கடைசியாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட மூலங்கள் :
  • உலக வர்த்தக நிலைய தாக்குதலைக் கண்டித்து புனித குர்ஆன் பிரதிகளை எரிக்க தேவாலயம் முடிவு (3)
  • கற்றுக்கொண்ட அனுபவங்கள் புதிய வரலாற்றை பெற்றுத்தரும்! : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (50)
  • தமிழ் தலைமைகள் தங்கள் அரசியல் தவறுகளுக்காக படுகொலை அரசியலுக்காக தமிழ் மக்கள் முன் மன்னிப்புக் கோர வேண்டும்! : த ஜெயபாலன் (17)
  • அமுதுப் புலவர் பற்றிய ஆய்வுநூல் ஒன்று. : என் செல்வராஜா (நூலகவியலாளர்) (1)
  • திருத்தத்திற்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு (1)
  • University of Jaffna._._._._._.

    பேராசிரியர் ரட்ன ஜீவன் கூல் மீண்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்படுவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 2012ல் ஆரம்பமாகும் புதிய நிர்வாகக்காலத்தில் பேராசிரியர் ரட்ன ஜீவன் கூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகலாம் என தேசம்நெற்க்கு அறிய வருகின்றது. பேராசிரியர் ரட்ன ஜீவன் கூல் 2006ல் யாழ்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டவர். ஆனால் அவர் பதவியேற்க முடியாமலேயே அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக இலங்கையைவிட்டே வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டு இருந்தார். இன்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை அபிவிருத்தி அடையச் செய்யும் திட்டங்களுடன் அதற்குத் தயார் நிலையில் உள்ளார் என்பதையும் தேசம்நெற் அறிகின்றது.

    அண்மைக்காலத்தில் ஏற்பட்ட பாரிய அரசியல் மாற்றமானது இதுவரை இருந்த கட்டமைப்புகளையும் கேள்விக்கு உள்ளாக்கி நிற்கின்றது. அந்த வகையில் தமிழ் சமூகத்தின் குறிப்பாக யாழ்ப்பாண சமூகத்தின் அறிவியல் மையமான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான அரசியல் சமூக ஆய்வுகள் அவசியமாகின்றது. அந்த அவசியத்தின் அடிப்படையில் இக்கட்டுரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பற்றிய விவாதத்தை ஆரம்பிக்கின்றது. இது ஒரு ஆரம்பம் மட்டுமே.
    ._._._._._.

    ‘கற்பித்தலும் ஆய்வும் இணைந்து பாரபட்சமற்ற உண்மையைத் தேடுவதே பல்கலைக்கழகம்’ என்பதே 19ம் நூற்றாண்டில் ஜேர்மனியின் பல்கலைக்கழகத்தின் கருத்துருவமாக இருந்தது. இதுவே அன்று வலுவான பல்கலைக்கழக கருவாகவும் அமைந்தது. இதனைவிடவும் ஆய்விலும் கற்பித்தலிலும் புத்திஜீவித சுதந்திரம், பல்கலைக்கழகத்திற்கான சுயாதீனம், தங்களுடைய சொந்த மதிப்பீடுகள் முதன்மைகளை வரையறுக்கும் சுயாதீன ஒழுங்குகள், சர்வதேசியம் என்ற வடிவங்களும் பல்கலைக்கழகங்கள் சிலவற்றினால் ஏற்கப்பட்டு இருந்தது. இவற்றினைவிடவும் ஆய்வுகளுக்கான தேவைகளின் அதிகரிப்பும் அதற்கான கேள்வியையும் பொருளாதாரத்தையும் பொறுத்து பல்கலைக்கழகங்கள் வேறு வேறு வடிவங்களை முயற்சித்து வருகின்றன. இன்றைய காலகட்டங்களில் பல்கலைக்கழகங்கள் தாங்கள் சார்ந்த சமூகத்தின் அரசியல் பொருளாதார கலாச்சார அம்சங்களில் ஆளுமை செலுத்துவதனூடு சிந்தனையையும் சமூகக் கட்டமைப்பையும் செப்பனிடுகின்ற, தேவையேற்படின் மாற்றி அமைக்கின்ற சமூகப் பொறியியலை மேற்கொள்கின்றன.

    இதன் அடிப்படையில் கடந்த 36 ஆண்டுகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ் சமூகத்தில் குறிப்பாக யாழ்ப்பாண சமூகத்தில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்ற மதிப்பீடு மிகவும் அவசியமானது. இதனை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றினூடாகப் பார்ப்பது பொருத்தமானதாக அமையும்.

    இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாணக் கம்பஸ்:

    யூலை 15 1974 இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஆறாவது பிரிவாக யாழ்ப்பாண கம்பஸ் சை உருவாக்குவது என்ற அறிவித்தல் அப்போதைய கல்வி அமைச்சர் பதியுதீன் மொகமட்டினால் அறிவிக்கப்பட்டது.

    Kailasapathy_K_Profயாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாகச் செயற்பட்டவர் பேராசிரியர் கைலாசபதி. இவரே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்வேறுபட்ட துறைகளையும் உருவாக்கி ஆசியாவில் சிறந்ததொரு பல்கலைக்கழகமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை ஆக்க வேண்டும் என்ற விரிந்த பார்வையைக் கொண்டு இருந்ததுடன் அதனை நோக்கியும் செயற்பட்டார். பேராசிரியர் கைலாசபதியை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தந்தை எனக் கூறுவது மிகப்பொருத்தமானது.

    இதில் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் இந்திரபாலாவினது ஒத்துழைப்பும் குறிப்பிடத்தக்கது.

    இடதுசாரிச் சிந்தனையாளரான பேராசிரியர் கைலாசபதியின் உழைப்பிற்கு அப்போது இடதுசாரிகளின் துணையுடன் ஆட்சியில் இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி செயல்வடிவம் கொடுத்தது. யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரிகளை இணைத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. அதே ஆண்டு ஒக்ரோபர் 6ல் பரமேஸ்வராக் கல்லூரியில் யாழ்பாணக் கம்பஸ் அப்போதைய பிரதம மந்திரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவால் வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.

    இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கம்பஸ்கள் கொழும்பு கண்டி நகரங்களை மையப்படுத்தியே இயங்கி வந்தன. இந்தச் சூழலிலேயே பேராசிரியர் கைலாசபதி தமிழ் பிரதேசம் ஒன்றுக்கான பல்கலைக்கழகத்தை யாழ்ப்பாணத்தில் நிறுவினார். கொழும்பு, கண்டி ஆகிய பாரம்பரிய பல்கலைக்கழக நகரத்துக்கு வெளியே அமைக்கப்பட்ட முதலாவது பல்கலைக்கழகம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகும். இக்காலகட்டத்தில் யாழப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் மட்டுமல்ல சிங்கள முஸ்லிம் மாணவர்களும் கல்வி கற்பதனை பேராசிரியர் கைலாசபதி உறுதிப்படுத்தி இருந்தார். ஆனால் இந்நிலை நீண்டகாலம் நீடிக்கவில்லை. 1977ம் ஆண்டு இனக்கலவரமும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் சிலர் தாக்கப்பட்டதன் எதிரொலியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டிருந்த சிங்கள மாணவர்களைத் தாக்க சிலர் முற்பட்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் அவர்களுக்கு எவ்வித தீங்கும் நேர்ந்துவிடாது பாதுகாத்து பத்திரமாக தென்பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.

    தமிழரசுக் கட்சியின் எதிர்நிலை:

    1960களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்றை திருகோணமலையில் அமைக்க விரும்பி அதற்கான காணியையும் திருகோணமலை நகரை அண்மித்து வாங்கப்பட்டது. இருப்பினும் தமிழரசுக் கட்சியால் அதற்கு செயல்வடிவம் கொடுக்க முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் தமிழரசுக் கட்சி தனது ஆதரவை வழங்கி வந்த ஐக்கிய தேசியக் கட்சி ஒரு போதும் அத்திட்டத்திற்கு ஆதரவளிக்க முன்வரவில்லை. அதேசமயம் யாழ்ப்பாணத்தில் ஒரு பல்கலைக்கழகம் உருவாகின்றபோது தமிழ் பகுதியில் ஒரு பல்கலைக்கழகம் உருவாகின்றது என்ற எண்ணத்தில் தமிழரசுக்கட்சி அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. பெரும்பாலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை வேண்டாத ஒன்றாகவே அணுகி வந்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விடயத்தில் மட்டுமல்ல தமிழ் மக்களுக்கு நன்மை தரக்கூடிய இன்னும் சில விடயங்களுக்கு தமிழரசுக்கட்சி தனது கட்சி நலனின் அடிப்படையில் அல்லது தாங்கள் ஆதரிக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியை நோகச் செய்யக் கூடாது என்ற அடிப்படையில் ஆதரவு தர மறுத்து இருந்தது.

    Thuraiyappa_Alfredசுதந்திரக் கட்சியின் ஆதரவில் ஒரு பல்கலைக்கழகம் யாழ்ப்பாணத்தில் உருவாவதையும் அதனை சுதந்திரக் கட்சியின் பின்னணியுடைய பேராசிரியர் கெ கைலாசபதி முன்னெடுத்ததும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு விருப்பமான விடயமாக இருக்கவில்லை. ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னெடுத்த சுதந்திரக் கட்சியின் யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவிற்கு ‘இயற்கை மரணம் இல்லை’ என்று தமிழர் விடுதலைக் கூட்டணி தீவிர பிரச்சாரங்களில் இறங்கி இருந்தது. இந்த வன்மம் பேராசிரியர் கைலாசபதி மீதும் இருந்தது.

    இவ்வாறான நிலையில் தங்களுடைய கிராமங்களில் பல்கலைக்கழகம் திறக்கப்படுவதால் கிராமத்தின் சமூகக் கட்டுக்கோப்பு குலைந்துவிடும் என்பதனைக் காரணம் காட்டி யாழ்ப்பாணக் கம்பஸ் உருவான பகுதிகளில் எதிர்ப்பும் கிளம்பியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

    யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் உருவாக்கப்படுவதை விரும்பாத தமிழரசுக் கட்சி, 1977ல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்ததும் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனவின் ஆதரவுடன் பல்கலைக்கழகத்தின் அதிபராக தமிழரசுக் கட்சியின் ஆதரவாளரான பேராசிரியர் எஸ் வித்தியானந்தனை நியமித்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தந்தையெனக் கூறக்கூடிய பேராசிரியர் கெ கைலாசபதி ஒரே நிர்வாகக் காலத்திலேயே (ஒரு நிர்வாகக் காலம் மூன்று ஆண்டுகள்) அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அதனை உருவாக்கிய பேராசிரியர் கெ கைலாசபதி மிகக்குறுகிய காலமே உபவேந்தராக (அதிபராக) இருந்தார். தமிழர் விடுதலைக் கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இருந்த உறவைப் பயன்படுத்தி கெ கைலாசபதியை பதவி இறக்கியது.

    முளையிலேயே கருகிய இடதுசாரிச் சிந்தனை:

    இலங்கையின் இனஉறவுகள் பலவீனமான நிலையில் தமிழத் தேசிய அலை வீச்சுப்பெற ஆரம்பித்த காலப்பகுதியிலேயே யாழ்ப்பாணக் கம்பஸ் உருவாகின்றது. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக இடதுசாரிகளின் போராட்டங்கள் வெற்றியளித்து இடதுசாரிச் சிந்தனைமுறை பலம்பெற்றிருந்த காலகட்டம் அது. மேலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் புரட்சிகர மாற்றங்களுக்கான கோசங்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.

    பேராசிரியர் கெ கைலாசபதி யாழ்ப்பாணக் கம்பஸின் அதிபராகவும் அதன் பின்னர் கலைப்பிரிவின் தலைவராகவும் இருந்தவரை இடதுசாரிச் சிந்தனைக்கான தளம் ஒன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் காணப்பட்டது. அவர் பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை 1980க்களின் முற்பகுதிவரை உணரக்கூடியதாக இருந்தது.

    ஆனால் பொதுவாகவே இளைஞர் சமூகத்தில் ஏற்படும் புரட்சிகரச் சிந்தனைகள் மீதான காதல் யாழ்ப்பாண சமூகத்தில் யாழ்ப்பாண பல்கலைகழக சமூகத்தில் ஏற்படவில்லை. அல்லது ஏற்பட்ட போதும் அது குறிப்பிடத்தக்க அளவில் இருக்கவில்லை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகமும் அதன் தூண்டுதலால் யாழ்ப்பாண சமூகமும் தமிழ் தேசிய முதலாளித்துவக் கட்சிகளான தமிழரசுக் கட்சியையும் தமிழ்க் காங்கிரசையும் இணைத்து தமிழர் விடுதலைக் கூட்ணிக்கு பின்னால் அணி சேர்ந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணி அவர்களின் அரசியல் இலக்கை நோக்கிச் செல்லவில்லை என்றவுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் வாரிசுகளான தமிழீழ விடுதலை இயக்கங்களுக்குப் பின் சென்றனர்.

    யாழ்-சைவ-வேளாள-ஆண் ஆதிக்கச் சிந்தனை:

    ஆனால் 1974ல் உருவான யாழ்ப்பாண கம்பஸ் யாழ்ப்பாண சமூகத்தின் சிந்தனைமுறையில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு மாறாக யாழ்ப்பாண சமூகத்தின் சிந்தனையை பிரதிபலிக்கின்ற ஒரு உயர் கல்வி ஸ்தாபனமாகியது. அதனால் யாழ்-சைவ-வேளாள-ஆண் ஆதிக்க சிந்தனைப் போக்கைக்கொண்ட சிந்தனையாளர்களையே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பெரும்பாலும் தொடர்ச்சியாக உற்பத்தியாக்கி வந்துள்ளது. அதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பெரும்பாலும் ஒரே இன-மத-சமூகக் குழுவினரே காணப்பட்டமையும் முக்கிய காரணமாக இருந்திருக்கலாம்.

    விரிவுரைகளுக்கு உள்ள அதே முக்கியத்துவம் பட்டதாரி மணவர்களது கூட்டுவாழ்வும் அவர்கள் சமூகத்துடன் கொள்ளும் பரிமாற்றமும் விரிவுரைகளுக்கு அப்பால் ஏற்படுத்துகின்ற உணர்வுரீதியான தாக்கம் முக்கியமானது. ஆனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை அது பல்கலைக்கழகத்திற்கு வெளியேயான கூட்டுவாழ்வு சமூகப்பரிமாற்றம் என்பவற்றைக் கொடுக்கவில்லை. மாணவர்கள் பெரும்பாலும் தாங்கள் அதுவரை வாழ்ந்த அதே சூழலிலேயே வாழ்ந்து தங்கள் பட்டப்படிப்பைத் தொடர்ந்தனர். அதனால் அவர்கள் பல்கலைக்கழகச் சமூகத்திற்கே உரிய மாறுபட்ட சூழலிற்கு தங்களை வெளிப்படுத்தும் வாய்ப்பைக் கொண்டிருக்கவில்லை. இந்தச் சூழலானது யாழ்ப்பாணத்தின் ஒரே இன-மத-சமூகச் சூழலையே பல்கலைக்கழக வளாகத்திலும் ஏற்படுத்தியது. ஒரு குறுகிய காலத்திற்கு சிங்கள (1974 முதல் 1977 வரை) முஸ்லீம் மாணவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்றபோதும் வெகு விரைவிலேயே அவர்கள் யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்:

    University_of_Jaffna_Logoஇந்த சமூகப் பின்னணியில் உருவான யாழ்ப்பாணக் கம்பஸ் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஆறாவது பிரிவாக இருந்து 1979 ஜனவரி 1 முதல் யாழ்ப்பாணப் பல்லைக்கழகமாக இயங்க ஆரம்பித்தது.

    இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாணக் கம்பஸ் ஆக இயங்கிய காலப்பகுதியில் அதன் முதலாவது அதிபராக இருந்தவர் பேராசிரியர் கெ கைலாசபதி (01 ஓகஸ்ட் 1974 - 31 யூலை 1977). அவரைத் தொடர்ந்து பேராசிரியர் எஸ் வித்தியானந்தன் (01 ஓகஸ்ட் 1977 - 31 டிசம்பர் 1978) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாக மாறும்வரை யாழ்ப்பாணக் கம்பஸ் இன் அதிபராக இருந்தார்.

    யாழ்ப்பாணக் கம்பஸ் ஜனவரி 1979ல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாக மாறியபோது அதன் முதலாவது துணைவேந்தராக பேராசிரியர் எஸ் வித்தியானந்தன் பொறுப்பேற்று யூலை 1988 வரை யாழ்ப்பாணத்தின் அதிஉயர் கல்வி ஸ்தாபனத்திற்கு பொறுப்புடையவராக இருந்தார்.  நீண்ட காலம் அப்பொறுப்பில் இருந்தவரும் இவரே.

    பேராசிரியர் எஸ் வித்தியானந்தன்      1979 ஜனவரி   - 1988 யூலை
    பேராசிரியர் ஏ துரைராஜா                        1988 செப்ரம்பர்  - 1994 ஏப்ரல்
    பேராசிரியர் ஏ குணரட்னம்                      1994 ஏப்ரல்  - 1997 பெப்ரவரி
    பேராசிரியர் பி பாலசுந்தரம்பிள்ளை   1997 பெப்ரவரி  - 2003 ஏப்ரல்
    பேராசிரியர் எஸ் மோகனதாஸ்            2003 ஏப்ரல்  - 2006
    பேராசிரியர் ஜீவன் கூல்  2006 பதவியை பொறுப்பேற்கவில்லை.
    பேராசிரியர் என் சண்முகலிங்கம்         2008 ஜனவரி

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் தமிழீழ விடுதலைப் போராட்டமும்:

    University_of_Jaffnaயாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் வேறான பாதைகளில் தங்கள் பயணத்தை மேற்கொண்ட போதும் அவை அடிக்கடி ஒன்றையொன்று குறுக்கீடு செய்துள்ளன. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீது ஆளுமையைக் கொண்டிருந்த போதும் அது நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கவில்லை. 1983 இனக்கலவரத்தைத் தொடர்ந்து வீச்சுப் பெற்ற - இந்திய ஆதரவுடன் வீச்சூட்டப்பட்ட - தமிழீழ விடுதலைப் போராட்டம் முற்றிலும் இராணுவ மயமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆளுமை படிப்படியாக வீழ்ச்சியடைந்து, பிற்காலங்களில் தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கங்கள் - பிற்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீது ஆளுமை செலுத்தினர். ஒரு சமூகத்தினது அதி உயர் அறிவியல் நிறுவனம் அச்சமூகத்தில் காணப்பட்ட ஆயுதக் கலாச்சரத்தின் ஆளுமைக்கு உட்பட்டதன் விளைவுகளுக்கு இன்று நாம் சாட்சியமாக வாழ்கின்றோம்.

    எண்பதுகளின் முற்பகுதியில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அரசியல் ரீதியாக முன்னெடுத்ததில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு கணிசமான பங்களிப்பு இருந்தது. ஒரு பக்கம் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தங்கள் உணர்ச்சிகரமான பேச்சுக்களால் தமிழுணர்வைத் தூண்டிக்கொண்டிருந்தனர். மறுபுறம் கருத்தரங்குகள், அரசியல் விழிப்புணர்வுக் கூட்டங்கள், உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்கள், ‘மண் சுமந்த மேனியர்’ போன்ற நாடகங்கள், தெருக்கூத்துக்கள் என்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் குறிப்பாக மறுமலர்ச்சிக் கழகம், கலாச்சாரக் குழு முன்னின்று மக்கள் மயப்படுத்தியது. இளைஞர்களையும் யுவதிகளையும் தமிழீழ விடுதலை இயக்கங்களை நோக்கித் தள்ளியதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் கணிசமான பங்களிப்பு இருந்தது. தமிழீழ விடுதலை இயக்கங்களின் போராளிகள் முதல் அரசியல் பொறுப்பாளர்கள் வரை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முக்கிய பொறுப்புக்களை ஏற்றிருந்தனர்.

    அந்த முக்கிய பொறுப்புக்களில் ஒன்றாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனுக்கு வாழ்க்கைத்துணை என்ற பொறுப்பையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியே ஏற்றுக்கொண்டார். யாழ்பாணப் பல்கலைக்கழகத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த மாணவர்களின் உயிரைக் காப்பாற்றும் நோக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் அவர்களைக் கடத்திச் சென்றனர். அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட மாணவிகளில் ஒருவரான விவசாயபீட இரண்டாவது ஆண்டு மாணவியான மதிவதனி ஏரம்புக்கும் வே பிரபாகரனுக்கும் 1984 ஒக்ரோபர் 1ல் தமிழகத்தில் திருப்போரூரில் திருமணம் நடைபெற்றது.

    கெ பி என்று அறியப்பட்ட குமரன் பத்மநாதன், ராஜசிங்கம் நிர்மலா, மு நித்தியானந்தன் ஆகியோர் புலிகளின் ஆரம்ப கால முக்கிய உறுப்பினர்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்தவர்கள். இவர்களில் பின்னைய இருவரும் எண்பதுகளின் நடுப்பகுதியிலேயே புலிகளில் இருந்து வெளியேறினர். சிதம்பரநாதன் (முன்னாள் ரிஎன்ஏ பா உ பத்மினி சிதம்பரநாதனின் கணவர்), கஜேந்திரன் செல்வராஜா, மு திருநாவுக்கரசு ஆகியோர் பிற்காலங்களில் முக்கியமாக அறியப்பட்ட புலிகளின் உறுப்பினர்கள்.

    ஈரோஸ், ஈபிஆர்எல்எப், புளொட், ரெலோ ஆகிய முக்கிய விடுதலை இயக்கங்கள் அனைத்திற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆதரவுத்தளம் இருந்துள்ளது. ஆனாலும் புலிகளின் உறுப்பினர்களுக்குக் கிடைத்த முக்கியத்துவமும் பிரபல்யமும் ஏனைய இயக்கங்களில் இருந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கோ மாணவர்களுக்கோ கிடைக்கவில்லை. அக்காலகட்டத்தில் பல்கலைக்கழகத்தின் ஆதரவை இழப்பது அல்லது பகைப்பது எந்தவொரு விடுதலை இயக்கத்திற்கும் விருப்பமான விடயமாக இருக்கவில்லை.

    ரெலோ அழிப்பு - இயக்கங்களில் இராணுவச் சமநிலையில் மாற்றம்:

    முற்றுமுழுதான இராணுவச் சிந்தனையில் இருந்த விடுதலை இயக்கங்களின் இராணுவப் பிரிவுகள் அது பற்றி எவ்வித அக்கறையையும் கொண்டிருக்கவில்லை. யாழ்ப்பாண மருத்துவமனை வாசலில் வைத்து ரெலோ இயக்கத் தளபதிகளில் ஒருவரான தாஸ் சுட்டுக்கொல்லப்பட்டார். பொது மக்களும் காயப்பட்டனர். அதற்கு எதிரான போராட்டங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்றது. இப்போராட்டத்திற்கு எதிராக ரெலோ நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அவர்களது உடல் யாழ் பல்கலைக்கழகத்திற்குக் கொண்டு வரப்பட்டு பல்கலைக்கழகம் இப்போராட்டத்தின் மையமானது. இவ்வாறான பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளால் ரெலோ இயக்கத்தின் செல்வாக்கு கீழ்நிலைக்குச் சென்றிருந்தது. ரெலோவினை அழித்தொழிப்பதற்குக் காத்திருந்த புலிகளுக்கு இது சாதகமான சூழலாகவும், தங்கள் செயற்பாட்டை விளக்குவதற்கான அரசியல் காரணத்தையும் கொடுத்தது.

    இதனைத் தொடர்ந்து 1986 ஏப்ரல் 29 க்கும் மே 6க்கும் இடைப்பட்ட காலத்தில் புலிகள் ரெலோ இயக்கத்தினரையும் அதன் தலைமையையும் வேட்டையாடினர். ரெலோ இயக்கம் மீதான தாக்குதலை நிறுத்துவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் குறிப்பாக பேராசிரியர் க சிவத்தம்பி சில முயற்சிகைள எடுத்தபோதும் அது எவ்வித பலனையும் அளிக்கவில்லை. ரெலோ இயக்கம் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழீழ விடுதலை இயக்கங்களிடையே இருந்த இராணுவச் சமநிலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டது. புலிகளுக்கு சரிசம பலத்தில் இருந்த ரெலோ இயக்கம் அழிக்கப்பட்டதன் மூலம் புலிகள் ஒற்றைத் தலைமையையும் இராணுவ வலிமையையும் உறுதிப்படுத்திக் கொண்டனர். ஏனைய இயக்கங்கள் இராணுவ ரீதியாக அவ்வளவு பலம்பொருந்தி இருக்கவில்லை. அதனால் புலிகளின் கரம் ஓங்க ஆரம்பித்தது. அவர்கள் ஒவ்வவொரு விடயத்தையும் இராணுவ ரீதியில் அணுகத் தலைப்பட்டனர்.

    பல்கலைக்கழக மாணவன் விஜிதரனின் மரணமும் அதற்கு எதிரான போராட்டங்களும்:

    ரெலோ இயக்கம் அழிக்கப்பட்டு ஆறு மாதங்களில் 1986 நவம்பரில் அப்போதைய புலிகளின் யாழ் மாவட்டத்தளபதி கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார்)வின் தனிப்பட்ட பிரச்சினைக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட மாணவன் விஜிதரன்  கடத்திச் செல்லப்பட்டு புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    அதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்குமாறு பல்கலைக்கழகத்தில் செயற்பட்டு வந்த மறுமலர்ச்சிக் கழகத்தை விமலேஸ்வரன் போன்ற பல்கலைக்கழக மாணவர்கள் அணுகினர். ஆனால் பின்னாளில் புலிகளின் ஐபிசி வானொலிக்கு பொறுப்பாக இருந்த பல்கலைக்கழக மாணவர்களான சர்வேஸ்வரன், சிவரஞ்சித் ஆகியோர் அன்று அவ்வாறான போராட்டங்களை முன்னெடுக்க முன்வரவில்லை.

    இந்நிலையில் விமலேஸ்வரன் பல்கலைக்கழக மாணவர்களைக் கூட்டி ‘விஜிதரன் போராட்டத்திற்கான மாணவர் அமைப்புக்குழு’ வை உருவாக்கினார்.  இக்குழுவினுள் விரைவில் சபாநாவலனும் உள்வாங்கப்பட்டார். அன்ரி ராக்கிங் மற்றும் விடயங்களால் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஒதுக்கப்பட்டு இருந்த இரயாகரன் சபாநாவலனின் அழுத்தத்தினால் விஜிதரன் போராட்டத்திற்கான மாணவர் அமைப்புக் குழுவினுள் இணைத்துக் கொள்ளப்பட்டார். ஒன்பது பேர் கொண்ட குழுவே விஜிதரனின் மரணத்திற்கு நியாயம் கேட்டு பல்வேறு போராட்டங்களையும் சகமாணவர்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுத்தது. குடாநாட்டுப் பாடசாலைகளும் இப்போராட்டத்தில் இணைந்து கொண்டன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இப்போராட்டத்தின் மையமானது. இதுவே யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாபெரும் தன்னெழுச்சியான போராட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போராட்டங்களில் பல்கலைக்கழகத்திலும் அதற்கு வெளியேயும் செயற்பட்ட ஈபிஆர்எல்எப் அமைப்பு ஒரு உந்துசக்தியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்போராட்டங்களுடன் தொடர்புபட்ட தற்போதைய தமிழரங்கம் இணையத்தளத்தின் ஆசிரியரும் அப்போது பல்கலைக்கழக மாணவருமாகிய பி இரயாகரன் புலிகளால் கடத்தப்பட்டு தடுத்த வைக்கப்பட்டிருந்த போது தப்பித்தார். மற்றுமொரு பல்கலைக்கழக மாணவனான சபாநாவலன் (இனியொரு இணையத்தள ஆசிரியர்) மற்றும் விமலேஸ்வரனின் உதவியுடனும் உரும்பராய் கிராம உழைப்பாளர் சங்கத்தினரின் ஒத்துழைப்புடனும் அவர்களின் மறைவிடத்தில் சிறிதுகாலம் வாழ்ந்தார். என்எல்எப்ரி அமைப்பில் இருந்த பி இரயாகரனிடம் அவ்வமைப்பால் மேற்கொள்ளப்பட்ட ஹற்றன் நசனல் வங்கிக்கொள்ளையின் பணம் மற்றும் நகைகள் மறைத்து வைக்கப்பட்ட விபரம் இவருக்குத் தெரியும் என்பதினாலேயே இவரைத் தாங்கள் கைது செய்ததாக புலிகளின் தளபதி மாத்தையா பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டத்தில் கூறிக்கொண்டிருந்த போது பல்கலைக்கழக மாணவர்கள் மாத்தையாவுடன் முரண்பட்டு சத்தமிட்டனர். அப்போது ஏற்கனவே திட்டமிட்டவாறு திடீரென இரயாகரன் அங்கு வந்து மாத்தையாவின் குற்றச்சாட்டை மறுத்து புலிகளின் மக்கள் விரோத நடவடிக்கைகள பல்கலைக்கழக மாணவர்களின் உதவியோடு அம்பலப்படுத்தினார். இது புலிகளுக்கு குறிப்பாக மாத்தையாவுக்கு மிகுந்த சங்கடத்தையும் ஏற்படுத்தி இருந்தது. மாத்தையா கூட்டத்தின் இடையே எழுந்து செல்ல பல்கலைக்கழக மாணவர்கள் புலிகளின் தவறுகளைச் சுட்டிக்காட்டி மாத்தையாவை பதில் சொல்லுமாறு சத்தமிட்டனர்.

    இதற்கு முன்னதாக ரெலோ இயக்கம் தடை செய்யப்பட்ட பின் ஈபிஆர்எல்எவ் முகாமில் வைத்து சபாநாவலன் புலிகளால் கைது செய்யப்பட்டு நல்லூரில் வைமன் றோட்டில் தடுத்து வைக்கப்பட்டார். அங்கு மேற்கொண்டு எவ்வித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டேன் என்று எழுதிக் கையொப்பம் இட்டு அவரின் பெற்றோருடன் செல்ல அனுமதிக்கப்பட்டார். 

    பல்கலைக்கழக மாணவன் விமலேஸ்வரனின் மரணம்:

    விஜிதரன் கொல்லப்பட்டு ஓராண்டான 1988 நவம்பரில் யாழ்ப்பாணத்தில் இருந்த ஈவிலின் ரட்ணம் இன்ஸ்ரிரியூற்றில் பின்னாளில் புலிகளின் ஆலோசகர்களில் ஒருவராக இருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் மு திருநாவுக்கரசு (திரு), சபாநாவலனை அழைத்து அவரையும் விமலேஸ்வரனையும் இரயாகரனையும் பாதுகாப்பாக இருக்கும்படியும் அவர்களுக்கு உயிராபத்து இருப்பதாகவும் எச்சரிக்கின்றார். திருநாவுக்கரசு மிகவும் பயந்த சுபாவமுடையவர். ஆரம்பத்தில் அவர் புலிகளுக்கு ஆதரவானவராக இருக்கவில்லை. அவருடைய பயமே அவரை புலியாக்கியதாகவும் ஒரு அபிப்பிராயம் பல்கலைக்கழக வட்டாரத்தில் உண்டு.

    சபாநாவலன் மு திருநாவுக்கரசுவின் தகவலை இரயாகரனுக்குச் சொல்ல அவர் உடனடியாக தலைமறைவாகிறார். விமலேஸ்வரன் திருநாவுக்கரசுவின் பயந்த சுபாவத்தைக் காரணம் காட்டி அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. திருநாவுக்கரசுவால் காலையில் எச்சரிக்கப்பட்டது. மதியம் அளவில்   விஜிதரன் கொல்லப்பட்டு சரியாக ஓராண்டு காலத்தில் 1988 நவம்பரில் விஜிதரனுக்காக முன்னின்று குரல்கொடுத்த விமலேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டார். விமலேஸ்வரனிடம் கல்விகற்ற ரியூற்றரி மாணவனின் இரட்டைச்சகோதரன் புலிகளின் உறுப்பினன் விமலேஸ்வரனை சுட்டுக் கொன்றார்.

    விஜிதரனின் மரணத்திற்கு நியாயம் கேட்டுப் போராட விமலேஸ்வரனும் அவரின் சக மாணவர்களும் துணை நின்றனர். ஆனால் விமலேஸ்வரன் கொல்லப்பட்ட போது அதனைத் தட்டிக் கேட்பதற்கான சூழல் முற்றாக இல்லாமலாக்கப்பட்டது. மரண பயத்தினால் அறிவியல் சமூகம் மிரண்டு போயிருந்தது. விமலேஸ்வரன் கொல்லப்பட்டதை மாலையில் அறிந்துகொண்ட நாவலனும் உடனடியாகத் தலைமறைவாகினார்.

    புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்:

    Memorail_in_UnnivercityOfJaffnaஇந்த பல்கலைக்கழக மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் பற்றி கிட்டு குறிப்பிட்ட பொழுது ‘அப்ப சனம் கம்பஸ் பொடியல் சொன்னால் தான் கேட்கும். இப்ப சனம் நாங்கள் சொன்னாலும் கேட்கும்” என்று கூறியதாக அப்போது தகவல் வெளியாகி இருந்தது. கிட்டுவினது அக்கூற்று மிக முக்கியமானது. தமிழீழ விடுதலைப் போராட்டம் மீது யாழ் அறிவியல் சமூகத்தின் ஆளுமை முற்றாக நீங்கி புலிகள் பல்கலைக்கழகம் மீது தங்கள் ஆளுமையை நிறுவ முற்பட்ட காலகட்டம் இது. இக்காலகட்டத்தில் கலாச்சாரக் குழு, மறுமலர்ச்சிக் கழகம் ஆகியவையும் புலிகளின் செல்வாக்கினுள் வந்தது.

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயன்ற புலிகள் பல்கலைக்கழகத்திற்குள் தமக்கு எதிரான சக்திகளை களையெடுத்த அதேசமயம் பல்கலைக்கழகத்தின் தலைமையையும் தங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்க முற்பட்டனர்.

    பல்கலைக்கழக உபவேந்தர் சு வித்தியானந்தன் கடத்தப்பட்டார்:

    Vithiyanandan_S_Profஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒருதடவை உபவேந்தர் தெரிவு செய்யப்படுவார். அதன்படி 1988 அத்தெரிவுக்கான காலமாக இருந்தது. பேராசிரியர் கைலாசபதியைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை வளர்த்தெடுப்பதில் பேராசிரியர் வித்தியானந்தனின் பங்கு குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று தடவைகள் உப வேந்தராக இருந்த காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம், மருத்துவத்துறை, விவசாயத்துறை ஆகியவற்றை உருவாக்கியவர் பேராசிரியர் வித்தியானந்தன். இவர் மீண்டும் உபவேந்தராக போட்டியிட்டால் செனட்சபை அவரையே மீண்டும் உபவேந்தராகத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பே அப்போது இருந்தது.

    பேராசிரியர் வித்தியானந்தன் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கோ அல்லது தமிழழீழ விடுதலை இயக்கங்களுக்கோ எதிரானவரல்ல. ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கோ அல்லது தமிழீழ விடுதலை இயக்கங்களுக்கோ அவர்கள் நினைத்தபடி எடுபட்டுச் செல்லக்கூடியவருமல்ல. அவர் தமிழரசுக் கட்சியின் பின்னணியைக் கொண்டவர். அதனால் அடுத்த உபவேந்தராக பேராசிரியர் வித்தியானந்தனை வரவிடாது தடுத்து தங்களுக்கு விருப்பமான பேராசிரியர் ஏ துரைராஜாவை நியமிப்பதே புலிகளுக்கு அவசியமானதாக இருந்தது.

    புலிகளுக்காக இந்தக் காரியத்தைச் செய்ய புலிகளுக்கு தலையையும் இடதுசாரிகளுக்கு வாலையும் காட்டுகின்ற ஈரோஸ் முன்வந்தது. 1988ல் பேராசிரியர் வித்தியானந்தன் ஈரோஸ் இயக்கத்தினால் மொட்டையடிக்கப்பட்டு இம்சிக்கப்பட்டு அவரது வீட்டிலேயே காவலில் வைக்கப்பட்டார். அது தொடர்பாக பாசறை இயக்கம் என்ற பெயரில் அறிக்கை வெளியிட்ட ஈரோஸ் அமைப்பு அவர் ஊழல் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி இருந்தது. அக்காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் பாசறை இயக்கம் என்ற பெயரில் செயற்பட்டு வந்தனர். அவர்களுக்கும் இக்கடத்தலுக்கும் எவ்வித சம்பந்தமும் இருக்கவில்லை. ஆனால் ஈரோஸ் பழியை அவர்கள் மீது போட்டது.

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புலிகளின் விருப்பத்திற்கேற்ப பேராசிரியர் ஏ துரைராஜா தெரிவு செய்யப்பட்டார். அவரிடம் அதற்கான தகுதியும் இருந்தது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவர் தெரிவு செய்யப்பட்ட முறையும் தெரிவு செய்யப்பட்ட நோக்கமும் ஒரு அறிவியல் சமூகத்தின் உயர்ந்த ஸ்தாபனத்திற்கு எவ்விதத்திலும் பொருத்தமற்றது.

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் தனது உள்ளுணர்வை இழந்தது. தங்களது உப வேந்தருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக குரல் எழுப்ப யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தால் முடியவில்லை. இதற்கு மற்றுமொரு காரணம் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பேராசிரியர் வித்தியானந்தனின் சில நடவடிக்கைகள். மேலும் அவரால் மேற்கொள்ளப்பட்ட சிபாரிசுகள். பேராசிரியர் வித்தியானந்தனுக்கு அவரது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் ஏற்பட்ட நிகழ்வும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் குரல் எழுப்பாததும் அவருக்கு மிகுந்த உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவற்றின் காரணத்தால் அவர் வெகுவிரைவிலேயே காலமானார். அவர் அச்சம்பவத்திற்குப் பின் தான் இறக்கும்வரை அப்பல்கலைக்கழகத்திற்குச் செல்லவில்லை. அவரது உடலைக்கூட பல்கலைக்கழகத்திற்கு எடுத்துச் செல்ல அவரது பிள்ளைகள் மறுத்தனர். பின்னர் பல்வேறு வற்புறுத்தலால் அஞ்சலிக்காக அவரது உடல் பல்கலைக்கழகத்தில் சிறிதுநேரம் மட்டுமே வைக்கப்பட்டது.

    பல்கலைக்கழக மைதானத்தில் இந்தியபடைகளுக்கு எதிரான யுத்தம் ஆரம்பம்:

    IPKF-Mil-8இக்காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் அதன் சுற்றுவட்டாரமும் புலிகளின் தளமாகி இருந்தது. 1987 யூலை 29ல் செய்துகொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை வந்த இந்திய அமைதிகாக்கும் படைக்கும் புலிகளுக்கும் இடையிலான முறுகல்நிலை ஒக்ரோபர் 12ல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உதைபந்தாட்ட மைதானத்திலேயே யுத்தமாக வெடித்தது. இந்தியப் படைகளின் தாக்குதல் திட்டத்தை முன்கூட்டியே அறிந்துகொண்ட புலிகள் இந்தியப் படைகள் தரையிறங்க முற்பட்ட பல்கலைக்கழக மைதானத்தைச் சுற்றியுள்ள கட்டிடங்களில் பதுங்கியிருந்து தாக்குதலை நடாத்தினர். இதில் 30 வரையான இந்திய கொமாண்டோக்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலை அடுத்து பிரம்படியில்  இந்தியப்படைகள் மோசமான பழிவாங்கல் படுகொலைகளில் ஈடுபட்டனர். இதில் 50 பேர்வரை படுகொலை செய்யப்பட்டு ராங்கிகளினால் நெரிக்கப்பட்டு அவர்களது உடல் சின்னாபின்னமாக்கப்பட்டது. இந்தியப் படைகளுக்கும் புலிகளுக்குமான யுத்தத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இந்தியப் படைகளின் கண்காணிப்பிற்குரிய இடமாகியது.

    பல்கலைக்கழகத்தில் இலங்கை இந்திய இராணுவத்தின் தலையீடுகள்:

    1983ல் யாழ் பல்கலைக்கழகத்தில் தங்கள் பட்டப்படிப்பை ஆரம்பித்த மாணவர்கள் இரண்டு மடங்கிலும் கூடுதலான காலத்தைச் செலவிட்டு 1990 இலேயே தங்கள் பட்டப்படிப்பை முடித்து வெளியேறக் கூடியதாக இருந்தது. பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற போராட்டங்கள், ஹர்த்தால், பகிஸ்கரிப்புக்கள், பல்கலைக்கழகம் மூடப்பட்டமை என்று பல்வேறு காரணங்களால் பட்டப்படிப்புப் பாடத்திட்டங்களை திட்டமிட்டமுறையில் மேற்கொள்ள முடியவில்லை. இதற்கு இலங்கை இந்திய இராணுவங்களின் தமிழ் பகுதிகள் மீதான நடவடிக்கைகள் முக்கிய காரணமாக அமைந்தது.

    ஆனால் இலங்கை இராணுவமோ, இந்திய இராணுவமோ யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு எதிராகவோ அங்கு கற்கின்ற மாணவர்களுக்கு எதிராகவோ திட்டமிட்ட தாக்குதல் எதனையும் மேற்கொண்டிருக்கவில்லை. ஆனால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் பல்கலைக்கழகத்தின் நாளாந்த இயக்கத்தைப் பாதித்து இருந்தது.

    மேலும் இராணுவத்திற்கு எதிராக போராட்டம் ஒன்றை பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட போது புலி ஆதரவாளர்கள் சிலர் இராணுவத்தை நோக்கி கல்எறிந்து இராணுவத்தைக் காயப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பல்கலைக்கழக மாணவன் சத்தியேந்திரா மரணமடைந்தார்.

    மருத்துவபீட விரிவுரையாளர் ரஜனி திரணகமவின் மரணம்:

    Rajani_Thiranagama_Drஇந்திய இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் முழுவீச்சுப் பெற்றிருக்கையிலும் புலிகள் தங்கள் மீதான எவ்விதமான விமர்சனங்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. அவ்வாறான விமர்சனங்களை ஆயுதங்கள் கொண்டு அடக்கினர். இந்த விமர்சனங்கள் அறிவியல் சமூகத்தில் இருந்து வந்த போதும் அவர்கள் தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயங்கியதில்லை.

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்தவபீட விரிவுரையாளரும் மனித உரிமைப் போராளியுமான ரஜனி திரணகம 1989 செப்ரம்பர் 21ல் யாழ்ப்பாண மருத்துவபீடத்திற்கு அருகில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வந்தவர். பின்னர் அவர்களுடன் கருத்தியல் ரீதியில் முரண்பட்டிருந்தார். அவருடைய ‘முறிந்த பனை’ என்ற நூலுக்காகவே அவர் படுகொலை செய்யப்பட்டு இருந்தார். முறிந்த பனை இலங்கை, இந்திய இராணுவங்களின் கொடிய மனித உரிமை மீறல்கள், தமிழீழ விடுதலை இயக்கங்கள் அனைத்தினதும் மனித உரிமைமீறல்கள் என்பனவற்றை அம்பலப்படுத்தி இருந்த போதும் விமர்சனங்கள் மீது எள்ளளவும் சகிப்புத்தன்மையில்லாத புலிகள் ரஜனி திரணகமவை படுகொலை செய்தனர். யாழ்பாணப் பல்கலைக்கழகத்தில் படுகொலை செய்யப்பட்ட மிக முக்கியமான ஒருவர் ரஜனி திரணகம.

    ரஜனி திரணகமவின் படுகொலையைக் கண்டித்து ஊர்வலம் நடாத்த பல்கலைக்கழக மாணவர்கள் தயாரான போது ‘எமது விடுதலை இயக்கத்திற்கோ எமது தலைவருக்கோ எதிராக செயற்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என புலிகள் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர். அதனால் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் வாயினை கறுப்புத் துணியால் கட்டி போராட்டத்தை நடாத்தினர்.

    ரஜனி திரணகமவின் மரணம் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பின் (யுரிஎச்ஆர் - ஜெ) சக விரிவுரையாளர்களான கலாநிதி சிறிதரன் கலாநிதி ராஜன் கூல் ஆகியோரது இருப்பையும் அச்சத்திற்குரியதாக்கியது. இவர்கள் இன்னமும் தலைமறைவாக வாழவே நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

    சிவரமணி - செல்வி ஆகியோரின் மரணங்கள்:

    Sivaramani_S மக்களுக்கான விடுதலையை வென்றெடுப்பதற்கு அறிவியல் சக்தியை சுதந்திரமாக செயற்பட புலிகள் அனுமதிக்கவில்லை. தனது அறிவியல் சக்தியை சுதந்திரமாக உலாவவிட்டு கவிதைகள் வடித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி சிவரமணி சிவானந்தன் புலிகளின் அழுத்தங்கள் காரணமாக தனது கவிதைகளை தீயிட்டு தன்னையும் அழித்துக்கொண்டார்.

    Selviசிவரமணி சிவானந்தனின் நண்பர்களான செல்வி தியாகராஜா, மனோகரன் ஆகிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு மாணவர்கள் 1990ல் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களுடைய காலத்தவரான சிதம்பரநாதன், முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. செல்வி தியாகராஜா, மனோகரனின் கொலைகள் தொடர்பாக புலிகளுடன் நெருக்கமாக இருந்த சிதம்பரநாதன் அறிந்திருந்ததாக செல்வி தியாகராஜாவுக்கு நெருக்கமானவர்கள் இன்றும் வலுவாக நம்புகின்றனர்.

    செல்வி கடத்திச் செல்லப்பட்ட காலத்தில் பென் என்ற சர்வதேச அமைப்பு அவருடைய எழுத்துக்கு விருது வழங்கி கௌரவித்தது. செல்வியுடன் அப்போது பர்மாவின் இராணுவ ஒடுக்குமுறைக்கு எதிராகப் போரடிய அங் சன் சூச்சி க்கும் இவ்விருது வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. செல்வியை விடுவிக்கும்படியும் அவ்வமைப்பு வேண்டுகோள் விடுத்து இருந்தது. செல்வியின் தாயார் நீண்டகாலமாகத் தன்னுடைய மகள் உயிருடன் இருப்பதாகவே எண்ணி இருந்தார்.

    அறிவியல் சுதந்திரத்திற்குத் தடை:

    1990க்களின் முற்பகுதியுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முற்று முழுதாக புலிகளிடம் சரணாகதி அடைந்தது. தங்களுக்கு எதிராகச் செயற்படக் கூடியவர்கள் என்று கருதப்பட்டவர்கள் களையெடுக்கப்பட்டனர்.

    ‘கற்பித்தலும் ஆய்வும் இணைந்து பாரபட்சமற்ற உண்மையைத் தேடுவதே பல்கலைக்கழகம்’ என்ற பல்கலைக்கழகத்தின் நோக்கமே கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு ஆய்விலும் கற்பித்தலிலும் புத்திஜீவித சுதந்திரம், பல்கலைக்கழகத்திற்கான சுயாதீனம் என்பன மறுக்கப்பட்டு சுதந்திரமான சிந்தனை மரண தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டது. தமிழ் சமூகத்தின் அறிவியல் மையம் மௌனமானது. ஆயுதத்தின் மேலும் அதிகாரத்தின் மேலும் மட்டும் நம்பிக்கையும் காதலும் கொண்ட வே பிரபாகரனின் புலிகள் சிந்தனையற்ற துப்பாக்கி ஏந்தும் இயந்திர மனிதர்களை உருவாக்கினர். இந்த இயந்திர மனிதர்களை உருவாக்குவதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை தொழிற்சாலையாக்கினர்.

    யாழ்ப்பாணம் இராணுவக் கட்டுப்பாட்டில் பல்கலைக்கழகம் புலிகளின் கட்டுப்பாட்டில்:

    Gajendran_Selvarajahபுலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து யாழ்ப்பாணம் மீண்டும் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு வந்த பின்னரும் புலிகள் வன்னியில் இருந்து மாணவர்களுக்கு ஊடாக தங்கள் ஆளுமையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீது கொண்டிருந்தனர். கஜேந்திரன் செல்வராஜா போன்று பல இளைஞர்கள் வன்னிப் பகுதியில் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுக்காக புலிகள் திறமையான மாணவர்களைக் கொண்டு பரீட்சையை எழுதி இவர்களைப் பல்கலைக்கழகம் அனுப்பினர். இதன் காரணமாகவே கஜேந்திரன் செல்வராஜா குதிரைக் கஜேந்திரன் என்ற பட்டப்பெயரைப் பெற்றுக் கொண்டார். இவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என்பதிலும் பார்க்க புலிகளின் முழுநேர உறுப்பினர்கள் என்பதே உண்மை. இவர்களே பல்கலைக்கழகத்தை நிர்வகித்தனர். வெறும் கடிதத் தலைப்பு அமைப்புகளையும் சங்கங்களையும் உருவாக்கி அறிக்கை விடுவது போன்ற நாளாந்த நடவடிக்கைகளிலும் ஊர்வலங்கள் எதிர்ப்புப் போராட்டங்கள் பொங்கு தமிழ் போன்ற நடவடிக்கைகளிலும் இவர்களே ஈடுபட்டனர்.

    பல்கலைக்கழகங்களில் திறமையான மாணவர்களுக்குக் கிடைக்கக் கூடிய புலமைப்பரிசில்கள் இம்மாணவர்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் புலிகளின் நோக்கங்களுக்காக வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களும் சமாதான காலத்தில் நோர்வே அரசாங்கத்தின் அனுமதியுடன் மேற்கு நாடுகளுக்கு வந்தவர்களுமே பெரும்பாலும் மேற்கு நாடுகளில் புலிகளின் நலன்சார்ந்த போராட்டங்களை முன்னெடுத்தனர். மேற்கு நாடுகளின் பல்கலைக்கழக மாணவர்களை அணி திரட்டுவதில் இவர்கள் முன்நின்றனர்.

    விரிவுரையாளர் பொங்கு தமிழ் கணேசலிங்கத்தின் மீது பாலியல் குற்ற வழக்கு:

    20.09.2005, யாழ்ப்பாணத்தில் நீதியரசர் திருமதி சிறிநிதி நந்தசேகரம் முன்னிலையில் ‘பொங்கு தமிழ்’ கனேசலிங்கம் என்று யாழ்ப்பாணத்தில் பிரபலமாகத் அறியப்பட்டிருந்த யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் தங்கராசா கனேசலிங்கம், ஆஜர்ப்படுத்தப்பட்டார். இவர் முள்ளையவளையைச் சேர்ந்த முத்தையா யோகேஸ்வரி என்ற பதின்மூன்று வயது வேலைக்காரப் பெண்னைப் பாலியல் கொடுமை செய்த குற்றத்திற்காகவே நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார். சிறு வயதிலிருந்து கனேசலிங்கம் வீட்டில் வேலைக்காரியாய் இருந்த யோகேஸ்வரியை கணேசலிங்கம் நாற்பது தடவைகள் பாலியற் கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

    யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஸ்தாபனத்தைச் சேர்ந்த றமேடியஸ் என்பவர் யோகேஸ்வரிக்காக வழக்காடினார். தங்கராசா கணேசலிங்கம் சார்பில் இன்றைய ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தியும் அன்றைய ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ்ம் வாதிட இருந்தனர். ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக இவர்கள் வழக்கில் இருந்து வாபஸ்பெற்றனர். அதன் பின் தங்கராசா கணேசலிங்கத்தின் சட்டத்தரணியாக ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ந ஸ்ரீகாந்தா வழக்கை எடுத்திருந்தார். இவ்வழக்குடன் தொடர்பற்ற வேறு காரணங்களுக்காக மனித உரிமைவாதியான றேமடியாஸ் இலங்கை இராணுவத்தினரால் கடுமையாக தாக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

    பின்நாட்களில் முத்தையா யோகேஸ்வரி தனது பெற்றோரைப் பார்க்கச் சென்றவர் காணாமல் போய்விட்டார். அவர் உயிருடன் இருக்கின்றாரா? அல்லது இல்லையா? அல்லது படுகொலை செய்யப்பட்டாரா? என்பதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

    ஆனால் தங்கராசா கணேசலிங்கம் இன்னமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றுகின்றார். இதனை தேசம்நெற் உறுதிப்படுத்தியும் உள்ளது. ஒரு அறியப்பட்ட பாலியல் குற்றவாளி இலங்கையில் உள்ள சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி இன்னமும் அதே பல்கலைக்கழகத்தில் தனது பணியைத் தொடர்கின்றார். ஆனால் பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தைத் தொழிலாளி உயிருடன் உள்ளாரா இல்லையா என்பதே தெரியவில்லை.

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சில விரிவுரையாளர்கள் தங்கள் கல்வித் தகமையையும் பொறுப்பையும் துஸ்பிரயோகம் செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் பல்கலைக்கழகச் சூழலில் காணப்படுகின்றது. தொழில் ரீதியான ஒழுக்க கட்டுப்பாடுகளை இவர்கள் மீறுவதாகவும் அக்குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கின்றன. இவை ஏனைய பல்கலைக்கழகங்களுக்கும் பொதுவானதாக இருந்த போதும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண சமூகத்தைப் போன்றே மூடிய சமூகமாக இருப்பதால் இந்த ஒழுங்கீனங்கள் வெளிவருவதில்லை என்றும் கூறப்படுகின்றது. மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்ந்தும் பழமைவாதத்தையும் ஆண் ஆதிக்கத்தையும் தக்கவைத்துக் கொண்டேயுள்ளது. இப்பல்கலைக்கழகம் புதிதாக வெளியில் இருந்தும் யாரையும் உள்வாங்க விரும்புவதில்லை. அதற்கு முக்கிய காரணம் அங்குள்ள சூட்சுமங்கள் வெளியே வந்துவிடும் என்கின்ற அச்சமே. அதனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனது மாணவர்களையே பிற்காலங்களில் விரிவுரையாளர்களாக்கியது. இந்தச் சுழற்சியிலேயே பல்கலைக்கழகம் இயங்குகின்றது.

    பேராசிரியர் ரட்ணஜீவன் கூலின் நியமனமும் நாட்டைவிட்டு அவர் வெளியேறியதும்:

    Ratna_Jeevan_Hooleஇந்தப் பின்னணியில் 2006ல் பேராசிரியர் ரட்ன ஜீவன் கூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னதாக அப்போதைய ஜனாதிபதி சந்திரிகாகுமாரதுங்கவால் University Grants Commission உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பேராதணைப் பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் பொறியியல் துறையில் பேராசிரியராகக் கடமையாற்றிய இவரது கல்வித்தகமையும் அதற்கேற்ற நேர்மையையும் பல்கலைக்கழகச் சமூகத்தில் அவருக்கு நன்மதிப்பை ஏற்படுத்தி இருந்தது. தங்கள் அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்பவர்கள், தங்கள் பொறுப்புக்களைச் செய்யத் தவறுபவர்கள் மத்தியில் இவர் கடுமையான ஒருவராகக் கணிக்கப்பட்டார்.

    ஆனால் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு ப தமிழ்ச்செல்வன் ரட்ன ஜீவன் கூலின் நியமனத்தை கடுமையாக எதிர்த்தார். அவர் தமிழ் தேசியவாதத்திற்கு எதிரானவர் என தமிழ்ச்செல்வன் சுட்டிக்காட்டி இருந்தார். ஆனால் ரட்ன ஜீவன் கூலுக்கு நெருக்கமானவர்கள் அவரை ஒரு தமிழ் தேசியவாதியாகவே காண்கின்றனர். ஆனால் புலிகளுக்கு ரட்ன ஜீவன் கூலில் இருந்த பிரச்சினை அவர் மனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பவராக இருந்தது. புலிகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அவர் கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருந்தார். இதன் காரணமாக தங்களுக்கு வளைந்து கொடுக்கக் கூடிய ஒருவரையே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக்க புலிகள் முற்பட்டனர். ரட்ன ஜீவன் கூல் அதற்கு ஏற்ற ஒருவரல்ல. மிகுந்த ஆளுமை உடையவர். புலிகளுக்கு வளைந்து கொடுக்கக் கூடியவரல்ல. அதனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு ரட்ன ஜீவன் கூல் உபவேந்தராக்கப்படுவது யாழ்ப்பாண அறிவியல் மையத்தில் தங்கள் அரசியலை முன்னெடுக்க முடியாத சூழல் ஏற்படும் என்பதை புலிகள் உணர்ந்தனர். அவரது நியமனத்தை பல வழிகளிலும் எதிர்த்தனர். தனிப்பட்ட எச்சரிக்கைகளை அவருக்கு மட்டுமல்ல அவரது குடும்பத்தினர்க்கும் விட்டனர்.

    பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பல்கலைக்கழகக் கவுன்சிலின் வாக்கெடுப்பு மூலமே தீர்மானிக்கப்படுகின்றது. நடப்பில் உள்ள உபவேந்தருக்கான பதவிக்காலம் முடியும்போது பல்கலைக்கழகக் கவுன்சில் புதிய உபவேந்தருக்கான விண்ணப்பத்தைக் கோரும். அதற்காக விண்ணப்பித்தவர்களின் பெயர்கள் பல்கலைக்கழகக் கவுன்சிலில் வாக்கெடுப்பிற்கு விடப்படும். இந்த வாக்கெடுப்பில் கூடுதலான வாக்குகளைப் பெற்ற மூவரது பெயர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். இவர்களில் ஒருவரை ஜனாதிபதி தனது தெரிவின் அடிப்படையில் உபவேந்தராக நியமிப்பார். ஜனாதிபதியின் தெரிவு கட்டாயமாக கூடுதலான வாக்கைப் பெற்றவருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை.

    ரட்ன ஜீவன் கூலின் விடயத்தில் பல்கலைக்கழகக் கவுன்சில் உறுப்பினர்களை ரட்ன ஜீவன் கூலுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று புலிகளும் அவரது பல்கலைக்கழக ஆதரவு சக்திகளும் கடுமையாக பிரச்சாரம் செய்தனர். இருந்தும் ரட்ன ஜீவன் கூல் கூடுதலான வாக்குகளைப் பெற்ற மூவரில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்டார். இது புலிகளுக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியதுடன் பேராசிரியர் ரட்ன ஜீவன் கூலுக்கு ஆதரவாக வாக்களித்தவர்களுக்கு நெருக்கடிகளையும் வழங்கினர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கவுன்சிலால் தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட பெயர்களில் இருந்து பேராசிரியர் ரட்ன ஜீவன் கூலை ஜனாதிபதி தெரிவு செய்தது ஆச்சரியமான விடயமல்ல.

    புலிகளின் முகவர்களாக இயங்கிய கஜேந்திரன் செல்வராஜா தலைமையிலான பல்கலைக்கழக மாணவர் அமைப்பு ரட்ன ஜீவன் கூலின் நியமனத்தை கடுமையாக எதிர்த்தது. பல மாணவர் போராட்டங்களை முன்னெடுத்தனர். ரட்ன ஜீவன் கூலின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது. தனிப்பட்ட பயமுறுத்தல்கள் பல வகையிலும் அவருக்கும் அவரது குடும்பத்தினர்க்கும் விடுக்கப்பட்டது. ‘யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கால் வைத்தால் தலையில்லாத முண்டம் பெட்டியில் வரும்’, என்று மார்ச் 11 2006ல் மக்கள் எழுச்சிப் படை தொலைபேசி மிரட்டல்களை ரட்ன ஜீவன் கூலுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் விடுத்தனர்.

    புலி ஆதரவு ஊடகங்களும் ரட்ன ஜீவன் கூலுக்கு எதிரான பிரச்சாரங்களைத் தீவிரமாக்கி இருந்தனர். வழமையான துரோகி, ஒட்டுக்குழு, காட்டிக் கொடுப்பவர் என்ற பிரச்சாரங்கள் அப்போது தீவிரமாகி இருந்தது.

    ஏப்ரல் 11ல் இதுபற்றிய அறிக்கையை சர்வதேச மன்னிப்புச்சபை விடுத்திருந்தது. அதில் ரட்ன ஜீவன் கூலுக்கு இருந்த உயிராபத்தை அவ்வறிக்கை சுட்டிக்காட்டியது.

    இவற்றினைவிடவும் ரட்ன ஜீவன் கூலுக்கு எதிராக மதமும் பயன்படுத்தப்பட்டது. ரட்ன ஜீவன் கூல் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுபவர். அதேநேரம் இந்து சமயத்தின் அடிப்படைவாதத்திற்கு எதிரானவரும் கூட. குறிப்பாக தமிழர்களிடையே உள்ள சாதியப் பாகுபாட்டிற்கு இந்துசமயத்தின் அடிப்படைவாதமே காரணம் என்ற அடிப்படையில் பல கட்டுரைகளை எழுதி உள்ளார். இவற்றினை அடிப்படையாகக் கொண்டு ரட்ன ஜீவன் கூல் இந்து சமயத்திற்கு எதிரான கத்தோலிக்கர் என்ற துருப்புச்சீட்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அவருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது.

    இவற்றுடன் ரட்ன ஜீவன் கூல் சிறந்த நிர்வாகியாகவும் அடிப்படை நேர்மை விடயங்களில் கடுமையானவராகவும் இருந்ததால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வழமையாகிப் போன நிர்வாக ஒழுங்கீனங்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் உள்வீட்டு அரசியல் சகிடதித்தங்கள் தொடரமுடியாது என்ற அபிப்பிராயமும் பல்கலைக்கழக நிர்வாகத்தினரிடம் இருந்தது. ரட்ன ஜீவன் கூல் உபவேந்தரானால் இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறைகள் தொடர முடியாது என்பது மிகத்தெளிவாகி இருந்தது. அதனால் ரட்ன ஜீவன் கூலின் வரவு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்திலும் வரவேற்புக்குரியதாக இருக்கவில்லை.

    புலிகளுடைய கடும்போக்கை கைவிட்டு ரட்ன ஜீவன் கூலை தனது கடமையைத் தொடர வெவ்வேறு வழிகளில் முயற்சிக்கப்பட்டது. புலிகளுடனும் இது தொடர்பாகப் பேசப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இவ்விடயத்தில் தலையீடு செய்தது. ஆனால் அவை எதுவும் பலனளிக்கவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அவரை நாட்டைவிட்டு வெளியேறும்படி நிர்ப்பந்தித்தது. 

    யாழ்ப்பாணப் பல்கைலக்கழகத்தை சிறந்தவொரு பல்கலைக்கழகமாக மாற்றும் திட்டங்களையும் முழுமையான பொறியியல்துறையை நிறுவும் முயற்சியையும் ரட்ன ஜீவன் கூல் வெளியிட்டு இருந்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யும் University Grants Commissionஇன் உறுப்பினராகவும் இருந்ததால் அவருக்கு யாழ்பாணப் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்கான நிதியைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் இருந்தது. அவ்வாறு இருந்தும் அவ்வாறான ஒருவரை புலிகளும் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் நிராகரித்தன.

    இறுதியில் ரட்னஜீவன் கூல் நாட்டைவிட்டு வெளியேறுவதே தனதும் தனது குடும்பத்தினரதும் பாதுகாப்பிற்கு ஏற்றது என்று முடிவுக்குத் தள்ளப்பட்டார். தனது தொழிலில் இருந்து நீண்ட விடுமுறையைப் பெற்றுக்கொண்ட ரட்ன ஜீவன் கூல் ஏப்ரல் 20ல் இலங்கையைவிட்டு வெளியேறினார். கலிபோர்னியாவில் உள்ள Harvey Mudd Collegeல் 12 ஆண்டுகள் பேராசிரியராக இருந்து இலங்கைச் சூழலில் தனது பிள்ளைகள் வளர்க்கப்பட வேண்டும் என்று இலங்கை சென்றவர் மீண்டும் அமெரிக்க பல்கலைக்கழகத்திலேயே தனது கற்பித்தலைத் தொடர நிர்ப்பந்திக்கப்பட்டார்.

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உபவேந்தராக மீண்டும் ரட்ன ஜீவன் கூலை நியமிக்க முயற்சி:

    Ratna_Jeevan_Hooleதற்போது புலிகள் அழிக்கப்பட்ட நிலையில் ரட்ன ஜீவன் கூலை மீண்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு கொண்டுவரும் முயற்சிகள் தீவிரமாகி உள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளமை தேசம்நெற்க்கு அறிய வந்துள்ளது. ரட்ன ஜீவன் கூல் தனது பதவியை ராஜினாமாச் செய்துவிட்டுச் செல்லவில்லை. அவர் நீண்ட விடுமுறையை எடுத்துக்கொண்டே நாட்டைவிட்டு வெளியேறி இருந்தார். தற்போது நாட்டில் அபிவிருத்தி முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதால் ரட்ன ஜீவன் கூலின் வரவு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் அபிவிருத்திக்கு உந்துதலாக அமையும். 2006ன்
    உபவேந்தர் பதவிக்காலம் 2009ல் முடிவுற்றது. அடுத்த மூன்றாவது ஆண்டு 2012 முற்பகுதியில் முடிவுறும். பெரும்பாலும் 2012 முற்பகுதியில் பேராசிரியர் ரட்ன ஜீவன் கூல் யாழ் பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக நியமிக்கப்படலாம். அல்லது அதற்கு முன்னதாக அவரை நியமிப்பதற்கான அதிகாரமும் ஜனாதிபதியிடம் உண்டு.

    இறுதியாக …..

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 36 ஆண்டுகளில் அதன் முற்பகுதியான காலகட்டமே ஒப்பீட்டு அளவில் ஓரளவு சுயாதீனத்துடன் இயங்கக் கூடியதாக அமைந்தது. அதன் பின் வந்த காலங்கள் பெரும்பாலும் ஆயுத நெருக்கடிக்குள் சுயாதீனத்தை இழந்தே இயங்கிக் கொண்டிருந்தது. இதன் காரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனது ஆளுமையை முற்றாக இழந்துள்ள நிலையே இன்று உள்ளது. இந்த நிலையில் சடுதியாகவும் வேகமாகவும் ஆனால் விவேகமாகவும் மாற்றத்தை ஏற்படுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை அதனை உருவாக்கிய பேராசிரியர் கைலாசபதியின் இலக்கு நோக்கி - ஆசியாவின் சிறந்த பல்கலைக்கழகமாக - கொண்டு செல்வதற்கு மிகுந்த ஆளுமையும் பரந்த சிந்தனையும் உடைய ஒருவர் உபவேந்தராக நியமிக்கப்பட வேண்டும். அதற்கு தகுதியானவர் பேராசிரியர் ரட்ன ஜீவன் கூல் என்பதற்கு அவரது கடந்தகால கல்வி மற்றும் நிர்வாகச் செயற்பாடுகள் ஒரு எடுத்துக்காட்டு.

    Related Article:

    முருகையன் (1935-2009) - நகலும் நாடகமும் : நட்சத்திரன் செவ்விந்தியன்






    Related posts:
    • Will be added soon here...
    உங்கள் கருத்து

    This entry was posted on Thursday, July 1st, 2010 at 12:09 pm and is filed under கட்டுரைகள்/ஆய்வுகள், ஜெயபாலன் த. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
    123 Comments so far

    1. Siddeek on July 1, 2010 7:04 pm

      As a person who was attached to the Univeristy of Jaffna for more than 13 years, I realise that you are raisning an important issue here. Why don’t you organise a meeting inviting Jaffna University graduates, well wishers and past academics living in Europe and the UK to discuss this matter and work towards the achievement of the intended objectives.

      Dr. Siddeek Yoosuf,
      London

    2. ப்பிரசன்னா on July 1, 2010 7:10 pm

      மறக்க முடியாத ஒரு வரலாறு….
      ”பேராசிரியர் வித்தியானந்தன் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கோ அல்லது தமிழழீழ விடுதலை இயக்கங்களுக்கோ எதிரானவரல்ல. ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கோ அல்லது தமிழழீழ விடுதலை இயக்கங்களுக்கோ அவர்கள் நினைத்தபடி எடுபட்டுச் செல்லக்கூடியவருமல்ல. அவர் தமிழரசுக் கட்சியின் பின்னணியைக் கொண்டவர். அதனால் அடுத்த உபவேந்தராக பேராசிரியர் வித்தியானந்தனை வரவிடாது தடுத்து தங்களுக்கு விருப்பமான பேராசிரியர் ஏ துரைராஜாவை நியமிப்பதே புலிகளுக்கு அவசியமானதாக இருந்தது.”

      இதற்கு முதலிருந்து வருவோம்….
      இடையில்…
      ‘தமிழாராட்சி வித்தியானந்தனில்’ இருந்து, யூ.என்.பி ஆட்சிக் காலம் முதல், ‘இந்திய -இலங்கை ஒப்பந்த’ நடைமுறைவரை …

      கட்டரையாளரின் நியாயங்கள் புரிகிறது…. (விமலேஸ்வரனின் கொலை! )

      விமலேஸ்வரின் படுகொலை! ஒர் ஆரசியற் படுகொலை!! இது ஒரு பல்கலைக்கழக மாணவனின் படுகொலை மட்டுமல்ல!!

      கட்டுரையாளர் தடம்புரளவேண்டாம்..

      ப்பிரசன்னா 01 07 10

    3. DEMOCRACY on July 2, 2010 5:17 am

      யாழ்பாணியமும், “இலங்கை தலித்தியமும்” ஒரே மூலத்தைக் கொண்டதே!. “இடத்துசாரி அரசியலுக்குள்” தலித்தியத்தை கொண்டுவருவது, மே 18 ன், வெற்றிடத்தில் தலித்தியத்தை மாற்றீடு செய்யும் முயற்சி!. தமிழ்நாட்டில், “இட ஒதுக்கீடு” சமூக நீதியாகாது அது, 100 சதவிகிதம் தலித்திய இடஒதுக்கீட்டு கோரிக்கைக்கே சென்றடையும். யாழ்பாணியம் என்பது “வேலைவாய்ப்புக்கான” யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் உற்பத்தி பொருள்!, ஜாதிய அமைப்பின் வெளிப்பாடு என்பது சரியான தரவாகாது!./ உலகில் மக்கள் விரோதப் போக்குகளாகத் தோற்றம் பெற்ற, ஜேர்மன் நாசிசம், இஸ்ரேலிய சியோனிசம், தமிழ் நாட்டின் பார்ப்பணியம் போன்று, ஒப்பிடப்படக் கூடிய, ‘யாழ்ப்பாணியம்’ என்று சொல்லப்படக் கூடிய, யாழ் உயர்சாதி மேட்டுக்குடி குழாமினரின் அதிகாரத்துக்கான ஒரு போராட்டமே, புலிகளால் தலைமையேற்று நடாத்தப்பட்ட இந்தப் போராட்டமாகும். இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர், தனது இன விகிதாசாரத்தை மீறி, வெள்ளைக்காரனிடமிருந்து பெற்றுக் கொண்ட அபரிமிதமான அதிகாரங்களையும், வளங்களையும், சலுகைகளையும் மீண்டும் பெறுவதற்காகவே தொடங்கப்பட்ட ஒன்று. அது ஏகாதிபத்தியத்துடனும், சிங்கள மேட்டுக்குடி அதிகார வர்க்கத்துடனும் கூட்டுச் சேர்ந்த அதேவேளையில், சாதாரண சிங்கள – தமிழ் - முஸ்லீம் மக்களைக் கொன்று குவித்ததிலிருந்து இதை விளங்கிக கொள்ளலாம். –கனடாவில் யூன் 19 திகதி நடந்த ‘தியாகிகள் தின’க் கூட்டத்தில் கலந்து கொண்டு, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) யின் முன்னாள் வட பிரதேசச் செயலாளர் ச.சுப்பிரமணியம் நிகழ்த்திய உரை./–

      திரு.ரத்தின ஜீவன் கூல் அவர்களுக்கு ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன் /ரட்ன ஜீவன் கூல் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுபவர். அதேநேரம் இந்து சமயத்தின் அடிப்படைவாதத்திற்கு எதிரானவரும் கூட. குறிப்பாக தமிழர்களிடையே உள்ள சாதியப் பாகுபாட்டிற்கு இந்துசமயத்தின் அடிப்படைவாதமே காரணம் என்ற அடிப்படையில் பல கட்டுரைகளை எழுதி உள்ளார்./– அவரின் இந்தக் கூற்றுக்காக காரணம், “இலங்கை சைவ மதமா”, “பார்ப்பணியம் என்று கூறப்படும் இந்திய இந்து மதமா?”. பார்ப்பணியமும், யாழ்பணியமும் ஒன்று அன்று!. அதனுடைய “PEDANTRY” சர் வில்லியம் ஜோன்ஸ் காலத்தின், “பினவலண்ட் டெஸ்போட்டிஸமாக” புரிந்துக் கொண்டாலும், நாம் “சீன கலாச்சார புரட்சியின்” வரலாற்றை நோக்க வேண்டும்!. யாழ்பாணியம் இத்தகைய ஆழமான வேர்களை உடையது அன்று!……

    4. Kumar on July 2, 2010 5:31 am

      யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பழைய மாணவர்களின் ஆதரவுடன் ஒரு அமைப்பினை லண்டனில் ஏற்படுத்த வெண்டும் என்ற கனவு அதன் பழைய மாணவர்கள் என்ற வகையில் எமக்கு நீண்டகாலமாகவே உள்ளது. பாடசாலைகளுக்கெல்லாம் பழைய மாணவர் சங்கம் இருப்பதைப்போல யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் ஒன்று இருந்தால் என்ன? பல்கலைக்கழகச் சகமூகத்தின் இயங்குதளத்தை நேர்ப்படுத்தவும்> பல்வேறு வேலைத்திட்டங்களுக்கும்> ஆய்வு முயற்சிகளுககும்> அவர்களது வெளியீட்டுப் பிரிவொன்றினை உருவாக்கவும் என ஆரோக்கியமான வழியில் பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கம் இயங்கவேண்டும் என்பது எமது அவா.
      பூனைக்கு யாராவது மணிகட்டுங்களேன்.

      குமார் (கலைப்பீடம் 2004)

    5. Theeba on July 2, 2010 5:51 am

      நீண்ட கட்டுரை. தகவல்களுக்கு நன்றி ஜெயபாலன்.

      ‘ஒரு அறியப்பட்ட பாலியல் குற்றவாளி இலங்கையில் உள்ள சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி இன்னமும் அதே பல்கலைக்கழகத்தில் தனது பணியைத் தொடர்கின்றார். ஆனால் பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தைத் தொழிலாளி உயிருடன் உள்ளாரா இல்லையா என்பதே தெரியவில்லை.’

    6. BC on July 2, 2010 8:00 am

      எனக்கு தெரிந்திராத தகவல்கள் இக்கட்டுரை முலம் அறிந்துதேன் நன்றி.
      கொடுமைக்குள்ளாக்கபட்ட அந்த பெண் யோகேஸ்வரி காணாமல் போனது வலிக்கிறது.
      //அன்ரி ராக்கிங் மற்றும் விடயங்களால் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஒதுக்கப்பட்டு இருந்த இரயாகரன்..//
      ராக்கிங் என்கிற துன்புறத்தலுக்கு இரயாகரன் எதிராக இருந்தாரா அல்லது ஈடுபாடுள்ளவராக இருந்தாரா என்பது விளங்கவில்லை!

    7. chandran.raja on July 2, 2010 8:44 am

      பி.சி ராக்கிங்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்?. ராக்கிங் ஒரு புளுகுவந்த…..வரும் காலத்திற்கு பொறுப்பெடுக்கிற இளம்தலைமுறையின் ஒரு சிறு பகுதியினர் ஆரம்ப காலபகுதிகளில் நடத்திமுடிக்கிற “திருவிழா”. (இதில் தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு)
      றயாகரனின் இணையத்தளத்திற்கு போனால் தனது காலத்தில் அவர் நடத்திய உரையைக் கேட்கமுடியும். புலிகளின் அடாவடித்தனத்திற்கு எதிராக போராட்டம் நடத்துகிறார். உண்மையில் பாராட்டவேண்டியது. இவர் உயிரை பாதுகாத்து புகலிடம் தேடிவந்ததும் சமயோசிதம் தான். இல்லையேல் துரோகிபட்டத்துடன் எமது பழைய தமிழ்சமூகம் பிரியாவிடை அளித்திருக்கும்.
      அவரின் பொதுவுடைமைமீது கொண்ட பற்றும் விசுவாசமும் எமக்கு மகிழ்சியளிக்கிற வேளை அவரின் தத்தவார்த குளறுபடிகள் மனவேதனையும் அளிக்கிறது. இருந்தாலும் இதுவெல்லாம் முடிவல்லவே!.

    8. arafath on July 2, 2010 6:17 pm

      ஜெயபாலன் அவர்களுக்கு நன்றிகள்! பல வியடங்களைத்தேடி நீண்ட கட்டுரையாக எழுதியுள்ளீர்கள் அதற்காகவே உங்களுக்கு நன்றி கூறினேன்.
      விடயத்திற்கு வருவோம்..

      கொழும்பில் நான் ஊடகவியலாளராக பணியாற்றிபோது யாழ் பல்கலைக்கழக உபவேந்தராக ரட்ண ஜீவன் கூல் நியமிக்கப்பட்டார். எனவே இதுகுறித்து அவருடன் தொலைபேசியில் பலதடவை தொடர்பு அவ்விடயங்களை செய்தியாக வெளியிடவேண்டிய தேவை இருந்தது. அவருடன் உரையாடும் சமயங்களில் அவர் யாழ் பல்கலைக்கழகத்திற்கு சேவையாற்ற காத்திருக்கிறார் என்பது தெளிவாகியது. எனினும் அவர் எம்மைப்போன்று நாட்டைவிட்டு புலம்பெயர்ந்தமை கவலைக்குரியதே. அவாpன் நியமனத்தை பகிரங்கமாக எதிர்த்த புலிகள் அவர் குறித்த திறமையை குறைத்து மதிப்பிட்டமையும் காரணமாகும். தென்னிலங்கை கல்விசார் சமூகத்திடையே யாழ் பல்கலைக்கழகம் குறித்து காணப்பட்ட ஓரளவு சிறந்த கருத்தோட்டத்தையும் புலிகளின் இச்செயற்பாடு மாற்றியமைத்தது.

    9. தாமிரா மீனாஷி on July 2, 2010 10:48 pm

      இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் தலைவராக திரு. கைலாசபதி நியமிக்கப்பட்டார்.பின்னர் அந்த வளாகம் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகமாக மாற்றப் பட்டபோது திரு. வித்தியானந்தன் அதன் துணை வேந்தராக நியமிக்கப்பட்டார். இந்த இரு செயல்முறைகளின் போதும் வேறு வேறு அரசியல் கட்சிகள் ஆட்சியில் இருந்தன.( இன்று வரை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்கள் அரசியல் ஆசிபெற்ற நியமனங்களே..) அதைவிட முக்கியமானது பல்கலைக் கழகத்தை தமது செல்வாக்கு பிரதேசமாக்க வித்தியும், கைலாசும் அவரது கூட்டாளிகளும் போட்டுக் கொண்ட குடுமிப் பிடிச் சண்டைதான்..

      பல்கலைக்கழகத்தினுள் சாதாரண துப்புரவுத் தொழிலாளியிலிருந்து அனைத்து நியமனன்ளும் கைலாசின் காலத்தில் மேற்கொள்ளப் பட்டிருந்ததால் துணை வேந்தர் பதவியில் இல்லாவிட்டாலும் துணை வேந்தரை விட அதிகமான செல்வாக்கை கைலாஸ் கொண்டிருந்தார். ஆனால் வித்திக்கு அமிர்தலிங்கம் அண்ணாச்சியினதும், அவரூடாக அதிபர் ஜெயவர்த்தனாவினதும் அன்பு தெம்பு தரும் விஷயமாக இருந்தது. கைலாசஸின் அகால மரணம் மற்றவர்களுக்கு கவலையை தந்ததோ இல்லையோ வித்திக்கு நிம்மதியான தூக்கத்தையும் பல்கலைக் கழகத்தினுள் அதிக ஆதரவையும் தந்தது.

      பல்கலைக் கழகத்தை சீர்குலைக்கும் விஷயத்தில் கைலாசபதியின் பங்கை குறைத்து மதிப்பிட முடியாது. அன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட வழக்கம் வைக்கபின்று வரை தொடர்வது தமிழ் மக்களின் தலைவிதியே..

      அன்று வெளிநாடுகளுக்கு தப்பியோட முடிந்தவர்கள் ஓடிவிட, முடியாதவர்கள் பல்கலைக் கழகத்தை தொடர்ந்து இயங்க வைக்கும் பாரிய பணியை புலியின் கொலை மிரட்டல், இராணுவத்தின் கெடுபிடி என்பவற்றினூடாக செய்தார்கள் என்பதை குறைத்து மதிப்பிடுவது சரியல்ல.அன்று ஓட வாய்ப்புக் கிடைத்த அனைத்து கல்விமான்களும் இன்று ஊர் திரும்புகிறார்கள். பலர் இடையில் வந்த பேச்சு வார்த்தை காலத்திலேயே (புலியின் குறைத்துவேண்டுகோளின் பெயரில்) பல்கலைக்கழக நியமனம் பெற முயற்சித்து யாழ்ப்பாணத்தில் முகாமிட்டு இருந்தார்கள். கலாநிதி இரகுபதி, நூலகராக முயற்சித்த முருகர் குணசிங்கம் பின்னர் கலாநிதியானவர்) அவுஸ்திரேலிய தமிழ் வானொலிகளில் சினிமாப் பாடல்களுக்கு விளக்கம் சொல்லும் ஒரு பேராசிரியர் எனப் பலர் அமைதிப் பேச்சுவார்த்தை காலத்தில் பல்கலைக் கழகத்தினுள் நுழைந்த்து விட முயற்சித்தனர்..

      புலியை எதிர்த்ததால் வெளிநாடுகளுக்கு ஓடியவர்கள் இன்று ஊர் திரும்புகிறார்கள்.

      இவர்கள் உண்மையான அறிவை எமது மாணவர்களுக்கு கொண்டு சென்றால் அது போற்றத்தக்கது தான்… ஆனால் இவர்களும் அரசியல் நியமனங்களாகப் பதவி பெறுவார்களேயானால் எமது மக்களுக்கு “உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா” என்ற நிலைதான்..

      உங்கள் கட்டுரையில் சிறு திருத்தம்: பின்னாளில் திருமதி.பிரபாகரன் ஆக்கப்பட்ட மதிவதனி யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவியல்ல.. அவர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் துறைக்கு அனுமதி பெற்றவர்.. பேராதனையில் தமிழ் மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனவெறித்தாக்குதலால், இடம் பெயர்ந்த மாணவர்களில் அவரும் ஒருவர். தமது சகமாணவர்களுக்கு நியாயம் வேண்டியே அவர் உயிர் துறக்க முன் வந்தார். திருமதி.பிரபாகரன் ஆவதற்கு முன்னதாகவே அவர் ஒரு போராளியாக இருந்தார்.

    10. Kumar on July 3, 2010 4:37 am

      தாமிரா மீனாட்சியின் பின்னூட்டம் மேலதிகத் தகவல்களைத் தருகின்றது.கைலாஸ் -வித்தியானந்தன் பல்கலைக்கழக மட்டத்தில் மேற்கொண்ட பனிப்போர்> அவர்களது இலக்கிய வாழ்விலும் பிரதிபலித்தது. இன்றும் கைலாசின் குழுவாக இயங்கும் மெளனகுரு> நுஹ்மான்> சித்திரலேகா> சண்முகலிங்கம் (துணைவேந்தர் அல்ல) போன்றோரும்> வித்தியானந்தனின் குழுவினரும் இலக்கிய உலகிலும் தம்மை அவ்வாறே இனம்காட்டிவந்துள்ளார்கள்.

      பல்கலைக்கழகம் ஏதோ ஒர வகையில் அது சார்ந்த சமூகத்தைப் பிரதிபலிக்கவே செய்யும். பிரிந்து வாழும் கிடுகுவேலிப் பாரம்பரியம் பல்கலைக்கழகத்திலும் காணமுடிந்தது.

      ஜெயபாலன்> தரமான பின்னூட்டங்களை இணைத்து இக்கட்டுரையை எடிட் செய்து சிறு நூலாக்கினால் என்ன? இலங்கையில் பரவலாக விநியோகிக்கப்படவேண்டும். எல்லோரும் இணையத்தளத்தை பார்ப்பார்கள் என்றில்லை.

      குமார் (கலைப்பீடம் 2004)

    11. Rajadurai on July 3, 2010 6:16 am

      வணக்கம்…
      யாழ் பல்கலை மட்டும் தான் கொள்கையற்ற சீர்குலைந்த பாதையில் செல்லும் உயர்கல்வி நிறுவனமல்ல. கிழக்கில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழகமும் குழறுபடிகளில் யாழ் பல்கலைக்கு எந்தவித்ததிலும் சளைத்தது அல்ல! யாழ் பல்கலையில் இருந்து புறப்பட்டவர்களினால் சீர்குலைக்கப்பட்ட நிறுவனமே கி.பல்கலைக்கழகம்.

      அதே போல் யாழ் பல்கலையின் உபகிளையான (வவுனியாவில் கடந்த 13 ஆண்டுகளாக இயங்குகின்ற) வவுனியா வளாகம் என்பது - “இலங்கைத் தமிழ் சமூகத்தின் தொடர்ச்சியான பின்னேற்றத்துக்கு உயர் சைவ வேளாண்குலத்தை சேர்ந்த படித்த கல்விமான்கள் என்பவர்கள் எப்படியெப்படியான தாக்கங்களை விளைவித்தனர்/விளைவித்துக் கொண்டிருக்கின்றனர் - என்பதற்கான சிறந்த உதாரணமாகும்”.

      குறிப்பாக இணைப்பேராசிரியர். மோகனதாஸ் என்னும் ஒருவர் வவுனியா வளாகத்தில் செய்த அழிவுகள் சொல்லில் அடங்கா… தத்தம் பிரத்தியேக லாபம் கருதி தொடர்ச்சியாக வவுனியா வளாக்த்துக்கு முதல்வர் பதவியில் வந்தமர்பவர்கள் ஒரு நாளுமே இவ்வளாகத்தை முன்னேற்ற ஒரு முயற்சியும் எடுக்கவில்லை!

      மேலும் ஜெயபாலனால் விளங்கப்படுத்தப்பட்டுள்ள யாழ் பல்கலையின் 36 ஆண்டு கால சரிதத்துக்கு “இலங்கைத் தமிழ் சமூகத்தின் 36 வருடத் தொடர் சீர்குலைவு அல்லது கல்விப் பின்னடைவு” என்னும் தலைப்பு சாலப் பொருத்தமாக இருக்கும்.

      ‘யாழ்ப்பாணியம்’ என்பதற்கும் தலித்தியத்துக்கும் சம்பந்தமில்லை! யாழ்ப்பாணியம் என்பது உயர்குல வேளாண் வெள்ளாளக் கொள்ளைக்காரர்களின் களவுகளுக்கான ஒரு முகமூடி - அவ்வளவுதான்! உண்மையில் இலங்கைத் தமிழர்களாக நாம் ஒன்றுபட்டால்தான் உண்டு.

      யாழ் பல்கலையின் தரக்குறைவுக்கு உதாரணமாக அங்கு வளங்கப்படும் முனைவர்/கலாநிதிப் பட்டங்களைக் கொள்ளலாம்.

      துரைராசா துணைவேந்தராக இருந்த காலத்தில் பேராசிரியர். கூலினால் தரமற்றது என ஒதுக்கப்பட்ட ஒரு கலாநிதிப் பட்ட அறிக்கை, பின்னர் பதவியிலமர்ந்த இன்னொரு துணைவேந்தரின் சிபாரிசின் பேரில் - பேராசிரியர் துரைராசாவின் காலத்திலேயே அது ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது. மேற்படி களவாகக் கலாநிதிப் பட்டம் பெற்றவர் பேராசிரியர் ஹூலிடமிருந்தே சில ஆய்வறிக்கைகளை களவும் எடுத்தாராம்!

      மோகனதாஸ் என்னும் ‘இலங்கைத் தமிழ் பல்கலைக்கழகங்களின் நிரந்தரத் தலையிடியான மனிதர்’ - தாம் பாண்டித்தியம் பெற்றதான (என்று அவர் சொல்லிக் கொள்கின்ற) இரசாயனத் துறை தவிர்ந்த மற்றவெல்லாவற்றினையும் பற்றி நன்றாக அறிவார். இவர் எப்படிப் பேராசிரியரானார் என்பது கடவுளுக்கே வெளிச்சமில்லை!

      யாழ் பல்கலைக்கழகத்தில் அதிகம் மலிவான விலையில் வாங்கிக்கொள்ளக் கூடிய பொருள் யாதென்றால் - அது ‘பேராசிரியர்’ பதவிதான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை! கோயில் கும்பாபிஷேக மலரிலும், கூட்டுறவுச்சங்க வருடாந்த சஞ்சிகையிலும் எழுதிய கட்டுரைகளைக் காட்டிப் புள்ளி பெற்று பேராசிரியரானவர்கள் யாழ் பல்கலையில் ஏராளம்!

      “பி.எச்.டி பட்டம் பெறாத/ இல்லாத யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு முதுமானிப்பட்டக் கற்கை நெறிகளுக்கான ஆய்வுகளை பரிசோதிக்க அனுமதியில்லை” என்னும் புத்தம் புது நியதியும் அண்மையில் யாழ் பல்கலைக்கழக பேரவையில் உருவாக்கப்பட்டது. ஆக மொத்தத்தில் யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு ஐந்தாம் வகுப்புக்குக் கூட பாடமெடுக்கத் தகுதியில்லை என்பதுதான் உண்மை! நன்றாக நிர்வகிக்கப்பட்டு வந்த பரமேஸ்வராக் கல்லூரியை யாழ் பல்கலைக்கழக உருவாக்கத்துக்காக சீர்குலைக்காது விட்டிருக்கலாம்.

      யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பலரும் தத்தமது வருடாந்த பிரத்தியேக முன்னேற்ற அறிக்கைகளில் தாம் தமது ஊர்களில் விளையாட்டுக் கழகங்களுக்கும், மாதர் சங்கங்களுக்கும் செயளாளர்களாக இருப்பதை தமது ஆய்வுச் செயற்பாடுகளாக காட்டுவது வழக்கம். மேலும் யாழ் பல்கலையின் பீடாதிபதிகள் சிலர் இன்னமும் தமது ‘பொக்கேற் மணிக்காக’ டியூசன் வகுப்புக்கள் எடுக்கும் அவலமும் இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டியதே!

      யாழ் பல்கலை என்பது திருநெல்வேலிச் சந்தையை விடவும் அவலமான நிலையில்தான் இப்போது இருக்கிறது… எமது கல்விச் சமூகத்துக்கு விடிவு எப்போது?

      பேராசிரியர் கூல் போன்றதொரு கல்விமானால் யாழ் பல்கலைக்கழகத்தினரை கட்டி மேய்க்க முடியுமா? இவர்களை மேய்க்க இடி-அமீன் போன்றதொரு சர்வாதிகாரிதான் தேவை!

    12. proffessor on July 3, 2010 7:39 am

      போராட்டங்கள் ஆரம்பத்தில் பல பல்கலைக்கழக மாணவர்களின் கைதுகளில் ஆரம்பமாகின்றது. லவன் என்ற மாணவனின் கைது மற்றும் மாதகலைச் சேர்ந்த விமல்ராஜ், கொக்குவில் சத்தியமூர்த்தி போன்றவர்களின் கைதுகளுக்கு எதிரான ஊர்வலம் யாழ் நகர வீதிகளில் இராணுவத்தினரின் தடைகளையும் மீறி நடந்தேறியிருக்கின்றது.

      மட்டக்களப்பு வெள்ள நிவாரணத்துக்காக யாழ் குடாவெங்கும் மாணவர்கள் தமது விரிவுரைகளைத் துறந்து நிதியும் உதவிகளையும் சேர்ததிருக்கின்றார்கள்.

      வரலாற்றில் மிகவும் பெறுமதிமிக்க ஆவணங்களாக இன்று விளங்கும், போராட்ட செல் நெறிமுறைகளையும் தவறுகளையும் கேள்விக்குட்படுத்தி மக்கள் மேல் இழைக்கப்பட்ட கொடுமைகளையும் ஆவணப்படுத்தி அவற்றை யார் எவர் செய்தார்களோ அவர்களை நோக்கி விமர்சனம் செய்து வெளியிடப்பட்ட வெளியீடுகளின் ஆக்கதாரர்களான மனித உரிமைகளுக்கான யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர்களின் பங்கை இங்கு புறக்கணித்திருப்பதானது இக்கட்டுரையின் பிரதான நோக்கம் வேறானது என்பதை புரிய வைக்கின்றது. யாரையோ இருட்டடிப்பு செய்வதற்காக பல்கலைக்கழகத்தையே இருட்டாக்கி காட்டப்பட்டிருக்கின்றது.

      தமிழரங்கம்
      இந்த இடத்தில் விமல்ராஜ்சும் பதிவு பெறுகிறார். யாழ் பல்கலைகழகத்தில் முதன் முதல் கைது செய்யப்பட்ட மாணவன். புத்தூர் வங்கி கொள்ளைக்கு கேபி பயன்படுத்திய ஸ்கூட்டர் விமல்ராஜ் உடையது என்ற ஒரு தகவலும். அண்மைக்காலத்தில் விமலராஜ் லண்டனில் நாடுகடந்த அரசின் முக்கிய ஏற்பாட்டாளர் என்பது ஒன்று. அடுத்து கேபியை சந்திக்க சென்ற குழுவில் சென்றிருந்த விமலதாசன் என்பவரும் ஒரே ஆளா என்பதை உறுதிப்படுத்த வேண்டியது தேசம்.

      கொக்குவில் சத்தியமூர்த்தி இவர் ஆரம்பகால புளொட்டின் மத்திய குழு உறுப்பினர் என்பதும் முக்கியமானது.

      சிவரமணி தற்கொலைக்கு புலியை காரணம் கூறமுடியாது. ஏனெனில் சிவரமணியின் வீட்டில் தாயார் பின்னேரம் 6மணிக்கு தப்பி சிவரமணி ஊர் சுற்றிவிட்டு வீட்டுக்கு போனால் வீட்டு கேற்றையே பூட்டிவிடுவாராம். பெண்ணியம் பேசிய சிவரமணிக்கு தனது வீட்டுக்குள்ளேயே கதவடைப்பு நடப்பது மிகுந்த விரக்தியை கொடுத்திருந்தது இது பிரதானமானது.

      அடுத்து சிவரமணி கூடித்திரிந்த தில்லை; செல்வி புலிகளால் பிடிக்கப்பட்டது இரண்டாம் பட்சமான விரக்தி.

      மூன்றாவது சிவரமணி தில்லையை ஒருதார காதலித்திருந்ததும் தில்லையின் கைதை தொடர்ந்தானதும் சிவரமணியுடன் கூடித்திரிந்தவர்களின் கைதுகளால் வீட்டில் சிவரமணிக்கு கொடுக்கப்பட்ட குடைச்சலும் சேர்ந்தே பெண்ணியவாதியின் தற்கொலை நேர்ந்தது.

    13. தாமிரா மீனாஷி on July 3, 2010 9:52 am

      விரிவுரையாளர் கணேசலிங்கம் பற்றிய ஜெயபாலனின் குற்றச்சாட்டு பொறுப்பற்ற தன்மையுடன் எழுதப்பட்டது. அவர் எந்த நீதிமன்றத்தில் என்ன திகதியில் குர்றவாளியாக காணப்பட்டார் என்பதை கொஞ்சம் தெளிவாகச் சொல்ல முடியுமா? கணேசலிங்கம் புலிக்கும் புலி எதிர்ப்பாளர்களுக்கும் நடந்த பனிப் போரில் பலியாக்கப் பட்டவர் என்பது தான் உண்மை. அவர் இயக்கத்தினுள் போராளிகளிடையே அறிவு ரீதியாக செல்வாக்கு பெறுகிறார் என்பதை சகித்துக் கொள்ள முடியாத புலியின் ஆஸ்தான கொள்கை வித்துவான்களும் ஒரு அப்பாவி மனிதன் மீது அநியாயமான குற்ற்ச்சாட்டு சுமத்தப் படுவதை மறைமுகமாக உற்சாகப் படுத்தினார்கள். (இதில் திருநாவுக்கரசரின் பங்கு கணிசமானது.) புலியை எதிர்த்து வேலை செய்வதாகக் காட்டிக் கொண்ட சில புலியாதரவாளர்கள் (ரெமெடியஸ் உட்பட) ஒரு அப்பாவிப் பெண்ணுக்கு நியாயம் கேட்கப் புறப்பட்டார்கள். அந்தப் பெண் சரியாக 40 தடவை சோரம் போனது பற்றியும் அச்சொட்டாக கணக்கு வைத்தனர். புலிக்குள் செல்வாக்குள்ளவர்களின் இரகசிய தூண்டுதல் இல்லாமல் மனித உரிமை வாதிகளும் பெண்ணிய வாதிகளும் கணேசலிங்கத்திற்கு எதிரான நடவடிக்கையில் இறங்கினார்களா? அப்படியானால் தமது முக்கிய உறுப்பினர் ஒருவர் மீது மேற்கொள்ளப் பட்ட குற்றச் சாட்டு குறித்து புலி ஏன் வாளாவிருந்தது?
      கணேசலிங்கம் நீதிமன்றத்தில் நிறுத்தப் படுவதற்கு முன்பும் அதற்குப் பின்பும் விரிவுரையாளராக இருந்தார். அவருடைய வீட்டில் இருந்த பெண்ணைத் தவிர வேறு எந்தப் பெண்ணும் அவர் மீது தவறான நடத்தைக் குற்றச் சாட்டை இதுவரை கூறியதாக எந்த தகவலும் இல்லை. அவர் அப்படியான மனநிலை கொண்டவராக இருந்தால், பல்கலைக் கழகத்தினுள் இருக்கும் ஏனைய பலரை புல்லுருவிகளைப் போல் நடந்து கொள்ள முடியாது?
      மேலும், அவர் நீதி மன்றத்தால் குற்றவாளியாக காணப்பட்டிருந்தால் தொடர்ந்து அவர் பதவி வகிக்க முடியாது என்பதை ஜெயபாலன் சிந்திக்கத் தவறியது ஏன்? பல்கலைக் கழகச் சூழலில் நடைபெறும் நிர்வாக, மற்றும் தனி நபர் நடத்தைச் சீரழிவுகள் ஏராளம். அதை வெளிக் கொணர்வது சமூகத்தின் நன்மைக்கு உதவக் கூடியதுதான்.. ஆனால், அதற்காக ஒரு அரசியல் வன்மங்கள் காரணமாகப் பழிவாங்கப் பட்ட ஒரு மனிதரை உதாரணம் காட்டுவது கட்டுரையின் நோக்கத்தை திசை திருப்புகிறது..

      உண்மையில், சமூகத்திற்கு நன்மை செய்யும் நோக்கம் உங்களுக்கு இருந்தால், பொருளியல் துறையில் இணைப் பேராசிரியராக பணியாற்றும் இளங்குமரனின் காம லீலைகள் பற்றி பல்கலைக் கழகத்தினுள் நிலவும் கதைகளை கொஞ்சம் விசாரியுங்களேன் ஜெயபாலன்? பெறுபேறுகள் பெறுவதற்காக அப்பாவி மாணவிகள் படும் அவஸ்தையை கொஞ்சம் வெளிச்சத்திற்கு கொண்டு வாருங்களேன்…
      ராஜன் ஹூல் இப்போது தலைமறைவாக இல்லை. அவர் இப்போது யாழ்ப்பாணத்தில் தான் இருக்கிறார். விரைவில் கணிதத்துறையில் சேர்க்கப் படுவார் என வதந்தி.. அது மட்டுமல்ல.. அவரது மனைவிக்கும் பல்கலைக் கழகத்தினுள் ஒரு நியமனம் வழங்குவதற்காக பல்கலைக்கழக மானியக் குழுவின் தேர்வு விதிகள் மாற்றியமைக்கப் படுவதாகவும் அரசல் புரசலாக பேச்சு அடிபடுகிறது…எது எப்படியானாலும் சமூகத்திற்கு நன்மை கிடைத்தால் நல்லதுதான்…

    14. Jeyabalan T on July 3, 2010 1:44 pm

      தமது கருத்துக்களைப் பதிவு செய்த அனைவருக்கும் நன்றி.

      கலாநிதி சித்திக்கின் ஆலோசனை ஏற்புடையதே. அதற்கான முயற்சியை மேற்கொள்ளலாம் எனறே நினைக்கிறேன்.

      ப்பிசன்னா //‘தமிழாராட்சி வித்தியானந்தனில்’ இருந்து யூ.என்.பி ஆட்சிக் காலம் முதல் ‘இந்திய -இலங்கை ஒப்பந்த’ நடைமுறைவரை …//
      ப்பிரசன்னா நான் எழுதிய கட்டுரையின் ஆரம்பத்திலேயெ குறிப்பிட்டது போல இக்கட்டுரை விவாதத்திற்கான ஆரம்பம் மட்டுமே. நீங்கள் சுட்டிக்காட்டிய பகுதியை நீங்கள் விரிவாகக் கட்டுரையாக எழுதுவது பொருத்தமாக இருக்கும். குறைந்த பட்சம் குறிப்புகளைப் பின்னூட்டமாகவாவது பதியவும். வரலாற்றுப் பதிவுகள் ஒரு கட்டுரையாலோ ஒரு மனிதனினாலோ மட்டும் பதிவிடப்பட முடியாதது.

      குமார் உங்களுடைய ஆலோசனை நல்லதொரு விடயம். நான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு மட்டுமல்ல எந்தவொரு பல்கலைக்கழகத்திற்கும் செல்லவில்லை. அதனை யாழ்ப்பாணப் பல்கலைககழகப் பழைய மாணவர்கள் சிந்திப்பது நன்று. என்னால் முடிந்த ஒத்துழைப்பை நான் வழங்குவேன். நீங்கள் குறிப்பிட்டது போல் இதனை நூலாக்க முடியுமா என ஏனையவர்களுடன் கலந்துரையாடுகிறேன். உங்களுடைய ஆலோசனைக்கு நன்றி.

      பிசி //ராக்கிங் என்கிற துன்புறத்தலுக்கு இரயாகரன் எதிராக இருந்தாரா அல்லது ஈடுபாடுள்ளவராக இருந்தாரா என்பது விளங்கவில்லை!//
      ராக்கிங் என்ற கேலி வதைமுறையை பி இரயாகரன் மிகக் கடுமையாக எதிர்த்தவர். அதனாலேயே அவர் பல்கலைக்கழகத்தில் சக மாணவர்களால் ஓரங்கட்டப்பட்டார்.

      சந்திரன் ராஜா // (இரயாகரனின்) அவரின் பொதுவுடைமைமீது கொண்ட பற்றும் விசுவாசமும் எமக்கு மகிழ்சியளிக்கிற வேளை அவரின் தத்தவார்த குளறுபடிகள் மனவேதனையும் அளிக்கிறது. இருந்தாலும் இதுவெல்லாம் முடிவல்லவே!.//
      முழுமையாக உடன்படுகிறேன்.

      அரபாத் கட்டுரைத் தகவலை மேலும் உறுதிப்படுத்தும் உங்கள் தகவலுக்கு நன்றி.

      தாமிர மீனாட்சி உங்களுடைய புதிய தகவல்களுக்கு நன்றி. ஆனால் பேராசிரியர் கணேசலிங்கத்தினுடைய விடயம் தொடர்பில் எனது நிலைப்பாட்டை தனியாகப் பதிவிடுகிறேன்.

      ராஜதுரை நீங்கள் குறிப்பிட்ட விடயங்கள் பலவற்றை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகக் கடமையாற்றிய எனது நண்பர் ஒருவரும் சுட்டிக்காட்டி இருந்தார். தகவலுக்கு நன்றி. மேலும் யாழ் பல்கலைக்கழக நூலகராகக் கடமையாற்றும் சிறிகாந்தலக்ஸ்மி தேசம் நடத்திய புத்தக வெளியீடு ஒன்றின் போது யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வி நிலைபற்றியும் பேராசிரியர்கள் வெற்றுப்பட்டங்களையே காவித்திரிவதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.

      புரொபெசர் //யாரையோ இருட்டடிப்பு செய்வதற்காக பல்கலைக்கழகத்தையே இருட்டாக்கி காட்டப்பட்டிருக்கின்றது.// யாரையும் இருட்டடிப்புச் செய்யவேண்டிய அவசியம் எனக்கிருக்கவில்லை. பல்கலைக்கழகத்தை இருட்டாக்கி காட்ட வேண்டிய தேவையும் இல்லை. ஏனெனில் பல்கலைக்கழகம் பெரும்பாலும் இருளிலேயே இருந்தது. இருக்கின்றது.

      யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆசியாவிலேயே சிறந்த பல்கலைக்கழகமாக இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் ஒரு பல்கலைக்கழகமாகவாவது இயங்குவதற்கு எவ்வாறான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்பது பற்றிய கருத்துக்களையும் பதிவு செய்யவும். அது விவாதத்தை மேலும் காத்திரமாக்கும் என நினைக்கின்றேன்.

    15. Varathan on July 3, 2010 2:11 pm

      Well written article. However, as a reader, my opinion is the topic “விரிவுரையாளர் பொங்கு தமிழ் கணேசலிங்கத்தின் மீது பாலியல் குற்ற வழக்கு” is not good/necessary for this article.

    16. தாமிரா மீனாஷி on July 3, 2010 7:19 pm

      உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி, ஜெயபாலன். நீங்கள் குறிப்பிட்ட ஸ்ரீகாந்தலட்சுமி இன்று வரை “பதில்” நூலகராகவே பல்கலைக்கழகத்தில் கடமையாற்றுகிறார். பல்கலைக்கழகத்தின் நற்பெயர் மற்றும் முன்னுதாரணமான வளர்ச்சி பற்றியும், தமிழ் மாணவர் சமூகத்தின் நன்மை பற்றியும் உண்மையாகவே கவலைப்படும் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரில் அவரும் ஒருவர். நூலகவியல் மற்றும் தகவல் அறிவியலில் (Library and Information Science) சிறந்த அறிவும் நீண்ட கால அனுபவமும் கொண்ட அவர், தமது அறிவை பல்கலைக் கழகத்தினுள் மட்டுமன்றி, பல கிராமிய நூலகங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பாடசாலை நூலகங்கள் நல்ல முறையில் இயங்குவதற்கான செயல்முறைகளையும், அவற்றை இயக்குவதற்கான பயிற்சிகளையும் வழங்குவதை இன்று வரை ஒரு தொண்டாகச் செய்து வருகிறார். ஆனால், அவரது பதவி நிரந்தரமாக்கப் படுவதற்கு பல்கலைக் கழகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இடப்பட்டுள்ள முட்டுக் கட்டைகள் ஏராளம். பல்கலைக் கழகத்திற்குள் நடக்கும் ஊழல்களையும் அநீதிகளையும் எதிர்ப்பதற்கு அஞ்சாத தன்மையும், அவரது நேர்மையும் அவருக்கு எப்போதோ கிடைத்திருக்க வேண்டிய பதவியை கிடைக்கவிடாமல் செய்துள்ளது. அவருடைய எதிர்ப்புக் குரலை ஒடுக்குவதற்கும், அவரைத் தண்டிப்பதற்கும் உரிய ஒரேயொரு வழி அவருக்கு உரிய பதவி நிரந்தரம் கிடைக்காமல் செய்வது தான் என கங்கணம் கட்டிக் கொண்டு ஒரு கோஷ்டியே இயங்குகிறது. சமூகத்தின் நன்மை பற்றி உண்மையாகச் சிந்திப்பவர்களுக்கும், செயல்படுபவர்களுக்கும் தமிழ் சமூகத்திலும், அவர்கள் நடத்தும் பல்கலைக் கழகங்களிலும் இடமில்லை என்பதற்கு ஸ்ரீகாந்தலட்சுமியை விட்டால் வேறு சிறந்த உதாரணம் இல்லை.

    17. BC on July 3, 2010 9:10 pm

      பதிலுக்கு நன்றி ஜெயபாலன்.
      //ராக்கிங் என்ற கேலி வதைமுறையை பி இரயாகரன் மிகக் கடுமையாக எதிர்த்தவர். அதனாலேயே அவர் பல்கலைக்கழகத்தில் சக மாணவர்களால் ஓரங்கட்டப்பட்டார். //
      இரயாகரன் மீது மதிப்பு உயர்கிறது. சில காலத்துக்கு முன்பு புலி ஆதரவாளர் ஒருவர் இரயாகரனின் மோசமான ராக்கிங் செயல்களினால் பல்கலைக்கழகத்தில் அவருக்கு தடை இருந்தது என்று தெரிவித்தார். புலிக்கும் உண்மைக்கும் உள்ள உறவின் அடிப்படையில் நான் இதை கணக்கெடுக்கவில்லை. கட்டுரையில் இதுபற்றி வந்தபோது குழப்பமாக இருந்தது. இப்போ ஜெயபாலன் மூலம் உண்மையை அறிகிறேன்.

    18. நாவலன் on July 3, 2010 11:56 pm

      ஜெயபாலன்,
      மிக நீண்ட ஆய்வுக் கட்டுரை வடிவில் எழுதப்பட்ட ஒன்று. கட்டுரையின் பார்வையில் எனக்கு உடன்பாடில்லை என்பது ஒரு புறம், மறுபுறத்தில் சில தகவல் தவறுகளும் காணப்படுகின்றன. எனது பெயரும் ஏதோ ஒரு வகையில் தொடர்புற்றிருப்பதால் இந்தப் பின்னூட்டத்தை எழுத உந்தப்பட்டுள்ளேன்.

      முதலில் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களின் பல்கலைக் கழகங்களின் பாத்திரம் குறித்த பிரச்சனை. பல்கலைக் கழகங்கள் புரட்சிக்கோ போராட்டத்திற்கோ தலைமை வகிப்பதில்லை அவ்வாறு தலைமைப் பாத்திரம் வழங்கவும் முடியாது.
      பரீஸ் பல்கலைக் கழகங்களின் மாணவர் எழுச்சியின் பங்கைக் கூட யாழ்ப்பாணப் பல்களைக் கழகத்தின் போராட்டங்களுடன் ஒப்பிடமுடியும். சமுகத்தில் நிலவும் ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வின் உணர்ச்சிகரமான மத்திய தரவர்க்க எழுச்சியாக பல தடவைகள் பல்கலைக் கழகங்கள் தொழிற்படுவதுண்டு. பல இளைஞர்களின் ஒருங்கிணைவு, அவர்களுக்கு இருக்கின்ற சுதந்திரம் போன்றன அவ்வாறான ஒரு சிந்தனையை உருவாக்கும். இவ்வாறான ஒரு தளத்திலிருந்தே பல்கலைக் கழகங்களின் சமூகப்பாத்திரத்தை ஆராய முடியும் என்பதே எனது நம்பிக்கை.

      யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் சில முக்கிய திரும்பல் புள்ளிகளைக் குறிப்பிட வேண்டும்.
      1. கைலாசபதியின் தமிழர் கூட்டணிக்கு எதிரான போக்கு.
      2. 77 இனப்படுகொலையின் போதான சிங்கள மாணவர்களின் வெளியேற்றம்.
      3. 83 இல் இடம்பெயர்ந்த மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டமு அதனைத் தொடர்ந்த எழுச்சிகளும்.
      4. விஜிதரன் கடத்தப்பட்டதற்கான போராட்டம்.
      5. இந்திய இராணுவ ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டம்

      யாழ் பல்கலைக் கழகத்தில் புலிகளின் விருப்பிற்கு ஏற்ப பேரா.துரைராஜா தெரிவுசெய்யப்பட்டதாக நான் கருதவில்லை. வித்தியானந்தன் ஈரோஸ் அமைப்பினால் கடத்தப்பட்டார். அதே காலப்பகுதியில் ரி.ஆர்.ஓ கந்தசாமி, பாதுகாப்புப் பேரவை நெப்போலியன் போன்றோரும் கடத்தப்பட்டுக் ஈரோஸ் அமைப்பினால் கடத்தப்பட்டுக் கொலைசெய்யப்பட்டனர். இவை அனைத்துமே ஈரோஸ் அமைப்பின் ஊடாக இந்திய அரசு மேற்கொண்ட செயற்பாடுகள் எனப் பரவலாகக் கருத்து நிலவியது. ஒவ்வொரு சம்பவம் நிகழ்ந்த வேளையிலும் அதனைப் பாசறை அமைப்பு மேற்கொண்டதாகவே யாழ்ப்பாண ஊடகங்கள் தலைப்புச் செய்திகளை வெளியிட்டன. நான் பாசறை வெளியீட்டுக் குழுவின் உறுப்பினர் என்பதால் புலிகள் என்னை விசாரணைக்கு அழைத்துச் சென்று என்னிடம் கொலைகளுக்கும் பாசறை வெளியீட்டிற்கும் தொடர்பில்லை என கையொப்பம் வாங்கிக்கொண்டனர்.
      பின்னதாக ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்த சின்ன பாலா புலிகளின் ஆதிக்கத்தைப் பல்கலைக் கழகத்தில் இல்லாதொழிக்க வேண்டுமாயின் வித்தியானந்தன் துணைவேந்தர் பதவியிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். அவ்வேளைகளில் ஈரோஸ் அமைப்பினூடான இந்திய அரச நடவடிக்கைகள் குறித்தும் அதன் பின்புலம் குறித்தும் நீண்ட கட்டுரைகளெ எழுதலாம்.
      கிட்டுவின் தனிப்பட்ட பிரச்சனைக்காக மருத்துவபீட மாணவன் தாக்கப்பட்டமை எனது நினைவிற்குத் தெரிந்தவரை விஜிதரன் பிரச்சனையோடு தொடர்பற்ற தனியான விடயம்.

      ராகிங்கிற்கு எதிராக புலிகள் பல மாணவர்களை எச்சரித்தும் பல்கலைக் கழக விவகாரங்களில் பலதடவை தலையிட்டும் மாணவர்களின் எதிர்ப்பைச் சம்பாதித்திருந்தனர். ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்கள் சிலர் புலிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அதிலும் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த கலைப்பீட மாணவன் (பெயர் சரியாக நினைவில் இல்லை) இரத்த வாந்தி வரும்வரை தாக்கப்பட்டார். புலிகளின் இந்த நடவடிக்கைக்கு எதிரான மாணவர்களின் எழுச்சியினைப் புலிகள் சார்ந்த மாணவர் அமைப்புத் தலைமை வழங்கத் தவறியதன் எதிர்விளைவே மாணவர் அமைப்புக்குழு. அதன் உறுப்பினர்களில் விஜிதரனும் ஒருவர்.

      கட்டுரையில் ரயாகரனையும் என்னையும் குறிப்பிட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. இப்போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்குமே அதன் வெற்றிக்கு உழைத்தவர்கள். விமலேஸ், சோதிலிங்கம், ஔவை, ஸ்டெல்லா போன்றோரின் பங்கு மறக்கப்பட முடியாதவை.
      நான் ரெலோ அழிக்கப்பட்ட்ட போது ஈ.பி.ஆர்.எல்.எப் முகாமிலிருந்து கடத்தப்பட்டடேன் என்பது உண்மையல்ல. ஈபிஆரெலெப் அழிக்கப்பட்ட போது சில உறுப்பினர்கள் உரும்பிராய் கிராமமொன்றில் பாதுகாப்பிற்காக தலைமறைவாக இருந்தனர். அவர்களில் ஒருவருடன் கோண்டாவில் ஊடாகப் பயணம் செய்யும் போது புலிகள் என்னைக் கைது செய்து வைமன் ரோட் முகாமில் வைத்திருந்தனர்.

      இந்திய இராணுவக் காலப்பகுதியில் பல்கலைக் கழக மாணவர்கள் ஒரு ரண களத்தையே கடந்து சென்றனர். பரமேஸ்வரா சந்தியில் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்ப்பட்ட மாணவர்கள் ஏராளம். ஈ.பி.ஆர்.எல்.எப் தமிழ் தேசிய இராணுவம் என்ற ஒன்றை உருவாக்கும் நோக்கோடு பலவந்த ஆட்சேர்ப்பில் ஈடுபட்ட வேளையில் பல்கலைக் கழகத்தில் அதற்கு எதிரான துண்டுப்பிரசுரம் வெளியிட்டப்பட்டது. அந்தப் பிரசுரம் வெளியிடப்பட்ட மறுநாளே பல மானவர்கள் தெருத்தெருவாகக் கைது செய்யப்பட்டனர். மாகாண சபைத் தேர்தல் தினத்தன்று பல்கலைக் கழக விடுதியைச் சுற்றிவளைத்து மாணவர்களைக் கைது செய்ய முற்பட்ட இந்திய இராணுவத்தோடு பேசச்சென்ற என்னைக் இந்திய இராணுவம் கைது செய்தது. 4 நாட்கள் நான் கோரமான சித்திரவதைகளை இந்திய இராணுவம் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் கூட்டுப்படைகளிடம் அனுபவித்தேன். கொலைசெய்வதற்காக அவர்கள் தீர்மனித்திருந்த வேளையில் தற்செயலான நிகழ்வு ஒன்றின் காரணமாக விடுதலை செய்யப்பட்டேன்.
      நான் மட்டுமல்ல நூற்றுக் கணக்கான மாணவர்கள் அனுபவித்த இந்திய இராணுவத் தர்பார் என்பது தான் புலிகளின் ஆதரவுத் தளத்தை பல்கலைக் கழகத்தில் மறுபடி உயிர்ப்பித்தது. விஜிதரன் போராட்டத்தில் புலிகளின் ஜனநாயக மீறலுக்கு எதிராகப் போராடிய பலர் புலி ஆதரவாளார்களாக மாறினர்.

      ரஜினி திரணகம, சிறீதரன், ராஜன் ஹூல், வசந்தா வீரகத்தி, ராஜ்மோகன் போன்றோரின் மனித உரிமைச் செயற்பாடுகள் அளப்பரியவை.
      இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர், பல்கலைக்கழகம் புலிகளின் ஆதரவுத் தளமாக மாறியிருந்தது. ஆக, பல்கலைக் கழகம் என்ற வரம்புக்குள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் பங்கு கோடிட்டுக்காட்டத் தக்கது.
      நான் தொடர்புடைய நிகழ்வுகளை விடக் கோரமான நினைவுகளைச் சுமந்து ஆயிரக்கணக்கானோர் இன்றும் வாழ்கின்றனர். கட்டுரையுடன் தொடர்புடையாதால் மட்டுமே அவற்றைக் குறிப்பிட வேண்டிய தேவை ஏற்பட்டது.

    19. Rajadurai on July 4, 2010 7:14 am

      சிறியோன் எனது கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டமைக்கு மிக்க நன்றிகள் ஜெயபாலன் அண்ணை!

      அரசியல் பின்னணி காரணமாக ஏற்பட்ட தாக்கங்களும் அதன் பின்னூட்டங்களாலும் தோன்றிய சிக்கற்தன்மைகளே யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் சீர்குலைவுக்குக் காரணம் என்கின்ற வாதம் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதுதான். ஆனாலும், ஏன் அரசியல் உயர் கல்விக் கூடத்துக்குள் நுழைகின்றது (?) என்பதனையும் நாம் சற்று நோக்க வேண்டும்.

      அரசியல் செல்வாக்கு மற்றும் அதனுடனிணைந்த நிழலுக நடவடிக்கைகளை இப்பல்கலைக்கழகங்களில் ஒருவித அடிப்படைத் தகுதிகளுமில்லாது தப்பிப் பிழைக்க நினைக்கின்ற ஒரு சிலர் ஊக்குவிக்கின்றனர். இவர்கள் எந்தக் கட்சிக் கொடி பதவிக்கு வந்தாலும், அந்தக் கட்சிக் கொடிக்கு தம்மை உடனடியாகவே மாற்றிக் கொள்ளக் கூடியவர்கள்.

      இந்த வகையில் எனது விடயக் கலை ஆய்வுக்கு (case study) உட்பட்டுள்ள வவுனியா வளாகத்தில் ஒரு சிலரின் அபரிமிதமான ஆதிக்கத்தினால் பாரிய பின்னடைவுதான் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக 2010ம் ஆண்டிற்காக ஒரு சதமும்கூட ஆய்வு மானியங்களுக்கு இந்த வவுனியா வளாகத்தில் budget பண்ணப்படாத நிலையில், வருகின்ற ஆகஸ்டு-செப்ரெம்பர் மாத காலங்களில் வவுனியா வளாகத்தின் வருடாந்த ஆய்வு மாநாடு (annual research sessions) நடக்கப் போகின்றது.

      இதனைத் திட்டமிடல் மற்றும் தொலைநோக்கின்மையின் வெளிப்பாடு என்பதா? அல்லது, ஒரு வித தகுதிகளுமே இல்லாதவர்கள் தம்மைத் தாமே காத்துக் கொள்வதற்காகப் போட்டுக்கொண்டுள்ள ‘ஆராய்ச்சி மாநாட்டு முகத்திரை’ என்பதா?

      எது எப்படியாயினும், இந்த ஆராய்ச்சி மாநாட்டில் வவுனியா வளாக so called கல்விமான்கள் ஆயிரக்கணக்கில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வாசித்துத் தள்ளிவிடுவார்கள். இந்த ஆய்வுக்கட்டுரைகள் வவுனியாவைத் தவிர வேறெந்த இடத்திலும் செல்லுபடியாகாது என்பதும் இன்னொரு முக்கிய விடயம். வவுனியாவில் மட்டுமே இரகசியமாக வாசித்து முடிக்கப்படப் போகின்ற இவ்வாய்வுகள் என்கின்ற ஆவணங்களைக் கொண்டு பேராசிரியராக வருவதற்கும் சில so called கல்விமான்கள் திட்டமிட்டும் இருக்கலாம்.

      இப்படியான திட்டமிடலின் அடிப்படையில் தான் 2009ம் ஆண்டில் taught master degreesகளை மட்டுமே தகமையாகக் கொண்ட ஆராய்ச்சிப் பின்னணியற்ற ஒரு சீமானும் ஒரு சீமாட்டியும் வவுனியா வளாகத்தில் பேராசிரியர் பதவியுயர்வுக்கான விண்ணப்பம் மேற்கொண்டுள்ளனர்.

      இவர்கள் பேராசிரியர்கள் என்றால் (?)… பொறியியல் துறையில் தொடங்கி சமூகவியல், அரசியல் விஞ்ஞானம், கலாச்சாரமெனத் தன் எல்லைகளை அகன்றதாக்கிக் கொண்டே போகின்ற பேராசிரியர். ஹூல் போன்ற சிந்தனாவாதிகளுக்குப் இது பெரும் இழுக்காகவன்றோ அமையும்?
      பேராசிரியர்கள் பேராசிரியர்களாகவும், விரிவுரையாளர்கள் விரிவுரையாளர்களாகவும் இருப்பதற்குத் தேவை – அடிப்படை அறிவும்… விடயத் தேடலுமே.

      தேடலும் கொள்கையுமற்ற இந்த யாழ் பல்கலைக்கழகச் சமூகமானது மறுமலர்ச்சியடைய வேண்டுமெனில் உங்களைப் போன்றவர்களின் விமர்சனங்கள் தேவை. தொடரட்டும் உங்கள் பணி.

      வவுனியா வளாகத்தில் நிர்வாகியாக இரண்டொரு வருடகாலமிருந்த எனக்கு இந்த வளாகத்தை இலங்கைத் தமிழ் சமூகத்திற்கான நல்லதொரு முன்னேற்றக் களமாக மாற்றிவிட வேண்டும் என்கின்ற ஆதங்கமும் வெறியும் உண்டு. அதற்காக நண்பரே நான் உங்களுக்கு என்றும் தோள் கொடுக்கத் தயாராக இருக்கின்றேன்.

      இப்படிக்கு,
      ராஜதுரை

    20. kumaran on July 4, 2010 10:20 am

      I think that a good example is the best sermon.University students say that the one-student policy has resulted in selfish student.I think that it may be that selfish community produce selfish university students.It’s true that we don’t know what we’ve got until it’s gone, but it’s also true that we don’t know what we’ve been missing until it arrives.
      My view is the best article!Well done Jeyapalan.

    21. Jeyabalan T on July 4, 2010 9:02 pm

      1986ம் ஆண்டு முருகையன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு துணை பதிவாளராகப் பணியாற்ற வருகின்றபோது தான் புலிப் பாஸிசத்திலிருந்து தனது சுயாதீனத்தை பேணிக்கொள்வதற்காக பல்கலைக்கழகம் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. இதே ஆண்டுதான் யாழ் பல்கலைக்கழக மாணவரான விஜிதரனை புலிகள் கடத்திச்சென்று சித்திரவதை செய்து கொன்றதன் மூலமாக பல்கலைக்கழகம் மீதான தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தினார்கள். மாற்று இயக்கங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் பலர் கல்வியை இடைநிறுத்தி ஓட வேண்டியிருந்தது.

      முருகையன் (1935-2009) - நகலும் நாடகமும் : நட்சத்திரன் செவ்விந்தியன் http://thesamnet.co.uk/?p=17277

    22. DEMOCRACY on July 5, 2010 5:14 am

      /‘கற்பித்தலும் ஆய்வும் இணைந்து பாரபட்சமற்ற உண்மையைத் தேடுவதே பல்கலைக்கழகம்’ என்பதே 19ம் நூற்றாண்டில் ஜேர்மனியின் பல்கலைக்கழகத்தின் கருத்துருவமாக இருந்தது. இதுவே அன்று வலுவான பல்கலைக்கழக கருவாகவும் அமைந்தது. /– மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் திரு.ராஜீவ்காந்தி அவர்களின் நாடறிந்த முழக்கமாக இருந்தது “பல்கலைக்கழக படிப்பிலிருந்து வேலை வாய்ப்புகளை பிரிக்க வேண்டும்” என்பது!.அர்சுன்சிங்,மணிசங்கர் அய்யர்,ரங்கராஜன் குமாரமங்கல.,அருண்நேரு.. போன்ற புதுடெல்லி “டூன் ஸ்கூல்” முதலாளித்துவ குழுமத்திலிருந்து எழுந்த ஒரே உருப்படியான முழக்கம் இது!.இதிலிருந்து நேர் எதிரானதே,யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் அடிநாதம்.இது, காலனித்துவ நிர்வாகத்தில் இடம் பிடிக்கும் அதை சுற்றியுள்ள சமூகத்தையே பிரதிபலித்தது…விளக்கம் தருக!.
      “பிரிட்டிஷ் தமிழ் போரம் இலங்கைக்கு போகலாம்,ஆனால் நடிகை “அசின்” இலங்கைக்கு போகக்கூடாது” என்ற சிந்தனை இதிலிருந்தே எழுந்தது!.
      இந்தக்கட்டுரைக்கு பின்னோட்டம் இடும் பலர்,பழைய மாணர்வ சங்கத்தை இலண்டனில் கூட்டி,நட்சத்திர இரவு நடத்த வேண்டு என்ற பாணியிலேயே கருத்து தெரிவிக்கின்றனர்.இந்தக் கட்டுரையின் வேண்டுகோளின்படி,பாரபட்சமற்ற வெளியுலக ஆராய்ச்சியாக இல்லாமல்,குண்டுசட்டிகளின் குடுமிபிடி சண்டையாகவே இருக்கிறது.தவறு இருந்தால் மன்னிக்கவும்!.

    23. DEMOCRACY on July 5, 2010 8:05 am

      …நான் எழுதுவதை “இங்கே குறித்து வைத்துக் கொள்ளுங்கள்”!. திரு.நாவலன், தன் இனியொரு இணையதளத்தில், “இந்திய எதிர்ப்புணர்வை” கக்கிக் கொண்டிருக்கிறார். இதிலும் பினோட்டத்தில், அதற்கான அடிப்படைக் காரணத்தை விளக்கியிருக்கிறார். அனைவருக்கும் தெரியும் திரு.ஜெயதேவன்(ஈழபதீஸ்வரர் ஆலயம்) அவர்களுடைய தமையனும், தாயும் இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என்று!. நான் சில ஆண்டுகளாக(துறை சார்ந்தவன் என்ற காரணத்தால்), இலங்கை தமிழர்கள் இந்திய இராணுவத்தை சாட்டி, சில சுய வெளிப்பாடுகளை நசிந்துக்கொண்டு வருவார்கள் என்று. பாராபட்சமற்ற ஆய்வுகள் தேவை!.

      கலைஞர் கருணாநிதி, தான் இந்திய இராணுவத்தை (ஐ.பி.கே.எஃப்) எதிர்த்தேன் (வரவேற்க செல்லவில்லை) என்பார் (தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த மாதிரி). ஆனால், முள்ளிய வாய்க்கால் என்பது, ஐ.பி.கே.எஃப் பை அனுப்பிய இந்திராகாந்தி வழிவந்த அதே இந்திய நிர்வாகத்தின் முக்கிய கூட்டாளியாகத்தான் தமிழக முதல்வர் கருணாநிதி இருந்தார்!. ஆகையால் இந்திய இராணுவத்தின் மீது பழியை தூக்கி போட்டு (புலிகள் மீது பழியை போடுவது போல), குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ளமுடியாது. இதில் கலைஞர் குற்றவாளியல்ல. இத்தகைய கொடுமைகளுக்கு காரணமான அரசியல் போக்குகள், செய்த குற்றங்களை மறைத்துவிட்டு, அடுத்த குற்றங்களுக்கு சர்வசாதாரணமாக தாவும், சமூக சூழல்களின் அணுசரணைகள் தரவுபடுத்த(டெஃபனிஷன்)படல் வேண்டும்!. இந்திய இராணுவம் என்று “மட்டமாக(ஃபிளாட்)” பொருள்படுத்துதல், அடுத்த ஆட்சியில் நிர்வாகம் மாறினால், “தான் இந்திய இராணுவத்தை வரவேற்கவில்லை” என்பவர்களுக்கு ஆதரவாக பயங்கரவாத தாக்குதல் நடத்துவீர்களா??….

    24. Rajadurai on July 5, 2010 10:44 am

      ஜெயபாலன் அண்ணை,
      யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்பாக இத்தால் நான் மேலும் சில விடயங்களை முன்வைக்க விரும்புகின்றேன்.

      யாழ் பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் குழம்பிப் போயிருப்பதற்கு முக்கியமான ஒரு காரணம் யாழ் பல்கலைக்கழகத்தின் பேரவையானது தெல்லிப்பழை துர்க்கையம்மன் நிர்வாக சபையின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதாகும். தெல்லிப்பழை துர்க்கையம்மன் நிர்வாக சபையின் அறங்காவலர்கள் சிபாரிசினால் யாழ் பல்கலையால் உள்வாங்கப்படுகின்ற பேரவை உறுப்பினர்களின் தகமைகளும் பொருத்தப்பாடுகளும் ஐயத்துக்குரியதே. பேரவை உறுப்பினர்கள் உள்ளார்த்தமாக நல்லது செய்ய நினைத்தாலும், அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது. ஏனெனில், சிந்திப்பதைச் செயற்படுத்துவதற்கான அடிப்படைத் திறன்களும் வாதத் திறமையும் (இங்கு பலருக்கு ஆங்கிலத்தில் உரையாடுதல் முடியாதது) அவர்களிடம் கிடையாது. அடிப்படை நோக்கம் நல்லதாகவிருப்பினும் கூட, ஒரு சமூகத்தைப் பிரதிபலிக்கின்ற பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களின் அசமநிலையான இப்போக்கும், காத்திரமற்ற பிரதிநிதித்துவமும் தொடர்ச்சியான சமூகப் பின்னடைவுக்கே இடம்கொடுக்கும். இதனைக்கூட ‘யாழ்ப்பாணியத்தின்’ ஊடுருவல் என்றுதான் கொள்தல் வேண்டும்.

      அத்துடன், பேரவையின் உள்ளக உறுப்பினர்கள் (internal members) யாவருமே ஏதோ ஒருவகையில் பின்வழிப்பாதையால் தம் பதவியுயர்வுகளையும், பேராசிரியர் பதவிகளையும், கலாநிதிப் பட்டங்களையும் பெற்றுக் கொள்வதற்காக பிறருக்கு ‘ஆமாம் சாமிகளாகவே’ இருந்து பழக்கப்பட்டு விட்டவர்கள் என்கின்ற வகையில், அவர்களால் யாழ் பல்கலையின் நிர்வாக மேம்பாட்டிற்கு எவ்விதமான பங்களிப்பும் செய்ய முடியாது என்பதும் சுட்டிக் காட்டப்பட வேண்டிய விடயம்.

      இன்னொரு விடயம், இந்தப் பல்கலையில் உள்ள நிர்வாகப்பதவிகளைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்ற so called கல்விமான்கள் மனித உரிமைகளை மீறும் வகையில் மற்றவர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு இடம் கொடுக்காத ஏதேச்சைப் போக்கில் செல்கின்றார்கள் என்பதாகும். இப்படியான பீடாதிபதிகள், துறைத்தலைவர்கள் தாம் நினைத்த பாதையில் கல்வித்துறைகளையும் பீடங்களையும் இட்டுச் செல்வதும் வருத்தத்துடன் சுட்டிக்காட்டப்பட வேண்டியதே. இப்படியான கல்வியாள-நிர்வாகிகளிருக்கின்ற பட்சத்தில், Board Meetings ஏன் தான் தேவை(?) என்கின்ற கேள்வியும் எழுகின்றது. எப்படியோ, மற்ற உறுப்பினர்களின் உரிமைகள் (மற்றும் கருத்துக்களை) மீறி தாம் நினைத்த படி தானே அவர்கள் முடிவெடுக்கப் போகின்றார்கள் (முடிவெடுக்கின்றார்கள்)?

      பேராசிரியர். ஹூல் போன்ற தொலைநோக்குள்ள தீர்க்கமான முடிவெடுக்கக்கூடிய கல்விமானொருவர் இத் தருணத்தில் இந்தப் பல்கலைக்கழகத்தினுட் காலெடுத்து வைத்தால் பல எதிர்பார்க்கவே முடியாததும், யதார்த்தமற்ற ஆனால் வினோதமானதுமான சிக்கல்களைச் சந்திக்க வேண்டி வரும் என்பது வெளிப்படையே. அப்படியான ஈனத்தனமான சிக்கல்களை நியாயபூர்வமான சிந்தனையுள்ள பேராசிரியர் ஹூலினால் ஒரு போதுமே ஏற்றுக்கொள்ளவோ, சகித்துக்கொள்ளவோ முடியாதிருக்கும். ஆனாலும், தம் சிரமத்தைப் பாராது அப்படியான தகமை பெற்ற கல்வியாளரொருவர் நமது சமூகத்தின் நலன் கருதி வருகைதராவிடில் - ஜெயபாலன் அண்ணை, நீங்கள் சொன்னது போலவே யாழ் பல்கலைக்கழகம் ஆசிரியர் பற்றாக்குறையால் அல்லல்படுகின்ற ஒரு சாதாரண கஸ்டப்பிரதேச பள்ளிக்கூடத்தைப் பார்க்கிலும் கீழ்த்தரமான நிலையை நோக்கித்தான் போய்விடும்.

      ராஜதுரை

    25. அன்புக்குரியன் on July 6, 2010 7:15 pm

      அறிந்தும் அறியாமலு கற்பனைகளிலும் கத்திகளை இட்டுக்கட்டி பாரிய ஒரு நிறுவனத்தை மாசுபடுத்துவதில் எனக்கு உடன் பாடில்லை எது எப்படி இருப்பினும் யாழ் பல்கலைக்களகத்தால் உருவாக்கப்பட்ட பல ஆயிரம் பட்டதாரிகள் உலகெங்கும் பரந்து கொடி கட்டிப்பறப்பதர்க்கு அங்கிருக்கும் பேராசிரியர்கள் தான் காரணம். புலிகளினால் யார் தான் மாறவில்லை மொத்த தமிழ் சமூகமே மாறி நிற்கும் பொது அதன் அங்கமான பல்கலைக்கழகம் என்ன செய்யும் கூல் இருந்தாலும் இததான் விதி மாறுவார் அது நிச்சயம்.
      மதிவதனி யாழ் பல்கலை மாணவி என்பது பொய் கட்டுரையாளருக்கு அது தெரியவில்லை.
      யாழ் பல்கலையில் சிறந்த நிர்வாகியாக இருந்த பதிவாளர் திருமதி தங்கராஜா வின் பதவியைப்பரித்தி அவமானப்படுத்தியது மாணவரமைப்பல்ல. கல்விசாரா ஊழியர் தொழிற்சங்கம். அது இன்னும் உயிருடன் தானிருக்கிறது கூல் வந்தால் மாறுவார் அல்லது ஓடுவார் மாற்றமென்பது நடக்காது நடக்க விடமாட்டங்கள்

    26. பார்த்திபன் on July 6, 2010 9:55 pm

      // மதிவதனி யாழ் பல்கலை மாணவி என்பது பொய் கட்டுரையாளருக்கு அது தெரியவில்லை. - அன்புக்குரியன் //

      ஒன்று பொய் என்றால் எது மெய் என்பதை நீங்கள் எழுதியிருக்க வேண்டும். நான் அறிந்தவரை மதிவதனி யாழ் பல்கலை மாணவியென்பதும் அவர் சக மாணவர்களுடன் உண்ணாவிரதமிருந்த போது மதிவதனி உட்பட 5 மாணவிகள் புலிகளால் கடத்தப்பட்டனர். எனவே உங்களிடமிருந்து முறையான பதிலை எதிர்பார்க்கின்றேன்.

    27. ராஜதுரை on July 7, 2010 4:11 am

      அன்புக்குரியன் அவர்களே, // “அறிந்தும் அறியாமலும், கற்பனைகளிலும் கத்திகளை இட்டுக்கட்டி பாரிய ஒரு நிறுவனத்தை மாசுபடுத்துவதில் எனக்கு உடன் பாடில்லை”// என்கின்ற உங்கள் கூற்றைத் தாங்கள் மெய்ப்பிக்க எங்கேதான் போய் சான்றுகளைத் தேடப் போகின்றீர்கள்? அப்படியான சான்றுகளேதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை!

      வெளிப்படையாகவே தெரிகின்ற உண்மைகளைத் தான் ஜெயபாலனும் அவரது பதிவிற்குக் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்ற பலரும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

      யாழ் பல்கலைக்கழகம் மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளது என்று சொல்லிக் கொண்டு திரிதல், உள்ளகத்தே புற்று நோயை வைத்துக் கொண்டு சுகதேகி போல் நடித்துத் திரிதலுக்கு ஒப்பானது.

      நாமனைவரும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ள வேண்டியது: “யாழ் பல்கலைக்கழகத்தின் சீர்குலைந்த நிலையை”! அது தீர்க்கமான உண்மை. ஒருவராலுமேயே மறுதலிக்க முடியாது. இந்த இழிநிலையை ஏற்றுக் கொண்டால்தான் முன்னேற்றுதலும் அதன் வழிவரும் முன்னேற்றமும் சாத்தியம்! அல்லாவிடில், அன்புக்குரியன் நாம் வழமை போலவே ‘குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்ட வேண்டியதுதான்’!

      இப்படிக்கு,
      ராஜதுரை

    28. அன்புக்குரியன் on July 7, 2010 1:13 pm

      மதிவதனி பேராதனை பல்கலையின் விவசாய பீட மாணவி
      யாழ் பல்கலையில் விவசாயபீடம் 1990 இல் தான் ஆரம்பிக்கப்பட்டது

    29. Jeyabalan T on July 7, 2010 8:51 pm

      கருத்தாளர்களுக்கு மீண்டும் எனது நன்றிகள். விடயத்திற்கு வருவோம்:

      //பல்கலைக் கழகத்தை சீர்குலைக்கும் விஷயத்தில் கைலாசபதியின் பங்கை குறைத்து மதிப்பிட முடியாது.// தாமிர மீனாட்சி
      பேராசிரியர் கைலாசபதி மீதான உங்களுடைய இக்குற்றச்சாட்டு ஏற்புடையது என நான் கருதவில்லை. அவரில்லாமல் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் ஒன்று உருவாகி இருக்குமா என்பது சந்தேகமே. மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மிகக் குறைந்தகாலம் உபவேந்தராக (அப்போது வளாக அதிபர்) இருந்தவர் கைலாசபதி மட்டுமே. பல்வேறு கல்வித்துறைகளையும் மிகக் குறுகிய காலத்தில் உட்புகுத்தி பல்கலைக்கழகத்தை பல்லின பல்சமூக ஆய்வுநிறுவனமாக நிறுவியவர். அவர் மீதான விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. ஆனால் பல்கலைக்கழகத்தை சீர்குலைத்தவர் என்பது பொருத்தமான குற்றச்சாட்டாக இல்லை.

      அடுத்து முக்கியமாக தாமிர மீனாட்சி நீங்கள் கணேசலிங்கம் பற்றிய எனது குற்றச்சாட்டுப் பற்றிய உங்களுடைய பதிவு ஆச்சரயமானதாக உள்ளது. ”20.09.2005இ யாழ்ப்பாணத்தில் நீதியரசர் திருமதி சிறிநிதி நந்தசேகரம் முன்னிலையில் ‘பொங்கு தமிழ்’ கனேசலிங்கம் என்று யாழ்ப்பாணத்தில் பிரபலமாகத் அறியப்பட்டிருந்த யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் தங்கராசா கனேசலிங்கம்இ ஆஜர்ப்படுத்தப்பட்டார்.” இவர் மீதான வழக்கை யாழ்ப்பாணத்தில் தொடரமுடியாதபடி புலிகள் அழுத்தத்தை வழங்கி இருந்தனர். அப்படி இருந்தும் மக்களுடைய கடுமையான எதிர்ப்பு காரணமாக அவருக்காக ஆஜரான ரிஎன்ஏ பாஉ சட்டத்தரணிகள் ரவிராஜ் விநாயகமூர்த்தி இருவரும் வழக்கில் இருந்து விலகிக் கொண்டனர். இந்நிலையில் வழக்கு கொழும்புக்கு மாற்றப்பட்டது. கணேசலிங்கம் சார்பில் அப்போதைய ரிஎன்ஏ பாஉ சிறிகாந்தா ஆஜரானார். குற்றச்சாட்டை வைத்த யோகேஸவரி காணாமல் போகவும் வழக்கு கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.

      தாமிர மீனாட்சி நீங்கள் ஒரு பெண்ணின் பெயரில் ஆணாதிக்ககருத்து ஒன்றினைப் பதிவு செய்கின்றீர்கள். //அந்தப் பெண் சரியாக 40 தடவை சோரம் போனது பற்றியும் அச்சொட்டாக கணக்கு வைத்தனர்.// பாலியல் வல்லுறவுக்கு உள்ளான ஒரு பெண் பற்றி குறிப்பிடுகையில் சோரம் போனது என்று குறிப்பிடுவது எவ்வகையிலும் நியாயமாகாது. அதுவும் ஒரு 13 வயதுப் பெண் பிள்ளையை நீங்கள் சோரம் போனவள் எனக் குறிப்பிடுவது அநியாயமானது. ஒரு விவாதத்திற்காக இப்பெண்ணே இந்த உறவுக்கு உடன்பட்டு இருந்தால் கூட கணேசலிங்கம் தண்டிக்கப்பட வேண்டியவரே.

      இந்த வழக்கைப் பொறுத்தவரை சந்தேகத்தின் பயனை நீங்கள் ஒரு விரிவுரையாளர் புலிகளின் முக்கியஸ்தர் சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவரக்கு வழங்குகிறீர்கள். ஆனால் சந்தேகத்தின் பயனை வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்ற சமூகத்தின் கீழ்நிலையில் உள்ள தனக்காகக் குரல் எழுப்ப வலுவற்ற அந்த அப்பாவி இளம் சிறுமிக்காகவே வழங்க என்னால் முடியும்.

      கணேசலிங்கத்தை எந்த நீதிமன்றமும் இதுவரை குற்றவாளியாகக் காணவில்லை. கணேசலிங்கத்தை மட்டுமல்ல இலங்கையில் படுகொலைக்கு உள்ளான ஆயிம் ஆயிரம் அப்பாவிகளின் படுகொலைக்கு பொறுப்பான விடுதலை இயக்கங்களின் உறுப்பினர்களையோ தலைவர்களையோ அல்லது இலங்கை இராணுவ வீரர்களையோ அல்லது அவர்களுக்கு கட்டளைகளை வழங்கும் அதிகாரிகளையோ எந்த நீதிமன்றமும் குற்றவாளியாகக் காணவில்லை. அதற்காக இலங்கையில் அச்சொட்டாக 40 000 பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்று கணக்கு வைப்பது தவறா? அதற்கு விடுதலை இயக்கங்களும் இலங்கை இராணுவமும் பொறுப்பு என்று குற்றம்சாட்டுவதில் தவறு உள்ளதாகவும் நான் கருதவில்லை.

      //அவருடைய வீட்டில் இருந்த பெண்ணைத் தவிர வேறு எந்தப் பெண்ணும் அவர் மீது தவறான நடத்தைக் குற்றச் சாட்டை இதுவரை கூறியதாக எந்த தகவலும் இல்லை.//
      தாமிர மீனாட்சி இது மிகவும் பலவீனமான வாதம். யாழ்ப்பாண சமூகம் ஒரு மூடிய சமூகம். அதில் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நேர்ந்த அவலத்தை வெளிப்படுத்த முன்வருவதில்லை. குறிப்பாக மேற்கு நாடுகளிலேயே பாலியல் குற்றங்களில் குறைந்த அளவு வீதத்தினரே அதனை முறையிடுகின்றனர். அப்படி இருக்கையில் கணேசலிங்கம் மீது வேறு யாராவது குற்றச்சாட்டு வைத்தார்களா என்று ஆராய்வது அர்த்தமற்றது.

      பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பாலியல் துஸ்பிரயோகங்களில் மிகவும் அறியப்பட்ட ஒரு சம்பவம் என்பதால் இதனை இக்கட்டுரையில் பதிவிட்டேன். ஆனால் தங்கள் தொழில் நேர்மையை மீறி அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து இவ்வாறான சம்பவங்கள் பொதுவாக இடம்பெறுகின்றது என்ற குற்றச்சாட்டுக்கள் நிறையவே உள்ளது. இது பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் இருந்த போதும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மிக இறுக்கமான மூடிய ஸ்தாபனமாக இருப்பதால் அங்கு இவ்வாறான துஸ்பிரயோகங்கள் அதிகம் என அறியவருகிறது.

      த ஜெயபாலன்.

    30. ராபின் மெய்யன் on July 7, 2010 9:33 pm

      இந்தக் கட்டுரை பேராசிரியர் ரத்னஜீவன் ஹூலின் வேண்டுகோளின் பெயரில் தான் எழுதப்பட்டதா? 36 வருடங்களாக இயங்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சீர்கேடுகள் அது ஆரம்பிக்கப்பட்ட நாள் முதற்கொண்டே இருந்து வருகின்றன. அவை பற்றி இதுவரை காலமும் கண்டுகொள்ளாத தேசம்நெற் இன்று திடீரென ஹூல் என்னும் அவதார புருஷர் வந்து நீர் மேல் நடந்து செல்லும் அற்புதம் செய்யப் போகிறார் என்பதன் பின்னணி என்ன? ஹூல் (மறுபடியும்) பதவியேற்கும் போது முன்னர் இருந்த எதிர்ப்பு இருக்கக் கூடாது என்பதற்கான பிரச்சாரமாகத் தான் இக்கட்டுரை எழுதப்பட்டதா?

      யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் அது இயங்கும் சமூகத்தின் இயல்பையே பிரதிபலிக்கிறது. ஊரவர்களுக்கும், உறவினர்களுக்கும் நியமனம் தொடக்கம் அது கொண்டுள்ள அவலங்கள் ஏராளம். பேராசிரியர் ஹூலும் யாழ்ப்பாண சமுகத்திலிருந்து வந்தவர் தான். அவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டு யாழ்ப்பாணம் செல்வதற்கு தனது பதவியேற்பை எதிர்க்க வேண்டாம் என புலிகளுக்குத் தூதுவிட்ட கதை உங்களுக்கு தெரியுமா? தெரிந்திருந்தாலும் நீங்கள் கட்டுரையில் குறிப்பிடுவீர்கள் என எதிர்பார்க்க முடியாது. தூது சென்றவர் விஷயத்தை வெளிவிடாமல் இருக்க அந்த நபருக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் உறுப்பினர் நியமனம் வாங்கிக் கொடுத்தார் ஹூல். வெளிநாடு செல்வதற்கு முன்பாக கொழும்பிலிருந்தபடி சில காலம் துணைவேந்தராக பணியாற்றினார் ஹூல். அச்சிறிய காலப்பகுதியில் பல்கலைக் கழகத்தினுள்ளே தனக்கான ஆதரவுத் தளத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார் ஹூல். அதற்காக பல்கலை. மானியங்கள் ஆணைக்குழுவின் ஆசிரியர் நியமன விதிகளைப் புறக்கணித்தார் அல்லது மீறி நடந்தார். அவர் திரும்பவும் யாழ்ப்பணம் வருவதற்கான சூழ்நிலை முன்னரைவிட இப்போது சாதகமானதாக இருந்தாலும் அவர் ஒரு சூழ்நிலைக் கைதியின் மனநிலையில் இருந்து முற்றாக விடுபட்டு பணியாற்ற முடியும் என நம்ப முடியவில்லை.. அத்துடன் ஒரு துணை வேந்தரின் பத்விக் காலம் மூன்று ஆண்டுகள் மட்டுமே. 36 வருடங்களாக பாழடிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தை மூன்று ஆண்டுகளில் பேராசிரியர் ஹூல் சீர்செய்து விடுவார் என்று நீங்கள் திட்டமிட்டுப் பிரசாரம் செய்வது அவர் நீர் மேல் நடக்கும் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டப் போகிறார் என்பது போல் தோன்றவில்லையா?

    31. தாமிரா மீனாஷி on July 7, 2010 10:44 pm

      நீங்கள் கவனத்தில் எடுக்கத் தவறிய விஷயங்கள்:

      1. நீதிமன்றக் குற்றப் பத்திரத்தில் 40 தடவை என்று பொத்தாம் பொதுவாக குறிப்பிட முடியுமா? 40 தடவைகள் பலாத்காரம் செய்யப்பட்டார் எனக் குறிப்பிட்டால் அது நீதிமன்றத்தில் நிரூபிக்கப் பட வேண்டாமா?

      2. கணேசலிங்கத்தை விட, மோசமான பாலியல் வன்முறையாளர்கள் பல்கலைக் கழகத்தில் இருந்த போதிலும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாமல், கணேசலிங்கத்தின் மீது பாலியல் பலாத்கார குற்றம் சாட்டப் பட்டது அவர் பொங்கு தமிழில் முன்னணியில் நின்ற காரணத்தினாலா?

      3. அவர் மீது குற்றம் சாட்டப் படுவதற்கு புலியின் ஒரு சாரார் காரணமாக இருந்தார்கள் என்பது எனது குற்றச் சாட்டு. அதற்கு உங்களுடைய பதில் என்ன? ( இத்தகைய குற்றங்களைச் செய்ததாக புலிக்குப் பணம் கொடுக்க மறுத்த பலர் தண்டிக்கப் பட்ட கதைகள் நிறைய உண்டு.)

      4. மூடிய சமூகத்தில் சரியான நீதி விசாரணையும் மூடப்பட்ட ஒரு விஷயம் தான். பெண்கள் அமைப்புக்கள் ஊர்வலம் சென்றதால் மட்டும் ஒரு நிரபராதி குற்றவாளியாக்கப் படுவது எவ்விதத்தில் நியாயம்?

      5. அனுதாபத்தைப் பெறும் நோக்கில் ஒரு பதின்மூன்று வயதுச் சிறுமி பகடைக் காயாகப் பயன்படுத்தப் பட்டார். அவர் மீதுள்ள அனுதாபம் வரவேற்கக் கூடியது தான். உண்மையாக அவர் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தால் அது மிகக் கொடுமையான ஒரு விஷயம். ஆனால், சந்தேகம் அவருக்குச் சார்பானதாக அமைய வேண்டும் என்பதற்காக ஒரு நிரபராதி குற்ற மூட்டைகளுடன் நடைப் பிணமாக மாற்றப் படுவது சரியான பெண்ணிலை வாதமாக எனக்குப் படவில்லை.

    32. Nadchathiran chevinthian. on July 8, 2010 12:10 am

      “//பல்கலைக் கழகத்தை சீர்குலைக்கும் விஷயத்தில் கைலாசபதியின் பங்கை குறைத்து மதிப்பிட முடியாது.// தாமிர மீனாட்சி
      பேராசிரியர் கைலாசபதி மீதான உங்களுடைய இக்குற்றச்சாட்டு ஏற்புடையது என நான் கருதவில்லை. அவரில்லாமல் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் ஒன்று உருவாகி இருக்குமா என்பது சந்தேகமே. -ஜெயபாலன்.த”

      ஜெயபாலன் தாமிர மீனாட்சி கைலாசபதியைப்பற்றி சொல்வது சரியானது. கைலாசபதி ஒரு அறியப்பட்ட ஸ்திரி லோலர் (வுமனைஸர்).அவரது மாணவராக இருந்து பின்னாளில் விரிவுரையாளர் பேராசிரியரான ஆன பெண்களோடு அவருக்கு இருந்த பாலியல் உறவுகளையும் பல்கலைக்கழக சமூகம் நன்கு அறிந்தே இருக்கிறது. இங்கு பாலியல் உறவு காரணமாக அதிகாரத் துஷ்பிரயோகம் விரிவுரையாளர் தெரிவில் நடந்திருக்க அதிக வாய்ப்புண்டு. மேலும் கைலாசபதியின் பங்களிப்பை இக்கட்டுரையில் ஜெயபாலன் அதிகப்படுத்திக் கூறுகிறீர்கள். கைலாசபதியின் நியமனம் முற்றிலும் ஒரு அரசியல் நியமனம். கைலாசபதியைவிட சீனியரான கைலாசபதியைவிட சர்வதேச ரீதியாக தங்களை நிலைநிறுத்திய ஜெயரட்னம் வில்சன்/ அரசரட்ணம்/ சீ.ஜே. எலியேசர்/ தனிநாயகம் அடிகளார் போன்ற பேராசிரியர்கள் யாழ் வளாகத்துக்கு முதல் பிறசிடன்ட் ஆக வருவதற்கு மிகத்தகுதியுடையவர்களாக இருந்தார்கள். மேலும் வித்தியானந்தன் கைலாசபதிக்கு சீனியர் மட்டுமல்ல கைலாசபதியின் பேராசிரியரும் கூட. பல்கலைக்கழகம் பற்றி நான் விரிவாக எழுதவிருக்கும் கட்டுரையில் நான் இவற்றை விரைவில் எழுதுவேன்.

      நட்சத்திரன் செவ்விந்தியன்.

    33. rohan on July 8, 2010 6:28 am

      “பல்கலைக்கழகம் பற்றி நான் விரிவாக எழுதவிருக்கும் கட்டுரையில் நான் இவற்றை விரைவில் எழுதுவேன்” என்று சொல்கிற நட்சத்திரன் செவ்விந்தியனுக்கும் அவரது கட்டுரையைப் பிரசுரிக்கப் போகிறவர்களுக்கும் ஒரு சின்ன வேண்டுகோள். “கைலாசபதி ஒரு அறியப்பட்ட ஸ்திரி லோலர். அவரது மாணவராக இருந்து பின்னாளில் விரிவுரையாளர் பேராசிரியரான ஆன பெண்களோடு அவருக்கு இருந்த பாலியல் உறவுகளையும் பல்கலைக்கழக சமூகம் நன்கு அறிந்தே இருக்கிறது” போன்ற சரியான ஆதாரம் அற்ற விடயங்களையும் தலைப்புக்குச் சம்பந்தப்படாத விடயங்களையும் தவிர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

    34. ராஜதுரை on July 8, 2010 9:59 am

      அனைவருக்கும் மீண்டுமொருமுறை வணக்கம்.

      யாழ் பல்கலைக்கழகத்தின் தற்போதைய சீர்குலைந்த நிலை பற்றியும் அதன் சரித்திரப் பின்னணிகள் தொடர்பாகவும் தத்துவார்த்தமாகவும் யதார்த்தமாகவும் ஜெயபாலனண்ணை தொடங்கிவைத்துள்ள விவாதத்துக்குச் சார்பாக மேலும் சில கருத்துக்களை/உண்மைகளை இத்தால் நிரைப்படுத்துகின்றேன்.

      1.பேரினவாத அரசியல் வழிவந்த தரப்படுத்துகை (standardization) என்கின்ற யுக்தியினால், யாழ் மாவட்ட மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெறாமல் பெரும் இக்கட்டுக்கு உள்ளாகிய போது, மாற்று வழி முறையாகத் காணப்பட்ட நிறுவனமே யாழ்ப்பாணக் கல்லூரியின் இளமானித் துறை (Jaffna College Undergraduate Department).
      2.தரப்படுத்துகை காரணமாக இலங்கை அரசாங்கப் பல்கலைக்கழக அனுமதி பெறாத பல மாணவர்கள் யாழ்ப்பாணக் கல்லூரியின் இளமானித் துறை வழியாக இலண்டன் பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற விஞ்ஞானப் பட்டதாரிகளாக தகமை பெற்றனர். இலங்கைப் பல்கலைக்கழகக் கட்டமைப்பு வழங்கும் பட்டங்களை விடவும் யாழ்ப்பாணக் கல்லூரியின் இளமானித் துறை மூலமாகப் பெற்றுக் கொள்ளக்கூடிய ஐக்கிய இராச்சிய விஞ்ஞான இளமானிப் பட்டங்கள் (UK science degree qualifications) பெரிதாக மதிக்கப்பட்டன/வரவேற்கப்பட்டன.
      3.ஆனால், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆரம்பகால அங்குரார்ப்பண நடவடிக்கைகளின் போது – அந்நேரம் ‘யாழ்ப்பாண வளாகம்’ என்று அழைக்கப்பட்டதான இன்றைய யாழ் பல்கலையின் முன்னோடி நிறுவனத்தினுள், UK science degree qualificationsகளை வழங்கிக் கொண்டிருந்த Jaffna College Undergraduate Department உள்வாங்கப்பட்டது.
      4.மேற்படி நடவடிக்கையால், வட-கிழக்குப் பிரதேச மாணவர்களுக்கு UK science degree qualificationsகளைப் பெற்றுக் கொள்தலென்பது எட்டாக்கனியாகப் போனது. ஒப்பீட்டளவில் குறைந்த தரமுள்ள (பெரிதாகச் சர்வதேச அங்கீகாரமற்றதான) இலங்கைப் பல்கலைக்கழகக் கட்டமைப்பு வழங்கும் இளமானிப்பட்டங்களே நிலைத்து நின்றன.
      5.Jaffna College Undergraduate Department அரச பல்கலைக்கழகக் கட்டமைப்பினுள் உள்வாங்கப்பட்டது என்பது, வட-கிழக்குப் பிரதேச மாணவர்களுக்குக் கிடைக்கக் கூடிய அதிசிறந்த கல்விவாய்ப்பினை சீர்குலைப்பதற்கான ‘திட்டமிடப்பட்ட ஒரு படிமுறை’ என்பது இத்தால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது தான்.
      6.எப்படியாயினும் ஏறத்தாழ 90களின் ஆரம்பகாலங்கள் வரை வெவ்வேறு தனிப்பட்ட ஆராய்ச்சியாளர்களினதும், கல்விமான்களினதும் முயற்சியால் யாழ் பல்கலைக்கழகமானது ஒரு குறிப்பிடத்தக்க இலங்கைப் பல்கலைக்கழகமாக மிளிர்ந்தது.
      7.எனினும், ஜெயபாலன் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கின்ற ‘இறுக்கமானதும் பிழைகளை மூடி-மறைத்துப் பூசி மெழுகிக்கொண்டே போகின்ற’ சைவ வெள்ளாளப் பெருங்குடியினரின் ஊடுருவல் மிகுந்ததான செல்லரித்துப்போன சமூகக்கட்டமைப்பின் தாக்கம் காரணமாகவும், உள்ளார்த்தமான கட்சிப் பூசல்களின் வெளிப்பாட்டினாலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு ‘காத்திரமான தலைமைத்துவத்தை’ கட்டியெழுப்புவதற்குத் தவறிவிட்டது.
      8.அதனைத் தொடர்ந்து வந்த யுத்தக்க்காரணிகளின் பாதிப்பினாலும் அதனால் ஏற்பட்ட மூளைசாலிகள் வெளியேற்றத்தாலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தகமையற்ற, தராதரமற்ற, கொள்கையற்ற, சமூகப்பிரக்ஞையற்ற – அதே நேரத்தில் ‘எதனையும் எப்படியும் திரித்து தம் சுயலாபத்தில் மட்டுமே குறியாகவிருக்கின்ற’ வவர்களின் கையில் வந்தது. அவர்கள் ஆக்கபூர்வமான தனிமனித கருத்துச் சுதந்திர உரிமையை நசுக்கும் வகையில் நடாத்திய முகாமைத்துவம் பல்கலையின் நிர்வாகக்கட்டமைப்பைச் சிதிலமாக்கியது. இது யாழ் பல்கலைக்கழகத்தின் வழிமுறையான தரக்குறைவுக்கும் தற்போதைய சீர்குலைவுக்கும் அடிகோலியது.
      9.ஒருவகையில், இலங்கைத் தமிழ் சமூகத்தின் தற்போதையக் கலாச்சாரப் பின்னடைவுக்கும் பிறழ்ந்துபோன சமூகக்கட்டமைப்பிற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சீர்குலைவும், அதன் விளைவான கொள்கைப்பிறழ்வுகளும் முக்கியகாரணங்கள்தான்.
      10. ஒரு பல்கலைக்கழகமென்பது அது பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதேசத்தினதும் அப்பிரதேச சமூகத்தினதும் கலாச்சார அடையாளமென்பது கல்விச் சிந்தனையாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து. ‘கலாச்சாரமென்பது’ சமூகமொன்று வழி-வழியான தேடலினால் பெற்றுக்கொண்ட சமூக-சூழல் அறிவின் தொகுப்பாகும் (உசாத்துணை: Monaghan, J., and Just, P., (2000) Social and Cultural Anthropology. Oxford University Press). இச் செயற்பாட்டில் பல்கலைக்கழகம் ஆற்றும் பங்களிப்புப் பாரியது.
      11.இலங்கையின் தமிழ்ப்பிரதேசத்தில் ஸ்தாபிக்கப்பட்டதான முன்னோடிப் பல்கலைக்கழகமான யாழ் பல்கலை, தனது தொடர்ச்சியான சீர்குலைவினாலும், காத்திரமான தலைமைத்துவமற்ற ஏதேச்சைப் போக்கினாலும் – இலங்கைத் தமிழ் சமூகத்தின் தேவைகளைப் பூரணமாகப் பிரதிபலிக்காததனால் ஏற்பட்ட விளைவுகளில் ஒன்றுதான் இன்று கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடக்கின்ற சீர்குலைவுகள்!
      12.ஆக, யாழ் பல்கலைக்கழகம் அதன் தற்போதைய நிலையில் பாரிய ‘கலாச்சாரக் கொள்ளையில்’ ஈடுபடுகின்ற ஒரு பிறழ்ந்து போய்விட்ட கட்டமைப்பாகவே கருதப்படல் வேண்டும்.
      13.எல்லாவற்றுக்கும் முப்பதாண்டு காலம்நீடித்த யுத்தத்தையும் அதன் தாக்கங்களையும் காரணம் காட்டி யாழ் பல்கலைக்கழகத்தினர் தப்ப முடியாது! இஸ்ரேலில் உள்ள ‘தெல் அவிவ்’ பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்கள் – கடும் யுத்தக்காலத்திலும் ‘பங்கர்களில்’ இயங்கி விவசாய விஞ்ஞானத்திலும், மருத்துவத்திலும், கணிதத்திலும், செயற்கை அறிவுசார் கணினி விஞ்ஞானத்திலும் (artificial intelligence) உலகளாவிய ரீதியில் இன்று முன்னணியில் இருக்கின்றன.
      14.யாழ் பல்கலையினரின் கொள்கையற்ற போக்கும் சமூகப் பிரக்ஞையற்ற நிலையுடன் கூடிய ஏதேச்சையான நடவடிக்கைகளும், அசமந்தத்தனமும்தான் இன்று நாம் விவாதத்துக்கு எடுத்துக் கொண்டிருக்கின்ற ‘சீர்குலைவுக்கு’ மிக முக்கிய காரணம். அத்துடன், காத்திரமான-சமூகச்சிந்தனையுள்ள தொலைநோக்குடன் சிந்திக்கின்றதான ஒரு தலைமைத்துவம் இல்லாமற்போனதும் இன்னொரு முக்கிய காரணமாகும்.
      15.தனிமனித இலாபம் கருதியே செயற்படுத்தப்படுகின்ற யாழ் பல்கலைக்கழகக் கடமைப்பின் சீர்குலைவுக்கு மறுபடியும் மறுபடியும் சிறந்த விடயக்கலை (casestudy) உதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடியதுதான் வவுனியா வளாகம். இங்கு ஒரு காலத்தில், வெளிவாரி-ஆலோசகராக செயற்படுவன் மூலம், தனது பிரத்தியேக லாபம் கருதி ஒரு கல்வியாண்டைப் பின்போட முயற்சி செய்த முதல்வர். திரு. பாலகிருஷ்ணன் கொள்கைப் பிறழ்வின் ஒரு வகையென்றால்; தற்போது முதல்வர் கதிரையில் விடாப்பிடியாக அமர்ந்துகொண்டு பல்கலைகழக மானியங்கள் சட்டவாக்க முறைமைக்கும் (UGC regulations and statutes) ஒழுக்காற்றுக் கோவைக்கும் (code of ethics) விரோதமாக தனது லாபம் கருதியே எப்போதும் காய்நகர்த்தலில் ஈடுபடுகின்றவர் கொள்கைப்பிறழ்வினதும் தொலைநோக்கின்மையினதும் சமூக உரிமை மீறலினதும் ‘அதி செறிவான திரட்டாகவே’ விளங்குகின்றார். இவரது பதவிக்காலம் முடிந்த பிற்பாடு வவுனியா வளாகம் மேலும் ஆழமாகச் சேற்றில் புதையுண்டு போகுமென்பதுவும் திண்ணமே! அப்போது ‘மழைக்கு ஆடு மாடுகள் கூட ஒதுங்காத நிலைதான்’ வவுனியா வளாகத்தின் தரமாகவிருக்கும்.

      ஆகையால், சீரான கொள்கையுடன் கூடிய சமூகப்பிரக்ஞையினை யாழ் பல்கலைக்கழகச் சமூகமானது இனியாவது வளர்த்துக் கொள்ளத் தவறின், ஜெயபாலனும் இவ்விவாதத்தில் பங்கு கொண்டிருக்கின்ற சமூகச்சிந்தனையுள்ளவர்களும் காட்டிய உதாரணங்களின் அடிப்படையில்; யாழ் பல்கலைக்கழகமானது ஒரு ‘பெரிய பள்ளிக்கூடமாகக் கூடக் கொள்ளப்பட முடியாத’ அடிப்படை மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்ற ஏதேச்சைப்போக்கான ஒரு நிறுவனமாகவே தொடர்ந்தும் கருதப்படும்.

      இப்படிக்கு,
      ராஜதுரை

    35. Jeyabalan T on July 8, 2010 10:19 am

      புரபெசர்//புத்தூர் வங்கி கொள்ளைக்கு கேபி பயன்படுத்திய ஸ்கூட்டர் விமல்ராஜ் உடையது என்ற ஒரு தகவலும். அண்மைக்காலத்தில் விமலராஜ் லண்டனில் நாடுகடந்த அரசின் முக்கிய ஏற்பாட்டாளர் என்பது ஒன்று. அடுத்து கேபியை சந்திக்க சென்ற குழுவில் சென்றிருந்த விமலதாசன் என்பவரும் ஒரே ஆளா என்பதை உறுதிப்படுத்த வேண்டியது தேசம்.//
      நான் விசாரித்தவரை அவர்கள் ஒருவரல்ல. மேலும் சிலருடன் தொடர்புகொள்ள முயற்சிக்கின்றேன்.

      புரெபெசர்//சிவரமணி தற்கொலைக்கு புலியை காரணம் கூறமுடியாது.//
      இந்தக் கருத்துடன் நீங்களே முரண்படுகின்றீர்கள்.
      புரெபெசர்//சிவரமணி கூடித்திரிந்த தில்லை; செல்வி புலிகளால் பிடிக்கப்பட்டது இரண்டாம் பட்சமான விரக்தி. தில்லையின் கைதை தொடர்ந்தானதும் சிவரமணியுடன் கூடித்திரிந்தவர்களின் கைதுகளால் வீட்டில் சிவரமணிக்கு கொடுக்கப்பட்ட குடைச்சலும் சேர்ந்தே பெண்ணியவாதியின் தற்கொலை நேர்ந்தது.//
      சிவரமணி - செல்வி - தில்லை ஆகியோரின் உறவு தனிப்பட்ட உறவு மட்டுமல்ல அரசியல் ரீதியானதும் கூட
      ._._._._._.

      நாவலன்//சமுகத்தில் நிலவும் ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வின் உணர்ச்சிகரமான மத்திய தரவர்க்க எழுச்சியாக பல தடவைகள் பல்கலைக் கழகங்கள் தொழிற்படுவதுண்டு.//

      ஜெயபாலன் த//ஆனால் பொதுவாகவே இளைஞர் சமூகத்தில் ஏற்படும் புரட்சிகரச் சிந்தனைகள் மீதான காதல் யாழ்ப்பாண சமூகத்தில் யாழ்ப்பாண பல்கலைகழக சமூகத்தில் ஏற்படவில்லை. அல்லது ஏற்பட்ட போதும் அது குறிப்பிடத்தக்க அளவில் இருக்கவில்லை.//

      நாவலன் //கட்டுரையில் ரயாகரனையும் என்னையும் குறிப்பிட்டிருக்க வேண்டிய அவசியமில்லை.//
      குறிப்பிட்டு இருக்காவிட்டால் இருட்டடிப்பு என்று தொடர் கட்டுரைகள் எழுத வாய்ப்பாக இருந்திருக்கும்.

      ._._._._._.

      அன்புக்குரிவன்//மதிவதனி யாழ் பல்கலை மாணவி என்பது பொய்.//
      ”நான் படிப்பில் படுசுட்டி. நீ படித்து டாக்டராக வர வேண்டும் என்று அப்பா அடிக்கடி சொல்வார். ஆனால் எனக்கு விவசாயத்தில் தான் ஆர்வம் இருந்தது. எங்களுக்கு ஊரில் நிலம் நீச்சு இருந்ததால் வேளாண்மைத் துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகத்துடன் இருந்தேன். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் டாக்டருக்குப் படிக்க எனக்கு இடம் கிடைத்த போதிலும் அதைப் புறந்தள்ளிவிட்டு பெராதேனியா கல்லூரியில் வேளாண் அறிவியல் படிப்பில் சேர்ந்தேன். நான் 2ம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது தான் இலங்கையில் இனக்கலவரம் ஏற்பட்டது.”
      மதிவதனி பிரபாகரன் செப்ரம்பர் 30 2007 - ராணி சஞ்சிகை

      //யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாயத்துறை 1990ல் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது.// யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாறு.

      பிரதெனியாவை விட்டு ஊர்வந்த மதிவதனி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உண்ணாவிரதத்தில் பங்கேற்றது பற்றிய விபரத்தை தெரிந்திருந்தால் அன்புக்குரியவன் அல்லது வேறு யாராவது பதிவிடவும். மேலும் மதிவதனியுடன் இன்னும் சில மாணவிகளும் புலிகளால் கடத்தப்பட்டனர் அவர்களுக்கு என்ன நடந்தது பற்றியும் தெரிந்தவர்கள் பதிவிடவும்.

      அன்புக்குரியவன் //யாழ் பல்கலையில் சிறந்த நிர்வாகியாக இருந்த பதிவாளர் திருமதி தங்கராஜா வின் பதவியைப்பரித்தி அவமானப்படுத்தியது மாணவரமைப்பல்ல. கல்விசாரா ஊழியர் தொழிற்சங்கம். //
      யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இந்நிலைக்கு மாணவர்கள் மட்டும் பொறுப்பாளர்களல்ல அதனை நீங்கள் உறுதிப்படுத்தி உள்ளீர்கள்.
      ._._._._._.

      நாங்கள் என்னத்தை இழந்திருக்கிறோம் என்பதை அது கிடைக்கும் வரை தெரியாது என்ற குமரனின் கருத்தே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பற்றிய எனது மதிப்பீடு.
      ._._._._._.

      ராஜதுரை //தெல்லிப்பழை துர்க்கையம்மன் நிர்வாக சபையின் அறங்காவலர்கள் சிபாரிசினால் யாழ் பல்கலையால் உள்வாங்கப்படுகின்ற பேரவை உறுப்பினர்களின் தகமைகளும் பொருத்தப்பாடுகளும் ஐயத்துக்குரியதே.//
      எனக்கும் இன்னும் பலருக்கும் இது புதிய தகவல் நன்றி.

      ராஜதுரை //யாழ் பல்கலைக்கழகம் மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளது என்று சொல்லிக் கொண்டு திரிதல், உள்ளகத்தே புற்று நோயை வைத்துக் கொண்டு சுகதேகி போல் நடித்துத் திரிதலுக்கு ஒப்பானது. “யாழ் பல்கலைக்கழகத்தின் சீர்குலைந்த நிலையை”! அது தீர்க்கமான உண்மை. ஒருவராலுமேயே மறுதலிக்க முடியாது. இந்த இழிநிலையை ஏற்றுக் கொண்டால்தான் முன்னேற்றுதலும் அதன் வழிவரும் முன்னேற்றமும் சாத்தியம்!//
      ராஜதுரையின் கருத்து முற்றிலுமான உண்மை. இது பல்கலைக்கழகத்திற்கு மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்விலும் பொது அமைப்புகளின் வாழ்வுக்கும் இது பொருத்தமான கூற்று. கட்டமைக்கப்பட்ட விம்பங்களுக்குள் மாயைகளுக்குள் வாழாமல் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு முன்னேற்றத்திற்கான வழியைத் தேட வேண்டும்.

      ._._._._._.

      ராபின்மெய்யன் //திடீரென ஹூல் என்னும் அவதார புருஷர் வந்து நீர் மேல் நடந்து செல்லும் அற்புதம் செய்யப் போகிறார் என்பதன் பின்னணி என்ன?//
      ஜீவன் கூல் நீர்மேல் நடக்கும் அற்புதம் செய்யுமளவிற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அவ்வளவு மோசமான நிலையில் இல்லை. நேர்மையான ஒரு சிறந்த நிர்வாகி அதற்கான தகுதிகளுடன் இருந்தால் அவரால் யாழ்பாணப் பல்கலைக்கழகத்தில் பாரிய மாற்றங்களைக் கொண்டுவர முடியும். அதற்கான சகல தகமைகளும் பேராசிரியர் ஜீவன் கூலிடம் உள்ளது என்பது எனது அபிப்பிராயம். அவருக்கு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்பது எனது அபிப்பிராயம்.

      ராபின்மெய்யன்//அவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டு யாழ்ப்பாணம் செல்வதற்கு தனது பதவியேற்பை எதிர்க்க வேண்டாம் என புலிகளுக்குத் தூதுவிட்ட கதை உங்களுக்கு தெரியுமா? தெரிந்திருந்தாலும் நீங்கள் கட்டுரையில் குறிப்பிடுவீர்கள் என எதிர்பார்க்க முடியாது.//
      ”புலிகளுடைய கடும்போக்கை கைவிட்டு ரட்ன ஜீவன் கூலை தனது கடமையைத் தொடர வெவ்வேறு வழிகளில் முயற்சிக்கப்பட்டது. புலிகளுடனும் இது தொடர்பாகப் பேசப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இவ்விடயத்தில் தலையீடு செய்தது. ஆனால் அவை எதுவும் பலனளிக்கவில்லை.” –எனது கட்டுரையில் இருந்து.

      ஜீவன் கூல் தனது கடமையைச் செய்வதற்கு பல்வேறு வழிகளையும் புலிகளையும் கூடி அணுகி இருந்ததை கட்டுரை சுட்டிக்காட்டுகின்றது.

    36. Anonymous on July 8, 2010 3:00 pm

      போராட்டங்கள் ஆரம்பத்தில் பல பல்கலைக்கழக மாணவர்களின் கைதுகளில் ஆரம்பமாகின்றது. லவன் என்ற மாணவனின் கைது மற்றும் மாதகலைச் சேர்ந்த விமல்ராஜ், கொக்குவில் சத்தியமூர்த்தி போன்றவர்களின் கைதுகளுக்கு எதிரான ஊர்வலம் யாழ் நகர வீதிகளில் இராணுவத்தினரின் தடைகளையும் மீறி நடந்தேறியிருக்கின்றது.

      மட்டக்களப்பு வெள்ள நிவாரணத்துக்காக யாழ் குடாவெங்கும் மாணவர்கள் தமது விரிவுரைகளைத் துறந்து நிதியும் உதவிகளையும் சேர்ததிருக்கின்றார்கள்.

      வரலாற்றில் மிகவும் பெறுமதிமிக்க ஆவணங்களாக இன்று விளங்கும், போராட்ட செல் நெறிமுறைகளையும் தவறுகளையும் கேள்விக்குட்படுத்தி மக்கள் மேல் இழைக்கப்பட்ட கொடுமைகளையும் ஆவணப்படுத்தி அவற்றை யார் எவர் செய்தார்களோ அவர்களை நோக்கி விமர்சனம் செய்து வெளியிடப்பட்ட வெளியீடுகளின் ஆக்கதாரர்களான மனித உரிமைகளுக்கான யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர்களின் பங்கை இங்கு புறக்கணித்திருப்பதானது இக்கட்டுரையின் பிரதான நோக்கம் வேறானது என்பதை புரிய வைக்கின்றது. யாரையோ இருட்டடிப்பு செய்வதற்காக பல்கலைக்கழகத்தையே இருட்டாக்கி காட்டப்பட்டிருக்கின்றது.

    37. DEMOCRACY on July 8, 2010 3:36 pm

      தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு பல்கலைக் கழகங்களிலும்,குளருபடிகளுக்கும், ஒழுங்கீனங்களுக்கும்,குறைவில்லை. இது யாழ்ப்பாண பல்கலைகழகத்திலிருந்து எப்படி வேறுபடுகிறது என்றால்?, “உள்ளிருந்து கொல்லும் வியாதியான” “CANNIBALISM” (நரமாமிசம் சாப்பிடுதல் அல்லது தன் இனத்தையே அடித்து சாப்பிட்டு வளருதல்)!.
      /9. ஒருவகையில், இலங்கைத் தமிழ் சமூகத்தின் தற்போதையக் கலாச்சாரப் பின்னடைவுக்கும் பிறழ்ந்துபோன சமூகக்கட்டமைப்பிற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சீர்குலைவும், அதன் விளைவான கொள்கைப்பிறழ்வுகளும் முக்கியகாரணங்கள்தான்.
      10. ஒரு பல்கலைக்கழகமென்பது அது பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதேசத்தினதும் அப்பிரதேச சமூகத்தினதும் கலாச்சார அடையாளமென்பது கல்விச் சிந்தனையாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து. ‘கலாச்சாரமென்பது’ சமூகமொன்று வழி-வழியான தேடலினால் பெற்றுக்கொண்ட சமூக-சூழல் அறிவின் தொகுப்பாகும் (உசாத்துணை: Monaghan, J., and Just, P., (2000) Social and Cultural Anthropology. Oxford University Press). இச் செயற்பாட்டில் பல்கலைக்கழகம் ஆற்றும் பங்களிப்புப் பாரியது./

      –வழி வழியான தேடல்கள் என்றால்,அதன் பிரழ்வும் ஒரு பரிணாமமே!.கலாச்சாரம் என்பது,பொருளாதர கட்டமைப்பைவிட பழைமையானது.”கேனிபாலிஸம்” என்ற பிரழ்வு,”பொருளாதார கையாள்கையை” நிர்ணயிக்கும் வல்லமை பெரும் போது,அது ஒரு தொற்று நோயாக,கிருமியாக மாறுகிறது.நேரடியாக கொலை செய்தல் இதன் அர்த்தமல்ல,”பொருளாதார கையாள்கையும்” இத்தகைய விரக்திகளை,வெறுமைகளை அந்த சமூகத்தில் ஏற்ப்படுத்தலாம்!. இதில்,”SUPER-EGO DELUSION” என்ற வார்த்தையையும்,பிரஞ்சு ஜீன் பால் சாத்தரின் கதையில் வரும் “NAUSEA” என்ற வார்த்தையையும் இதில் தொடர்பு படுத்தி ஆராய்க!. இந்த நோயை சரியான,ஆரோக்கியமான (சமூகத்தை பிரதிபலிக்கும்) பல்கலைக்கழக ஆராய்ச்சி மூலம் குணமாக்கலாம்!.பணமிருக்கிறது?! என்ற பெருமையை(SUPER-EGO DELUSION)?,தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் காட்டலாம(உள்ளகத்தே புற்று நோயை வைத்துக் கொண்டு சுகதேகி போல் நடித்துத் திரிதலுக்கு ஒப்பானது.). இதனுடன் தூக்கிச்செல்லும் “CANNIBALISM” தினால், மீண்டும் பிரழ்வுகளே.இதனால்,”MACRO ECONOMY” என்பதில் இலாபம் இல்லை என்கிற போது அந்த நோயை வைத்திருப்பானேன்!?…

    38. Revathy on July 9, 2010 12:25 am

      தரப்படுத்தல் காரணமாக பல்கலைக்கழக அனுமதி கிடைக்கப் பெறாத விஞஞான பிரிவில் படித்த நான் மேற்கொண்டு படிக்கும் ஆவல் காரணமாக வெளிவாரிப் பட்டப் படிப்பைத் தொடர்ந்தேன்.

      யாழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்களாக இருப்பவர்களே எமக்கு சனி ஞாயிறுகளில் வந்து வகுப்பெடுப்பார்கள். எழுத்துப் பரீட்சையைப் பொறுத்தவரையில் எமக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் பிரக்ரிக்கல் சோதனை என்பது மிகவும் சோதனையானதொன்று. காரணம் அதற்குரிய மிகச் சொற்பமான உபகரணங்களையும் சோதனைப் பொருட்களையும் பாவித்து அரைவாசி செய்து பார்த்தால் மிகுதி படித்ததை வைத்து அனுமானிக்க வேண்டியதுதான்.இந்த நிறுவனமும் பெருமளவு பணத்தைக் கொட்டி லாப் வசதி செய்ய முடியாது. அப்படிச் செய்தால் எம்மிடம் அறவிடும் பணத்தை பலமடங்கு உயர்த்த வேண்டிவரும். அப்படி ஒரு நிலைவரின் யாருமே படிக்க வரமாட்டார்கள்.

      இப்படியான ஒரு இக்கட்டில் படிக்கும் எமக்கு உதவ விரிவுரையாளர்களுக்கு விருப்பம். ஆனால் தாம் படிப்பிக்கும் யாழ் பல்கலைக் கழகத்தில் இருந்து ஒரு சிறு உதவியையும் அவர்களால் எமக்குப் பெற்றுத்தர முடியாது. அவ்வாறானதொரு நிர்வாகத்தின் கீழேயே அவர்கள் வேலை செய்தார்கள்.

      தாங்கள் எமக்குப் படிப்பிக்க வாறது தெரிந்தாலே பிரச்சினை கிளம்பும் என அவ்விரிவுரையாளர்கள் சொல்வார்கள். எவ்விதத்திலும் வெளிவாரிப் பட்டப்படிப்பை தொடர்பவர்களுக்கு யாழ் பல்கலைக்கழகம் உதவ விரும்பவில்லை. அதேநேரம் இவர்கள் எல்லாம் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவு செய்யப்படாத மொக்குகள் இவர்களுக்கு ஏன் பட்டப்படிப்பு என்ற இளக்காரப் பார்வை பல்கலைக்கழக மாணவர்களுக்கு இருந்தது.

      ஒரேயொரு நாள் எங்களை இரு விரிவுரையாளர்கள் சேர்ந்து களவாக ஒழித்து ஒழித்து கூட்டிச்சென்று சத்தம் வராமல் மிகமெதுவாக ரகசியம் கதைப்பது போல் கதைத்து இந்தச்சாமான் எதற்குப் பாவிப்பது எப்படிப்பாவிப்பது என்று காட்டினார்கள். எதுவும் பாவிக்க அனுமதி இல்லை. பார்க்க மட்டுமே போனோம். அதற்கே சிறு சிறு பிரிவாக பிரிந்து சேர்ந்து திட்டமிட்டு போனோம்.

      இதே காலகட்டத்தில் கண்டிப்பகுதியில் படித்த மாணவர்கள் என ஞாபகம் தமக்கு பல்கலைக்கழக உதவிகள் கிடைப்பதாகச் சொன்னார்கள்.

      இன்றைக்கு மேலுள்ள கட்டுரையை வாசிக்கையில் தெரிகின்ற அரசியல் சார் விடயங்கள்- போராட்டங்கள்- புரட்சிகள் -நாம் உருவாக்கிய அமைப்புகள் என்ற பெருமைகள்- நாம் தலைமை தாங்கிய நிகழ்வுகள் - என்று என்னவோவெல்லாம் செய்ததாக எழுதுகிறார்களே இவர்கள் எல்லாம் என்னைப் போன்ற உங்கள் சகோதரங்கள்தானே தரப்படுத்தலால் பாதிக்கட்டுள்ளார்கள். இவர்களுக்கு நாம் உதவ வேண்டும் என்ற எண்ணம் ஏன் தோன்றவில்லை. அவர்களுக்காக என்ன போராட்டத்தை முன்னெடுத்தீர்கள்??

      எனக்குத் தெரிய நீங்கள் ஒன்று செய்தீர்கள்!
      தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அரசு அனுமதி கொடுத்தபோது அதை எதிர்த்து யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் ஊர்வலம் போனார்கள்!!

    39. ராஜதுரை on July 9, 2010 3:55 am

      Democracy, உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களுக்கு எனது நன்றிகள்! மிகவும் சுருக்கமான முறையில் உங்கள் கருத்துக்களுக்கு எனது பார்வையிலான (perspective) விளக்கத்தை இத்தால் தருகின்றேன்.

      1.தங்களால் உவமைப்படுத்தப்பட்ட ‘நரமாமிசம் தின்னுதலுக்கு’ ஒப்பானதுதான் இன்றைய யாழ் பல்கலைக்கழகத்திலிருக்கும் தகமையற்றவர்கள் தம் சுயலாபம் கருதிச் சமூகத்தின் பாதையை இருட்டடிப்புச் செய்து விழுமியங்களை மீறி நடாத்துகின்ற ‘கலாச்சாரக் கொள்ளை’. இதனைக் கலாச்சாரக் கொள்ளை என்று சொல்வதிலும் பார்க்கக் ‘கலாச்சாரக் கொலை’ என்றே கூறலாம்.
      2.சமூகக் கலாச்சார வளர்ச்சியின் படிமுறை வளர்ச்சியில் பிறழ்வும் ஒரு பரிணாமந்தான்! அதனை நான் மறுதலிக்கவில்லை! ஆனால், எத்தகையான பிறழ்வுகளுக்கு மத்தியிலும் தத்துவார்த்தமான சிந்தனையாலும், மனிதத்தன்மைக்கு மதிப்பளிப்பதினாலும், தனிமனித/சமூக உரிமைகளைப் பேணலினாலும், ஆக்கபூர்வமான செயற்பாடுகளினாலும் – இவற்றின் விளைவான தொடர் தேடலினடிப்படையில் எழுகின்ற முன்னேற்றத்தினாலும் ஒரு சமூகம் பரிணாம வளர்ச்சியடையாவிட்டால் – அது ஒரு காலத்தில் ‘களியாட்டங்களில்’ மூழ்கி அழிந்து போன உரோமானிய சமூகத்தின் நிலைக்குத்தான் செல்லும்.
      3.‘முன்னேற்றம்’ என்கின்ற நேர்வினைச் செயற்பாட்டுக்கு கட்டாயமாக ‘பிறழ்வு’ என்கின்ற ‘எதிர்வினை’ இருந்தேதான் ஆகும். ஆனால், ஒரு ஆரோக்கியமான சமூகம் பிறழ்வினைக் கட்டுப்படுத்தித் தன்னை முன்னேற்றிக் கொள்வதில் உறுதியாயிருக்கும்.
      4.தற்போதைய யாழ் பல்கலை சமூகம் தனிமனித இலாப நோக்கங்களின் அடிப்படையில் பிறழ்வுகளுக்கும், அதன் விளைவாக ஏற்படுகின்ற ‘நரமாமிசம் தின்னும் செயற்பாடுகளுக்கும்’ இடம் கொடுப்பதனால் மாபெரும் கலாச்சாரக் கொலைக்களமாகவே விளங்குகின்றது (a ‘massive’ cultural slaughterhouse).
      5.Super-ego delusion என்கின்ற உங்கள் கருத்து இற்றைய யாழ் பல்கலைக்கழகத்தில் விடாப்பிடியாக பதவிகளைத் தக்கவைத்துக் கொண்டு தம் குறைபாடுகளை மூடிமறைத்து இலாபம் காணும் கல்வியாளர்கள் என்று சொல்லிக் கொள்கின்றவர்களுக்கு சாலப் பொருந்தும்.
      6.“நான் ஒரு சிரேஷ்ட விரிவுரையாளன்/விரிவுரியாளினி” என்பதனால் எனக்கு எல்லாமே தெரியும் என்கின்ற ‘யாதுமறிந்த சுவாமித்தம்பிகளாக’த் தங்களைக் காட்டிக் கொள்ள முயல்கின்ற இவர்கள் எவ்வாறு சிரேஷ்ட விரிவுரையாளர்களாகப் பதவியுயர்வுகளைப் பெற்றுக் கொண்டார்கள் (?) என்பது ஒருவருக்குமே தெரியாது. மற்றவர்கள் வயிற்றிலடித்தும், தகமையுள்ளவர்களையும் ஆகபூர்வமான சிந்தனையுள்ளவர்களையும் நசுக்கியும், ஒழுக்காற்று விதிகளையும், சட்டங்களையும் பல-பல தடைவைகள் மீறுவதனாலும் இவர்கள் (பின் வழிகளால்) பெற்றுக்கொண்ட பதவியுயர்வுகள் இவர்களுக்கு ஒரு ‘அதி-மானுட’ சக்தியைக் கொடுப்பதாக (super human powers) இவர்கள் கொண்டுள்ள மாயைதான் Super-ego delusion என்று நான் கருதுகின்றேன்.
      7.இந்த Super-ego delusion மூலம் இவர்கள் தமக்குக் கீழுள்ளவர்களைத் தொடர்ந்தும் நசுக்குவதன் மூலம் தனிமனித உரிமைகள், கருத்துச் சுதந்திரம், விஞ்ஞானத் தேடல், தர்க்கம்/விவாதம் போன்ற பல்கலைக்கழகங்களில் பேணப்பட வேண்டிய அடிப்படை குணாதிசயங்களை தொடர்ந்தும் மறுதலித்து ஒரு சிறைச்சாலைக்கோ சித்திரவதைக்கூடத்துக்கோ ஒப்பான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்க எத்தனிக்கின்றார்கள்.
      8 இத்தகைய சிதிலமான நிலையில் உள்ள இப்பல்கலைக்கழகக் கட்டமைப்பு வெளியிலிருந்து பார்ப்போருக்கு nauseousஆனதாகத்தான் (அதாவது ‘disgusting’ அல்லது அருவருப்பாகவிருத்தல்) தென்படும். இந்த nauseous நிலைக்கு இட்டுச் சென்றது Super-ego delusion மூலம் யாழ் பல்கலையையும் இலங்கைத் தமிழ் சமூகத்தையும் பிழையான பாதையில் இட்டுச் சென்ற ‘கல்வியாளர் என்று சொல்லிக் கொள்கின்ற’ சைவ வெள்ளாள மாயைகளில் மூழ்கியவர்களே!

      இப்படிக்கு,
      ராஜதுரை

    40. proffessor on July 9, 2010 8:06 am

      இந்திய இராணுவ காலத்தில் யாழ் பல்கலைகழக மாணவர்களான புலிகளின் இரு ஆதரவாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட பதிவு இதில் சுட்டிக்காட்டப்படவில்லை. இந்தநேரத்தில் கொல்லப்பட்ட இரு மாணவர்களின் பெயர்களும் எனக்கு நினைவுக்கு வரவில்லை. எனினும் ஒருவர் முல்லைதீவு புதுக்குடியிருப்பை சேர்ந்தவர்.

    41. ராஜதுரை on July 9, 2010 11:51 am

      மீண்டுமொருமுறை உங்களனைவருக்கும் வணக்கம்.

      இந்த விவாத மேடைக்கு 9ம் திகதி 12.25க்கு வந்து கிடைத்ததான ரேவதியின் பதில் (அல்லது பதிவு) எந்த வகையில் யாழ் பல்கலைக்கழகத்தினுள் ஆதிக்கம் செலுத்துகின்றவர்களால் யாழ் மாணவர்களுக்கும் ஏனைய வடகிழக்கு மாணவர்களுக்கும் கிடைத்துவந்த (கிடைக்கவிருந்த) ஒரு அரிய பெரும் வாய்ப்பு மறுதலிக்கப்பட்டது என்பதற்குச் சிறந்த உதாரணமாகும்.

      ரேவதியினால் சுட்டிக் காட்டப்பட்டுள்ள விடயங்களின் பின்னணியை அலசுவதற்கு முன்னர் – இந்த விவாதத்தைத் தொடக்கி வைத்த ஜெயபாலனண்ணையால் சுட்டிக் காட்டப்பட்ட ‘கற்பித்தலும் ஆய்வும் இணைந்து பாரபட்சமற்ற உண்மையைத் தேடுவதே பல்கலைக்கழகம்’ என்கின்ற பல்கலைக்கழகத்துக்கான அடிப்படை வரைவிலக்கணத்தைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

      “நாங்கள் கல்வியாளர்கள் எங்களுக்கு மட்டும்தான் அறிவுண்டு”, என்கின்ற super-ego delusion மூலமாக ஒரு மாயவலையை நெய்தெடுத்து; பல்கலைக்கழகத்துள் அனுமதி பெற்றுப் பிரவேசிக்கும் மாணவர்களை அவ்வலையினுள் விழவைத்துச் சீரழிப்பதில் யாழ் பல்கலைக்கழகத்தில் ஊடுருவித் தத்தம் குறைபாடுகளையும் தகமையின்மைகளையும் மறைத்துக் கொண்டு அதிகாரக் கதிரைகளை ‘விடாப் பிடியாகப்’ பிடித்துக் கொண்டிருக்கும் ‘கல்விமான்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்’ மிகுந்த கெட்டிக்காரர்கள்.

      மாணவர்களினைத் திசை திருப்புவதிலும், தரம் குறைவான தம் விரிவுரைகளாலும் கொள்கையற்ற வழிகாட்டுதலாலும் அவர்களது அறிவுத் திறனை மழுங்கடிப்பதிலும் இத்தகையோர் ஆற்றிய பங்களிப்பின் விளைவே – இன்றைய நிலவர பல்கலைக்கழக மானியங்கள் குழுவின் தரப்படுத்தலின் அடிப்படையில், இலங்கைப் பல்கலைக்கழகங்கள் எல்லாவற்றுள்ளும் மிக மிகத்தாழ் நிலையில் யாழ் பல்கலைக்கழகம் பிடித்துக் கொண்ட இடம்.

      ஒப்பீட்டளவில் அண்மைக்காலங்களில் உருவான ஊவா வெல்லசப் பல்கலைக்கழகம் போன்றவை கூட பலபரிமாணங்களில் தம் ஆளுமையை வளர்த்துக் கொண்டு போகும் போது, கடந்த சில தசாப்தங்களாகப் பெரிய கட்டமைப்பு மாற்றமோ, அறிவியல் மாற்றமோ இன்றிப் பழைய பஞ்சாங்கத்தை வாசித்துக் கொண்டிருக்கின்றது யாழ் பல்கலைக்கழகம்.

      இந்தியாவின் பிரசித்தி பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் பார்க்க உயரிய தரப்படுத்துகையை கொழும்புப் பல்கலைக்கழகம் பெற்றிருக்கும் போது, ஏன் பல பல எழுச்சி அமைப்புகள் ஆதிக்கம் செலுத்திய யாழ் பல்கலைக்கழகத்தால் ஒரு அங்குலம் கூட அறிவியல் ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் முன்னேற முடியவில்லை?

      ஏனெனில், தமது குறைபாடுகளை மூடி மறைப்பதிலேயே கருத்தாகவிருக்கின்ற யாழ் பல்கலைக்கழகத்தினரால் தம்மை விடவும் திறமைசாலிகளியும், சிந்தனாவாதிகளையும் உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை! உதாரணமாக, யாழ் பல்கலைக்கழகத்தின் பெளதிகத் துறையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, ஜெர்மனியில் ‘அதி சிறந்த ஆய்வாளர்’ என்கின்ற அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்ட - காலம் சென்ற முருகேசம்பிள்ளையின் அறிவின் ஆழமும் காத்திரமும் பற்றி இன்றும் வட-கிழக்குப் பல்கலைக்கழக வட்டாரங்கள் அரசல் புரசலாகக் கதைத்துக் கொள்கின்றன.

      ‘எம்.ஐ.டி’ என அழைக்கப்படுகின்ற அமெரிக்காவின் Massachusetts Institute of Technologyயில் ஆய்வாளராகக் கடமையாற்றிய முருகேசம்பிள்ளைக்கு யாழ் பல்கலைக்கழகம் வழங்கியதோ அதிதாழ் மட்டத்திலுள்ள தற்காலிக உதவி விரிவுரையாளர் பதவி. முருகேசம்பிள்ளை ஒரு ஆக்கபூர்வமான சிந்தனையாளர், விஞ்ஞான உபதுறைகளின் பிரத்தியேக எல்லைகள் தாண்டியும் பரந்த அறிவுக்கடல் தொடர்பான தேடலினடிப்படையில் தர்க்கரீதியான கேள்விகளை எழுப்பக்கூடிய அறிவாளி. இவருக்கு கலைத்துறை, சமூகவியல், இரசாயனம், வணிகம், கணிதம், மருத்துவம், சமயம், இலக்கியம் என்று பல பல பரிமாணங்களில் ஞானமிருந்தது. “தாம் பாண்டித்தியம் பெற்றுக்கொண்டதாகக் காட்டிக் கொள்கின்ற, தாம் தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவிரும்புகின்ற துறைகளில் கூட இவர் மிகவும் இலகுவாக நுழைந்து அறிவார்த்தமான கேள்விகளை எழுப்புவார் என்கின்ற பயம்” யாழ் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மத்தியிலிருந்தது. உதாரணமாக பெளதிகவியல் பேராசிரியர் கந்தசாமியின் ஆய்வுக்கட்டுரைக்கு முருகேசம்பிள்ளை செய்த விமர்சனம் – இதனை கந்தசாமியாரால் அறிவார்த்தமாக எதிர்த்து நிற்க முடியவில்லை (கந்தசாமி could not defend his paper in terms of scientific evidence/logic). விளைவு – முருகேசம்பிள்ளை என்கின்ற மூளைசாலியும் ஆக்கபூர்வமான ஆராய்ச்சியாளனும் யாழ் மண்ணிலிருந்து ஒரங்கட்டப்பட்டமை! இது யாழ் பல்கலைக்கழகத்தின் so called கல்வியாளர்கள் அறிவார்த்தமான சிந்தனைகளுக்கு எந்தவகையில் இடம்கொடுக்க மறுக்கின்றார்கள் என்பதற்கான சிறந்த உதாரணமாகும்.

      எனவே, ஜெயபாலனண்ணையால் சுட்டிக்காட்டப்பட்டதான “கற்பித்தலும் ஆய்வும் இணைந்து பாரபட்சமற்ற உண்மையையா” இன்று யாழ் பல்கலைக்கழகம் தேடுகின்றது?

      இதனை தனிமனித மற்றும் சமூக அடிப்படை உரிமைகளுள் ஒன்றான அறிவார்த்தமான அபிவிருத்தி (இது ஆக்கபூர்வமான தேடலின் அடிப்படையில் அமைந்த கல்வியைச் சுட்டும்) மறுதலிக்கப்படுவதற்கான மிகச்சிறந்த உதாரணமகவன்றோ கருதலாம். இத்தகைய அறிவார்த்தமான அபிவிருத்தியை தொடர்ந்தும் மறுதலித்தமைதான் இன்று யாழ் பல்கலையானது ‘இலங்கைத் தமிழ் சமூகத்தின் பின்னடைவுக்கான பெரும்காரணி’ என அடையாளம் காணப்படலுக்கு அடிப்படையாகின்றது. ரேவதி போன்றவர்களின் கல்வி வாய்ப்புக்களும் அறிவுத் தேடலும் மறுதலிக்கப்பட்டதும் இதனடிப்படையிலேயேயாகும்.

      கற்பித்தலும் ஆய்வுமிணைந்து பாரபட்சமற்ற உண்மையைத் ‘தேடமுடியாத’ யாழ் பல்கலைக்கழகம் நான் முன்பொருமுறை ஜெயபாலனின் கூற்றுக்கு வலுவூட்டுவதற்காகச் சொன்னது போல் – “ஆசிரியப் பற்றாக்குறையாலும் சீர்குலைந்த முகாமைத்துவத்தாலும் சிதிலமாகிக் கொண்டே போகின்ற கஸ்டப்பிரதேசப் பள்ளிக்கூடமே”!

      இப்படிக்கு,
      ராஜதுரை

    42. Jeyabalan T on July 9, 2010 2:18 pm

      அனைவரது கருத்துக்களுக்கும் நன்றி.

      தாமிர மீனாட்சிக்கு நீங்கள் சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் சந்தேகத்தின் பயனை கணேசலிங்கத்திற்கு வழங்குகிறீர்கள். என்னால் அதனைச் செய்ய முடியவில்லை. சந்தேகத்தின் பயனை அந்தச் சிறுமிக்கே வழங்க முடியும். நீதிமன்ற விசாரணை மட்டும் தான் குற்றவாளியை தீர்க்கமாக முடிவெடுக்கும் என்று சொல்வதற்கு இலங்கையில் சட்டம் ஒழுங்கும் சுயாதீனமாக இல்லை. மேலும் கணேசலிங்கம் இந்த வழக்கில் இருந்து தப்பியதற்கு முக்கிய காரணம் அவர் புலிகளுக்கு வேண்டப்பட்டவராக இருந்ததே. இந்த வழக்கில் புலிகளின் தலையீடு இருந்திருக்காவிடில் உண்மை வெளிப்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் நிறையவே இருந்துள்ளன.

      ._._._._._.

      நட்சத்திரன் செவ்விந்தியன் //கைலாசபதி ஒரு அறியப்பட்ட ஸ்திரி லோலர் (வுமனைஸர்).//

      இவ்வாறான குற்றச்சாட்டுகள் பல்கலைக்கழகத்திலும் பல்கலைக்கழகத்திற்கு வெளியேயும் நிறையவே உள்ளன. மே 18க்கு முன்பாக புலம்பெயர் ஊடகங்கள் பலவற்றில் ஏட்டிக்குப் போட்டியாக இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுகின்றது. யாழ்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளிலும் இந்தக் குற்றசாட்டுகள் உள்ளன. பல்கலைக்கழகத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டி கூட ஒரு அறியப்பட்ட அமைப்பால் வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை. ஒரு மொட்டைச் சுவரொட்டியாகவே உள்ளது. இவ்வாறான கிசு கிசுத் தகவல்கள் ஆரோக்கியமானதல்ல. பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கும் அதன் நிர்வாகத்திற்கும் இது பற்றி விசாரணைகளை நடாத்த வேண்டிய பொறுப்பு உண்டு. இவ்விடயங்களில் பல்கலைக்கழக மாணவர் சமூகம் மொட்டைச் சுவரொட்டிகளை விட்டுவிட்டு அதற்கெதிராகப் போராட முன்வர வேண்டும். இலங்கை அரசபடைகளின் பாலியல் வல்லுறவுக்கு எதிராகக் குரல் எழுப்பத் தயங்காத நாம் எமது அறிவியல் சமூகத்தில் உள்ள பாலியல் துஸ்பிரயோகத்தை அம்பலப்படுத்தத் தயங்குவது ஏன்?

      கிசு கிசுக்களையும் மொட்டைச் சுவரொட்டிகளையும் கொண்டு அந்த அம்பலப்படுத்தலை மேற்கொள்ள முடியாது. அல்லது வுமனைசர் போன்ற முத்திரைகளைக் குத்துவதும் இதற்கான தீர்வல்ல.

      மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் காணப்படுகின்ற பாலியல் துஸ்பிரயோகம் என்பது அங்குள்ள பல்வேறு குறைபாடுகளில் ஓரம்சம் மட்டுமே.
      ._._._._._.

      அனோனிமஸ்//மட்டக்களப்பு வெள்ள நிவாரணத்துக்காக யாழ் குடாவெங்கும் மாணவர்கள் தமது விரிவுரைகளைத் துறந்து நிதியும் உதவிகளையும் சேர்ததிருக்கின்றார்கள்.//
      தங்களைப் பல்கலைக்கழகப் புரட்சியாளர்களாக தம்பட்டம் அடிக்கின்ற சிலர் வெள்ள நிவாரணம் ராக்கிங் எதிர்ப்பு என்ற விடயங்களையெல்லாம் கலாச்சாரப் புரட்சிக்கு அடுத்ததாக றீல் விட்டு பக்கம் பக்கமாக எழுதுகின்றனர்.

      வெள்ள நிவாரணங்கள் பலவற்றுக்கும் இடப்பெயர்வுகள் பலவற்றுக்கும் நான் கல்வி கற்ற ஆரம்பப் பள்ளிக்கூட இடைநிலைப் பள்ளிக்கூட மாணவர்கள் கூடத்தான் தங்கள் கல்வியை விட்டு உதவியுள்ளனர். வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பாடசாலை அனைத்தும் இதில் ஏதோ ஒரு வகையில் ஈடுபட்டுள்ளன. இலங்கை அரசுக்கு எதிரான ஊர்வலங்கள் பல எண்பதுக்களின் நடுப்பகுதியில் வழமையான ஒன்று. கர்த்தால் பகிஸ்கரிப்பு கொடும்பாவி எரிப்பு என்று பாடசாலை மாணவர்கள் பல போராட்டங்களை நடாத்தி உள்ளனர்.

      இதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமோ அல்லது அங்கு படித்த தங்களை புரட்சியாளர்கள் என்று தம்பட்டம் அடிக்கும் பட்டதாரிகளோ உரிமைகோர முடியாது.

      யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சமூகமாற்றத்தை ஏற்படுத்தத் தவறியது என்று கட்டுரையில் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அதன் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் பற்றிய ஒரு மதிப்பீடு. ஒரு குறிப்பிட்ட காலத்தில் நாம் போராடினோம் குரல் எழுப்பினோம் அதனால் பல்கலைக்கழகத்தில் புரட்சி பூத்து குலுங்கியது என்பது கேப்பையில் நெய் வடிந்த கதை தான்.
      ._._._._._.

      யாழ்பாணப் பல்கலைக்கழகம் அது பிரதிபலிக்கின்ற வடக்கு கிழக்கு தமிழ் சமூகத்தின் குறிப்பாக வடக்கு தமிழ் சமூகத்தின் அரசியல் பொருளாதார சமூகக கலாச்சார அம்சங்களின் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்அம்சங்கள் தொடர்பாக அறிவியல் சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதா? யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சர்வதேச பல்கலைக்கழக தர வரிசையில் இலங்கைப் பல்கலைக்கழகத் தர வரிசையில் எங்கு உள்ளது.

      அப்பல்கைலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து இற்றைவரை மேற்கொண்ட ஆய்வுகள் என்ன? அதனால் சமூகம் பெற்ற பலாபலன்கள் என்ன? அடுத்த பத்து ஆண்டுகளில் வடக்கு சமூகத்தின் வேளான்மையில் ஏற்படக் கூடிய மாற்றம் என்ன? ஏன் தமிழ் மக்கள் மத்தியில் தற்கொலை வீதம் அதிகமாக உள்ளது? இவ்வாறான சமூக விடயங்கள் பற்றி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆய்வுகளை மேற்கொண்டதா? தன்னைப் பற்றிய மீளாய்வு ஒன்றைப் பல்கலைக்கழகம் மேற்கொண்டதா?

      இந்த விவாதத்திற்கு ராஜதுரை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி உள்ளார். கட்டுரையில் சேர்க்கப்பட வேண்டிய பல தகவல்களை வழங்கி உள்ளார். மற்றும் தாமிரமீனாட்சி ப்பிரசன்னா அன்புக்குரியவன் புரொபெசர் போன்றவர்களது புதிய தகவல்களுக்கும் நன்றி. மேலும் புதிய தகவல்களுடனும் கருத்துக்களுடனும் இக்கருத்துக் களத்தை சிறப்பிக்கவும் நன்றி.

    43. DEMOCRACY on July 9, 2010 2:37 pm

      /பல்கலையையும் இலங்கைத் தமிழ் சமூகத்தையும் பிழையான பாதையில் இட்டுச் சென்ற ‘கல்வியாளர் என்று சொல்லிக் கொள்கின்ற’ மாயைகளில் மூழ்கியவர்களே!/
      – திரு ராஜதுரை அவர்களே!, நீங்கள் விஷயங்களை தரவுபடுத்துதலில் (டெஃபனிஷன்),சரியான பாதையில்தான் செல்லுகிறீர்கள் நன்றி. “விஞ்ஞான துறைகளில்” பிரழ்வுகள், பெரிதாக நம்மை போன்ற சமூகங்களை பாதிக்காது. ஏனென்றால், பல விஞ்ஞான சோதனை மூலங்கள், நம் சமூகங்களில், ஊற்றெடுக்கவில்லை, தவறிழைத்தால், “மூலங்களிலிருந்து அங்கீகாரம் கிடைக்காது. நாம் சரியாக “காப்பி” அடிக்காவிட்டால், வேலைவாய்ப்புகள் பறிபோகும், சமூக சீரழிவுகள் ஏற்படாது!.

      நாம் வாழும் சமூகத்திற்குள்ளேயே பல்கலைகழகம் இருந்தால், நாம் ஏற்ப்படுத்தும் “தரவுகள் (டெஃபனிஷன்)” நம் சமூகத்தின் தரவுகள்!. அரசியலோ, கலாச்சாரமோ, “அதன் போக்குகள் மீது” கல்வியாளர்கள் என்ற தெளிந்த சிந்தனைகள் அடிப்படையில், நமக்கு “ஆழ்ந்த தன்னம்பிக்கை” ஏற்ப்படும்!, நாம் திருத்திக்கொள்ள மாட்டோம்- நம்பிக்கையீனமும், பயமும் இருந்தால்தான் திருத்திக்கொள்வோம்.

      இத்தகைய நம்பிக்கை நடைமுறையில் தோல்வியடைந்தால் அது ஒரு “மாயை”.ஆனால் ஒட்டு மொத்த சமூகமும் (குண்டுசட்டி) அந்த நம்பிக்கையை இழக்காமல், பிடிவாதமாக அதே பாதையில் செல்வார்களென்றால், அதுதான் “SUPER-EGO DELUSION” என்று நினைக்கிறேன்.அந்த நம்பிக்கை மீண்டும், மீண்டும் தோல்வியை தழுவும் போது, அது ஒரு விரக்தி நிலைக்கு இட்டுச் செல்லும் அதுதான் “NAUSEA” என்று கருதுகிறேன்!.

    44. கந்தையா on July 9, 2010 4:30 pm

      மட்டக்களப்பு வெள்ள நிவாரணத்துக்காக யாழ் குடாவெங்கும் மாணவர்கள் தமது விரிவுரைகளைத் துறந்து நிதியும் உதவிகளையும் சேர்த்திருக்கின்றார்கள்.//

      ஏன் இதோடை நிப்பாட்டிப் போட்டீங்கள். சேர்த்த உடுப்புக்கள் புலி தான்தான் குடுப்பன் என்று தடுக்க அவை அங்கேயே கிடந்து கறையான் பிடித்ததையும் சேர்த்துச் சொல்லியிருக்கலாமே.

    45. அன்புக்குரியன் on July 9, 2010 7:28 pm

      நான் ஜீவன் கூல் அளவு திறமையுடன் இருந்தால் பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகி தமிழனுக்கு அங்கு நிகழும் அவலங்களை குறைக்க முயலுவேன்

    46. Nadchathiran chevinthian. on July 10, 2010 8:44 am

      இன்னமும் பாலியல் குற்றச்சாட்டுக்களை திறந்தமனத்துடனும் துணிவுடனும் வைப்பதற்கு மூடுண்ட யாழ்ப்பாண சமூகமும் நீங்களும் தயாரில்லை ஜெயபாலன். கட்டுரையில் நீங்கள் பின்வருபாறு குறிப்பிடுகிறீர்கள் “இதற்கு மற்றுமொரு காரணம் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பேராசிரியர் வித்தியானந்தனின் சில நடவடிக்கைகள்.”
      ஜெயபாலன் கைலாசபதியை நான் ஒரு வுமனைஸர் என்று குறிப்பிட்டதை வெறும் கிசுகிசுத்தகவல் என்று நீங்கள் ஒதுக்கமுடியுமாயின் உங்களுடைய போதைவஸ்து தகவலையும் கிசு கிசு என்று ஒதுக்கமுடியும். வாய்மொழிக் கதைமூலமாகத்தான் போதைவஸ்துப்பாவனை பொம்பிளைக்களவு போன்ற தகவல்கள் சமூகத்துக்குக் கிடைக்கின்றன.

      விமர்சன ரீதியாக தெளிவாகத் சிந்திக்கத்தெரிந்த யாழ் பல்கககழகம் சம்பந்தப்பட்ட ஒரு ஐம்பது பேரை நீங்கள் கைலாசபதி பெண்விவகாரத்தை பற்றி விசாரணை செய்து அதனுடைய உண்மைத்தன்மையை நீங்கள் சரிபார்க்கலாம். நீங்கள் எத்தகைய வழியில் வித்தியானந்தன் போதைவஸ்துப் பழக்கத்துக்கு அடிமையானவர் என்ற தகவலைப்பெற்றீர்களோ அதேவழியில்தான் நான் கைலாசபதி ஒரு வுமனைசர் என்ற தகவலைப்பெற்றேன். கைலாசபதி ஒரு தனிப்பட்டவர் என்றால் நான் இதனை வெளிக்கொணர்ந்திருக்க மாட்டேன். அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண்களோடு பாலியல் தொடர்பிலிருப்பது மிகப்பாரதுரமான கிரிமினல் செயற்பாடு.

      இப்போது பல்கலைக்கழகத்தில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரெட்டியை மொட்டைக்கடிதம் என்று ஒதுக்குவது சரியானதாகப் படவில்லை. ஆஸ்திரேலியாவிலுள்ள யாழ் பல்கரைக்கழக மாணவா;கள் விரிவுரையாளர் இளங்குமரனின் பாலியல் துஸ்பிரயோகங்களை என்னிடம் உறுதிப்படுத்திறுள்ளனர்.

      -நட்சத்திரன் செவ்விந்தியன்.

    47. ராஜதுரை on July 11, 2010 4:36 am

      அனைவருக்கும் வணக்கம்,

      முதன்மையாக நேற்று எனது வாதத்தைத் தொடர்ந்து ஜெயபாலனாரால் எழுப்பப்பட்ட நியாயமான கேள்விகளின் மையக்கருப்பொருளை இன்னுமொருமுறை ஞாபகமூட்டிக் கொள்வோம். அதாவது, “யாழ் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு 36 வருடங்களான போதிலும், அது தான் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சமூகம் மற்றும் பிரதேசம் தொடர்பாக எந்தவிதமான காத்திரமான பங்களிப்பையும் வளங்கவில்லை” என்பதே இந்த வாதமேடையில் இற்றைவரை அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம். இதற்கு, ஜெயபாலனும் அதன்பின் கருத்துக்களை சமர்ப்பித்தவர்களும், யாழ் பல்கலையானது ஒரு பல்கலைக்கழகம் என்கின்ற அடிப்படை வரைவிலக்கணத்திலிருந்து பல்வேறு பரிமாணங்களில் விலகிப் பிறழ்ந்து நிற்கின்றது என்கின்ற ஆதாரங்களை முன்வைத்துள்ளனர்.

      அத்துடன் DEMOCRACY சுட்டிக் காட்டியபடி யாழ் பல்கலைக்கழகத்தினரின் பல்வேறு குறைபாடுகளின் சுட்டியாக விளங்கும் super-ego delusionஆனது nauseous (அதாவது அருவருக்கத்தக்க) நிலைக்கு இட்டுச் சென்றும் இருக்கின்றது. இந் நிலையின் அடுத்த பரிமாணம் நிச்சயமாக ஒரு தரக்குறைவான மற்றைய பல்கலைக்கழகச் சமூகங்களினால் ஏற்றுக் கொள்ளவே படாத சிதைவு நிலைக்கே இட்டுச் செல்லும் என்பதுவும் திண்ணம். இதற்கான அறிகுறிகள் (symptoms) யாழ் பல்கலைக்கழகம் என்கின்ற தொகுதியில் (system), வெளிப்படையாகவே தென்படத் தொடங்கி விட்டன. சிதைவு நிலைக்கு இட்டுச் செல்லும் காரணிகள் என்பன DEMOCRACY இனது வாதப்படி, முன்னேற்றம் என்கின்ர நேர்வினையின் தவிர்க்கமுடியாத எதிர்வினைகள்தான். ஏற்றுக்கொள்கின்றேன்.

      ஆனால், சமநிலையில் உள்ள ஒரு ஆரோக்கியமான நிறுவனத்தில் - ஒப்பீட்டளவில் சிதைவுக்கான எதிர் வினைகளின் அளவிலும் அதிகமாகவே முன்னேற்றத்துக்கான நேர்வினைப் பொறிமுறைகள் காணப்பட வேண்டும். இந்த வகையில், மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ள யாழ் பல்கலையில் ‘எதிர்வினைகளின்’ மேலாதிக்கமே மிகுந்திருக்கின்றது. இது ஏன் ஏற்பட்டது? இதற்கான பொறிமுறைகள் பின்வரும் படிமுறைகளில் விளக்கப்படலாம்:
      1.யாழ்ப்பணக் கல்லூரியின் இளமானிப்பட்டத்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் உள்வாங்கப் பட்டதன் மூலம் கொள்கையற்ற, மேம்போக்கான, ‘ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தையோ எதிர்கால வளர்ச்சிப் போக்கினையோ’ பற்றிய அடிப்படைத் திட்டமிடலின்றித் தொடங்கி வைக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் தோற்றப்பாடு.
      2.சமூகத்தின் தேவைகள் என்ன? என்பதனைப் பற்றிய ஒருவிதமான பிரக்ஞையுமற்ற கல்விப் பாடத்திட்டத்தின் உருவாக்கம். இந்தச் செயற்பாட்டில் கல்விமான்கள் என்று சொல்லிக்கொண்டு ‘முருகேசம்பிள்ளை போன்றோரை ஓரங்கட்டிய’ நிர்வாகிகளின் ஏதேச்சையதிகாரமான போக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
      3.இவ்வளவுமிருக்க, யாழ் பல்கலையின் இலச்சினையில் உள்ள வாசகம் ‘மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்றுரைக்கின்றது. ‘மெய்ப்பொருள்’ என்றால் என்ன? அதனைக் காண்பதற்குக் கல்வியாளர்களாகிய தாங்கள் எந்தவிதத்தில் தம்மைப் பண்படுத்திக்கொள்ள வேண்டும் என்கின்ற சிந்தனையேதுமின்றி, தமது ஆசிரியர்கள் தமக்குரைத்த விரிவுரைக் குறிப்புகளை மீண்டும் மீண்டும் பிரதியெடுத்து வாசிக்கின்ற ‘சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகளாகவே’ யாழ் பல்கலையின் ஆசிரியர்கள் அநேகம்பேருள்ளனர்.
      4.ஒரு பல்கலைக்கழகம் என்கின்ற நிறுவனத்தின் அடிப்படைச் செயற்பாடான “பக்கச்சார்பற்ற அறிவின் தேடலுக்கும் கோர்ப்புக்கும் சேமிப்புக்கும் ஒரு தோதான ஊடகமாக விளங்குதல் (functioning as a gatherer, accumulator, and at the same - time a ‘repository’ of true knowledge) ” என்கின்ற இன்றியமையாத நடவடிக்கை பற்றிச் சற்றேனும் சிந்திக்காத ‘முருகேசம்பிள்ளை போன்றோரை ஓரங்கட்டிய’ நிர்வாகிகளினரால் பிழையான திசையில் வழிகாட்டப்பட்ட ‘அடுத்த சந்ததியினர்’ (next generation) மேலும் இந்தப் பல்கலைக்கழகத்தின் அசமநிலைக்கு வழிவகுத்தனர்.
      5.இந்த இரண்டாம் பரம்பரையின் (second generation) வழித்தோன்றல்களாக, ‘தம் குறைபாடுகளை மூடி மறைத்து’ ஆக்கபூர்வமான சிந்தனையுள்ளோரை நசித்து தத்தம் பதவிகளைப் பெற்றுக் கொண்ட தற்போது ஆட்சி செலுத்துகின்ற மூன்றாவது பரம்பரை (third generation) யாழ் பல்கலைக்கழகத்தின் இறுதி அஸ்தமனத்துக்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருக்கின்றது.
      6.இந்த third generation நபர்களானவர்கள், அறிவின் ஆழம் என்ன (?) என்பதனைப் பற்றிச் சற்றேனும் உணரமுடியாத நுனிப்புல் மேய்பவர்களாகவோ அல்லது ‘நுனிப்புல் பற்றிக்கூடத்தானுமே அறியாதவர்களாகவோ’ காணப்படுகின்றார்கள்.
      7.ஆக மொத்தத்தில் – அறிவார்த்தமான சிந்தனையற்ற, கொள்கையற்ற, மொழியாற்றலற்ற (இவர்களுக்குத் தம்தாய்மொழியாம் தமிழில் கூட நான்கு வரிகள் தொடர்ச்சியாக எழுதத் தெரியாது), ஆக்கபூர்வமான கருத்துக்களை எந்தவொரு ஊடகமூலாகவோ சொல்லக்கூடிய அடிப்படைத்தகுதியற்ற, விடய ஞானமற்ற – பதவிகளை மட்டுமே தக்கவைத்துக் கொண்டிருக்கின்ற ‘உற்பத்தியாளர்களான’ விரிவுரையாளர்களாலும் பேராசிரியர்களாலும் உருவாக்கப்படுகின்ற ‘உற்பத்திகளான’ யாழ் பல்கலைக்கழக பட்டதாரிகள்; ஜெயபாலன் சொன்னது போல பாடசாலை மாணவர்கள் கூட பெற்றிருக்கின்ற விழிப்புணர்வோ, சமூகப் பிரக்ஞையோ அற்றவர்களாகத்தான் காணப்படுகின்றார்கள். இந்த வகையில் எந்தவொரு நியாயமான மனிதனும் அடிப்படையில் எதுவித தயக்கமுமின்றிச் செய்கின்ற வெள்ளநிவாரணப்பணி போன்றவற்றில் ஈடுபட்டதைக்கூடப் பீற்றிக் கொண்டு விளம்பரம் தேடும் யாழ் பல்கலையினரின் எண்ணப்போக்குகளின் இழிநிலை விளக்கப்படுகின்றது.
      8.ஒரு பல்கலைக்கழகம் அரசியல் ரீதியான செயற்பாடுகளால் சமூக மாற்றத்தைத் தூண்டக் கூடாது. அது அப்படியாகச் செயற்படின் ‘பல்கலைக்கழகம்’ என்கின்ற அடிப்படை வரைவிலக்கணத்திலிருந்து பிறழ்ந்ததாகவே கருதப்படும். உண்மையில் ஒரு நல்ல பல்கலைக்கழகம் - தனது அறிவார்த்தமான தேடலினாலும், ஆராய்ச்சியினாலும், அதன் வழி வந்த சமூகத் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியதான கற்பித்தலாலும்தான் தனது சமூகப் பணியை ஆற்ற வேண்டும். இந்த வகையில், பல பல எழுச்சிக் காரணிகளின் தாக்கத்தால் ‘பீறிட்டெழுந்ததாகக்’ கூறிக்கொள்கின்ற யாழ் பல்கலைக்கழகம் என்னதான் செய்து கொண்டிருக்கின்றது? பதவிகள் மேலுள்ள மோகத்தால், எல்லாவற்றுக்கும் அரசியற் சாயம் பூச எத்தனிக்கின்ற ‘கல்விமான்கள் எனக் கூறிக்கொள்ளும் நிர்வாகிகளுக்கு’ யாழ் மாவட்டத்தில் ஏன் நெற் சாகுபடி குறைந்தே போகின்றது (?) என்பதிலோ, பனை வளத்தை எப்படி மேலும் மெருகூட்டலாம் (?) என்பதிலோ கவனிமிருக்குமா? அப்படியொரு சிந்தனை அவர்களுக்கிருக்காது தானே?
      9.எனவே, சமுகத்தின் உயிரோட்டமான தேவைகளை உணர்ந்து அதற்குத் தோதான ஆராய்ச்சியாலும், விடயத்தேடலாலும், அதற்கு அவசியமான மனித வளத்தை மேம்படுத்துவதிலும், கருத்துச் சுதந்திரம் மற்றும் ஆக்கபூர்வமான சிந்தனைகளுக்கு இடம் கொடுத்தலிலும் – கவனம் செலுத்தாதலினாலும்; தம் எழுந்தமானமான ஏதேச்சைப் போக்குகளாலும் யாழ் பல்கலைக்கழகத்தின் தற்போதைய ‘third generation கல்விமான்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்’ இலங்கையிலேயே மிகவும் தரக்குறைவான கல்விநிறுவனத்தினைக் மேலும் சிதைப்பதில் மும்முரமாகவிருக்கிறார்கள் என்பது வெளிப்படை.
      10.இங்கு நபிகள் நாயகம் அவர்களின் “உங்களிடமுள்ள ஒட்டகங்கள் அனைத்தையும் விற்றாவது – அறிவினையும், அதனை உங்களுக்கு வழங்கக்கூடிய கல்விமான்களையும் சம்பாதித்துக் கொள்ளுங்கள்” என்கின்ற கூற்றினை நாம் உள்வாங்குதலவசியம். இஸ்லாமிய நாகரிகத்தின் பாரிய வளர்ச்சிக்குக்கு அடிப்படையானது இந்தக் கூற்று. இதனடிப்படையில் ஒப்பீட்டளவில் மிக-மிக அண்மையில் ஸ்தாபிக்கப்பட்டதானதும் – “ஒரு இஸ்லாமியப் பல்கலைக்கழகம்” என்று தன்னை அடையாளம் காட்டிக் கொள்கின்றதுமான ஒலுவிலில் அமைந்துள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்கான தந்திரோபாயங்களை மீளாய்வு செய்தல் உகந்தது. கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்தும், யாழிலிருந்தும் அநியாயமாக ஓரங்கட்டப்பட்ட திறமைசாலிகளை உள்வாங்கி, அவர்களுக்கு மேலும் வாய்ப்புக்களை வழங்கி – அதன் மூலம் தனது மனித வளத்தைப் பேணித் தன் வளர்ச்சிக்கு வழிவகுத்துக் கொள்ளும் தெ.கி.பல்கலையிடமிருந்து யாழ் பல்கலை நிர்வாகிகள் ‘மனித வள முகாமைத்துவம்’ பற்றிப் பாடம் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
      11.யாழ் பல்கலைக்கழகத்தினர் தம்மை நோக்கி வருகின்ற புத்திஜீவிகளை ஓரம்கட்டுவதிலும், ஊரைவிட்டேயே துரத்திவிடுவதிலுமன்றோ கருத்தாகவிருக்கிறார்கள்? நான் 9ம் திகதியன்று சொன்னது போல ‘முருகேசம்பிள்ளைக்கு நடந்த அநியாயம்’ ஓரங்கட்டலின் ஒரு பரிமாணம் மட்டுமேதான். ஆனால், யாழ் பல்கலையின் வவுனியா வளாகத்திலுள்ள so called கல்விமான்களான நிர்வாகிகளால் எடுத்தாழப்படுகின்ற யுக்திகள் திறமையுள்ளவர்களை ஓரங்கட்டலிலும், அவர்களது நியாமான உரிமகளைத் தட்டிப் பறிப்பதிலும், சமூகத்தின்பால் அகக்றையற்றிருப்பதிலும், அதன் வழியாக நிறுவனத்தின் தொடர்ச்சியான சீர்குலைவுக்கு வழிவகுப்பதிலும் – மிகவும் வலிதாகக் காணப்படுகின்றன. பிற பல்கலைகழகங்களிலிருந்து வவுனியாவிற்கு ஆய்வு செய்வதற்காகவும், தொழில்சார் இணைப்புக்களை (professional affliations and links) ஏற்படுத்துவதற்காகவும் வருகின்ற ஆய்வாளர்களை விரட்டிவிடுவதிலிருந்து, தத்தமது குடும்ப அரசியல் செயற்பாடுகளால் நியமனங்கள் வழங்குவது வரை இவர்கள் செய்கின்ற ஊழல்கள் ஏராளம். இலங்கை அரசாங்கத்தின் சம்பளம் பெறுகின்ற ஒருவர் வேறொரு உபாயம் மூலமாகவும் இன்னொரு சம்பளம் பெறமுடியாது என்கின்ற சட்டத்தைத் தூக்கியெறிந்துவிட்டு – மிகவும் இலாபம் தருகின்ற தமது பிரத்தியேக வியாபாரங்களையும் அலுவலக நேரத்திலேயே கொண்டு நடத்துகின்ற இவர்களுக்கு ‘மெய்ப்பொருள் காண்பது தொடர்பாக” ஆய்வு செய்ய எபோதாவது எண்ணம் வருமா? தத்தமது வங்கிக் கணக்குகளின் நிலுவை (bank balances) தொடர்பாக மட்டுமன்றோ இவர்கள் இடைவிடாது சிந்திப்பார்கள்?!?
      12.“ஸ்கொலர்ஷிப்பில் வெளிநாடு போனால் எவன் தான் இந்தப் புழுதி பறக்கின்ற ஊருக்கு திரும்பி வருவான்? அவங்கள் தங்கட முன்னேற்றத்தையெல்லோ பார்ப்பினம்? அவையள் வெளிநாட்டிலதான் செட்டிலாகிருவினம்!” என்று சொல்லிக்கொண்டு – பல்கலைக்கழகம் வழங்குகின்ற ஆரய்ச்சிக்கான புலமைப்பரிசில் வசதிகளை தமது வெளிநாட்டுப் பயணத்துக்கும், பிறநாட்டுக் குடியுரிமை பெறுவதற்குமாகப் பாவித்துக் கொள்கின்ற மனிதர்களால் நிறைந்திருக்கின்ற யாழ் பல்கலைக்கழகமும் அதன் வழி வந்த கிழக்குப் பல்கலைக்கழகமும் ஒரு நாளுமே தத்தமக்குத் தேவையான மனிதவளத்தைக் கட்டியெழுப்ப எத்தனிக்காது. அப்படி எத்தனிப்பதற்கான அடிப்படை விழுமியங்களும் கூட இப்பல்கலைகளில் இல்லை!
      13.1980களில் ஆரம்பிக்கப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழகமானது யாழ் பல்கலையில்லிருந்து பெறப்பட்ட மனிதவளத்தைக் கொண்டுதான் நிரப்பப்பட்டது. அந்தக்காலத்தில் ஐக்கிய இராச்சியத்தின் சசெக்ஸ் பல்கலைக்கழகத்துடன் கி.பல்கலைக்கு ஒரு இணைப்பு இருந்தது (an academic link with the University of Sussex in the United Kingdom). இந்த இணைப்பின் வழியாக பலர் இங்கிலாந்து சென்று தம் கலாநிதிப்பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். இப்படியாகச் சென்றவர்களில் ஒரு 15% கூடத் திரும்பிக் கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு வரவில்லை. இன்று சசெக்ஸ் பல்கலைக்கழக இணைப்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது. ஆக மொத்ததில் – இப்படியான வசதிகளை யாழ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் the so called கல்விமான்கள் தாம் வெளிநாடுகளில் குடியேறுவதற்கான வாய்ப்புகளாக மட்டுமே பார்க்கின்றார்கள் என்பதுவும் வெளிப்படை. இதற்காக ஏன் பல்கலைக்கழகமென்ற போர்வை தேவை? வெறுமனே ‘வெளிநாட்டு குடியேற்ற முகவர் நிறுவனங்கள்’ (immigration counselors and agents) என்ற பெயரில் யாழிலும் கிழக்கிலும் இந்த நிறுவனங்கள் நிறுவப்பட்டிருக்கலாம் தானே?
      14.மேற்படி கருத்துக்களுள் இன்னொரு விடயத்தையும் உள்வாங்கல் அவசியம். ஒவ்வொரு நிறுவனமும் தான் எந்த சமூகத்தையோ, பிரதேசத்தையோ பிரதிபலிக்கின்றதோ அந்த இடத்தின் பிரத்தியேகமான தேவையொன்றினை நிவர்த்தி செய்யும் இடநிரப்பியாக (niche taker and filler) இருத்தலவசியம். அந்தவகையில் யாழ் பல்கலைக்கழகம் வட-கிழக்கு தமிழ் சமுதாயத்துக்கான முன்னோடிக் கல்விநிறுவனமாகத் தன்னால் நிரப்பட்டிருக்க வேண்டியதான niche இனை தக்கவைத்துக்கொண்டிருக்கின்றதா என்றால் – “இல்லவே இல்லை” என்ற பதில்தான் ஏகமனதாக எல்லோரிடமிருந்தும் கிடைக்கும்.
      15.“ஏன் யாழ் பல்கலை தனக்குரியதான nicheஇனைத் தக்க வைத்துக் கொள்ளவில்லை (?)” என்கின்றதற்கான காரணத்தை விளக்குவதற்காக நான் இத்தால் ஒரு சிறு உதாரணத்தை முன்வைக்கின்றேன். 2007/8 காலப்பகுதிகளில் யாழ் பல்கலையின் பிரயோக விஞ்ஞான பீடாதிபதியாக இருந்த ஜே.சி.என்.இராசேந்திரா என்பவர் “பல்கலைக்கழக மாணவர்களால் ஆராய்ச்சி செய்ய முடியாது! ஆராய்ச்சி என்பது முதுமானிப்பட்டமோ கலாநிதிப் பட்டமோ பெற்றுக் கொண்டுள்ள சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மட்டுமே செய்யக்கூடிய காரியம்!” என்றுரைத்த கூற்றைக் கவனிக்கவும். “மெய்ப்பொருள் காண்பது அறிவு”. தேடலுள்ள எந்தவொருவனாலுமே மெய்ப்பொருளை நோக்கிப் போக முடியும். பல்கலைக்கழகக் கல்வி பெறாத கணித மேதை இராமானுஜத்தினால் எழுப்பப்பட்ட கணிதப்புதிர்கள் உலகப் பேரறிஞர்களால் இன்னமும் விடுவிக்கப்படாமல் இருக்கின்ற நிலையில்; இராசேந்திராவின் கருத்து – அவர் ‘மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்கின்ற அடிப்படையில் இயங்கவேண்டிய ஒரு நிறுவனத்தின் பீடாதிபதியாகவோ; ஏன், ஒரு கடைநிலை ஊழியனாகவோ கடமையாற்ற தகுதியேதும் இல்லாதவர்தான் என்பதனையன்றோ வெளிக்காட்டுகின்றது?
      16.“மேலும் – இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்துள்ள ஜெயபாலன் செய்துள்ள அளவிற்கு யாழ் பல்கலையின் சமூக/ பொருளாதார/ அரசியல்/ கலாச்சார/ விழுமிய ஆளுமைகளைப் பற்றி மீளாய்வு செய்வதற்கு யாழ் பல்கலையின் அரசியல்துறை/ பொருளாதாரத்துறைப் பேராசிரியர்கள் ஏதாவது முயற்சிகள் செய்திருக்கின்றார்களா?” என்கின்ற கேள்வியையும் இத்தால் முன்வைக்க வேண்டும். தான் பல்கலைக்கழகக் கல்வியைப் பெறவில்லை என்பதனை ஒருவித தயக்கமுமின்றி ஒத்துக்கொள்கின்ற ஜெயபாலனுக்கும்; அரசியல்துறையில் பி.எச்.டி பட்டம் பெற்ற பேராசிரியர்களுக்குமுள்ள ஏற்றத்தாழ்வு இத்தால் வெளிப்படை. இங்கு நான் ஜெயபாலனைப் புகழ வரவில்லை! அப்படியான எண்ணமும் எனக்கில்லை, தேவைப்பட்டால் அவரைக்கூட விமர்சிப்பேன்! ஆனால், சாதாரணப் பாமரர்களாகிய எங்களுக்கு உள்ள அடிப்படையான விடயத் தேடலும், சமூகப் பிரக்ஞையும் கூட கல்விகேள்விகளில் பாண்டித்தியம் பெற்ற யாழ் பல்கலையின் பேராசிரியர் குழாத்துக்கு இல்லை (!) என்கின்ற கவலைக்கிடமான நிலையை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

      எனவே, ஜெயபாலனால் முன்வைக்கப்பட்ட வாதத்துக்கு மேலும் வலுவூட்டுவதாகவே இந்த விவாதமேடையின் போக்கிருக்கின்றது என்பதனை மீண்டும் வலியுறுத்துவதுடன், “யாழ் பல்கலையானது தான் பிரதிநிதித்துவப்படுத்துகின்றதான சமூகத்தின் நிகர குறைபாடுகளையும், பலவீனங்களையும் மட்டுமே பிரதிபலிப்பதினாலும்; சமூகத்திலுள்ள முன்னேற்றத்துக்கான ‘பலங்களையும்’ சாதகமான காரணிகளையும் அடையாளம் கண்டு அதனைத் தனது செயற்பாடுகளில் உள்வாங்கத் தவறியதாலும் – இலங்கைத் தமிழ் சமூகத்தின் வழிமுறையான சிதைவுக்கு வழிசமைக்கின்றது” என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

      இப்படிக்கு,
      ராஜதுரை

    48. chandran.raja on July 11, 2010 11:07 am

      பல்கலைக்கழகம் என்றுமே! பல்கலைக்கழகம் தான். அது ஒரு போதும் பள்ளியாவதில்லை. பள்ளியில்லிருந்து வந்தவர்கள் ஆயுதமுனையில் பல்கலைக்கழகத்தை கட்டுப்படுத்தும்போது அது பள்ளியின் தரத்திற்கு கீழ் இறங்கியதில் வியப்பேதும் இல்லை. மாணவ மாணவிகள் போராட்டத்தை ஆயுததாரிகள் குலைப்பு நடவடிக்கையில் ஈடுபடும் போது போராசியர்கள் தான் என்னசெய்ய முடியும்?அதற்கு பல்கலைக்கழகம் தான் பொறுப்பேற்க முடியுமா?.

      பல்கலைக்கழகத்திற்கு ஈடையூறு ஏற்படும் போது அரசு தலையிட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டவந்திருக்க வேண்டும். அரசு கையறாநிலையில் இருக்கும் போது வெளியே இருந்த கல்விமான்கள்-மக்கள் தலையிட்டு தீர்ப்பதற்கு முயற்சித்திருக்க வேண்டும். இந்த அற்பசொற்ப முயற்சிகள்கூட ஆயுதமுனைக்கு முன் செயல் இழந்து போயின. இங்கு தான் பழைமைவாதம் குடிகொண்டுள்ளது.

      போராசியர் கைலாசபதி முற்போக்கு இலக்கியத்தில்-ஆய்வுகளில் இலங்கையில் மட்டுமல்ல தமிழகத்திலும் பரவலாக பேசப்படுபவர். குடி பாலியல் காரணங்களை வைத்து ஒரு போராசியர்களை மதிப்பீடு செய்வது நல்லமதிப்பீடாக இருக்கமுடியாது என்பதே! என்கருத்து.
      இலங்கையை பொறுத்தவரை வீடுவேலைக்கு வேலைக்காரர் ஒன்றுக்குமே வசதி இல்லாதா கும்பத்தில் இருந்தே வருகிறார்கள். பெரும் பகுதி மலையகத்தில் இருந்து ஒரு தொகை பணத்துடன் கொத்தடிமை முறைப்படி பண்டப்பொருளாகக் கொண்டுவருபவர்களே!. நாளாந்த இவர்களின் உழைப்பு பதினெட்டு மணத்தியாலத்திற்கு மேற்பட்டது. பொறுப்பான “யாழ்பாணத்தாய்”நித்திரை எழமுன்பு எழவேண்டும். தாய் தூங்கிய பின்பு தூங்கவேண்டும். வேலைகளில் குறைகண்டாலோ எஜமான் ஐயா- அம்மாவுக்கு “மூட்” பிழைத்தாலோ கம்பிச்சூடும் பட்டினியும் போடப்படுவதுண்டு. இவர்களை கொண்டுவரும் தரகரோ தகப்பனே இவர்களின் கற்புக்கு எந்த உத்தரவாதத்தையும் எழுதிவாங்குவதில்லை. அது எஜமான்-எஜமானின் சொத்து (பண்டம்)ஆகிறது. இதுவே போராசிரியர் தங்கராசா கணேசலிங்கம் வீட்டிலும் நடந்தாக நினைக்கிறேன்.!!??. இந்த போராசியர் “பொங்குதமிழ்” நடத்தி பல்கழக்கழகத்தை பெருமையே கெடுத்து விட்டார். சிலவேளை உயிர் அச்சுறத்தல் காரணமாக ஏற்பட்டிருக்கவும் வாய்புண்டு. பல்கலைக்கழகத்திற்கு மிருகங்களால் ஏற்பட்டிருந்த அச்சுறுத்தல் மேமாதம் பத்தென்பதாம் திகதி 2009 ஆண்டுடன் முடிவந்து விட்டது.

      தங்கள் கருத்துக்களை முன்வைப்பவர்கள் கடந்த 20-30 ஆண்டு காலப்பகுதியை கணக்கெடுக்காமல் ஆய்வைச் செய்வீர்களேயானல் அது ஒரு ஆய்வாக ஒருபோதும் இருக்கப்போவதில்லை. வரப்போகும் வருடங்களில் அதற்குரிய பொலிவை எதிர்பார்கலாம்.அது பழைமைவாததெதிரான போராட்டத்தில் நிச்சியம் தன் பங்களிப்பை வழங்கும். பல்கலைகழகத்தை அதன் சுகந்திரப்பாதையில் போகவிடுங்கள். அதில் குறை கண்டுபிடிக்க யாருக்கும் தகுதியிருப்பதாக நான் கருதவில்லை. அதற்குரிய இலக்கை அது எட்டியே! தீரூம்.

    49. Jeyabalan T on July 11, 2010 10:28 pm

      கருத்தாளர்கள் அனைவருக்கும் நன்றி.

      நட்சத்திரன் செவ்விந்தியன்//இன்னமும் பாலியல் குற்றச்சாட்டுக்களை திறந்தமனத்துடனும் துணிவுடனும் வைப்பதற்கு மூடுண்ட யாழ்ப்பாண சமூகமும் நீங்களும் தயாரில்லை ஜெயபாலன்.//
      குற்றச்சாட்டுக்களை திறந்த மனதுடனும் துணிவுடனும் வைப்பதில் நான் என்றும் பின்னிற்பதில்லை. என்மீதும் நான் சார்ந்த ஊடகங்கள் மீதுமுள்ள முக்கிய குற்றச்சாட்டே நாங்கள் குற்றங்களை மட்டுமே கண்டுபிடிக்கின்றோம் என்பதே. நட்நத்திரன் எமது சமூகத்தில் பாலியல் குற்றச்சாட்டுக்கள் சகட்டுமேனிக்கு வைக்கப்படுகின்றன.

      நட்சத்திரன் மூடிய சமூகத்தை திறந்த சமூகமாக்க நீங்கள் முயற்சிக்க வேண்டுமே ஒழிய. அந்த சமூகம் மேலும் தங்களை இறுக்கமாக்கிக் கொள்ளும் வகையில் நாம் செயற்படக்கூடாது.

      பாலியல் மிகவும் உணர்ச்சிகரமான விடயமாக இருப்பதால் இதனை பலரும் கையாள முற்படுகின்றனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பாலியல் துஸ்பிரயொகத்தை ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட துஸ்பிரயோகமாகப் பார்ப்பதே பொருத்தமானது என நினைக்கின்றேன். அதற்குமேல் நபர்கள் சார்ந்து அதனை எழுதுவதானல் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலத்துடனேயொ அல்லது சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையிலேயோ தான் வெளிக்கொண்டுவர வேண்டும். அவர் வுமனைசர் இவர்கள் ஒழுக்கம் உடையவர் என்று முத்திரை குத்துவதும் அனாமதேய சுவரொட்டிகளும் இதற்குத் தீர்வல்ல. அதுவும் இவ்வாறான முத்திரைகளும் அனாமதேய சுவரொட்டிகளும் கொண்ட ஆய்வுகள் நிதர்சனம்.கொம் க்கெ பொருந்தும்.

      இவ்விடத்தில் சந்திரன் ராஜாவின் கருத்துடன் ஓரளவு என்னால் உடன்பட முடிகின்றது. //குடி பாலியல் காரணங்களை வைத்து ஒரு போராசியர்களை மதிப்பீடு செய்வது நல்லமதிப்பீடாக இருக்க முடியாது என்பதே! என்கருத்து.//சந்திரன் ராஜா

      சந்திரன் ராஜா//பல்கலைக்கழகத்திற்கு ஈடையூறு ஏற்படும் போது அரசு தலையிட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்திருக்க வேண்டும்.//
      பல்கலைக்கழகம் பற்றிய கருத்தியலின் அடிப்படையான அம்சமே அதன் சுயாதீனம் அரசின் தலையிடு என்பது பல்கலைக்கழகத்தின் சுயாதீனத்தை மட்டுப்படுத்தும். தன்னுடைய பிரச்சினைகளை கையாள்கின்ற ஆளுமை பல்கலைக்கழகத்திற்கு இருக்க வேண்டும்.

      மீண்டும் ராஜதுரையினுடைய கருத்துக்களுடன் முற்றும் உடன்பட வேண்டியுள்ளது. தென்கிழக்கு பல்கலைக்கழகம் பற்றிய ராஜதுரையுடைய உதாரணம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. கடந்த ஜனவரியில் இலங்கை சென்றிருந்த போது கிழக்கப் பல்கலைக்கழகத்திற்குச் சென்று மாணவர்களையும் மாணவர் தலைவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அம்மாணவர்களிடம் கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிலை பற்றி வினவினென்.

      அதற்குக் கிடைத்த பதில் தமிழ் சமூகத்தில் புரையோடிப்போயுள்ள மற்றுமொரு பிரச்சினையை வெளிப்படுத்தியது. கிழக்கு பல்கலைக்கழகத்தில் உபகரணங்கள் இல்லை லாப் வசதியில்லை கட்டிடங்கள் இல்லை ஆனால் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு எல்லா வசதியும் வழங்கப்படுகிறது. முஸ்லீம்கள் எல்லா வளங்களையும் பெற்றுக்கொள்கிறார்கள். அதனால் நாங்கள் பாதிக்கப்படுகின்றோம் என்ற வகையில் கருத்துக்கள் வளர்ந்தது. அவர்களுடைய பதிலின் சாரம்சம் முஸ்லீம் பல்கலைக்கழகம் தமிழ் பல்கலைக்கழகத்தின் வழங்களை அபகரிக்கின்றது என்ற அடிப்படையில் அமைந்தது.

      ஆனால் கிழக்கில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். கிழக்கு மாகாணசபை தமிழர்களின் கையில் உள்ளது. அதற்குமேல் கிழக்கு பல்கலைக்கழகத்தை அபிவிருத்தி செய்ய வேண்டிய பொறுப்பு அதன் உபவேந்தருக்கும் நிர்வாகத்திற்கும் உரியது. தென்கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகமும் அந்த சமூகத்தைச் சமூகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் தம் ஆளுமையைப் பயன்படுத்தி அந்த நிறுவனத்தை இலங்கையில் உள்ள ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு ஈடாக கட்டமைத்துள்ளனர். அதற்கு அவர்களைப் பாராட்ட வேண்டுமேயன்றி பொறாமை கொள்வது அழகல்ல. வடக்கு கிழக்குப் பல்கலைக்கழகம் ஏன் அதில் தவறின என்பதற்கான காரணங்களை ராஜதுரை பட்டியலிட்டுள்ளார்.

      மேலும் கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்துடன் யாழப்பாணப் பல்கலைக்கழகத்தை இணைப்பது தொடர்பாக விரிவுரையாளர் அல்லது சத்தியசீலன் இலங்கை வந்திருந்த போது முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அது தொடர்பாக நான் கவுன்சிலர் போல்சத்தியநேசன் என் செல்வராஜா ஆகியோர் உரையாடியும் இருந்தோம் ஆனால் இலங்கை சென்ற சத்தியநேசன் மேற்கொண்டு முயற்சிகள் எதனையும் எடுக்காததால் அது அம்முயற்சி முளையிலேயே கருகிவிட்டது.

      கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் தேசம் என் செல்வராஜா கவுன்சிலர் போல் சத்தியநேசனுக்கு இருந்த தொடர்புகள் மூலம் யாழ்ப்பாண நூலகத்திற்கான சர்வதேச நூல் பகுப்பாய்வுக் கையேட்டை (இரு பிரதிகள்)இலவசமாகப் பெற்று யாழ் நூலகத்திற்கு வழங்கி இருந்தோம். அவை ஒவ்வொன்றினதும் பெறுமதி 1200 பவுண்கள் எனக் கூறி இருந்தனர்.

      யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் முயற்சி எடுத்திருந்தால் இரு பல்கலைக்கழகங்களையும் இணைத்திருக்க முடியும். குறிப்பாக கவுன்சிலர் போல் சத்தியநேசன் அவரது வாழ்நாள் சேவைக்காக கிழக்கு பல்கலைக்கழகத்தால் கெளரவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

      நிர்வாகங்களில் உள்ளவர்களின் அசமந்த போக்கிற்கு மற்றுமொரு உதாரணம் யாழ் நூலகத்திற்கு புக்அப்ரோட் நிறுவனத்தில் இருந்து என் செல்வராஜா பெற்றுக்கொண்ட 2000ற்கும் மேற்பட்ட ஆங்கில நூல்களை தேசம் யாழ் நூலுகத்திற்கு தனது செலவில் அனுப்பி வைத்தது. ஆனால் விநியோகிக்கப்பட்டு ஓராண்டுக்குப் பின் என் செல்வராஜா இலங்கை சென்றபோது அந்த நூல்கள் அனுப்பப்பட்ட பெட்டிகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடந்தது.

      தேசம்நெற்றில் இடம்பெற்ற முக்கிய விவாத விடயமாக இது அமைந்துள்ளதை பலரும் தனிப்பட்டமுறையில் தொலைபேசியூடாகவும் மின்அஞ்சலூடாகவும் சுட்டிக்காட்டி உள்ளனர். இந்த விவாதத்தை வளம்படுத்திய அனைவருக்கும் நன்றி. ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களை சிரமத்தைப் பாராமல் பதிவிடவும்.

    50. ராஜதுரை on July 12, 2010 10:07 am

      வணக்கம்,
      சந்திரன். ராஜாவினால் நேற்று (11ம் திகதி ஜூலையன்று) எழுதப்பட்ட கூற்றுக்கு எனது பார்வையிலான விளக்கத்தை முன்வைப்பதுடன், எனது வாதத்தை இத்தால் தொடர்கின்றேன்.

      //பல்கலைக்கழகத்தை அதன் சுதந்திரப்பாதையில் போகவிடுங்கள். அதில் குறை கண்டுபிடிக்க யாருக்கும் தகுதியிருப்பதாக நான் கருதவில்லை. அதற்குரிய இலக்கை அது எட்டியே! தீரும்.// >> இது ‘சந்திரன்.ராஜா’வினது கருத்து. அதைச் சொல்ல அவருக்கு சுதந்திரமிருக்கின்றது. அதற்கு நான் செவிமடுக்கின்றேன்.

      ஆனால், இங்கு இருவிடயங்களை நாமனைவருமே ஏற்றுக் கொள்ள வேண்டும்:
      1.யாழ் பல்கலையானது ‘பல்கலைக்கழகம் என்கின்ற அடிப்படி வரைவிலக்கணத்திற்கு ஏற்புடையதற்றதாக இருக்கின்ற கவலைக்கிடமான நிலை. இதனை ஜெயபாலனினால் தொடங்கிவைக்கப்பட்ட இவ்விவாத அரங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.
      2.ஆகவே, சந்திரன்.ராஜா சொன்னது போல ‘ஒரு பல்கலைக்கழகத்தை அதன் சுதந்திரமான ஆளுமைப் போக்கில் விடுவதென்பது’ யாழ் பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரையில் பொருத்தப்பாடுடையதன்று.

      “யாழ் பல்கலைக்கழகத்தை அதன் போக்கிலேயே விடுதல்” என்கின்ற சந்திரன்.ராஜாவினது கூற்றின் உள்ளார்த்தமான நோக்கம் தான் என்னவோ? “அதன் போக்கிலேயே யாழ் பல்கலைக்கழகத்தை மேலும் சிதைய விடுவதாக மட்டும் அது இருக்கக்கூடாது என்று இத்தால் இறைஞ்சி நிற்கின்றென். அடுத்ததாக, “உலெகெங்கும் வியாபித்துப் பரவி வாழ்கின்ற ஒரு நிரந்தரமான முகவரியற்ற எமது இலங்கைத் தமிழ் சமூகத்திற்கு ‘கலாச்சார மற்றும் கொள்கையியல் அடையாளமாகவும்’ – எமது ஆக்கபூர்வமான சிந்தனைகளின் ஊற்றாகவும், அவை மெருகூட்டப்படுவதற்கான ஊடகமாகவும் இருந்திருக்க வேண்டிய யாழ் பல்கலைக்கழகமும் அதன் வழித்தோன்றலாகிய கிழக்குப் பல்கலைக்கழகமும் இனிமேலாவது உரிய பாதையில் செல்ல வேண்டும்” , என்று நம்பி ‘இலவு காத்த கிளிகளாக’ இருக்கின்ற பலரினதும், அவர்களின் எண்ணங்களினதும் வெளிப்பாடுதான் இந்த விவாத மேடை என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்விவாதம், ‘பல்கலைக்கழகம் என்கின்ற கொள்கை சார்ந்து யாழ் பல்கலைக்கழகமென்கின்ற நிறுவனம் எப்படியாக மாற்றமடையவேண்டும் (?)’ என்கின்ற சிந்தனைப் போக்கினது முக்கிய தொடக்கப் புள்ளியாகக் (starting point) கருதப்பட வேண்டும். ‘பல்கலைக்கழகம்’ என்கின்ற தொகுதி (system) பற்றிய எண்ணக்கருக்களும் அபிலாசைகளும் தான் இந்த அரங்கைத் தொடங்கி வைத்திருக்கிறது. அந்த வகையில், இந்த விவாதத்தை அதன் சுதந்திரமான ஆளுமைப் போக்கில் ஆக்கபூர்வமாக ஊக்குவித்தலே எதிர்காலத்தில் பல்கலைக்கழகம் என்கின்ற வரைவிலக்கணக்கத்துக்கு பூரணமாக சார்புடையதாக யாழ் பல்கலையை மாற்றி, முன்னேற்றியெடுத்துப் பேணலுக்கு இன்றியமையாதது. இந்த விவாதம் (எனது பார்வையில்) யாழ் பல்கலைக்கழகத்தின் 36 ஆண்டு கால வரலாற்றில் முக்கியமான ஒரு திருப்புமுனைதான். யாழ் பல்கலை ஸ்தாபிக்கப்படும் போதே இப்படியான ஒரு ஆரோக்கியமானதும், வெளிப்பாடானதும் (transparent), ஆக்கபூர்வமானதுமான திறந்த விவாதம்/சம்பாஷணை (dialogue/debate) இருந்திருந்தால் – இன்று இந்நிறுவனமானது பிறழ்வில் மூழ்கித் தவிக்கும் சிக்கற்போக்கு நிச்சயமாகவே ஏற்பட்டிருக்காது!

      “ஏன் இப்படியானதொரு திறந்த விவாதம் (open-debate) முன்னைய காலங்களில் வரவேற்கப்படவில்லை?” என்கின்ற கேள்வியும் இங்கு எழத்தான் செய்யும். அதற்கு யாழ் பல்கலையும் அதன் வடிவமைப்பாளர்களும் (architects) கொண்டிருந்த (இன்னமும் கொண்டிருக்கின்ற) வெளிப்படையில்லாத தன்மைதான் (non-transparency) முக்கிய காரணம்.

      மேற்படி சொல்லப்பட்டதான வெளிப்படையின்மையினை (non-transparency) யாழ் பல்கலைக்கழகக் கட்டமைப்பிலிருந்து இல்லாதொழித்தலே மேற்படி நிறுவனத்தை அதன் சிதிலமாகும் போக்கிலிருந்து மீட்டெடுத்து, சீர்ப்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்ல வழிசமைப்பதற்கான முதற்படியாகும். வெளிப்பாடானதும் பக்கச்சார்பற்றதுமான செயற்பாடுகளை ஊக்குவித்தலே, யாழ் பல்கலையை “கற்பித்தலும் ஆய்வும் இணைந்து பாரபட்சமற்ற உண்மையைத் தேடுவதே பல்கலைக்கழகம்” என்கின்ற வரைவிலக்கணத்துக்கிணங்க; தான் இயங்கிக்கொண்டிருக்கின்ற சமூகப் பொருளாதாரச் சூழலின் அடிப்படை விழுமியங்களையும், தேவைகளையும் பூரணமாக உள்வாங்கி அதற்குத் தோதான ஆய்வு அடிபடையிலான கற்பித்தல் செயற்பாடுகளை மேலெடுத்து, ‘இலங்கைத் தமிழ் சமூகத்தின் அடையாளமாக’ மிளிர்வதற்கு வழி சமைத்துக் கொடுக்கும்.

      பக்கச்சார்பற்ற வெளிப்பாடான நடவடிக்கைகள் (un biased, open and transparent approaches to all processes) என்பன ‘accountability’ என்கின்ற நிறுவனங்களுக்கான முகாமைத்துவத்தின் அடிப்படை விழுமியத்துடன் தொடர்புடையவை. நிறுவனங்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு தனிமனிதனும் - தான் செய்கின்ற தொழில்சார்ந்தும், தனது தனிப்பட்ட நடவடிக்கைகள் சார்ந்தும் - சமூகத்திற்கும், தனது நாட்டிற்கும் “கணக்குச் சொல்ல வேண்டியவனாகவிருக்கின்றான்”. இந்த வகையில், பல்கலைக்கழகங்கள் என்கின்ற “சமூக கலாச்சார அடையாளச் சின்னங்களுக்கும்”, அவற்றை நிர்வகிக்கின்ற கல்விமான்களுக்கும் உள்ள ‘accountability’ தொடர்பான தார்மிகப் பொறுப்பானது (இதனை சட்டவாக்கவியலில் onus அல்லது ‘கடப்பாடுடன்கூடிய பொறுப்பு’ என்பார்கள்) மிக மிக அதிகமானது.

      ஆனால், தற்போதைய யாழ் பல்கலைக்கழகத் தொகுதியிலும் (Jaffna University system) அதன் கல்வியாள சமூகத்திலும் (academic community) மேற்படியான ‘accountability’ என்பதுவும் ‘transparency’ என்பதுவும் கெட்ட வார்த்தைகளாகவே பார்க்கப்பட்டு வருகின்றன என்பது கவலைக்குரிய விடயமாகும். உண்மையில் ‘accountability’ என்பதுவும் ‘transparency’ என்பதுவும் பேணப்படாத எந்தவொரு நிறுவனமும் ஒரு சிறந்த முகாமைத்துவக் கட்டமைப்பைக் கொண்டிருக்க முடியாது. முகாமைத்துவம் சீர்கேடான நிலையில் உள்ள ஒரு நிறுவனத்தில், ‘மனித மற்றும் சமூக உரிமைகள்’ பேணப்படலுக்கு ஒருவிதமான உத்தரவாதமும் இல்லை.

      எனவே, ‘accountability’ மற்றும் ‘transparency’ என்கின்ற இரு அடிப்படை விழுமியங்களும் பேணப்படாமையினால்தான் யாழ் பல்கலைக்கழகமானது பற்பலதான மனித மற்றும் சமூக உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு உட்பட்டிருக்கின்றது என்பதுவும் இத்தால் வெளிப்படையே. இதன் காரணத்தால் ஏற்பட்டிருக்கின்ற பிரளயத்தனமானதும் (chaotic) எழுந்தமானமானதுமான (randomic) நிறுவனக் கலாச்சாரமே, இன்று நட்சத்திரன் செவ்விந்தியன் போன்றோர் யாழ் பல்கலைக்கழக கல்வியாள நிர்வாகிகளின் மேல் அடுக்கிக் கொண்டே போகின்ற அவதூறு தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கான அடிப்படை.

      எந்தவொரு நிறுவனம் பக்கச்சார்பின்றி, தனது ‘accountability’ மற்றும் ‘transparency’ என்கின்ற இரு அடிப்படை விழுமியங்களையும் பேணி நடக்கின்றதோ, அது தனி மனித சுதந்திரத்தையும், தனி மனித அபிவிருத்தியையும் - ஒரு சமூகத்தின் முன்னேற்றத்துக்கான அடிப்படைகளாக ஏற்றுக் கொண்டு, சிறந்த ஆளுமையைப் பெற்றதாக மிளிரும். தனது ‘accountability’ மற்றும் ‘transparency’ என்கின்ற இரு அடிப்படை விழுமியங்களையும் பேணாத யாழ் பல்கலைக்கழகத்தில் இதனால் தான் திறமையுள்ளவர்கள் ஓரங்கட்டப்படுதலும், இளம் சமுதாயம் நசுக்கப்படலும் உள்ளடங்கலான பல பல மனித உரிமை மீறல்கள் காணப்படுகின்றன. மனித உரிமைகள் மீறலின் ஒரு பரிமாணம்தான் பாலியல் துஸ்பிரயோகம். அதுவும் இருக்கின்றதுதான். ஆனால் அது மட்டும் தான் யாழ் பல்கலையில் உள்ள மனித உரிமை மீறல் செயற்பாடு என்று சொல்லிவிடலாகாது.

      “ஆதலால், யாழ் பல்கலைக்கழகத்தின் தற்போதையதான சீர்குலைந்த நிலையினை மாற்றியமைப்பதற்கான தீர்வு என்ன?” என்கின்ற கேள்விக்கு, “யாழ் பல்கலை என்கின்ற கட்டமைப்பின் செயற்பாடுகள் அனைத்திலும் ‘accountability’ மற்றும் ‘transparency’ என்கின்ற இரு அடிப்படை விழுமியங்களும் பேணப்படலை உறுதிப்படுத்தலே” உரியதான யுக்தியாகப் பிரேரிக்கப்படுகின்றது.

      ‘accountability’ மற்றும் ‘transparency’ என்கின்ற இரு அடிப்படை விழுமியங்களும், ஏலவே சீர்குலைக்கப்பட்டதான இந்த நிறுவனத்தில், ஒட்டுண்ணிகள் போலிருந்து கொண்டு அதன் சிதைவுக்கு மேலும் வழிவகுக்கின்ற “முருகேசம்பிள்ளை போன்றோரை ஓரங்கட்டிய” so called கல்விமான்கள் ஆதிக்கம் செலுத்துகின்ற தற்போதைய நிறுவனச் சூழலில் (organizational culture) எந்த விதத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் (?) என்கின்ற கேள்வியும் இத்தால் எழுப்பப்படுகின்றது. இந்தப் புது யுகத்தில் எந்தவொரு பங்களிப்பும் செய்வதற்கு அடிப்படைத் தகுதிகளுமேயில்லாத, பிரயோசனமெதுவுமற்ற (obsolete) மேற்படி so called கல்விமான்கள், பேராசிரியர் ஹூல் போன்றதொரு நிர்வாகியை ஏற்றுக்கொள்வார்களா (?) என்கின்ற ஒரு கேள்வியும் இங்கு எழத்தான் செய்கின்றது.

      இங்கு ஹூல் என்பவர் “நீர் மேல் நடந்து அற்புதங்கள் செய்பவராக” ஒரு போதுமே எம்மால் கருதப்படவில்லை! மாறாக, நல்லதொரு கொள்கையுள்ள நிர்வாகிக்கு ஹூல் ஒரு உவமானமாகவோ ஒரு குறியீடாகவோ மட்டுமே உருவகிக்கப்படுகின்றார். அந்தவகையில், பேராசிரியர். ஹூலோ வேறெந்த நிர்வாகியோ யாழ் பல்கலைக்குள் வந்து சேர்ந்த்தால், அவர்மேல் ‘accountability’ மற்றும் ‘transparency’ என்கின்ற இரு அடிப்படை விழுமியங்களும் பேணப்படலை உறுதிப்படுத்தும் பாரிய பொறுப்பு (onus) சுமத்தப்படும் என்பதனையும்; மேற்படி விழுமியங்களைப் பேணலின் அடிப்படையிலேயே அவரால் மேற்கொள்ளப்படப் போகின்றதான நிர்வாகமும் அமைய வேண்டும் என்கின்றதுமான முதன்மையான விடயங்கள் இத்தால் சுட்டிக்காட்டப்படுகின்றன. இல்லையேல், மனித மற்றும் சமூக உரிமைகளைச் சீர்குலைக்கின்றதான தற்போதைய சிதிலப்போக்கு மட்டும் தான் யாழ் பல்கலையில் எஞ்சி நிற்கும்.

      இப்படிக்கு,
      ராஜதுரை

    51. Varathan on July 13, 2010 12:36 am

      இந்தப் புது யுகத்தில் எந்தவொரு பங்களிப்பும் செய்வதற்கு அடிப்படைத் தகுதிகளுமேயில்லாத, பிரயோசனமெதுவுமற்ற (obsolete) மேற்படி so called கல்விமான்கள், பேராசிரியர் ஹூல் போன்றதொரு நிர்வாகியை ஏற்றுக்கொள்வார்களா (?) Rajadurai

      Rajadurai tried to blame the University community. Anybody can blame others very simply without doing anything potentially during their period. Rajadurai served as Rector of Vavuniya campus and Dean of Faculty of Agriculture. During his office he never tried to point out or changed the situations that he is now talking about. He tried to please out the VC and council members to gain those positions during that time. Now he retired. He got the professorship and supervised the graduate students without doctorate. He is not academically highly qualified to keep those high positions. War in Sri Lanka gave these great opportunities to the people like him. During his teaching he never teach any new things or changed his notes (used the same notes he prepared at his earlier time) and not spent much of time to prepare for teaching. He supervised the graduate students only for his benefits (to gain points for proffessorship). He used the existing bad system to gain all these benefits. I think only two students did their meaningless postgraduate programme under his supervision. He gave some hopes and promisses (actually cheated)to his post graduate students about permanent appointments to keep them in his track and finally cheated them. I am wondering what’s the point to keep writing here. Without blaming others do the write thing what you can. You can chage the world by changing yourself. Blaming is purely waste of time.

    52. ராஜதுரை on July 13, 2010 9:45 am

      அனைவருக்கும் வணக்கம்.

      முதற்கண், உங்களுக்கு மிக்க நன்றிகள் வரதன். நான் சொல்ல நினைத்ததை (அதாவது, ஒரு காரணம் கருதிச் சொல்லாமல் விட்டிருந்ததை) மிகவும் அழகாகப் பட்டியலிட்டுச் சொல்லி விட்டீர்கள்! அதனைத் தமிழில் சொல்லியிருந்தால் மிகவும் நன்றாகவிருந்திருக்கும். அனைவருக்குமே எஸ். ராஜதுரை என்கின்றவர் இழைத்திருக்கின்ற சமூகத்திற்கெதிரான குற்றங்கள் தெளிவாக விளங்கியிருக்கும்.

      ‘ராஜதுரை’ என்கின்ற மேடைப் பெயரில் (stage-name) இத்தளத்தினுள் வந்து போய்கொண்டிருக்கின்ற நான் – “நீங்கள் குறிப்பிட்டுக் கொண்டிருக்கின்ற திரு. எஸ். ராஜதுரை என்கின்றவரும், யாழ் பல்கலைகழகத்தில் எப்படியோ (?) எந்தவிதமாகவோ (?) இணைப் பேராசிரியராகப் பதவியேற்றவருமான சீமானொருவரைப் பற்றி எப்போது தான் இந்த விவாத மேடை தன் அலசலைச் செலுத்தும் (?)” என்கின்ற கேள்வியுடனேயே – “ராஜதுரை” என்கின்ற அடையாளத்தை எனக்கு இட்டுக் கொண்டேன்.

      எஸ். ராஜதுரை என்கின்ற so-called மிகப்பெரிய கல்விமானென்று சொல்லித் தம்பட்டமடித்துக் கொண்டிருக்கும் ஒருவரையும் அவரது வழித்தோன்றல்களாக வந்து சேர்ந்து யாழ் பல்கலையைச் சீர்குலைத்தவர்களைப் பற்றியும் உங்கள் கவனத்தை திசை திருப்பவே “ராஜதுரை” என்கின்ற பெயர் எனக்குச் சூடப்பட்டது. நான் விவசாயப் பீடத்தையும் அதன்பின் யாழ்பல்கலையயும் சீர்குலைத்த ராஜதுரை அல்ல!

      நான் யாரென்பது இங்கு முக்கியமில்லை. நான் அடையாளமே இல்லாத, பாதிக்கப்பட்டு அல்லலுறுகின்ற பலலட்சக்கணக்கான ‘கிழிஞ்சு போன தமிழர்களுள்’ ஒருவன். என்னைப் போன்றவர்களின் உரிமைகளையும், அபிலாசைகளையும் தட்டிப் பறித்துத்தான் எஸ். ராஜதுரை இணைப் பேராசிரியரானார்.

      அவரால் சீர்குலைந்த வவுனியா வளாகம்தான் இன்று மேலும் சிதிலமாகிக் கொண்டிருக்கின்றது. அதல பாதாளத்தில் வீழ்ந்து கொண்டுமிருக்கின்றது.

      எஸ். ராஜதுரை தொடர்பான வரதனின் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், அவர் தொடர்பான பின்வரும் தரவுகளைக் கவனிக்கவும் :
      1.ஆய்வுப் பின்னணியோ, ‘ஆய்வு’ மற்றும் ‘விஞ்ஞானம்’ தொடர்பான அடிப்படை விழிப்புணர்வோ (awareness) அறிவோ (knowledge) அற்றிருத்தல்.
      2.ஒரு க.பொ.த சாதாரணதர மாணவனுக்கு உரியளவிற்குக் கூட விஞ்ஞானத் தேடல் அற்றிருத்தல்.
      3.கல்வித்தராதரமின்றியே பல்கலைக்கழக நிவாகத்தை ஏய்த்துத் திசைதிருப்பி இணைப்பேராசிரியரானமை.
      4. “ஆய்வுகூட செய்முறைக்காட்டுனர் பதவிக்குக் கூட தகுதியற்றவர் இவர்”, என்று கிழக்குப் பல்கலையின் ஆரம்பகாலக் கல்வியாளர்களால் தொடர்ந்தும் நிராகரிக்கப்பட்டமை.
      5.யாழ் மாவட்டத்துக்குள்ளேயே தனது ஆய்வுக் கட்டுரைகளனைத்தையும் பதிப்பித்தமை. இவை அனைத்தும் வெளியிடத்துப் பல்கலைக்கழக ஆய்வு மன்றங்களால் (research forums) ‘தரமற்றவை’ என்று நிராகரிக்கப்பட்டவை.
      6.பிறருக்கு முகஸ்துதி பாடல். தனது சுயலாபத்துக்காக நிறுவனத்தின் போக்கினை மாற்றியமைத்தல்.
      7.தன்னைப் போன்ற, தகமையற்ற தனது சீடர்களை நிர்வாகப் பதவிகளில் அமர்த்தித், தனது செயற்பாடுகளுக்கான ஒரு ‘நிழலுக வலையமைப்பை’ (gangster network) உருவாக்கிக் கொள்தல்.
      8.அந்த வலையமைப்பு மூலம், தகமையும் திறமையுமுள்ள பிறருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய வாய்ப்புக்களை தட்டிப்பறித்தலும், தனி மனித மற்றும் சமூக உரிமைகளையும் ஆளுமைகளையும் நசுக்கலும்.
      9.தனது இளமானிப்பட்ட மாணவர்களது அறிக்கைகளை பிரதியெடுத்து தன் பெயரில் ஆய்வுகளாக பிரசுரித்தல் (இது விடயக் களவு என்கின்ற plagiarism இனது உச்சக்கட்ட நிலைக் குற்றமாகும்). இங்கு எஸ். ராஜதுரை முதுமானிப்பட்ட மாணவர்களுக்கு பாரிய பங்களிப்பொன்றையுமே செய்திருக்க முடியாது. ஏனெனில், அதற்கான அடிப்படைத் தகுதி அவரிடம் எப்போதுமே இருந்ததில்லை!
      10.உலகளாவிய வலைப்பின்னலிருந்து தரையிறக்கம் (download) செய்த ஆங்கில ஆவணமொன்றைத் தமிழில் மொழி பெயர்த்து புத்தக வடிவம் கொடுத்து, அதனைத் தான் (தனது அறிவார்த்தமான சிந்தனை கொண்டு) எழுதியதாகச் சொல்லிப் பதவியுயர்வு பெற்றமை.
      11.கொள்கையற்றிருத்தல். அதிசுயலவாதப் போக்குடைமையால் நிறுவனம் பற்றிய அடிப்படைச் சிந்தனையில்லாமலேயே நிறுவனத்தில் அதிகாரப் பதவிகளை வகித்தல்.
      12.மேலும், இன்று வவுனியா வளாகத்தில் எஸ். ராஜதுரையின் நேரடிச் சீடரான விவசாயப் பட்டதாரியும் ஆய்வுப் பின்னணியுமற்ற பெண்மணியொருவர் – தானும் ‘இன்னொரு எஸ். ராஜதுரையாக’ மாறுவதற்கும், அதன் மூலம் தான் தொடர்ந்தே சிதிலமாக்கிக் கொண்டு போகின்ற கல்வித்துறையையும், பீடத்தையும், வளாகத்தையும் – யாழ் பல்கலையையும் மேலும் சிதைக்கவும் இடைவிடாத முயற்சியெடுத்துக் கொண்டிருக்கின்றார். நியமனம், ஆய்வுத் திட்டமிடல், பாடத்திட்டங்கள்… என்று எல்லாவற்றிலும் இவரது தலையீடால் வவுனியா வளாகத்தின் திசையே திருப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நிற்க, இந்தப் பெண்மணியானவர், தானும் தன் ஆசான் எஸ்.ராஜதுரை வழியில் விரைவில் இணைப் பேராசிரியராகுவதற்கு யாழ் பல்கலையின் நிர்வாக யந்திரத்தை தொடர்ந்தும் நச்சரித்து ஏய்த்துக் கொண்டுமிருக்கின்றார்.

      ஆக மொத்தத்தில் – “பேராசிரியர். ஹூல்” என்கின்ற பெயர் எப்படியான விடயத்தில் நல்லதொரு நிர்வாகிக்கு உவமானம் காட்டப்பட்டதோ; அதே போன்றே என்னால் “ராஜதுரை” என்கின்ற பெயர் - ஜெயபாலனால் சுட்டிக்காட்டப்பட்ட, “சைவ வேளாண் ஆதிக்கச் சிந்தனைகளில் ஊறி, கொள்கையற்று, சுயநலமாக, மனித மற்றும் சமூக உரிமைகளை தொடர்ந்தும் மீறி, மற்றவர்களை நசித்துச் சுயலாபம் காணுகின்ற தகமையும் கொள்ளவுமற்ற” வர்களுக்கு உவமானமாகக் காட்டப்பட்டது. இது சிம்புதேவன் என்கின்ற இந்தியப் பட இயக்குனர் “23ம் புலிகேசி” என்கின்ற பெயரில் “அரசியல்வாதிகளினதும் அரச யந்திரத்தினதும் ஈனப்போக்குகளை சாடுவதற்கு” எடுத்துக் கையாண்ட சிலேடைப் போக்குக்கு (sattirical perspective) ஒப்பானது.

      எஸ். ராஜதுரை என்கின்றவர் யாழ் பல்கலையினைப் பொறுத்தவரையில் ஒரு “இம்சையரக்கன் 23ம் புலிகேசிதான்”! எஸ். ராஜதுரை என்கின்ற character பிறழ்வை ஆதரித்துச் சுயநலம் காண்கின்ற “முருகேசம்பிள்ளை போன்ற சிந்தனையாளர்களை ஓரம்கட்டிய” புல்லுருவித்தனமான தகமையற்றவர்களின் ஒரு நியம மாதிரியுரு (a classic model and example of fraudulent, un-ethical academic activities).

      அதனாலேயே தான் “ராஜதுரை” என்கின்ற பெயரை, satirical perspective இனது அடிப்படையில் நான் சூடிக்கொண்டேன்.

      “ராஜதுரை யார்?” என்கின்ற கேள்விக்குப் பதில் வரதனுக்குக் கிடைத்திருக்கும் என்று நினைக்கின்றேன்…

      ராஜதுரை என்கின்ற பெயரில் எழுதிக் கொண்டிருக்கின்ற நான், ‘மழைக்குக் கூட யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பெற ஒதுங்காத ஒரு பாமரன்’. எனினும், எஸ். ராஜதுரை என்கின்றவரின் குழறுபடிகளைப் பட்டியலிட்டு, அந்த characterஇனை ‘பிறழ்வின் ஏகோபித்த அடையாளம்’ என்று சுட்டிக்காட்டுவதற்கு அரிய வாய்ப்பினை எனக்குத் தந்த நண்பன் வரதனுக்கு என் நன்றிகள். உண்மையில், இதற்காகவே நான் இந்த விவாதத்தில் வரதனிடமிருந்து 51வது பதில் வரும் வரை காத்திருந்தேன் என்றும் சொல்லலாம்.

      நன்றிகள் வரதன்! எஸ். ராஜதுரைபால் தாங்கள் கொண்டுள்ள கோபம் நியாயமானது… நாம் இந்த விவாத மேடை மூலம் அப்படிப்பட்ட “இம்சையரக்கர்களிடமிருந்து” எப்படி இந்தப் பல்கலைக்கழகத் தொகுதியை மீட்டெடுப்பது என்பது பற்றியே ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம். அதற்கான களத்தை அமைத்துத் தந்த ஜெயபாலனுக்கும் எனது நன்றிகள் உரித்தாகின்றன.

      “You can chage the world by changing yourself” என்று வரதனால் சுட்டிக் காட்டப் பட்டதன்படி; “யாழ் பல்கலை என்கின்ற நிறுவனம் பற்றிய ஆக்கபூர்வமான தார்மிகக்-கொள்கையியல் அடிப்படையில், இலங்கைத் தமிழராகிய நாமனைவருமேயே நம்மைச் சரியான வழியில் மாற்றியமைத்துத் திருந்தி முன்னேற்றிக் கொள்ளாவிடின்… ‘ராஜதுரை’ என்கின்ற பெயருக்குப் பின்னால் “அடையாளம் காணமுடியாமல் தொலைந்து போயிருக்கின்ற கிழிஞ்சி நைந்து போன தமிழனாகிய” என் நிலை தான் யாழ் பல்கலைக்கும், இலங்கைத் தமிழ் சமூகத்துக்கும் எஞ்சும்”, என்பதனையும் இத்தால் சுட்டிக் காட்ட வேண்டுகின்றேன்.

      மேலும் எஸ். ராஜதுரை என்கின்றவருக்கு, நியமமான கல்வியறிவேதுமில்லாத பாமரனாகிய நான் (‘me’ - the one who is uneducated, and also the one who has no formal educational background) எழுதியதைப் போன்றதொரு எழுத்துருத்தொகுதியை கூட எழுதவும் முடியாது (Mr. S. Rajadurai can never write a simple piece of analytical writing such as this) என்பதனையும் இத்தால் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். அதனை, வரதன் நிச்சயமாகவே ஒத்துக் கொள்வார் என்றும் நம்புகின்றேன்.

      நிற்க… நேற்று நான் சுட்டிக் காட்டியதன் அடிப்படையில் ‘accountability’ மற்றும் ‘transparency’ என்கின்ற இரு விழுமியங்களின் (values) அடிப்படையில் யாழ் பல்கலைக்கழகச் சமூகமானது எப்படி மாற்றியமைக்கப்பட வேண்டும் என்கின்ற முன்மொழிவைப் பற்றி (proposal) இனிமேல் நாம் அனைவரும் சிந்தித்தல் அவசியமென்றும் கருதுகின்றேன்.

      மிக்க நன்றிகள்.

      இப்படிக்கு,
      ராஜதுரை (நான் எஸ்.ராஜதுரை போன்றவர்களால் கிழிஞ்சு போய்விட்ட தமிழர் சமூகத்தின் அவலக் குரல் மட்டுமே!)

    53. Anonymous on July 13, 2010 12:14 pm

      ராஜதுரையின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில் எழுதுவது தேவையற்றது ஆனாலும் மேற்படி இரண்டு பல்கலைக்கழகங்களிலும் வேலை செய்தவன் என்ற முறையில் எனக்கு ஒரு கடமை உண்டு. முருகேசம்பிள்ளையின் அறிவில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் ரூசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டு ஜேர்மனியில் டிப்ளொம் பட்டம் வாங்கி எம் ஐ டி யில் பி எச் டி முடிக்காமல் திரும்பியவர். பல்கலைக்கழக சட்டங்களுக்கமயவே அவருக்கு வேலை வழங்க முடியும். இது ராஜதுரைக்கு தெரியாதா அல்லது பேராசிரியர் கந்தசாமியை இழுக்க வேண்டும் என்பதற்காகவே எழுதுகிறாரா? யாழ் விஞான பீடத்தில் சர்வதேச சஞ்சிகைகளில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதுபவர்களில் கந்தசாமி முக்கியமானவர். அவரின் மீதும் சேறடிக்கிறார் இவர். முருகேசம்பிள்ளை பேராசிரியர் துரைராஜவின் காலத்திலேயே பேராதனை பல்கலைக்கழகத்தில் தற்காலிக கணித விரிவுரையாளராக வேலை பெற்று பின் அங்கிருந்து ஜேர்மனி சென்று அங்கே காலமானார். ஏன் பேராதனை பவுதீக பீடம் வேலை வழங்கவில்லை என்றோ ஏன் கணித துறை நிரந்தர வேலை வழங்கவிலை என்றோ சிந்தியுன்கள். பவுதீக பட்டதாரியான விபுலானந்தர் தமிழ் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்! இது விபுலானந்தரின் காலமல்ல. எவரும் வழக்குப்போடலாம். அடுத்ததாக கிழக்குப் பல்கலைக்கழகத்திலேயே மிகவும் ஒழுக்கம், கடமைக்குப் பேர் போன கலாநிதி ஜெ சி என் ராஜேந்திராவுக்கும் சேறடிக்கிறார். கருதுதுச்சுதந்திரம் எழுத்துச்சுதந்திரம் என்பவற்றை தமது தனிப்பட்ட குரோதங்களிற்குப் பாவிப்பது போன்றுள்ளது. வெளியாரின் அரசியல் தலையீடு இலாவிடின் பல்கலைக்களகம் தானே வளரும் ஒருவரும் முதலைக்கண்ணீர் வடிக்கத்தேவை இலலை என்பதே எனது கருத்து. இக்கட்டுரையாளருக்கும் இராஜதுரைக்கும் யாழ்பாணப் பல்கலைகழகத்தையும் எப்படியாவது கிழக்குப் பல்கலைக்கழகத்தைப் போல் கொண்டு வரும் நோக்கம் தெரிகிறது. அங்குதான் எவரும் இரண்டு மாணவரின் உதவியுடன் உபவேந்தரை ஒரே நாளில் மாற்றலாம். செய்யுங்கள், ஜீவன் ஹூல் அற்புதங்கள் செய்வார்.

    54. DEMOCRACY on July 13, 2010 1:06 pm

      /- ஜெயபாலனால் சுட்டிக்காட்டப்பட்ட, “சைவ வேளாண் ஆதிக்கச் சிந்தனைகளில் ஊறி, கொள்கையற்று, சுயநலமாக, மனித மற்றும் சமூக உரிமைகளை தொடர்ந்தும் மீறி, மற்றவர்களை நசித்துச் சுயலாபம் காணுகின்ற தகமையும் கொள்ளவுமற்ற” வர்களுக்கு உவமானமாகக் காட்டப்பட்டது./–
      I don’t know anything about Jaffna university, but I spent in my life ten years in Madras university. Everybody knows, Madras university was called “Mudaliyar university”!. The same connotation was applicable for Jaffna university, I think!. What is the difference between Indian Tamils and “Srilankan Tamils” in this context!.
      IF WE BLAME ANY “CASTE” FOR ANY FAILURE, IT WILL BOOMERANG ON THE WHOLE CASTE SYSTEM - THAT IS IT’s SPECIALITY!.
      We must blame the cause for the protruding those, particular caste, and the purpose for it!. The purpose was definitely to align “Raw materials” for industrialized nations needed for its productions or services, which applicable till today. At present situation, “productions” were replaced to Asian countries for cost reductions - a contradiction within race-based? Capitalist system!. If you want to place yourself to new situation, you must adjust to your south Asian surroundings. IF YOU HAVE YOUR 70% PEOPLE AS “EXPATRIATES”, then in Anti-Indian and Anti-Srilankan sentiments you must be careful!. It should not be “selective amnesia” as victimized!. THEN IT IS “SUPER-EGO DELUSION”.
      In this regard Proff.Ratna jeevan hool and Mr.Rajadurai(commenter) were thinking in correct direction!.

    55. ராஜதுரை on July 14, 2010 4:09 am

      மறுபடியும் வணக்கம்!

      “Anonymous” என்பவரால் 13ம் திகதி பி.ப 12.14 அளவில் முன்வைக்கப்பட்ட ‘ஆதங்கங்கள்/மனக்கிலேசங்கள்’ தொடர்பான பின்வரும் கருத்துக்கள்/தரவுகளைக் கவனித்தல் அவசியம்:

      1.“முதலாவதாக முருகேசம்பிள்ளை பற்றி “Anonymous” நேற்று எடுத்தியம்பிய தகவல்கள், எப்போதுதான் இந்த விவாத மேடைக்கு வந்து சேரும் (?); அப்படியான தகவல்களை சொல்வதன் மூலம் ‘கல்விமான்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்’ தங்களது செயல்களுக்கு எப்படியான நியாயத்தைத் தேடிக் கொள்ள முயல்வார்கள் (?)” என்கின்ற இரு கேள்விகளுக்குமான பதிலை அறிந்து கொள்வதற்காகவே நானும் காத்திருந்தேன்.
      2.ஜெர்மனியில் பட்டப்படிப்பை ‘டிப்ளோமா’ என்று சொல்வது வழக்கம். அதே போல்தான் ஃபிரான்ஸிலும். நிற்க, முருகேசம்பிள்ளை ஜெர்மனியில் கல்விகற்றாரா, அல்லது; ருசியாவின் வொல்கா நதிக்கரையில் உலாவினாரா (?) என்கின்ற தகவல்கள் இந்த விவாத மேடைக்குத் தேவையில்லாதவை.
      3.ஆனால், ‘சர்வதேச சஞ்சிகைகளில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதிப் பிரசுரிப்பவரான’ கந்தசாமிக்கு ஏன் முருகேசம்பிள்ளையினது விஞ்ஞான ரீதியிலான கேள்விக்குப் பதிலளிக்க முடியவில்லை?
      4.ஒரு வேளை, “பல்கலைக்கழகத்தில் நிரந்த நியமனம் பெற்ற கலாநிதிகளுக்கும், பேராசிரியர்களுக்கும்” மட்டுமே தான் ஆராய்ச்சி செய்யவும், அறிவினைப் பெற்றுக் கொள்ளவும் உரிமையிருக்கின்றதோ என்னவோ? ஆகையால், “Anonymous” எடுத்து முன்வைக்க முயல்கின்ற பார்வை, “எந்தவொரு தனிமனிதனுக்கும் பாரபட்சமற்ற தேடல் மூலம் தனது அறிவார்த்தமான அபிவிருத்தியைக் கொண்டு செல்வதற்கான உரிமையுண்டு” என்கின்ற மனித உரிமைகள் பிரகடனத்தின் அடிப்படையினை சிதைப்பதாகவன்றோ அமைகின்றது? “அறிவைத் தேடிக்கொள்ள உரிமை எவருக்குமே இருக்கின்றது” என்பது, “கேள்வி கேட்பதற்கான உரிமையும்” இருப்பதைச் சுட்டிக் காட்டுகின்றது. ஆகையால், ஒரு பொறுப்பான கல்வியாளராக கந்தசாமி இருந்திருந்தால்; முருகேசம்பிள்ளையின் கேள்விகளுக்கு செவிமடுத்து, “பி.எச்.டி பட்டத்தை முடிக்க முடியாத” அவருக்கு முன்னேறுவதற்கான வழியைக் காட்டி விட்டிருக்க வேண்டும். அப்படி நடந்ததா (?) என்றால் அதுதான் இல்லையே!
      5.மேலும், “கணித மேதை ராமானுஜம் பட்டமேதும் பெறாதவர், அவருக்குப் கல்விச் சான்றிதழ்களில்லை, இங்கிலாந்துப் பல்கலைக்கழகங்களில் அவர் நிரந்தர விரிவுரையளாருமில்லை”… என்று பிரித்தானிய கணிதவியலாளர்கள் நினைத்திருந்தால் இன்று விஞ்ஞான உலகுக்கு ராமானுஜத்தின் கணிதப் புதிர்கள் கிடைத்திருக்குமா?
      6.பாரபட்சமற்ற முறையில் அறிவைத் தேட வேண்டும் - “Anonymous” அவர்களே, அதனை பல்கலைக்கழக மானியங்கள் குழு காட்டுகின்ற வரையறைகளை மட்டும் கொண்டு மறுதலிக்கக் கூடாது!
      7.மேலும், “Anonymous” அவர்களே, கந்தசாமியால் சர்வதேச சஞ்சிகைகளில் கடந்த ஒரு வருடத்தில் எழுதப்பட்ட ஆகக்குறைந்தது ஐந்து கட்டுரைகளையாவது பட்டியலிட்டுக் காட்டமுடியுமா?
      8.அடுத்ததாக ஜே.சி.என். இராசேந்திரா ஒரு ‘சிறந்த நிர்வாகி’ என்றும், அவர் மீது “சேறடிக்கக்கூடாது” என்றும் சொல்லியிருந்தீர்கள். கி.பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக இருந்த காலத்தில் - இராசேந்திரா குறுகிய கால புலமைப்பரிசில் வசதி (short-term scholarship) மூலமாக பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு ஒரு பயணம் சென்றார். அந்தப் பயணம் - பெளதிகத்தில் கலாநிதிப்பட்டம் பெற்ற இராசேந்திரா, பெளதிகத்துறையில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக மேற்கொள்ளப்படவில்லை. மாறாக, இராசேந்திரா நீர்மீன்வளர்ப்பு (aqua-culture) சம்பந்தமான ஒரு சுற்றுலாவுக்கு சென்றிருந்தார். பெளதிகவியலாளரான இராசேந்திராவுக்கும், நீர்மீன்வளர்ப்புக்கும் என்ன சம்பந்தம்? இற்றை வரை இராசேந்திரா நீர்மீன்வளர்ப்பு சம்பந்தமான ஏதாவது ஆய்வுகள் செய்துள்ளாரா? மேற்படி பிலிப்பைன்ஸ் நாடுப் பயணம் மூலம், கி. பல்கலையில் விஞ்ஞான பீடத்தில் கடமையாற்றுகின்ற நீர்மீன்வளர்ப்பில் சிறப்பு தேர்ச்சி பெற்ற உயிரியலாளர்களின் உரிமைகளையும் வாய்ப்புக்களையுமன்றோ இராசேந்திரா தட்டிப் பறித்துள்ளார்!?!
      9.இராசேந்திராவின் “தட்டிப் பறித்தல்” செயற்பாட்டுக்கு ஒழுக்காற்றவியலில் (ethics), “தனது சுயலாபம் கருதி, அற்பமான முறையில் நிறுவனத்தின் திசையை மாற்றித் தான் மட்டும் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொண்டு மகிழ்ந்திருத்தல் (’free riding’ the system on the basis of pervasive interest)” என்கின்ற விளக்கம்தான் கொடுக்கப்படும்.
      10.ஆக மொத்தத்தில் இராசேந்திராவின் “pervasive interest”களின் அடிப்படையில்தானா அவரது கடமையுணர்வு காணப்படுகின்றது Anonymous அவர்களே?
      11.//“கந்தசாமியும், இராசேந்திராவும் அதி சிறந்த கல்வியாளர்கள். இது விபுலானந்தரின் காலமும் அல்ல! ஹூல் வந்து அற்புதங்கள் செய்வாரா?”// >> என்கின்ற வகையில் Anonymous சொல்லிய கருத்தினடிப்படையில், ஒரு கேள்வி எழத்தான் செய்கின்றது. “ஹூல் அற்புதங்கள் செய்வாரா, மாட்டாரா என்கின்ற வாதமொருபுறமிருக்க; அரும்-பெரும் கல்வியாளர்களாகிய கந்தசாமியும் இராசேந்திராவும் இற்றைக்காலம் வரையும் யாழ் பல்கலை, கி. பல்கலை என்கின்ற இரு நிறுவனங்களினதும் மேம்பாட்டிற்கு என்ன அற்புதங்கள் செய்துள்ளார்கள்?” என்கின்ற கேள்விதான் அது!
      12.மேலும் “ஹூல்” என்கின்ற பெயர் - “சமூகப் பிரக்ஞையுள்ள, சிறந்த நிர்வாகி ஒருவருக்கு உவமானமாகத் தான்” இவ்விவாத மேடையில் இற்றைவரை காட்டப்படும் வந்திருக்கின்றது.
      13.இது பெளதிகத்தில் பட்டம் பெற்று தமிழ்துறையில் பணியாற்றிய விபுலானந்தரின் காலமல்ல! அதை ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால், இது ‘ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்’ என்கின்ற aerospace engineeringஇல் கலாநிதிப் பட்டம் பெற்று, இந்தியாவின் சனாதிபதியாகவிருந்து, “அக்னிச் சிறகுகளை” எமக்குத் தந்து, தனது தாய் மொழியாம் தமிழில் கவிதைகளை எழுதிக் குவிக்கின்ற சமூகப் பிரக்ஞையுள்ள, சிந்தனையாளர் “அப்துல் கலாமின்” காலம் என்பதை Anonymous அவர்கள் மறுதலிக்க முடியாது!
      14.கந்தசாமியார் தமிழில் கவிதையெழுதுவாரா? யாழ் பல்கலை தொடர்பாக இற்றை வரை அவர் ஏதாவது ஆக்கபூர்வமான சிந்தனைகளை எடுத்தியம்பியுள்ளாரா? அவர் ஒரு பேராசிரியர் என்கின்ற வகையில் யாழ் பல்கலையில் கட்டமைப்புச்சார்ந்தும், கொள்கை சார்ந்தும் செய்த முன்னேற்றங்கள் தான் யாதோ?
      15.இங்கு, தனது சம்பளத்திற்காக விரிவுரையாளராகவோ, பேராசிரியராகவோ – தத் தமது தொழில் சார்ந்து செய்கின்ற செயற்பாடுகளை, அவர்கள் “ஆற்றியுள்ள அரிய பெரும் சேவைகள்” என்று கருதுவது; ஒரு பேருந்துச் சாரதியோ, மருத்துவரோ, வங்கி இலிகிதரோ - தினசரி மாமூலாகச் செய்கின்ற பணிகளை “நோபல் பரிசு பெறத் தகைமை பெற்றுள்ள அரிய பெரும் சேவைகள்” என்று கூறித் திரிதலுக்கு ஒப்பானது!
      16.யாழ் பல்கலைக்கழகமென்கின்ற நிறுவனம், தனது தார்மிகப் பொறுப்பான சமூகப் பணியைச் சரிவரச் செய்யவில்லை. அதுவும் அதன் வழி வந்த கி.பல்கலைக்கழகமும்; “பல்கலைக்கழகம் என்கின்ற அடிப்படை வரைவிலக்கணத்தினின்றும் பிறழ்ந்திருக்கின்றன”. “அதனால், மேற்படி இரு சமூகநிறுவனங்களையும் – இலங்கைத் தமிழ் சமூகத்தின் அபிலாசைகளையும், தேவைகளையும் பிரதிபலிக்கின்ற முறையில் சீர்படுத்துவது எப்படி (?)”, என்கின்ற அடிப்படையிலேயே இவ்விவாத மேடை அமைந்திருக்கின்றது.
      17.இங்கு நானோ ஜெயபாலனோ, யாழ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களுக்குள் மழைக்கும் கூட ஒதுங்காதவர்கள். எங்களிடம் பல்கலைக்கழகங்கள் தருகின்ற பட்டங்கள் கைவசமில்லை! ஆனால், எங்களது இலங்கைத் தமிழ் சமூகம் தொடர்பாகவும், அந்தச் சமூகத்தின் அடையாளமாக விளங்க வேண்டிய பல்கலைகள் தொடர்பாகவும் சிந்திக்க எங்களுக்கு உரிமையுண்டு! அது ஒவ்வொரு தனிமனிதனதும் தார்மிகப் பொறுப்பு. அதனையே இந்த விவாத மேடை செய்து கொண்டிருக்கின்றது. மேலும் ஜெயபாலனுடனோ, இராசேந்திராவுடனோ, கந்தசாமியுடனோ, பேராசிரியர். ஹூலுடனோ ஒருவிதமான கொடுக்கல் வாங்கலுமோ; குரோதமோ, பற்றோ எனக்கில்லை. அவர்களை நான் நேரில் கண்டதுமில்லை! அப்படிக் காண்பதற்கான தேவையும் எனக்கில்லை!
      18.இந்தச் சமூகத்தின் பல்வேறு மூலைகளிலும் கொட்டிக்கிடக்கின்ற ஆதங்கங்கள், தகவல்கள், குறைபாடுகள், தேவைகள் என்பவற்றினடிப்படையிலும் – சமூகப் பிரக்ஞையுள்ள கொள்கையியல் வாதத்தினதும் அடிப்படையிலேயே இவ்விவாத மேடை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆதலால், தாம் சார்ந்துள்ள (தாம் வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற) குழுவைச் சார்ந்து Anonymous அவர்கள், ஒருவிதமான அடிப்படையுமே இல்லாத முறையில் “மறுதலிப்பு” செய்யமுடியாது. “நாங்கள் கல்வியாளர்கள், எங்களிடம் கேள்வி கேட்க வேண்டாம்” என்கின்ற போலித்தனமான மனப்போக்கினை மாற்றியமைக்கவே இவ்விவாத மேடை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது!
      19.மேற்படி, “கல்வியாளர்கள் என்று சொல்லிக் கொண்டு, தகமையேதுமில்லாமலும் சமூகப்பிரக்ஞையற்றும் காணப்படுகின்ற - பதவிகளைத் தக்கவைத்திருப்பவர்கள்”, சமூக மற்றும் தனிமனித விழுமியங்களுக்கெதிரான அனர்த்தங்களை விளைவிக்கக் கூடிய பேராபத்துக்கள் (moral hazards) ஆவார்கள். இவர்களே, மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புக்களைத் தட்டிப் பறித்தும், மற்றவர்களின் உரிமைகளை மறுதலித்தும் தம் சுயலாப நோக்கத்தில் செயற்படுபவர்களாவார்கள். ஆதலால், இராசேந்திராவினது பிலிப்பைன்ஸ் பயணத்தின் அடிப்படையில், அவர் இலங்கைத் தமிழ் பல்கலைக்கழக சமூகத்திற்கு எப்படியானதொரு moral hazard ஆக விளங்குகின்றார் என்பது வெளிப்படையாகின்றது.
      20.இந்த விவாதமேடையானது ‘சமூக சிந்தனையுடன்’ முன்னேறிக் கொண்டிருக்க, மறுபுறமாக - Anonymous அவர்கள் முன்வைத்துள்ள வாதங்கள்; “தனி மனிதர்கள் தப்பிப் பிழைப்பதற்காக மட்டுமே நிர்வகிக்கப்படுகின்ற சமூகச் சிந்தனையற்றதும்” – இந்த விவாத மேடையினால் மீண்டும் மீண்டும் விமர்சிக்கப்பட்டு வருகின்றதுமான “பிறழ்வு நிலை”யினால் அவர் எந்தளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளார் (!) என்பதனை வெளிப்படுத்துகின்றது. உங்களைச் சொல்லிக் குற்றமில்லை Anonymous அவர்களே! உங்களுக்கு காட்டப்பட்ட உலகம் அவ்வளவுதான்! இந்தக் குண்டுச்சட்டிக்குள் குதிரையோடும் கிணற்றுத் தவளைத்தனத்திலிருந்து நமது சமூகம் விடுபெறுதல் அவசியமே!

      அடுத்ததாக, DEMOCRACYயினால் நேற்று (13/ஜூலை/2010) அன்று பி.ப 1.06ற்குப் பதியப்பட்ட கூற்றுக்கு முற்றாக நான் உடன்படுகின்றேன். மேலும், “சைவ வேளாண் ஆணாதிக்கச் சிந்தனைகளில் ஊறுதல்” என்கின்ற மாயை - சமூகத்தைத் திசைதிருப்பிச் சுயலாபம் காணுவதற்கான ஒரு போர்வை/முகமூடி மட்டுமே என்பதனையும் முன்வைப்பதுடன்; இந்த மாயை – சைவ வேளாண் உயர் குடியினர் என்று சொல்லிக் கொள்பவர்களால் மட்டுமின்றி; அவர்களைப் பின்பற்றி, அவர்கள் வழியில் தாமும் செல்ல எத்தனிக்கும் “பாவனை செய்பவர்களாலும்” (the pretenders) எடுத்தாழப் படுகின்றது என்பதனையும் சுட்டிக்காட்ட வேண்டும். தற்போதைய 3ம் பரம்பரை (third generation)களால் ஊடுருவப்பட்ட யாழ் பல்கலை சமூகத்தில் இந்த pretendersகள் தான் அதிகளவில் காணப்படுகின்றனர்! இது தொடர்பாகவும் DEMOCRACY தனது கருத்துக்களை தெரிவித்தால் மிகவும் நன்றாகவிருக்கும்!

      நேற்று வரதன் சொன்னது போ