மருத்துவ உபகரண பற்றாக்குறையால் புற்றுநோயாளிகளின் உயிருக்கு ஆபத்து – சபையில் சஜித்பிரேமதாச !

சுகாதாரத் துறைக்குத் தேவையானளவு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்களை போதியளவு வழங்கும் விடயத்தில் இன்று அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகவும், அதிலும்,புற்று நோயாளர்களின் சிகிச்சைக்கு அத்தியாவசியமான கதிரியக்க சிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் பராமரிப்புப் பிரச்சினைகளினால் அதிகளவான புற்றுநோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று(22) பாராளுமன்றத்தில்,பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27/2 மூலம் கேள்விய எழுப்பிய வன்னமே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சிறப்பான சுகாதார சேவையை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆனால் சுகாதார துறைக்கு போதுமான மருத்துவ உபகரணங்களை அரசாங்கத்தினால் விநியோகிக்க முடியாதுள்ளது.

அத்துடன் புற்றுநோயாளர்களுக்கு தேவையான கதிர்வீச்சு உபகரணங்களுக்கான பற்றாக்குறை மற்றும் பராமரிப்பு தொடர்பான பிரச்சினைகளால் அந்த நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி அரச சுகாதார துறையில் ஆளணி முகாமைத்துவமும் பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளது. இதன்படி சில விடயங்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து பதில்களை எதிர்பார்க்கின்றேன்.

புற்றுநோய்க்காக பயன்படுத்தும் எலக்டா கம்பக்ட், எலக்டா செலர்ஜிக் பிளட்போர்ம், எலக்டா செலர்ஜி கதிர்வீச்சு உபகரணங்களை சுகாதார அமைச்சுக்கு பெற்றுக்கொள்வதற்காக 2013 ஆம் ஆண்டில் வெளிநாட்டு நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதா? அந்த ஒப்பந்தத்தை சபையில் முன்வைக்க முடியுமா? அந்த உடன்படிக்கை தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக விநியோக தரப்பினருடன் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர். எதிர்காலத்தில் குறைந்த விலையில் அந்த உபகரணங்களை வழங்குவதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தவறான உபகரணங்களை கொண்டு வந்து மோசடிகளை செய்து, தவறுகளை சரி செய்வதற்காக புதிதாக அந்த நிறுவனத்திடம் நஷ்ட ஈடாக மறுசீரமைப்பு உத்தரவாதத்தை பெற்றுள்ளனர். அந்தளவுக்கு ஊழல் நடந்துள்ளது. ஊழலை சீர் செய்ய எடுத்த நடவடிக்கை இப்போது செயற்படுத்தப்படுகின்றதா?

தரமான உபகரணங்கள் இல்லாமையினாலும் போதுமான கதிர்வீச்சு உபகரணங்கள் இல்லாமையினாலும் வருடாந்தம் காப்பற்றாக்கூடிய ஐயாயிரத்திற்கும் அதிகமான புற்றுநோயாளர்கள் உயிரிழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதனை அரசாங்கம் அறிந்துள்ளதா? அப்படியாயின் புதிய உபகரணங்களை கொள்வனவு செய்யவும், அதற்கான கட்டிடத்திற்கும் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுமா? என்றார்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *