முல்லைத்தீவு மாவட்டத்தின் வடகடலோரப் பிரதேசத்தில் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதனையடுத்து அந்தப் பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக அரசாங்கம் அண்மையில் புதிய பாதுகாப்பு வலயப் பகுதியை அறிவித்திருந்தது.
இந்நிலையில் முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் உள்ள நோயாளர்களைக் கப்பல் மூலம் திருகோணமலைக்கு அழைத்து வருவதற்காக நேற்று மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் கரையோரப் பகுதியில் இருந்து ஆழ் கடலில் நிறுத்தப்படும் ஐசிஆர்சி கப்பலுக்கு நோயாளர்களை படகுகளில் ஏற்றிய இடத்தைச் சூழ்ந்த பகுதிகளில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருவதனால் நோயாளர்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சி பாதிக்கப்பட்டதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.