சித்தார்த்தக் குமாரன் பிறந்த நேபாள லும்பினி நகரில் இலங்கை அரசினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘ஸ்ரீலங்கா விஹாரை’யை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இரண்டு கட்டங்களாக நிர்மாணிக் கப்பட்டுவரும் மேற்படி விஹாரையின் முதற்கட்டப்பணிகள் நிறைவுபெற்றுள்ளதுடன் இதற்கென 74 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளுக்கென 195 மில்லியன் ரூபா நிதி செலவிடப்படவுள்ளது.
முதலாம் கட்டப் பணிகளில் விஹாரையின் அரும்பொருட் காட்சியகம், யாத் திரிகர்கள் விடுதி, நூலகம், பிக்குமாருக்கான ஓய்வு விடுதியும் நிர்மாணிக்கப்பட்டுள்ள துடன் இவற்றை ஜனாதிபதி நேற்று அங்குரார்ப்பணம் செய்துவைத்து விஹாரையின் மகாநாயக்கதேரரிடம் அவற்றைக் கையளித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா லும்பினி அபிவிருத்தி பொறுப்பு நிதியத்தினூடாக மேற்படி விஹாரை நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. பெலியத்த தேர்தல் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவி வகித்த போது 1970ம் ஆண்டு அவர் பாராளுமன்ற உறுப்பினர்களின் உப குழுவுக்கு சமர்ப்பித்த ஆலோசனைக் கிணங்கவே மேற்படி விஹாரை நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
25 வருடங்களுக்கு முன்னர் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் இடையில் கைவிடப்பட்ட பின்னர் மீண்டும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த விஹாரைக்கு மிக அருகாமையிலுள்ள துட்டகைமுனு ஓய்வு விடுதியைப் புனரமைத்து யாத்திரிகர்களுக்கு வழங்குவதற்கும் ஜனாதிபதி உத்தேசித்துள்ளார்.
லும்பினி நகர பயணத்தையடுத்து ஜனாதிபதி லும்பினி விஹாரையையும், மஹாபோதி விஹாரையையும் தரி சித்துள்ளார். அத்துடன் ‘ஸ்ரீலங்கா மகா விஹாரை’யின் அபிவிருத்தி நடவடிக் கைகளுக்காக ஸ்ரீலங்கா லும்பினி அபி விருத்திப் பொறுப்பு நிதியத்திடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒன்றரை மில்லியன் ரூபாவையும் நன்கொடையாக வழங்கினார்.