யுத்த சூழலில் பாரிய பாதிப்பு பொதுமக்களுக்கே – ஜோன் ஹோம்ஸ்

John_Holmes_UNஇலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டு திரும்பியுள்ள ஐக்கிய நாடுகளின் மனிதாபிமானத்துறை பிரதிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் நேற்று தமது விஜயம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இதன்போது அவர் இலங்கையில் தாம் கவனித்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அதுவும் இந்த வருட ஆரம்பம் முதல் ஏற்பட்டுள்ள நிலைமை பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார். படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெறும் யுத்த சூழலில் வன்னியில் அதிகமான மக்கள் சிக்குண்டுள்ளனர். அத்துடன் அங்கிருந்து அவர்களை வெளியேறுவதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் தடுத்து வருவதற்கான உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாக ஹோம்ஸ் தமது உரையின் போது தெரிவித்தார்.

இந்த நிலையில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 14 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் அவர்கள் தற்போது தங்கியுள்ளனர்.அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் 70 ஆயிரம் மக்களே உள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. எனினும் ஐக்கிய நாடுகள் சபையும் ஏனைய தமிழ் தரப்புகளும் வன்னியில் 2 லட்சம் முதல் 3 லட்சம் வரையிலான மக்கள் சிக்குண்டுள்ளதாக தெரிவித்துள்ளன. யுத்தத்தினால் அதிகம் பொதுமக்களே அங்கு பாதிக்கப்படுவதாக நம்பப்படுகிறது. எனினும் தன்னார்வு நிறுவனங்கள் மற்றும் ஊடகங்கள் அங்கு செயற்படாமை காரணமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை பெறமுடியவில்லை. எனினும் நாள் ஒன்றுக்கு குறைந்தது பல பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர்; பலர் காயமடைகின்றனர் எனத் தாம் நம்புவதாக ஹோம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

தமது விஜயத்தின் போது அரசாங்க தரப்பு ஜனாதிபதி மற்றும் முக்கியமான தமிழ்க் கட்சி ஒன்றின் தலைவர் ஆகியோரை சந்தித்ததாகத் தெரிவித்த ஹோம்ஸ், இணைத்தலைமை நாடுகளின் பிரநிதிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியதாகக் குறிப்பிட்டுள்ளார். இடம்பெயர்ந்து வருபவர்களுக்கு மேலும் 400 ஏக்கர் நிலத்தில் தற்காலிக இருப்பிடங்கள் ஒதுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. தற்போது 25 ஏக்கர் நிலப்பரப்பிலேயே 25 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வன்னியில் இருந்து வெளியேறுவோரை கண்காணிப்பதற்காக ஐ.நாவின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தினரை (UNHCR) அனுமதிப்பது என அரசாங்கம் தம்மிடம் உறுதியளித்துள்ளதாக ஹோம்ஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் இடம்பெயர்ந்த நலன்புரி முகாமில் தங்கியுள்ளவர்களில் 60 வயதுக்கும் மேற்பட்டோரை சுதந்திரமாக நடமாடுவதற்கும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. அதேவேளை யுத்தம் முடிவடையும் நிலையில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்று காணப்படவேண்டும் என தாம் வலியுறுத்தியுள்ளதாகவும் ஹோம்ஸ் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *