“இ.தொ.கா. கள்ள மௌனம் காப்பதாக மனோகணேசன் கூறியுள்ள கருத்தானது தவறான புரிதலாகும்” – மனோகணேசன் கருத்துக்கு செந்தில் தொண்டமான் பதில்.

மனோ கணேசன் இ.தொ.கா மீதான தமது தவறான புரிதலை மாற்றிக்கொள்ள வேண்டும். மலையக மக்களின் பிரதிநிதிகளாகவே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்றும் செயற்படும்“ இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன், புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழு விவகாரத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கள்ள மௌனம் காப்பதாக கூறியுள்ளமை தொடர்பில் விளக்கமளித்து வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இ.தொ.கா. கள்ள மௌனம் காப்பதாக மனேகணேசன் கூறியுள்ள கருத்தானது தவறான புரிதலாகும். இ.தொ.காவின் உபத் தலைவர் என்ற அடிப்படையில் அவருக்கும் அந்த செய்தியை வாசித்த மக்களுக்கும் தெளிவுப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்டுள்ள பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் இ.தொ.கா. இரண்டு எம்.பிகளை கொண்டுள்ளதுடன், மலையக மக்களின் அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தி வருகிறது.

இ.தொ.காவின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன் ஆகியோர் நாடாளுமன்றம் மற்றும் அரசாங்கத்தின் ஊடாக மலையக மக்களுக்குத் தேவையான அனைத்து பணிகள் குறித்தும் கவனம் செலுத்துவது மட்டுன்றி மலையக மக்களின் உரிமைகளை பாதுகாப்பதிலும் அவதானமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

இ.தொ.காவின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மறைவின் பின்னரும் இ.தொ.கா. கருத்து வேறுபாடுகளின்றி பிளவின்றி செயல்பட்டு வருகிறது. ஒரு தலைவர் இறந்த பின்னர் கட்சிகள் பிளவுபடுவதுதான் வழமையாகும்.

தலைவர் மறைந்த பின்னரும் இ.தொ.கா சக்திவாய்ந்த அமைப்பாக பிளவுபடாது உள்ளதுடன் கட்சியில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றோம்.

அரசியல் ரீதியாக சில முடிவுகள் வெளிப்படையான எடுக்கும் சூழ்நிலை அமையும் என்பதுடன் சில முடிவுகளை காலம் சென்றே அமுல்படுத்த முடியும். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தை அனைத்து சந்தர்ப்பங்களிலும் காப்பாற்றிய பலமான அமைப்பாக இருந்தது.

இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் ஒரு இராஜாங்க அமைச்சரையும் வைத்திருந்தது. அரசாங்கத்தை காப்பாற்றிய அமைப்பாக இருந்தாலும் பல விடயங்களில் மலையக மக்களுக்குத் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் சிக்கல் நிலைமைகள் இருந்ததை அவர்களும் அறிவர். நாமும் அறிவோம்.

அப்படியான சூழலில் இன்று மலையக மக்களின் ஆதரவின்றி தனி பெரும்பான்மையை பெற்றிருக்கும் பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன், அவதானமாகவும் மலையக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய செயற்படும் ஓர் அமைப்பாகவும் இ.தொ.கா. பணியாற்றி வருகிறது.

ஐ.தே.க. அரசாங்கத்தால் 1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பில் மலையக மக்களின் பிரதிநிதிகள் எவரும் இருக்கவில்லை. அதேபோன்று 1972ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டிருந்த அரசியமைப்பிலும் மலையக பிரதிநிதிகள் எவரும் இருக்கவில்லை என்பதை நினைவுப்படுத்த விருப்புகிறேன்.

மலையக பிரதிநிதி ஒருவரை சேர்க்கக் கூடாதென எவரும் கூறவில்லை. சேர்ப்பதற்கான முயற்சிகளையே எடுத்து வருகின்றோம். மலையக பிரதிநிதி ஒருவர் புதிய அரசியமைப்புக்கான நிபுணர் குழுவின் உள்ளே இருக்க வேண்டுமென ஏற்கனவே அரசாங்கத்திற்கு இ.தொ.கா. பரிந்துரைத்துள்ளது. அதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளமையின் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. என்றாலும் விரைவில் அது கைகூடும் என நாம் நம்புகிறோம்.

அதுமாத்திரமின்றி இ.தொ.கா. ஒவ்வொரு முடிவுகளையும் எடுக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மலையக மக்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்காது செயற்படும்.

அதில் அனைவரும் உறுதியாக உள்ளனர். இந்த அரசாங்கம் அமைக்கப்பட்டு ஒருமாதம்தான் ஆகியுள்ளது. எமக்கு கால அவகாசம் வேண்டும். புதிய அரசாங்கத்தின் புதிய செயல்திட்டங்களை ஆராய்ந்து அரசியல் ரீதியாகவும் தொழிற்சங்க ரீதியாகவும் ஒன்றிணைந்து செல்பட்டு கொண்டிருக்கும் போது மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியான இ.தொ.கா. அந்த மக்களின் பாதுகாப்புக்கும் உரிமைகளுக்கும் என்றும் முன்னுரிமை வழங்கி செயல்படும்.

அதனால் மனோ கணேசன் இ.தொ.கா மீதான தமது தவறான புரிதலை மாற்றிக்கொள்ள வேண்டும். மலையக மக்களின் பிரதிநிதிகளாகவே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்றும் செயற்படும்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *