தமிழ்ஸ்ரேலா? ஈழஸ்தீனா? : எஸ் ஆர் எம் நிஸ்தார்

Map_of_Israel_and_PalestineTamil Eelamமேலே உள்ளது ஒரு றீ-மிக்ஸ்(re-mix). அதில் என்ன சூட்சுமம் உள்ளது என்பதைத்தான் இனி பார்க்கப்போகிறோம். பொதுவாக மற்றவன் செய்வதை நாமும் செய்துவிட வேண்டும் என்று நம்மவர்களுக்கு எற்படும் ஆசையை நாம் பார்த்திருக்கிறோம். சாதாரணமாக பரத நாட்டியம் பழகுவது, கடை வைப்பது, கார் வாங்குவது, வெளி நாட்டில் வீடு கட்டுவது என்றால் சரி போகட்டும் இவையெல்லாம் சாதாரண மனித ஆசைகள் தானே எனலாம். ஆனால் அதையும் கடந்து இந்திய துணை கண்டத்தில் “பங்களாதேஷ் “(Bangladesh) என்றால் சம்பந்தம் இல்லாமல் “யாழ் தேஷ்” என்று யாழ்ப்பாணத்தில் கோசம் போடுவது, ஐரோப்பாவில் “கொசொவோ”(Kosovo) என்றால் இலங்கையின் “கொசொவோ”வை எப்போது பெற்றுத்தர போகிறாய் என சர்வதேச சமூகத்தை அதட்டலாக கேட்பதெல்லாம் சாதாரண ஆசையாக இருக்க முடியாது என்பது எமது நிலைப்பாடு.

அப்படியான ஆசையை நாம் கொச்சைபடுத்துவதாக அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. சரி இந்த ஆசையை “உரிமை” என்று சற்று நாகரீகமாக சொன்னாலும் அந்த உரிமை என்பது ஒரு தனியான விடயம், அந்த உரிமை நியாயமானதாக இருக்க வேண்டியது அதன் முக்கிய தன்மைகளில் ஒன்று, அந்த நியாயமான உரிமையையும் நியாயமான முறையில் அடைய முயற்சிப்பது என்பது வேறோர் விடயமென்பதையும் நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.

ஒடுக்கப்படும் மக்கள் கூட்டம், கலாச்சாரக் குழு, சமயப் பிரிவு, குலம், கோத்திரம், தேசியம், நாடு என்று மனித நாகரீகத்துக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே வரலாற்றின் ஊடாக நாம் பலதையும் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இந்த அடிப்படையில் ஒன்றாய் இருந்த நாடுகள் பிரிந்தும், பிரிந்தவை சேர்ந்தும், புதிதாக பிறந்தும், பிறந்து வளர்ந்தவை முக்கல் முனங்கள் இன்றி நிரந்தரமாக அழிந்துள்ளதையும் கூட நாம் காணக்கூடியதாக உள்ளது. இந்த பின்னணியிலேயே தமிழர்களின் “தனி நாட்டு”க்கான கோரிக்கை (வெற்று கோசம்) என்பதை பார்ப்பது தவிர்க்க முடியாதுள்ளது.

தனிநாடு காண புறப்பட்டவர்கள், அதே நோக்கத்தை கனவிலும், நினைவிலும் இன்றும் காவித்திரிபவர்கள் தமக்கு “இஸ்ரவேல்” ஒரு பாடமாக அமையவேண்டும் என்று சொல்வதையும், சில நேரங்களில் தமது நிலைமை “பாலஸ்தீனர்கள்” ளின் நிலைமையை ஒத்ததென்று ஒன்றுக்கொன்று பொருந்தாத முறையில் பகிரங்கமாக எழுதுவதும், பேசுவதும் வியப்பை அளிப்பதாக உள்ளது. ஆகவே இந்த கோசம் எழுப்புவோருடன் நியாய சிந்தையுள்ளவர்கள் கோட்பாட்டு ரீதியாக சற்று ஒதுங்கி இடைவெளிவிட்டு நிற்கின்றதை நாம் மறத்தல் ஆகாது.

சுதந்திரம் என்ற(வார்த்தையை)தை தவிர நம் நாட்டு (இனப்) பிரச்சினை வேறு எந்த நாட்டு பிரச்சினைகளுடன் நேரடி ஒப்பீட்டுக்கு ஒத்ததாக தென்படவில்லை. அதைவிட முக்கியமாக இன்னொரு நாட்டின் தலையீட்டினால் இந்த பிரச்சினை ஏற்படவில்லை என்பதனால், இது உள்நாட்டு பிரச்சினை என்று மற்றவர்களை உள் நுளைய விடாமல் தடுப்பதற்கு உதவியாகவும் இது அமைந்து விடுகின்றது.

ஆகவே பங்களாதேஷ், கிழக்கு தீமோர், கொசொவோ, எரித்திரியா, கஸ்மீர், பலஸ்தீனம் என்பதை எல்லாம் நம் பிரச்சினையுடன் போட்டு குழப்பி அந்த குழப்பத்தில் இருந்து நாம் வெளிவர முடியாதவர்களாக இருந்து கொண்டு நம் பிரச்சினைகளுக்கு அடுத்தவர் பாணியில் பரிகாரம் தேட முயல்வது நம்மை எப்போதும் குழப்பத்திலேயே வைத்திருக்கும். ஆகவே இலங்கை பிரச்சினையை இஸ்ரவேலுடன் அல்லது பலஸ்தீனத்துடன் ஒப்பிடுவோர் பின்வரும் விடயங்களை சற்று நோக்க வேண்டும்.

இன்றைய வரலாற்று காலத்துக்கு முற்பட்டகாலத்தில் இஸ்ரவேல் என்ற ஒரு நாட்டை உலகப் படத்தில் காணமுடியாது. பாலஸ்தீனம் என்ற ஒரு பிரதேசத்தின் பெயர் இஸ்ரவேலர் அப்பிரதேசத்தில் குடியேறுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஏற்பட்ட ஒன்று. இது யூதர்களின் ஹிப்ரு (Hebrew)மொழியில் “ப்லெஸ்த்”(Plesht), அதாவது பிலிஸ்தீனர்களின் நிலம்( land of Philistines) என்று அறியப்பட்டது. இந்த பெயரும் ஜோர்தான் பள்ளத்தாகில் (Jordan Valley) கி.மு.5000-4000 (Early Bronze Age) ஆண்டுகளில் வாழ்ந்ததாக சொல்லப்படும் க்ஹசலியர்களி( Ghassulians) ன் இப்பிரதேசத்துக்கான குடியேற்றத்துடன் வந்தாக வரலாறுகள் கூறுகின்றன. பிற்பாடு “பிலஸ்டியா” (Philastia) என்ற பெயருடன் இன்றைய காஸா(Gaza) பிரதேசத்தில் சற்று கூடிய நிலப்பரபுடன் ஒரு பிரதேசம் காணப்பட்டதையும் வரலாறு எமக்கு காண்பிக்கின்றது. பைபிளின் கூற்றுப்படி இந்த பிரதேசத்துக்கு இஸ்ரேலியர் என்ற கோத்திரத்தினர் (tribe) குடியேறியது கி.மு. 2000- 1550 (Middle Bronze Age) காலத்திலாகும். பிற்காலத்திலும் ரோமர்கள் இப்பிரதேசத்தை சிரியா பலஸ்தீனா (Syria Palaiestina) என்றே அழைத்தனர். இந்த பிரதேச மக்கள் தமது சனத்தொகை விரிவிற்கேற்ப வாழ்விட நிலப்பரப்பை அதிகரித்து சென்றனர்.

அதேபோல் ஆப்பிரஹாமின்(Abraham) அடியை ஒட்டிய ஏகத்துவ இறை(monotheistic)கொள்கையை மூலமாக கொண்ட மூன்று சமயங்கள், அதாவது யூதம் (Judaism), கிறிஸ்தவம்(Christianity), இஸ்லாம்(Islam) என்பவற்றுள் மூத்த சமயமான யூதத்தை பின்பற்றியவர்களே யூதர்கள்( இன்று யூத இனதில் கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயத்தை பின்பற்றுவோரும் உள்ளனர்). இந்த இனத்தின் தந்தையாகிய யாக்கோபு (Jacob) முதலில் “இஸ்ரவேல்” என்று அழைக்கப்பட்டார். அடிப்படையில் ஒரு மனிதனுக்கு வழங்கப்பட்ட பெயர் இது. இவரின் சந்ததியினர் “இஸ்ரவேலர்” என்று பின்னர் அழைக்கப்பட்டனர். இவர்களும் அந்த பிரதேசத்திலே மற்றவருடன் கூடி வாழ்ந்தார்கள். ஆகவே இந்த பிரதேசத்திற்கான யூதர்/இஸ்ரவேலர்களின் வரவு பிற்காலத்தில் ஏற்பட்ட ஒன்று. எனவே பாலஸ்தீனத்துக்கு யூதர்/இஸ்ரவேலர்கள் குடியேறியவர்களே அல்லாமல் அதன் அடிப்படை உரித்தாளர்களில்லை.

இந்த இடத்தில் சற்று இலங்கையை நோக்குவோமானால் இயக்கர், நாகர் (நாகர்களே பிற்காலத்தில் “சோனகர்” என்று அறியப்பட்டார்கள் என்ற (உறுதி படுத்தப்படாத) கருத்தும் நிலவுகின்றது) என்ற மக்கள் கூட்டம் வாழ்ந்த இலங்கையில் பிற்காலத்தில் புத்தளத்தின் “தம்பண்ண” என்ற பகுதியில் தோழர்களுடன் வந்திறங்கிய விஜயனின் வழித்தோன்றல் சிங்கள மக்களாகவும், கேரளாவில் இருந்து இடம் பெயர்ந்த, முக்குவர் உட்பட, யாழ் பகுதியில் குடியேறியோர் தமிழ் மக்களாகவும் இலங்கையில் வாழ்வதை நினைவூட்டுவதாக உள்ளது. ஆகவே இலங்கையில் சிங்களவரும், தமிழரும் பிற்காலத்தில் குடியேறியோரே அல்லாமல் இலங்கையின் அடிப்படை உரித்தாளர்கள் இல்லை.

காலத்துக்கு காலம் எகிப்தியர் (Egyptians), அஸரியர்(Assyrians), பபிலோனியர்(Babylonians), பாரசீகர் (Persian), கிரேக்கர்கள்(Greeks- பேரசர் அலக்ஸாந்தர் (Alexander the Great),ரோமர்(Romans), பைசாந்தியர்(Byzantines), உமையாக்கள்(Umayyads), அப்பாசிகள்(Abbasids), பாத்திமர்கள்(Fatimids), சிலுவை யுத்தகாரர்கள்(Crusaders), ஐயூபிகள்(Ayyubida), மம்லுக்கர்(Mamluks) துருக்கியர் (Ottoman Turks)களால் ஏற்பட்ட படை எடுப்புகள் காரணமாக பலஸ்தீனிலும், கானான் பிரதேசத்திலும் இருந்த யூதர்கள் அடிமைகளாக விற்கப்பட்டனர், இன்னும் ஒரு பகுதியினர் ஆக்கிரமிப்பாளர்களின் நாட்டு பிரஜா உரிமையை பெற்றனர், மிகுதியானோர் உலகம் பூராவும் குடியேற்றத்தில் ஈடுபட்டனர்,

அதேபோல் இந்த இடத்தில் இலங்கையை ஒப்பிடும்போது இந்நாடு மீதான இந்திய படையெடுப்புகள், ஐரோப்பியரின் காலனித்துவம் என்பன இலங்கையை நோக்கியதான குடிவரவை ஏற்படுத்தியதே அல்லாமல் குடி அகள்வை ஏற்படுத்தவில்லை. எனினும் 1983ல் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவினால் அரங்கேற்றப்பட்ட தமிழருக்கெதிரான இனக்கலவரத்தை தொடர்ந்து தமிழ் மக்கள் பெருவாரியாக இலங்கையை விட்டு வெளியேறியதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இன்று சுமார் 1.5 மில்லியன் தமிழர் (வெளியேறியோரும் அவர்களின் வழித்தோன்றல்களும்) உலகம் பூராகவும் பரந்து காணப்படுகின்றனர்.

இறுதியாக முதலாம் உலக போர் முடிவில் பாலஸ்தீனத்தின் ஆட்சி அதிகாரம் (administrative mandate) உலக சபையினால் (World Organization) பிரித்தனியாவின்(British) கையில் ஒப்படைக்கப்படுகின்றது. இக்காலத்தில் எல்லாம் இப்பிரதேசம் “பலஸ்தீன்” என்றே அறியப்பட்டது, அழைக்கப்பட்டது. பெரும்பான்மை மக்கள் நினைப்பது போல் “இஸ்ரவேல் அல்லது இஸ்ரேல்” என்ற பிரதேசம் பல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதல்ல.

“பலஸ்தீன்” என்ற இப்பிரதேசம் பிற்காலத்தில் “இஸ்ரவேல்”லாக மாறியது பின்வரும் முறையிலேயே. கி.பி1882ம் ஆண்டில் லியோன் பின்ஸ்கர் (Leon Pinsker)என்பவர் யூதர்களுக்கான ஒரு தனிநாட்டை அமைப்பதற்கான ஒரு கொள்கையை, அதாவது யூதர்களுக்கு மாத்திரம் என்று பொருள் கொள்ளக்கூடிய “சியோனிஸம்” (Zionism) என்ற கொள்கையை உருவாக்கினார். இந்த காலப்பகுதியில்தான் ஐரோப்பா எங்கிலும் யூதர்கள் இனப்படுகொலைக்கு(Genoside)முகம் கொடுக்க வேண்டியிருந்தது. இத்தருணத்தில் யூதர்களின் மீட்சி என்பது அவர்களின் விடுதலையிலும், தமக்கான தனி நாடொன்றை அமைப்பதிலுமே தங்கியுள்ளது என பின்ஸ்கர் மிக திடமாக நம்பினார். மேலும் யூதர்களின் ஒட்டு மொத்த சன வெளியேற்றம்(mass exodus) ஆர்ஜண்டீனா(Argentina)வை நோக்கியதாக இருக்கவேண்டும் என்றும் பின்ஸ்கர் அடையாளம் கண்டார். இந்த கருத்தானது ஸியோனிசத்தின் தந்தை என்றழைக்கப்படும் தியோடொர் ஹேர்ஷல் (Theodor Herzel)என்பவரினால் கட்டிக் காக்கப்பட்டது. ஆனாலும் ஹேர்ஷல் யூத குடியேற்றத்துக்கு ஆபிரிக்காவின் உகண்டா(Uganda) வே உகந்தாக கருதினார். இருப்பினும் பிற்காலத்தில் அவரின் பார்வை பலஸ்தீனை நோக்கி காணப்பட்டதால் ஐரோப்பா எங்கும் பரவிக்கிடந்த யூதர் “பலஸ்தீன்” என்ற நிலப்பரப்பையே தமக்கான தீர்வாகக் கருதினர். எனவே இஸ்ரவேல் என்பது வசதிகருதி பலஸ்தீனில் உருவாக்கப்பட்ட ஒரு நிலப்பரப்பு என்பதற்கப்பால் அப்போது அதற்கு ஒரு சட்டரீதியான (உரிமை) (அல்லது) அங்கீகாரம் இருந்ததில்லை. பிற்பாடு 1897ல் சுவிற்சர்லாந்து(Switzerland) பாசலில் (Basle) நடைபெற்ற முதலாவது ஸியோனிச மாநாட்டில்(Zionism conference) பலஸ்தீனில் இஸ்ரவேலை உருவாக்குவதற்கான கருத்து முடிவாகியது. இதன்படி யூதர்களுக்கான நாடாக பலஸ்தீன பிரதேசம் ஏற்றுக்கொள்ளப்பட்டு யூதர்களை அப்பிரதேசம் நோக்கி குடிப்பெயர்வு செய்வதற்கான நிதி சேகரிப்பும் தொடங்கி வைக்கப்பட்டது.

இதை சற்று இலங்கை நிலவரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் 1815ல் கண்டி ராச்சியம் ஆங்கிலேயர் கையில் வீழ்ச்சி அடைய 1833 அளவில் முழு இலங்கையும் ஒற்றை நிர்வாகத்தில் கொண்டுவரப்பட்டது. ஆனால் இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டே தமிழருக்கு அரசியலை ஒட்டியதான பிரச்சினை இருந்த(தாக சொல்லப்பட்ட) போதிலும், 1976 வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலமே அப்பிச்சினைக்கான தீர்வு “தமிழ் ஈழம்” என்ற தனிநாடு என்றாகியது. அதிலும் இந்த தமிழ் ஈழம் இலங்கையின் மேற்கு கரையில், அதாவது நீர்கொழும்புக்கு வடக்கேயுள்ள “கொச்சிச் கடை” பாலத்தின் மேலிருந்து வென்னப்பு, நாத்தாண்டி, மாதம்பை, சிலாபம், புத்தளம், வில்பத்து, மன்னார், முழு யாழ்குடா நாடு, முல்லைத் தீவு, திருக்கோணமலை, ஏராவூர், வாழைச்சேனை, மட்டக்களப்பு, கல்முனை, சம்பாந்துறை, அக்கரைபற்று, அம்பாறைக்கும் அப்பால் இலங்கையின் தென்கிழக்கு மூலைவரை சென்றதோடு மத்திய இலங்கையில் ஒரு பெரிய நிலப்பரப்பையும் தன்னகத்தே கொண்ட “தமிழ் ஈழம்” என்ற நிலப்பரப்பு தமிழருடையது என்று அதற்கு நிலஉரிமை கோரப்பட்டது.

ஹேர்ஷல் இஸ்ரவேலின் உருவாக்கத்துக்கான சர்வதேச ஆதரவு என்பது ஏதாவது ஒரு வல்லரசின் ஒத்துழைப்புடனேயே சாத்தியப்படும் என்ற உண்மையை கண்டறிந்தார். இந்த சந்தர்ப்பத்தில் பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரி இஸ்லாம் என்ற சமயத்தை அடிப்படையாகக் கொண்ட உதுமாணிய மக்களதிபர்(கலிபா) (Ottoman Khilafah) ஆட்சின் வீழ்ச்சியை எதிர்பார்த்திருந்த பிரித்தானியா 1917ல் பல்போர் தீர்மானத்தை(Balfour Declaration) வெளியிட்டு பலஸ்தீனத்தில் யூதர்களுக்கான தாய் நாடு அமைவதற்கான தமது விருப்பத்தை தெரிவித்துக்கொண்டது.

Map_of_Israel_and_Palestineஏற்கனவே ஹிட்லரின் இன சுத்திகரிப்பு( ethnic cleansing), “ஹொலொகோஸ்ட்” (Holocaust) என்று சொல்லப்படும் திட்டமிட்ட பாரிய இன அழிப்புக்கு முகம் கொடுத்த யூத மக்கள் தமது இனம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத்தால் நிலைகுலைந்திருந்தாலும், முதலாம் மகா யுத்தத்தை தொடர்ந்த பிரித்தானியாவின் பொருளாதார நெருக்கடியும், யூதர்களின் குடியேற்றத்துக்கு ஸியோனிஸ்டுகள் வழங்கிய அபரிமிதமான பொருளாதார உதவிகளும், நீண்டகால நில உரித்து கொண்ட(indigenous) பலஸ்தீனியரை அவர்களின் நிலப்பரப்பிலேயே வறுமையில் வீழ்த்தியதால் பொருளாதார மீட்சிக்காக பலஸ்தீனியரின் நிலங்கள் யூதர்களால் வாங்கப்பட்டன. அதேநேரம் யூத தொழிலார்களுக்கே அப்பிரதேசத்தில் முன்னுரிமையும் கொடுக்கப்பட்டது. இந்த நிலைமைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்திய யூதர்கள் தமது சமூக அபிவிருத்தி, பாதுகப்பு நிலமைகளை கருத்தில் கொண்டு மத்திய, பிராந்திய நிர்வாக அமைப்புக்களை ஏற்படுத்தினர். பாடசாலை, தபால் நிலையங்கள், சுகாதார நிலையங்கள் என்பவற்றுடன் இர்குன்(Irgun), ஹகனா(Haganah) என்ற இரண்டு மூர்க்கமான ஆயுத குழுக்களையும் நிறுவினர். இது பலஸ்தீனியரை இரண்டாம்தர பிரசைகளாக்கியது. இது பற்றிய பலஸ்தீனியரின் அதிருப்தியும், முறைப்பாடுகளும் பிரித்தானியரிடம் எடுபடவில்லை. பலஸ்தீனரிடையே அதிருப்தியாளர் அதிகரிக்கத் தொடங்கவே 1937ல் பிரித்தானியர் பலஸ்தீனிய அரபு மக்களுக்கு எதிரான அடக்கு முறைக்கு இஸ்ரேலிய ஹகனா குழுவின் ஆதரவை நாடினர். இதன் அடிப்படையில் 1938ல் ஹைபா(Haifa) பழச்சந்தை குண்டு தாக்குதலில் 74 மக்கள் பலியாகினர். இஸ்ரேலிய வரலாற்று ஆசிரியர் அயன் பபே(Ian Pappe)யின் கூற்றுப்படி இந்த சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண நிலையில் ஹகனா குழு அங்கே இன சுத்திகரிப்பு நடவடிக்கையை ஒன்றை மேற்கொண்டது. நிலைமை கட்டுக்கடங்காது போனதினால் பிராந்திய அரபு நாடுகளிடம் இருந்து வரும் எதிர்ப்பை சமாளிக்க பிரித்தானியா தாங்கள் யூதர்களின் தனிநாடு அமைக்கும் திட்டத்துக்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று அரபு உலகத்தை சமாதானப்படுத்தியது. இருந்த போதிலும் நிலத்தையும், அது தொடர்பான அதிகாரத்தையும் கைப்பற்றுவதற்கான ஸியோனிஸ்டுகளின் வேட்கையை இது குறைத்து விடவில்லை.

இந்த சந்தர்ப்பத்திலேயே பின்னை நாள் இஸ்ரேலிய பிரதமரான பென் கூறியன்(Ben Gurion) பிரித்தானியாவுக்கு எதிரான ஆயுத கிளர்ச்சியை இர்குன் குழுவினர் மூலமாக மேடை ஏற்றினார். இந்த ஆயுத கிளர்ச்சியில் ஜெருசலம் புகையிரத நிலையம், பிரித்தானிய ஆட்சி அதிகார சபை, அரசர் டேவிட் விடுதி(King David hotel) என்பன முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டன. எனவே நிலைமை மோசமடைவதை கண்ட பிரித்தானியா உலக சபையினால் (பிற்பாடு ஐ.நா சபையினால்) தனக்கு தரப்பட்டிருந்த பலஸ்தீன் மீதான நிர்வாக அதிகாரத்தை மீளகையளிக்கும் எண்ணத்தை 1947ல் வெளிப்படுத்தியது.

இந்த அசாதாரண நிலையில் ஐ.நா சபையின் “UNSCOP” என்ற காரிய குழு(Working Group) “இரு நாட்டு தீர்மானம்” (two states solution)ஒன்றையும் அதே நேரத்தில் ஜெருசலம் சர்வதேச கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதற்கான திட்டமொன்றையும் முன் மொழிந்தது. அந்த ஏற்பாட்டிற்கான ஆதரவு அமெரிக்க பக்கமிருந்து மிக அழுத்தமாக இருந்ததால் 33க்கு 13 என்ற வாக்கு வித்தியாசத்தில் இத் தீர்மானம் வெற்றி பெற்றது. இருந்தும் இந்த ஏற்பாட்டை பலஸ்தீனியர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இஸ்ரேலர்களோ மிகவும் ஆர்வத்தோடும், விருப்புடனும் இந்த இரு நாட்டு தீர்வை ஏற்றுக்கொண்டனர். இதை இர்குன் குழுவின் தலைவர் மெனச்சம் பெகின் (Menachem Begin) னின் பின்வரும் கூற்று உறுதிபடுத்துகிறது, அதாவது “அந்த நாட்களில் தனக்கு இருந்த கவலை எல்லாம் எங்கே இந்த அரபுக்கள் இரு நாட்டு யோசனையை ஏற்றுக் கொண்டு ஐ.நா. வினால் வரையப்பட்ட எல்லை கோட்டுக்குள் இஸ்ரேல் என்ற நாட்டை சுருக்கி விடுவார்களோ என்பதுதான்”.

இந்த அசாதாரண நிலையை இலங்கையுடன் ஒப்பிடும் போது நாம் காணக்கூடியதாக இருந்தது பின்வரும் விடயமே, அதாவது தமிழ் ஈழம் என்ற பாரிய நிலப்பரப்பு சம்பந்தமாக எந்த ஒரு ஏற்பாடுமின்றி, வடக்கையும், கிழக்கையும் மாத்திரம் ஒன்றிணைத்த ஒரு பிரதேசம் இந்திய, இலங்கை (ராஜீவ், ஜெயவர்தன) உடண்பாட்டால் தமிழருக்கான ஆட்சி பிரதேசமாக ஏற்றுக்கொள்ளபட்ட போதும் அது மூர்க்கமாக தமிழ் புலிகளினால் நிராகரிக்கப்பட்டது. அன்று அந்த பிரதேசம் புலிகளினால் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்திருந்தால் இன்று தமிழர் (ஓரளவேனும்) நிம்மதியாக இருந்திருக்கலாம். அதே நேரத்தில் இன்றைய உள்நாட்டு தமிழ் அரசியல்வாதிகள் மலைநாட்டையும், வட மேற்கையும் கைவிட்டுவிட்டு வடக்கையும், கிழக்கையும் இணைத்த ஒருபிதேசத்தை தமிழர்களின் பூர்வீக நிலமாக இலங்கை அரசு ஏற்று கொண்டால் தாம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ விரும்புவதாக கூற, அதாவது இந்திய, இலங்கை ஒப்பந்த அடிப்படையில் ஒரு தீர்வுக்கு வர எத்தனிக்கும் போது, வெளிநாட்டு (புலி) தமிழ் அரசியல்வாதிகளோ, மலை நாடு தவிர்ந்த ஆனால் வடமேற்கு, வடக்கு, கிழக்கு உள்ளிட்ட “தமிழ் ஈழம்” என்ற நிலப்பரப்புக்காக “நாடு கடந்த (உத்தேச) தமிழீழ அரசு” ஒன்றை உருவாக்க முனைகின்றனர். ஆனால் தமிழர்களின் தாயகம் என்ற பிரதேசம் தொடர்பான சரியான வரையறை இன்றி, தேவைக்கு ஏற்ற விதத்தில் எல்லைகளை மாற்றி “தமிழ் ஈழம்” என்று கூறிக்கொள்ளும் இந் நிலைப்பாடானது இஸ்ரேலின் பலஸ்தீன் மீதான வசதிகருதி செய்யப்பட்ட நில உரிமை கோரல் போன்றதாகும்.

அன்று ஏன் இரு நாட்டு தீர்வை பலஸ்தீனியர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கு இன்று “ஹமாஸ்”(Hamas) இயக்கத்திடம் (சரியோ, பிழையோ) நிறைய காரண காரியங்கள் உள்ளன. ஆனால் பலஸ்தீனியர் அன்று அந்த தீர்வை ஏற்றுக் கொண்டிருந்தால் இன்று ஒப்பிட்டு ரீதியில் இப் பிரதேசத்தில் அமைதி நிலவ வாய்ப்பு இருந்திருக்கும். இருப்பினும் 13 செப்டம்பர் 1993ன் ஒஸ்லோ தீர்மானம் (Oslo Accord) மூலம் இரு நாட்டு தீர்வை பத்தா(Fatha)அமைப்பின் தலைமையிலான பலஸ்தீன விடுதலை அமைப்பு (PLO) ன் தலைவர் யாசிர் அரபாத் ஏற்றுக்கொண்டதால், மேற்கு கரை(West Bank)யிலும், காஸா(Gaza) பகுதியிலும் ஓரளவு சுயாட்சி அதிகாரம் கொண்ட “பலஸ்தீன அதிகார சபை” உருவாக்கப்பட்டது. ஆனால் ப.வி.இ(P.L.O) க்கும் ஹமாஸகும் இடையே ஏற்பட்ட கொள்கை ரீதியான இணக்கமின்மையால், இருநாட்டு தீர்வு முன்னேறிச் செல்ல முடியாதுள்ளது.

அத்துடன் இஸ்ரேல் ஐ.நா சபையினால் வரையப்பட்டு தங்களால் முன்னர் ஏற்றுக்கொள்ளபட்ட நிலப்பரப்பை விட 50% மேலதிக நிலத்தை 1967 யுத்தத்தின் மூலம் அபகரித்துக்கொண்டது. மேலும் தொடர்ந்த இஸ்ரேலின் அத்துமீறிய மேற்கு கரை யூத குடியேற்றமும், மதில்கட்டி காஸா பிரதேசத்தை தனிமை படுத்தி மேற்கு கரை மாத்திரமே பலஸ்தீனியரின் நிலப்பரப்பாக்க வெளிப்படையாக எடுக்கும் (மறைமுக) நடவடிக்கைகளும், ஹமாஸின் அனைவருக்கும் பொதுவான பலஸ்தீனம் என்ற விடாபிடியும், அதற்கு ஊக்கம் கொடுக்கும் “இஸ்ரவேலை உலக படத்தில் இருந்து நீக்குதல்” என்ற (இன்றைய) ஈரானின் நிலைப்பாடும் இப்பிரதேசத்தை ஒரு “நிரந்தர கொந்தளிப்பு” பிரதேசமாகவே (hot region) வைத்துள்ளது.

இஸ்ரேல் அமைப்பதற்கான மேற்படி நவம்பர் 1947 வாக்கெடுப்புக்கு பின்னால் டிசம்பர் மாதம் 1947ம் ஆண்டு அரபு பொதுமக்கள் நிலைகள் மீது தொடுக்கப்பட பல குண்டு தாக்குதல்கள் பலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேலியருக்கும் இடையில் சிவில் யுத்தம் ஒன்று மூள்வது தவிர்க்கமுடியாத விடயமாகியது. இத்தகைய குட்டி சிவில் யுத்தமானது பொருளாதாரத்தில் அபிவிருத்தியோ, போர் முறையில் அனுபவமோ, திட்டமிடலோ இல்லாத பலஸ்தீனியருக்கு ஆயுத ரீதியாக பயிற்றப்பட்ட இஸ்ரேலியருக்கு முன்னால் அழிவையும், உயிர் நீத்தலையுமே பரிசாக கிடைக்கச் செய்தது.

இத்தகைய நடவடிக்கையின் இறுதி கட்டம்தான் மார்ச் 1948ல் இடம் பெற்றது. இந்த பிரச்சினைக்குரிய பிராந்தியத்தில் அரபு வானொலி மூலம் ஸியோனிஸ்டுகள் அரபுக்களுக்கு பகிரங்க அச்சுறுத்தலை வெளியிட்டனர். அந்த பயமுறுத்தல் வெறும் வாய்ப்பந்தல் இல்லை என்று நிருபிக்கும் முகமாக டெயிர் யசின்(Deir Yassin) என்ற இடத்தில் குழந்தைகள், சிறுவர்கள் உட்பட 250 பலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டார்கள். இச் சம்பவமானது 750,000( ஏழு லட்சத்து ஐம்பதாயிரம்) பலஸ்தீனியர் தமது சொந்த வீடு வாசல்கள், வியாபார நிலையங்கள் என்பவற்றை விட்டு அகதிகளாக வெளியேறச் செய்தது. இத்தகைய நிலைப்பாடானது யூதர்கள் ஐரோப்பாவில் தாம் அனுபவித்த சொல்லொனா துன்பத்தையும், அட்டூழியங்களையும் சற்றும் நினைத்து பார்க்காமல் அப்பாவி பாலஸ்தீனர் மேல் கட்டவிழ்த்த பயங்கரவாதம் வெட்கித் தலைகுனிய வைக்கும் செயலாகும். இந்த பயங்கரவாதத்தை விடுதலை போராட்டம் என்று குறிப்பிடுவது நகைப்புக்கிடமானதே.

இத்தகைய ஒரு முரண்பட்ட நிலமையை இலங்கையிலும் அவதானிக்கலாம். அதாவது 1983 ஜூலை கலவரத்தில் அப்பாவி தமிழர் உயிருடன் தீயிட்டு கொழுத்தப்பட்ட, அடித்து கொல்லபட்ட, பல்லாண்டுகளாக வாழ்ந்த இடத்தை விட்டு அனாகரீகமான முறையில் வெளியேற்றப்பட்ட சம்பவங்களை மிக எளிதில் மறந்துவிட்டு இரத்தம் உறைந்த நிலையில் மன்னார், யாழ் குடா நாடு, முல்லைத்தீவு பகுதிகளில் இருந்து சோனகர்கள் பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட நிகழ்வானது யூதர்களின் பலஸ்தீன் மக்கள் மீதான பயங்கரவாதத்தை நினைவூட்டுகிறது. 1983ன் கலவரத்தை தொடர்ந்த இரண்டொரு மாதங்களில் விரட்டியடிக்கப்பட்ட தமிழர் மீண்டும் தமது இருப்பிடங்களுக்கு திரும்பினர். ஆனால் விரட்டியடிக்கப்பட்ட சோனகர்களோ சுமார் 20 வருடங்கள் காத்திருக்க வேண்டி ஏற்பட்டது. ஆகவே தமிழர்களின் “தமிழ் பேசுவோருக்கான” போராட்டமாக (புலிகளால்) கூறப்பட்ட இந்த போராட்டம் ஒரு வசதி கருதிய(பயங்கரவாத) விடயமே.

இந்த பின்னணியில் 14 மே 1947 பிரித்தானியர் தமது நிர்வாக ஆட்சியாணையை (Administrative Mandate) கலைத்த அடுத்த நிமிடம் டேவிட் பென் கூறியன்(David Ben Gurion) இஸ்ரேல் என்ற தனிநாட்டை பிரகடனம் செய்து இஸ்ரேலின் முதல் பிரதமரானார். அமெரிக்க அதிபர் ட்ரூமன்( President Truman) இதை அங்கீகரித்து தமது அறிக்கையை விட தொடர்ந்து ரஸ்யா இஸ்ரேலுக்கான தமது அங்கிகாரத்தை வழங்கியது.

இந்த வெற்றிக்கான மிகவும் ஆழமான திட்டமிடல் அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்டதற்கு காரணமாக அமைந்தது இஸ்ரேல் ஒரு பலமிக்க நண்பனாக தன்னுடன் பிற்காலத்தில் செயல்படும் என்ற நோக்கிலாகும். அதாவது இந்த பிராந்தியத்தில் அமெரிக்க நலனை பாதுகாக்கும் நாடாக இஸ்ரேல் என்றும் செயல்ப்பட வேண்டும் என்ற அமெரிக்காவின் எதிர்பார்ப்பாகும். இதன் நீண்டகால நோக்கு மேற்குக்கும் இஸ்லாம் (West and Islam) என்ற சமயத்துக்கும் இடையிலான கருத்தியல்(Ideological) பனிப்போரையும்(cold war), கலாச்சார பொருதுதலை(cultural conflict)யும் அதை ஒட்டிய நடவடிக்கைகளையும் நசுக்கும் திட்டமாகும்.

ஆனால் இத்தகைய ஒரு நிலை இலங்கை தமிழரை பொறுத்தவரை இருக்கவில்லை. 1983ம் ஆண்டின் தமிழருக்கு எதிரான மிக மோசமான இனக்கலவரமானது சர்வதேச அளவில் தமிழர்பால் ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தியதே அல்லாமல் தமிழரின் இறுதி இலக்கை அடைய அது உதவமாட்டாது என்பதை தமிழர் அறிய தவறியதுமல்லாமல் அதை தங்களுக்கான நிபந்தனையற்ற பூரண ஆதரவாக பொருள் படுத்தி விடயங்களை நகர்த்திச் சென்றனர். இதை இனங்கண்டு எச்சரித்த(தமிழர்)வர்(கள்) இளக்காரமாக பார்க்கப்பட்டனர். இதன் வெளிப்பாடே புலிகளின் தனி தேசிய தலைமை என்ற நிலைப்பாடும் அதை தொடர்ந்த அவர்களின் அடாவடித்தனங்களுமாகும். சர்வதேச ஆதரவு தமக்கு உண்டு என்ற இந்த நிலைப்பாட்டின் ஒரு அம்ச(வடிகட்டிய முட்டாள்தன)மே 13மே 2009 இந்திய பொது தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி மத்தியிலும், அவர்களின் சார்பு கட்சியான ஜெயலலிதாவின் அ.தி.மு.க தமிழ் நாட்டிலும் ஆட்சியை கைபற்றும், எனவே அக்கட்சியுடன் கூட்டு வைத்துள்ள ம.தி.மு.கவின் வை.கோவும் ஜெயலலிதாவும் சேர்ந்து தமிழீழம் பெற்றுத்தருவர் அல்லது ஆகக்குறைந்தது புலித்தலைவர் வே. பிரபாகரனை மீட்டுத்தருவர் என்பதாகும். இதை விடவும் மோசமான(நகைச்சுவையான) கற்பனை கடைசி யுத்தகாலத்தில் அமெரிக்காவின் (உறுதி படுத்தப்படாத) உதவியை நாடியமையாகும். இதை விடவும் “வணங்கா மண்” கப்பல் முல்லை கடலுக்கு செல்ல எத்தனித்தது இறுதி கட்டத்தில் (எதுவுமே கை கூடாவிட்டால்) தலைவரையும் அவருக்கு வேண்டிய முக்கியஸ்தர்களையும் ஏற்றிக் கொண்டு ஐரோப்பா (நோர்வே) கொண்டு செல்ல எத்தனித்த (உறுதி படுத்தபடாத) விடயமுமாகும்.

அமெரிக்காவின் இஸ்ரேலுக்கான வலிந்த உதவி அமெரிக்க நலங்கொண்டது. அத்தகைய வலிந்த உதவியை (புலி) தமிழரின் தனி நாட்டுக்கு செய்யவேண்டிய தேவை இப்பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் உள்ள எந்த ஒரு நாட்டுக்கும் இல்லை. மாறாக இலங்கையுடன் நற்பை பேணி தமது நலனையும் அடையவே சர்வதேச நாடுகள் முயலும், முயன்று வெற்றியும் அடைந்துள்ளன.

மேலும் இன்று பலஸ்தீனுக்கு வெளியே உள்ள 3.5 (இன்றைய இஸ்ரேல் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டோர்) மில்லியன் பலஸ்தீன் அகதிகளின் கோரிக்கை தம்மை மீண்டும் தமது பிராந்தியத்தில் குடியேற அனுமதிக்க வேண்டும் என்பதாகும். இன்றும் 80% மேலானோர் தமது நிலத்துக்கான உறுதி(Deed), வீடுகளுக்கான திறப்பு(Keys)களுடன் தமது தாய் நாட்டில் கால்வைக்கும் காலத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலைதான் ஹமாஸின் அரசியல் காய் நகர்த்தலை இலகுவாக்குகின்றது, அதாவது என்றோ ஒரு நாள் இந்த அகதிகள் தமது சொந்த இடங்களுக்கு (இன்றைய இஸ்ரேலுக்குள்) அனுமதிக்கப்படும் போது அது இஸ்ரேலின் சனத்தொகையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அப்படி ஏற்படுத்தும் போது இஸ்ரேல் என்ற நாடு தானாகவே உலக படத்தில் இருந்து நீங்கும் அல்லது நீக்கப்படும் என்பதாகும். எனவே அதுவரை இரு நாட்டு தீர்வு இழுத்தடிக்கப்படும்.

2009 டிசம்பரில் இஸ்ரேலின் மொத்த சனத்தொகை 7,515,400(7.5 மில்லியன்). இதில் 1,213,000(1.2 மில்லியன்) அரபு மக்கள். இது விகிதாசாரத்தில் சுமார் 17% (15% முஸ்லீம்கள், 2% கிறிஸ்தவர்கள்). பலஸ்தீனியர்களின் மொத்த சனத்தொகை சுமார் 12 மில்லியன் இதில் 3,761,000 (சுமார் 3.7மில்லியன்) மாத்திரமே மேற்குகரையிலும், காஸா பகுதியிலும் வாழ்கின்றனர். ஆகவே மொத்த அரபுக்களில் 1/2 வாசி சனத் தொகையிலும் குறைந்தோரே இஸ்ரேலை உள்ளடக்கிய பலஸ்தீனில் வாழ்கின்றனர். ஏனையோர் (அதாவது இன்றைய இஸ்ரேல் பகுதியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டோரும், மேற்குக்கரை, காஸா பகுதியில் இருந்து வெளியேறியோரும்) உலகம் பூராகவும் பரவிக் காணப்படுகின்றனர். இஸ்ரேலில் இருந்து துரத்தப்பட்டோர் மீள குடியேற அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உலக நாடுகளின் வலியுறுத்தலே இன்றைய இஸ்ரேல்- பலஸ்தீன பிரச்சினையின் முக்கிய அம்சமாகும்.

இத்தகைய ஒரு நிலையும் இலங்கையில் இல்லை. குடி அகளந்துள்ள சுமார் 1.5 மில்லியன் இலங்கைய தமிழர் மீண்டும் தம் நாட்டுக்கு குடியேறுதல் என்பது நடக்க முடியாத காரியம். ஏனெனில் வெளிநாட்டு தமிழரின் தனிநாட்டு கோசமானது இலங்கையில் இப்போது வாழும் தமிழர்களின் (விருப்பம் அறியப்படாமல் அவர்கள்) மேல் செய்யும் திணிப்பேயாகும். அதைவிட இன்று சட்டத்தால் வலுவிழந்துள்ள வடக்கு, கிழக்கு இணைப்பானது மீண்டும் நிலைபெற இந்த வெளிநாட்டு (புலி) தமிழர் கோருவது வடகிற்கும், கிழக்கிற்குமான சர்வசன வாக்கெடுப்(referendum) பாகும். இத்தகையதொரு சர்வசன வாக்கெடுப்பு வெற்றி பெறுவதற்கான சாத்தியம் இல்லை என்பதைக் கூட மறுக்கும் அளவுக்கு வெளிநாட்டு (புலி) தமிழர் அரசியல் தெளிவின்றி இருப்பது கவலைக்குரியது. அப்படி வடக்கும், கிழக்கும் இணைவதற்கு அப்பிரதேசத்தில் வாழும் தமிழர் அல்லாத சோனகரும், சிங்களவரும் விருப்பம் தொ¢ரிவித்தாலும் வடமேற்கின் நிலை(நாடு கடந்த தமிழீழ அரசுக்கான விளக்கக் கோவையின் வரை படத்தின்படி)என்ன என்பதற்கு திரு. உருத்திரகுமரனுக்கேனும் பதில் தெரியும் என்பது சந்தேகமே.

மேலும் லண்டனை தளமாக கொண்ட புலி ஆதரவு பத்திரிகையான “ஒரு பேப்பர்”(Oru paper)ரின் ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. ரவி அருணாச்சலம் 2009 ஆரம்பத்தில் வெளிப்படுத்திய அவரின் பேராசையை, அதாவது இன்று உலகத் தமிழருக்கு தேவைப்படுவது இரண்டு நாடுகள், ஒன்று “தமிழ்நாடு” என்ற ஒரு தனி நாடு இந்தியாவிலும், “தமிழ் ஈழம்” என்ற தனிநாடு இலங்கையிலும் அமையப் பெறுவதற்கான சாத்தியமற்ற ஆசை, கைவிட்டு இலங்கையில் இரண்டு பிரதேச/மாகாண ஆட்சி அலகுகளை தம்வசம் வைத்திருக்க வடக்கையும். கிழக்கையும் ஒன்றாக இணைக்காமலும் அத்தகைய ஒரு யோசனைக்கு ஆதரவு அளிக்காமலும் இருப்பது தமிழர்களுக்கு எந்த வகையிலும் தீமையாக அமையாது. அத்துடன் இது கிழக்கில் இனங்களுக்கிடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதோடு வடக்குக்கும், கிழக்குக்கும் இடையேயும் விரிசலையும் ஏற்படுத்தாது. மாறாக இரண்டு பிரதேச/மாகான ஆட்சிகளைக் கொண்டிருப்பதால் தமிழருக்கு ஏற்பட்ட அல்லது ஏற்படப்போகும் ஆபத்தையும், வடக்கும், கிழக்கும் இணைவதால் ஏற்படப்போகும் நன்மையையும் தெளிவாக எடுத்துக்காட்ட ஆகக் குறைந்தது திரு. ரவி அருணாசலமாவது முன்வருவாரேயானால் இந்த இணைவின் அவசியத்தின் நியாய தன்மையை எல்லாரும் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். நிற்க.

ஐ.நா பொதுச் சபையினாலும், பாதுகாப்பு சபையினாலும், இஸ்ரேலும் அதன் அண்டை நாடுகள் தொடர்பாகவும், இஸ்ரேலு- பலஸ்தீன் தொடர்பாகவும், மேற்கொள்ளப்பட்ட சுமார் 100 க்கும் அதிகமான தீர்மானங்கள்(resolutions) இஸ்ரேலினால் தூக்கி வீசப்பட்டுள்ள நிலையில் இலங்கை தமிழர் இஸ்ரேலியரை போல் இருக்கவேண்டும் அல்லது செயல்பட வேண்டும் என்பது தர்க்க ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் (logically and ethically) பிழையானது என்பதோடு அது உலக அரசியலில் இருந்து அவர்களை ஓரங்கட்டும். இத்தகைய ஒரு செயலுக்கு தமிழர் என்றும் பிராயச்சித்தம் செய்ய வேண்டியவராவர். அதேநேரம் தமிழர் தங்களை பலஸ்தீனியரின் நிலையில் வைத்து பார்ப்பது உலக அரங்கில் அவர்களை என்றும் நகைப்புக்குரியவர்களாகவே காட்டி நிற்கும். ஏனெனில் ஒப்பிட்டு ரீதியில் அனைத்துலக சமூகத்தால் ஏற்றுக்கொள்ளபட்ட பலஸ்தீன போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக உலக சரித்திரத்தில் எங்குமே முன்னுதாரணம் இல்லாத செயலான, அதாவது நம் வார்த்தயில் சொல்வதானால் வேலியே பயிரை மேயுமாப் போல், கடைசிகட்ட யுத்தத்தில் தம் சொந்த மக்களையே வகைதொகை தெரியாமல் அங்கவீனராக்கியும், சுட்டுக் கொன்றும் இனஅழிப்பு செய்த புலிகளின் பயங்கரவாதத்துடன் (பிரபாகரனியம்/பிரபாகரனிஸம்) ஒப்பிடுவதும், அதை எந்தவித கேள்வியும் இல்லாமல் ஆதரித்த புலம்பெயர் புலி(புத்திஜீவிகளும்) ஆதரவாளர்களும், அவர்களால் வஞ்சகமான முறையில் வழி நடத்தப்பட்ட அப்பாவி தமிழரும் கூட தாங்கள் ஒடுக்கப்பட்டோருக்காக குரல் கொடுப்போராக உரிமை கோர முடியாதவர்களாகிய நிலையை ஏற்படுத்திய செயலாகும்.

எனவே எவ்வகையில் பார்த்தாலும் தமிழர் நிலையானது முற்றும் முழுதாக இஸ்ரேலின் நிலையையோ அல்லது பலஸ்தீனியரின் நிலையையோ பிரதிபலிக்கவில்லை, பிரதிபலிக்க வேண்டியதுமில்லை. ஒரு சில ஒருமைப்பாடுகள் அங்கொன்று இங்கொன்றாக காணப்பட்டாலும், இலங்கை தமிழரின் பிரச்சினை தனித்துவமானது, ஆகவே அதற்கு தனித்துவமான தீர்வே வேண்டும், தமிழரின் வாழ்விட சூழலுக்கு ஒவ்வாத “மாதிரி தீர்வுகள்”(Model solutions) உள்ள பிரச்சினைக்கு தீர்வாக அமைவதை விட புது பிரச்சினைகளை நிச்சயம் தோற்றுவிக்கும் என்பது எமது நிலைப்பாடு. ஆகவே தமிழர் தமிழராக மட்டும் நின்று தமது உரிமையை பெறமுயல்வது நன்று.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 Comments

  • ramalingam
    ramalingam

    இவ்வளவும் சொன்ன நீங்களே தமிழருக்கு என்ன தீர்வு என்பதையும் சொல்லியிருக்கலாமே? அந்த தீர்வை சொல்லியிருந்தால் உங்களையும் இனங்காண உதவியாக இருந்திருக்கும் அல்லவா?

    இவ்வளவு நாளும் தமிழரும் சிங்களவரும் மாறி மாறி தாங்களே பூர்விக குடிகள் என்றும் மற்றவர்கள் வந்தேறு குடிகள் என்றும் வரலாறு சொல்லி வந்தார்கள். ஆனால் இவர்கள் இரண்டு பேரும் சொன்னதில் ஒரு விடயம் ஒன்றாக இருந்தது. அது முஸ்லிம்கள் வந்தேறு குடிகள் என்பது. ஆனால் இன்று முதன் முதலாக சோனகர்கள் பூர்விக குடிகள் என்றும் மற்றவர்கள் வந்தேறு குடிகள் என்ற வரலாற்றை அறிகிறேன்.(இனிமேல் தமிழரும் சிங்களவரும் என்ன செய்யப் போகிறார்கள் பார்ப்பம்!)

    இந்த கட்டுரையாளர் நிஸ்தார் இவ்வளவு நாளும் எங்கே இருந்தார்? இதை அப்பவே சொல்லியிருந்தால் தமிழருக்கு இத்தனை அழிவு வந்திருக்காது அல்லவா? (இதை சிங்கள உறுமய கேள்விப்பட்டால் இனி முஸ்லிம்களுக்கு இரண்டு அடி கூட விழும். இந்த புண்ணியம் நிஸ்தாருக்கே சேரும்)

    Reply
  • ராஜதுரை
    ராஜதுரை

    வணக்கம்!

    விவாதத்தைத் தொடக்கி வைத்த நிஸ்தார் அண்ணைக்கு நன்றிகள்.

    “தமிழர் பூர்வீக குடிகளா? சிங்களவர் பூர்வீகக் குடிகளா? முஸ்லிங்கள் பூர்வீகக் குடிகளா?” என்கின்ற செல்லரித்துப் போன பழமையான வாதம் இன்னமும் எத்தனை காலத்துக்கு நம் அனைவராலும் முன்னெடுக்கப்படப் போகின்றது?

    என் கருத்துக்களைச் சொல்வதற்கு முன்னர் இந்தச் சாளரம் (web window) வழியாக உலகெங்கும் பரவி வியாபித்துள்ள தமிழ் கூறு நல்லுலகத்திடம் சில கேள்விகள் கேட்க விரும்புகின்றேன்.

    1. திராவிடர் என்பவர்கள் யார்? அவர்கள் என்கிருந்து வந்தார்கள்?
    2. திராவிடத்துக்கும் தமிழியத்துக்கும் என்ன சம்பந்தம்?
    3. தமிழர்தான் ஆதியான திராவிடர்களா?
    4. யார் ‘தமிழன்’ அல்லது ‘தமிழர்கள்’?
    5. யார் இலங்கைத் தமிழர்கள்?
    6. இலங்கைத் தமிழர்கள் திராவிடர்களா?
    7. இலங்கைத் தமிழரென்று மார் தட்டிக் கொள்ளுகின்ற சைவ வேளாளப் பெருங்குடியினர் மட்டுமே தான் தமிழர்களா?
    8. தமிழ் மொழி உண்மையில் யாருக்குச் சொந்தம்?

    பதில் கூற முனையுங்கள். என் கருத்துக்களை நாளை சொல்கின்றேன்!

    இப்படிக்கு,
    ராஜதுரை

    Reply
  • chandran.raja
    chandran.raja

    இராமலிங்கம் கேள்விகளை யோசித்துக் கேளுங்கள். தமிழருக்கே தீர்வு என்னவென்று தெரியாதுபோது நிஸ்தாருக்கு எப்படித் தெரியும்?.
    இடம்பெயர்தவர் அகதிகள் நோய்யாளர்கள் தொழில்லில்லாதவர்கள் தொழிலாளர்கள் கல்வியில்லாதவர்கள் கல்விவசதியில்லாதவர்கள் வீட்டுவசதி இல்லாதவர்கள் இப்படி எத்தனையோ தேவைகள் இருக்கு அதற்கு தீர்வும் இருக்கிறது.
    மலையகத்தமிழர் தமிழர்இல்லை. மூஸ்லிம்கள் தமிழர்இல்லை. சாதியால் ஒடுக்கப்பட்டவர்கள் தமிழர்இல்லை. இப்படியான பலசூத்திரங்களை உள்ளடக்கியது தான் தமிழர்என்ற பதம். மிகுதியை கண்டுபிடியுங்கோ……!.கண்டுபிடித்தால் எனக்கும் அறியத்தரவும்.

    Reply
  • BC
    BC

    தமிழர்கள்? யார் திராவிடர் என்பவர்கள் யார்? என்று இன்று சொலகிறேன் என்றார்கள் ஒன்றையும் காணவில்லை! தலைவர் சீமான் என்ன சொல்கிறார் என்றால் சுமார் 7000 ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கிய வளமும் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கண வளமும் கொண்ட தமிழர்களின் முன்னோர்கள்தான் ஏறத்தாழ 60,000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து உலகின் பல பாகங்களுக்கும் பரவிச் சென்ற முதல் மனித இனம் என்பதை அண்மைக்கால அறிவியல் கண்டுபிடிப்பான மரபணு ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன என்று. 60,000 ஆண்டுகளுக்கு முன்னபே முன்னோர்கள் வந்த இடம் என்றால் ஐரோப்பிய யூனியனும் எங்கள் புலம் தான்!

    Reply
  • thuari
    thuari

    இராசதுரையின் கேள்விகளிற்கு என்னாலான, தெரிந்த, அறிந்தவற்ரை எழுதுகின்றேன். திராவிடர் என்பதும், ஆரிய்ர் என்பதும் ஆதியினங்கள். இதில் திராவிடர் என்பவர்கள் தென் இந்தியாவைச் சேர்ந்தவ்ர்களாகவும் உள்ளன்ர்.

    மொழிகளைப் பொறுததவரை ஒன்றிலிருந்து இன்னொன்றும் இரு மொழிகள் சேர்ந்து ஒருமொழியாகவும் மாறியுள்ளன. மொழிகளின் ஒற்றுமையை நாம் இப்போதும் காணலாம்.

    காலப்போக்கில் தமிழரின் ஆட்சிகள் அழிந்து போனதற்கு யார் காரணம் என்பதை இன்னமும் ஒருவரும் வெளியில் கொண்டு வரவில்லை. ஆனால் திராவிடர் என்ற உணர்வினை ஊட்டி தென்னிந்தியாவில், அது பின்னர் தமிழகமாகி, இன்று கருணாநிதி, ஜெயலலிதாவின் குடும்பதில் வீழ்ந்துவிட்டது. இருப்பினும் கட்சிகளின் பெயர்கள் தி.மு.க, அ.தி.மு.க. ம.தி.ம.க, என நீண்டு கொண்டே போகின்றது.

    இதே நிலமைதான் எங்கள் ஈழத்தமிழர்களிற்கும். யாழ்மேலாதிக்கமே இலங்கையின் தமிழர்களிற்கு தலைமையாக இருக்க என்றும் விரும்பியது.

    இவர்கள் தமிழனாகப் பிறந்தவர்கள் அனைவரினதும் நலன்களை ஒருபோதும் கருத்திற்கொள்ளவில்லை. பதவியும் அடக்கியாழும் மனப்பான்மையும் கொண்டவ்ர்களாகவே உள்ளனர். இன்று நிலைமை இலங்கையில் மாறியிருந்தாலும் சமூக ரீதியில் புலத்திலும், இலங்கையிலும் தொடர்கதையாகவே உள்ளது.

    அன்று மனித இனம் ஒன்று, இன்று ஆரியர்,திராவிடர், இன்னும் பலர்,இந்தி மொழி,தமிழ் சிங்களம், ஆங்கிலம் இன்னும் எத்தனையோ. பார்த்தால் தமிழரும் சிங்களவ்ரும் கூட ஒரு இனமாக இருந்துள்ளார்கள். எல்லாம் காலப்போக்கில் இடைப்பட்டு வந்து மனித இனத்தினை பிரித்து வைத்து அழித்து வருகின்றது.

    இதனை உணர்ந்து வாழ்வோரே மற்ரவர்களிற்கு வழிகாட்டவும் மக்களைப் பாதுகாக்கவும் முடியும். பிரச்சினகளை வளர்த்து சுய நலம் காணுவோரை அடையாளம் காணாதுவிட்டால் தமிழினம் தன்னைத்தானே அழித்துக்ககொள்ழும்.

    விடுதலை கேட்டு போராட்டத்தை தொடங்கினோம். இன்று புலத்தில், சிறையிலிருந்தும் இலங்கையில் முட்கம்பி வேலிக்குள் இருந்துமாவ்து விடுதலை கிடைக்காதா என ஏங்குகின்றோம்.

    திராவிடக் குரல் தமிழகத்தில் கருணாநிதி குடும்பத்தை உருவாக்கியது. தமீழக் குரல் இலங்கையில் கே.பியையும் மேலும் பலரையும் புலமெங்கும் உருவாக்கியுள்ளது.

    எனவே மொழியென்பதை ஓர் வியாபாரப பொருளாக்க்கிய பெருமை தமிழினத்தையே சேரும். எனவே இந்தக்கட்டுரை சொல்வது போல் தமிழரின் நிலைப்பாடு தனிநாடு கேட்பதற்கும், போராடுவதற்கும் எந்த வகையிலும் ஏற்ரதல்ல. நாமெல்லோரும் தமிழரென்பதை உலகிற்கு வாழ்ந்து காட்டாமல், தமிழர், தமிழீழமென்பதெல்லாம் வீண்பேச்சும் சுயநலம் கொண்டவர்களின் பொழுதுபோக்குமேயாகும்.

    துரை

    Reply
  • ராஜதுரை
    ராஜதுரை

    உங்கள் கருத்துக்கு நன்றிகள் துரை, BC, உங்கள் அறைகூவலும் என்னால் ஏகமனதாக ஏற்கப்படுகின்றது. நான் காணாமல் போகவில்லை. இந்த விவாதத்தினை அவதானித்துக் கொண்டுதானிருக்கின்றேன்.

    ‘கருணாநிதி முதல் சீமான்வரை’ சினிமாப்படக் கருத்துக்கள் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட சித்தாந்தங்களில் இருந்து வெளிப்பட்டுச் சற்றே சுதந்திரமாக யோசியுங்கள். உங்கள் பதில்களைச் சொல்லுங்கள். அதன் பின் எனது கருத்துக்களைச் சொல்வேன்.

    இப்படிக்கு,
    ராஜதுரை

    Reply
  • BC
    BC

    இராசதுரை, திராவிடர் என்பவர்கள் யார்,திராவிடருக்கும் தமிழருக்கும் என்ன சம்பந்தம் என்பதை அறிவதற்காக தான் குறிப்பிட்டேன். திராவிடர் என்பது பற்றி தமிழ்நாட்டு அரசியல், சினிமா சேர்ந்தவர்கள் மட்டுமே கதைப்பது தெரிகிறது.நண்பர் வட்டத்தில் கதைக்கும் போது ஒருவர் சொன்னார் திராவிட கழகத்தை தொடங்கிய பெரியார் கன்னடத்தை சேர்ந்தவர் என்றும் என்றும் அதனால் தான் அப்படி பெயர் வைத்ததாக.

    Reply
  • ராஜதுரை
    ராஜதுரை

    BC, கன்னடர்களும் திராவிடர்கள்தான். ஏன், இன்றைய பாக்கிஸ்தானின் பலுச்சிஸ்தான் பகுதியில் உள்ள பிராகுயி மொழி பேசுகின்ற மக்களும் ஈரான் ஈராக்கில் சிதறலாகப் பரவிக் கிடக்கின்ற அவர்களின் கிளைக்கோத்திரங்களும் கூடத் திராவிடர்கள்தான். ‘பிராகுயி’ மொழியானது முன்னைத் தமிழ்மொழியின் பழமையான வடிவமென்றும் கருதப்படுகின்றது.

    தமிழர் திராவிடச் சமூகத்தின் ஒரு பகுதியே. ஆயினும் எனது கேள்வி மொழியியல் மூலம், பரம்பரையியல் மரபணுச் சான்றுகள், உருவவியல் எல்லாவற்றையும் விஞ்சி “தமிழன்” மற்றும் “திராவிடன்” என்னும் அடையாளம் பற்றியது.

    பழமைவாதத்திலும் வறட்டுக் கெளரவதிலும் ஊறிக் கெட்டுப் போகாமலிருக்க எமது சமூகம் இன்னமும் பழகிக்கொள்ளவில்லை என்பதுதான் இங்கு வருத்தத்துடன் சுட்டிக்காட்டப் பட வேண்டியது!

    மேலும் விவாதியுங்கள்… இன்னமும் நீங்கள் சரியான இடத்துக்கு வந்து சேரவில்லை என்றுதான் நினைக்கின்றேன்!

    Reply
  • siddeek
    siddeek

    I appreciate you for the time you have spent to write this.

    Reply