புலம்பெயர் வாழ்வியல்

புலம்பெயர் வாழ்வியல்

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் அவர்களுடைய வாழ்வியல், சமூக, அரசியல் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

‘மனுசி ஒரு பொம்பிளை’ ஆக இருப்பது ரொறன்ரோ மேயருக்கான தகுதி! – சிரிபிசி வானொலியின் சர்ச்சைக்குள்ளான விளம்பரம் : த ஜெயபாலன்

George_Smitherman_Mayoral_Candidate_TorontoRob_Ford_Mayoral_Candidate_Torontoதற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கனடாவின் ஒன்ராரியோ மாநிலத்திற்கான உள்ளுராட்சி சபைக்கான தேர்தலில் தமிழ் மக்கள் செறிந்துவாழும் ரொறன்ரோ மேயர் பதவிக்கான தேர்தலும் நடைபெறுகிறது. ரொறன்ரோ சனத்தொகையும் நிதிவருவாயும் அதிகமுள்ள கனடாவின் ஆறாவது பெரும் அரசாங்கமாகும். இதனைக் கைப்பற்ற Rocco Rossi, George Smitherman, Joe Pantalone, Rob Ford ஆகிய நால்வர் போட்டியிடுகின்றனர். முன்னாள் கவுன்சிலர் றொப் போர்ட், ஒன்ராரியோவின் முன்னாள் துணை முதல்வர் ஜோர்ஜ் ஸ்மிதர்மன் ஆகியோருக்கும் இடையே கடும் போட்டி உள்ளது. புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகச் செல்வாக்குச் செலுத்துகின்ற உலகத் தலைநகர்களில் ரொறன்ரோ முக்கியமானது.

இந்தத் தேர்தலில் வலதுசாரியான றொப் போர்ட் க்கு சார்பான நிலைப்பாட்டைக் கொண்ட சிரிபிசி வானொலி லிபரல் கருத்தியல் உடையவரும் ஒத்தபாலுறவைக் கொண்டவருமான ஜோர்ஜ் ஸ்மிதர்மன் க்கு எதிராக அவருடைய பாலுறவை கொச்சைப்படுத்துகின்ற விளம்பரம் ஒன்றை வெளியிட்டு உள்ளது. தேர்தலில் றொப் போர்ட்க்கும் ஜோர்ஜ் ஸ்மிதர்மன் க்கும் இடையே கடுமையான போட்டி நிலவுககையில் அவர்களுக்கு இடையே ஒரு வீத வாக்கு வித்தியாசமே காணப்படுவதாக வாக்களிப்பைத் தொடர்ந்து எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ரொறன்ரோவில் 40 வீதமானவர்கள் தென்னாசியாவையும் ஆபிரிக்காவையும் சேர்ந்தவர்கள். இவர்களது சமய கலாச்சாரக் கூறுகள் ஒத்தபாலுறவுக்கு எதிரானது ஆகையால் இத்துருப்புச்சீட்டு லாவகமாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது. 

வலதுசாரியான றொப் போர்ட் சிறுபான்மை இனங்களிடையே காணப்படுகின்ற ஒத்தபாலுறவுக்கு எதிரான சமய கலாச்சாரக் கூறுகளைக் குறி வைத்து இவ்வாறான விளம்பரங்களுக்கு துணையாக நின்றிருக்கலாம் என கனடியப் பத்திரிகைகள் சந்தேகம் வெளியிட்டுள்ளன. ஆனால் ‘மற்றையவருடைய வாழக்கைத் தெரிவு பற்றி எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. நான் பன்மைத்துவத்தை ஆதரிப்பவன். அந்த விளம்பரத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை’ என்கிறார் றொப் போர்ட்.

தேர்தல் முடிவுகள் ஜோர்ஜ் ஸ்மிதர்மன் க்கு எதிரானதாக அமைந்தால் ஒத்தபாலுறவுக்கு எதிரான இவ்விளம்பரம் பாரிய சட்டச் சிக்கலுக்கு உள்ளானதாகலாம். ஜோர்ஜ் ஸ்மிதர்மன் இத்தேர்தலில் வெற்றி பெற்றாலும் ஒரு குறிப்பிட்ட பாலியல் சமூகத்திற்கு எதிரான இவ்விளம்பரம் ஒரு அலையை ஏற்படுத்தும் என்பதில் வியப்பில்லை. ஒத்த பாலுறவுச் சமூகத்தை பிரிதிநிதித்துவப்படுத்துகின்ற ‘எக்ஸ்ரா’ என்ற அமைப்பு ஏற்கனவே இவ்விளம்பரத்தை கடுமையாகக் கண்டித்து உள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் என்று சிரிபிசி வானொலியில் ஒலிபரப்பப்பட்ட விளம்பரம்:
‘முதலாமவர்: மணியன்னை மேயர் எலக்சனில யாருக்கு உங்கள் வோட்டுக்கள்?
இரண்டாமவர்: (நளினச் சிரிப்புடன்) இதென்ன கேள்வி. நான் தமிழனடா. எங்களுக்கு சமயம், கலாச்சாரம் என்று இருக்கு. ரொப் போட்டை எடுங்கோ அவற்றை மனுசி ஒரு பொம்பிளை.
அதுமட்டுமல்ல வீடு வேண்டேக்க மாற்று வரி மற்ற வரிகளையும் குறைப்பாராம்.

முதலாமவர்: அப்ப இமிகிரேசன்?
இரண்டாமவர்: (மீண்டும் நளினச் சிரிப்புடன்) அது பெடரல் கவுமன்ற் விசயம். வெள்ளையன்ர வோர்ட்டை எடுக்க வாக்கும்.
முதலாமவர் அப்ப நானும் ரொப் போரட் க்குத் தான் போடப்போறன்.’

இந்த விளம்பரத்தில் ரொறன்ரோ மேயர் ஆவதற்கு வேட்பாளரின் ‘அவற்றை (றொப் போர்ட் இன்) மனுசி பொம்பிளை’ யாக இருப்பது முக்கிய தகுதியாகக் காட்டப்படுகின்றது. ஏனெனில் எதிராக நிற்கின்ற வேட்பாளர் ஜோர்ஜ் ஸ்மிதர்மன் ஒத்தபாலுறவுடையவரை மணந்து ஒரு குழந்தையையும் தத்தெடுத்து வளர்க்கின்றார்.

வலதுசாரியான றொப் போர்ட்டை ஆதரிக்கின்ற அதே வலதுசாரிக் கருத்துக்களைப் பரப்புகின்ற சிரிபிசி வானொலி ஜோர்ஜ் ஸ்மிதர்மன் யை ‘அலி’ எனவும் விமர்சித்துள்ளார். ஒருவருடைய பாலியல் தன்மை தொடர்பாக மெலினத் தன்மையைக் கடைப்பிடித்த இவ்வானொலி, மேற்படி விளம்பரம் தொடர்பாக எதனையும் குறிப்பிடவில்லை. அதேசமயம் இவ்வாறான ஒரு விளம்பரம் ஒரு கிறிஸ்தவ அமைப்பினரூடாக தங்களுக்கு வந்ததாகவும் அதனை விளம்பரப்படுத்த தாங்கள் மறுத்துவிட்டதாகவும் சிரிஆர் வானொலியின் சார்பில் ராகவன் பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக தேசம்நெற் சிரிபிசி வானொலியுடன் தொடர்பு கொண்ட போதும் எமது அழைப்பிற்குப் பதில் இல்லை.

‘வெள்ளையன்ரை வோர்ட்டை எடுக்கவாக்கும்’ போன்ற இனவாதமான கருத்துக்களும் வெளியிடப்பட்டு உள்ளது. வெள்ளையர்கள் குடிவரவாளர்களுக்கு எதிரானவர்கள் என்பதை கட்டமைத்துக் கொண்டே அவ்வாறு குடிவரவாளர்களுக்கு எதிரானவருக்கே வாக்களிக்குமாறு அத்தமிழ் விளம்பரம் கோருகின்றது. அண்மையில் கனடாவிற்கு கப்பலில் வந்த நூற்றுக் கணக்காண தமிழர்களுக்கு எதிராக றொப் போர்ட் கருத்து வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் புதிய குடிவரவாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் றொப் போர்ட் கோரி உள்ளார். அவ்வாறு இருந்தும் அண்மையில் குடியேறிய தமிழ் சமூகத்தின் வானொலி குடிவரவுக்கு எதிரானவரை ஆதரிக்குமாறு விளம்பரப்படுத்தியது முரண்நகையாக உள்ளது.

அதற்கு முக்கியமாக எதிர்த்தரப்பு வேட்பாளரின் பாலியல்தன்மை காரணமாகி உள்ளது. வட அமெரிகாவிலேயே ஒத்தபால் திருமணங்களை ஏற்றுக்கொண்ட நாடு கனடா. பாலியல் தொடர்பாக லிபிரல் கருத்துக்களை உடையநாடு. அங்கு ஒருவருடைய பாலியல் தன்மை அடிப்படையில் பாரபட்சம் காட்டுவது சட்டத்திற்கு முரணாணது. உள்ளுணர்விற்கு ஒவ்வாதது.

இந்த விவகாரம் தொடர்பாக வானொலி, தொலைக்காட்சியை கண்காணிக்கின்ற சிஆர்ரிசி அமைப்புக்கு குற்றச்சாட்டுக்கள் சென்றுள்ளது. சிஆர்ரிசி அமைப்பும் விசாரணைகளை ஆரம்பிக்கலாம் எனத் தெரிய வருகின்றது.

இவ்விளம்பரத்துக்கு எதிராக கனடிய தமிழர்கள் மத்தியில் பரவலான எதிர்க் கருத்துக்களும் கிளம்பி உள்ளது. இவ்விளம்பரத்தை வெளியிட்டமை இனவாதமானது, ஒத்த பாலுறவுக்கு எதிரானது, எவ்வாறான அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் இவ்வாறான மோசமான விளம்பரங்களை வெளியிட முடியாது என பலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

ஐக்கிய ராஜ்ஜியத்தின் எல்லை முகவரகமும் வெளிநாட்டு மாணவர்களும் : நிஸ்தார் மொகமட்

UKBAமாணவர் என்ற போர்வையில் இங்கிலாந்துக்குள் நுழைபவர்களின் தொகை வருடாவருடம் கூடிச் செல்வதுடன் 2004ம் ஆண்டில் அது என்றும் இல்லாதவாறு 186,000 என்ற எண்ணை எட்டியது. இதில் படிப்பபை வெற்றிகரமாக முடித்தோர், முடியாமல் பாதியில் முறித்தோர் எல்லாரையும் சேர்த்து பார்த்தல் அவர்களில் 1/5 பங்கினரே தம் நாட்டுக்கு திரும்பி போகிறார்களாம். மற்றவர் கதி என்ன? குடிவரவுத் திணைக்களத்தைப் பொறுத்தவரை இவர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்பி விட்டனர். ஆனால் திரும்பவில்லை, இங்கேயே உள்ளார்கள், அதுவும் தலைமறைவாக (Underground) என்பது குடிவரவு திணைக்களத்துக்கு எதிரான மற்றோர்களின் அறிக்கை. அப்படிப்பட்டவர்கள் துணிச்சலாக underground (சுரங்கப்பாதை)யிலும் வெளிப்படையாக வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் வெளிப்படை இரகசியம். இதில் பலர் குடிவரவு சட்டத்தின் ஓட்டையை பாவித்தும், இங்கிலாந்து அரசாங்கம் வேண்டுமென்றே சட்டத்தை ஓட்டையாக்கி வைத்து அதனுள் புகுந்து விளையாடுங்கள் என்று அனுமதித்துள்ளதாலும் அதைபாவித்து தம்மை இங்கேயே நிரந்தர வதிவிடக்காரர்களாக்கி விடுகின்றனர் (indefinite leave to remain holders). ஆனால் எல்லாருக்கும் இந்த விளையாட்டில் நேரத்தையும், பணத்தையும் செலவுசெய்ய விரும்பமில்லை.

இப்படி மாணவர்கள் வருவதும், போவதுமாய் இருந்தாலும் இங்கிலாந்து அரசாங்கம் இதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முகமாக அவுஸ்திரேலியாவில் கடைபிடிக்கப்படும் புள்ளிகள் அடிப்படையிலான (Points Based System) குடிவரவு முறையொன்றை 2008ல் அறிமுகப்படுத்தி, அதை 1, 2, 3, 4, 5 என்று தட்டுகளாக(Tier) பிரித்து பொதுவாக இங்கிலாந்துக்குள் உள் நுழைவோரை கட்டுப்படுத்த முயற்சித்தது.

இந்த அடிப்படையில் இந்த மாணவர்களை கட்டுப்படுத்தும் முகமாக PBSசின் தட்டு 4 (Tier 4) என்ற புள்ளிகள் அடிப்படையிலான முறையை 31.03.2009ல் அரசாங்கம் அமுல்படுத்தியது. இந்த தட்டு 4 தொடர்பாக, இது திறமைமிக்க மாணவரை மாத்திரம் உள்வாங்கும் முறை, சரியான வடிகட்டல் முறை, நீதியான கட்டுப்படுத்தல் முறை, புதிய அறிமுகம் என்ற முன்னுரைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும்போதே மாணவர் தொகை சத்தம் சந்தடி இன்றி கூடிச் சென்று விட்டதாம். 2010 ஜுன்னுக்கு முன்னான 12 மாத காலத்தில் மாத்திரம் இந்த மாணவர் தொகை 288,000தை எட்டியதாம். கற்பதில் என்னே ஆர்வம், புல்லரிக்கிறது. இந்த மாணவருடன் கூடவே வந்து தொல்லை கொடுப்போராக ஐக்கிய இராச்சிய எல்லை முகவர் நிலைய (United Kingdom Border Agency)த்தால் கருதப்படும் அவர்களில் தங்கி இருப்போரையும் சேர்த்தால் அதே காலப்பகுதியில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 320,000.

அட 60மில்லியன் மக்கள் உள்ள நாட்டில் இந்த மூன்று இலட்சத்தி இருபதினாயிரம் என்பது ஒரு சிறு தொகைதானே என்றால், அது சரி இதில் இரண்டு மடங்கு என்றாலும் எமக்கு பரவாயில்லை, ஆனால் இங்கு வந்தால் படித்தோமா, இல்லை படித்து கிழித்தோமா அலுவல் முடிய நடையை கட்டிவிட வேண்டும், அதுதான் எமது எதிர்பார்ப்பு என்று ஆளும் அரசாங்கம் முதல், சாதாரண பிரசைவரை எல்லாரும் ஒருமித்து குரல் எழுப்புகிறார்கள். அவுஸ்திரேலிய PSB முறையை கடைபிடிக்கும் இங்கிலாந்து அங்கு நடந்த வெளிநாட்டு மாணவர்களை, குறிப்பாக இந்திய மாணவரை தீயிட்டும், வெட்டியும், அடித்தும் கொன்ற சம்பவங்களை முன்னுதாரணமாக கொள்ளாதவரை சந்தோசம்.

ஒப்பிட்டு ரீதியில் இங்கிலாந்தில் மேற்படிப்பை வழங்கும் நிறுவனங்கள், அதாவது வெளிநாட்டாரின், அதிலும் குறிப்பாக ஆசிய, ஆபிரிக்கரின் நிறுவாகங்களில் நடாத்தப்படும் கல்வி நிறுவனங்கள் சிறந்த(?) கல்வி வழங்களை விட ஒரு வகையில் குடிவரவை ஊக்குவிக்கும் நிறுவனங்களாகவே செயற்படுகின்றன. இந்த நாட்டில் கல்விசேவையில் ஈடுபடும் நிறுவனங்கள் தங்களை சிந்தனை/கண்டுபிடிப்புக்கள், பல்கலைக் கழகங்கள், திறமைகளுக்கான திணைக்கள (Department for Innovation, Universities and Skils) சுருக்கமாக DIUS, த்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அந்த திணைக்களம் இந்த நிறுவனங்களை A,B என்ற தரவரிசைபடுத்தி, காலத்துக்கு காலம் அவர்களின் தரத்தையும், நற் போக்குகளையும் கணக்கிட்டு(Appraisal) ஒரு கல்வி நிறுவனம் தொடந்தும் இந்த DIUS சின் பதிவில் இருப்பது நிச்சயிக்கப்படும். இப்படி இதில் இருந்து நீக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் தெரியாமல் காசை கட்டி, விஸாவும் இல்லாமல், கட்டிய காசும் இல்லாமல் அல்லலுறும் மாணவர் ஆயிரமாயிரம். இப்படிபட்டோரில் கோயில்களின் அன்னதானம் விடயம் அறிந்தவர்கள் ஒரு நேரபசியை போக்கிக் கொள்வதற்கு அங்கே தஞ்சமடைவதையும் அனேகர் கண்டிருப்பீர்கள்.

சில வேளைகளில் சரியான கல்வி நிறுவனத்தில்தான் சேர்ந்துள்ளோம் எமக்கு பயமில்லை என்றிருக்கும் மாணவர்களும் வேறுவிதமாக மாட்டிக்கொள்வதும் கண்கூடு. இந்த தட்டு 4 முறையின் கீழ், மேலதிக வதிவிட அனுமதி கோரி விண்ணப்பிக்கும் போது மாணவர்கள் மீதமாக இருக்கும் கற்கைநெறி பணம் (Course fee), மற்றும் தங்களை பராமரித்துக் கொள்வதற்கான பணமாக லண்டனும், லண்டனை சூழவுள்ள பகுதிகளில் கற்போராயின் மாதமொன்றுக்கு 800 பவுண்டுகளும், லண்டனுக்கு வெளியேயாயின் 600 பவுண்டுகளுமாக ஆகக் குறைந்தது மூன்று மாதங்களுக்கான பணம் தொடர்சியாக UK வங்கிக் கணக்கில் வைப்பில் இருக்க வேண்டும் என இந்த விடயத்தை கையாளும் உள்நாட்டு விவகார அமைச்சின் (Department for Home Affairs) குடிவரவு விதிகள் (Immigration Rules) கூறுகிறது. இந்த இடத்தில்தான் பங்கீனாவின் பார்வை உள்நாட்டு திணைக்களத்தின் மேல் மெல்ல படத்தொடங்கியது.

UK யின் குடிவரவு விவகாரமானது எப்போதுமே ஒரு சூடான பேசு பொருளா(hot topic)கவே காணப்படுகின்றது. உதாரணமாக, UK வெளிநாட்டவரால் நிறைந்து விட்டது, இனி வழிவதுதான் தாமதம் அதற்கு முன்னால் அதை கட்டுப்படுத்த வேண்டும் என்பதும், இந்த வெளிநாட்டார் உள்நாட்டாரின் தொழில் வாய்ப்புகளையெல்லாம் அபகரித்து விடுகின்றனர் எனவே மக்கள் வெகுண்டெழுந்து எசக்கு பிசகாக ஏதாவது நடந்தேற முன் அரசாங்கம் ஏதாவது செய்ய வேண்டும் என்று கடும் போக்காளர் கூக்குரலிடுகின்றனர். இல்லை வெளி நாட்டாரின், குறிப்பாக வெளிநாட்டு மாணவரின் வருகை குறைந்தால் உயர்கல்வி நிறுவனங்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரும் என்று கல்வி(விற்பனை) நிலையங்கள் எச்சரிக்கின்றன. வெளிநாட்டு மாணவர்களின் வருகையால் இங்கிலாந்து வருடமொன்றுக்கு சுமார் 3.5 முதல் 8 பில்லியன் பவுண்ட்ஸ் வரை சம்பாதிக்கிறது எனவே அவர்களின் வருகையை கவனமாக கையாள வேண்டும் என்ற பொருளாதர ரீதியிலான நியாயங்கள் வேறு. இப்படி மாணவர்களுக்கு எதிராகவும் சார்பாகவும் வாத பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்க சத்தம் சந்தடி இல்லாமல் 2007ம் ஆண்டு தொழிற்கட்சி அரசாங்கம்(Labour government) சட்டவிரோதமாக இங்கு இருப்போரில் சுமார் 500,000 பேருக்கு நிரந்தர வதிவிட அனுமதி (Indefinite leave to remain)கொடுத்து இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வுகான(?) முற்பட்டது. இந்த முடிவு பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்டாலும், கடந்த பொது தேர்தலின்போது இது தொடர்பாக, முன்னை நாள் பிரதமர் Gordon Brown னும், இன்றைய பிரதமர் David Cameron னும், இன்றைய உதவி பிரதமர் Nick Clegg கும் வெளிப்படையாக ஆடிய நாடகத்தை நீங்கள் மறந்திருக்க நியாயமில்லை.

இன்றைய உதவி பிரதமர் UKயில் சட்டவிரோதமாக அதிககாலம் இருப்போருக்கு அனுமதி வழங்கி அவர்களை சட்டரீதியானவர்களாகுவதன் மூலம் அவர்களை இன் நாட்டின் பொருளாதரத்துக்கு தோள் கொடுக்க செய்யலாம் ஆகவே அவர்களுக்கு பொது மன்னிப்பு கொடுத்து (public amnesty) வெளியே கொண்டு வாருங்கள் என கடந்த பொது தேர்தலின் கட்சி தலைவர்களுக்கான மூன்று கட்ட விவாதத்திலும் தம் Liberal Democratic கட்சி சார்பாக அதை மீண்டும் மீண்டும் வழியுறுத்தினார். அதேநேரம் எமது முன்னை நாள் பிரதமர் அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம், உமது பிந்திய ஞானம் எமக்கு தேவையில்லை என்று சொல்லாமல் அந்த கதையை மழுப்பிக் கொண்டே சென்றார். ஆனால் இன்றைய பிரதமர் அப்படி அனுமதிப்பது கூடாது. அது மற்றோருக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்து விடும், எனவே உள்வந்தவர் வெளியேறவே மாட்டார்கள். ஆகவே இவர்களை கட்டுப்படுத்த ஒரு கடினமான முறை தேவை என்றார். இப்படி தேர்தல் விவாதம் நடக்கும்போதே 250,000 வதிவிட அனுமதி வழங்கப்பட்டது (அதில் பலன்பெற்ற நம்ம ஆட்கள் நாடு சென்று, விடுமுறையையும் கழித்து, பலதும் பத்தும் அறிந்து, வெள்ளை வேனின் கண்பட்டாமல் வெற்றிகரமாக நாடு(UK) திரும்பியுள்ள விவகாரம் வேறு) மிகுதி 250,000 பேருக்கான வதிவிட அனுமதி கொடுபட்டுக் கொண்டிருக்கிறது. 2011 ஜூலையுடன் இதன் காலஎல்லை முற்றுப் பெறுகிறது.

இப்படி இந்த குடிவரவு விவகாரம் பிரச்சினைக்குறிய விடயம் என்பதாலும், இதற்கெதிரான கடும்போக்கை எடுக்காவிட்டால் BNP(British National Party), EDF( English Defence Front) போன்ற இனவாத கட்சிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது என்பதாலும், அதே நேரம் வெளிநாட்டு மாணவர்களுக்கான எதிர்பை வெளிப்படையாக காட்டினால், வெளிநாட்டாரின் வாக்குகளை இழக்க நேரிடும் என்பதாலும், இங்கிலாந்தின் பெயர் சர்வதேச ரீதியில் கெட்டுப் போகும் என்பதாலும் செய்வதறியாது தவிக்கும் இன்றைய Con-Dem கூட்டு அரசாங்கம் மறைமுகமாக பல காரியங்களில் ஈடுபட்டுள்ளது.

இந்த அடிப்படையில் மேலதிக வதிவிட அனுமதி கோரும் மாணவர்களுகான குடிவரவு விதிகளுடன் சேர்ந்து UKBAயின் குடிவரவு கொள்கை(Immigration policy) காலத்துக்கு காலம் மாற்றம் பெறுகிறது. இந்த அடிப்படையில் மாணவர் ஒருவர் தமது விண்ணப்பத்துடன் கற்கை நெறிக்கான அனுமதி உறுதிபத்திரம்(Confirmation of Acceptance of Study), சுருக்கமாக CAS உடன், (இது குறிப்பிட்ட மாணவருக்கு அவர் சார்ந்த கல்வி நிறுவனத்தால் வழங்கப்படும்) இரண்டு மாதங்களுக்கான பராபரிப்பு பணம் வைப்பில் உள்ளது என்பதற்கான வங்கி கணக்கு அறிக்கையும்(bank statement) அனுப்ப வேண்டும். CAS க்கு 30 புள்ளிகளும், வங்கி அறிக்கைக்கு 10 புள்ளிகளுமாக ஒரு மாணவர் 40 மொத்த புள்ளிகள் UKBA மூலம் பெற வேண்டும். இது கிடைத்தால் மேலதிக அனுமதி கிடைக்கும், இல்லாவிட்டால், UKBA கழுத்தை பிடித்து தள்ள முன் குறிபிட்ட மாணவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், அல்லது, … அது அந்த சம்பந்தப்பட்டவர் விருப்பம். நாம் புத்தி சொல்ல முடியாது. அது எமது தலைக்கு ஆபத்தாக முடியும்.

இப்படி இந்த பராமரிப்பு பணம் தொடர்பான இறுக்கமான கட்டுப்பாட்டால் ஆயிரக் கணக்கான மாணவர் பாதிக்கபட, யார் செய்த புண்ணியமோ, இந்த பராமரிப்பு பணம் இரண்டு மாதங்களாக குறைக்கப்பட்ட அதேநேரம் அந்த பணம் விண்ணப்ப நாளுக்கு 28 நாட்களுக்கு முன்பிருந்து வங்கிக் கணக்கில் இருந்து வருகிறது என்று ஆதாரத்துடன் காட்டினால் போதும் என்று சென்று கொள்கை சற்று தளர்த்தப்பட்டது. அப்பாடா இந்த இரண்டு மாத தொல்லை தொலைந்தது என்று மாணவர் பலர் சந்தோசப்பட்டனர். பல மாணவர்களும் தெய்வம் நின்று கொள்ளும் என்று சும்மாவா சொன்னார்கள் என்ற திருப்தியில் தமது வதிவிட அனுமதிகளை பெற்றுக் கொண்டனர்.

அட சரி 28 நாட்களுக்கு பணம் வைப்பில் உள்ள மாணவர் தப்பிக் கொள்வர். அப்படி இல்லாத மாணவர் என்ன செய்வர்? ஒருவன் விரும்பிய இடத்தில் படிக்க வேண்டுமென்பது அவனது அடிப்படை உரிமையல்லவா? படிப்பை தொடர பணம் இருந்தால் சரிதானே அதற்கென்ன 28, 82 நாள் என்ற கணக்கு. நாங்கள் வெளி நாட்டார் எதையும் முன் கூட்டியே திட்டமிட்டு, ஏற்பாடுகள் எல்லாம் பூர்த்தியாகி காரியத்தில் இறங்கும் பழக்கமெல்லாம் எம்மிடமில்லை. படிக்க பணம் கட்டினால் சரிதானே, மற்றும்படி நான் சாப்பிட்டல் என்ன, சாப்பிடாவிட்டால் உனக்கென்ன? எனக்கு அனுமதியை தா என்பது மாணவரின் கோசம்.

இந்த நேரத்தில்தான் எல்லா மாணவர்களுடனும் சேர்ந்து ஒரு பிரேசில் நாட்டு மாணவியும் தனது மேலதிக வதிவிட அனுமதிக்கு விண்ணப்பம் செய்தாள். வழமை போலவே தொடர்சியாக 28 நாட்களுக்கு பணவைப்பை உறுதிபடுத்தாத மாணவரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்நாட்டு சட்டத்தின்படி அரச நிறுவனங்கள் ஏதாவது விண்ணப்பமொன்றை நிராகரித்தால் அதற்கான காரணத்தை எழுத்து மூலம் சொல்ல வேண்டுமென்பது சட்டம். அப்படியே உள்நாட்டு அமைச்சு சார்பாக இந்த UKBA தமது நிராகரிப்பு காரணமாக “மாணவர்களே நீங்கள் குடிவரவு விதிகளுக்கமைய பராமரிப்பு தொகையொன்றை குறிப்பிட்ட கால அளவுக்கு வைப்பில் வைத்திருப்பதற்கான ஆதாரங்களை காட்டவிலை, ஆகவே நீங்கள் பொது நிதியத்தின் உதவியின்றி (recourse to public funds) உங்களால் உங்களை பராமரிக்க முடியாது. எனவே நீங்கள் என்மை உங்கள் பணம் சம்பந்தமாக விடயத்தில் திருப்திபடுத்தவில்லை. எனவே உங்கள் விண்ணப்பம் பிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எமது முடிவை மேன்முறையீடு செய்ய உங்களுக்கு அனுமதியுண்டு என்று அறிவித்துவிட்டார்கள்.

என்ன ஆட்கள் அப்பா இந்த UKBA உத்தியோகத்தர்கள். இந்த நாட்டில் நிரந்தர வதிவிட உரிமை இல்லாதவர் எப்படி பொது நிதியத்தின் உதவி பெறமுடியும்? அரசாங்க உதவி பெற முதல் தகைமை நிரந்தர வதிவிட உரிமை அல்லவா? இந்த அடிப்படை விடயம் தெரியாமல் ஏன் அங்கு வேலை செய்கிறிர்கள் என்று கேட்டால் பதிலா தரப்போகிறார்கள்? தொடர்ந்தும் தங்கள் பழைய புராணத்தையே பாடுவார்கள், அதாவது இது நேர்மையான ஒரு முறை, அது, இதுவென்று கூக்குரல் செய்வர். எனவே இந்த பாதிக்கபட்ட மாணவர்களில் ஒருவர் தமது மேல் முறை ஈட்டு உரிமையை சரியாக பாவித்து முதல்நிலை குடிவரவு நீதி மன்றில் (First-tier Tribunal) மேன் முறை ஈடு செய்து வெற்றி கிட்டியது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தோல்வியை தழுவிக் கொண்டது. பொல்லு கொடுத்து அடிவாங்கும் கதை நம் எல்லாருக்கும் பழக்கப்பட்டதுதானே, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இந்த தீர்ப்புக்கெதிராக இரண்டாம் நிலை குடிவரவு நீதிமன்றில் (Upper Tribunal) மேன் முறை ஈடு செய்ய அனுமதி கோரி அந்த அனுமதி வழங்கப்பட்டு இறுதியில் வெற்றியும் கண்டனர். மாணவருக்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட்ட்டது.

தோல்வியடைந்த மாணவி இந்த தீர்ப்பினால் சளைத்து விடவில்லை. அவர் எல்லா வழக்குகளுக்குமான மேல் நீதிமன்றில் (Court of Appeal) மேன் முறைஈடு செய்தார். இந்த மேன் முறைஈட்டு காரணங்களோடு சம்பந்தப்ப்ட்ட (Like cases) மேலும் 5 வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்க மேன் முறைஈட்டு நீதிமன்றம் ஒப்புக் கொண்டது.

இந்த வழக்கின் தீர்ப்பு தமக்கு பாதகமாக அமையும் என்றாலும், அரசாங்கம், அதன் நிறுவனங்கள் சார்பாக வழக்காடும் திறைசோரி வக்கீல்கள்(Treasury solicitors) சும்மா இருப்பார்களா? அரசாங்க பணம் தானே கொஞ்சம் கை, கால் நீட்டி உழைத்தால் என்ன என்ற “உழைப்பு கோட்பாடு”க் கேற்ப சமாதானதுக் கொல்லாம் தயாரில்லை, நீதிமன்றம் வாருங்கள் பார்க்கலாம் என்று சவால் விட்டார்கள். இதில் என்ன பரிதாபம் என்றால் ஒரு மாதகாலத்துக்கு மாணவர் ஒருவரின் பராமரிப்புக்கு போதுமானதாக கருதப்படும் 800 பவுண்ட்ஸ் இந்த திறைசோரி வழக்கறிஞரின் சுமார் ஒரு மணி நேரத்துக்கான சம்பளம். என்ன விதமான சுரண்டல். இது மூளையால் செய்யும் வேலை, மூளையின் களைப்படையும் தன்மைக் கேற்ப கூலி அமையவேண்டும் ஆகவே இது சரி என்று வாதாடுவோரும் நம்மில் இருக்கத்தான் செய்வர். என்ன செய்ய நாம் மாடாய் உழைத்து கட்டிய வரிப்பணம் தேவையில்லாத வழக்கிற்காக தேவையில்லாதவன் கையில் போய் கிடைக்கிறது. இந்த கூத்துகளுக்கு மத்தியில் வழக்கின் முடிவு வெளியாகிவிட்டது.

மேலுள்ளது Pankina v. Secretary of State for Home Department என்ற Court of Appeal வழக்கு. இதை விசாரித்த நீதிபதி பிரபு செட்லீ (Lord Justice Sedley), நீதிபதி பிரபு ரிமெர்(Lord Justice Rimer), நீதிபதி பிரபு சலிவன் (Lord Justice Sullivan) கீழ்வரும் தீர்ப்பை வழங்கினர், ” குடிவரவு கொள்கை (policy) என்பது, நிச்சயமாக குடிவரவு விதி(Rules)யாகாது. கொள்கை என்பது சட்டங்கள் அல்லது சட்டங்களின் பகுதியான விதிகளின் கடும்போக்கை கொண்டிருக்க முடியாது. கொள்கைகள் சட்ட அந்தஸ்து பெற வேண்டின் அது பாராளுமன்றத்தின் முன் சமர்பித்து அது ஒன்றில் சட்டமொன்றின் விதியாக அல்லது முழு சடமாக வந்த பின்பே அதை நடைமுறைபடுத்த வேண்டியது அரச நிறுவனங்களின் கடமை. அதை நிலை நிறுத்துவது நீதிமன்றங்களின் கடமை. தேவையான அளவு பணம் வைப்பில் இருக்க வேண்டும் என்பது விதியின் பால்பட்டது. அது இரண்டு மாதம் என்பது கொள்கையாக பின்னால் புகுத்தப்பட்டது. எனவே இந்த கொள்கை விதியின், அல்லது சட்டத்தின் உறுதி தன்மையில் இருந்து பிரித்து பார்க்கப்பட வேண்டியது. இந்த அடிப்படையில் ஒருவரை பராமரிக்க தேவையான இரண்டு மாதப் பணம் 28 நாட்களுக்கு வைப்பில் இருக்க வேண்டும் என்ற தேவை இல்லை. அந்தளவு பணம் 28 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் இருந்தால் போதுமானது. குறிப்பாக விண்ணப்பிக்கும் அந்த நாளில் இருந்ததற்கான அத்தாட்சி காட்டினாலே போதும்.” என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவர்களே உடனடியாக காரியத்தில் இறங்குங்கள். ஏனெனில் இந்த கொள்கையை பாராளுமன்றில் சமர்பித்து இதற்கு விதி(Rule)வடிவம் கொடுத்தால் எல்லாரும் மீண்டும் மாட்டிக் கொள்வீர்கள். எனவே குடிவரவு முறையில் புதிய விதிகள் புகுத்தப்படமுன் அல்லது புதிய சட்டங்கள் மீண்டும் கடினமாக வரமுன் உங்கள் சட்டத்தரணிகளை பாருங்கள். மேலே சொன்னவை ஒரு சுருக்கமே, இதில் இன்னும் சட்டசிக்கல்கள் வர நிறையவே வாய்ப்புகள் இருப்பதால் DIY( do it yourself) முறையை கைவிட்டு விட்டு துறைசார்ந்தோரை நாடுங்கள். என்ன இருந்தலும் படிக்க வேண்டும் அதிலும் London னில் படித்து, பட்டம் பெற வேண்டும் என்று ஆசைபடுகிறீர்கள் ஒரு சின்ன யோசனை சொன்னேன் அவ்வளவுதான். இலங்கை படிப்பு UK படிப்புக்கு குறைந்தல்ல என்பதையும், அனேகமாக எல்லா ஐரோப்பிய நாட்டின் படிப்புகளும் UK படிப்பைவிட மிக சிறந்தது என்பதையும் எனது தனிப்பட்ட அனுபவத்தின் முலம் உறுதி கூறலாம் அதையும் சற்று கவனத்தில் கொள்ளுதல் நலம்.

Related News & Articles:

லண்டனில் வேலை பெற்றுத் தருவதாக் கூறி யாழில் மோசடி!

Student Visa மோசடி பல்லாயிரம் பவுண் பணத்தையும் இழந்து கல்வி வாழ்வையும் தொலைக்கும் இலங்கை – இந்திய மாணவர்கள்!

லண்டன் தமிழர் தகவல் நடுவம் யாருக்குத் தகவல்கள்’ கொடுக்கின்றது? : ஆர்.வி. குமார்

tic_logoதகவல் நடுவங்கள் என்பது, மக்களுக்கான பல தகவல்களை, அரசியல் சார்பன்றி, சாதி, சமய, பிராந்திய வேறுபாடுகளுக்கும் கட்சிக் கருத்து வேறுபாடுகளுக்கும் அப்பாலிருந்து கொடுப்பதாகும். இந்தத் தகவல் நடுவங்கள் பொது மக்களின் கல்வி கலாச்சார வளர்ச்சிகளுக்கும் கேந்திரமாகவும் செயற்படுவதுண்டு. அத்தோடு இந்த நடுவங்கள், தங்கள் மக்களின் வாழ்க்கை வழிமுறைகள், பண்பாடு கலாச்சாரங்கள், சமுதாயத்தில் நடக்கும் பொருளாதார விருத்தி வேலைகள், மக்களால் முன்னெடுக்கப்படும் சமய விழாக்கள், நெறிகள் போன்று பற்பல விடயங்களை மற்ற இனத்தார் வந்து அறிவதற்கும் ஆராய்ச்சி செய்வதற்கும் தேவையான ஆவணங்களைப் பராமரிக்கும் முக்கிய கேந்திரமாகவும் பணிபுரிய எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் லண்டனில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் தமிழர் தகவல் நடுவம், தமிழர்களுக்குத் தேவையான தகவல்களைச் சரியன விதத்திற் கொடுக்காமல், வேறு விடயங்களில் தன்னைப் பிணைத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாத் தன்னை ஒரு இரகசிய ஸ்தாபனமாக்கிக் கொண்டு வருவதாக எண்ணத் தோண்றுகிறது. இங்கு நடக்கும் கூட்டங்கள் ஒரு குறிப்பிட்டவர்களுக்காக மட்டும் நடத்தப்படுகிறதா என்ற சந்தேகமும் வந்திருக்கிறது. தமிழர் தகவல் நடுவம் என்பது பல்தரப்பட்ட தமிழர்களின் பங்களிப்பையும் ஒன்று கூடல்களையும் உதாசீனம் செய்தால் இந்தத் தகவல் நடுவம் யாரால் கட்டுப்படுத்தப்படுகிறது, யாரின் இலாபத்திற்காகப் பணி புரிகிறது என்பதைக் கேட்கத் தமிழர்களுக்கு உரிமையுண்டு.

ஓருகாலத்தில் தமிழ்த் தேசியத்தின் மத்திய கேந்திரமாக இயங்கிய இந்த ஸ்தாபனம், 2009ம் ஆண்டு முடிந்த போரின் பின் ஏற்பட்ட புலிகளின் பிரிவுகளின் எதிரொலியாக இன்று மிகவும் தூரத்தில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. உலகத் தமிழர்பேரவை, நாடு கடந்த ஈழத்தினர் அவர்களின் பிரதமர் என்போர் லண்டன் தமிழர் தகவல் நடுவத்தைக் கணக்கெடுப்பதில்லை என்றே தெரிகின்றது. புலிகளின் ஒருபிரிவு, ஏதோ ஒரு குழப்பத்தை (பேராட்டம்?) இலங்கையில் உண்டாக்கி அதனால் தமிழ் மக்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் விடயங்களைக் காய்நகர்த்துவது பலருக்குத் தெரியும். புலம் பெயர்ந்த மக்களிடமிருந்து போருக்காக அவர்கள் சேர்த்த தொகையின் ஒருசிறு பகுதியை இலங்கையில் வாழும் ஏழைத் தமிழர்களுக்குக் கொடுக்கத் தயாரில்லை. அப்படியிருக்கம் போது, பிரிந்த புலிகளின் லண்டன் ‘கோஷ்டியின்’ குரல் மட்டும் ஓங்கி ஒலிக்கின்றது. (இலங்கையில் இன்னுமொரு ஆயதப்போராட்டம் எப்போது வரும் என்ற கேள்வி அன்று கேட்கப்பட்டது).

ஜனநாயக (???) முறையில் கடல் கடந்த தமிழர்களின் பிரதமரானவர்களைக் கொண்டிருக்கும் ஒரு கூட்டமும், எப்படியும் ஏதோ ஒரு மோசடி செய்து, தாங்கள் வைத்திருக்கும் பணத்தைச் சுருட்டிக்கொள்ளும் இன்னொரு புலிக் கூட்டமும் எங்கெங்கே பயணிக்கிறது? இலங்கைத் தமிழரின் எதிர்கால அழிவுக்கு யார் யாருடன் தொடர்புகளை (மேற்கத்திய அழிவு சக்திகள்) ஏற்படுத்துகிறது? அதில் தமிழர் தகவல் நடுவத்தின் பங்கென்ன என்பதை ஆராய்வது தவிர்க்க முடியாத முக்கிய விடயமாகும்.

இலங்கை ஜனாதிபதியின் ஐக்கிய நாடுகளின் பயணம், உருத்திரகுமாரின் தமிழ்ப் பிரதமர் பிரகடனம், தகவல் நடுவத்தின் இரகசிய கூட்டங்கள் என்பன தற்செயலாக நடப்பவையா? அல்லது ‘ஏதோ ஒரு சக்தி’ செய்யும் மாய விளையாட்டுக்களா? இந்த இரு புலிக் கோஷ்டியும் போராற் துயர்படும் தமிழ் மக்களுக்கு ஒருநேர உணவோ ஒரு முழுத் துணியோ இதுவரை கொடுக்கவில்லை. தமிழரின் பெயரில் பல மகாநாடுகளை ஒழுங்கு செய்த தகவல் நடுவம், தமிழ் மக்களுக்கு உதவுவதற்காகப் பணம் கேட்க ஒரு கூட்டத்தையும் ஒழுங்கு செய்தது கிடையாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித உதவியையும் புரிந்ததாக அறிய முடியவில்லை. அந்த நிலையில், போராற் துன்புறம் மக்களின் மீள்வாழ்வுக்குப் புலம் பெயர்ந்த மக்களின் பங்கு என்ற வெற்று வார்த்தைகளைத் தமிழர் தகவல் நடுவம் அள்ளிக்கொட்டுவதே வெட்கம்.

தமிழர் தகவல் நடுவத்தில், இலங்கையிலிருந்து அவ்வப்போது லண்டனுக்கு வரும், கல்வி கலாச்சாரப் பிரமுகர்களை வைத்துச்சில கருத்தரங்கங்கள் நடப்பதுண்டு. தகவல் நடுவத்திற்குப் பேச்சாளராக வரும் அத்தனைபேரும் இலங்கை அரசை வழிக்குக் கொண்டுவர வெளிநாட்டாரின் ‘உதவியை’ நாடவேண்டிய அவசியத்தை வலியுறுத்துவார்கள். இங்கு வந்த எந்தப் பிரமுகர்களும் ஒரு நாட்டுக்குள்ளே எவ்வாறு வேலை செய்து எங்கள் மக்களுக்கு உதவ முடியும் என்பது பற்றி ஆராய்வதில்லை. தமிழர் தகவல் நடுவம் இலங்கை அரசை வசைபாடி புலிகளைக் காப்பாற்றுவதிலேயே கடந்த முப்பது வருடங்களைச் செலவளித்திருக்கிறதே தவிர, சாதாரண தமிழ் மக்களுக்கு உதவ எந்த முயற்சியும் செய்தது கிடையாது.

02.10.2010 அன்று தமிழர் தகவல் நடுவத்தில் ‘யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் வாழ்வை மீள்கட்டமைப்பதிலும் மீள நம்பிக்கையூட்டுதலிலும் புலம்பெயர்ந்தவர்களின் பாத்திரம்’ என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடல் நடந்தது. அந்தக் கூட்டத்துக்குத் தமிழ் தகவல் நடுவக் கூட்டங்களுக்கு வழக்கமாக வரும் பலருக்கு அழைப்புக் கொடுபடவில்லை. வழமைபோல் தமிழ்த் தேசியத்தைப் பிரதிபடுத்தும் பலரும் அதனுடன் உடன்படாத சிலரும் வந்திருந்தனர்.

நேற்று, இன்று, நாளைக்கு என்று எப்படிப் பார்த்தாலும் எப்போதும் இலங்கையிலுள்ள பெரும்பான்மையான மக்களான சிங்களவர்ளாற் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் ஆட்சிக்கு வருவார்கள். சிறுபான்மையான நாங்கள் இதை உணர்ந்து கொண்டு எங்கள் உரிமையை ஜனநாயக வழியில்பெற முயற்சிக்க வேண்டும். என்றும் இல்லாத அளவுக்கு, இன்று பல வாழ்க்கைத் தேவைகளை எதிர்பார்த்து எங்கள் மக்கள் இலங்கையில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு, லண்டனில் முன்னெடுக்கப்படும் நாடுகடந்த, கடல்கடந்த தமிழீத்தினாலும் முரண்பாட்டு அரசியல் மகாநாடுகளால் ஒரு பிரயோசனமும் கிடையாது. லண்டனில் வாழத்தேவையான  ஊதியத்தைத் தமிழரின் சோகத்தை வைத்து முகாரிபாடிச் சேர்த்தவர்கள் பலநூறாகும். வாழ்க்கைக்குத் தேவையான பணத்தைச் சேர்க்கப் படிப்புத் தேவைப்படுபவர்கள் பெரும்பாலோனோர். தங்கள் சொந்த இனத்தையே முதலீடாக்கியவர்கள் நாங்கள். இப்படியாக உழைப்பில் பலவடிவங்கள் பரிணமிக்கும். அதில் ஒன்றுதான் இந்த தமிழர் தகவல் நடுவத்தின் ஒன்று கூடல்கள் என்றால் அதனை மறுத்துரைப்பதும் கடினமானதே.

முதலைக் கண்ணீர்!

அன்று (02.10.10) தமிழர் தகவல் நடுவக் கூட்டத்தை ஆரம்பித்து வைத்தத் தமிழத் தகவல் நடுவ முதல்வர் திரு வரதகுமார் அவர்கள் தன் ஆரம்பவுரையில், ‘இன்று இலங்கையில் இருக்கும் பொதுமக்கள் சபைகள் – சிட்டிசன் கொமிட்டிஸ் – அங்கிருக்கும் அரசியல் நிலையால் பெரும்பாலும் செயலிழந்திருக்கின்றன. சிவில் சொசைய்ட்டிகள் மக்களுக்காகக் குரல் கொடுக்காவிட்டால் மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றங்களைக் காண முடியாது.

நாங்கள்  இலங்கையிலிருந்து சில மூத்த அறிஞர்களை இவ்விடயம் பற்றிப் பேச அழைத்திருக்கிருந்தோம். கடந்த சில நாட்களாக அவர்கள் பலர் சேர்ந்து பல ஆய்வுகளை நடத்தி, அவர்கள் அங்கு மக்களின் வாழ்க்கையை முன்னேறாமல் தடுக்கும் சில விடயங்களை அடையாளம் கண்டு, அவற்றை நிவர்த்தி செய்யச் சில சிபாரிசுகளை முன்வைத்திருக்கிறார்கள். இலங்கையிலிருந்த இந்த அறிஞர்களும் இலங்கையின் ஜனநாயக வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்களும் சந்தித்துக் கொள்ளக்கூடிய கருத்தரங்கங்களையும் ஏற்பாடு செய்திருந்தோம்’ என்று சொன்னாhர்.

வரதகுமார் குறிப்பிட்ட ‘ஆய்வுக் கூட்டங்கள்’ பற்றிய விடயம் இங்கிலாந்து வாழ் தமிழர்களுக்கோ இலங்கையிலுள்ள தமிழ்பேசும் மக்களுக்கோ அவர்களின் தலைவர்களுக்கோ எதுவும் தெரியாது என்பதும் இது பற்றி எதுவுமே அவர்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்பதும் தெரிந்தது.

தமிழ் மக்களுக்கான தலைவர்களுடன் இரகசிய கூட்டத்தை கடந்த வருடம் சுவிட்சர்லாந்தில் நடத்தியவர் இன்று அவர்களுக்கே தெரியாமல் இன்னுமொரு கூட்டம் வைப்பது தமிழ்த் தலைவர்களுக்குக் குழி பறிப்பதற்கா என்ற கேள்வியை இலங்கையிலுள்ள அத்தலைவர்களே விசாரித்தும் வருகின்றனர்.

கூட்டத்துக்குத் தரப்பட்டிருந்த தலையங்கத்துக்கும் அதுவரை அங்கு இரகசியமாக நடைபெற்று முடிந்த ஆய்வுகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது போலிருந்தது. இலங்கையில் பொதுமக்கள் அமைப்புக்களை வலிமைப்படுத்தி அதன் மூலம் இலங்கைத் தமிழருக்கு உதவி செய்ய இலங்கை அறிஞர்கள் ஏன் வேலை மெனக்கெட்டு லண்டனுக்கு வரவேண்டும் இரகசியமாகக் கலந்துரையாடல்களை வைக்க வேண்டும் என்பது புரியாத விடயமாகும்.
 
புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் எப்படியான உதவிகளை இலங்கையில் வாடும் தமிழருக்குச் செய்யலாம் என்று கலந்துரையாட கூடியிருப்பதற்கும் அதற்கு சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ‘இரகசிய’ கலந்துரையாடலுக்கும் பெரிய தொடர்பில்லை. ஏதோ ஒரு சாட்டுக்கு இந்தக் கூட்டத்தை வைத்து மழுப்பப் பார்க்கிறார் என்பது முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் மூலம் தெரியவந்தது. புலம்பெயர்ந்த மக்கள் என்ற வார்த்தையைப் பாவித்து அவர்களுக்கு உசுப்பேத்த எடுத்த முயற்சி சுவிஸில் சரிவரவில்லை.

அத்துடன், அனுதாபத்துடன் புலம்பெயர் தமிழர் நாட்டில் வாடும் மக்களுக்கு உதவ வேண்டும் என்று சொன்ன திரு வரதகுமர் அவர்களுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் பல நாடுகளிருந்தும் பல தடவைகள் ‘யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நல்லிணக்கக் குழு’க்களாகப் போயிருந்தது தெரியும். ஆனால் இதுவரையும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்த நல்லிணக்கக் குழுக்கள் செய்யும் பணிகள் பற்றிய தகவல்களைச் சொல்ல தகவல் நிலையத்தில் ஒரு கருத்தரங்கு வைக்கச் சொல்லிப் பல தடவைகள் கேட்டும் கேளாச் செவியனாக இருந்துள்ளார். அண்மையில் இணையத் தளங்களில் இதுபற்றி எழுதப்பட்டுமிருக்கிறது. அவர்களுடன் சம்பந்தப் பட்டவர்களால் தொடங்கப்பட்டு இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவி செய்யும் ஸ்தாபனங்கள் நபர்கள் பற்றியும் இவருக்குத் தெரியும். இருந்தும் அங்கு தமிழருக்கு உதவி செய்ய யாருமே முன்வராத பாணியில் தகவல் நடுவம் ஒரு அபிப்பிராயத்தைத் தொடந்து செய்து கொண்டிருக்கிறது. அத்துடன் ஒரு காலத்தில் புலியின் மிகப் பெரிய ஆதரவாளராக இருந்தவர்கள்கூட இன்று இலங்கையில் அல்லற்படும் தமிழர்களுக்கப் பல வித்தில் உதவுகிறார்கள் இவர்களையழைத்து, இலங்கையில் என்ன நடக்கிறது என்று ஒரு கருத்தரங்கம் வைத்ததே கிடையாது.

பெரும்பாலான தமிழர்களுக்கு அறிவிக்காமல், நடந்த இரகசியக் கருத்தரங்குக்கு அழைத்த பிரமுர்களில் சந்திரகாசன் (தமிழத் தேசியத்தின் தலைவர் செல்வநாயத்தின் தனயன்), மனித உரிமைவாதி சரவணமுத்து பாக்கியசோதி (கொழும்பு), ராஜன் பிலிப்(கனடா) என்போர் 2ம் திகதி தமிழர்களுடன் லண்டனில் நடந்த சந்திப்புக்கு முன்னரே பயணமாகிவிட்டார்கள்.

2ம் திகதி கூட்டத்திற்கு வந்திருந்தோர்  பேராசிரியர் சீலன் கதிர்காமர், பேராசிரியர் சித்தம்பலம், முக்கியமான (பழைய) தமிழ்த்  தேசியவாதி (அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த இந்திய வெளிநாட்டுத் தூதுவர் நிருபமாவிடம் கேள்விகேட்டதால் பிரமுகரானவர்), பேராசிரியர் கணேஸ், பேராசிசியர் மூக்கையா (மலைநாட்டின் பிரச்சினைகளை முன்வைத்தார்.)

அன்று நடந்த கூட்டத்தில், பேராசிரியர் சீலன் கதிர்காமர், தமிழர் தகவல் நடுவம் பல அறிஞர்களுடன் நடத்திய ஆய்வுகளின் (இரகசியமாக) சாராம்சத்தைக் கருத்தரங்கில் முன்வைத்தார். போராசிரியர் சீலன் கதிர்காமர் அவர்கள், தங்களின் ஆய்வில் அடையாளம் காணப்பட்ட, இலங்கைத் தமிழ் மக்களுக்காகச் செய்ய வேண்டிய முக்கியமான பத்து அம்சங்களை விளக்கினார். இந்தப் பத்து விடயங்களும் பல தடவை இலங்கையில் பல தூதுக் குழுக்களாலும் இந்திய, பிரிட்டிஷ்  அரச தரப்புக்களாலும் இலங்கை அரச தரப்புக்கு எடுத்தச் சொல்லப்பட்ட விடயங்கள் என்பது தகவல் நடுவ முதல்வருக்கு நன்றாகத் தெரியும். முப்பது வருடப் போரால் பொருளாதார ரீதியில் மிகவும் பின் தள்ளப்பட்டிருந்த இலங்கை அரசால், இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் இருந்த 300,000 மேற்பட்ட தமிழர்களின் மீள் குடியேற்றத்தைச் செய்ய பல காலம் எடுக்கும் என்று தெரிந்தவர்கள், தென்னிந்திய முதல்வாரின் மகளும் இலங்கைத் தமிழரின் துயரைத் துடைக்க மிகவும் அக்கறை கொண்டவருமான கனிமொழியின் மூலம் இந்திய அரசின் உதவியை நாடியதும் தெரியும். அதன்பின் போராற் துன்பப்பட்ட மக்களுக்கான மீள் குடியேற்ற விடயங்களில் நடக்கும் மாற்றங்களையும் அந்த நடவடிக்கைகளில் இந்தியா உட்படப் பலநாடுகளின் ஈடுபாடும், திரு வரதகுமார் தெரியாமலில்லை.

போரசிரியர் கதிர்காமரோ அல்லது வந்திருந்த மற்ற அறிஞர்களோ, போரால் அல்லலுறும் மக்களின் விடயத்தில் இதுவரை எந்த வித்திலும் ஈடுபட்டதாக எந்த தடையமும் கிடையாது. அவர்கள் தங்கள் வாழ்நாளில் மிகவும் படித்த பேராசிரியர்களாக இருந்திருக்கலாம் ஆனால், இன்று சட்டென்று பொதுவேலைகளில் ‘குதிக்கும்’ வயது வலிமையோ அல்லது அரசியல் வலிமையோ அற்றவர்கள்.

திரு கதிர்காமர் அவர்கள் பேசும்போது, லண்டனில் 1998ல் நடந்த கூட்டத்தின்பின் எந்த மகாநாடுகளிலும் தான் கலந்து கொள்ளவில்லை என்றார். பொதுவுடமைவாதியும் புலிகளின் பிரசார பீரங்கியுமாயிருந்த டாக்டர் விக்கிரமசிங்கவின் நண்பர் என்று தன்னை அறிமுகப் படுத்தினார். அவர் தனது பேச்சில்  தமிழர்கள் தங்கள்  பிரச்சினைக்கு ஆசிய நாடுகளின் உதவியை நாட வேண்டும், முக்கியமாகச் சீனாவின் உதவியை நாடவேண்டும் என்று சொன்னார். தங்களின் ஆய்வில் இலங்கைக்குத் தேவையான 5-6 வருடத் திட்டத்தை வைத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், (முடிந்தவரை அவரினுரை தரப்பட்டிருக்கிறது);

”18வது சீர்திருத்தச் சட்டத்தினால் யாருக்கும் நன்மையில்லை, எங்களது ஆய்வின் முதலாவது விடயமாக, நிலப் பிரச்சினையயைப் பார்க்கிறோம். அதிலும் அகதிகளாக இருப்பவர்களின் நிலையும் இத்தோடு சம்பந்தப்படுகிறது. 2014 – 15 க்கிடையில் பெரிய மாற்றங்களை உண்டாக்க வேண்டும், எங்கள் ஆய்வில் தமிழ் மக்களின் விழிப்புணர்வை முன்னெடுக்கும் விடயங்கள் பற்றியும் முக்கியமாகக் கலந்துரையாடினோம். எங்களின் பிரச்சினைகளைச் சிங்கள மக்கள் பாராளுமன்றவாதிகள், முக்கியமாக ஜேவிபியுடன் பேசவேண்டும் வெளிநாட்டு அரசாங்ககங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும். தமிழ்த் தகவல் நடுவத்துடன் சேர்ந்து இந்தியாவை நாட வேண்டும்.

கல்வித் தரம் உயர்த்தப்பட வேண்டும், வெளிநாட்டிலுள்ள தமிழர்கள் தங்கள் திறமைகளை எங்கள் மக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். மக்கள் பகுதியிலிருந்து இராணுவத்தை அகற்ற வேண்டும், அவசரகால சட்டத்தை எடுக்க வேண்டும், பலகாலமாகச் சிறையிலிருக்கும் தமிழர்கள் விடுவிக்கப்பட வேண்டும், மிக மிக முக்கியமாக சிறையிலிருப்பவர்களின் பெயர் பட்டியல் உடனடியாக வெளியிடப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.

மலையகப் பேராசிரியரான மூக்கையா அவர்கள் இந்திய வம்சாவழித் தமிழர்கள் தமிழ்ப் பாராளுமன்றவாதிகளின் உதவியுடன் பிராஜாவுரிமையை இழந்த காலத்திலிருந்து இன்று வரை இலங்கை அரசாங்கத்தால் எடுக்கப்படும் பல சட்டதிட்டங்களாலும் பாதிக்கப்படுவதை விளக்கிக் கூறினார்.

புலம்பெயர்ந்த அரசியற் தலைமை!

வந்திருந்த பேராசிரியர்களில், பேராசிரியர் சித்தம்பலம்;, ‘இலங்கையில், தமிழ்ப் பகுத்களில் அபிவிருத்தி என்ற பெயரில் நடக்கும் விடயங்கள் பேசப்படுகின்றன, ஆனால் தமிழர்களுக்கான அரசியலுரிமை பற்றி எந்தப் பேச்சும் கிடையாது. தமிழ்பேசும் மக்கள் அத்தனைபேரும் ஒன்றுபட்டு எங்கள் உரிமைக்குப் போராட வேண்டும்’’ என்று குறிப்பிட்டார். ‘இதுவரை பல முறைகள் பல தலைவர்களால் அரசியல்த் தீர்வுகள் வைக்கப்பட்டன. இன்று நாங்கள் இருக்கும் நிலையில் வடக்கு கிழக்கை இணைத்துக் கேட்க முடியாது ஆனால் பிராந்திய ஆட்சி பற்றிப் பேசினால் சிங்களத் தலைவர்களே ஆதரவு தருவார்கள். இன்று அங்கு நடைபெறும் அரசியலில் தமிழரின் பங்கு ஒன்றுமில்லை. அங்கிருக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் வலிமையற்றவை. அரசியலுக்குத் தேவையான அறிவோ அனுபவமோ அற்றவர்கள் பதவிகளில் இருக்கிறார்கள். புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து தமிழருக்கான ஒரு நல்ல தலைமை உருவாக வேண்டும்’ என்பதுபோன்ற கருத்துக்களை முன்வைத்தார்.

பேராசிரியர். கணேஸ் பேசும்போது ‘ராஜபக்சா அரசு தமிழர்களுக்கு ஒன்றும் தரப்போவதில்லை தமிழ்பேசும் மக்கள் தங்கள் போராட்டத்தை இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியுடன் முன்னெடுக்க வேண்டும்’ என்றார். (சீனா புலிகளுக்கு நிறைய ஆயதங்களை விற்ற அதே காலகட்டத்தில் சிங்கள அரசுக்கும் பெருவாரியான உதவிகளைச் செய்வதும் இவர்களுக்குத் தெரியும்.)

இந்தியா, இலங்கைத் தமிழருக்குத் தூக்கிக்கொடுத்த ஈழத்தைத் தூக்கி எறிந்து விட்டுத் தமிழரின் பரமவைரியாகத் தமிழத் தேசியத்தால் கருதப்படும் சிங்களவருடன் சேர்ந்து இந்தியரைத் துரத்திய பெருமையையும் ரஜிவ் காந்தியைப் புலிகள் கொலைசெய்ததால் இனி ஒருநாளும் இந்திய மத்திய அரசின் இலங்கைத் தமிழருக்குக் கிடைக்காது என்பதையும் ஏன் இந்தப் பேராசிரியர்கள் உள்வாங்க மறுக்கிறார்கள்?

இதுவரை இலங்கையில் நடந்த போராட்டங்கள் பற்றி இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் தெரியாதா? இவர்கள் என்ன கருத்தைப் பின்னணியாக வைத்தக்கொண்டு மேற்கண்ட கருத்துக்களைச் சொல்கிறார்கள் என்பதற்கு அவர்கள் பல நாட்கள் இரகசியமாக நடத்திய ஆய்வுகளின் உரையாடல்கள் காரணிகளாக இருக்கலாம். மூன்றாவது நாடொன்றின்  ஈடுபாட்டையும் சிலர் உறுத்திச் சொன்னார்கள். மகாநாட்டுக்கு வந்திருந்த அறிஞர்கள் இதுபற்றி, தமிழருக்கு உதவும் நாட்டுப் பிரதிநிதிகளுடன் பேசியதாக திரு வரதகுமார் கூட்டத்தின் ஆரம்பத்தில் சொல்லியிருந்தார். இவர்கள் யாரைச் சந்தித்தார்கள் என்பது சொல்லப்படவில்லை – இரகசியம். அதுவரை நடந்த ஆய்வுகள் பற்றித் தகவல் நடுவத்தின் அறிக்கையும் வரவில்லை. அறிக்கையை உடனடியாக எழுத யாருமில்லை என்றும் சொல்லப்படலாம்

முப்பது வருடங்களாகத் தொடர்ந்து இயங்கும் இந்த ஸ்தாபனத்தில் தகவல் நடுவ முகவரைத் தவிர யாரும் முழு நேர ஊழியராக நியமிக்கப்படவில்லை. இலங்கையில் பல வருடங்களாகத் தனது பதவியாளரை வைத்திருக்கும் தகவல் நடுவத்திற்கு ஏன் லண்டனில் ஒரு காரியதரிசியை நியமிக்கத் தயக்கமாக இருக்கிறது என்பது புரியாத பல விடயங்களில் ஒன்றாகும்.

வருடா வருடம் பல்லாயிரக்கணக்கான மானியத்தை பல ஸ்தாபனங்களிலிருந்த பெற்று மகாநாடுகளை தகவல் நடுவம் நடத்துகிறது. இதனால் யாருக்கு என்ன பயன் என்று எந்த ஆவணங்களும் பிரசுரிக்கப்படவில்லை. அடிக்கடி பாக்கியசோதி சரவணமுத்து போன்றவர்களை அழைத்து ஒன்று கூடல் வைப்பது என்பதன் காரணம், உலகறிந்த என்ஜிஓ நபரான பாக்கியசோதியின் பெயரைப் பயன்படுத்தி தகவல் நிலையம் பெறும் வருடாவருட மானியத்தை உயர்த்திக்கொள்ளவா என்பதும் தொடரும் கேள்விகளில் ஒன்று.

இலங்கையிலிருந்து அவ்வப்போது ஒரு சிலர் லண்டன் தகவல் நடுவம் சார்பில் வெளிநாட்டார் உதவியுடன் இலங்கையிலிருந்து வெளிநாடுவர உதவி செய்யப்படுகிறது என்றும் அதனால் சிலர் நன்றிக்கடனுக்காக தகவல் நிலையம் பற்றித் தெரிந்தும் தெரியாமலிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
 
முப்பது வருடங்களாகத் தகவல் நடுவத்தில் ஒரு நிரந்தர காரியதரிசி இல்லாததால் அவ்வப்போது சில ‘இளம்தலைமுறை'(?)யினர் ‘வாலண்ட்டியஸாக’ வந்து ஏதோ செய்வார்கள். பொது மக்கள் நெருங்க முடியாத ‘தகவல்களைக் கொண்டிருப்பதாலோ என்னவோ அங்கு என்ன நடக்கிறது என்பது ஒரு துப்பறியும் கதை மாதியே இருக்கிறது. அங்கு வேலை செய்வோர் ஓருத்தருக்கு ஒருத்தர் விசுவாசமான – இரகசியமான ஒரு ‘குடும்பம்’ மாதிரியான சூழ்நிலையில் தகவல் நடுவம் இயங்குவது புலிகளின் புலனாய்வுத்துறை என்ற பாணியிலேயே.

தகவல் நடுவத்திற்கு உதவிக்குச் செல்பவர்கள் இந்தத் தகவல் நடுவம் தமிழரின் முன்னேற்றத்துக்காக உழைப்பதாகத்தான் நினைக்கிறார்கள். ஆனால் அங்கு என்ன நடக்கிறது? யாருக்காக நடக்கிறது இதுவரை நடந்த விடயங்களால் என்ன பிரயோசனம் வந்தது  போன்ற தகவல்களைத் தகவல் நடுவ முகவர்  தனக்குள்ளேயே அடக்கி வைத்துக்கொண்டுள்ளது.

அன்றைய கூட்டத்துக்கு வந்திருந்த அறிஞர்களும் தகவல் நடுவ முகவரும் தங்களின் முக்கிய கோரிக்கைகளாகத் தமிழ்ப் பகுதிகளிலிருந்து இராணுவம் அகற்றப்பட வேண்டும், சிறையில் இருக்கும் போராளிகள் விடுவிக்கப்பட வேண்டும், அவர்களின் பெயர்ப்பட்டியல் உடனடியாக வெளிவர வேண்டும் என்பவையாகும். இவை அத்தனையும் நல்ல கோரிக்கைகள்தான், அரசாங்கமும் அடிக்கடி கொஞ்சப்பேரை விடுதலை செய்கிறது. ஆனாலும்;;;;; தகவல் நடுவத்தார், உள்ளிருக்கம் பேராளிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர்களின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்றும் ஏன் இப்படிப் பதறுகிறார்கள் என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது.

இராணுவத்தை அகற்றிவிட்டு, போராளிகளை வெளிக்கொணர்ந்து தூண்டிவிட்டு இன்னுமொரு பயங்கரவாதத்தை முன்னெடுக்கப் போகிறார்களா? கடந்த ஆண்டு போர் முடிய முதல் ஐக்கிய நாடுகள் படையை இலங்கையில் இறக்க வேண்டும் என்று தகவல் நடுவம் பிரச்சாரம் செய்தது. அப்படி ஒரு படைபோனால் சிங்களவர்கள் ஆயதமெடுப்பார்கள் என்று தெரியும். இப்போது, பட்டினியான அகதிகளுக்குச் சாப்பாடு போடாமல், தற்கொலைதாரிகளாகப் போராட்டத்தில் பயிற்சி பெற்ற  போராளிகளை வெளிக்கொண்டுவரக் கோருகிறார்கள். ஏன்?

தங்களுக்குப் பிடிக்காத அரசுகளுக்கத் தலையிடி கொடுக்க அந்த நாடுகளில் பிரச்சினைகளை உண்டாக்குவது மேற்கு நாடுகளின் ஒரு பெரிய ‘ஜனநாயகப் பணியாகும்’. இதனால் மேற்கு நாடுகளின் முக்கிய விற்பனையான ஆயத விற்பனையைக் கூட்டுவார்கள். ஓரு கட்டத்தில் அரசுக்கு எதிராகப் போராடுபவர்களை ‘விடுதலைப் போராளிகள்’ என்று போற்றி மேற்கு நாட்டில் ஒரு மாயையை உண்டாக்குவார்கள். ஆப்கானிஸ்தானில் தலிபான்களை முன்னெடுக்க அமெரிக்கா செய்த பணிகள் இதற்கு உதாரணம்!

மேற்கு நாடுகளின் இந்த மனித உரிமை விடயத்தை ஆழமாகத் தெரிந்து கொள்ளாத, பாதிக்கப்பட்ட நாடுகளின் பொது மக்கள், ஸ்தாபனங்கள், இவர்களின் ‘மனித உரிமைக்குரலின் இரக்கத்தை’ உண்மையென்று நம்புவார்கள். ஆயதத் தயாரிப்பாளர்களும் விற்பனையாளர்களும் தங்கள் வியாபாரிகளை ‘’மனித உரிமைவாதிகள்’ என்ற பெயரில் பாதிக்கப்படும் நாடுகளுக்குப் பல போர்வைகளிற் செல்வார்கள். ஏன்.ஜி.ஓ. என்ற பெயரில், தங்களுக்குக் குழல் ஊதும் ஒரு கோஷ்டியை உருவாக்குவார்கள். அவர்கள் பல நாடுகளுக்குச் செல்லவும் மகாநாடுகளிற் பங்கு பற்றவும், தங்களின் நாட்டைப் பற்றித் திட்டித் தீர்க்கவும் நல்ல சம்பளம் கொடுப்பார்கள். அந்தச் சமூகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்க உண்மையாகக் குரல் கொடுப்பவர்களைத் தங்களின் ஊது குழல்களால் தாக்கித் தள்ளுவார்கள் (புலிகளிடம் வாங்கிக் கட்டியவர்களுக்கு இது புரியும்)

ஏற்றுமதிகளுக்குப் பெரிதாக ஒன்றமில்லாமல் பணம் படைக்கத் தங்கள்  நவீன ஆயதத்தையே நம்பியிருக்கும் மேற்கு நாடுகளுக்கு இலங்கையில் போர் முடிவு பெற்றது பெரிய ஒரு அடியாகும். எப்படியும் ஒரு பிரச்சினையை உண்டாக்க அவர்கள் தயங்க மாட்டார்கள். சரத் பொன்சேகாவை ஆதரித்தால் சிங்களவர் தங்களுக்குள் அடிபடுவார்கள் என்று புத்தியுள்ள தமிழர்கள் சொன்னார்கள். பொன்சேகாவை ஆதரித்தவர்கள் நினைத்தார்கள். சிங்கள இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதைப் பார்க்க ஆவலுடன் காத்திருந்தார்கள். 1971, 89ம் ஆண்டுகளில் ஜேவிபி யின் ஆயுதப் புரட்சியை மனதில் வைத்துக்கொண்டு, சரத் பொன்சேகாவின் ஜனாதிபதியாகும் சந்தர்ப்பத்தை வைத்து, ஆயுதம் விற்கலாம் என்று போட்ட கணக்கும் பிழைத்து விட்டது. அதற்கான முற்கட்டமாக சுவிட்சர்லாந்தில்’ இரகசியமாக’ நடந்த கூட்டத்தில் தமிழ்த் தலைவர்களுக்கு, மேற்கு நாட்டு எஜமான்கள்  சொன்னபடி அவர்கள் நடந்தும் பொன்சேகாவால் வெல்ல முடியவில்லை.

இப்படியான இரகசியக் கூட்டங்களுக்குப் பின்னாலிருக்கும் பாரதூரமான விளைவுகளைத் தமிழர்கள் உணர வேண்டும். ‘யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மீள்வாழ்க்கை…..’ என்ற பெரிய வார்த்தைகளுக்குப் பின்னாலிருக்கும் பயங்கரங்களைத் தமிழ்பேசம் மக்களுக்குத் தெரியப்படுத்த புத்தி ஜீவிகள் முன்வர வேண்டும். இந்தக் கூட்டங்களுக்குத் தொடர்ந்தும் பொருளாதார உதவி செய்யும் ஸ்தாபனங்களின் உள்ளுணர்வை நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும். இலங்கையின் துன்பத்தில் இலாபம் காணும் நாடுகளை அடையாளம் காண வேண்டும். அமெரிக்கப் படைகள் 133 நாடுகளில் தளங்களை வைத்திருக்கிறது. அவர்களின் ஆயுதங்களை வாங்கப் பல நாடுகளை ‘வியாபார’ ஒப்பந்தங்கள் மூலம் அவர்களின் ஆயுதங்களை வாங்க நிர்ப்பந்திக்கப் படுவதுண்டாம். இன்று பொருளாதாரத்தில் பின்னடையும் மேற்கு நாடுகளுக்கு ஆயுத விற்பனை உடனடியாகத் தேவைப்படுகிறது. அதற்குப் பலியாவது அப்பாவி இலங்கை மக்களா?

தமிழருக்கு உதவி செய்யும் நாட்டுப் பிரதிநிதிகளுடன் வந்திருந்த அறிஞர்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் அந்த ‘நல்ல’ மனிதர்கள் பற்றிய விடயங்கள் என் இரகசியமாகவிருக்க வேண்டும்? உருரத்திர குமார் கூட்டத்தால் ஓரம் கட்டப்பட்ட வரதகுமார் இன்ற யாருடன் துணை சேர்ந்திருக்கிறார். ஐரிவி இல் பேட்டி கொடுத்த பிரமுகர்களுக்கு ஐரிவி யாரால் நடத்தப்படுகிறது என்று தெரியாதா?

இதுபற்றிய – அதாவது லண்டன் தமிழர் தகவல் நடுவத்தால் தொடரப்படும் இரகசியக் கலந்துரையாடல்களைப் பற்றிய சில கேள்விகளை முதலில் வைக்க வேண்டும், தமிழர்களுக்குத் தகவல்கள் தருவதற்காக இயங்குவதாகச் சொல்லப்படும் ஒரு ஸ்தாபனம் ஏன் பல விடயங்களை இரகசியமாக நடத்துகிறது என்ற கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும். மக்களுக்காச் சேவை செய்வதாகச் சொல்லும் அமைப்புக்கள் மக்களை இருட்டில் வைப்பது ஏன் என்ற கேள்விக்கு தமிழர் தகவல் நடுவகம் பதில் சொல்ல வேண்டும்.

இலங்கை நாணய மதிப்பின்படி ஒரு சில கோடிகள் செலவழித்து சுவிட்சர்லாந்தில் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. இதற்காக இலங்கையிலுள்ள தமிழ் முஸ்லிம் பாராளுமன்றவாதிகள் அழைக்கப்பட்டார்கள். அந்தக் கூட்டத்தைப் பற்றிய விடயம் இரகசியமாக கசிந்தபோது, இலங்கையிலுள்ள பலர் தமிழ்த் தலைவர்களைத் தொடர்பு கொண்டார்கள். இராஜபக்சா சகோதரர்களைப் பதவியிலிருந்து தூக்கியெறிய, வெளிநாட்டுச் சக்திகள் பணம் கொடுத்துத் தமிழ்த் தலைவர்களை விலைக்கு வாங்கி அவர்கள் சரத் பொன்சோகவுக்கு வாக்களிக்கச் செய்யப் பண்ணப்போவதாக வதந்திகள் உலவின.

பிரித்தானிய அரசியற் துப்பறியும் கதைகளில் மிகவும் பிரசித்தகான கதைகளின் பின்னணியில் வெளியாகும் ஜேம்ஸ் படங்களில் அதி வீரனான ஜேம்ஸ் பொண்ட், பிரிட்டனுக்குப் பிடிக்காத நாடுகளின் தலைவர்களை மாற்றப் பல சாகசங்கள் செய்வார். சாகசங்ளின் மகிமையால் வெல்வார். திரு வரதகுமார் ஜேம்ஸ்பொண்டாக மாறி இலங்கை அரசைத்  தூக்கியெறிய எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுவது சொஞ்சம் கஷ்டமான விடயமே. குழந்தைகளுக்குத்தான் ஜேம்ஸ் பொண்ட் படம் சரியானது, யதார்த்த விடயங்களுக்கல்ல.

கடந்த வருடம் சுவிட்சர்லாந்தில் இலங்கைத் தமிழ் தலைவர்களை அழைத்து வைக்கப்படவிருந்த கூட்டம்  பற்றிய நிகழ்ச்சிநிரல்கூட, கூட்டத்திற்கு, இலங்கையிலிருந்து அழைக்கப்பட்ட தமிழ்த் தலைவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. தமிழ்த் தலைர்கள் மேற்கு நாட்டு மேடைக்கு வந்தபோது, ஓரு வெள்ளையினத்தவர் தலைவர் தலைமையில் கூட்டம் ஆரம்பமாகவிருந்ததைக் கண்டார்கள். ”கூட்டத்துக்குரிய நிகழ்ச்சி நிரல் எங்கே?, தமிழ்த் தலைவர்களுடன் பேசுவதற்கு ஏன் ஒரு அன்னியன் தலைமை தாங்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானனந்தா கேள்விகள் கேட்டதும், அந்தக் கேள்வியின் ஆத்திரத் தொனியில் அல்லாடிப்போன தகவல் நடுவ முகவர் வரத குமார் ஏதோ ஒரு வகையில் கூட்டத்தை நடத்தியதும் வெளிவந்தது. கூட்டத்திற்குச் சமுகம் தந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டணியின் சம்பந்தர் பட்டாளம் இலங்கையில நடந்த ஜனாதிபதி தேர்தலில், தமிழ் இனத்தின் பகைவனாக, ‘தமிழர்கள் இலங்கை மண்ணின் மைந்தர்கள் அல்லர் அவர்கள் இந்நாட்டுக்கு வந்தேறு குடிகள், அவர்கள் தங்களுக்கு என்று எதையும் கேட்க உரிமை கிடையாது, சிங்களவர் கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டும்’ என்று கிண்டலடித்த சரத் பொன்சேகாவுக்காக வாக்குக் கேட்டது.
 
அப்படியான சிங்களத் தலைவர்களைத் தூக்கிப் பிடிக்கும் தமிழர் தகவல் நடுவம் அண்மையில் தங்கள் ‘மீட்சி’ பத்திரிகையில் இதுவரை தமிழர்களுக்குத் துரோகம் செய்த அரசியலைக் கண்டித்து எழுதியிருந்தது. அதே துரோகத்தை யார் தொடர்கிறார்கள் என்பதை உணராமற் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று நினைப்பது மிகவும் தான்தோன்றித் தனமாகும். நேரத்துக்கு நேரம் தனது கொள்கைகளையும் கணிப்புகளையும் மாற்றிக்கொள்ளும் தமிழர் தகவல் நடுவம் யாருக்காக வேலைசெய்கிறது என்ற கேள்வி கேட்கப்படுவது தவிர்க்க முடியாதது.

தகவல் நடத்தும் பல கூட்டங்களின் தொடர்பாக எதிர்வரும் 23ம் திகதி, ‘போருக்குப் பின் இலங்கையில், பெண்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள்’ என்ற பெயரில் இன்னுமொரு கருத்தரங்கு நடக்கிறது. இக்கூட்டத்திற்கு அகில உலக என்.ஜி.ஓ ஸ்தானங்களின் உதவியுடன் இலங்கையிலிருந்து யார் பேச்சாளராக வரப்போகிறார்கள் என்பதும் இதுவரை இரகசியமாகவே இருக்கிறது.

Related Articles:

தமிழர் தகவல் நடுவம் திறந்த கொள்கையையும் வெளிப்படைத் தன்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்! : த ஜெயபாலன்

சூரிச் மாநாடு மாநாடு பற்றிய மேலதிக வாசிப்பிற்கு:

லண்டனில்? சூரிச்சில்? இரகசிய மாநாடு??

தமிழ் பேசும் கட்சிகளின் மாநாட்டின் திரைக்குப் பின்னால்: த ஜெயபாலன்

தமிழ் பேசும் கட்சிகளின் திசைமாறிய மாநாடு : த ஜெயபாலன்

நடந்தது என்ன? சூரிச் மாநாடும் எழுந்த விமர்சனங்களும்! : மீட்சி

ஏரிஎன் இல் நகைச்சீட்டு: பணம் இன்னமும் வழங்கப்படவில்லை!

ATN_Jewelersகட்டப்பட்ட நகைச்சீட்டு முடிவடைந்து பல மாதங்களாகிய நிலையிலும் சீட்டுப் பிடித்தவர்கள் தங்கள் பணத்திற்காக இன்னமும் காத்திருக்கின்றனர். பலருக்கு சில ஆயிரம் பவுண்கள் வரை இன்னமும் கொடுக்கப்படாமல் உள்ளதாகத் லண்டன் குரலுக்குத் தெரியவருகிறது. சிலருக்கு தவணையிடப்பட்டு வழங்கிய காசோலைகளும் அவர்களது வங்கிக் கணக்கில் பணமின்றி திரும்பி உள்ளது. பாதிக்கப்பட்ட சிலருக்கு சில நூறு பவுண்கள் வழங்கப்பட்டும் உள்ளது.

2008 ஓகஸ்ட்டில் ஆரம்பிக்கப்பட்டு 2009ல் முடிவடைந்த சீட்டுக்களின் கொடுப்பனவுகளும் அதற்கு முன்னான கொடுப்பனவுகளும் இன்னமும் செலுத்தப்படாமல் உள்ளது. இதற்கிடையே நகைச்சீட்டைப் பிடித்த ஏரிஎன் ஜீவலர்ஸ் மூடப்பட்டு ஏரிஎன் சொப் எனப் பெயர் மாற்றப்பட்டு உள்ளது. அதுவும் இன்னமும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது.

இச்செய்தி லண்டன் குரல் இதழ் 34ல் வெளியாகியது. ஏரிஎன் ஜீவலர்ஸ் நகைக்கடையில் நகைச்சீட்டு கட்டியவர்கள் ஆயிரக்கணக்கான பவுண் சேமிப்பை இழந்தனர்!!! இதனையடுத்து இத்தகவல் வழங்கியதாக தாங்கள் சந்தேகப்பட்ட சிலரை ஏரிஎன் ஜீவலர்ஸ் மிரட்டியதுடன் லண்டன் குரல் பத்திரிகை ஆசிரியருக்கு எதிராக அநாமதேய துண்டுப் பிரசுரம் ஒன்றையும் வெளியிட்டனர்.
இம்மிரட்டல்கள் தொடர்பாக சிங்போட் பொலிஸ் நிலையத்தில் குற்றப் பதிவு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

Student Visa மோசடி பல்லாயிரம் பவுண் பணத்தையும் இழந்து கல்வி வாழ்வையும் தொலைக்கும் இலங்கை – இந்திய மாணவர்கள்!

UK_Student_Visa_Advertலண்டன் கல்லூரிகளில் பெரும் தொகைப் பணத்தைக் கட்டி வரும் நூற்றுக் கணக்கான மாணவர்கள் லண்டன் வந்திறங்கியதும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர். இவர்கள் படிக்க வந்த கல்லூரிகள் உள்துறை அமைச்சின் விதிமுறைகளுக்கு அமையாததால் மூடப்பட்ட நிலையில் கட்டிய பணம் இழக்கப்படுகிறது.

2006ல் London Reading Collegeக்கு 3 ஆண்டுகள் பட்டப்படிப்பான Business Managment படிப்பதற்கு 3000 பவுண்வரை கட்டி விசா பெற்றுவந்த எஸ் கணேஸ்வரன் 2007ல் இரண்டாவது ஆண்டுக்கு வந்த போது அக்கல்லூரி உள்துறை அமைச்சின் தரப்பட்டியலில் இருந்த நீக்கப்பட்டது. அதனால் அம்மாணவன் London School of Business and Computing என்ற மற்றுமொரு கலலூரியில் மேலும் ஒரு 3000 பவுணைக் கட்டித் தன் படிப்பைத் தொடர்ந்தார். அதுவும் நீடிக்கவில்லை. 2008ல் அக்கல்லூரியும் தரப்படிட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இன்னுமொரு கல்லூரிக்குப் இன்னுமொரு 3000 பவுண் கட்டி விசாவைப் புதுப்பிக்க முடியாத மாணவன் ஊரில் பட்டுவந்த கடனை அடைக்க முடியாது உள்துறை அமைச்சுக்கு ஒழித்து சட்டத்திற்குப் புறம்பாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளார்.

இவர் படிக்க வந்த இரு கல்லூரிகளில் மட்டும் 200 இலங்கை இந்திய மாணவர்கள் வரை கற்றுக்கொண்டிருந்தனர். உள்துறை அமைச்சின்  தரப்பட்டியல் இறக்கத்தினால் 50ற்கும் மேற்பட்ட கல்லூரிகளில் படிக்க வந்த பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் இருந்து 1000 பவுண் கட்டி CECOS College க்கு கணணித் தொழில்நுட்பம் கற்க ஓகஸ்ட் 31 09ல் லண்டன் வந்தார் எஸ் ஹரிகரன். வந்து 7 நாட்களில் செப்ரம்பர் 7 09ல் அவர் படிக்க வந்த கல்லூரி உள்துறை அமைச்சால் மூடப்பட்டது. கட்டிய பணத்தை இழந்தார். இதே கல்லூரிக்கு வர 3500 பவுண்களை கட்டிய ஹரியின் மூன்று நண்பர்களுக்கு கல்லூரி மூடப்பட்டது, தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டதால் விசா  வழங்கப்படவில்லை. ஆனால் பயண ஏற்பாட்டை மேற்கொண்ட முகவர் அவர்கள் கட்டிய தொகையின் 50 வீதத்தையே பலத்த போராட்டத்தின் பின் மீளக்கையளித்தார்.

மாணவருக்கான விசா உத்தியைப் பயன்படுத்தி பல கல்லூரிகள் லண்டனிலும் புறநகர்ப் பகுதிகளிலும் முளைத்துள்ளன. குறைந்த கட்டணத்தை காட்டி மாணவர்களைக் கவரும் இக்கல்லூரிகள் அப்பாவி மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கின்றன.

மேலும் மாணவர்கள் தங்கள் விசாவைப் புதுப்பிக்கும் போது 350 பவுண்களை உள்துறை அமைச்சு அறவிடுகிறது. குறிப்பிட்ட கல்லூரிக்கு விசா மறுக்கப்பட்டால் கட்டணத்தையும் இழக்கின்றனர். இன்னொரு கல்லூரிக்கு விண்ணப்பித்து விசாவைப் புதுப்பிக்க மீண்டும் 350 பவுண்கள் செலுத்த வேண்டும். தெற்காசிய நாடுகளின் மத்திய தர உயர் மத்தியதர குடும்பங்களில் இருந்து வரும் இம்மாணவர்கள் பலர் தங்கள் இளமைக் கல்வி வாழ்வைத் தொலைக்கின்றனர்.

இவ்வாறான மோசடியான கல்லூரிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு அரசு அனுமதிப்பதன் மூலம் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.

”எந்திரன்” – தமிழ்ப்பட ரசிகர்களைத் ‘தந்திரமாக’ ஏமாற்றும் பிரமாண்டமான படைப்பு : ரதிவர்மன்

Endiranமிகப் பிரமாண்டமான செலவில் (25-40 அமெரிக்க கோடிகள்), தயாரிக்கப்பட்டு ஒரே நாளில் உலகில் 2250 திரைகளில் வெளியிடப்பட்ட படம் எந்திரன். முதல்நாள் காட்சிகளே  25 கோடி (அமெரிக்க டாலர்ஸ்) களுக்கு விற்கப் பட்டிருக்கிறதாம். படத்தின் ஆதிமூலம் தமிழாகவிருந்தாலும், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் ‘டப்’ பண்ணப் பட்டிருக்கிறது. ஹிந்தி, தெலுங்கு படங்களுக்கு ஆங்கில மொழியில் சப் டைடிலும் போடப் பட்டிருக்கிறது. ஒரேயடியாக உலகமெல்லாம் 2250 திரைகளில் திரையிடப்பட்ட இப்படம் பலரின் பலவிதமான எதிர்பார்ப்புக்களையும் தூண்டி விட்டிருக்கிறது. புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ்ப்பட வசூலைக் கொடுப்பவர்கள் இலங்கைத் தமிழர்கள்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தங்களின் பொழுது போக்குக்குத் தமிழ்ப் படங்களை நாடுகிறார்கள். இவர்களால் தமிழத் திரையுலகம் நன்றாகப் பணம் படைக்கிறது. தமிழ்த் திரையுலகம் என்ன படத்தைக் கொடுத்தாலும் அதை விழுந்தடித்துக் கொண்டு பார்க்க புலம்பெயர்ந்த தமிழ்க் கூட்டம் இருக்கிறது. நோர்வேயில் ‘எந்திரன்’ ஒரு பிரமாண்டமான ‘கொலோசியக் கட்டிடத்தில்’ திரையிடப்படுவதாத் தமிழகப் பத்திரிகைகள் பீற்றிக்கொண்டன.

நோர்வேய்த் தமிழர்களில் பெரும்பாலோர் இலங்கைத் தமிழர்கள். இப்படம் அவர்களுக்கு என்ன தாக்கத்தை உண்டாக்கும் என்ற தெரியாது. திரையிடப்படும் இடங்கள் திருவிழா காண்கிறது என்று தென்னிந்தியத் தமிழ்ப் பத்திரிகைகள் பறைசாற்றின. ஆனால் ஹிந்தியில்  ‘ரோபோர்ட்’ என்ற பெயரில் (எந்திரன்) திரையிடப்பட்ட விடயங்களில் கைவிட்ட எண்ணக்கூடிய கூட்டம்தான் வந்திருந்தது. (01.10.10).

இது ஒரு வழக்கமான தமிழ்ப் படம், காதலிக்காக உலகத்தை அழிக்க முயலும் தமிழ்த் திரைப்படக் கதாநாயக வடிவத்தின் ‘இயந்திர் சொருபமாக ‘எந்திரன்’ படைக்கப் பட்டிருக்கிறது. தமிழகத்தின் பிரபல இயக்குனர்களில் ஒருத்தரான சங்கரின் கதையமைப்பு, இயக்கத்தில் மிக மிகப் பணச்செலவில் தயாரிக்கப் பட்டிருக்கிறது. ஆங்கிலப் படங்களான ‘அவதார’, ‘மெட்டரிக்ஸ்’ போன்றவற்றிக்கு இணையானது இப்படம் என்று இந்திய  தமிழ்ப் படங்கள் பெருமை கொட்டிக்கொள்கிறது.

கதாநாயகன் ( ரஜனிகாந்த், அறுபது வயதைத் தாண்டியவரா அல்லது தொட்டுக்கொண்டிருப்பவரா) டொக்டர் வசீகரன் (?) பத்துவருட கால கட்டங்களாக ஆராய்ச்சி செய்து உருவாக்கிய ஒரு இயந்திர மனிதனுக்கு டொக்டரின் காதலியான ஐஸ்வரியாவின் முத்தம் கன்னத்தில் பட்டதும் மனித உணர்வுகள் வந்து ஐஸ்வரியாவின் காதலை முழுமையாகப் பெற விஞ்ஞானத்தையே விழுங்குமளவுக்குத் தன்னை வளர்த்துக்கொண்டு இயந்திர மனிதன் போராடுவதுதான் கதை.

திரைப் படங்கள் எடுப்பவர்கள் தனக்குத் தெரிந்த ஒரு கருத்தையோ தத்துவத்தையோ சாதாரண மக்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் படம் எடுப்பார்கள். அல்லது பொழுதுபோக்குக்காக ஜனரஞ்சகமான படங்கள் எடுப்பார்கள். அல்லது சமயத்தைப்போதிக்கக் கடவுள்களின் மகிமைகளைக் காட்டும் படங்களை எடுப்பார்கள்.

இதை எடுத்த சங்கரால், தென்னிந்தியாவின் பிரபல நடிகரின் பல நாள் ஆசையான எப்படியும் உலக அழகியாகப் பட்டம் எடுத்த (1992) ஐஸ்வரியாவின் காதலான நெருங்கி நடிக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தத்தான இந்தப் படம் எடுக்கப் பட்டதா என்ற கேள்வியின் திரைப்பட அமைப்பு எழுப்புகிறது.
 
அறுபது வயது முதுமை (பாவம் பார்க்கப் பரிதாபம்) முப்பத்தியாறு (மூ)முத்தழகுடன் பல நாடுகளுக்கும் பறந்து படம் பார்க்க வரும் இளைஞர்களைக் கிளு கிளுப்படைய வைக்க முயற்சிக்கிறது. இந்தக் கருத்துக்கு உதாரணம், காதலன் காதலி ஊடலில் தான்கொடுத்த முத்தங்களைத் திருப்பித் தரசொல்லிக் கதாநாயகன் கேட்க காதலி, காதலன்  வசீகரனின் கன்னத்தில் பட் பட்டென்று ‘உம்மாக்கள்’ கொடுக்க, அவள்கொடுக்கும் ‘இச்சுக்களின்’ நெருக்கம் பத்தாதென்று அடம் படிக்கிறார். உலகத்திலேயே அதிக சக்தி வாய்ந்த இயந்திர மனிதனை உருவாக்கிய ‘க(ல்)லாநிதி, இந்தக் கட்டத்தில் என்ன புதிய காதல் உத்தியை உட்புகுத்தி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. (இக்கட்டத்தைப் பெரிதுபடுத்தி விமர்சனம் எழுதப்பட்டதால் இதை எழுத வேண்டியிருக்கிறது.)

இயந்திரத்துக்கு டாக்டரின் காதலி சானாவில் வந்த  (ஐஸ்வரியாவில்) வந்த காதலைப் புரிந்து கொண்ட, கதாநாயகனின் எதிரியான இன்னொரு விஞ்ஞானி, இயந்திர மனிதனை மடக்கித்  தன் தேவைகளுக்குப் பாவித்துப் பணம் சேர்க்க அயல் நாட்டு சக்திகளுடன் கூட்டுச்சேர்கிறான். ஐஸ்வரியாவின் காதலைத் தவிர வேறு எதையும் கண்டுகொள்ளாத இயங்திர மனிதன் தன்னனைப் போல் இன்னும் பல் நூறு இயந்திரங்களை உருவாக்கி சானாவுக்காக உலகை அழிக்க முயல்கிறான்.
தனது காதலியை இயந்திரத்திடமிருந்து காப்பாற்றவும் அதேநேரம் உலகைக் காப்பாற்றவும் கதா நாயகன் வசீகரன்(?) தனது விஞ்ஞான அறிவைப் பாவித்து இயந்திர மனிதனை அழித்து விடுகிறார்.

இயக்குனர் சங்கர் தனது உதவி இயக்குனர்களுக்குப் பல ஆங்கிலப் படங்களைக் கொடுத்து அவற்றில் வரும் விறு விறுப்பான கட்டங்களைப் பற்றிய தகவல்களைச் கேகரித்துத் தனது படங்களின் ‘தேவைகளுக்குப்’ பாவிப்பதாக எங்கேயோ படித்திருக்கிறேன். பல ஆங்கிலப் படங்கனின் காட்சிகளின், கருத்துக்களின் சாயல்கள் இப்படத்தில் தொட்டுத்தடவிக் கிடக்கின்றன.
 
இந்தப் படத்தில் கதை பற்றியோ நடிப்பு பற்றியோ பெரிதாக ஒன்றும் இல்லை. ஐஸ்வரியாவுடன் பல நாடுகளுக்குப் போய்க் கவர்ச்சி நடனம் ஆடவும் ஐஸ்வரியாவுக்கு விதமான ஆடைகளைப் போட்டு அழகு பார்க்கவும்  பிரமாண்ட செலவு செய்யப்பட்டிருக்கிறது

அதுசரி ‘கிளி மான்சரோ’ பாட்டுக்குரிய ஆட்டக் காட்சியை ஏன் தென் அமெரிக்காவில் பெரும்பாலும் எடுத்தார்கள்? கிளிமாஞ்சரோ ஆபிரிக்காவிலல்லவா இருக்கிறது? (தமிழர்களுக்குச் சரித்தரம் தெரியாதென்ற நினைவு போலும்!) இவர்கள் அந்தப் பாடலுக்குப் படம் எடுத்த இடம் ஒருகாலத்தில் நாகரிக மனிதர்களாயிருந்து ஸ்பானிய காலனித்துவ வாதியான பிரான்கோயி பிச்சாரோ (1528) என்பரால் அழிக்கப்பட்ட ‘இங்கா’ என்ற இன மக்களைக் கொண்டிருந்த  ‘மாச்சுப்பூச்சி’ (1400 ஆண்டுகளில் உருவாக்கிய நகர்) என்ற தென்னமரிக்க இடமாகும்.

இந்தப் படத்தை மக்கள் திரணடு வந்த பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி படத்தை ஓட்டுவது பிரமாண்டமான டெக்னிக் காட்சிகளாகும். இப்படியான காட்சிகளைப் பார்க்க விரும்புவர்கள் உங்கள் குழந்தைகளுக்குப் பக்கத்தில் அவர்கள் கொம்பியுட்டர் கேம் விளையாடும் போது சேர்ந்திருந்தால் மிகவும் விறுவிறுப்பாகவிருக்கும்.

இறுதியாக, இப்படம் 12 வயதுக்கு மேலுள்ள வயதுள்ளவர்கள் பார்க்க வேண்டிய படம் என்று மேற்குலக தணிக்கை சபை சொல்லியிருக்கும் போது ‘எந்திரன்’ குடும்பத்துடன் சேர்ந்திருந்து பார்க்கக்கூடிய படம் என்று தென்னிந்தியத் தமிழ் இணையத்தளம் ஒன்று புழுகித் தள்ளியிருக்கிறது.

குடும்பம் என்றால் அதில் சிறு குழந்தைகளும் அடங்குவார்கள், அதைப்பற்றி ஒரு சின்னச் சந்தேகம், கதாநாயகியை வில்லர்கள் துரத்தித் தங்கள் கூட்டத்தின் நடுவிற் கிடத்தி துப்பட்டாவை உரிவதை அந்தக் கூட்டத்திலுள்ள ஒருத்தர் மோபைலில் படம் எடுக்கிறார். இக்கேவலமான கட்டத்தை சுப்பஸ்ரார் ரஜனிகாந்த் தனது பேரன் யாத்திராவுடன் சேர்ந்திருந்து பார்ப்பாரா?

தோழர் சிவம்: தோழமையின் தடம்

தோழர் கணேசமூர்த்தி சிவகுமாரன் (நெல்லியடி சிவம்) நினைவுப்பேருரை ஒக்ரோபர் 2ல் ஸ்காபறோவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கனடாவில் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகின்ற தேடகம் (தமிழர் வகைதுறைவள நிலையம்) இந்நிகழ்வையும் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வு தோழமையின் தடம் என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிகழ்வுக்கு புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் பொதுச்செயலாளர் சி கா செந்திவேல் வரவழைக்கப்பட்டு உள்ளதுடன் இவரே தோழர் சிவம் பற்றிய நினைவுப் பேருரையையும் வழங்க உள்ளார்.

தோழர் சிவம் பற்றி தேடகம் வெளியிட்டுள்ள நினைவுக் குறிப்பில் ”சமூக ஒடுக்குமுறைக்கு எதிராய் போராளியாய் எழுந்து தன் வாழ்நாள் முழுவதும் தன் மானிடத்திற்காய் உழைத்தவர்” எனக் குறிப்பிட்டு உள்ளது.

நிகழ்ச்சி விபரம்:

Saturday, October 2nd, 2010 @ 5:00 P.M
Scarborough Village RC
3600, Kingston Road (@ Markham)
M1M 1R9

தமிழர் தகவல் நடுவம் திறந்த கொள்கையையும் வெளிப்படைத் தன்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்! : த ஜெயபாலன்

Varathakumar_V_TICtic_logoஎனது மனதின் வேதனை ஒன்றை இங்கு நான் கூறியாக வேண்டும். இது எனது வேதனை மட்டுமல்ல இலங்கை வாழ்மக்களின்பால் மானசீகமாகவே அக்கறை கொண்டவர்களின் வேதனையும் தான். கடந்த 30 ஆண்டுகளின் அவலங்களுக்கும் தேக்கத்திற்கும் பின்னரும் எந்த அரசியல் நடவடிக்கைகள் இந்த இழிநிலைக்கு எமது நாட்டை இட்டுச் சென்றனவோ, அதே பாதையில்த்தான் இப்போதும் செல்வதுபோல் தெரிகிறது. அதே ஓட்டை விழுந்த கப்பலில்தான் அரசியல் பயணங்கள் தொடர்வதுபோல் தெரிகிறது. அப்படியானால் எம் இனிய மக்களுக்கு என்றுமே விமோசனம் இல்லையா? என கேட்கத் தோன்றுகிறது? இந்த நிலைமையை இந்த நிகழ்ச்சி (சுவிஸில் இடம்பெற்ற தமிழ் பேசும் கட்சிகளின் மாநாடு.) ஓரளவாவது மாற்றியமைக்க வேண்டும். வாயளவில் அல்லாது செயலளவில் ஒற்றுமையும் புரிந்துணர்வும் வேண்டும். ஒரு புதிய பரிணாமம், ஒரு புதிய பாதை திறக்கப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும். போர் முடிவுற்ற சூழ்நிலையில் நாம் சரியாகப் பயணிக்க வேண்டும் என்பதே இலங்கை மக்கள் அனைவரது சுபீட்சத்திலும் அக்கறை கொண்டவர்களின் ஆதங்கமாகும்.

வரதகுமார் – நிறைவேற்று செயலர். தமிழர் தகவல் நடுவம் மீட்சி: இதழ் 13, நவம்பர் 2009

”Role of Diaspora in renewing hope and rebuilding lives of the war affected communities in Sri Lanka: Some thoughts and Action. – இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் வாழ்வை மீள்கட்டமைப்பதிலும், மீள நம்பிக்கையூட்டுவதிலும் புலம்பெயர்ந்தவர்களின் பாத்திரம்: சில சிந்தனைகளும் செயற்பாடுகளும்” என்ற தலைப்பிலான சந்திப்பு ஒன்றினை தமிழர் தகவல் நடுவம் ஒக்ரோபர் 02 2010ல் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வில் இலங்கையில் இருந்து தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ் சமூகங்களைச் சேர்ந்த கல்வியியலாளர்களும் மனித உரிமைவாதிகளும் கலந்துகொள்கின்றனர். இவர்கள் செப்ரம்பர் 25 2010 முதல் ”Post-war challenges facing Tamil speaking peoples of Sri Lanka. – இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் போருக்குப் பின் எதிர்கொள்ளும் சவால்கள்” என்ற தலைப்பில் பலசுற்று கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட தகவலுடன் இந்த அழைப்பை விடுத்துள்ள தமிழர் தகவல் நடுவம் இதனை தாங்கள் மேற்கொள்ளளும் பல்வேறு முன்முயற்சிகளில் ஒன்று என்று மட்டும் குறிப்பிட்டு உள்ளது. தமிழர் தகவல் நடுவம் கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் சந்திப்புக்களையும் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டு வந்தபோதும் மே 18 2009ற்குப் பின் முரண்பட்ட அரசியல் சக்திகளையும் உள்வாங்கி செயற்பட வேண்டியதன் தேவையை வலியுறுத்தி வருகின்றது. இதுவிடயத்தில் பல்வேறு முன்முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும் அவை காத்திரமான பலனை அளிக்கவில்லை என்பதே உண்மை. ஆனாலும் உரையாடுவதும் விவாதிப்பதும் ஆரோக்கியமானதே. அதற்கான தளத்தை தமிழர் தகவல் நடுவம் பேணி வருகின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் இருந்து தமிழர் தகவல் நடுவம் அதனுடன் தன்னையும் பின்னிப் பிணைத்து வந்துள்ளது. அதனால் தமிழர் தகவல் நடுவம் பற்றிய ஆய்வும் மதிப்பீடும் அவசியமானது. ஆனால் இக்கட்டுரையானது தமிழர் தகவல் நடுவத்தின் அண்மைக் காலத்தைய சில நடவடிக்கைகளை மட்டுமே கவனத்திற்கொள்கிறது.

செப்ரம்பர் 25, 2010 முதல் நடாதத்தப்படுகின்ற சந்திப்பு தமிழர் தகவல் நடுவத்தின் பல்வேறு முன்முயற்சிகளில் ஒன்றல்ல. இது குறிப்பாக சூரிச் இல் 2009 நவம்பர் 19 முதல் 22 வரை நடைபெற்ற தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் சந்திப்பின் தொடர்ச்சியே. அக்கூட்டத்தின் மறைமுகமான நிகழ்ச்சி நிரல் மேற்கத்தைய அரசுகளின் ‘ரெஜீம் சேன்ஜ்’யை மையப்படுத்தியே இருந்தது. ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சியை மாற்றியமைப்பதன் பின்னணியில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்காக தமிழ்பேசும் சமூகங்களை ஒருகட்டமைப்பினுள் கொண்டு வந்து ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் ராஜபக்ச ஆட்சிக்கு எதிராக நிறுத்த முற்பட்டனர். ஆனால் தமிழ்பேசும் சமூகங்களின் பிரதிநிதிகளை குறைந்தபட்ச புரிந்துணர்வு ஒன்றுக்கு கொண்டு வந்து அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுப்பது என்பது வெளிப்படையான நிகழ்ச்சி நிரலாக தமிழர் தகவல் நடுவத்தினால் முன்வைக்கப்பட்டது.

இந்த மாநாட்டுக்கு ஏற்பட்ட 100 000 பவுண் வரையான செலவையும் – ”இதனை நடாத்துவதற்கான பெரும்பாலான செலவினை சுவிஸ் அரசாங்கமும், IWGயும், Essex பல்கலைக்கழகத்தின் மனித உரிமை மையமும் பகிர்ந்து கொண்டன” என வி வரதகுமார் தங்கள் உத்தியோகபூர்வ ஏடான மீட்சியில் தெரிவித்து இருந்தார். International Working Group on Sri Lanka என்ற அமைப்பே இம்மாநாட்டை ஒழுங்கு செய்வதாகவும்  Initative on Conflict Prevention through Quiet Diplomacy, தமிழர் தகவல் நடுவம் ஆகியனவே இம்மாநாட்டின் ஏற்பாடுகளைச் செய்வதாக அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

சூரிச் மாநாடு மாநாடு பற்றிய மேலதிக வாசிப்பிற்கு:

லண்டனில்? சூரிச்சில்? இரகசிய மாநாடு??

தமிழ் பேசும் கட்சிகளின் மாநாட்டின் திரைக்குப் பின்னால்: த ஜெயபாலன்

தமிழ் பேசும் கட்சிகளின் திசைமாறிய மாநாடு : த ஜெயபாலன்

நடந்தது என்ன? சூரிச் மாநாடும் எழுந்த விமர்சனங்களும்! : மீட்சி

கடந்த ஆண்டு நவம்பர் 19 முதல் 22 வரை நடைபெற்ற சூரிச் மாநாடு பற்றி வி வரதகுமார் வருமாறு தெரிவித்து இருந்தார். ”பங்குபெற்றோர் யாவரும் ஒரு நியாயமான, நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றிக்காக ஒற்றுமையுடனும், ஒன்றுபட்ட நோக்குடனும் உழைப்பது என உறுதி பூண்டனர். தம்மிடையே பேசி முக்கியமான விளக்கங்களைப் பெற்று ஒரு பொது நோக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். அத்துடன் தமிழ் பேசும் மக்கள் ஒரு சமாதானமான செழிப்பான சமூகமாக உருவாவதற்குத் தேவையான அவர்களது உரிமைகளை பெறவதற்காகத் தொடர்ந்தும் இப்டியான கலந்துரையாடலில் பங்கெடுத்துக் கொள்வதெனத் தீர்மானம் எடுத்துக் கொண்டனர்.”

ஆனால் அடுத்த ஒரு ஆண்டுக்குள் அவ்வாறான ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்துள்ள தமிழர் தகவல் நடுவம் முன்னைய சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ்பேசும் சமூகங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகளுக்கு இவ்வாறான ஒரு கலந்துரையாடல் இடம்பெறுவதை அறிவிக்கவில்லை. இதுதொடர்பாக இலங்கையில் உள்ள தமிழ்பேசும் சமூகங்களின் அரசியல் கட்சிகளோடு தேசம்நெற் தொடர்புகொண்ட போது அவர்கள் இதுபற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை.

இப்போதைய கலந்துரையாடல் ‘Post-war challenges facing Tamil speaking peoples of Sri Lanka.-  இலங்கைத் தமிழ்பேசும் மக்கள் போருக்குப் பின் எதிர்கொள்ளும் சவால்கள்’ என்ற அடிப்படையில் இடம்பெற்றுள்ளது. இக்கலந்துரையாடலுக்கு இலங்கையில் இருந்தும் இலங்கைக்கு வெளியே இருந்தும் கல்வியியலாளர்களும் மனித உரிமைவாதிகளும் அழைக்கப்பட்டு உள்ளனர். சந்திரஹாசன், பாக்கியசோதி சரவணமுத்து, சீலன் கதிர்காமர், ராஜன் பிலிப்ஸ், பேராசிரியர் சிற்றம்பலம் உட்பட இன்னும் சிலரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள வந்துள்ளர். இவர்கள் பெரும்பாலும் மனித உரிமைகள் அமைப்புகள் உட்பட்ட அரசுசாரா பொது அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். இக்கலந்துரையாடலும் முன்னைய சூரிச் மாநாடு போன்று பெரும் நிதிப் பங்களிப்பின்றி மேற்கொண்டிருக்க முடியாதாகையால் தமிழர் தகவல் நடுவம் இச்சந்திப்பின் பின்னணியில் உள்ளவர்களை வெளிப்படுத்துவதன் மூலம் மட்டுமே இச்சந்திப்புக்களின் உண்மையான நோக்கங்களை தமிழ் மக்கள் அறிந்துகொள்ள முடியும்.

தமிழர் தகவல் நடுவம் எப்போதும் அரசு மற்றும் கட்சிகள் பொது அமைப்புகளிடம் திறந்த கொள்கையையும் வெளிப்படைத் தன்மையையும் வலியுறுத்தி வருகின்றது. ஆனால் இவற்றை தமிழர் தகவல் நடுவம் கடைப்பிடிப்பதில் எப்போதும் தயக்கம் காட்டியே வந்துள்ளது. சூரிச் மாநாட்டிலும் அதில் கலந்துகொண்ட கட்சிகள் தேசம்நெற் இணையத்தைப் பாரத்தே அம்மாநாடு பற்றிய உள் தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டி இருந்தது.

புலம்பெயர்ந்த மக்கள் இலங்கையின் அரசியல் நடவடிக்கைகளில் எழுந்தமானமாக நேரடியாக ஈடுபடுவதை எப்போதும் விமர்சிக்கும் தமிழர் தகவல் நடுவம், அங்குள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடாகவே புலம்பெயர்ந்த தமிழர்கள் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்கள் நேரடியாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தமிழ் அரசியல் பிரதிநிதிகளை கீழ்மைப்படுத்தும் என்றும் தமிழர் தகவல் நடுவம் தெரிவித்து வந்துள்ளது. ஆனால் இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் முக்கிய சந்திப்பு ஒன்றினை மேற்கொள்ளும் தமிழர் தகவல் நடுவம் அது பற்றி எவ்விதமான விடயத்தையும் இதுதொடர்பாக மாநாட்டை மேற்கொண்ட தமிழ் கட்சிகளுக்கு அறிவிக்கவில்லை.

தமிழர் தகவல் நடுவம் பற்றிய சந்தேகப் பார்வையும் நம்பிக்கையின்மையும் ஏற்படுவதற்கு இவ்வாறான இறுக்கமான மூடிய வெளிப்படையற்ற நகர்வுகளே காரணமாக இருந்துள்ளது. அதனாலேயே சூரிச் மாநாட்டில் தமிழர் தகவல் நடுவத்தினால் குறிப்பாக எதனையும் சாதிக்க முடியவில்லை. இப்போது சூரிச் மாநாடு கிடப்பில் போடப்பட்டு லண்டன் மாநாடு. இதுவே கடந்த காலங்களில் தமிழர் தகவல் நடுவத்தின் செயற்பாட்டு போக்காக இருந்து வருகின்றது.

2009 மே 18க்குப் பின் தமிழர் தகவல் நடுவம் வேறு வேறு முயற்சிகளில் இறங்கியது. அதற்காக வேறு வேறு சந்திப்புக்களையும் ஏற்பாடு செய்தது. இந்த சந்திப்புக்களின் நோக்கங்களில் அரசியல் ரீதியான முரண்பட்ட நலன்களும் இருந்தது. அப்படி இருக்கையில் ஒரே குழுவில் செயற்பட்டவர்களுக்கு இடையேயே ஒளிவுமறைவுகள் மலிந்து காணப்பட்டது. அதனால் தமிழர் தகவல் நடுவத்தினை எல்லோரும் சந்தேகப் பார்வையுடன் பார்க்கின்ற நிலை உருவானது.

தமிழ் மக்களிடையே புரிந்தணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அரசியல் ரீதியாக முரண்பட்டவர்கள் அனைவரையும் அழைத்து ஒரு சந்திப்பு நடந்து கொண்டு இருக்கும்; அதே நேரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை மட்டும் அழைத்து மற்றும்மொரு சந்திப்பு தனியாக நடைபெறும். பின்னர் இவர்கள் அனைவருக்கும் எதுவும் தெரியாத வகையில் அரசசார்பற்ற அமைப்புகளை வரவழைத்து மற்றுமொரு சந்திப்பு நடைபெறும். தமிழர் தகவல் நடுவம் தன்னுடைய தேவைக்கும் வசதிக்கும் ஏற்ப தமிழ் அரசியல் ஆர்வலர்களை பிரித்தாளுகின்ற தந்திரத்தை நீண்ட நாட்களாகவே கொண்டுள்ளது. தமிழர் தகவல் நடுவத்தின் சில கூட்டங்களுக்கு தொடர்ச்சியாகச் செல்லும் ஒருவர் இதனை மிக இலகுவில் கண்டுகொள்ள முடியும். இது தமிழர் தகவல் நடுவத்தின் மிகப் பெரும் பலவீனமாகவும் தமிழர் தகவல் நடுவத்தினால் எதனையும் முழுமையாகச் சாதிக்க முடியாமல் போவதற்கான காரணமாகவும் உள்ளது.

இக்கட்டுரையில் ஆரம்பத்திலேயே வி வரதகுமாருடைய குறிப்பில் உள்ள ”கடந்த 30 ஆண்டுகளின் அவலங்களுக்கும் தேக்கத்திற்கும் பின்னரும் எந்த அரசியல் நடவடிக்கைகள் இந்த இழிநிலைக்கு எமது நாட்டை இட்டுச் சென்றனவோ, அதே பாதையில்த்தான் இப்போதும் செல்வதுபோல் தெரிகிறது. அதே ஓட்டை விழுந்த கப்பலில்தான் அரசியல் பயணங்கள் தொடர்வதுபோல் தெரிகிறது.” என்ற குறிப்பு தமிழர் தகவல் நடுவத்திற்கும் மிகப் பொருத்தமானதே. இந்த ஓட்டை வீழ்ந்த கப்பலில் சூரிச் என்றும் லண்டன் என்றும் வி வரதகுமார் நீண்ட காலம் பயணிக்க முடியாது. இந்தக் கப்பலை நம்பியே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உட்பட முக்கிய போராளிகள் காத்திருந்ததாக தன்னை வெளிப்படுத்த விரும்பாத முக்கிய அரசியல்வாதி ஒருவர் சூரிச் மாநாட்டில் சந்தித்த போது தேசம்நெற்க்கு தெரிவித்து இருந்தார். ஆகவே தமிழர் தகவல் நடுவத்தின் கடந்த 30 ஆண்டுகால அரசியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதில் உள்ள ஓட்டைகள் அடைக்க முடிந்தால் அடைக்கப்பட வேண்டும். முடியாத நிலையில் அக்கப்பல் மூழ்குவது தவிர்க்க முடியாதது.

அருட்தந்தை S J இம்மானுவேல் மீண்டும் கத்தோலிக்க மதத்துடன் இணைவு! – ‘பாவிகளையும் யேசு மன்னித்து வரவேற்பாராக’: ரி கொன்ஸ்ரன்ரைன்

Emmanuel_S_J_Rev_Frநான் முதலில் தமிழன் – பின்னர்தான் கிறிஸ்தவன்”, “பிரபாகரனை யேசுநாதருடன் ஒப்பிடலாம்” என வேத வாசகங்களைப் பொழிந்த (வணபிதா) பேராசிரியர் டாக்டர். S J இம்மானுவேல் அடிகளார் மீண்டும் கத்தோலிக்க மதத்துடன் இணைவதை தற்போது பரவலாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

1950 க்களில் லத்தீன் அமெரிக்காவில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களில் ‘இறையியல்’ ஒரு புரட்சிகர வடிவத்தை எடுக்க ஆரம்பித்தது. ‘விடுதலை இறையியல்’ என்ற கருத்தாக்கம் உருவானது. இது காலப்போக்கில் லத்தீன் அமெரிக்காவையும் தாண்டிய சர்வதேச கருத்தாக்கமானது. ”கிறிஸ்தவ மத நம்பிக்கையை ஏழைகளின் துன்பம், அவர்களின் போராட்டம், நம்பிக்கை, சமூகத்தை விமர்சனப் பார்வையுடன் அணுகுவது என்ற அடிப்படையில் ஏழைகளின் கண்களினூடாக கத்தோலிக்க மதமும் கிறிஸ்தவமும் பார்ப்பதுவே ‘விடுதலை இறையியல் ‘எனப்படுகின்றது.”

சமூக அநீதிகளுக்கு எதிரான ஒரு உள்ளுணர்வாக இந்த இறையியல் பலம்பெற்றது. இது லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து இலங்கை போன்ற நாடுகளுக்கும் பரவியது. இந்த ‘விடுதலை இறையியல்’ அடிப்படையில் இலங்கையின் தமிழ் பகுதிகளில் இருந்த கத்தோலிக்க மத நிறுவனம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும் நிலையை எடுத்தது.

Catholic_Fr_Carry_Piraba_Playcardஆனால் பின்னான காலகட்டத்தில் விடுதலை அமைப்புகளே மக்களது துன்பங்களுக்கும் கொலைகள் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றுக்குக் காரணமாக இருந்த போதும் இந்த மத நிறுவனத்தினால் முழுமையாக தங்களை விடுவித்துக்கொள்ள முடியவில்லை. விரும்பியும் விரும்பாமலும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தமிழ் கத்தோலிக்க மத நிறுவனம் நெருங்கி நின்றதற்கு இதுவே காரணம்.

ஆனால் S J இமானுவல் அடிகளார் அருட்தந்தை கஸ்பார் போன்றவர்கள் தங்களது சொந்த விருப்பம் காரணமாக தங்களையும் தாங்கள் சார்ந்த மத நிறுவனத்தையும் தம் சொந்த நலன்சார்ந்து பயன்படுத்திக் கொண்டனர். 

கடந்த சில வருடங்களாக புலம்பெயர் தமிழர்களின் புலன்பெயர்வை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி அவர்களை உசுப்பேத்தி உசுப்பேத்தி லண்டன் பாரிஸ் ஜேர்மன் நகரங்களில் நடுறோட்டில் படுக்கவைத்து ஆட்டம் ஆடி கூத்தாடி தாம் வாழும் தமக்கு தஞ்சம் கொடுத்த நாடுகளுக்கே இடைஞ்சலாக இருந்த சம்பவங்களில் S J இம்மானுவேலின் பங்கு முக்கியமானது.
 
கடந்த பல வருடங்களாக ஜேர்மனியில் இருந்துகொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சார சக்கரத்தைச் சுற்றியவர் S J இம்மானுவேல் அடிகளார். பணத்தை மட்டும் அடிப்படையாக வைத்து எவ்வித அரசியல் அறிவோ சாணக்கியமோ அல்லது மொழித்திறனோ அற்ற புலம்பெயர் புலி வால்களுக்கு உயர் கல்வித் தகைமையும் அதீத பேச்சாற்றலும் பலமொழித் திறமையும் கொண்ட அதிலும் குறிப்பாக ஒரு கத்தோலிக்க உயர் குருவானவர் கிடைக்கப்பெற்றது ஒரு வரப்பிரசாதமாக கருதப்பட்டது. வணபிதா S J இம்மானுவேலின் தகமையுடனும் அனுபவத்துடனும் எந்த புலி பிரமுகரும் ஈடாக இருக்கவில்லை. இதனால் Global Tamil Forum (GTF) (உலக தமிழ் பேரவை) இன் தலைமை S J இம்மானுவேலுக்கு பொன் தகட்டில் வைத்துக் கொடுக்கப்பட்டது.

Emannuel_S_J_Group_With_Gordon_BrownGTF பிரித்தானியாவில் இயங்கிவரும் British Tamil Forum,  Tamils For Conservative,  Tamils For Labour போன்ற அமைப்புக்கள் போன்றதொரு விடுதலைப் புலி ஆதரவு அமைப்பே. ஆக மொத்தமாகக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் வணபிதா இம்மானுவேல் புலன்பெயர் தமிழர்களின் தேசியத்தலைவர். இம்மானுவேல் அடிகளார் Global Tamil Forum (GTF) என்ற நெடியவன் குழுவின் தலைவர் என South Asia Intelligence Review இதழில் குறிப்பு உள்ளது.

Nediyavan_Sivaparan_Perinbanayakamதமிழீழ விடுதலைப் புலிகளால் சர்வதேச விடயங்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டவரே நெடியவன் என்கின்ற பேரின்பநாயகம் சிவபரன். தற்போது இவரும் இவரைச் சார்ந்த குழுவினருமே தமிழீழ விடுதலைப் புலிகளின் பெரும்பான்யையை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவர்களே S J இமானுவலின் பின்னிருந்து உலகத் தமிழர் பேரவையை இயக்குகின்றனர். இவர்கள் இலங்கையில் மீண்டும் குண்டுகளை வெடிக்க வைத்து ‘பனை மரத்தில வெளவாலா தலைவருக்கே சவாலா! தலைவர் வந்துவிட்டார். பராக்! பராக்!!’ என்று பறைசாற்ற நேரம் பார்த்துக் காத்திருக்கின்றனர்.

உலகத் தமிழ் பேரவையின் கீழ் இணைந்துள்ள அமைப்புகள்: Australian Tamil Congress, British Tamils Forum, Canadian Tamil Congress, Danish Federation of Tamil Associations, House of Eelam Tamils, Norwegian Council of Eelam Tamils, New Zealand Tamil Society, Wellington Tamil Society, Swedish Tamil Forum, Malaysia – Tamils Relief Fund, United States Tamil Political Action Council, European Tamil Union, Tamil Cultural Centre.

S J இம்மானுவேல் 18 மே 2009 ற்க்கு பின்னால் உத்தியோகபுர்வ விடுதலைப் புலிகளின் பிரிவு ஒன்றுக்கு தலைவர் என்பது ஆதாரத்தடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. S J இம்மானுவேல் தலைமை தாங்கும் GTF, ‘Protest Sri Lankan Goods’, ‘Protest Sri Lankan Airways’ என்ற மண் கவ்விய பிரச்சாரங்கள் நடாத்தியது என்பது முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியதாகும்.

Vanni_Missionஅதுமட்டமல்லாமல் புலம்பெயர் சமூகத்தின் பெரிய மோசடிகளில் ஒன்றான வணங்காமண் செயற்குழுவிற்க்கு பின் பலமாக British Tamil Forum – BTF இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது, BTF, GTF என்பன ஒரே அமைப்புகள். மேலும் GTFஇன் தலைவராக நியமிக்கப்பட இருந்த எதிர்வீரசிங்கம் வணங்கா மண் முக்கியஸ்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே வணங்கா மண் கொள்ளைக்கு பின்னணியில் S J இம்மானுவேல் அடிகளார் இருப்பது நிரூபணம்.

S J இம்மானுவேல், அமெரிக்காவில் வசிக்கும் உருத்திரகுமார் கூட்டாகவே  Trasnational Government  அமைக்க, இதன் முதற் கருவின் கதாநாயகன் கேபி. கே பி கைது செய்யப்பட்டதன் பின்னால் S J இம்மானுவேல் உருத்திரகுமார் கூட்டே இன்றய விடுதலைப் புலிகளின் சுழியோடிகள். இன்னொரு வகையில் கூறப்போனால் S J இம்மானுவேல், உருத்திரகுமார், நெடியவன் கைகளிலேயே புலிகளின் பெருவாரியான பணம் தங்கிப்போயுள்ளது.

எனவே இன்றைய யாழ்-மன்னார் கத்தோலிக்க பீடமும் தம்மை S J இம்மானுவேலுடன் இணைத்துக்கொள்வது ஊகிக்கக் கூடியதே.

Emmanuel_S_J_Rev_Frவன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் செய்த கொடுமைகளை அப்பட்டமாக மறைத்தது மட்டுமல்ல அவற்றை நியாயப்படுத்தி பிரச்சாரம் செய்த முக்கிய நபர்களில் S J இம்மானுவேல் முக்கியமானவர். உலகில் உள்ள சகல அரசசார்பற்ற பெரும் ஸ்தாபனங்களும், முக்கிய நாடுகளும், விடுதலைப் புலிகளை கண்டித்தபோது “மக்களோடு புலிகள், மக்களே புலிகள்” என புலம்பெயர்ந்து நாடகளிலிருந்து உசுப்பேத்திய பல ஆயிரம் தமிழ் மக்களை கொல்வதில் S J இம்மானுவேலுக்கு பாரிய பங்கு இருக்கிறது. ஒரு தமிழன் என்ற முறையில் ராஜபக்ச சகோதரர்கள் கையில் உள்ள இரத்தக்கறையைவிட இவரின் கையில்தான் அதிக இரத்தகறை இருக்கிறது.

போரின் உச்சக் கட்டத்தில் சென்ற வருடம் மார்ச் மாதம் வவனியா கிளிநொச்சி பகுதியில் முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பி வந்த மக்களை நேரடியாக சந்தித்தவுடன், நான் அவர்கள் தப்பி ஓடும்போது (புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிறிலங்கா இராணுவத்தின் பிரதேசத்திற்குள்) புலிகள் செய்த அட்டூழியங்களை நேரடியாக விபரிக்க கேட்டவன். விடுதலைப் புலிகள் தப்பி ஓடும்போது மக்களை நோக்கி சுட்டதையும் அடித்ததையும் வடுக்களுடன் பார்த்த எனக்கு S J இம்மானுவேல் போன்றோர் புலிகளின் வக்கிரத்தை நியாயப்படுத்துவது புலிகளின் பயங்கரவாதத்தைவிட அகோரமானது.

மனிதப் படுகொலைகள் உக்கிரமாக நடந்து கொண்ட கடைசி நாட்களிலாவது பிரகாரனின் விசுவாசிகளாக இருந்த S J இம்மானுவேல் போன்றோர் சற்று நேர்மையான முறையில் பிரச்சினைகளை அணுகி இருக்கலாம்.

Emmanuel_S_J_Rev_Frஅண்மையில் லண்டனில் யாழ்புனித பற்றியரசர் கல்லுரி அதிபருக்கு அளிக்கப்பட்ட கௌரவ விருந்தோன்பிலும் மற்றும் அண்மையில் காலம் சென்ற மூத்த குருவானவர் வணபிதா மதுரநாயகம் அவர்களின் மறைவை ஒட்டி இடம்பெற்ற இரு வைபவங்களிலும் S J இம்மானுவேல் முக்கிய பிரதிநிதியாக வந்திருந்தார். இவ்வாறான மதச்சடங்குகளில் நான் S J இம்மானுவேலை கடந்த 25 வருடங்களாக புலம்பெயர்ந்த மண்ணில் காணவில்லை. நான் இவரை கண்டது எல்லாம் அரசியல் கூட்டங்களில் தான்.

“பாவிகளையும் யேசு மன்னித்து இரட்சிப்பார்” என்ற வேதவாக்கை நம்பித்தான் S J இம்மானுவேல் அடிகளார் கத்தோலிக் மதத்துடன் இணைந்து கொண்டால் நல்ல விடயம் தான். அதற்கு மாறாக எஞ்சியுள்ள புலம்பெயர் தமிழ் மக்களை இன்னுமொரு முள்ளிவாய்க்காலுக்கு அழைத்து செல்லத்தான் வந்துள்ளாரோ என்பதற்க்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

பிரித்தானிய தொழிற்கட்சியின் புதிய தலைவர். எட்வேர்ட் சாமுவேல் மிலிபாண்ட். : ரதிவர்மன்

Ed_Milibandவைகாசி மாதம் நடந்த தேர்தலில் தொழிற்கட்சி பதவியிழந்தது. அவர்களின் தோல்வி, 1918ம் ஆண்டுக்குப்பின் தொழிற்கட்சிக்குக் கிடைத்த படுதோல்வியாகக் கருதப்பட்டது. பெரும்பாலான பிரித்தானிய மக்களின் எதிர்பார்ப்பு, எட்வேர்ட்டின் தமயனான டேவிட் மிலிபாண்ட் தொழிற்கட்சியின் தலைவராக வருவார் என்பதாகும். டேவிட் மிலிபாண்ட், பிறவுன் அரசாங்கத்தில் வெளிநாட்டுத்துறை அமைச்சராகவிருந்தவர். ரோனி பிளேயரின் வாரிசாகக் கருதப்பட்டவர், ரோனி பிளேயரின் வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்படிப்பவர், ரோனி பிளேயர், பிரித்தானிய மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக்கொண்டு ஈராக்குக்குப் படையை அனுப்பியவர். இதனால் ஆயிரக்கணக்கான தொழிற்கட்சி அங்கத்தவர்கள் கட்சியை விட்டு வெளியேறினார்கள்.

ரோனி பிளேயர், ஈராக் நாட்டுக்குப் படை அனுப்பியதைச் சரி என்று இன்னும் வாதாடுபவர். இன்னொரு நாட்டுக்குப் படை அனுப்புவது பற்றிப் பேசும்போது ‘மனித உரிமைகளை எந்த அரசு மீறுகிறதோ அந்நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எங்களுக்குத் தார்மீக உரிமையுண்டு’ என்று சொன்னவர்.

ஆதனால் புலிகளின் ஆதரவாளர்கள் அவரின் மூலம் இலங்கைக்குத் தலையிடி கொடுத்தார்கள். பிரபாகரனைக் காப்பாற்ற டேவிட் மிலிபாண்டை 2009ம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கைக்கு அனுப்பினார்கள்.

ரோனி பிளேயரின்’ மனித உரிமைகளை மீறும் நாடுகளைக் கண்டிக்க (ஆக்கிரமிக்க?) பிரித்தானியாவுக்குத் தார்மீகக் கடமையிருக்கிறது என்பதைப் பாவித்தும், இலங்கையின் பழைய காலனித்துவ சக்தியென்ற  முறையில் பிரித்தானியா இலங்கையிற் தலையிட வேண்டும் என்று புலிகள் எதிர்பார்த்தார்கள். ரோனி பிளேயரின் வாரிசான டேவிட் மிலிபாண்டின் மூலம் வெளிநாட்டுப் படையொன்றை அனுப்ப எடுத்த புலி ஆதரவாளர்களின் அத்தனை போராட்டங்களும் பிரித்தானிய பாராளுமன்றத்துக்கு முன் 73 நாட்கள் நடந்த சோகமான நாடகமாக முடிந்தது. ( டேவிட் மிலிபான்ட் பற்றிய முன்னைய பதிவு: ”புலிகள் ஆயுதங்களைக் கைவிடுவது நிரந்தரத் தீர்வுக்கு அவசியம்” பிரான்ஸ் – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்கள் அறிக்கை – புலிகளின் கையில் ஆயுதம்? : த ஜெயபாலன் )

அதன்பின், இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களைக் காரணம் காட்டி, இலங்கை அரசைக் கூண்டில் நிறுத்தப் புலி ஆதரவாளர்கள், அமெரிக்காவில் டேவிட்டின் அபிமானத்தைப் பெற்றவரான ஹிலாறி கிலிண்டன் தொடக்கம், பல செனேட்டர்களையும் அணுகினார்கள். இந்தியாவும் சீனாவும் இந்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டுத்தடுத்தார்கள்.

David Milliband Meets London Tamilsதொழிற்கட்சியின் தலைவர் கோர்டன் பிறவுன், 2010ம் ஆண்டு வைகாசி மாதம்  தனது பதவியை இராஜினாமா செய்ததும், டேவிட் மிலிபாண்ட் அந்தத் தலைமைக்குத் தன் பெயரைக் கொடுத்ததும் புலிகளின் ஆதரவாளர்களுக்குப் புத்துயிரைக் கொடுத்தது. டேவிட் மிலிபாண்டைத் தேர்தலில் வெற்றி காண ‘தொழிற்கட்சிக்கான தமிழர்கள்’ (Tamils for Labour) என்ற பெயரில் கூட்டத்தையும் வைத்தார்கள். தேர்தலுக்கு உதவப் பணம் சேர்த்தார்கள். ( ஏழைத் தமிழரின் கண்ணீரில் உல்லாசப் படகோட்டும் புலம்பெயர் தமிழர்கள். : ரதிவர்மன் )

ஆனால்  பிரித்தானியாவின் பிரமாண்டமான தொழிற் சங்கங்களான யுனைட், யூனிசன் போன்றவர்களின் ஆதரவால் எட்வேர்ட் மிலிபாண்ட் தொழிற்கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப் பட்டிருக்கிறார். அன்னிய நாடுகள் பற்றிப் பேசும்போது, ஈராக் நாட்டுக்குப் போர்ப்படைகளை அனுப்பியது சரியான விடயமல்ல என்று எட் மிலிபாண்ட் சொல்லியிருக்கிறார்.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்ட நாற்பது வயதான (24.12.1969) எட்வேர்ட்டின் தந்தை தாயார் இரண்டாம் உலகப்போர்க்கால கட்டத்தில் ஹிட்லரின் கொடுமையிலிருந்து தப்பி ஓடிவந்த அகதிகள். இடதுசாரியான எட்வோட்டின் தந்தை முதுபெரும் இடதுசாரியான ரோனி பென்னுடன் வேலை செய்தவர்.

இன்று, இருபதாவது தொழிற்கட்சித் தலைவராக வந்திருக்கும் எட்வேர்ட் ஐந்து வருடங்களின் பின்னர் நடக்கவிருக்கும் பிரித்தானிய பொதுத் தேர்தலின்பின் வெற்றி பெறலாம். பிரித்தானியாவின் பிரதமராகவும் வரலாம். ஆனால் பிரித்தானியாவிலுள்ள பொருளாதாரப் பிரச்சினை, குடிவரவுப்பிரச்சினை, குற்றங்களைத் தடுக்கும் சட்ட திட்டங்கள்பற்றிய தெளிவான கண்ணோட்டங்கள் சரிவர உணர்ந்து மக்களின் ஆதரவைப் பெறாவிட்டால் இந்த இளைஞரின் எதிர்காலம் கேள்விக்குறியாகவிருக்கும்.

ஓக்ஸ்போர்ட், லண்டன் கொலிஜ் ஒவ் எக்கொனமி போன்றவற்றில் கல்விகற்ற எட்வோர்ட் அமெரிக்காவில் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக இருந்தவர்.

Miliband_Brothersபழைய பிரதமர் ரோனி பிளேயரை எதிர்க்கும் கூட்டத்தால் தலைவராக்கப் பட்டிருக்கிறார். அன்னிய நாடுகளுடன் மோத வேண்டாம் என்று குரல்கொடுப்பவர்களின் ஆதரவு எட்வேர்ட்டுக்கு இருக்கிறது.

ஆனாலும். பழையபடி புலி ஆதரவாளர்கள் இவரை முற்றுகை போடுவார்கள், தூக்கிப்பிடிப்பார்கள் கூட்டம் போடுவார்கள்.ஆனாலும்  இவர் எதிர்க்கட்சித்தலைவராக இருக்கும்போது இலங்கையின் அரசியலில் பெரிதாகத் தலையிடமுடியாது.

இன்று இருக்கும் பிரித்தானிய கூட்டாட்சியின் வெளிவிவகார அமைச்சராகவிருக்கும் லியாம் பொக்ஸ், இலங்கையின் அரசியற் தலைமையுடன் பரவாயில்லாத உறவைப் பேணுகிறார். இந்தியாவின் ஆதரவு இலங்கைக்கு இருக்கும்வரை மேற்கத்திய வல்லரசுகளால் இலங்கையை ஒன்றும் செய்ய முடியாது என்பது பலருக்கும் தெரியும்.

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் முன்னொரு காலத்தில் இருந்ததுபோல், நெருக்கமான அரசியல் உறவுகள் இன்று கிடையாது. பழைய காலனித்துவ சக்தியாக பிரித்தானியா இலங்கைக்கு கொடுக்கும் உதவிகள், இராணுவப் பயிற்சி, சில தொழில் நுட்ப உதவிகளுடன் முடிகிறது. ஆனால், இன்று இலங்கையின்  பெரும்பாலான இராணுவப் பயிற்சிகள், இந்தியா, பாகிஸ்தான், சீனா, பங்களதேஷ் போன்ற நாடுகளில் நடக்கிறது.

இலங்கையின் மிகப்பெரிய வியாபார உறவுகள், இந்தியா, சீனா, ஈரான், ஈராக், மத்திய தரைக்கடல் நாடுகளுடன் விரிகிறது என்பதால் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் தன்மை பிரித்தானியாவுக்குக் கிடையாது. ஆனால் தமிழர்களின் வாக்குகளுக்காகப் பிரித்தானியா இலங்கையுடன் முட்டிக்கொள்ளலாம். ஆனால் அதனால் புலி ஆதரவாளர்களுக்கு வரும் பிரயோசனங்கள் மிகக்குறைவாகும்.

புலி ஆதரவாளர்கள் நெருங்கும் தலைவர்கள் துரதிர்ஷ்ட வசமாக நொருங்கித் தள்ளுகிறார்கள். (பிரபாகரன், சரத் பொன்சேகா, ரணில் அன் கோ, வைகோ, ஜெயலலிதா, டேவிட் மிலிபாண்ட்) என்பது நடைமுறை சாத்தியமாகவிருப்பதால், புலி ஆதரவாளர்கள் லண்டன் மேயர் தேர்தலில் போட்டியிடும் கென் லிவிங்ஸ்டனைத் தூக்கிக்கொண்டாடி தோல்வியைக் கொடுக்காவிட்டால் நல்லது.