யாழ்ப் பாணத்தில் இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி ஏமாற்றும் நபர்களின் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. சில தினங்களுக்கு முன்னர் நான்கு பேரிடம் வெளிநாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி பணம் பெற்று ஏமாற்றிய நபரொருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
வெளிநாட்டில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக மாணவர்களிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் கணனி நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டார்.
லண்டனுக்கு அனுப்பி தொழில் வாய்ப்பினைப் பெற்றுத்தருவதாகக் கூறி குறித்த நபர் நான்கு மாணவர்களிடம் 18 இலட்ச ரூபா பெற்றுள்ளார். அம்மாணவர்களிடம் போலிச் சான்றிதழ்களையும் அவர் வழங்கியுள்ளார். இந்த ஏமாற்று நடவடிக்கை தொடர்பாக இம்மாணவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இம்முறைப்பாட்டை அடுத்தே இவர் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு வெள்ளவத்தையைச் சேர்ந்தவர் எனத் தெரியவருகிறது. ஒக்ரோபர் 02 இல் கைது செய்யப்பட்ட இந்நபர் ஒக்ரோபர் 04ல் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ. ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். வழக்கை விசாரணை செய்த நீதவான் குறிப்பிட்ட நபரை 75 ஆயிரம் ரூபா பெறுமதியான இரண்டு ஆள் பிணையில் செல்ல உத்தரவிட்டார்.
கொழும்பு வெள்ளவத்தையைச் சேர்ந்த க. அம்பிகைகுமார் என்பவரே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நால்வரிடம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பணம் பெற்றவராவார். மூவரிடம் ஐந்து இலட்ச ரூபாவும், ஒருவரிடம் மூன்று இலட்ச ரூபாவும் இவர் பெற்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மேலும் ஒருவர் வெளிநாட்டுக்கு கல்வி பயில அனுப்புவதாகக் கூறி மூவரிடம் பணம் பெற்று ஏமாற்றியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.