புலம்பெயர் வாழ்வியல்

புலம்பெயர் வாழ்வியல்

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் அவர்களுடைய வாழ்வியல், சமூக, அரசியல் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

நெதர்லாந்திலிருந்து வந்த மாப்பிள்ளை திருமணக் கோலத்திலேயே நீதிமன்றில் நிறுத்தப்பட்டார்!

ஒன்பது வருடங்களுக்கு முன்பு நெதர்லாந்தில் திருமணம் முடித்துவிட்டு தற்போது யாழ்ப்பாணத்தில் இன்னொரு திருமணம் செய்யமுற்பட்டதாகக் கூறப்படும் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு,  மாப்பிள்ளை கோலத்தில் நீதிமன்றில் நிறுத்தப்பட்டார். கடந்த 12ம் திகதி மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் மல்லாக நீதிமன்ற நீதவான் ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது.

குறித்த நபர் நெதர்லாந்திலிருந்து வருகை தந்தவர் எனவும், குறித்த 12ம் திகதி அவருக்கு திருமணம் நடைபெறவிருந்ததாகவும், அவ்வேளையில் தெல்லிப்பழை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. குறித்த நபர் ஒன்பது வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்து பெண்ணொருவரை நெதர்லாந்திற்கு அழைத்துச்சென்று சம்பிரதாய முறைப்படி திருமணம் செய்தவர் என அவரது முன்னைய மனைவியின் சகோதரர் வழங்கிய முறைப்பாட்டையடுத்தே அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டார்.

விசாரணைகளின் போது, தான் முன்னர் சட்டபூர்வமாகத் திருமணம் முடிக்கவில்லை எனக்கூற, மனைவியின் சகோதரர் எனக் குறிப்பிடப்பட்டவரால் திருமணப் புகைப்படங்கள் சில நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன. அப்படங்களில் ஒன்றில் குறிப்பட்ட நபர் பெண்ணிற்கு தாலிகட்டும் படமும் காணப்பட்டது. அத்தோடு, திருமணத்திற்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழ்களும் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.

விசாரணைகளின் போது, அந்தப்படத்திலுள்ள பெண் தனது ஒன்றுவிட்ட சகோதரி எனவும், அவரை நெதர்லாந்திற்கு அழைத்துச் செல்வதற்காகவே திருமணம் செய்வது போன்று நடித்ததாகவும்,  அப்பெண்ணின் குடும்பத்தவர்களின் நன்மைக்காகவே அவ்வாறு செய்ததாகவும் கூறினார்.

நீதவான் சில கேள்விகளை அவரிடம் தொடர்ந்து கேட்டபோது அதற்குப் பதில் கூறமுடியாமல் முரண்பாடான பதில்களை கூறியதையடுத்து குறித்த நபரை எச்சரித்த நீதிபதி ஒரு லட்சம் ரூபா பிணையில் செல்லுமாறும், கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும், ஞாயிற்றுக்கிழமை தோறும் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கையெழுத்திடுமாறும் உத்தரவிட்டு வழக்கை அடுத்த தவணைக்கு ஒத்திவைத்தார்.

எழுவைதீவில் நன்னீர் கிணறு: லிற்றில் எய்ட் உம் எழுவைதீவு மீனவ சமூகமும் இணைந்த வேலைத்திட்டம்

Elluvaitheevu_Leaders_With_Little_Aid750 பேர் வாழ்கின்ற எழுவைதீவில் நன்னீர் கிணறு வெட்டும் வேலைத்திட்டத்தில் லிற்றில் எய்ட் உம் எழுவைதீவு மீனவ சமூகமும் இணைந்துள்ளன. எழுவைதீவில் நன்னீர் பெரும் பிரச்சினையாக இருப்பதுடன் அங்கு பொதுக் கிணறுகள் எதுவும் இல்லை. அதனால் எழுவை தீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சமூகம் எழுவைதீவு கீராமசேவகர் ஆகியொருடன் கலந்துரையாடிய பின்னரே இந்தக் கிணறு வெட்டும் வேலைத்திட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டது.

தீவை மீள்மேம்படுத்தும் சமூகம் -Islands Restoration Society (IRS)  எழுவைதீவில் ஊசிக்கிணறு அமைக்கும் திட்டத்தை முன்னெடுக்குமாறு லிற்றில் எய்ட் இடம் விண்ணப்பித்து இருந்தது. அதனைத் தொடர்ந்து ஊசிக் கிணறு அமைக்கும் திட்டத்துடன் எழுவை தீவு சென்று கிராமத் தலைவர்களுடன் உரையாடியதில் அவர்கள் பாரம்பரயமான கிணறும் கிணற்றடியும் தான் தம் ஊருக்கு பொருத்தமானது எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து ஊசிக்கிணற்றுத் திட்டம் கைவிடப்பட்டு பாரம்பரிய கிணறு அமைக்க உடன்பாடு எட்டப்பட்டது.

Elluvaitheevu_Fishermen_Co-Operative_Societyயூன் 24 2010ல் எழுவைதீவு கடந்தொழிலாளர் கூட்டுறவுச் சமூகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் லிற்றில் எய்ட் தலைவர் ரி கொன்ஸ்ரன்ரைன் எழுவைதீவு கிராமசேவகர் வி வடிவழகன் எழுவைதீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சமூகச் செயலாளர் அருள்நாதன் அமலநாதன் ஆகியோர் உட்பட இன்னும் சிலரும் கலந்துகொண்டனர்.

இக்கிணறு வெட்டும் வேலைத்திட்டத்திற்கு 130 000 ரூபாய்கள் மதிப்பிடப்பட்டு உள்ளது. இத்திட்டத்திற்கு நிபுணத்துவம் மிக்கவர்களை மேற்பார்வைக்கு நியமிக்குமிடத்து கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சமூகம்  தங்கள் உழைப்பை வழங்கும் என தெரிவித்து உள்ளது. இத்திட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை கிராமசேவகரும் முன் வந்துள்ளார்.

எழுவைதீவு சுகாதார மையத்திற்கு மருத்துவ உதவி:

Elluvaitheevu_Medical_Centreமேலும் லிற்றில் எய்ட் மேற்கொண்ட இப்பயணத்தின் போது எழுவைதீவு சுகாதார மையத்திற்கு 1200 பவுண்கள் பெறுமதியான மருந்துப் பொருட்கள் கையளிக்கப்பட்டது. தீவின் மருத்துவ அலுவலர் ஈ ஞானச்செல்வி லிற்றில் எய்ட் தலைவர் கொன்ஸ்ரன்ரைனிடம் இருந்து மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொண்டார். இம்மருந்துப் பொருட்கள் எல்லைகளற்ற மருத்துவர் அமைப்பு டென்மார்க்கினால் லிற்றில் எய்ட் க்கு வழங்கப்பட்டு இருந்தது தெரிந்ததே.

ஊர்காவற்துறை பொது மருத்துவமனையில் லிற்றில் எய்ட்:

இந்த விஜயத்தின் போது ஊர்காவற்துறை பொது மருத்துவ மனைக்கு 20 000 பவுண்கள் பெறுமதியான மருந்துப் பொருட்கள் கையளிக்கப்பட்டது. பொது மக்கள் சார்பில் மருத்துவ மேலதிகாரி டொக்டர் அருணா புண்ணியமூர்த்தி லிற்றில் எயட் இடம் இருந்து மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொண்டார்.

ஊர்காவற்துறையில் 18 000 பேர் வாழ்கின்றனர். ஊர்காவற்துறை பொது மருத்துவமனை 58 000 பேருக்கு மருத்துவ சேவையை வழங்குகின்றது. அப்பகுதியில் உள்ள தீவுவாழ் மக்களுக்கு அருகில் உள்ள பெரிய மருத்துவமனை இதுவே.

Kayts_General_Hospitalலிற்றில் எய்ட் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மருத்துவ மனைகளுக்கு விஜயம் செய்து மருந்துவகைகளை விநியோகம் செய்திருந்தது. அந்த வகையில் ஊர்காவற்துறை மருத்துவமனை மிகவும் சுகாதாரத்துடன் பேணப்படுவதாக ரி கொன்ஸ்ரன்ரைன் தெரிவித்தார்.

ஊர்காவற்துறை மாதம் 15 அவசர பிரசவங்களைக் கையாள்கின்றது. ஆனால் அங்கு அல்ராசவுண்ட் ஸ்கான் போன்ற வசதிகள் இல்லை. மருத்துவ மேலதிகாரி டொக்டர் புண்ணியமூர்த்தி இது பற்றி லிற்றில் எய்ட் இடம் விணணப்பித்துள்ளார். இதுதொடர்பாக லிற்றில் எய்ட் ரஸ்டிகள் சந்தித்து ஆராய உள்ளனர்.

தீவுப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட லிற்றில் எய்ட் உதவித் திட்டங்களுக்கு தீவுப்பகுதிகளை மீளமேம்படுத்தும் சமூகம் – Islands Restoration Society (IRS) குறிப்பாக இப்பகுதியைச் சேர்ந்த சிறீபதி சிவனடியார் ஒத்துழைப்புகளை வழங்கி இருந்தார்.

இவ்வுதவித் திட்டங்கள் தொடர்பான மேலதிக தகவலக்கு: http://littleaid.org.uk/report-on-island-projects-elluvaithivau-kayts

நாடுகடந்த அரசாங்கத்தின் பேர்மிங்காம் கூட்டத்தில் கைவரிசை! ஏற்பாட்டாளர் சிறுகாயத்துடன் தப்பினார்!

Bermingham_TGTE_Incidentயூலை 3 2010 பேர்மிங்காமில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களின் கூட்டத்தில் வன்முறைத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் செல்வா அண்ணா என்பவர் கூட்டியிருந்த இந்தக் கூட்டத்தை நீல நிற 7 இருக்கைகள் கொண்ட வாகனத்தில் வந்த சிலர் தாக்கி உள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து பேர்மிங்காம் கவுன்சிலர் பொலிஸ் மற்றும் மருத்துவ ஊர்திக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

Bermingham_TGTE_Incidentவெள்ளை நிற ரிசேர்ட் அணிந்த குமரன் மற்றும் அவரின் பின்புறமாக உள்ள பச்சைநிற கோடுள்ள ரீசேர்ட் அணிந்த மோகன் ஆகியோர்களும்  இந்த நீலநிற வாகனத்தில் வந்ததாக இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவர் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

இத்தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் லண்டனில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதிசேகரிப்பில் ஈடுபட்ட தனம் மற்றும் கமல் ஆகியோருக்கு நெருக்கமானவர்கள் என தேசம்நெற்க்கு தகவல் வழங்கியவர் மேலும் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் வந்தவர்கள் தங்களுக்கு அறிவிக்காமல் எவ்வாறு கூட்டம் கூட்ட முடியும் என வாக்குவாதப்பட்டதாகவும் அதன் பின் வன்முறையில் இறங்கியதாகவும் தெரிவித்தார். வாக்குவாதத்தில் ஈடுபட்டவரை ஏற்பாட்டாளர்களில் ஒருவர் கைத்தொலைபேசியில் படம் எடுக்கவும் விவாதத்தில் ஈடுபட்டவர் கைவரிசையைக் காட்டி உள்ளார்.

Bermingham_TGTE_Incidentஇத்தாக்குதல் சம்பவத்தில் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த செல்வா அண்ணாவுக்கு சொண்டு வெடித்து பல்லுடைந்ததாகவும் அதனால் இரத்தம் வெளிவந்ததாகவும் அச்செய்தி மேலும் தெரிவித்தது. மேலும் பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து இருதரப்பையும் சமாதானப்படுத்தியதாகவும் தெரியவருகின்றது.

இச்சந்திப்பில் நாடுகடந்த தமிழீழ பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் இருவரும் பேர்மிங்காம் பகுதியைச் சேர்ந்த சிலரும் கலந்துகொண்டனர்.

அவர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் இடம்பெற்ற மோசடிகள் பற்றியும் வாக்குவாதப்பட்டதாக இன்னுமொரு செய்தி தெரிவிக்கின்றது. தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் போட்டியிட்டதாகவும் அவருக்கு கிடைத்த வாக்குகள் மோசடியானவை என தேர்தல் ஆணையாளரால் நிராகரிக்கப்பட்டு இருந்ததாகவும் அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது.

புலி ஆதரவுக்குழுவின் இலங்கை விஜயத்தை அடுத்து கே பி எதிர் அன்ரி கே பி பனிப்போர். : த ஜெயபாலன்

BTF_Bannerகுமரன் பத்மநாதனின் (கே பி) அழைப்பில் 9 பேர் கொண்ட புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் இலங்கை சென்று வந்ததை அடுத்து புலம்பெயர் புலிஆதரவு அமைப்புகளிடையே பனிப்போர் ஒன்று ஆரம்பமாகி உள்ளது.

கே பி யின் அழைப்பில் சென்றிருந்த டொக்டர் அருட்குமார் பிரித்தானிய தமிழர் பேரவையை (பிரிஎப்) ப் பிரதிநிதித்துவப்படுத்திச் செல்லவில்லை என்றும் அவரது பயணம் பற்றி பிரித்தானிய தமிழர் பேரவை எதையும் அறிந்திருக்கவில்லை என்றும் பிரித்தானிய தமிழர் பேரவை இன்று (யூன் 28 2010) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

டொக்டர் வேலாயுதம் அருட்குமார் பிரித்தானிய தமிழர் பேரவையின் முக்கிய உறுப்பினர். பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடாத்திய பரமேஸ்வரனின் உல்நிலையை பரிசோதிக்கும் மருத்துவராகவும் இவர் செயற்பட்டு வந்தவர். இவரது சகோதரர்களும் குடும்பமும் மிகுந்த புலி ஆதரவானவர்கள்.

டொக்டர் அருட்குமார் வேலாயுதம் பற்றி கருத்து வெளியிட்ட பிரித்தானிய தமிழர் பேரவையின் ஆதரவாளர் ஒருவர் இவரது இலங்கை விஜயம் தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக தேசம்நெற்க்கு தெரிவித்தார். தாங்கள் பிரித்தானிய தமிழர் பேரவையின் நடவடிக்கைகளுக்கு வெளியே நின்று ஆதரவு வழங்கி வந்தோம் ஆனால் டொக்டர் அருட்குமார் நூறுவீதம் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டவர் என்றும் அவரைப் போன்றவர்களை நாம் எடுத்த எடுப்பில் துரோகியாக்கிவிட முடியாது என்றும் தெரிவித்தார்.

இப்பயணம் பற்றிய விரிவான கட்டுரை தேசம்நெற்றில் வெளியாகி இருந்தமை தெரிந்ததே. அதில் சென்றுவந்தவர்களின் விபரங்களையும் தேசம்நெற் வெளியிட்டு இருந்தது. புலிஆதரவு புலம்பெயர் குழு இலங்கை சென்று திரும்பிய பின்னரும் மெளனமாகவே இருந்தனர். தேசம்நெற் ரிபிசி ஆகிய ஊடகங்கள் சென்று வந்தவர்களின் முழுமையான பட்டியலை வெளியிட்ட பின்னர் அவர்கள் மெளத்தை கலைத்துக் கொண்டனர்.

இக்குழுவில் தமிழர் சுகாதார அமைப்பின் பிரதிநிதியாகத் தான் கலந்துகொண்டதாக பிபிசி தமிழோசைக்கு பேட்டியளித்த சார்ள்ஸ் அன்ரனிதாஸ் தேசம்நெற் இல் வெளியான பெயர்ப் பட்டியலையும் பயணத்தின் நோக்கம் பற்றிய தகவல்களையும் உறுதிப்படுத்தி உள்ளார்.

புலம்பெயர் புலி ஆதரவுக்குழுவின் இலங்கைப் பயணம் புலி ஆதரவுக் குழுக்களிடையே விரிசலை ஏற்படுத்தி உள்ளது. நாடுகடந்த தமிழீழப் பாராளுமன்றத்தின் பிரதிநிதி எஸ் ஜெயானந்தமூர்த்தி இப்பயணத்தை ஆபத்தானது என்று எச்சரித்துள்ளார். ஈழமுரசு பத்திரிகை கே பி யையும் அவருக்கு துணை போவவர்களையும் எதிர்ப் புரட்சியாளர்கள் எனக் குற்றம்சாட்டி உள்ளது.

புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மரணத்தை அறிவித்ததை அடுத்து கே பி க்கு ஆதரவாகச் செயற்படுவதாகக் ஜிரிவி மீது குற்றம்சாட்டப்பட்டு ஜிரிவி மீது தாக்குதலும் நடாத்தப்பட்டது இருந்தது தெரிந்ததே. தற்போது பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பில் டொக்டர் அருட்குமார் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார் என்று வெளியான செய்தியை அடுத்து பிரித்தானிய தமிழர் பேரவை ஜிரிவியை பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு அன்பாகக் கேட்டுக் கொண்டு உள்ளது.

மேலும் பிரிஎப் மற்றும் கே பி க்கு எதிரான அமைப்புகளில் இருந்து கே பி யின் உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாளர்கள் களையெடுக்கும் படலம் ஆரம்பமாகி உள்ளது. அதன் ஒரு கட்டமாக கே பி யின் நெருங்கிய உறவினரான உதயன் என்பவர் பிரிஎப் இல் இருந்து ஓரம்கட்டப்பட்டு உள்ளதாக பிரிஎப் க்கு நெருக்கமானவர்கள் தேசம்நெற்க்கு தெரிவிக்கின்றனர்.

மேலதிக வாசிப்பிற்கு:

வெளிச்சத்திற்கு வரும் கே பி மர்மமும் – கே பி உடன் புலம்பெயர் புலிஆதரவுக் குழுவின் சந்திப்பும் : த ஜெயபாலன்

கே பி யின் சிபார்சில் சு.ப. தமிழ்ச் செல்வனின் சகோதரர் உட்பட முன்னாள் போராளிகள் 26 பேர் விடுதலை!

‘போர்குற்ற விசாரணைகளில் அரசாங்கத்தின் சாட்சியாக கே.பி!’ கெஹலிய ரம்புக்வெல

வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக கே.பி?

 புலம்பெயர்ந்த புலித் தலைவர்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு – கே.பி. உட்பட 9 பேர் கொழும்பில் பேச்சுவார்த்தை

கே.பி.க்கு மன்னிப்பு வழங்குவதென அரசு தீர்மானித்தால் ஆச்சரியப்படமாட்டேன் அமைச்சர் கெஹலிய

வெளிச்சத்திற்கு வரும் கே பி மர்மமும் – கே பி உடன் புலம்பெயர் புலிஆதரவுக் குழுவின் சந்திப்பும் : த ஜெயபாலன்

Pirabakaran VKumaran_Pathmanathanதமிழீழ விடுதலைப் புலிகளின் மிக ஆரம்பகால உறுப்பினராகவும் அவ்வியக்கத்தின் வளர்ச்சியில் மிக முக்கியமான நபராகவும் இருந்த கே பி என அறியப்பட்ட குமரன் பத்மநாதன் இலங்கை அரசாங்கத்தினால் புலிகளை அழிப்பதற்கு தயாரிக்கப்பட் புரொஜக்ற் பீக்கனின் இறுதிக் கட்டத்தை மேற்கொள்வதில் முக்கிய நபராக உள்ளார். புலிகளின் பெரும்பாலான தலைமைகள் அழிக்கப்பட்ட நிலையில் எஞ்சியுள்ளவர்களை களையெடுக்கும் முயற்சிகளுக்கு கே பி யின் பங்கு தற்போது இலங்கையில் மிக அவசியமான ஒன்றாகி உள்ளது. கே பிக்கு பொது மன்னிப்பு வழங்குவது பற்றியும் கே பி யை முதலமைச்சராக்குவது தொடர்பாகவும் இலங்கையரசு தீவரமான ஆலோசணைகளை நடாத்தி வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக வடக்கு கிழக்கு அபிவிருத்தியை கே பி யை வைத்து முன்னெடுப்பதன் மூலம் முள்ளை முள்ளால் எடுக்கும் கைங்கரியத்தை மேற்கொள்ளலாம் என இலங்கையரசு கருதுகின்றது. அதன் ஒரு அம்சமாக புலம்பெயர்ந்த ஒன்பது பேர்கொண்ட குழுவொன்று கே பியின் அழைப்பில் இரகசியமாக இலங்கை சென்றிருந்தது. இக்குழுவில் புலிகளின் முன்னணி அமைப்புகளான பிரித்தானிய தமிழர் பேரவை, தமிழர் சுகாதார அமைப்பு, தமிழர் புனர்வாழ்வுக்கழகம், வணங்கா மண் ஆகிய நிதிசேகரிப்பில் முன்னின்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் அல்லது அவ்வமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் கலந்த கொண்டுள்ளனர். ஆனால் தற்போது அவ்விஜயம் பெரும்பாலும் பரகசியமாகி விட்டுள்ளது. இக்குழுவில் சென்றவர்கள் விபரம் வருமாறு:

பிரித்தானியா: சார்ள்ஸ் அன்ரோனிதாஸ், டொக்டர் வேலாயுதம் அருட்குமார், சிறிபதி சிவனடியார், விமலதாஸ்
பிரான்ஸ்: கெங்காதரன்
சுவிஸ்லாந்து: டொக்டர் சந்திரா மோகன் ராஜ்
அவுஸ்திரேலியா: டொக்டர் ரூபமூர்த்தி
கனடா: பேரின்பநாயகம், சிவசக்தி

இவர்களில் நால்வர் லண்டனில் இருந்து சென்றுள்ளனர். இவர்களில் சார்ள்ஸ் அந்தோனிதாஸ் முன்னாள் ரெலோ முக்கிய உறுப்பினர்களில் ஒருவர். அவ்வியக்கத்தின் தலைவர் சிறிசபாரத்தினம் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட பின் அவ்வியக்கத்தின் தலைமைப் பொறுப்புக்கு போட்டியிட்டவர். பின்னர் பிரித்தானிய தமிழர் பேரவை போன்ற புலிகளின் முன்னரங்க அமைப்புகளுடன் மிக நெருக்கமாகச் செயற்பட்டவர். கே பி இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட செய்தி வெளிவந்த போது அவரை விடுவிப்பதற்காக சில முயற்சிகளையும் எடுத்தவர். இந்த விஜயத்தை முடித்துக் கொண்டு மீண்டும் பிரித்தானியா திரும்பியுள்ள இவரை இவருடைய அண்மைய விஜயம் பற்றி கருத்தறிய அவருடன் தொடர்பு கொண்ட போதும் தகவல்பெற முடியவில்லை.

இந்த விஜயத்தில் லண்டனில் இருந்து சென்ற மருத்துவர் வேலாயுதம் அருட்குமார் காரைநகரைச் சேர்ந்தவர். புலிகளின் தீவிர ஆதரவாளர். இவருடைய சகோதரர்கள் புலிகளின் உறுப்பினர்களாக இருந்தனர். இவரும் பிரித்தானியத் தமிழர் பேரவையில் அறியப்பட்ட முக்கிய உறுப்பினர். பரமேஸ்வரன் பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன் உண்ணாவிரதம் இருந்தபோது பரமேஸ்வரனுடைய உடல்நிலையை பரிசோதிக்க நியமிக்கப்பட்ட மருத்துவர்களில் வேலாயுதம் அருட்குமார் முக்கியமானவர்.

சிறிபதி சிவனடியார் ஊர்காவற்துறையைச் சேர்ந்தவர். ஜேர்மனியில் இருந்து லண்டனுக்கு புலம்பெயர்ந்தவர். இவரது குடும்பமே புலிகளுக்கு மிக ஆதரவானவர்கள். இவரது சகோதரி புலிகளுடன் நிதிகொடுக்கல் வாங்கல் உறவுகளை மேற்கொண்டு இருந்தவர். ஒரு தடவை புலிகள் இவரிடம் இருந்து பெற்ற நிதியை திருப்பிக் கொடுக்காததால் ஏற்பட்ட பொருளாதாரச் சுமையால் இவரும் இவரது கணவரும் தூக்கிட்டு மரணித்தனர். இருந்தும் சிறிபதி சிவனடியார் புலிகளுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கிவந்தவர். இவர் தீபம் தொலைக்காட்சியின் பங்குதாரர் செல்வகுமாரின் மைத்துனர். தீபம் தொலைக்காட்சியிலேயே பணியாற்றி வருகின்றார். தீபம் தொலைக்காட்சிக்கான கலையகம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைப்பது தொடர்பாக இலங்கை அரசுடன் தீபம் தொலைக்காட்சி இரகசிய சந்திப்பு ஒன்றையும் நடாத்தி இருந்தது. இச்செய்தி எழுதப்பட்டுக் கொண்டிருக்கையில் சிறிபதி சிவனடியார் இலங்கையிலேயே நிற்பதாக அறியமுடிகின்றது. அவருடன் தொடர்பு கொள்ள எடுத்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

ஏனையவர்கள் பற்றிய விபரங்கள் இன்னமும் முழுமையாக வரவில்லை.

இவர்களுடைய பயண ஏற்பாட்டை மேற்கொண்டதில் மார்ச் 2009ல் இலங்கை சென்ற டயஸ் பொறா டயலொக் குழுவிற்கும் சம்பந்தம் உண்டு. இக்குழுவில் சென்ற டொக்டர் நடேசன், டொக்டர் நரேந்திரன், சூரியசேகரம், குகநாதன் ஆகியோர் கே பி யை புலம்பெயர்ந்த புலி அதரவுக் குழுவினர் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ததில் ஈடுபட்டு இருந்தனர். கே பி யினதும் புலம்பெயர்ந்த புலி ஆதரவுக் குழுவினரதும் வடக்கு நோக்கிய பயணத்தில் டொக்டர் நடேசன், டொக்டர் நரேந்திரன், சூரியசேகரம், குகநாதன் ஆகியோரும் கலந்தகொண்டதாக தெரியவருகின்றது. ஆனால் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

‘வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டம்’ என்ற அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றை நிறுவி அதனூடாக அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பது பற்றி கே பி வெளிநாடுகளில் இருந்து சென்ற குழுவினருடன் கலந்துரையாடியதாக தெரியவருகின்றது. வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்து விபரங்களை சேகரிப்பதிலும் அதனை மீண்டும் இலங்கைக்குக் கொண்டு வருவதிலும் இலங்கை அரசு மிகவும் கவனமாக உள்ளது. புலிகளுக்கு 300 மில்லியன் அமெரிக்க டொலர் வரை ஆண்டு வருமானத்தை வழங்குகின்ற 3 முதல் 5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்கள் உலகின் பல பாகங்களிலும் இருப்பதாக ஜேன்ஸ் வீக்லி என்ற புலனாய்வுச் சஞ்சிகை 2007ல் மதிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நிதியின் சிறுபகுதி மீண்டும் ஆயுத வன்முறையை மேற்கொள்ள விரும்புபவர்களின் கைகளுக்குச் செல்லுமாயின் அவர்களால் தொடர்ச்சியான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாவிட்டாலும் இலங்கையில் தற்போது காணப்படுகின்ற ஸ்தீரத்தன்மையை குலைக்க முடியும். இந்த நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் இலங்கை அரசு மிகக் கவனமாக உள்ளது.

மே 18 2009ல் யுத்தம் முடிவடைந்த போதும் இலங்கையில் முற்றுமுழுதாக புலிகளின் செயற்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிடவில்லை என இலங்கையின் புலனாய்வுத்துறையினர் மத்தியில் இருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆங்காங்கு சிறு அசம்பாவிதங்கள் ஏற்பட்டும் உள்ளது. தப்பியோடிய புலிகளில் சிலர் இன்னமும் இலங்கையின் காட்டுப் பகுதிகளில் உள்ளதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அரசு கடைப்பிடிக்கும் மிகக் கடுமையான செய்தித் தணிக்கை காரணமாக ஊடகங்கள் இவ்வாறான தகவல்களை வெளியிடுவதைத் தவிர்த்து வருகின்றன. ஆங்காங்கு இராணுவ வீரர்கள் ஒரு சிலர் காயமடைந்து அல்லது மரணமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு வரும் சம்பவங்கள் இடம்பெறவே செய்கின்றன. இவை புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளால் நிகழ்வதாக அரச தரப்பினால் தெரிவிக்கப்பட்ட போதும் அதனை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியாத நிலையொன்று உள்ளது. அண்மையில் ஒளிபரப்பப்பட்ட ஸ்ரீபன் சார்க்கரின் ஹாட் ரோக் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான ஒரு போராளியின் வாக்குமூலமும் இதனை உறுதிப்படுத்தி உள்ளது.

தடுத்து வைக்கப்பட்டு உள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளை விடுவிப்பதில் அரசு தயக்கம் காட்டி வருவதற்குள்ள பல காரணங்களில் முக்கிய காரணமாக இருப்பது புலிகள் மீண்டும் தங்களை ஒழுங்கமைக்க முற்படும் போது, விடுவிக்கப்படும் போராளிகள் மீண்டும் அவர்களினால் இயக்கத்திற்குச் சேர்க்கப்படும் வாய்ப்பு இருப்பதே. அதனாலேயே கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த போராளிகளை விடுவிப்பது காயப்பட்டவர்களுடன் மட்டுப்படுத்தப்பட்டு விடுகின்றது. தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளில் முற்றுமுழுதான மனமாற்றத்தை ஏற்படுத்தவே கே பி மற்றும் வெளிநாட்டுக் குழுவினர் இந்தப் போராளிகளைச் சந்திக்கவும் உரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

புரஜக்ற் பீக்கன் இராணுவத் திட்டப்படி புலிகளின் கரையோரக் கட்டுப்பாட்டுப் பகுதிகளை 3 பிரிவுகளாகப் பிரித்து அவை ஒவ்வொன்றையும் கைப்பற்ற 12 மாதங்களை ஒதுக்கி 3 ஆண்டுகளுக்குள் புலிகளின் நிலப் பரப்பைக் கைப்பற்ற திட்டம் போட்டு அதனை வெற்றிகரமாகவும் அரசு நிறைவேற்றியது.

01 மே 2006 – 30 ஏப்ரல் 2007 திருகோணமலையின் சம்பூர் முதல் மட்டக்களப்பின் பனிச்சங்கேணி வரையான கரையோரப் பகுதி கைப்பற்றப்பட்டது.
01 மே 2007 – 30 ஏப்ரல் 2008 மன்னார் முதல் பூனேரியன் வரையான கரையோரப் பகுதி கைப்பற்றப்பட்டது.
01 மே 2008 – 30 ஏப்ரல் 2009 ஆனையிறவு முதல் கொக்குத்தொடுவாய் வரையான கரையோரப் பகுதியையும் அதனோடு இணைந்த நிலப்பகுதியையும் கைப்பற்றியது.

இதன் மூலம் புலிகளுக்கான ஆயுதங்கள் தரையிறக்கப்படும் விநியோக வழிகள் (அம்பாறை, சிலாவத்துறை, புல்மோட்டை மற்றும் பருத்தித்துறை) முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டது.

01 மே 2009 – 30 ஏப்ரல் 2011 காலப் பகுதி – தற்போதைய காலப்பகுதி புலிகளை களையெடுக்கும் காலப் பகுதியாகத் திட்டமிடப்பட்டு இருந்தது. தங்களுக்கான விநியோகங்கள் இல்லாத நிலையில் வன்னி காடுகளுக்குள் உள்ள புலிகளை களையெடுக்கும் காலப் பகுதியாக இது அமைந்துள்ளது. இந்த புரொஜக்ற் பீக்கன் திட்டம் 2007ல் வெளியே கசிந்திருந்தது. இது பற்றிய விரிவான கட்டுரை ஏப்ரல் 7 2009ல் தேசம்நெற்றில் வெளியிடப்பட்டு இருந்தது. தற்போது புலிகளை களையெடுக்கின்ற இறுதி நடவடிக்கைகளில் இலங்கையரசு மிகத் தீவிரமாக உள்ளது.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் 2011 ஏப்ரலில் புலிகள் முற்றாக களையெடுக்கப்பட்ட பின்னரேயே நடாத்த ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டது. ஆனால் புலிகளுடனான யுத்தத்தால் கிடைத்த இராணுவ வெற்றி சரத்பொன்சேகாவுடன் ஏற்பட்ட முரண்பாட்டில் அடிபட்டுச் சென்றுவிடலாம் என்ற அச்சத்தாலும் அதனை எதிர்க்கட்சிகள் பயன்படுத்தலாம் என்பதாலும் ஜனாதிபதித் தேர்தல் திட்டமிடப்பட்டதற்கு ஓராண்டுக்கு முன்னதாகவே இடம்பெற்றது.

புரஜக்ற் பீக்கனின் இறுதிக்கட்டத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புலிகளைக் களையெடுக்கின்ற நடுநிலையாக்குகின்ற முயற்சிகளுக்கு புலிகளையே அரசு பயன்படுத்த திட்டமிட்டு உள்ளது. உள்நாட்டில் புலிகள் மிகவும் பலவீனமான நிலையில் கிட்டத்தட்ட போராட்டத்தின் ஆரம்ப காலகட்டங்களில் தலைமறைவாக வாழ்ந்தது போன்ற நிலையிலேயே உள்ளனர். ஆனால் வெளிநாடுகளில் உள்ள புலிகளின் கட்டமைப்பு யுத்தத்தினால் எவ்வகையிலும் பாதிக்கப்படவில்லை. ஆனால் புலிகளின் தலைமைகள் அழிக்கப்பட்டதால் அவர்கள் மாற்றுத் தலைமையின்றி ஆளுக்காள் ஆழமான சந்தேகம் கொண்டவர்களாக உள்ளனர். இருந்தாலும் இந்த வெளிநாட்டுப் பிரிவில் ஒரு பகுதியினர் மீண்டும் இலங்கையில் ஒரு ஆயுத வன்முறையை உருவாக்கத் தீவிரமாக முயற்சிக்கின்றனர். இவர்கள் அங்கு காடுகளில் பதுங்கியுள்ள மீளிணைகின்ற புலிகளுக்கு ஒரு பின்பலத்தை பொருளாதார பலத்தை வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை அரசு நம்புகின்றது.

அண்மைக் காலமாக ஒட்டுக்கேட்கப்படும் தொடர்பாடல்கள் புலிகளின் நடமாட்டங்களை உறுதிப்படுத்துவதாக இலங்கைப் புலனாய்வுத்துறையிடம் இருந்து செய்திகள் கசிந்துள்ளது. மே 18 முடிவில் சரணடைந்தவர்களில் புலிகளின் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்களும் இருந்துள்ளனர் என்பதையும், அவர்கள் புலிகள் என அடையாளம் காணப்படுவதற்கு முன்னதாகவே பெரும்தொகைப் பணத்தைச் செலுத்தி முகாம்களில் இருந்து வெளியேறி இலங்கைக்கு வெளியே சென்றுவிட்டதையும், இலங்கை இராணுவத்தரப்பு தற்போது உத்தியோகப்பற்றற்ற முறையில் ஒத்துக்கொள்கின்றது. அவ்வாறு தப்பியவர்களில் பிற்காலங்களில் வே பிரபாகரனின் ஆலோசகராக இருந்த மு திருநாவுக்கரசும் ஒருவர். யுத்தத்தின் இறுதிநாளில் இலங்கைப் படையிடம் சரணடைந்த மு திருநாவுக்கரசு குடும்பத்தினர் முகாமை விட்டு வெளியேறி தற்போது இந்தியாவில் தங்கி உள்ளனர். இவ்வாறு தப்பித்த பலர் இந்தியா, மலேசியா, வியட்நாம், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் தலைமறைவாகி உள்ளனர். இவர்களில் யாராவது மீளிணையும் புலிகளுக்கு தலைமை கொடுத்து நெருக்கடியைத் தோற்றுவிக்கலாம் என்ற அச்சம் இலங்கை இராணுவத்தரப்பில் தற்போது வெளிப்படுகின்றது. அதனைத் தவிர்ப்பதற்கும் கையாள்வதற்கும் கே பி யின் ஆளுமையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை அரசு ஆராய்கின்றது.

‘தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி பற்றிய விபரங்களை அரசாங்கத்திற்கு வழங்குவது தொடர்பாக கே பி க்கு பொதுமன்னிப்பு அழிக்கப்பட்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்’ என ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வல யூன் முற்பகுதியில் தெரிவித்து இருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ‘கே பி வெளியிட்ட தகவல்களால் வெளிநாடுகளில் இருந்த புலிகளின் பல சொத்துக்களை அடையாளம் காணக் கூடியதாக இருந்தது’ என்றும் தெரிவித்தார். ஆயினும் அச்சொத்துக்களின் பெறுமதி பற்றியோ அல்லது அவை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதா என்ற தகவல்களையோ அமைச்சர் வெளியிட மறுத்துள்ளார். ‘மன்னர் போன்று வாழ்ந்தவர் கே.பி. இப்போது தனது சகல சிறப்புரிமைகளையும் இழந்துவிட்டார். தனது தோழர்களுக்கு துரோகம் செய்துவிட்டார் என்று சிலர் கூறக்கூடும். ஆனால், இப்போது நாட்டுக்காக அவர் அதிகளவுக்குச் செய்கிறார் என்பதையிட்டு நாம் திருப்தியடைவது அவசியமானதாகும். அவர் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறார்’ என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

2009 மார்ச் 27 – 29 ல் வெளிநாட்டுத் தமிழர்கள் குழு இலங்கை அரசின் அழைப்பில் தலைநகர் கொழும்பு சென்றது. ‘ஸ்ரீலங்கன் டயஸ்பொறா டயலொக்’ என்ற தலைப்பில் இடம்பெற்ற இச்சந்திப்பில் புலிகளின் முக்கிய தலைவரான திரு கே பத்மநாதன் உடன் இலங்கை அரசு ஒழுங்கான தொடர்பில் இருப்பதாக அப்போது அமைச்சர் பசில் ராஜபக்ச குறிப்பிட்டு இருந்தார். அமைச்சர் பசில் ராஜபக்ச கே பியை அழைக்கும் போது திரு கே பத்மநாதன் என்று கௌரவமாகவே அழைத்திருந்தமையும் அச்சந்திப்பில் கலந்துகொண்டவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

கே பி பெரும்பாலும் புலிகளின் ஆயுதக் கொள்வனவுகளில் தலைமறைவாகவே செயற்பட்டு வந்தவர். 2007 செப்ரம்பர் 10ல் கே பி பாங்கொக்கில் வைத்து கைது செய்யப்பட்டதாக பாங்கொக் போஸ்ற் செய்தி வெளியிட்டு இருந்தது. இச்செய்தி இலங்கை, இந்தியா மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் நாழும் நாடுகளில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆயினும் தாய்லாந்துப் பொலிஸார் இச்செய்தியை மறுத்து இருந்தனர். கே பி கைது செய்யப்பட்ட போதும் ஊழல் நிறைந்த தாய்லாந்துப் பொலிஸ் உயர் அதிகாரிகளால் அவர் விடுதலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. புரஜக்ற் பீக்கன் ஆரம்பிக்கப்பட்டு கிழக்கில் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டை இழந்திருந்த நிலையிலேயே கே பி கைது செய்யப்பட்டதான செய்தி அல்லது வதந்தி வெளிவந்தது. இச்சம்பவத்தின் உண்மைத் தன்மை என்னவென்பது இதுவரை வெளிவரவில்லை.

இச்சம்பவத்திற்கு முன்னதாகவே கே பி அவருடைய சர்வதேசப் பொறுப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்டு இருந்தார். பின்னர் 2008ன் பிற்பகுதியில் கே பி தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளராக நியமிக்கப்பட்டார். அதன் பின் 2009ல் பேச்சுவார்த்தைகளுக்கு புலிகளின் சிரேஸ்ட பிரதிநிதியாகவும் பிரதிநிதியாக புலிகளின் பேச்சாளராகவும் நியமிக்கப்பட்டார்.

மே 18ல் புலிகளின் தலைமை அழிக்கப்பட்ட நிலையில் கே பி தன்னையே புலிகளின் தலைவராக அறிவிக்கின்றார். அவ்வாறு ஒருவரை அறிவிப்பதற்கான அதிகாரம் கே பியைத் தவிர வேறு யாரிடமும் இருந்திருக்கவும் இல்லை. தலைவராக அறிவிக்கப்பட்ட கே பி மாறுபட்ட கருத்தடையவர்களையும் இணைத்து நாடுகடந்த அரசாங்கம் ஒன்றை அமைக்க வி உருத்திரகுமாரன் தலைமையிலான குழுவொன்றை உருவாக்கினார். அதற்காகப் பலருடனும் தொடர்புகளை ஏற்படுத்தி இருந்தார். இரகசியத் தன்மையை மிகக்கடுமையாக பின்பற்றுகின்ற அமைப்பை உருவாக்கி அதன் வளர்ச்சியில் இரண்டறக் கலந்த கே பி சாதாரணமாகவே பலருடன் தொடர்புகளை ஏற்படுத்தி வந்தார். அவரை பலரும் மலேசியா சென்றே சந்தித்து வந்தனர். அவர் தனது இருப்பு பாதுகாப்புப் பற்றி அதிகம் கவனம் கொண்டிருக்கவில்லை. தனது பாதுகாப்பை வேறுவழிகளில் உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் தற்போது கொள்ளமுடியும்.

அதன் பின்னர். ஓகஸ்ட் 7 2009ல் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார்.

தற்போது கே பிக்கு பொது மன்னிப்பு அழிப்பது பற்றியும் அவரை முதலமைச்சராக்குவது பற்றியும் அரசாங்கத்தரப்பில் தீவரமாக ஆலோசிக்கப்படுகின்றது. கே பி தற்போது இலங்கையில் இருந்து நாடுகடந்த தமிழீழக்குழு, வட்டுக்கோட்டைத் தீர்மானக் குழு, தமிழர் புனர்வாழ்வுக்கழகம், தமிழர் சுகாதார அமைப்பு, பிரித்தானிய தமிழர் பேரவை என புலிகளின் முன்னரங்க அமைப்புகளில் உள்ளவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றார்.

கே பி முழுமையாக அரசாங்கத்துடன் இணைந்து தமிழ் மக்களின் அபிவிருத்தியில் ஈடுபடுவதைத்தவிர வேறு வழியில்லை என்பதை தன்னிடம் பேசியவர்களுக்குத் தெரிவிப்பதாக தேசம்நெற் அறிகின்றது. மேலும் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மிகுந்த நம்பிக்கைக்குரிய மனிதர் என்றும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுபவர் என்றும் அவர் தன்னைச் சந்தித்தவர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

கே பி யின் அழைப்பில் இலங்கை சென்றவர்கள் தொடர்பில் கே பியுடன் முரண்பட்டவர்கள் குறிப்பாக பிரித்தானிய தமிழர் பேரவை குற்றச்சாட்டுக்களை வைப்பதில் அல்லது அவர்களுக்கு வழமைபோல் துரோகிப் பட்டம் வழங்குவதில் சிக்கல்களை எதிர்நோக்குகின்றது. சென்றவர்களில் சிலர் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் மட்டுமல்ல புலிகளுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்கள்.

கே பி யின் வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டம் எவ்வளவுதூரம் வெற்றிகரமாகச் செயற்படப் போகின்றதோ இல்லையோ புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலிகள் நாளுக்கு நாள் அரசியல் ரீதியாகப் பலவீனமடைகின்றனர். அதேநேரம் அவர்களிடம் உள்ள சொத்துக்கள் பெரும்பாலும் ஒரு சிறுகுழுவினரினால் அனுபவிக்கப்பட்டுக் கொண்டும் உள்ளது. தற்போது புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலிகள் மத்தியில் கே பி யின் நிலை முக்கிய விவகாரமாகி உள்ளது. கே பி யின் நிலையை விளங்கிக்கொள்வதில் சர்ச்சைகளும் சங்கடங்களும் காணப்படுகிறது. புலிகள் எப்போதும் அரசியல் அடிப்படையில் அணிசேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் எப்போதும் நபர்களின் அடிப்படையிலேயே அணி சேர்ந்தனர். அதனால் அவர்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கலைக் கையாள முடியவில்லை. தொடர்ந்தும் நபர்கள் தொடர்பான முரண்பாடுகளிலேயே காய்களை நகர்த்துகின்றனர்.

கே பி இலங்கை அரசாங்கத்துடன் முழுமையாக இணைந்து செயற்படுவது என்ற முடிவை எப்போது எடுத்தார் என்பது தற்போது மில்லியன் பவுணுக்குரிய கேள்வியாக உள்ளது. 2006 மேயில் புரஜக்ற் பீக்கன் ஆரம்பிக்கப்பட்ட போதே கே பி இலங்கை அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க ஆரம்பித்துவிட்டாரா என்ற சந்தேகங்கள் பல்வேறு தரப்பினரிடமும் உள்ளது.

புலிகளை அழிக்கின்ற புரொஜகற் பீக்கன் வீச்சுடன் இடம்பெற்றிருந்த காலப்பகுதியில் புலிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆயுதங்கள் சர்வதேசக் கடற்பரப்பில் வைத்தே தாக்கி அழிக்கப்பட்டது. இதற்கு இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்ததாக இலங்கை இராணுவம் அதற்கு நன்றியைத் தெரிவித்து இருந்தது. ஆனால் இதில் எங்களை மட்டும் சொல்லிக் குற்றமில்லை கே பி யும் முக்கியமான தகவல்களை இலங்கைக்கு வழங்கி வந்ததாக லண்டனில் உள்ள இந்திய அதிகாரி ஒருவர் தங்களைச் சந்திக்க வந்த தமிழ் பிரதிநிதிகளுக்கு சுட்டிக்காட்டி உள்ளார்.

புலிகள் முற்றுமுழுதாக இலங்கை அரச படைகளால் சுற்றிவளைக்கப்பட்டு இருந்தநிலையில் தாங்கள் ஆயுதங்களை மௌனிப்பது என்ற முடிவை எடுத்த போது அவர்களின் பிரதான வெளித்தொடர்பு கே பி உடனேயே இருந்தது. அதேசமயம் புலிகளின் உள்ளுர் தலைவர்கள் தமிழக அரசியல்வாதிகள் நோர்வேயில் எரிக்சோல் ஹெய்ம், ரைம்ஸ் பத்திரிகையாளர் போன்றவர்களுடன் தொடர்பைப் பேணி வந்தனர். இவர்களுடைய படுகொலைகள் நிகழ்வதற்கு 48 மணிநேரத்திற்குள் இவர்கள் மேற்குறிப்பிட்டவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.

கே பி ஏற்கனவே இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட ஆரம்பித்து இருந்தால் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டதில் இந்திய அதிகாரி குறிப்பிட்டது போல் கே பி க்கும் தொடர்பு இருந்தால் புலிகளின் தலைமையை சரணடைய வைக்கும் முயற்சியிலும் சரணடையும் பட்சத்தில் சர்வதேச பாதுகாப்புடன் அவர்கள் இலங்கைக்கு வெளியே கொண்டு செல்லப்படுவார்கள் போன்ற நம்பிக்கைகளையும் கே பி அவர்களுக்கு வழங்கி இருக்கக் கூடும். ஆனால் இவை யாவும் முழுமையான தகவல்கள் கிடைக்கும் வரை அறுதியிட்டுக் கூறிவிடக் கூடியதல்ல.

அதேவேளை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகளுக்கு தங்களின் பிரதிநிதியாக கே பி புலிகளாலேயே நியமிக்கப்பட்டு இருந்தவர். ஆனாலும் புலிகள் கே பி இல் மட்டும் தங்கி இருக்கவும் இல்லை. கே பி முன்னர் புலிகளின் ஒரு பகுதியினரால் ஓரங்கட்டப்பட்டு பின்னர் மீண்டும் சர்வதேசப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர். கே பி மீதான சந்தேகம் புலிகளுக்கு ஏற்பட்டு இருந்தால் அப்படியான ஒருவரின் கையில் தங்கள் உயிர்களைப் பணயம் வைத்திருப்பார்களா என்பதும் கேள்விக்குரியது. பேச்சுவார்த்தைகளுக்கு கே பி புலிகளின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டதால் பேச்சுவார்தையில் ஈடுபட்டவர்களிடையே குறிப்பாக கோதபாய ராஜபக்சவுக்கும் கே பி க்கும் இடையே ஒரு உறவு ஏற்பட்டு இருக்கக் கூடும்.

யூன் 14 2009ல் தேசம்நெற்றுடன் கே பி தொடர்புகொண்டதில், 2002 பேச்சுவார்த்தைகளில் இருந்து புலிகளை வெளியேற வேண்டாம் என்று தான் வலியுறுத்தி வந்ததாகவும், தலைவர் தனது ஆலோசனையிலும் பார்க்க தமிழக அரசியல் வாதிகளிடம் இருந்து தினம் கிடைக்கும் ஆலோசணைகளையே கூடுதலாக ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். கே பி பிற்காலங்களில் யுத்தத்தைத் தொடர்வதில் பெரிய நாட்டம் கொண்டிருக்கவில்லை என்பதை பெரும்பாலும் அறிய முடிகின்றது. கருணா அம்மான் புலிகளில் இருந்து வெளியேறுகின்ற முடிவை எடுத்ததற்கும், புலிகளின் தலைமை தொடர்ந்தும் யுத்தத்தை முன்னெடுப்பதே காரணம் எனத் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. பேச்சுவார்த்தைகளில் புலிகளைப் பிரதிநிதித்துவம் செய்த கருணா எடுத்த அதே முடிவுக்கே கே பியும் வந்துள்ளார்.

கே பி க்கும் இலங்கை அரசுக்குமான நெருக்கமான உறவு யுத்தத்தின் பிற்பகுதியில் கே பி பேச்சுவார்த்தைகளுக்கு புலிகளின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டது முதல் ஏற்பட்டிருக்க வேண்டும். இந்திய அதிகாரி குறிப்பிட்டது போல் அதற்கு முன்பே கே பி இலங்கை அரசுடன் இணைந்து செயற்பட்டு இருந்தால் புலிகளுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரும் துரோகத்தனமாக அது அமையும்.

புலிகள் தங்களில் இருந்து மாறுபட்ட கருத்துடையவர்கள் அனைவரையும் துரோகிகள் என்று முத்திரை குத்தி இறுதியில் தங்களுக்குள்ளேயே துரோகிகளைத் தேட நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

புலிகளை யுத்தத்தின் ஆரம்பம் முதலேயே பேச்சுவார்த்தை மூலமான உடன்பாட்டுக்குச் செல்லுமாறு வலியுறுத்தியதாக கே பி தேசம்நெற்றுக்குத் தெரிவித்து இருந்தார். இதனை கிளிநொச்சியின் வீழ்ச்சிக்கு முன்னும், பின்னரும் கூறியதாகவும் ஆனால் தமிழகத் தேர்தல் முடிவுகளில் தலைமை மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்ததாகவும் கூறியிருந்தார். அப்போது யுத்தமுனையில் இருந்து வந்த தகவல்கள் அனைத்தும் தாங்கள் தமிழீழத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாகவே தெரிவித்து வந்தன. மே 16 2009 இலேயே சூசை முதற்தடவையாக தாங்கள் ஆயுதங்களை மௌனிக்க வைக்கத் தயார் என்று அறிவிக்கின்றார். இப்பேச்சு புலிஆதரவு ஊடகங்களுக்கு வழங்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. புலிகள் தாங்கள் சரணடையத் தயார் என முதலும் கடைசியுமாகத் தெரிவித்தது அப்போதே.

எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் திறமையாகப் பேரம்பேசக் கூடியவருக்கும் இந்நிலையில் பேச்சுவார்த்தையை மேற்கொள்வது மிகக் கஸ்டம். ஓரிரு சதுர கிலோ மீற்றருக்குள் முழுமையாக இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு இருக்கும் தலைமையை காப்பாற்ற பேச்சுவார்த்தை நடாத்த கால அவகாசம் இல்லை. சரணைடைவதற்கான நிபந்தனைகளை விதிக்கவும் புலிகளிடம் ஒருபிடியும் இருக்கவில்லை. தங்களை சில மணிநேரத்திற்குக் கூட தற்காத்துக் கொள்ள முடியாத நிலையிலேயே சரணடைவதற்கான முடிவை அவர்கள் அறிவித்தனர். சரணடைவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளவும் அங்கு நேரம் இருந்திருக்கவில்லை. அதனால் இலங்கை அரச தரப்பில் அல்லது இராணுவம் சொல்வதையெல்லாம் நம்புவதைத் தவிர அங்கு புலிகளுக்கோ, அவர்களுக்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கே பி க்கோ வேறுவழி இருந்திருக்க முடியாது.

இலங்கை அரசு கே பி க்கு சில நம்பிக்கை சமிஙைகளை வழங்கி கே பி மூலமாக புலிகளுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கலாம். இதுவரை புலிகளின் தலைமை சரணடைந்ததும் அவர்கள் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர் என்ற தகவல் மட்டுமே உறுதிப்படுத்தக் கூடியதாக உள்ளது. எவ்வாறு அது சம்பவித்தது என்பது இன்னமும் ஊகங்களுக்கே விடப்பட்டு உள்ளது.

இவற்றைத் தொடர்ந்து ஓகஸ்ட் 7 2009ல் மலேசியாவில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் இன்றியே கே பி கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார். இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவர் இலங்கையின் சிறைக்கூடங்களில் தடுத்த வைக்கப்பட்டு இருக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவினால் கட்டப்பட்ட “விசும்பாய” வில் தங்க வைக்கப்பட்டு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யூனியன் பிளேசில் உள்ள இந்த வாஸஸ்தலத்திலேயே அநுரா பண்டாரநாயக்காவும் வாழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கைது இலங்கை அரசாங்கத்தாலும் கே பி ஆலும் அரங்கேற்றப்பட்ட ஒரு நாடகம் என்றே தற்போது அறிய வருகின்றது. இந்தக் கைதுக்கு முன்னதாகவே கே பி க்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டு இருக்க வேண்டும் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது. புலிகளின் தலைமை முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் கே பி யால் புலிகள் அமைப்பை நீண்ட காலத்திற்கு தலைமை தாங்க முடியாது. சர்வதேச உளவு நிறுவனங்களுக்கே வேண்டப்பட்ட கே பி, இன்று அனுபவிக்கின்ற சுதந்திரக் காற்றை பலவருடங்களாக அனுபவித்திருக்கவில்லை. மேலும் புலிகளில் ஒரு பகுதியினர் தலைமையின் அழிவுக்குத் தன்னை ஒரு காரணமாகக் காட்டுவதால் புலிகளாலும் அவருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சமும் தவிர்க்க முடியாதது. அதனால் நோயாளியுமான இவர் இலங்கை அரசுடன் ஒரு உடன்பாட்டுக்குச் சென்று சரணடைவதே அவருக்கு பாதுகாப்பானதாக அமைந்திருக்கும். அந்த நாடகமே ஓகஸ்ட் 7 2007 ல் மலேசியாவில் அரங்கேறியிருக்க வாய்ப்புள்ளது.

தற்போது ஆலோசிக்கப்படுவது போல் வட மாகாண முதல்வராக கே பி நியமிக்கப்பட்டால் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் புலிகளினாலேயே நிர்வகிக்கப்படுகின்றது என்றும் கொள்ள முடியும். அங்கு எழக்கூடிய எதிர்ப்பு நடவடிக்கைகள் எதுவானாலும், காடுகளில் உள்ள புலிகள் மீளினைந்து சில தாக்குதல்களை மேற்கொண்டாலும், அதனை புலிகளை வைத்தே இலங்கை அரசினால் கையாள முடியும். இலங்கையின் எந்தக் காடுகளின் மூலைகளில் எப்படிப் பதுங்க முடியும் என்பது முதல் சர்வதேச பாதாள உலகில் எவ்வாறு ஆயுதங்களை வாங்கி எப்படிக் கொண்டுவர முடியும் என்பதுவரை அனைத்தையும் அறிந்தவர்கள், ஒரே பாசறையில் உண்டு உறங்கியவர்கள், இன்று இலங்கை அரசுடன் இணைந்துள்ளனர். இவர்களுக்கு புலிகள் எப்படிச் சிந்திப்பார்கள் என்பதும் நன்கு தெரிந்தே இருக்கும்.

இதற்குள் அண்மையில் ஒரு புலி ஆதரவாளர் ‘கே பி இலங்கை அரசாங்கத்தினுள் புகுந்து விளையாடுகிறார்” என்றும் பெருமைகொண்டார். ‘தலைவர் உள்ளுக்கு விட்டு அடித்து முடிந்துவிட்டார். இப்ப கே பி இன் ரேன்’ என்று  அவருக்கு என் கருத்தைத் தெரிவிப்பதைவிட என்ன சொல்ல முடியும்.

புலிகளின் பெயரில் மட்டுமே தமிழ் மக்களின் விடுதலை இருந்ததே அல்லாமல் அவர்களின் அரசியலிலோ செயற்பாடுகளிலோ தமிழ் மக்களின் விடுதலை பற்றிய உணர்வோ சிந்தனையோ இருக்கவில்லை. ஆனாலும் தமிழ் மக்களின் விடுதலையின் பெயரில் மிகப்பெரிய அழிவுகளும் அனர்த்தங்களும் நேர்ந்துள்ளது. பானையில் இருப்பதே அகப்பையில் வரும் என்பதற்கமைய இன்று புலிகளில் எஞ்சி நிற்பது கே பி, பிள்ளையான், கருணா….. புலம்பெயர்ந்த நாடுகளை எடுத்தால் நெடியவன், ரூட்ரவி, தனம் ….

இந்த சூழலுக்கள் தான் தாயகத்தின் தமிழ் மக்கள் வாழ வேண்டிய நிலையுள்ளது. இவர்களையோ இலங்கை அரசாங்கத்தையோ நிராகரித்து தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியாது. கடந்த மூன்று தசாப்த கால யுத்தமும் அதில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரும் ஏற்படுத்திய அழிவும் சாதாரணமானதல்ல. இது தமிழ் மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்தை தடுத்தது மட்டுமல்ல பல பத்து ஆண்டுகள் பின்நோக்கியும் தள்ளியுள்ளது. மீண்டும் அந்த மக்களை கொண்டு வந்து வளர்ச்சிப் பாதையில் விடுவது அவசியமாகின்றது. அதற்கு எதிரான அரசியல் தடைகளை உடைப்பதற்கான வழிவகைகளை ஆராயப்பட வேண்டும்.

இச்சூழலில் தமிழ் மக்களின் அபிவிருத்தி கருதிச் செயற்படுபவர்கள் தங்கள் நடவடிக்கைகள் பற்றி வெளிப்படையாக இருப்பது அவசியம். தமிழ் மக்கள் என்ற பெயரில் செய்யப்படும் எந்த விடயமும் அந்த மக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும். அதனை இரகசியமாக மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. கே பி யைச் சந்தித்தவர்கள் சந்திக்க முன்னரோ அல்லது சந்தித் பின்னரோ பின்னரோ தமது நோக்கம் பற்றி வெளியிட்டு இருக்க வேண்டும். ஆனால் அதனை அவர்கள் செய்யாதது அவர்கள் மீது பலவாறான சந்தேகங்களுக்கு இட்டுச்செல்கின்றது. இவ்வாறான மூடுமந்திர சந்திப்புக்கள் ஆரோக்கியமானதல்ல.

குறிப்பாக இக்குழுவில் பயணித்த சார்ள்ஸ் அந்தோனிதாஸ் ஜனநாயக நடைமுறை பற்றியும் வெளிப்படையான அரசியல் பற்றியும் பொது இடங்களில் கருத்து வெளியிட்டுவருபவர் இப்பயணம் குறித்து மௌனிப்பது தவறான முன்னுதாரணமாக அமையும். தமிழ் சமூகத்தில் காணப்படும் இவ்வகையான மூடுமந்திரமான அரசியல் கலாச்சாரம் முடிவுக்கு வர வேண்டும்.

ஏரிஎன் ஜீவலர்ஸ் நகைக்கடையில் நகைச்சீட்டு கட்டியவர்கள் ஆயிரக்கணக்கான பவுண் சேமிப்பை இழந்தனர்!!!

ATN_Jewelersகிழக்கு லண்டன் ஏரிஎன் ஜீவலர்ஸ் நகைக் கடையில் தங்கள் சேமிப்பிற்காக நகைச்சீட்டுப் போட்டவர்கள் பலர் ஆயிரக் கணக்கான பவுண் சேமிப்பை இழந்தனர். உலகச் சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கும் மத்தியில் செலுத்திய கட்டுப் பணத்தையும் இழந்து நிர்க்கதியாகி உள்ளனர்.உரிமையாளர்(கள்) தலைமறைவான நிலையில் வாடிக்கையாளர்கள் நகைக்கடைக்கும் வீட்டுக்குமாக அலைகின்றனர்.

ஏரிஎன் ஜீவலர்ஸ் நகைக்கடை அண்மைக் காலமாகப் பூட்டப்பட்டு உள்ளது. இவர்களிடம் நகைச் சீட்டுப் போட்ட பலரும் தங்களுடைய பணத்தை இழந்துவிட்டு தவிக்கின்றனர்.

ATN_Jewelersஏரிஎன் ஜவலர்ஸில் நகைச்சீட்டுப் போட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சில மாதங்களுக்கு முன்னதாகவே லண்டன் குரலுக்கு இது பற்றி அறியத் தந்தனர். அக்குடும்பத்தினர் 2008 பிற்பகுதியில் ஏரிஎன் ஜீவலர்ஸில் நகை வாங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஏரிஎன் ஜீவலர்ஸ் அக்குடும்பத்தினரை நகைச்சீட்டில் சேர வற்புறுத்தினர். பெண்களுக்கு நகைகள் மீதுள்ள மோகத்தை குறிவைத்து ஏரிஎன் ஜீவலர்ஸ் நகைச்சீட்டில் ஏராளமானவர்களை இணைத்துக் கொண்டனர்.

குறிப்பிட்ட குடும்பத்தினர் 13 மாத கால நகைச்சீட்டில் இணைந்து கொண்டனர். சீட்டு முடிவில் அவர்களுக்கு 13 பவுண் நகைகொடுக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் ஏரிஎன் ஜிவலர்ஸ் அவர்கள் இரு மாதம் 5 நாட்கள் தாமதமாகக் கட்டியதற்காக மாதத்திற்கு ஒரு பவுண் வீதம் 2 இரு பவுண்களைக் கழித்துக் கொண்டனர். இது குறித்து சீட்டின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டு இருக்கவில்லை.

மிகுதி 11 பவுண்களுக்கும் சரியாக நகைகள் கொடுக்கப்படவில்லை. தனித் தங்க நகைகளுக்குப் பதிலாக கல் பதித்த இரு நெக்லஸ் நகைகள் (ஒவ்வொன்றும் நான்கு பவுண்கள்) வழங்கப்பட்டது. கல்லின் நிறைக்கான தங்கம் சீட்டுப் பிடித்தவர்களுக்கு நட்டமாகியது.

மேலும் ஏரிஎன் ஜீவலர்ஸினால் அவர்களுக்கு வழங்கப்பட்ட இரு தங்க நாணயங்கள் (ஒவ்வொன்றும் ஒரு பவுண்) 22 கரட் தரம் இல்லாதவை என்பதனை நகைவினைஞர் ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளார்.

ஏரிஎன் ஜீவலர்ஸில் நகைச்சீட்டு போட்டவர்களிடம் இருந்து இவ்வாறான கதைகள் பல தாராளமாகவே வெளிவருகின்றது. இதனைவிட இன்னும் பலருக்கு நகைச்சீட்டின் எப்பெறுமதியும் வழங்கப்படவில்லை.

இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவர் ஏரிஎன் ஜீவலர்ஸிடம் சென்று மன்றாடி தனது நகைச்சீட்டின் பெறுமதிக்கு காசோலையைப் பெற்றுக் கொண்டார். ஆனால் அது வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் மீளவும் அவரிடமே வந்துவிட்டது.

சில வாரங்களுக்கு முன்னதாக ஏரிஎன் ஜீவலர்ஸ்க்கு ‘ஏரிஎன் சொப்’ எனப் பெயர் மாற்றப்பட்டு உள்ளது. ஆயினும் தொடர்ந்தும் கடை பூட்டப்பட்டே உள்ளது.

ATN_Jewelersஏரிஎன் ஜீவலர்ஸ் சர்ச்சைக்கு உள்ளானது இது முதற்தடவையல்ல. கிறடிட்காட் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையில் ஏரிஎன் ஜீவலர்ஸ்க்கும் வோல்தம்ஸ்ரோ இளைஞர் குழுவுக்கும் நகைக் கடையிலேயே மோதல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக ஏரிஎன் ஜீவலர்ஸ் உடன் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

கே ரி ராஜசிங்கத்திற்கு எதிராக சுவீடன் நீதிமன்றம் தீர்ப்பு! சேதுரூபனுக்கு 125 000 குரோணர்கள் நட்டஈடு வழங்கும்படி ஏசியன் ரிபியூனுக்குப் பணிப்பு!!! : த ஜெயபாலன்

Nadarajah_Sethurubanநோர்வே நியூஸ் இணையத்தள ஆசிரியர் நடராஜா சேதுரூபன் ஏசியன் ரிபியூன் மற்றும் அதன் ஆசிரியர் கே ரி ராஜசிங்கத்திற்கு எதிராகப் பதிவு செய்த வழக்கில் ஏசியன் ரிபியூனுக்கு எதிராக சுவீடன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. சேது என்று அறியப்பட்ட நடராஜா சேதுரூபனுக்கு அவதூறை ஏற்படுத்தும் விதத்தில் கட்டுரைகள் செய்திகளை ஏசியன் ரிபியூன் வெளியிட்டதாக அதன் ஆசிரியர் கே ரி ராஜசிங்கத்தை சுவீடன் நீதிமன்றம் கண்டித்துள்ளது. இவ்வாறான அவதூறுகளால் நடராஜா சேதுரூபனுக்கு ஏற்பட்ட இழப்பிற்கு 125 000 குரோணர் (12 000 பவுண்கள்) நட்டஈடு செலுத்தும்படி சுவிடன் நீதிமன்றம் ஏசியின் ரிபியூனுக்கு எதிரான தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. மேலதிக நட்டஈடு பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. (தீர்ப்பு : Judgement_on_KTR_V_Sethu )

சுவீடன் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பையும் அதன் அங்கிகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பையும் ஏசியன் ரிபியூன் இணையத்தளத்திலும் இலங்கையில் வெளியாகும் பத்திரிகையிலும் முன் பக்கத்தில் பிரசுரிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் பணித்துள்ளது. மேற்படி தீர்ப்புக்கு எதிராக ஏசியன் ரிபியூன் மேன்முறையீடு செய்வதாக இருந்தால் யூன் 2ம் திகதிக்கு முன்னதாக மேன்முறையீடு செய்ய வேண்டும்.

‘இத்தீர்ப்பு நீதியை நிலை நாட்டியுள்ளது. நான் எப்போதும் தமிழீழ விடுதலைப் புலிகளின்  உறுப்பினராக இருந்ததில்லை. அவர்களின் உளவுப் பிரிவிலும் பணியாற்றியதில்லை. அப்படி இருந்தும் என்னைப் புலி உறுப்பினராகக் குற்றம்சாட்டி எனக்கு உயிராபத்து ஏற்படுத்தும் வகையிலேயே ஏசியன் ரிபியூன் செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வந்தது. இந்தத் தீர்ப்பு உண்மைக்காக நான் போராடியதற்குக் கிடைந்த வெற்றி.’ என்று நடராஜா சேதுரூபன் இத்தீர்ப்புத் தொடர்பாக தேசம்நெற்க்கு கருத்துத் தெரிவித்தார்.

நடராஜா சேதுரூபன் பற்றி ஏசியன் ரிபியூனில் வெளியான செய்திகளும் கட்டுரைகளும் இலங்கையிலும் வேறு நாடுகளில் உள்ள இணையத் தளங்களிலும் பரவலாக மீள்பிரசுரமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏசியன் ரிபியூனுக்கு இலங்கை அரசு நிதியுதவி வழங்கி வருவது தெரிந்ததே.

சுவீடனைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஆசிய கற்கைகளுக்கான மையமே ஏசியன் ரிபியூனை இயக்குகின்றது. ஆதனால் இவ்வழக்கு சுவீடனிலேயே நடத்தப்பட்டது. நோர்வேயில் வாழும் நடராஜா சேதுரூபன் ஏசியன் ரிபியூனுக்கு எதிரான வழக்கை  நோர்வே அரச சட்டத்தரணிகள் மூலமாகப் பதிவு செய்திருந்தார். ஏசியன் ரிபியூனின் மேன்முறையீடு செய்து அது தோல்வி காணும் பட்சத்தில் நட்டஈடு சில மில்லியன் குரோணர்களைத் தாண்டும் என மதிப்பிடப்படுகின்றது.

இலங்கையில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வி ஆனந்தசங்கரி வீரகேசரி பத்திரிகைக்கு எதிராகத் தொடுத்த வழக்கில் வெற்றிபெற்றிருந்தார். அப்பத்திரிகை நட்ட ஈட்டினை வழங்கப் பணிக்கப்பட்டது. ஆனால் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் மற்றுமொரு தமிழ் ஊடகத்திற்கு எதிராக ஊடகவியலாளருக்கு எதிராக மானநட்ட வழக்கினை தொடுத்து அதில் வெற்றி பெற்றது அண்மைக்காலத்தில் இதுவே முதற்தடவையாகும். இவ்வழக்கு ஊடகங்கள் தங்கள் செய்திகள் கட்டுரைகளில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றது.

இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட இருவருமே சுயாதீன ஊடகவியலாளர்களாக அறியப்பட்டவர்கள் அல்லர். அவர்கள் குறிப்பிட்ட காலகட்டங்களில் குறிப்பிட்ட அரசியல் பின்னணியில் செயற்பட்டவர்கள். செய்திகளையும் கட்டுரைகளையும் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் பிரசுரித்து வந்திருந்தனர்.

இணைய வலையத்தின் அனாமதேயத் தன்மையினால் புனைப்பெயர்களில் தனிப்பட்ட தாக்குதல்கள் மிகமோசமாக நடத்தப்பட்டு வந்தது. இதில் கே ரி ராஜசிங்கம், நடராஜா சேதுரூபன் உட்பட பலரது பெயர்கள் புலம்பெயர் தமிழ் சமூகத்தினால் நன்கு அறியப்பட்டு இருந்தது. இவ்வழக்கின் தீர்ப்பு இவ்வகையான தனிநபர் தாக்குதலை மட்டுப்படுத்தவதற்கு உதவும் வாய்ப்பு உள்ளது.

நடராஜா சேதுரூபன் தொடர்பாக தேசம்நெற்றில் வெளியான கட்டுரைகள்:

புனைபெயரில் ஒழிந்து கொண்டு பத்திரிகா தர்மம் பேசும் எஸ் சிவரூபனுக்கு….. : நடராஜா சேதுரூபன்

சேதுவும் தேசம் ஜெயபாலனின் பொறுப்பற்ற பத்திரிகா தர்மமும். : எஸ் சிவரூபன்

முன்னாள் ஐரோப்பிய ‘புலி’ ஆதரவாளர் மகிந்த ராஜபக்சவுக்காக பிரச்சாரம் செய்ய இலங்கை செல்கிறார். : த ஜெயபாலன்

லண்டன் உள்ளுராட்சி தேர்தலும் புலம்பெயர்ந்த தமிழ் வாக்காளர்களும் புலம்பெயராத சிந்தனையும் : த ஜெயபாலன்

London_Local_Councilsலண்டனில் மே 6ல் இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் 50 வரையான தமிழர்கள் போட்டியிட்டு 13 பேர் உள்ளுராட்சி ஆசனங்களைப் பெற்றுள்ளனர். லண்டனில் இதுவரை நடந்த உள்ளுராட்சித் தேர்தலில் இவ்வளவு தொகையான தமிழர்கள் போட்டியிட்டதும் பத்துக்கும் மேற்பட்ட ஆசனங்களை வென்றதும் இதுவே முதற்தடவையாகும். கடந்த தேர்தலில் கவுன்சிலர்களாகத் தெரிவு செய்யப்பட்ட போல் சத்தியநேசன், மைக் செல்வா, மனோகரன் தர்மராஜ், தயா இடைக்காடர், நிசாம் அலாவி இஸ்மைல், யோகன் கோகநாதன், எலிசா பாக்கியதேவி மஅன், சசிகலா, கைருள் கரீமா மரிக்கார் ஆகியோர் இம்முறை மீண்டும் கவுன்சிலர்களாகத் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களில் நியூஹாமில் போட்டியிட்டு நான்காவது முறையாக கவுன்சிலராகத் தெரிவு செய்யப்பட்ட போல் சத்தியநேசன் ஆகக் கூடுதலான வாக்குகளைப் (3453) பெற்றுள்ளார்.

தமிழ், தமிழ் பேசும் கவுன்சிலர்களுள் மைக் செல்வா தமிழகத்தை பின்னணியாகக் கொண்டவர். நிசாம் அலாவி இஸ்மைல், கைருள் கரீமா மரிக்கார் ஆகிய இருவரும் இலங்கைப் பின்னணியைக் கொண்ட முஸ்லிம்கள். ஏனையவர்கள் இலங்கைப் பின்னணியை உடைய தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவருமே தமிழ் பேசுபவர்கள்.

தமிழ் கவுன்சிலர்களின் அரசியல்:

Cllr Thaya Idaikadar with former TNA MP Pathmini Sithambaranathanதமிழ் கவுன்சிலர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள பதினொருவரில் (இரு முஸ்லீம் கவுன்சிலர்கள் நீங்கலாக) பெரும்பாலானவர்கள் தமிழ் தேசியத்தை முன்வைத்தே தமிழ் வாக்கு வங்கியை தமதாக்கிக் கொண்டனர். இவர்கள் தமிழ் தேசியத்தில் முழுமையாக நம்பிக்கை வைக்காத போதும் அதன் அலையில் செல்வதன் மூலமே தங்கள் வாக்கு வங்கியைப் பலமாக்க முடியும் என்ற நம்பிக்கையில் செயற்பட்டனர். இவர்களில் குறிப்பாக தயா இடைக்காடர், சுரேஸ் கிருஸ்ணா அவருடைய துணைவியார் சுரேஸ் சசிகலா, யோகன் யோகநாதன் அவருடைய மகன் ரோகான் யோகநாதன் (இம்முறை தெரிவாகவில்லை) ஆகியோர் முக்கியமானவர்கள். ஏனையவர்களும் இந்த தமிழ் தேசிய அலைக்கு ஓரளவுக்கு வளைந்து கொடுக்க வேண்டிய நிலையிலேயே இருந்தனர். 

மனோ தர்மராஜ் பெரும்பாலும் தமிழ் என்ற வகையில் தன்னை அடையாளப்படுத்துபவர் அல்ல.

Lab_Cllr_Paulமாறாக போல் சத்தியநேசன் இந்த ‘புலித் தேசியம்’ ஆகிப் போன தமிழ் தேசிய அலைக்கு எதிரானவராகவே கணிக்கப்பட்டார். வன்னி யுத்தம் உக்கிரமாகி இருந்தவேளை தமிழ் கவுன்சிலர்களும் கவுன்சிலராக வர விரும்பியவர்களும் புலித் தேசியத்திற்கு ஆதரவான நிலையை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்ட போதும் போல் சத்தியநேசன், வரன் கனகசுந்தரம் போன்றவர்கள் யுத்தத்தை நிறுத்தும்படி இலங்கை அரசைக் கேட்டுக்கொண்ட அதேநேரம் மக்களை பணயக் கைதிகளாக வைத்திராமல் அவர்களை விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டனர். இவற்றைச் சித்தரிக்கும் தெருநாடகம் தேசம்நெற்றால் ஈஸ்ற்ஹாம் வீதியில் நடத்தப்பட்டதற்கு ‘புலித் தேசியம்’ கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. இத்தெரு நாடகத்தை இயக்கியவர்களில் ரெட் யூனியன் சோசலிஸ்ட் கட்சி கூட்டில் போட்டியிட்ட உதயசேனன் தனபாலசிங்கமும் முக்கியமானவர்.

பிரித்தானிய உள்ளுராட்சி மன்றுக்கு கவுன்சிலராகத் தெரிவு செய்யப்படுபவர் தனது உள்ளுர் பிரதேசத்திற்கு காத்திரமான சேவையை வழங்க வேண்டும் என்பதே நோக்கம். உள்ளுராட்சி மன்றத்தின் அதிகாரம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. ஆயினும் தமிழ் தேசிய அலையானது இந்த உள்ளுராட்சி மன்ற தமிழ் வேட்பாளர்களை வைத்து கட்டமைக்கும் அரசியலோ மிகவும் போலியானது. ஆனால் இதனை உணர்ந்திருந்த கவுன்சிலர்களும் தங்கள் வாக்கு வங்கியை மட்டும் கருத்தில் கொண்டு புலித் தேசியத்தின் அலைக்கு எடுபட்டனர். இவர்களது தேர்தல் பிரிவில் சகல இன மக்களும் வாழ்ந்த போதும் தமிழ் வாக்காளர்கள் மொத்தமாக வாக்கு அளித்தால் வென்றுவிடலாம் என்ற கணிப்பில் (அக்கணிப்பு உண்மையானதும் கூட) இவர்கள் காலத்துக்குக் காலம் தமிழ் மக்களின் அரசியல் அவலத்தை தங்கள் அரசியல் லாபத்திற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.

Eliza_PackiaDevi_Mannஇவர்களில் எலிசா பாக்கியதேவி மஅன் விதிவிலக்கானவர். இவர் தமிழ் தேசியத்தின் மீது நம்பிக்கை கொண்டவரே அன்றி அதனை வைத்து அரசியல் செய்பவர் அல்ல. அந்த அவசியம் அவருக்கு இல்லை. ஏனெனில் அவர் தமிழ் வாக்காளரில் தங்கியில்லை.

தமிழ் கவுன்சிலர்கள் தாங்கள் வாழும் தேர்தல் பிரிவின் சகல இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தவதுடன் அம்மக்களை நோக்கி தங்கள் சேவைகளை வழங்கத் தவறும்பட்சத்தில் அவர்கள் தங்கள் ஆனசங்களை இழக்க நேரிடலாம்.

ஒரே நபர்கள் வேறுவேறு தொப்பிகளை அணிவது போல் புலித் தேசியவாதிகள் பிரித்தானிய தமிழர் பேரவை, நாடுகடந்த தமிழீழம், வட்டுக்கோட்டைத் தீர்மானக்குழு, உலகத் தமிழர் பேரவை, ரமிழ்ஸ் போர் லேபர், ரமிழ்ஸ் போர் கொன்சவேடிவ் என்ற தொப்பிகளை மாறி மாறி அணிகின்றனர். சில சமயங்களில் இவர்களுக்கு தாங்கள் எந்தத் தொப்பியை அணிந்துள்ளோம் என்று தெரியாமலேயே நடந்தும் கொள்கின்றனர். இந்தத் தொப்பிகளை சில தமிழ் கவுன்சிலர்களும் தங்கள் வாக்கு வங்கியைப் பலப்படுத்த விரும்பி அணிந்து கொள்கின்றனர். சிலர் விரும்பாமலேயே அணிந்து கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். 

இவர்களுடைய அரசியல் மாறாட்டம் மிகவும் கேலிக்கூத்தானதாக உள்ளது. நாடுகடந்த தமிழீழப் பாராளுமன்றத்தில் நின்ற டேவிட் ஜோசப் தாங்கள் ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு கட்சியை ஆதரிக்கப் போவதாக அறிவித்தார். பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் ஒரு தேர்தல் பிரிவில் தொழிற்கட்சிக்கு பிரச்சாரம் செய்தனர். அதே நபர்கள் சில மைல்களுக்கு அப்பால் கொன்சவேடிவ் கட்சிக்கு பிரச்சாரம் செய்கின்றனர். ஒவ்வொரு கட்சிக்கும் அதற்கென்று கொள்கைகள் உள்ளது. அவற்றின் கொள்கை அடிப்படையில் உடன்பாட்டுக்குவராது தனிப்பட்ட வேட்பாளர்களின் அடிப்படையில் அரசியலை முன்னெடுத்து நம்பகத்தன்மை அற்றவர்களாகவும் கொள்கையற்றவர்களாகவும் தங்களை இனம்காட்டிக் கொள்கின்றனர். இவ்வாறான முரண்நகையான அரசியல் செயற்பாடுகள் கடந்தகாலங்களில் தாயகத்திலும் புலம்பெயர்நாடுகளிலும் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தியது. அதனையே இன்னமும் தொடர்கின்றனர். 

வெற்றியும் தோல்வியும்:

Lab_Cllr_Jeyaranjan_Thavathurayதவத்துரை ஜெயரஞ்சன், கனபதிப்பிள்ளை நகீரதன், கிருஸ்ணா சுரேஸ், செல்லையா லோகேந்திரன் ஆகிய நால்வரும் புதிதாக இம்முறை கவுன்சிலர்களாகத் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். தவத்துரை ஜெயரஞ்சன், கிருஸ்ணா சுரேஸ் ஆகிய இருவரும் கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவி இருந்தனர். இம்முறை அவர்கள் வெற்றியைத் தழுவிக் கொண்டனர். மாறாக சென்றமுறை கவுன்சிலராக இருந்த யோகன் யோகநாதனின் மகன் றோகான் யோகநாதன் இம்முறை தனது ஆசனத்தை இழந்துள்ளார்.

கடந்த உள்ளுராட்சித் தேர்தலில போட்டியிட்ட சிலர் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்னெடுத்த பரமகுமாரன் இம்முறை போட்டியிடவில்லை. ‘ஒரு பேப்பர்’ ஆசிரயர் கோபி கோபிரட்ணமும் இம்முறை போட்டியிடவில்லை. இவர்கள் கடந்த தேர்தலில் தொழிற்கட்சியில் போட்டியிட்டு இருந்தனர். தங்களுக்கு வெல்வதற்கு வாய்ப்புள்ள ஆசனங்கள் வழங்கப்படாததால் தேர்தலில் இருந்து ஒதுங்கி இருப்பதாகத் தெரியவருகின்றது. ஆனால் இத்தடவை தொழிற் கட்சியில் போட்டியிட்ட 16 தமிழ் பேசும் வேட்பாளர்களில் 10 பேர் கவுன்சிலராகத் தெரிவு செய்யப்பட்டனர். இன்னும் ஒரு சிலர் ஓரிரு நூறுக்கும் குறைவான வாக்குகளால் தோல்வியைத் தழுவி இருந்தனர்.

சென்ற தேர்தலில் கொன்சவேடிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட பீற்றர் ரட்ணராஜா இத்தடவை போட்டியிடவில்லை.

போல் சத்தியநேசன் மற்றும் புலித் தேசியத்திற்கு ஆதரவு வழங்காத வேட்பாளர்களுக்கு எதிரான சேறடிப்பு பிரச்சாரம் ஒன்று நியூஹாமில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இருந்தும் அப்பிரச்சாரம் பெரும்பாலும் அர்த்தமற்றதாகிப் போனது. போல் சத்தியநேசன் 3500க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டு நான்காவது தடவையாகவும் கவுன்சிலராகத் தெரிவு செய்யப்பட்டார். ‘புலித் தேசியம்’ அணியில் நின்றவர்களைக் காட்டிலும் அவர் 1000 வாக்குகளை அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 

Senan - Trade Union & Socialist Coalitionஇத்தேர்தலில் சேனன் என அறியப்பட்ட உதயசேனன் தனபாலசிங்கம் நிராகரிக்கப்பட்டமை கவனத்திற்குரியது. தான் வாழ்கின்ற பகுதியில் மட்டுமல்லாமல் உலகின் எப்பாகத்திலும் ஒடுக்கப்படுகின்ற சமூகத்திற்காக நீண்டகாலமாகப் போராடி வருபவர். உள்ளுர் விப்ஸ்குரொஸ் மருத்துவமனையின் சில பிரிவுகள் மூடப்படுவதற்கு எதிராகவும் இந்தோனேசியக் கடலில் தத்தளிக்கும் அகதிகளுக்காகவும் குரல் கொடுக்கும் இவருக்கும் இவரது கட்சிக்கும் மிகக் குறைந்த வாக்குகளே கிடைத்துள்ளது. போட்டியிட்ட 50 வரையான வேட்பாளர்களில் சேனன் 104 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். இவர் போட்டியிட்ட தேர்தல் பிரிவிலும் இவரது வாக்கே மிகக் குறைந்ததாக உள்ளது.

மக்களுக்காக குரல் கொடுக்கும் ரேட் யூனியன் சோசலிஸ்ட் கோஓலிசன் வாக்காளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கத் தவறிவிடுகின்றது. இலங்கைத் தமிழர் பிரச்சினையை கையிலெடுத்து பல்வேறு போராட்டங்களை இவர்கள் முன்னெடுத்து போதும் இவர்களால் லண்டன் தமிழ் மக்களை தம் பக்கம் வெற்றி கொள்ள முடியவில்லை. ரமிழ்ஸ் போர் லேபர், ரமில்ஸ் போர் கொன்சவேடிவ் என்றெல்லாம் அமைப்புகள் உருவாகிய போதும் ரமிழ்ஸ் போர் சோசலிஸ்ட் என்று ஒரு அமைப்பை ஏற்படுத்த முடியவில்லை. இவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் மட்டுமல்ல பெரும்பான்மை மக்களுக்கும் இடையே உள்ள ஒவ்வாத இரசாயன மாற்றத்தை மாற்றாதவரை இவர்கள் தொடர்ந்தும் நிராகரிக்கப்படும் நிலையே உள்ளது. இது லண்டனில் மட்டுமல்ல இலங்கையில் உள்ள இடதுசாரிக் கட்சிகளின் நிலையும் இதுவாகவே உள்ளது. 

Varatheeswaran_Kஇக்கட்சியைக் காட்டிலும் சுயேட்சையாக போட்டியிட்ட வரன் கனகசுந்தரம் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. வாக்குகளை வைத்து கட்சிகளின் கொள்கைகளை ஒப்பிடுவது மதிப்பீடு செய்வதோ சிறந்த அணுகுமுறையாக இல்லாத போதும் தேர்தலின் முடிவில் யார் மக்களுடைய அங்கிகாரத்தைப் பெறுகிறார்கள் என்பதே தீர்மான சக்தியாக அமைகின்றது.

புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரதிநிதித்துவம்:

புலம்பெயர்ந்து லண்டனில் கணிசமான தொகையினர் வாழ்ந்த போதும் பிரித்தானிய பிரதான அரசியல் நீரோட்டத்தில் இவர்கள் ஒரு ஓரமாகவே நிற்கின்றனர். 100 000 தமிழ் வாக்காளர்களுக்கு மேல் லண்டனிலும் லண்டனைச் சுற்றிய புறநகர்ப் பகுதிகளில் உள்ள 32 உள்ளுராட்சிப் பிரிவுகளிலும் வாழ்கின்றனர். 32 உள்ளுராட்சிப் பிரிவுகளுக்கும் 1849 கவுன்சிலர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேரே தமிழ் பின்னணியை உடையவர்களாக இருந்துள்ளனர். 

பாராளுமன்றத் தேர்தலுக்கு மாறாக உள்ளுராட்சித் தேர்தலில் லேபர் கட்சி கூடுதலான ஆசனங்களைப் பெற்றுள்ளது. லேபர் கட்சி 864 ஆசனங்களையும் கொன்சவேடிவ் கட்சி 748 ஆசனங்களையும் லிபிரல் டெமொகிரட் கட்சி 217 ஆசனங்களையும் ஏனையவை 20 ஆசனங்களையும் வென்றுள்ளன. 13 ஆண்டுகாலத் தொடர்ச்சியான ஆட்சிக்குப் பிற்பாடும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் லேபர் கட்சி எதிர்பார்த்திராத வெற்றியைச் சந்தித்து உள்ளது. இது பல தமிழ் கவுன்சிலர்கள் வெல்வதற்கும் வாய்ப்பை அளித்துள்ளது.

ஒரு உள்ளுராட்சித் தேர்தல் பிரிவில் சராசரியாக 9000 முதல் 10000 வரையான வாக்காளர்கள் இருப்பர். வழமையான உள்ளுராட்சித் தேர்தல்களில் 30 வீதம் முதல் 40 வீதமான வாக்காளர்களே வாக்களிப்பில் ஈடுபடுவதால் தமிழ் வாக்குகள் மொத்தமாக தமிழ் ஒரு வேட்பாளருக்குச் செல்லுமாயின் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. அந்த வகையில் தமிழ் வேட்பாளர்களும் வாக்காளர்களும் இந்த வாக்குக் கணிப்பீட்டை சரிவரச் செய்ய முடியுமாயின் 50க்கும் மேற்பட்ட தமிழ் கவுன்சிலர்கள் உள்ளுராட்சிமன்றுக்குத் தெரிவு செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. 

Lab_Cllr_Sasikala100 000 தமிழ் வாக்காளர்களும் சம அளவில் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் உள்ளுராட்சிப் பிரிவுகளிலும் பரவலாக வசிக்கவில்லை. குறிப்பாக நியூஹாம், ரெட்பிரிஜ், ஹரோ, பிரன்ற், குரொய்டன், வொன்ஸ்வேர்த் ஆகிய உள்ளுராட்சி மன்றங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட சில உள்ளுராட்சிப் பிரிவுகளிலே செறிவாக வாழ்கின்றனர். குறிப்பாக ஹரோவை எடுத்துக் கொண்டால் அங்கு 6 தமிழ் கவுன்சிலர்கள் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். ஆனால் அதன் அளவுக்கு அல்லது அதிலும் அதிகமாக தமிழ் மக்களைக் கொண்ட குட்டி யாழ்ப்பாணம் என்றழைக்கப்படும் நியூஹாமில் போல் சத்தியநேசன் மட்டுமே கவுன்சிலராகத் தெரிவு செய்யப்பட்டு உள்ளார். தமிழ் மக்கள் அதிகம் வாழாத பகுதிகளில் இருந்தும் தமிழ் கவுன்சிலர்கள் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். குறிப்பாக தமிழ் மக்களே இல்லாத சவுத்வாக் கவுன்சிலில் இருந்து எலிசா பாக்கியவதி மஅன் மூன்றாவது தடவையும் கவுன்சிலராகத் தெரிவு செய்யப்பட்டு உள்ளார். ஆகவே தமிழ் மக்கள் தங்கள் உள்ளுராட்சி மன்றப் பிரிவுகளில் எதிர்காலத்தில் தங்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கச் செய்ய நிறைய வாய்ப்புகள் உள்ளது.

தமிழ் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படுவதற்கான காரணங்கள்:

தமிழ் வாக்காளர்கள் தங்களை வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளாமை, பதிவு செய்த வாக்காளர்களும் தங்கள் வாக்குகளை செலுத்தாமை என்பன தமிழ் மக்களின் உள்ளுராட்சிமன்றப் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படுவதற்கான முக்கிய காரணமாக உள்ளது. மேலும் கவுன்சிலராக வர விரும்புபவர்கள் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன் கட்சியில் இணைந்து தங்களுக்கு வெல்வதற்கான வாய்ப்புள்ள ஆசனங்களை எதிர்பார்க்கின்றனர். அவ்வாறான ஆசனம் வழங்கப்படவில்லை என்றவுடன் அந்தக் கட்சியைவிட்டுவிட்டு அடுத்த தேர்தலுக்கு வேறுகட்சிக்குச் செல்கின்றனர். மேலும் கொள்கையின் அடிப்படையில் கட்சியை ஆதரிக்காமல் தங்கள் சுயநல அடிப்படையில் செயற்படுவதால் இவர்கள் கட்சியிலும் வாக்காளர் மத்தியிலும் நம்பகத்தன்மையைப் பெறுவதில்லை. 

Lab_Cllr_Suresh_Krishnaஆனால் தவத்துரை ஜெயரஞ்சன், சுரேஸ் கிருஸ்ணா ஆகியோர் தாங்கள் இரு தடவை தோற்றுப் போனபோதும் அதே கட்சியில் தொடர்ந்தும் நின்று கட்சிக்கு தங்கள் ஒத்துழைப்பை வழங்கி இம்முறை மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர். மக்களது சேவையை முன்னிறுத்தி கட்சிக்கு நம்பகமாக ஒருவர் தொடர்ந்தும் தனது அரசியல் கடமையைச் செய்வாராயின் அவருக்கு வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம் என நான்காவது தடவையாக கவுன்சிலராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள போல் சத்தியநேசன் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். ஒவ்வொரு தேர்தலில் ஒவ்வொரு கட்சியில் நிற்பதும் கட்சிக்கு முரணாகச் செயற்படுபவர்களும் அரசியல் வியாபாரிகள் என்றும் போல் சத்தியநேசன் குற்றம்சாட்டினார்.

பிரித்தானிய அரசியல் கட்சிகளுடன் தமிழ் மக்களின் ஈடுபாடு:

Brent         : Queensbury – Kanapathipillai Naheerathan  (Labour)
Croydon    : Broad Green – SELVA Mike (Labour)
Harrow      : Roxbourne – Manoharan Dharmarajah (Labour)
Harrow      : Headstone South – Sasikala Suresh (Labour)
Harrow      : Queensbury – Nizam Alavi Ismail (Labour)
Harrow      : Roxeth – Thayapara Idaikkadar (Labour)
Harrow      : Rayners Lane – Krishna Suresh (Labour)
Harrow      : West Harrow – Kairul Kareema Marikar (Labour)
Kingston    : St Mark’s – YOGANATHAN Yogan (Liberal Dem)
Newham    : Eastham North – Paul Duraisamy Sathianesan  (Labour)
Merton      : Cannon Hill – Lohendran Chelliah  (Conservative)
Redbridge  : Newbury – Jeyaranjan, Thavathuray (Labour)
Southwark : Riverside – Eliza Packia Devi Mann (Liberal Dem)

இம்முறை கவுன்சிலர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களில் எலிசா பாக்கியதேவி மஅன், யோகன் யோகநாதன் ஆகிய இருவரும் லிபிரல் டெமோகிரட் கட்சியில் நின்றும் ஏனைய 10 கவுன்சிலர்களும் லேபர் கட்சியில் நின்றும் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். உள்ளுராட்சித் தேர்தல் இடம்பெற்ற அதே தினம் நடைபெற்ற பிரித்தானிய பாராளுமன்றத்திற்கான தேர்தலில் பெரும்பான்மையைப் பெறாவிட்டாலும் அதிகப் படியான ஆசனங்களைப் பெற்று ஆட்சி அமைக்க முயற்சிக்கும் கொன்சவேடிவ் கட்சியில் இருந்து ஒரு தமிழர் செய்யப்பட்டு உள்ளார். கொசவேடிவ் கட்சியின் சார்பில் 13 பேர் போட்டியிட்ட போதும் ஒருவரே வெற்றி பெற்றார். கிறிஸ்ரியன் பீப்பிள்ஸ் அலையன்ஸ், கிரீன் கட்சி ஆகியவிற்றில் முறையே 5 வேட்பாளர்களும் 4 வேட்பாளர்களும் போட்டியிட்டனர் அவர்களும் வெற்றி பெறவில்லை. சுயேட்சையாக இரு தமிழர்கள் போட்டியிட்டனர். அவர்களும் வெற்றி பெறவில்லை. ரேட்யூனியன் சோசலிஸ்ட் கோஓஎலிசனில் போட்டியிட்டவரும் வெற்றி பெறவில்லை.

தெரிவு செய்யப்பட்ட 13 கவுன்சிலர்களில் 6 கவுன்சிலர்கள் கரோ உள்ளுராட்சி மன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். இங்கு 12 தமிழ் பேசுவோர் தேர்தலில் போட்டியிட்டு இருந்தனர். அடுத்து நியூஹாம், பிரன்ற் ஆகிய உள்ளுராட்சி மன்றங்களில் ஏழு, ஏழு பேர் போட்டியிட்டு இருந்தனர். இவ்விரு உள்ளுராட்சி மன்றுக்கும் ஒவ்வவொரு கவுன்சிலர்கள் தெரிவு செய்யப்பட்டு இருந்தனர். கிங்ஸ்ரன் அப்ஒன் தேம்ஸ் உள்ளுராட்சி மன்றில் ஆறு தமிழர்கள் போட்டியிட்டு ஒரு தமிழ் கவுன்சிலர் வெற்றி பெற்றிருந்தார். மேட்டன் கவுன்சிலில் மூவர் போட்டியிட்டு கொன்சவேடிவ் கட்சியில் ஒருவர் தெரிவு செய்யப்பட்டார். குரொய்டன் உள்ளுராட்சி மன்றில் 3 தமிழர்கள் போட்டியிட்டு இருந்தனர். இவர்களில் ஒருவர் கவுன்சிலர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். ரெட்பிரிஜ் உள்ளுராட்சிப் பிரிவில் போட்டியிட்ட இரு தமிழர்களில் ஒருவர் கவுன்சிலராகத் தெரிவானார். தமிழ் மக்கள் பெரும்பாலும் வாழாத சவுத்வாக் உள்ளுராட்சி மன்றில் போட்டியிட்ட ஒருவர் கவுன்சிலராகத் தெரிவானார்.

லண்டன் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்களும் அவர்கள் பெற்ற வாக்குகளும்:

Paul Duraisamy Sathianesan  _ _ _ _ _  Labour              3,453
SELVA Mike _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _   Labour               3451
Jeyaranjan, Thavathuray _ _ _ _ _ _  _ Labour               3305    
Kanapathipillai Naheerathan _ _ _ _ _   Labour               2713 
Manoharan Dharmarajah _ _ _ _ _ _ _  Labour               2662
Thayapara Idaikkadar _ _ _ _ _ _ _ _ _Labour               2514
Nizam Alavi Ismail _ _ _ _ _ _  _ _ _ _  Labour               2324
YOGANATHAN Yogan _ _ _ _ _ _ _  _ Liberal Dem      2169
Eliza Packia Devi Mann _ _ _ _ _ _ _ _  Liberal Dem     2069
Sasikala Suresh _ _ _ _ _ _ _ _ _ _ _ _ Labour               1914       
Krishna Suresh _ _ _ _ _ _ _ _ _ _ _ _  Labour              1904
Lohendran Chelliah  _ _ _ _ _ _ _ _ _ _Conservative    1860 
Kairul Kareema Marikar _ _ _ _ _ _ _ _Labour              1831

Thambimuthu Selvaratnam _ _ _ _ _ _  Labour              2216
Murugesu Sivarajah _ _ _ _ _ _ _  _ _ _Liberal Dem      2115
YOGANATHAN Rohan _ _ _ _ _ _ _ _   Liberal Dem     1933       
KUGAN Kamala _ _ _ _ _ _ _ _ _ _ _ _ Liberal Dem     1784                
Sivanantharasa Panchadcharam _ _ _ _ Conservative    1628
Marshel Amutharasan _ _ _ _ _ _ _ _ _ Liberal Dem     1614
Uma Kumaran _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ Labour              1535
EMMANUEL Fabion _ _ _ _ _ _ _ _  _ _ Conservative   1521           
Sockanathan Keitheeswaran _ _ _ _ _ _ Conservative    1437
Shivakuru Selvathurai _ _ _ _ _ _ _ _ _ Conservative    1419
JEYADEVA Selva _ _ _ _ _ _ _ _ _ _ _  Conservative    1418
DEWAN Rajesh Kumar _ _ _ _ _ _ _ _   Christian PA     1299
Moses Rajkumar  _ _ _ _ _ _ _ _ _ _ _  Conservative    1,245
Arujuna SIVANANTHAN _ _ _ _ _ _ _  Conservative    1,244
Sivakumar CHELLIAH _ _ _ _ _ _ _ _   Labour              1224
RATNARAJAN, KarrunaThewi _ _ _ _  Conservative    1074
Nadanakumaran, Jeya _ _ _ _ _ _ _ _ _Conservative    1052
Thaneswaran, Thane  _ _ _ _ _ _ _ _ _ Conservative      962
Duraimurugan Kannan _ _ _ _ _ _ _ _ _Conservative      911
VALLIPURAM Kulendran _ _ _ _ _ _    Liberal Dem       933
Arunasalam Pirapaharan _ _ _ _ _ _ _ _Liberal Dem       794
Sakthivel Karuppiah _ _ _ _ _ _ _ _ _ _Liberal Dem        778
Vasantha Mahadevan _ _ _ _ _ _ _ _ _  Conservative      717
Waran Kanagasundaram _ _ _ _ _ _ _ _ Independent      533
SELLAYAH Dyan _ _ _ _ _ _ _ _ _ _ _ _Labour                474 
JAYASUNDERA Niranjan _ _ _ _ _ _  _ Labour                 371                  
Thivendaram Balaraman _ _ _ _ _ _ _ _ Green                  341
Selvarani Balaraman _ _ _ _ _ _ _ _ _ _ Green                  309
Balakrishnasharma Srikanthan _ _ _ _ _ Green                  260 
Sella Varathalingam Jeyakumar _ _ _ _  ChristianPA         186
Subashini Srikanthan _ _ _ _ _ _ _ _ _ _Green                  184
Mauran Uthayakumar _ _ _ _ _ _ _ _ _ Christian PA        157  
Jayakrishna, Jayarajasingham _ _ _ _ _  ChristianPA         149
Nakkeeran Arasaratnam _ _ _ _ _ _ _ _ Independent       146    
Senan THANABALASINGAM _ _ _ _ _  Socialist Coal’n   104
Danaraj Joseph _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _Christian PA         78

கவுன்சில்களின் அடிப்படையில் தமிழ் வாக்காளர்கள்: 

Brent
Alperton
Murugesu Sivarajah _ _ _ _ _ _ _  _ _ _  Liberal Dem   2115

Preston
Thambimuthu Selvaratnam _ _ _ _ _ _  Labour             2216

Queensbury
Selvarani Balaraman _ _ _ _ _ _ _ _ _   Green               309 
Thivendaram Balaraman _ _ _ _ _ _ _  Green               341  
Kanapathipillai Naheerathan _ _ _ _ _   Labour             2713    Elected

Sudbury
Balakrishnasharma Srikanthan _ _ _ _  Green               260   
Subashini Srikanthan _ _ _ _ _ _ _ _ _  Green              184  

Croydon
Broad Green
SELVA Mike _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ Labour             3451      20.1%     Elected
EMMANUEL Fabion _ _ _ _ _ _ _ _ _ _Conservative      1521       8.9%

West Thornton.
JEYADEVA Selva _ _ _ _ _ _ _ _ _ _   Conservative  1418        7.7% 

Enfield
Edmonton Green Ward
RATNARAJAN, KarrunaThewi _ _ _   Conservative  1074

Greenwich
Middle Park and Sutcliffe
Arujuna SIVANANTHAN _ _ _ _ _ _ _Conservative  1,244

Harrow
Roxbourne
Manoharan Dharmarajah _ _ _ _ _ _ _ Labour            2662       (17.76%)      Elected
Sockanathan Keitheeswaran _ _ _ _ _  Conservative  1437         (9.59%)
Shivakuru Selvathurai _ _ _ _ _ _ _ _  Conservative  1419         (9.47%)

Headstone South
Sasikala Suresh _ _ _ _ _ _ _ _ _ _ _  Labour            1914         (12.68%)     Elected
Mauran Uthayakumar _ _ _ _ _ _ _ _ Christian PA   157           (1.04%)

Queensbury
Nizam Alavi Ismail _ _ _ _ _ _ _ _ _ _Labour           2324         (15.75%)      Elected

Roxeth
Thayapara Idaikkadar _ _ _ _ _ _ _ _ Labour           2514          (16.97%)      Elected

Rayners Lane
Krishna Suresh _ _ _ _ _ _ _ _ _ _ _  Labour            1904           (11.62%)      Elected
Sivanantharasa Panchadcharam _ _   Conservative  1628             (9.94%)
Marshel Amutharasan _ _ _ _ _ _ _  Liberal Dem    1614             (9.85%)
Danaraj Joseph _ _ _ _ _ _ _ _ _ _ _ Christian PA       78             (0.48%)

Headstone North
Sella Varathalingam Jeyakumar _ _  ChristianPA       186             (1.24%)

West Harrow
Kairul Kareema Marikar _ _ _ _ _ _ Labour               1831           (12.81%)       Elected

Pinner South
Uma Kumaran _ _ _ _ _ _ _ _ _ _ _ Labour             1535             (10.00%)

Havering
Emerson Park
Nakkeeran Arasaratnam _ _ _ _ _ Independent       146

Kingston upon Thames

Berrylands
YOGANATHAN Rohan _ _ _ _ _    Liberal Dem       1933         (14%)

Beverley
SELLAYAH Dyan _ _ _ _ _ _ _ _  Labour                  474           (3%)

Coombe Vale
KUGAN Kamala _ _ _ _ _ _ _ _ _ Liberal Dem       1784          (13%)
DEWAN Rajesh Kumar _ _ _ _ _  Christian PA       1299           (1%)

St Mark’s
YOGANATHAN Yogan _ _ _ _ _  Liberal Dem       2169          (15%)      Elected
JAYASUNDERA Niranjan _ _ _ _ Labour                  371            (3%)

Merton
Longthornton
Nadanakumaran Jeya _ _ _ _ _ Conservative      1052 

Cannon Hill
Jayakrishna, Jayarajasingham _  ChristianPA        149
Lohendran Chelliah _ _ _ _ _ _ _Conservative     1860 

Newham
Eastham North
Duraimurugan Kannan _ _ _ _ _ Conservative      911
Vasantha Mahadevan _ _ _ _ _ _Conservative      717
Paul Duraisamy Sathianesan  _ _ Labour             3,453     Elected
Sakthivel Karuppiah _ _ _ _ _ _  Liberal Dem        778

Wall End
Moses Rajkumar  _ _ _ _ _ _ _ _Conservative      1,245
Waran Kanagasundaram _ _ _ _ Independent         533
Arunasalam Pirapaharan _ _ _ _ Liberal Dem         794

Redbridge
Clementswood
Thaneswaran, Thane  _ _ _ _ _ Conservative         962

Newbury   
Jeyaranjan, Thavathuray _ _ _ Labour                   3305      Elected   

Southwark
Riverside
Eliza Packia Devi Mann _ _ _ _Liberal Dem           2069       Elected

Walthamforest
Larkswood
Sivakumar CHELLIAH _ _ _ _ Labour                   1224

Higham Hill
Senan THANABALASINGAM _Socialist Coalition  104

Wandsworth
Tooting
VALLIPURAM Kulendran _ _ _Liberal Dem          933

பொது தேர்தல் – 6 மே 2010 UK: முஹம்மத் எஸ்.ஆர். நிஸ்த்தார்

election.jpgநான்காம் முறையாக தொங்கு பாராளுமன்றம் (hung Parliament) ஒன்றை அமைப்பதுக்கான தேர்தலாகவே இத்தேர்தல் பலராலும் பார்க்கப்படுகின்றது. இதை சரியாக விளங்கிக் கொண்ட, எதிர்கட்சி தலைவர் டேவிட் கமமொரன் (David Cameron) இத்தகைய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி விடவேண்டாம் என வாக்காளர்களை கெஞ்சாக் குறையாக கேட்கிறார். இவரை பொறுத்தவரை தொங்கு பாராளுமன்றம் அல்ல பிரச்சினை. யாருடன் கூட்டு சேர்வதென்பதே இவரை அரித்துக் கொண்டிருக்கும் விடயம். அறுதி பெரும்பான்மை இல்லாத நிலையில், அதாவது 326 ஆசனங்கள் கிடைக்காவிட்டால், ஆகக்கூடிய பெரும்பான்மையில் ஆட்சி செய்வதென்பது சர்க்கஸ்காரர்கள் (circus) கயிற்றில் நடக்குமாப் போல் சாதாரண மனிதன் செய்யும் முயற்சி போன்றது. விழுவது நிச்சயம். எனவே பழமைவாத கட்சி(Conservertive) கேட்பது அறுதி பெரும்பான்மை. ஆனால் கிடைக்கத்தான் வாய்ப்பில்லை.

ஆளும் தொழிற்கட்சியோ (Labour) மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தால் இன்றைய முக்கிய பிரச்சினையான பொருளாதார பிரச்சினையை சீர்செய்து விடுவோம் என்கின்றனர். கோர்டன் பிறவுன் (Gordon Brown) மிகவும் பணிவாக எமக்கு இப்படி சொல்கின்றார், ’13 வருடங்கள் தன் கட்சியால் செய்ய முடியாது போனதை (அல்லது தான் செய்ய எத்தனிக்காத விடயத்தை) அடுத்த ஐந்து வருடத்தில் செய்து முடிப்பாராம்’. மந்திரத்தால் மாங்காய் பழுக்க வைப்பதை அனேகமாக மக்கள் விரும்புவதில்லை. இது அவருக்குப் புரியவில்லை போலும்.

பந்தயத்தில் நம்பிக்கையோடு ஓடும் அடுத்த குதிரை தாராளவாத ஜனநாயக (Liberal Democratic) கட்சி. அதன் தலைவர் நிக் க்லெக்( Nick Clgge ) ஒரு விடயத்தை தெளிவாக சொல்கிறார் (தேசம்நெற்காரர் புலி ஆதரவாளர்களிடம் சொல்வது போல்) ஒளிவு மறைவு வேண்டாம், பொருளாதார பிரச்சினை பொதுபிரச்சினை ஒன்றாக இருந்து பேசுவோம். குடிவரவு பிரச்சினை ஏற்கனவே புரையோடிப்போன பிரச்சினை அதை ஏற்றுக் கொண்டு பரிகாரம் தேடுவோம். அத்தோடு இந்த இரண்டு பெரிய கட்சிகளும் நாட்டை குட்டிச் சுவராக்கிவிட்டனர். நாட்டை என்னிடம் தாருங்கள், பரிகாரம் என்னிடம் உண்டு என்கிறார். மக்கள் குழம்பி போய்விட்டார்கள்.

13 வருடம் உண்மைதான், பிறவுன் என்ன செய்வார் பாவம். இந்த பிளயார் (Blair) அடித்துவிட்டு ஓடி (hit and run) விட்டார். ஆகவே படைகளை ஈராக்கில் இருந்தும், ஆப்கானிஸ்தானிலிருந்தும் இலகுவில் விலக்கிக்கொள்ள முடியாது. அதாவது ராணுவ செலவை கட்டுப்படுத்துவது என்பது யோசிக்கவே முடியாத விடயம். பிறவுனின் கெட்ட காலமோ என்னவோ உலக பொருளாதார சரிவு (economic downturn) வேறு. சின்ன, சின்ன நாடுகளை தூக்கி விடவேண்டாமா என்ன? உலக தலைமைத்துவ நாடுகளில் ஒன்றல்லவா யூ.கே. ஓபாமா கூட தனது எதிரி சீனாவிடம் கடன் வாங்கி அமெரிக்க பொருளாதாரத்தை சீர் செய்தார்தானே என்று மனுசன் கஸ்டப்பட்டு பல நாடுகளிடம் கடன்வாங்கி மற்ற நாடுகளையும் தூக்கிவிட்டு, தன் நாட்டின் பொருளாதாரத்தையும் சீர்செய்து வருகிறார். அப்புறம் ஏன் அவருக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கக்கூடாது என்று மக்கள் யோசிக்கும் போதுதானே இந்த பத்திரிகைகள், குறிப்பாக கார்டியன் (Guardian), தி ஒப்சேவர் (The Observe ) என்பன நிக் க்லெக்குக்கு ஆதரவு கொடி காட்டிவிட்டார்கள்.

லிபரல் டெமொக்ரடிக் கட்சி மெது மெதுவாக வளர்ந்து வரும் கட்சி. இவர்களின் வளர்ச்சி பெடி அஸ்ட்ரோன் (Peddy Astron), சார்ல்ஸ் கெனடி ( Charles Kennedy ) ஆகியோரின் தலைமையில் மிகவும் உறுதியாக மேல் நோக்கிச் சென்றது. இப்போது அறுவடை காலம். நிக் க்லெக்கின் ராசிபலன் இலக்கம் 10ல் கண் வைத்துவிட்டார். இருந்தும் இலக்கம் 10 நிக் க்லெக்கு சற்று பெரியது.

அரசர் 2ம் சார்ல்ஸ்சின் (King Charles II) பரம்பரையில் வந்த நான் பிரதமர் பதவியை கை நழுவவிடுவதா? ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள நினைப்பதில் (TULF போல) என்ன தவறு என்று நேரடியாக கேட்காவிட்டாலும் நாடு குட்டிச் சுவராகிவிட்டது. தொழிற்கட்சியே அதற்கு காரணம். ஐரோப்பிய ஒன்றியம் (European Union) எம்மை சகல வழிகளிலும் கட்டுப்படுத்துகிறது. நாம் என்ன யாருக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்களா? நாட்டில் அதிகரித்துள்ள குற்றச் செயல்களை குறைக்க வேண்டாமா? என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே செல்கிறார் டேவிட் கமரொன். கடைசி 24 மணித்தியாலத்திலும் தூக்கமின்றி பிரச்சார வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இருந்தும் இலக்கம் 10 கை நழுவியே செல்கிறது.

யார் யார் எது செய்தாலும் முடிவு பின்வருமாறு அமையுமென்றே எதிர்பார்க்கப்படுகின்றது. பழைமைவாத கட்சி முதலாவது இடத்துக்கும், இரண்டாம் மூன்றாம் இடங்களுக்கு முறையே லிப்.டெம், தொழிற்கட்சி தள்ளப்படும் அல்லது தொழிற்கட்சி இரண்டாம் இடதுக்கும், லிப்.டெம் மூன்றாம் இடத்துக்கும் இடம் மாறலாம். அல்லது இந்த ஒழுங்கு கூட மாற்றமடைந்தாலும் தாராளவாத ஜனநாயக கட்சியின் இணைவு இல்லாமல் யாரும் இம்முறை ஆட்சி அமைக்க முடியாது என்பதனால் இத் தேர்தலில் லிப். டெம் மிக முக்கியம் இடம் பெறுகிறது.

எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் பொது சேவைகளுக்கான செலவினங்கள் மிகவும் குறைக்கப்படும் என்பதாலும், வரிகள் அதிகரிக்கப்படும் சாத்தியம் மிக அதிகமாகக் காணப்படுவதாலும், நாடு இன்னுமொறு 4, 5 ஆண்டுகளுக்கு மந்த கதியிலேயே பொருளாதாரத்தில் மேல்நோக்கிச் செல்லும் என்பதாலும் இந்த இரண்டு பெரிய கட்சிகளின் கொள்கை விளக்கங்களுக்கு சற்று மாற்றமாக பேசும் லிப்.டெம் எதிவரும் அரசாங்கத்தை தீர்மானிக்கும் அளவுக்கு போதியளவு வாக்குகள் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அரச செலவீனங்கள் தொடர்பான நிக் க்லெக்கின் வாதம், ஆப்கானிஸ்தனில் இருக்கும் ஜக்கிய இராட்சிய படைகளை மீளப் பெறுவதின் மூலமும், ட்ரெய்டன் (Trident missile) அணு ஏவுகணை திட்டத்தை கைவிடுவதின் மூலமும் பெருந்தொகை பணத்தை மீதப்படுத்தலாம் என்பதாகும். அந்த பணத்தை தேசிய சுகாதார சேவைக்கும் (NHS ), கல்வி அபிவிருத்திக்கும் பயன்படுத்தலாம் என்பதும் க்லெக்கின் திடமான வாதாட்டம். அதேபோல் கறுப்பு பொருளாதாரத்திற்கு (black economy)காரணமாக இருக்கும் சட்டபூர்வமற்ற குடிவரவு (illegal immigrants) காரர்களை வெளியே கொண்டு வருவதன் மூலம் அவர்களை நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்ய ஏற்பாடு செய்வதும், இனிமேல் இந்த சட்ட விரோத குடியேற்றகாரர்களை கட்டுப்படுத்த சரியான திட்டமிடலை செய்ய இது பெரிதும் வழிவகுக்கும் என்பதுமாகும். இந்த வாதம் அனேகமாக வாக்காளர் மத்தியில் பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளதை நாம் அலட்சியம் செய்து விட முடியாது. மனிதன் வெளிப்படையாக பேசுகிறார். ஆனால் “வெளிப்படையாக பேசல்” என்ற தன் கொள்கையில் விடாப்பிடியாக இருப்பாரா?, பேசுவதுடன் மாத்திரம் நின்று விடுவாரா? அல்லது செயல்வீரனாக திகழ்வாரா? என்பதுதான் அந்த கேள்விகள்.

நான் எந்த பேயுடனும் சேர்ந்து பணியாற்ற தயங்கமாட்டேன் என்று நிக் க்லெக் கூறினாலும், கொள்கை ரீதியில் பழைமைவாதிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முன்வரமாட்டார். பொதுவாக மாணவர்களின் அபிமானத்தைப் பெற்றுள்ள நிக் க்லெக் தொழிற்கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க தயார் நிலையில் உள்ளார். தொழிற்கட்சியும் வேறு தேர்வு இல்லாமல் அல்லது கொள்கை ரீதீயில் சற்று ஒத்துபோக கூடியவர்கள் என்ற ரீதியில் லிப்.டெம் உடன் சேர்ந்து ஆட்சி அமைக்க தீர்மானித்து விட்டனர்.

இருந்தும் இங்கே ஒரு அரசியல் விளையாட்டு நடைபெறவுள்ளதை யாரும் கண்டுகொள்ளாமல் இருக்கமுடியாது. அதாவது; தொழில் கட்சி மூன்றாம் இடத்தை பெற்று லிப்.டெம் முடன் சேர்ந்து அரசாங்கம் அமைக்க நேரிடும் பட்சத்தில், நிக் க்லெக்கின் முக்கிய மூன்று கோரிக்கைகள் 1. பிரதமர் பதவி, 2. நிதி மந்திரி பதவி (Chancellor of Exchequer), 3. வெளிநாட்டு அமைச்சு பதவி என்பன லிப்.டெம் முக்கு தரப்பட வேண்டும் என்பதாகும். தொழிற்கட்சி இரண்டாம் இடத்தை பெறும் போது நிக் க்லெக்கின் இரண்டு கோரிக்கைகள் 1. நிதி மந்திரி, 2. வெளி நாட்டலுவல்கள் அமைச்சு பதவிகள். இந்த கோரிக்கைகள்தான் தொழிற்கட்சிக்குள் பிரச்சினையை தோற்றுவிக்கப் போகிறது.

தொழிற்கட்சி மூன்றாமிடத்தை பெறும்போது, நிக் க்லெக்கின் கோரிக்கையை ஏற்று ஆட்சியில் தொடர்ந்தும் இருக்க கோர்டன் பிறவுனை வெளியேற்றவும் பலர் தயாராகவுள்ளனர். அவர்களில் மண்டெல்சன் பிரபு ( Lord Mandelson), உதவி பிரதமர் ஹரியட் ஹார்மன் (Harriet Harman ), நீதி அமைச்சர் ஜக் ஸ்ட்ரோ (Jack Strow ), வெளி நாட்டமைச்சர் டேவிட் மிலபண்ட் (David Milaband ) ஆகியோர் முக்கியமானவராவர். ஒரு வேளை க்லெக்கின் கோரிக்கை நிறைவேறலாம். அது அவர் கட்சி பெறும் ஆசனங்களைப் பொறுத்தது. அப்படியானால் கோர்டன் பிறவுனின் நிலை? அம்போ.

ஆனால் தொழிற்கட்சி முதலாம் அல்லது இரண்டாம் இடத்திற்கு வரும் போது, லிப்.டெம் முக்கு நிதிஅமைச்சு பதவி கொடுத்தாவது அக்கட்சியை தம்பக்கம் வைத்திருக்க வேண்டிய தேவை தொழிற்கட்சிக்குண்டு. அதைவிட அதிகம் எதிர்பார்ப்பது க்லெக்குக் ஆபத்தாக முடியாவிட்டாலும் லிப்.டெம் மின் நிலைமையை கஸ்டத்துக்குள்ளாக்கும் அபாயம் உள்ளது. இருந்தும் ஆளும்கட்சி ஆசனமா அல்லது எதிர்கட்சி ஆசனமா என்ற கேள்விக்கு முகம்கொடுக்க நேரிடும்போது தொழிற்கட்சி கோபத்துடனும், சலிப்புடனும் லிப்.டெம் மை அரவணைத்தே செல்லும். நிக் க்லெக் இந்த சந்தர்ப்பத்தை தவற விடமாட்டார் என்றே தெரிகிறது. எனவே பழைமைவாத கட்சி ஆட்சிக்கு வருவதை தவிர்க்கும் வகையில் தொழிற்கட்சி, லிப்.டெம் கூட்டணி தவிர்க்கப்படலாகாது. ஏற்பாடுகளும் அதை நோக்கியே போகின்றன.

ஆக தொழிற்கட்சிக்கு எப்படியாவது ஆட்சியை தக்கவைக்க வேண்டும், பழைமைவாத கட்சியை பொறுத்தவரை 13 வருடங்களுக்குப் பின்னும் ஆட்சியை கைப்பற்றவில்லை என்றால் அந்த கட்சியின் மீதான நம்பிக்கையீனம் அதிகரிக்கும், கமெரோனின் மாணவபருவ கனவு சுக்கு நூறாகிவிடும். ஆனால் க்லெக்குக்கோ தனது கோரிக்கைகளை எந்த அளவுக்கு அதிகமாக அடையலாம் என்பதை தவிர வேறு பிரச்சினைகள் இருப்பதாக தெரியவில்லை. ஏனெனில் அவர்தான் அடுத்த அரசாங்கத்தை தீர்மானிப்பவர் (king maker) .

யார் ஆட்சிக்கு வரினும் எதிர்வரும் ஐந்து ஆண்டுகள் கடினமானவை. ஆட்சியாளர்களுக்கு மாத்திரமல்ல, பொது மக்களுக்குமே. சமூகநல உதவியில் வாழ்வோர் இப்போதே தொழில் தேட ஆரம்பிக்க வேண்டும். பிரஜா உரிமை பெற விரும்புவோர் நல்ல பிள்ளைகளாய் இருக்கப் பழக வேண்டும். ஆங்கிலம் தெரியாதோர் பிரஜாவுரிமை பற்றி யோசிக்கத் தேவையே இல்லை. கிட்டடியில் ஓய்வூதியம் பெற யோசித்தோர் உடனடியாக யோசினையை மாற்றி 70 வயது வரையினும் மாரடிக்க வேண்டும். வரி செலுத்துவோர் வயிற்றை சற்று இறுக்கமாக கட்டிக்கொள்ள வேண்டும். மொத்தத்தில் எல்லோரும் சற்று அனுரிசத்து செல்லவேண்டும்.

ஐஸ்லாந்து, கிரீஸ் நிலைமைக்கு நாட்டை இட்டுச் செல்லாது ஏனைய ஐரோப்பிய நாடுகளுக் சமமாக யூ.கே யை கட்டி எழுப்பவேண்டியது அடுத்த கூட்டரசாங்கத்தின் பொறுப்பு மிக்க பணி. செய்வார்கள் என நம்புவோம்.

முஹம்மத் எஸ்.ஆர். நிஸ்த்தார்.

மே 6 உள்ளுராட்சி கவுன்சில்களுக்கான தேர்தலில் பல தமிழர்கள் களமிறங்கி உள்ளனர்! : த ஜெயபாலன்

Mayor_and_Cllr_Pongal_14Jan10மே 6 பிரித்தானிய பாராளுமன்றத்துக்கான தேர்தலுடன் லண்டனில் உள்ள உள்ளுராட்சிக் கவுன்சில்களுக்கான தேர்தல்களும் நடைபெறுகின்றது. லண்டன் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தமிழ் வாக்காளர்களின் எண்ணிக்கை 100 000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்ட போதும் விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழ் கவுன்சிலர்களே தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். லண்டன் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தமிழ் மக்கள் சரியான தேர்தல் பிரிவுகளை இனம்கண்டு போட்டியிட்டு தமிழ் மக்களை தமக்க்கு முழுமையாக வாக்களிக்கச் செய்ய முடிந்தால் 60க்கும் மேற்பட்ட கவுன்சிலர்களை வெற்றி பெறச் செய்ய முடியும் என மதிப்பிடப்படுகின்றது. ஆனால் ஒரே தேர்தல் பிரிவில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டு தமிழர்கள் தெரிவு செய்யப்படுவதை தடுக்கின்ற முயற்சிகளே தற்போது மேற்கொள்ளப்படுகின்றது. அதுவும் தமிழ் தேசியத்தின் பெயரால் மேற்கொள்ளப்படுகின்றது.

இம்முறை நியூஹாமில் உள்ள வோல் என்ட், ஈஸ்ற்ஹாம் நோத் ஆகிய இரு தேர்தல் பிரிவுகளில் 7 பேர் போட்டியிடுகின்றனர். நியூஹாம் பகுதியின் ஒரே தமிழ் கவுன்சிலர் போல் சத்தியநேசன் முதன் முதலில் வெற்றி பெற்ற வோல் என்ட் தேர்தல் பிரிவில் . வரதீஸ்வரன் கனகசுந்தரம் சுயேட்சையாகப் போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து லிபிரல் டெமொகிரட் கட்சி சார்பில் பிரபாகரன் கொன்சவேடிவ் கட்சி சார்பில் ராஜ்குமார் ஆகிய இரு தமிழர்கள் போட்டியிடுகின்றனர்.

நியூஹாமின் மற்றுமொரு தேர்தல் பிரிவான ஈஸ்ஹாம் நோத்தில் மூன்று தடவைகள் கவுன்சிலராக தெரிவு செய்யப்பட்ட போல் சத்தியநேசன் தொழிற் கட்சியின் சார்பில் நான்காவது தடவையும் போட்டியிடுகின்றார். இவருக்குப் போட்டியாக வசந்தா மாதவன் துரைக் கண்ணன் ஆகிய இருவர் கொன்சவேடிவ் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றனர். சக்திவேல் லிபிரல் டெமொகிரட் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றார்.

60 கவுன்சிலர்களைக் கொண்ட நியூஹாம் கவுன்சிலில் 54 கவுன்சிலர்கள் தொழிற்கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர்களில் போல் சத்தியநேசன் ஒருவரே தமிழ் கவுன்சிலராக உள்ளார். லண்டனில் தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற நியூஹாம் கவுன்சிலில் கணிசமான தமிழர்கள் வாழ்கின்றனர். இங்கு ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் கவுன்சிலர்கள் வருவதற்கு வாய்ப்பு இருந்த போதும் ஒன்றுக்கு மேற்பட்ட தமிழர்கள் ஒரே தேர்தல் பிரிவில் நிற்பதால் தமிழ் வாக்குகள் இங்கும் பிளவடைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

குறிப்பாக தமிழ் தேசியத்தின் பெயரில் அணிதிரண்ட ஒரு பிரிவினர் தற்போது ஈஸ்ற்ஹாமில் கொன்சவேடிவ் கட்சிக்கு அலுவலகம் ஒன்றைத் திறந்து ஈஸ்ற்ஹாமில் உள்ள ஒரே தமிழ் கவுன்சிலரான போல் சத்தியநேசனை தோற்கடிப்பதில் குறியாக உள்ளனர். இத்தமிழ் வேட்பாளர்களுக்கு இடையேயான போட்டி கட்சி கொள்கை அடிப்படையில் இல்லாமல் தனிப்பட்ட தாக்குதலாக நடாத்தப்படுகின்றது. ஏற்கனவே கவுன்சிலராக இருந்த போல் சத்தியநேசனுக்கு எதிராக கொலைப் பயமுறுத்தல் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்ததும் தெரிந்ததே.

தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் மக்களுக்கான தனது சேவை என்றும் போல் தொடரும் எனத் தெரிவித்தார் போல் சத்தியநேசன். உள்ளாட்சித் தேர்தலிலும் நாடு தழுவிய ரீதியிலும் தொழிற்கட்சியின் நீண்ட கால ஆட்சி மீது மக்களுக்கு இயல்பான சலிப்பு ஏற்பட்டுள்ள நிலையிலும் தமது பகுதியில் தனது வாக்கு வங்கி பலமாகவே இருப்பதாகவும் அவர் தேசம்நெற்க்கு நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

கிழக்கு லண்டனைச் சேர்ந்த நியூஹாம் கவுன்சிலின் அயல் கவுன்சில்களான வோல்தம்ஸ்ரோ கவுன்சிலிலும் ரெட்பிரிஜ் கவுன்சிலிலும் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இப்பகுதிகளில் தமிழ் வேட்பாளர்கள் ஒரே தேர்தல் பிரிவில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வோல்தம்ஸ்ரோவில் தொழிற்சங்கமும் சோசலிஸ் பார்ட்டியும் இணைந்து போட்டியிடுகின்றனர். தனபாலசிங்கம் உதயசேனன் வோல்தம்ஸ்ரோ ஹயம்ஹில் தேர்தல் பிரிவில் போட்டியிடுகின்றார். உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றவர்களில் உதயசேனனே இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது. இடதுசாரிக் கருத்துக்களில் நின்று தொடர்ச்சியான உள்ளுர்ப் போராட்டங்களில் இவர் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ரேட்பிரிஜ் கவுன்சிலில் தொழிற்கட்சி சார்பில் தவத்துரை ஜெயரஞ்சன் நியூபரி தேர்தல் பிரிவிலும் கௌரி என்பவர் கிலேஹோல் தேர்தல் பிரிவிலும் போட்டியிடுகின்றனர்.

மேலும் போல் சத்தியநேசனைத் தவிரவும் கடந்த ஆட்சிக் காலத்தில் கவுன்சிலாகத் தெரிவு செய்யப்பட்ட எலிசா மஅன் (லிப் டெம்) – சதேக் கவுன்சில், யோகநாதன் மற்றும் அவரது மகன் (லிப் டெம்) – கிங்ஸ்ரன் கவுன்சில், சசிகலா (லேபர்) தயாஇடைக்காடர் (லேபர்), மனோ தர்மராஜா (லேபர்) ஆகிய மூவரும் ஹரோ கவுன்சில் – இவர்களும் இந்த உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றனர். கடந்த ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறாத பலரும் இத்தடைவ மீண்டும் களமிறங்கி உள்ளனர். இவர்களுடன் உதயசேனன் போன்ற புதுமுகங்களும் இத்தேர்தலில் களமிறங்கி உள்ளனர்.

மே 2ல் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழப் பாராளுமன்றத் தேர்தலில் வாக்குக் கேட்டு வீடுகளைத் தட்டியவர்களை சிலர் அவர்கள் பிரித்தானிய பாராளுமன்றத்துக்கான தேர்தலில் போட்டியிடுவதாக அல்லது உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதாகக் குழம்பிய சில சம்பவங்களும் நடந்துள்ளது. இலங்கைத் தேர்தல் போன்று பிரித்தானியாவில் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத் தேர்தலிலும் மோசடிகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் வெளிவந்து சில பகுதிகளில் மீளவும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சில ஆயிரம் வாக்காளர்கள் ஏகபோக பிரதிநிதித்துவக் கொள்ளை அடிப்படையில் விளையாட்டாக நடத்திய தேர்தலிலேயே மோசடி செய்து வெல்வதற்கு சிலர் முயற்சித்துள்ளனர் என்பது வேடிக்கையானதாக அமைந்துள்ளது. பிரித்தானியாவில் நடைபெறவுள்ள தேர்தல்கள் முன்பு குறிப்பிட்டுள்ள தேர்தல்களிலும் பார்க்க நியாயமான முறையில் நடத்தப்படும் என்பதில் ஐயம்கொள்ள வேண்டியதில்லை.