இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதனின் வெற்றிடத்திற்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை நாளை நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட இவர் விருப்பு வாக்குகளின் அடிப்படையிலேயே தேர்தல் திணைக்களத்தினால் இவ் வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
விருப்பு வாக்குகளின் அடிப்படையில் இக் கட்சி சார்பில் முதலாவது இடத்தைப் பெற்றிருந்த கனகசபை பத்மநாதன் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார்.
அவருக்கு அடுத்த இடத்தைப் பெற்றிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அரியநாயகம் மரணமடைந்த நிலையிலேயே மூன்றாம் இடத்தைப் பெற்றிருந்த டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை அந்த இடத்திற்கு நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.