பாராளு மன்றம் அடுத்த வாரம் கூடும்போது அமர்வுகளில் பங்கேற்கவுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா அங்கு செய்தியாளர் மாநாட்டை நடத்தவுள்ளார். இதனை ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி. விஜித ஹேரத் நேற்று வியாழக் கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற முதலாவது கூட்டத்தின் போது ஜெனரல் பொன்சேகாவை ஊடகவியலாளர் சந்திக்க முடியவில்லை. அத்துடன், அவருடைய உரையை சில ஊடகங்கள் இருட்டடிப்பு செய்திருந்தன. இப்போது அவருக்குக் கிடைத்திருக்கும் பாராளுமன்ற சிறப்புரிமைகளின் பிரகாரம் அவர் செய்தியாளர் மாநாட்டை நடத்துவார் என்றும் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அதேவேளை, அவசர சபைச்சட்ட நீடிப்புத் தொடர்பான விவாதம் மே மாதம் 4,5,6 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் நடைபெற விருப்பதாகவும் அந்த விவாதத்தில் எதிரணியின் பிரதான பேச்சாளராகப் பொன்சேகா உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் விஜித ஹேரத் கூறினார்.
நாட்டிலுள்ள மனித உரிமைகள் துஷ்பிரயோகம் குறித்து பொன்சேகா பேசுவார். தனிப்பட்ட முறையில் இப்பிரச்சினைகளை பொன்சேகா எதிர்கொண்டுள்ளார் என்றும் விஜித ஹேரத் தெரிவித்தார். அதேவேளை, எதிர்காலத் தேர்தல்களில் ஜனநாயக தேசியக் கூட்டணியின் வெற்றிக் கிண்ணத்தின் கீழேயே ஜே.வி.பி. போட்டியிடுமெனவும் ஹேரத் கூறியுள்ளார்