திருகோணமலை சென்.மேரிஸ் கல்லூரி தரம் 1 மாணவியான (6 வயது) வர்ஷா யூட் ரெஜினால்ட் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவத்தை கிழக்கு மாகாணத் தமிழ் ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
“இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் திருகோணமலை மாவட்டத்தில் மாத்திரமல்ல எமது நாட்டின் எப்பாகத்திலும் இடம்பெறக்கூடாது என்பதே எமது சங்கத்தின் கோரிக்கையும் பிரார்த்தனையும் ‘ என்று சங்கத்தின் தலைவர் ஆர்.ஜெறோம், பொதுச் செயலாளர் கு.நளினகாந்தன் வெளியிட்ட கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் பாடசாலை மாணவ சமூகத்தில் இடம்பெறாமலிருப்பதை உறுதி செய்யக் கடும் நடவடிக்கைகளை கிழக்கு மாகாண முதலமைச்சர், மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி, பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் போன்ற உயர் அதிகாரிகள் எடுக்க வேண்டும் என எமது சங்கம் கோருகின்றது. 6 வயது மாணவி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு உரப்பையில் வீதியில் போடப்பட்ட சம்பவத்தை சங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன் மாணவியின் இழப்பால் துயருறும் பெற்றோர், குடும்பத்தினர், பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள், மாணவியர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் சங்கம் தெரிவித்துக் கொள்கிறது’ என்றும் சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.