என்ன செய்றது என்று தெரியல. பிறகு நான் தோழர் கண்ணனுடன் இது பற்றி கதைக்க அவர் சொன்னார் நீங்கள் ஒருக்கா ஆபீஸ் வாங்க வாசுதேவா, ஆனந்தி ஆட்களோடும் இதுபற்றி கதைக்க வேண்டும் என்று ஒரு டேட் தந்தார். ஒரு பின்னேரம் வரச்சொல்லி. அப்போ நான், ஈஸ்வரன், ஆதவன், பாபுஜி நான்கு பேரும் கதைக்கிறதுக்கு போனோம். அங்க கண்ணன் இல்லை. அந்த நேரம் டெலிபோன் கம்யூனிகேஷன் இல்லைதானே. முதலில் சொன்னதை அதை நம்பித்தான் போனோம். ஆனா அங்க இல்லை. நாங்க திரும்பி வந்துட்டோம். காரில் ஏறப் போக மாணிக்கதாசன் என்ன செய்திருக்கிறார் என்றால் அங்க ஆபீசுக்கு முன்னால மல்லிகை கொடி படர்ந்து போயிருந்தது. அதுக்குள்ள போய் ஒளித்து இருந்திருக்கிறார். எங்களுக்கு தெரியாது.

காரில் ஏறும்போது பட பட படவென வெடி. முதல் வெடி எனக்கு விழுந்துட்டுது. நான் கீழ விழ மற்றவர்களும் விழுந்துட்டாங்க. இல்லாவிட்டால் எல்லோருக்கும் வெடி பட்டிருக்கும். எனக்கு ரெண்டு இடத்துல வெடி. தொடர்ந்து வெடி நடக்குது. நாங்க தற்பாதுகாப்புக்கு ஆயுதங்கள் கொண்டு போனாங்க. காருக்குள்ள இருந்தது. உடனே ஒரு தோழர் எடுத்து திருப்பி சுட்டார். சுட்டதும் அடங்கிப் போய்விட்டது. மாணிக்கதாசன் சுடுவதை விட்டுட்டார். நான் காயப்பட்டு விட்டேன். நான் ஆஸ்பத்திரிக்கு போயிட்டேன். எனக்கு பிறகுதான் தெரியும் நாங்கள் தற்காப்புக்கு திருப்பி சுட்டு ஒரு அப்பாவி தோழர் அவருக்கு வெடி. அவரை ஹாஸ்பிடலுக்கு கொண்டுவர அவர் இறந்துவிட்டார். பாவம் அவர் வேற எங்கேயோ நின்றிருக்கிறார் துப்பாக்கி சன்னம் போய் அவரில பட்டிட்டு.

தேசம்: அவர் உங்கள் மீது தாக்குதல் நடத் தினவரா?

அசோக்: இல்லை இல்லை. அவர் அருமையான தோழர். மாணிக்கதாசன் தான் சுட்டது. அவருக்கு தெரியாது தானே. அவர் அங்காள நின்றபோது அவருக்கு வெடி பட்டுவிட்டது. அவர் காயப்பட்டிருந்தவர். அருமையான தோழர். அவர் பாவம்.

தேசம்: என்ன பெயர்?

அசோக்: அவரோட பெயர் மறந்துட்டேன். அமுதன் பெயர் என நினைக்கிறேன். பிறகு நான் ஒரு மாதம் ஆஸ்பத்திரியில் இருந்தேன். காலப் போக்கில் பிறகு என்னால் நடக்க முடியாமல் போய்விட்டது. கொஞ்ச காலத்தில் நான் படுத்த படுக்கையாகி விட்டேன். பிறகு திருப்பத்தூரில் சுவிடிஷ் மிசனரி ஹாஸ்பிடல் இருக்கு. அங்க போனேன்… அங்க சொன்னாங்க நீங்கள் பக்கத்திலே பிள்ளையார்பட்டியில் சித்த ஆயுள்வேத ஆஸ்பத்திரிக்கு போங்க என்று சொல்லி அவங்கதான் சிபாரிசு செய்கிறார்கள்.

அங்க போனதும் அது குன்றக்குடி அடிகளாருடைய நிர்வாகத்தின் கீழ் அந்த வைத்தியசாலை நடக்குது. . சுமார் ஒரு வருஷம் நான் அங்கே இருக்கிறேன். அதுக்குப் பிறகுதான் நான் நடக்க முயன்றேன். அந்த காலகட்டத்தில் குன்றக்குடி அடிகளாரின் மகள் மங்கையர்க்கரசி அக்கா குடும்பம்தான் என்னை பராமரித்தாங்க. அந்த வைத்தியசாலையின் பொறுப்பாளர் கோவிந்தசாமி அவர்கள் என் மீது அக்கறை கொண்டு மிகவும் அன்பாக வைத்தியம் செய்தாங்க. எல்லாம் இலவசமாகவே செய்தார். இவை எல்லாம் மறக்க முடியாத உதவிகள்.

தேசம்: அப்பதான் உங்களுக்கு அவர்களுடன் தொடர்பு வருதா…

அசோக்: இல்லை முதலே தெரியும் இயக்கத்துக்கு நிறைய உதவி செய்து கொண்டிருந்தவர்கள்.

தேசம்: எப்படி அந்த உறவு வந்தது…

அசோக்: குன்றக்குடி அடிகளார் அவர் இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக அக்கறை கொண்டு செயற்பட்டவர். குன்றக்குடி அடிகளாரை பொருத்தவரையில் அவர் ஒரு ஆன்மீகவாதி. அதே நேரம் பெரியாருடைய மேடைகளில் பெரியாருடைய கொள்கைகளுக்கு ஆதரவு கொடுத்து துணிந்து பேசும் நபராக இருந்தார். ஒரு பக்கம் ஆன்மிகம். இன்னொரு பக்கம் மாக்சிசம். அவருடைய அறைக்க போனீங்க என்றால் கால் மாக்ஸ், லெனின் எல்லாம் இருப்பார்கள். மார்ச்சியத்தின் மீது நம்பிக்கை கொண்டவர். அவருடைய மகள்தான் மங்கையற்கரசு அக்கா. அவர் கணவனும் எஙகளுக்கு நிறைய உதவிகள் செய்தவர். அவர் ஒரு பேராசிரியர்.

தேசம்: குன்றக்குடி அடிகளார் ஒரு வீரசைவர் பரம்பரை அப்படியா?

அசோக்: வீர சைவர் ஆக இருக்க முடியாது. ஆதினம் தான். அவர்கள் சைவர்கள் தான். ஆனால் இந்த பிராமணிய கொள்கை இல்லை. ஆதிசைவர்கள் ஒரு முற்போக்கான வீரசைவர்கள். அதே மாதிரியான பண்புதான் இவர்களிடமும் இருந்தது. ஆரம்ப காலத்திலேயே தெரியும் அவரை.

தேசம்: உண்மையிலேயே தமிழ்நாட்டில் எத்தனையோ நூற்றுக்கணக்கானவர்கள் எங்களுடைய போராட்டம் சார்ந்தும் போராளிகளையும் பராமரித்ததில் முக்கிய பங்கு வகித்தவர்கள்…

அசோக்: 83 கலவரத்திற்கு பிறகு தமிழ்நாட்டு மக்கள் நிலையில் நாங்கள் இருந்தால் நாங்கள் எந்த உதவியும் செய்ய மாட்டோம். அந்த மக்கள் விடுதலைப் புலிகளோ, புளொட்டோ என்று பார்க்காமல் உணர்வுபூர்வமாக உதவி செய்தவர்கள். போராளிகள் என்ற அடிப்படையில் மிக உதவிகள் செய்தவர்கள். தமிழ்நாட்டு அரச மட்டத்தில் இருப்பவர்களிடம் இருந்தும் நிறைய உதவிகள். அந்த உணர்வு பூர்வமான பங்களிப்பை உதவிகளை நாங்கள் மதிக்கவில்லை.

தேசம்: அந்த மண்ணை நாங்கள் தவறாக பயன்படுத்தி இருக்கிறோம்.

அசோக்: போராட்ட வரலாற்றை மீளாய்வு செய்தோம் என்றால் நிறையத் தவறுகள் எங்கள் இயக்கங்கள் பக்கத்தில் இருக்கு. அதற்கு வெறுமனே இயக்கம் என்று சொல்ல இயலாது தானே நாங்கள் தானே இயக்கம். முழுப்பேரும் அதைப் பொறுப்பெடுக்க வேண்டும். குற்றம் சாட்டி போட்டு போக இயலாது.

(குறிப்பு: இதில் குறிப்பிடப்படும் ஆனந்தி சில மாதங்களுக்கு முன் இலங்கையில் இயற்கை எய்தினார்.)

இயக்கங்களைவிட்டு வெளியேறியவர்கள் – பரந்தன் ராஜன் – தோழர் டக்ளஸ் இணைந்த புதிய இயக்கம் : பாகம் 27

களுதாவளையிலிருநது பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் (பகுதி 27 ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 12.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 27

தேசம்: பின்தள மாநாடு பற்றிய உரையாடல் போய்க்கொண்டிருக்கிறது. அப்ப நீங்கள் அறிக்கை ஒன்று விட்டிருக்கிறீர்கள். அதாவது கட்சியிலிருந்து உமா மகேஸ்வரனை கிட்டத்தட்ட வெளியேற்றி உள்ளீர்கள். அதைத் தொடர்ந்து என்ன நடக்குது? உமாமகேஸ்வரன் எப்படி அதற்கு ரியாக்ட் பண்ணுறார்?

அசோக்: ரியாக்சன் பயங்கரமாக இருந்தது. தெரியும்தானே அறிக்கைகள் எல்லாம் பத்திரிகைகளில் வந்துவிட்டது. முகுந்தனுக்கு பெரிய பிரச்சினையாக போய்விட்டது. மாநாட்டை குழப்புவதற்கான எல்லா முயற்சியிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அடுத்தது அவருடைய எல்லா கட்டுப்பாடுகளில் இருந்தும் நாங்கள் வெளியேறிவிட்டோம். வெளியேறி மெட்ராஸ் போய்விட்டோம். அங்க எங்களுக்கு பாதுகாப்பு டேவிட் ஐயா ஆட்கள்தான் செய்கிறார்கள்.

தேசம்: பாதுகாப்பு தாறத்துக்கு டேவிட் ஐயாட்ட என்ன இருக்கு…

அசோக்: அதுதான் வாரேன்.

எங்களிட்ட பொருளாதார ரீதியாக ஒன்றுமில்லை. ஏனென்றால் நாட்டிலிருந்து போன ஆட்கள் தானே. எங்களிட்ட பாதுகாப்புக்கான எதுவும் இல்லை. டேவிட் ஐயா, சரோஜினி, சண்முகலிங்கம், தங்கராஜா தோழர், ஜூலி, ஆட்களெல்லாம் ராஜனோடு உறவாக இருக்கிறார்கள். ராஜனோடு கதைக்கிறார்கள். இவங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று சொல்லி. ராஜன் எங்களுக்கான பாதுகாப்பை வழங்க ஒத்துக் கொள்கிறார். அதற்கான முழு முயற்சியும் டேவிட் ஐயா, சண்முகலிங்கம், சரோஜினி ஆட்கள்தான் செய்தவர்கள்.

அப்போ ராஜனோடு கதைக்கிறோம், பின்தள மாநாடு நடத்துவது பற்றி. ராஜன் சொல்கிறார், நீங்கள் பின்தள மாநாடு நடத்துவதற்கான சகல பாதுகாப்பும் செய்து தரப்படும். நீங்கள் மாநாட்டில் சுயமாக முடிவு எடுத்தீர்கள் என்றால், அந்த அந்த முடிவுகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் உங்களோடு சேர்ந்து வேலை செய்யத் தயாராக இருக்கிறோம், யோசிப்போம் என்று. அப்போ நாங்கள் பின்தள மாநாட்டுக்கான எல்லா வேலைகளையும் செய்கிறோம்.

இது தஞ்சாவூர்ல ஒரு கல்யாண மண்டபத்தில் நான் நினைக்கிறேன் ஓகஸ்ட் கடைசி பகுதியில் மூன்று நாள் மாநாடு ஒன்றை நடத்துகிறோம். அந்த நேரம் கேம்பிலிருந்து நிறைய தோழர்கள் வெளியேறிவிட்டார்கள். எங்களோடும் கொஞ்சத் தோழர்கள் வந்துவிட்டார்கள். அவங்களையும் ஒரு இடத்தில நாங்கள் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். அதுக்கும் ராஜன் தான் பாதுகாப்பு தந்தது. அதுக்குப்பிறகு ராஜனோடு நிறைய தோழர்கள் வந்து சேர்ந்து விட்டார்கள். வெளியேறி வந்த தோழர்கள் மத்தியில் தெரிவு செய்யப்பட்டதோழர்களோடு இந்த பின்தள மாநாடு நடக்கிறது.

மூன்று நாட்கள் நடாத்தி உத்தியோகபூர்வமாக நாங்கள் தான் புளொட் என்று டிக்லேர் பண்ணுறோம். இந்த மாநாட்டில் 15 பேர் கொண்ட பின் தளக் கமிட்டி தெரிவு செய்யப்படுகிறது.

முகுந்தனோடு சம்பந்தப்பட்ட ஆட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுல சில கொலைகள் வெளிப்படையாக கதைக்கப்பட்டது. கேம்பிலிருந்த தோழர்கள் தானே. அப்போ அவங்களுக்கு என்ன என்ன கொலைகள் நடந்தது என்று தெரியும். அந்தக் கொலைகள் தொடர்பாக காக்கா, சந்ததியார் … இது தொடர்பான நடவடிக்கைகள் எல்லாம் குறிப்பிட்டு முகுந்தன், சங்கிலி கந்தசாமி, மாணிக்கதாசன், வாசுதேவா, கண்ணன் இவ்வளவு பேரையும் புளொட்டில் இருந்து வெளியேற்றுகிறோம் என்றும், தளக்கமிட்டியும் பின் தளக்கமிட்டியும் புதிய மத்திய குழுவை தெரிவு செய்யும் என்றும், நாங்கள்தான் புளொட் என்று உரிமை கோரி ஒரு அறிக்கை விட்டு, இதுதொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பை சென்னையில நடத்துறோம்.

இந்த பத்திரிகை மாநாட்டில் கலந்து கொண்டது தீபநேசன், பிரசாத், கௌரிகாந்தன், ஈஸ்வரன், சண்முகலிங்கம், தங்க ராஜா, ஆதவன், ஜெயபாலன், துரைசிங்கம் , சத்தியன், கவாஸ்கர், எல்லாளன். அந்த பத்திரிகை மாநாட்டு அறிக்கை எல்லா பத்திரிகைகளிலும் வெளிவருகின்றது.

தேசம்: என்னத்துக்காக வெளியேறுகிறீர்கள் என்றும் குறிப்பிட்டு…

அசோக்: ஓம். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நிறைய கேள்விகளும் அதற்கான விளக்கங்களும் கொடுக்கப்படுகிறது. ஆங்கில, தமிழ் பத்திரிகைகளில் அந்த சந்திப்பு, அறிக்கை எல்லாம் வருகிறது. வந்து ஒரு வாரத்திற்குள் எங்கள் மீதான விசாரணையை ரோவும், கியூ பிரான்ஜூசும் தொடங்கிவிட்டது. கடும் நெருக்கடியை கொடுக்க தொடங்கிட்டாங்க. ஏன்னென்றால் முகுந்தன் சொல்லிட்டார் நாங்கள் இந்தியாவுக்கு எதிரான ஆட்கள் என்று சொல்லி. வங்கம் தந்த பாடம் நாங்கள்தான் வெளியிட்டோம் என்று சொல்லியும், நாங்கள் மாவோயிஸ்டுகள், சீனச்சார்பானவர்கள் என்று சொல்லியும் புளொட்டை திட்டமிட்டு உடைக்கிறோம் என்று சொல்லியும் இந்த உளவுத்துறைகளுக்கு போட்டுக் கொடுத்து விட்டார்கள். அப்போ கியூ பிரான்ஜூசும், ரோவும் எங்களை விசாரித்தது. அவங்க சொன்னவங்க நீங்கள் புளொட் என்று உரிமை கோர இயலாது. புளொட் என்டுறது முகுந்தன் தான். நாங்கள் உரிமை கோர முடியாது என்று சொல்லி விட்டார்கள்.

தேசம்: உளவுத்துறை வந்து பயப்பிடுத்துவது என்பது…

அசோக்: எங்களுக்கு என்ன செய்றது என்று தெரியல. ஸ்தம்பிதம் அடைந்து விட்டோம் . அதுக்குப் பிறகு தோழர்கள் உளவியல் ரீதியாக நிறைய பலவீனமடையத் தொடங்கி விட்டார்கள். நம்பிக்கைகளை இழக்கத் தொடங்கிட்டாங்க. அடுத்த கட்ட நகர்வை எப்படி தொடர்வது என்பது பற்றி நிறைய குழப்பங்கள்.

அடுத்தது ஒரு உறுதியற்ற தன்மை..

தேசம்: எதிர்பாக்கல நீங்கள்…

அசோக்: எதிர்பாக்கல. உறுதியற்ற தன்மை வந்தவுடன் என்ன செய்வதென்று தெரியல, ஸ்தம்பிதம் அடைந்திட்டம். அதுக்குப் பிறகு கொஞ்சநாள் பேசாம இருக்கிறோம்.

தேசம்: இந்த இடைப்பட்ட காலத்தில் ஜூனில் இருந்து ஜூலை வரைக்குமான இடைப்பட்ட காலத்தில் ஏதாவது உமாமகேஸ்வரன் தலைமையிலான அணியால் ஏதாவது…

அசோக்: ஓம் நிறைய பயமுறுத்தல்கள். வெளியில போக இயலாது. எனக்கெல்லாம் அனுபவம் இருக்கு. நானும் ஆதவன் தோழரும் வீடு பார்க்க வெளியில போகேக்க மாணிக்கதாசன் குரூப் ஆட்கள் வந்து நீங்கள் இங்கே வீடு பார்க்க இயலாது இது எங்க ஏரியா என்று சொன்னார்கள். எச்சரிக்கை செய்தாங்க. உண்மையில் நாங்க வீடுபார்த்த ஏரியாவுக்கும் அவங்களுக்கும் தொடர்பே இல்லை.

ஒரு தடவை சென்னையில் தியேட்டர் ஒன்றுக்கு நான் போயிட்டு இருக்கும்போது மாணிக்கதாசன் கண்டிட்டார். அது அவங்க ஆபீசுக்கு பக்கத்தில் தான் அந்த தியேட்டர். அப்போ மாணிக்கதாசன் என்னோட பிரச்சினைப்பட்டு கொண்டிருந்த அந்த நேரம் தற்செயலாக அது ஆபிஸ் தெரு என்றதால் யோதிஸ்வரன் கண்ணன் வந்தவர். மாணிக்கதாசன் என்னோடு முரண்பட்டுக் கொண்டிருப்பதை அவர் கண்டிட்டார். அதுல அவருக்கும் மாணிக்கதாசனுக்கும் பிரச்சனை. நீ தான் எல்லாத்துக்கும் பிரச்சனை; அவர்கள் வெளியேறினால் வெளியேறிப்போட்டு இருக்காங்க, ஏன் நீ அவங்களோட முரண்படுகிறாய் என்று. அப்படி எல்லாம் பிரச்சினை நடந்திருக்கு.

தேசம்: அந்தக் கட்டத்தில் யோகீஸ்வரன் உமாமகேஸ்வரனோடு தான் இருக்கிறார்?

அசோக்: உமாமகேஸ்வரனோடுயிருக்கிறார். அவர் கொஞ்சம் நியாயம் கொண்டவர். நாங்க வெளியேறிய பின் பல தடவை அவரை சந்தித்து கதைத்திருக்கிறன். இது பற்றி சென்ற உரையாடல்களில் கதைத்திருக்கிறன்.

தேசம்: நீங்கள் பெரும்பாலும் இதில் ஓரளவு முற்போக்கான ஆட்கள் அல்லது அரசியல் மாறுபட்ட சிந்தனை உடைய ஆட்கள் முழுமையாக வெளியேறிட்டீர்கள். அதுக்கு பிறகு புளொட்டில் இருக்கிறதெல்லாம் யார் இருந்தது உமாமகேஸ்வரனோடு?

அசோக்: புளொட்டில் இருந்த தோழர்களை நாங்கள் குறை சொல்ல முடியாது. பயத்தில்தான் இருந்தவர்கள் அவர்கள். வெளியேற முடியாது. அடுத்தது பல்வேறு நெருக்கடி, தோழர்கள் பாவங்கள்.

தேசம்: நான் குறிப்பாக கேட்பது முக்கியமான ஆட்கள்.

அசோக்: முக்கியமான ஆட்கள் அந்த ஐந்து பேரும் தான். முகுந்தன், சங்கிலி, மாணிக்கதாசன், வாசுதேவா அடுத்தது படைத்துறைச் செயலாளர் கண்ணன். வாசுதேவாவும் கண்ணன் மாதிரி அதிருப்தியோடுதான் இருந்தவர்.

தேசம்: அப்போ அதுக்குள்ளே இருந்த குறிப்பாக முகுந்தன்…

அசோக்: சங்கிலி கந்தசாமி, முகுந்தன், மாணிக்கதாசன் 3 பேரும்தான் பிரச்சனைக்குரிய ஆட்கள்.

தேசம்: சரியான துரதிருஷ்டம் என்னவென்றால் இவ்வளவு பேர் எதிர்த்தும் அதை செய்ய முடியாமல் போனது. அது உண்மையிலேயே முற்போக்குப் பாத்திரம் வகித்தவர்களுடைய ஒரு தோல்வி என்றுதான் சொல்ல வேண்டும்.

அசோக்: நான் புளொட் தோழர்களே எல்லாம் காணும்போது யோசிப்பேன். நாங்க எல்லாம் நிறைய ஃபைட் பண்ணி இருக்கலாம். புளொட்டின் அனைத்து தவறுகளுக்கும் மற்றவர்களை குற்றஞ்சாட்டி போட்டு போக இயலாது. நாங்கள் ஒவ்வொரு ஆளும் பொறுப்பு கூறவேண்டிய அவசியம் இருக்கு. அதனால்தான் நான் இதைப்பற்றி கதைக்காமல் இருந்தேன். என் தொடர்பாக எனக்கே விமர்சனங்கள் இருந்தன.

தேசம்: முன்னணி தோழர்களுக்கு ஒரு முற்போக்குப் பாத்திரம் எடுக்க வேண்டிய தேவை இருக்குதானே. அவர்கள்தானே தலைமையை கொடுத்திருக்க வேண்டும்.

அசோக்: கட்டாயம்.

தேசம்: அப்போ நீங்கள் உமாமகேஸ்வரன் தலைமையிலான அந்த ஐந்து பேரையும் வெளியேற்றிய பிறகு நீங்கள் தான் புளொட் என்று அறிவித்த பிறகு உளவுத்துறை பயமுறுத்தலை விட்டவுடன் எல்லாம் ஈடாடிப்போச்சு.

அசோக்: அந்த நேரத்தில் மௌன நிலை தான், பேசாம இருந்த காலகட்டம். பிறகு தோழர் டக்லஸ் ஆட்கள் அந்த நேரம் ஈபிஆர்எல்எஃப் இலிருந்து உடைந்து அவங்க தனியாக போய் இருக்கிறார்கள். அவங்களோடு பல்வேறு முற்போக்கான சக்திகள் எல்லாரும் இருக்கிறார்கள். ஈரோஸ் இருந்து பிரிந்த சில தோழர்களும் இருக்கிறார்கள். பார்த்திபன் இதயச்சந்திரன் இருக்கிறார். என் எல் எப் ரீயில் இருந்து பிரிந்த தோழர் ஒருவரும் அவங்களோடு இருந்தாங்க.

தேசம்: இதயச்சந்திரன் லண்டனில் இருக்கிறார்…

அசோக்: ஓம். அப்போ நாங்கள் யோசித்தோம் என்ன என்று கேட்டால் எல்லா சக்திகளும் ஒரு ஜனநாயக உட்கட்சிப் போராட்டத்தை நடத்தி ஒதுங்கி இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரையும் இணைத்து நாங்கள் ஏன் ஜனநாயக பூர்வமான ஒரு அமைப்பை உருவாக்க முடியாது என்று. முதன்முதல் டக்லஸ் தோழருடன் போய்க் கதைக்கிறோம். அப்படி எல்லாருடனும் நாங்க கதைக்கிறோம். எல்லாரும் அப்படி ஒரு அமைப்பை உருவாக்குவதற்கான சாத்தியத்தை எங்களுக்கு தெரியப்படுத்துகிறார்கள்.

தேசம்: ரோ உங்களுக்கு ஒரு மிரட்டல் விடுத்த பிறகுதான் நீங்கள் இப்படியொரு முடிவுக்கு வாரீர்கள்.

அசோக்: ஓம். பேச்சுவார்த்தை நடத்தி ஒரு ஒருமைப்பாட்டுக்கு வாறம். ராஜனோடையும் கதைக்கிறம். ராஜனும் சம்மதிக்கிறார். அப்ப நாங்கள் அமைப்பை உருவாக்குவதற்கான ஒரு கமிட்டியை போஃம் பண்ணி நாங்களும், தோழர் டக்ளஸின் பக்கத்தில் குறிப்பாக அற்புதன், அசோக் சந்திரகுமார், பிரேமானந்தா, இப்ராகிம் என்று சொல்லி பத்து பதினைந்து தோழர்கள் ஒரு கமிட்டி போஃம் பண்ணி ஒரு புதிய அமைப்புக்கான யாப்பை உருவாக்குவதற்கு கூடிக் கதைக்கிறோம். அந்தக் கமிட்டியில் ராஜனோ, டக்ளஸோ இல்லை. நாங்கள் கதைத்ததன் பிற்பாடு அவங்களோடயும் கதைக்கிறம் இதுதான் முடிவு. இதற்கு நீங்கள் கட்டுப்படுகிறீர்களா என்று. ராஜனும், டக்ளஸும் ஓகே பண்ணுறாங்க.

அதற்குப் பிறகு மிலிட்டரிகொமிசார், பொலிட்டிக்கல் கொமிசார் என்று ஒரு இடதுசாரி மக்கள் அமைப்புக்கான… இவ்வளவு கால எங்களுடைய தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளல் என்ற படிப்பினையில் 7-8 நாள் இருந்து யாப்பு மற்றும் அமைப்பு வடிவத்தை உருவாக்கின்றோம். அமைப்பு வடிவத்திற்கு பெயர் ஒன்றை வைக்க விரும்புகின்றோம். அதுல டக்ளஸ் தோழர் ஆட்கள் சொல்லிட்டாங்க நாங்க தமிழீழம் என்ற வார்த்தை வருவதை விரும்பவில்லை என்று. அப்போ நாங்கள் சொன்னம் நீங்களே ஒரு பெயரை தேர்வு செய்யிங்கள் என்று.

தேசம்: டக்ளஸ் தோழர் அப்பவே அதை சொல்லிட்டார்.

அசோக்: ஈழம் என்று சொல்லித்தான் வரவேண்டும் தமிழீழம் என்ற வார்த்தை வருவதை விரும்பவில்லை என்று. நாங்கள் அதை ஒத்துக் கொண்டோம். அற்புதன் ஈஎன்டிஎல்எப் ENDLF என்ற பெயரை உருவாக்குறார். அப்போ ஈழ தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் நாங்கள் ஒன்றாக இணைவது என்று முடிவெடுத்து வேலை செய்கிறோம்.

தேசம்: அற்புதன் தான் தினமுரசு பத்திரிகையின் ஆசிரியராக அதுல ஒரு தொடரையும் எழுதினார். பின்னாட்களில் அவர் படுகொலை செய்யப்பட்டார்.