ஜெயபாலன் த

ஜெயபாலன் த

மேனனின் இலங்கை வருகையும் அவரது அரசியல் பார்வையும்

sivashankar.jpgஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் விரைவில் இலங்கை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று (ஜனவரி 31) தமிழ் நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியைச் சந்தித்த அவருடன் வன்னி முகாம்களில் உள்ள மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பாக உரையாடியதாக மேனன் செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

வன்னி மக்களின் மீள்குடியேற்றத்திற்கு இந்தியா உதவி வரவதாகவும் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாக அனைத்தத் தரப்பினரும் உடன்படக் கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்படும் எனவும் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

சிவசங்கர் மேனன் மகிந்த ராஜபக்ச சகோதரர்களின் அரசுடன் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ள இந்திய ராஜதந்திரி. வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தேசியக் கட்சிகளே பலமடைய வேண்டும் என்ற எண்ணப்பாட்டை சிவசங்கர் மேனன் கொண்டிருந்ததாக தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவித்து இருந்தன. சிறுபான்மை தேசிய இனங்களின் அரசியலைப் பலவீனப்படுத்தி இலங்கைத் தேசிய அரசியலை முன்னிலைப்படுத்துகின்ற ஒரு போக்கை சிவசங்கர் மேனன் ஆதரிப்பதாகவும் தேசம்நெற்க்கு கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

நாம் இந்தியர் என்பது போல் நாம் இலங்கையர் என்ற பொது அரசியல் அடையாளத்தை நோக்கி இலங்கை நகர்வதையே சிவசங்கர் மேனன் போன்றவர்கள் விலியுறுத்துவதாக தொரியவருகின்றது.

பாராளுமன்றத்துக்கான தேர்தல் ஏப்ரல் முற்பகுதியில்! தமிழ் பகுதிகளிலும் விறுவிறுப்பான தேர்தல் இடம்பெறும்!!

இலங்கைப் பாராளுமன்றத்துக்கான தேர்தல் ஏப்ரல் மற்பகுதியில் பெரும்பாலும் ஏப்ரல் 9ல் நடைபெறும் என தேசம்நெற்க்குத் தெரியவருகின்றது. இது தொடர்பான அறிவித்தல்கள் பெப்ரவரி 5 அல்லது 9ம் திகதிகளில் வெளியாகலாம் எனவும் தெரியவருகின்றது.

உலகின் மிகப்பெரும் அமைச்சரவையைக் கொண்ட சிறிய நாடுகளில் ஒன்றான இலங்கையின் தற்போதைய பாராளுமன்றத்தின் காலம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் முடிவடையவுள்ளது.

பாராளுமன்றத் தேர்தலுக்கான பொது வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் கட்சிகள் ஏற்கனவே தீவிரமாக ஈடுபட்டு உள்ளன.

இத்தேர்தல்கள் தமிழ் மக்களுக்கு குறிப்பிடத்தக்க அரசியல் தீர்வு எதனையும் முன்வைக்கமாட்டாது போனாலும் தமிழ் அரசியல் தலைமைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற தேர்தலாக இது அமைய உள்ளது. அதனால் இத்தேர்தல் தமிழ் பகுதிகளிலும் மிகவும் விறுவிறுப்பாகவே அமைய உள்ளது.

இலங்கையின் 6வது ஜனாதிபதியாக மீண்டும் மகிந்த ராஜபக்ச : த ஜெயபாலன்

MR_Posters இலங்கையின் 6வது ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாவது உறுதியாகி வருகின்றது. ஏற்கனவே தேசம்நெற் இணையத்தில் எதிர்வு கூறப்பட்டது போல தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே மீண்டும் ஆட்சிபீடம் ஏறவுள்ளார். யாழ்ப்பாண வாக்காளர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாகவே இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் அமையும் என்பது மீண்டும் ஒரு தடவை நிருபணமாகி உள்ளது.

இலங்கை நேரப்படி காலை ஆறுமணி வரை வெளியான முடிவுகளில்  மகிந்த ராஜபக்ச 60 வீத வாக்குகளைப்பெற்று முன்னணியில் உள்ளார். இரண்டாவது நிலையில் உள்ள ஜெனரல் சரத் பொன்சேகா 22 வீத வாக்குகளையே பெற்றுள்ளார்.

வெளியான தபால் வாக்குகளிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே முன்னணியில் உள்ளார்.

இதுவரை வெளியான முடிவுகளின் படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார்.

தேர்தல் – 70 வீதமான வாக்குகள் பதிவு :

ஜனவரி 26 இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களே தங்கள் வாக்குகளைச் செலுத்துவதற்கான நடைமுறையைக் கொண்டிருக்கவில்லை. சராசரியாக 70 வீதமான வாக்குப் பதிவுகளுடன் ஒப்பீட்டளவில் குறைந்த அளவு வன்முறையுடன் இடம்பெற்றது. ஆனால் எதிர் பார்க்கப்பட்டது போலவே தமிழ் பகுதிகளில் வாக்குப் பதிவுகள் மந்தமாகவே இடம்பெற்றுள்ளது.

தேர்தல் ஜனவரி 26 காலை ஏழு மணிக்கு ஆரம்பிப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பாக யாழ்ப்பாணத்தில் 13 இடங்களில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றன. இக்குண்டு வெடிப்புச் சம்பவங்கள் குறிப்பிடத்தக்க பாதிப்புக்களை ஏற்படுத்தப்படாத போதும் யாழ் மக்கள் மத்தியில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது.

இன்றைய தேர்தலில் பிரதான வேட்பாளரான சரத்பொன்சேகா தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலையில் காணப்பட்டார். தேர்தலில் ஒருவர் வாக்களிக்க முடியாது இருப்பது அவர் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்ப்பதற்கான காரணமாக அமையாது என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு வேட்பாளரான விக்கிரமபாகு கருணாரட்ண வாக்களிக்க வந்த போது தனது அடையாளத்தை உறுதிப்படுத்தும் சான்றுகள் எதனையும் கொண்டிருக்கவில்லை. அதனால் அவர் தேர்தல் ஆணையாளரின் விசேட அனுமதியின் கீழ் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் 14 088 500 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். கடந்த தேர்தலைவிட இத்தேர்தலில் 761340 வாக்காளர்கள் புதிதாக வாக்களிப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டனர். மொத்த வாக்காளர்களில் சராசரியாக 70 வீதமானவர்கள் வாக்களித்து உள்ளனர். தமிழ் பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்:

Jaffna  721,359
Vanni 266,975
Batticaloa 333,644
Digamadulla 420,835
Trincomalee 241,133

தமிழ் வாக்காளர்களின் முக்கிய மாவட்டமான யாழ் மாவட்டத்தில் குறைந்தளவு வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு 21 வீதமான வாக்குகளே பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் தேர்தலை பகிஸ்கரிக்காமல் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவளிக்குமாறு பிரச்சாரம் செய்ததிருந்த போதும் தமிழ் வாக்காளர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை நிராகரித்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத்பொன்சேகாவை ஆதரித்த போதும் தமிழ் மக்கள் வாக்களிப்பை பெரும்பாலும் நிராகரித்துள்ளனர்.  

2010 ஜனவரி 27ல் இலங்கையின் 6வது ஜனாதிபதி ஜெனரல் சரத் பொன்சேகாவா? : த ஜெயபாலன்

MR_Postersஜனவரி 26ல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இரு பிரதான வேட்பாளர்களில் எவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார் என்பது பல லட்ச ரூபாய்களுக்கான கேள்வியாக உள்ளது. இரு வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவது தற்போது ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது.  2005 நவம்பர் தேர்தலுக்குப் பின்னான சில மாதங்களுக்கு உள்ளாகவே மாவிலாறு அணையைத் தடுத்து வலிந்த யுத்தத்திற்கு அழைப்பு விட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் 2009 நடுப்பகுதியில் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் 2010 தேர்தல் இடம்பெறுகின்றது. 1982 முதல் 2005 வரை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ் மக்கள் வாக்களித்த முறையைப் பார்க்கும் போது பின்வரும் விடயங்களை அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.

1982_P_Election_SL , 1988_P_Election_SL , 1994_P_Election_SL , 1999_P_Election_SL , 2005_P_Election_SL

1. யாழ்ப்பாண மக்கள் பெரும்பாலும் ஜனாதிபதித் தேர்தலில் மிகக்குறைந்த வீதமாகவே வாக்களித்து உள்ளனர். 1982 தேர்தலிலேயே ஆகக் கூடுதலாக 50 வீதத்திற்கும் சற்றுக் குறைவாக வாக்களித்து உள்ளனர். அதன் பின்னர் இடம்பெற்ற தேர்தல்களில் 1988, 1999 தேர்தல்களில் 20 வீதமானவர்களே வாக்களித்து உள்ளனர். 1994ல் இடம்பெற்ற தேர்தலில் 3 வீதமும் 2005 தேர்தலில் ஒரு வீதமானவர்களுமே வாக்களித்துள்ளனர்.

1982  தேர்தல் தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றை நிர்ணயித்த மிக முக்கியமான காலத்தில் நடந்த மிக முக்கியமான ஜனாதிபதித் தேர்தல். மிக மோசமான இனவாதத்தை கக்கிக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அளிக்கப்பட்ட வாக்குகளில் 20 வீதத்தை தக்க வைத்துக் கொண்டது. 35 வீதமான வாக்குகள் சிறிலங்கா சுதத்திரக் கட்சிக்கும் 40 வீதமான வாக்குகள் தமிழ் கொங்கிரஸிற்கும் கிடைத்தது.

இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இலங்கையில் திட்டமிட்ட முறையில் இன ஒடுக்குமுறையை ஸ்தாபனமயப்படுத்தியது ஐக்கிய தேசியக் கட்சி. சிங்களவனின் முதுகுத் தோலில் செருப்புத் தைப்போம் போன்ற வீர வசனங்களைக் கக்கிக் கொண்டிருந்த தமிழீழக் கோரிக்கையை முன் வைத்த தமிழர் விடுதலைக் கூட்டணி அன்றும் ஐக்கிய தேசியக் கட்சியை நிராகரிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்டுக் கொள்ளவில்லை. மாறாகத் தேர்தல் முடிவுவரை மௌனமாக இருந்துவிட்டு தேர்தலுக்கு அண்மையாக விடுமுறையில் வெளிநாடு சென்றனர். தேர்தலுக்கு முதல் நாள் வெளியான பத்திரிகைச் செய்தி தமிழர் விடுதலைக் கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப்பதாக தெரிவித்தது. தேர்தலுக்குப் பின் நாடு திரும்பியவர்கள் அத்தவறான செய்திக்கு எதிராக சட்டநடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எடுக்கவும் முடியவில்லை. ஏனென்றால் அதுவொரு திட்டமிட்ட தவறு.

2. தமிழ் பகுதிகளில் வாக்களிக்கப்பட்ட முறையைப் பார்க்கையில் யாழ்ப்பாணத்தில் வாக்களிக்கப்பட்ட முறை வடக்கு கிழக்கின் ஏனைய பகுதிகளில் வாக்களிக்கப்பட்ட முறையுடன் ஒத்திருக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தல்களில் யாழ்ப்பாண மக்கள் கூடுதலாக ஆதரவு தெரிவித்த வேட்பாளருக்கு அல்லாமல் அடுத்த வேட்பாளருக்கே வடக்கு கிழக்கின் ஏனைய பகுதிகளில் வாக்களிக்கப்பட்டு உள்ளது.

1991 வரை யாழ்ப்பாணம், வன்னி தேர்தல் தொகுதிகள் சிறுதொகையான முஸ்லீம் மக்களைக் கொண்டிருந்தாலும் அவற்றை ஒற்றையினச் சமூகமாகவே பார்க்க முடியும். மட்டக்களப்பு தமிழ் – முஸ்லீம் சமூகங்களைக் கொண்ட ஒரு தேர்தல் தொகுதியாக உள்ளது. திருகோணமலை பெரும்பாலும் தமிழ் – முஸ்லீம் – சிங்கள இனங்கள் வாழுகின்ற மூவினங்களின் தேர்தல் தொகுதியாக உள்ளது. திகாமடுல்ல சிங்கள – முஸ்லீம் சமூகங்களைக் கொண்ட தேர்தல் தொகுதியாக உள்ளது. இவ்வகையான இனப்பரம்பலின் பின்னணியிலேயே ஜனாதிபதித் தேர்தல் நோக்கப்படும்.

யாழ்ப்பாணம் தவிர்ந்த வடக்கு, கிழக்கின் ஏனைய பகுதிகளில் மக்கள் வேறுபட்ட முறையில் வாக்களித்து இருப்பது ஓரளவு அப்பகுதிகளின் இனப்பரம்பலுடன் தொடர்புபட்டு இருந்தாலும் குறிப்பாக வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்கள் யாழ்ப்பாணத்தைப் போன்ற தமிழ் மக்கள் செல்வாக்குள்ள தேர்தல் தொகுதிகள். அப்படி இருந்தும் யாழ்ப்பாணத்தில் வாக்களிக்கப்பட்ட முறையில் இருந்து வன்னி மட்டக்களப்பு தேர்தல் தொகுதிகளில் வாக்களிக்கப்பட்ட முறை வேறுபட்டு இருப்பது மாறுபட்ட அரசியல் பார்வையை வெளிப்படுத்தி உள்ளது.

1982, 1988, 1999 ஆகிய மூன்று ஜனாதிபதித் தேர்தல்களிலும் 20 வீதத்திற்கும் அதிகமாக தமிழ் மக்கள் வாக்களிப்பில் கலந்துகொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்தில் மட்டும் 1999ல் 19.18 வீதமான மக்களே வாக்களித்து இருந்தனர். 1994, 2005 ஜனாதிபதித் தேர்தல்களின் போது யாழ்ப்பாணத்தில் முறையே 2.97 வீதமும் 1.21 வீதமும் ஆனவர்களே வாக்களித்து இருந்ததால் அத்தரவுகளை ஒப்பீட்டுக்கு பயன்படுத்துவதைத் தவிர்த்து உள்ளேன்.

1982, 1988 ஜனாதிபதித் தேர்தல்களின் போது யாழ்ப்பாணத்தில் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியைவிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கூடுதலான வாக்குகளைச் செலுத்தி இருந்தனர்.

1982ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியைவிட யாழ்ப்பாணத்தில் 15 வீதமான வாக்குகளை அதிகம் பெற்றிருந்தது. ஆனால் வடக்கு கிழக்கின் ஏனைய தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைவிட 15 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தது.

1988ல் இந்த முரண்பாடு இன்னும் அதிகமானதாகக் காணப்பட்டது. யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியைவிட 8 வீதமான வாக்குகளை அதிகம் பெற்றுக் கொள்ள வன்னி, மட்டக்களப்பு தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைவிட 30 வீதமான வாக்குகளை அதிகம் பெற்றுக்கொண்டது.

1999ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியைவிட 3 வீதம் அதிக வாக்குகளை யாழ்ப்பாணத்தில் பெற்றுக் கொண்டது. ஆனால் வன்னி மட்டக்களப்பு தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைவிட முறையே 45 வீதமும் 25 வீதமும் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுதந்திரமாக இடம்பெற்ற இத்தேர்தல்கள் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் தெரிவில் இருந்த வேற்றுமையை வெளிப்படுத்தி நிற்கின்றது.

3. யாழ்ப்பாண வாக்காளர்களுக்கும் தென்னிலங்கை வாக்காளர்களுக்கும் இடையேயும் ஒரு முரண்நகையான உறவுள்ளது. யாழ்பாண வாக்காளர்களின் தெரிவுக்கு மாறாகவே இலங்கையின் அரசுத் தலைவர் தெரிவு செய்யப்பட்டு உள்ளார். 1982, 1988 ஜனாதிபதித் தேர்தலின் போது யாழ்ப்பாண வாக்காளர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரை ஆதரித்த போது ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரே ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஆனால் 1994இல் யாழ்ப்பாணத்தில் குறைந்தளவு வீதத்தினரே வாக்களித்திருந்த போதும் சமாதானத்தின் பெயரில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளருக்கு 95 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சந்திரிகா குமாரதுங்க யாழ் வாக்காளர்களாலும் தென்னிலங்கை வாக்காளர்களாலும் சமாதானப் புறாவாகத் தெரிவு செய்யப்பட்டார்.

1999ல் யாழ் வாக்காளர்கள் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களுக்கு தெளிவான சமிஞ்சையை வழங்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி 43 வீதமான வாக்குகளையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 46 வீத வாக்குகளையும் பெற்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சந்திரிகா குமாரதுங்க இரண்டாவது தடவையாக ஜனாதிபதியானார்.

2005 தேர்தலில் யாழ்ப்பாண வாக்காளர்களுடைய விருப்பத்திற்கு மாறாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியானார். இத்தேர்தலில் தமிழ் மக்களுடைய வாக்களிக்கும் உரிமையை தமிழீழ விடுதலைப் புலிகள் பலவந்தமாகத் தடுத்தமையினால் தமிழ் மக்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. அவர்கள் சுதந்திரமாக தங்கள் வாக்குகளை அளிக்க அனுமதிக்கப்பட்டு இருந்தால் அன்று மகிந்த ராஜபக்ச தோல்வி அடைந்திருக்கலாம்.

மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரத்துடன் யாழ்  – சிங்கள வாக்காளர்களுக்கு பொதுவாக இல்லாத தேர்தல் விஞ்ஞாபனத்துடன் நடத்தப்பட்ட முதல் இரு ஜனாதிபதித் தேர்தல்களும் யாழ்  – சிங்கள வாக்காளர்களின் தெரிவில் பாரிய வேறுபாட்டைக் காட்டி நிற்கின்றன. யாழ் வாக்காளர்களுடைய தெரிவுக்கு மாறாகவே இலங்கையின் ஜனாதிபதியை இலங்கையர்கள் தெரிவு செய்துள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ் பகுதிகளைப் பொறுத்தவரை 2010 தேர்தலுடன் ஓரளவு ஒப்பிடக் கூடிய தேர்தலாக 1982 ஜனாதிபதித் தேர்தலை எடுத்துக் கொள்ள முடியும். பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தமிழ் பகுதிகளுக்கு விஜயம் செய்வது, தமிழ் மக்களுடைய நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக வெளியிடப்படும் அறிக்கைகள், தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட தமிழ் ஆயுதக் குழுக்கள் பலவீனப்பட்டு உள்ள நிலைமை, தமிழ் வேட்பாளர் ஒருவர் போட்டியிடுவது என்பன இத்தேர்தலை 1982 தேர்தலுடன் ஒப்பிடக் கூடிய நிலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 1982ல் தமிழர் விடுதலைக் கூட்டணி ஜிஜி பொன்னம்பலத்தை ஆதரிக்கவில்லை. அதே போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம் கெ சிவாஜிலிங்கத்தை ஆதரிக்கவில்லை. 1982 ஜனாதிபதித் தேர்தல் போன்று மும்முனைகளில் தமிழ் பகுதிகளின் வாக்கு பதியப்படும். ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக் கூட்டு, தமிழ் வேட்பாளர் என வாக்குகள் செலுத்தப்படும்.

இந்தப் பின்னணியிலும் கடந்த கால தேர்தல் முடிவுகளில் இருந்தும் பின்வரும் முடிவுக்கு வர முடியும். ஆனால் இது முடிந்த முடிவாக அமைய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
1. 1982 தேர்தலைப் போன்று 2010 தேர்தலிலும் தமிழ் மக்களுடைய வாக்குகள் மும்முனைகளில் செலுத்தப்படும்.
2. தமிழ் வேட்பாளரான எம் கெ சிவாஜிலிங்கம் கணிசமான தமிழ் வாக்குகளைப் பெறுவார். ஆனால் அவரது வாக்குகள் ஜனாதிபதித் தெரிவுக்காக மற்றுமொரு வாக்குக் கணக்கெடுப்பை ஏற்படுத்தும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே.
3. இரு பிரதான வேட்பாளர்களில் யாழ்ப்பாணத்தவர்கள் மத்தியில் பொன்சேகா விருப்பத்திற்கு உரியவராக உள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அவரை வெளிப்படையாக ஆதரிக்கின்றது.
4. யாழ்ப்பாணத்தவர்களின் அரசியல் தெரிவில் இருந்து மாறுபட்ட தெரிவையே வடக்கு கிழக்கின் ஏனைய பாகங்களில் உள்ளவர்கள் மேற்கொள்வதால் வடக்கு கிழக்கின் ஏனைய பாகங்களில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான நிலை இருக்கும்.
5. யாழ்ப்பாணத்தவர்களின் தெரிவுக்கு மாறாகவே இலங்கையின் ஜனாதிபதி வெற்றி பெற்றிருப்பதால் 2010 ஜனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் பெரும்பான்மை வாக்குகள் ஜெனரல் பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்டால் அவர் நாட்டின் ஜனாதிபதியாவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.

கடந்தகால தேர்தல்களில் தமிழ் மக்கள் வாக்களித்த முறையைக் கீழுள்ள இணைப்புகளில் காணலாம்:

1982_P_Election_SL

1988_P_Election_SL

1994_P_Election_SL

1999_P_Election_SL

2005_P_Election_SL

”சிவாஜிலிங்கம், சிறிகாந்தா அமைப்பில் இருந்து நீக்கப்பட்டது என வெளியான செய்தி மோசடியானது” ரெலோ தலைவர்

Selvam Adaikalanathan TNA_TELOஜனாதிபதித் தேர்தலுக்கான நாட்கள் அண்மிக்க அண்மிக்க தேர்தல் பிரச்சாரங்கள் சேறடிப்புப் பிரச்சாரங்களாகவும் மாறி வருகின்றது. இரு பிரதான வேட்பாளர்களும் தங்கள் கொள்கையினதும் நன்மதிப்பின் அடிப்படையில் வாக்கு கேட்பதற்குப் பதிலாக மற்றவரின் பலவீனத்திலும் மற்றவரை குற்றம்சாட்டுவதன் மூலமும் தங்களைப் பலப்படுத்த முயல்கின்றனர். இந்த சேறடிப்புப் போட்டியில் தமிழ் ஊடகங்களும் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன. இதன் ஒரு வெளிப்பாடாக சுயேட்சையாகத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம் கெ சிவாஜிலிங்கம் அவர் அங்கம் வகித்த ரெலோ அமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மோசடியான செய்தி பரவலாக வெளியிடப்பட்டுள்ளது.

‘தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் மற்றும் ஸ்ரீகாந்தா ஆகியோர் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் செயலளார் பிரசன்னா ஆகியோர் கையொப்பமிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்’ என அச்செய்திகள் தெரிவிக்கின்றன. ‘குறித்த இருவரும் கட்சியின் அனைத்து பதவி நிலைகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்’ என்றும் அச்செய்தி தெரிவிக்கின்றது. இச்செய்தி கொழும்பில் இருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகையொன்றிலும் அதனைத் தொடர்ந்து இணைய ஊடகங்களிலும் பிரித்தானியத் தமிழ் தொலைக்காட்சி ஒன்றிலும் வெளியிடப்பட்டு உள்ளது.

‘கட்சியின் நிலைப்பாட்டிற்கு முரணாக சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடத் தீர்மானித்தமை தொடர்பில் அவர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவு வழங்கியமை காரணமாக ஸ்ரீகாந்தா கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்’ என்றும் அச்செயிதியில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பெரும்பாலும் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கும் இந்த ஊடகங்கள் எம் கெ சிவாஜிலிங்கத்திற்கு கிடைக்கும் வாக்குகளைத் தடுப்பதற்காகவே இவ்வாறான பிரச்சாரங்களில் ஈடுபடுவதாக லண்டனில் உள்ள எம் கெ சிவாஜிலிங்கத்தின் ஆதரவாளர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இச்செய்தி தொடர்பாக ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுடன் தொடர்பு கொண்ட போது இச்செய்தி முற்றிலும் மோசடியானது எனத் தெரிவித்தார். இச்செய்தியை வெளியிட்ட ஊடகங்கள் அதனை வெளியிடுவதற்கு முன் தன்னுடன் அச்செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த தவறி இருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். இத்தவறான செய்தி தொடர்பான அறிக்கை விரைவில் ரெலோ அமைப்பினரால் வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார்.

ரெலோ இயக்கத்தினுள் பிளவை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாறான முயற்சிகளை வன்மையாகக் கண்டித்த அவர் ரெலோ அமைப்பின் பழமையான திருமலை மாவட்ட லெற்றர் ஹெட்டில் எழுதப்பட்டு தனது கையொப்பத்தை இட்டு அனுப்பப்பட்ட அறிக்கையை ஆதாரமாகக் காட்டியே இச்செய்தி வெளியிடப்பட்டதாகவும்  அக்கையொப்பம் தன்னுடையதல்ல அது மோசடியானது என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க முன்வந்த போதும் பெரும்பாலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யத் தயங்குகின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பிரவு சரத் பொன்சேகாவுக்கும் இன்னுமொரு பிரிவு மகிந்த ராஜபக்சவுக்கு மறைமுகமாகவும் மற்றுமொருபிரிவு சுயேட்சை வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கத்துக்கு ஆதரவாகவும் செயற்படுகின்றது.

இம்மோசடிச் செய்தி எம் கெ சிவாஜிலிங்கத்தின் மீதான ஒரு சேறடிப்பு முயற்சியாகவே அமைந்துள்ளது.

தமிழர்கள் சமாதானத்தைப் பெற மேயர் ரொபின் வேல்ஸ் பொங்கல் வாழ்த்து!!!

Mayor_and_Cllr_Pongal_14Jan10”இலங்கைத் தமிழர்களுக்கு கடந்த ஆண்டு மிகுந்த நெருக்கடியான ஆண்டு. எதிர்வரும் ஆண்டுகளில் அவர்கள் சமாதானத்தைப் பெறவேண்டும்” என நியூஹாம் மேயர் ரொபின் வேல்ஸ் இன்று தெரிவித்தார். லண்டனில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரே மேயரான ரொபின் வேல்ஸ் இன்று (டிசம்பர் 14) நியூஹாமில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்தார். இன்றைய நிகழ்வில் நியூஹாம் பிரதான வீதியான ஹைஸ்ரீற் நோத்தில் உள்ள அலங்கார விளக்குகளை ஏற்றி வைத்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

உலகிலேயே அதிகமாக பல்வேறு இனத்தவர்கள் இணைந்து வாழ்கின்ற  நகரமாக நியூஹாம் உள்ளது எனக் குறிப்பிட்ட மேயர் இங்குள்ள 86 வீதமான மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதாகக் குறிப்பிட்டார். தமிழ் மக்கள் நியூஹாமிற்கு வழங்கியுள்ள பங்களிப்பையிட்டு தான் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்த மேயர் இன்றைய பொங்கல் நிகழ்வில் கலந்துகொள்வதையிட்டு பெருமைப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் ஏற்பாட்டாளரான கவுன்சிலர் போல் சத்தியநேசன் உரையாற்றுகையில் தமிழ் மக்கள் பிரித்தானியாவுக்கு கணிசமான அளவில் வர ஆரம்பித்து 25 ஆண்டுகள் ஆகின்றது என்றும் நியூஹாம் தமிழ் மக்களுக்கு இருப்பிடம் வழங்கவில்லை அவர்களுக்கு உன்னதமான வீடாகி உள்ளது என்று தெரிவித்தார். தமிழ் மக்கள் இதுவரை அனுபவித்த துயரங்கள் நீங்கி எதிர்காலத்தில் அவர்கள் சமாதானத்துடன் வாழ்வதற்கு வழியேற்படும் என அவர் தெரிவித்தார்.

Mayor_Pongal_14Jan1075 பேர்வரை கலந்துகொண்ட இந்நிகழ்வின் இறுதியில் பொங்கல் சிற்றுண்டிகள் பரிமாறப்பட்டது. ஐரோப்பாவிலேயே பல்லினங்கள் நெருக்கமாகவும் பெரும்பான்மையாகவும் வாழும் நகரமாக நியூஹாம் அமைந்துள்ளது. வீதியால் பயணித்தவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பொங்கல் சிற்றுண்டிகளைச் சுவைத்து மகிழ்ந்தனர்.

கடந்த 10 ஆண்டுகளாக இந்நிகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்ற போதும் தனிப்பட்ட கோபதாபங்களுடன் சில விசமத்தனமான பிரச்சாரங்களும் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. இவற்றையெல்லாம் மீறியும் இந்நிகழ்வு இடம்பெற்று வருவது இதன் சிறப்பம்சம். இந்நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டு தனக்கு 5 தொலைபேசி அழைப்புகளிற்கு மேல்வந்ததாக கலந்துகொண்ட ஒரு வர்த்தகர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்  ”நாங்கள் எல்லாவற்றிற்கும் எதிராகவே செயற்பட்டு பழகிவிட்டோம். இப்போது பொங்கலுக்கும் எதிராக நோட்டிஸ் விடுகிற அளவுக்கு வந்துவிட்டோம்” எனச் சலிப்புடன் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு எதிராக விடப்பட்ட துண்டுப் பிரசுரம்:

நியூஹாம் வாழ் தமிழ் உறவுகளே!
உங்களுக்குத் தெரிந்தவை தான்
முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய
மரண ஓலங்கள்
உயிர்ப்பலிகள்
கற்பழிப்புகள்
பொருளாதாரத் தகர்ப்புகள்
இன்றும் முட்கம்பித் தடுப்பு முகாமில்
ஏதும் இன்றி நிற்கதியாகத்
தவிக்கும் தமிழ் உறவுகள்…..

தொப்புள் கொடி உறவுகளே!
இவைகளை நாம் எளிதில் மறந்துவிட முடியுமா?
இன்றைய காலகட்டத்தில் இனம்சார்ந்த குதூகல வைபவங்கள் எங்களுக்கு வெறுப்பெற்றவில்லையா?

இந்த நிலையில் தமிழ் தேசியத்திற்கு தொடர்ச்சியாகத் துரோகம் இழைப்பவர்களால் 14.01.2010 இல் பொங்கல் விழா என்ற பெயரால்  நடைபெறவுள்ள கொண்டாட்டம்  எங்களுக்கு அவசியம் தானா?

இனமான உணர்வுடன்  நிதானமாகச் சிந்திக்கும் ஒவ்வொரு தமிழரும் இந்தக் கொண்டாட்டத்தை பகிஸ்கரிப்பார்கள் என்பது நிச்சயம்.

சிந்தியுங்கள் அன்பான
நியூஹாம் தமிழ் உறவுகளே!

இதற்குப் பின்னாலுள்ள நபர்கள் தங்கள் சுய விளம்பரத்திற்காக தமிழ் மக்களின் அவலங்களைப் பயன்படுத்திக் கொள்வதாகக் குற்றம்சாட்டிய கவுன்சிலர் போல் சத்தியநேசன் இவ்வாறான சமூகப் பீடைகள் தவிர்க்க முடியாமல் ஒவ்வொரு சமூகத்திலும் காணப்படுவதாகவும் இவர்களை உதறிக்கொண்டு சமூகம் தன் பயணத்தைத் தொடரும் என்றும் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இன்றைய பொங்கல் நிகழ்வில் நியூஹாம் வர்த்தகர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் சமய ஸ்தாபனங்கின் பிரதிநிதிகள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

._._._._._.

ஈஸ்ற்ஹாமில் 10வது ஆண்டாக பொங்கல் விளக்குகள் ஏற்றப்பட உள்ளன

Paul_Sathyanesan_Cllrதமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற நகரமான ஈஸ்ற்ஹாமில் 10வது ஆண்டாக பொங்கல் விளக்குகள், வியாழக்கிழமை 14ம் திகதி மாலை 4 மணிக்கு ஏற்றப்பட உள்ளன. மத வேறுபாடுகளுக்கு அப்பால் உலகத் தமிழ் மக்கள் ஒன்றாகக் கொண்டாடும் விழாவாக தமிழர் விழாவாக தைப்பொங்கல் அமைந்துள்ளது. ஈஸ்றஹாம் பொங்கல் விழாவின் போது ஈஸ்ற்ஹாம் நகரபிதா தெருவிளக்குகளை ஏற்றி வைப்பார்.

கடந்த 10 ஆண்டுகளாக ஈஸ்ற்ஹாம் நகரசபையின் அணுசரனையுடன் கவுன்சிலர் போல் சத்தியநேசன் இந்நிகழ்வை ஏற்பாடு செய்து நடாத்தி வருகின்றார். வழமை போல் இம்முறையும் இந்து கிறிஸ்தவ இஸ்லாம் மதப் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில கலந்து சிறப்பிப்பார்கள் என கவுன்சிலர் சத்தியநேசன் தெரிவித்தார்.

ஈஸ்ற்ஹாம் மகாலட்சுமி ஆலயம் முன்பாக உள்ள தெரு வெளியில் மக்கள் ஒன்றாகக் கூடி மேளவாத்தியத்துடன் நகரபிதாவால் தெருவிளக்குகள் ஏற்றி வைக்கப்படும். அனைத் தொடர்ந்து நகரபிதாவினதும் மற்றும் சிலரினதும் சிற்றுரைகளும் இடம்பெற்று பொங்கல் சிற்றுண்டிகள் பரிமாறப்படும்.

இவ்வாண்டும் வழமைபோன்று இலங்கையிலும் உலகிலும் சமாதானத்தை வேண்டி இப்பொங்கல் விளக்குகளை ஏற்றி வைப்போம் என ஏற்பாட்டாளர் கவுன்சிலர் போல் சத்தியநேசன் தெரிவித்தார்.

சென்ற ஆண்டில் நாட்டில் நிலவிய யுத்தநிலையைக் காரணம் காட்டிச் சிலர் இந்நிகழ்வை இடைநிறுத்த முற்பட்ட போதும் சமாதானத்துக்காக நடாத்தப்படும் இந்நிகழ்வை கவுன்சிலர் சத்தியநேசன் தொடர்ந்தும் நடாத்தி வருகின்றார்.

இந்நிகழ்வு சிறிய அளவில் இடம்பெற்றாலும் உலகத் தமிழர்களின் உழைக்கு மக்களின் இந்நிகழ்வை ஐரோப்பிய நாடோன்றில் தொடர்ச்சியாக நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் தொடர்பாக கவுன்சிலர் சத்தியநேசன் வெளியிட்ட பொங்கல் செய்தியில் ”உலகத் தமிழர்களின் தினமான பொங்கல் நாளில் சமாதானமும் அமைதியும் மலர்ந்து அனைவரும் இன்புற்றிருக்க அனைவருக்கும் எனது தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!!!”  எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பத்திரிகைச் சுதந்திரம் – லசந்தா நினைவாக இன்று லண்டனில் மாநாடு

Lasantha_Wickramathungaகடந்த ஆண்டு ஜனவரி 8ல் படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்தா விக்கிரம சிங்கவின் (சண்டே லீடர் ஆசிரியரின் படுகொலையை தேசம்நெற் வன்மையாகக் கண்டிக்கிறது. : த ஜெயபாலன்) நினைவாக இலங்கையில் பத்திரிகைச் சுதந்திரம் என்ற தலைப்பில் லண்டனில் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. Tamil Legal Advocacy Project (TLAP) என்ற அமைப்பே இம்மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளனர். தங்களை சுயாதீன அமைப்பு என http://www.tlap.org.uk/ வெளிப்படுத்தி வருகின்ற அமைப்பு நடந்து முடிந்த யுத்தத்தில் யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளதாகவும் அதற்கான தண்டனை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் குரல் எழுப்பி வருகின்றனர். இது தொடர்பான கருத்தரங்கு ஒன்றினை இவ்வமைப்பினர் சில மாதங்களுக்கு முன்னர் கொன்வே ஹோலில் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

லசந்தா படுகொலை செய்யப்பட்ட ஜனவரி 8ம் நாளில் இந்தியன் வைஎம்சிஏ யில் இம்மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இம்மாநாட்டில் முன்னணி மனித உரிமைச் சட்டத்தரணியான கியூசி ஹெலனா கென்னடி மற்றும் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த பத்திரிகையாளர்கள் உரையாற்றுகின்றனர்.

இம்மாநாட்டிலும் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் போர்க் குற்றங்கள் பற்றிய விசாரணைக்கான குரல்களுக்கு அழுத்தம் வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சட்டத்தரணி அருண் கனநாதன் தேசம்நெற் க்குத் தெரிவித்தார். இந்நிகழ்வு முற்றிலும் மனித உரிமைகள் சம்பந்தப்பட்டது என்றும் சர்வதேச விசாரணைக்கான அழுத்தங்களை வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

நிகழ்வு விபரம்:

First Anniversary Remembrance of Lasantha Wickrematunga &
Press Freedom in Sri Lanka

Speakers:
Baroness Helena Kennedy QC, Human Rights Lawyer
Gareth Thomas MP, International Development Minister
Frances Harrison (Former BBC correspondent for Sri lanka).
Ed Davey MP, Shadow Foreign Secretary, Liberal Democrats.
Uvindu Kurukulasuriya, Journalist and former Convenor Free Media Movement (FMM), Sri lanka.
Alex Wilks, Programme Lawyer, Human Rights Institute-International Bar Association HR Institute
Speaker from Reporters without Borders (RSF).
Message  from Journalists for Democracy in Sri lanka (JDS).

  Sonali Samarasinghe, Former Editor Morning Leader and Lasantha’s wife, Lal Wickrematunge (Managing Editor Sunday Leader and Lasantha’s brother) will be sending a specially taped video message.

TLAP appreciates a voluntary contribution to our “conference series fund”
This event is being organized by Friends of Lasantha and Tamil Legal Advocacy Project (TLAP).

You are invited to the following event:
First Anniversary Remembrance of Lasantha Wickrematunga and Press Freedom in Sri Lanka

Date:
Friday, January 08, 2010
from 6:30 PM – 9:00 PM (GMT)

Location:
YMCA
41 Fitzroy Square
W1T 6AQ London
United Kingdom

Related News:

இலங்கைத் தூதரகத்தின் வாயிலில் ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலித்தது! : த ஜெயபாலன்

லண்டன் இல. தூதரகம் முன்பாக சண்டே லீடர் ஆசிரியரின் படுகொலைக்கு எதிரான போராட்டம் இன்று மாலை 4:30ற்கு : த ஜெயபாலன்

சண்டே லீடர் ஆசிரியர் லசந்தாவின் படுகொலையைக் கண்டித்து லண்டனில் போராட்டம் : த ஜெயபாலன்

சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டும்! – தமிழ் மக்களின் வோட்டும் ! : த ஜெயபாலன்

Sampanthan_RMavai_SenathirajahSuresh_Piremachandranதமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னால் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் என்பது ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியலை அவதானிக்கும் எவருக்கும் தெரிந்த விடயம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முடிவுக்கே வரும் என்பது நவம்பர் 19 – 22ல் சூரிசில் இடம்பெற்ற தமிழ் கட்சிகளின் மாநாட்டிற்கு வரும் பொழுதே ஓரளவு தீர்மானிக்கப்பட்டு இருந்தது. டிசம்பர் 20ல் ஒஸ்ரியாவின் தலைநகர் வியன்னாவில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதே நிலைப்பாட்டையே அங்கு விலியுறுத்தி இருந்தது. ஆயினும் அவர்கள் அதனை வெளிப்படையாக வெளிப்படுத்தவில்லை. முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனவரி 6ல் உதிதியோகபூர்வமாக அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னரேயே ஜேவிபியும் யுஎன்பியும் தமது மேடைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தோன்றி பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் எனத் தெரிவித்து வந்தனர்.

ஜனவரி 4ல் எதிர்க்கட்சிக் கூட்டமைப்புடன் இடம்பெற்ற சந்திப்பில் சரத்பொன்சேகாவை ஆதரிப்பது என்ற உறுதிமொழியையும் இரா சம்பந்தன் எதிர்தரப்பு கூட்டமைப்பிற்கு வழங்கி இருந்தார். TNA promises support to Gen. Fonseka http://www.unp.lk/portal/index.php?option=com_content&task=view&id=3682&Itemid=1 அதற்கு முன்னரேயே தங்கள் முடிவுக்கு மக்கள் ஆதரவைத் திரட்டும் ஒரு நடவடிக்கையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பின் வேட்பாளர் சரத் பொன்சேகாவை யாழ்ப்பாணத்திற்கு அழைத்திருந்தனர். Gen. Fonseka visits Jaffna at invitation of TNA  http://www.unp.lk/portal/index.php?option=com_content&task=view&id=3672&Itemid=1

ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி விவாதித்து முடிவெடுத்தது என்பது அப்பட்டமான நாடகம். ஜனவரி 4ம் 5ம் திகதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி இம்முடிவை எடுக்கவில்லை. அவ்விரு நாட்களும் இடம்பெற்றது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயகக் கேலிக் கூத்து மட்டுமே.

ஈராக்கில் ரெஜீம்சேன்ஞ்சை கொண்டு வருவதற்காக ஜோர்ஜ் புஸ் – ரொனி பிளேயர் கூட்டு சர்வதேசக் கூட்டமைப்பை துணைக்கு அழைத்துக் கொண்டு ஈராக் மீது படையெடுத்து ரெஜீம்சேன்ஞ்சை ஏற்படுத்தியது. தனது நோக்கத்திற்கு ஏற்ப ஈராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் உண்டு, 45 நிமிடங்களில் அவ்வாயுதங்கள் லண்டனைத் தாக்கலாம் என்ற கதைகள் சோடிக்கப்பட்டு ஜோர்ஜ் புஸ் – ரொனி பிளேயர் கூட்டால் இவை பரப்பப்பட்டது. பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்று இதற்கு ஒரு ஜனாநாயக முலாமும் பூசப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகிய மும்மூர்த்திகளின் தீர்மானமே. சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டு ஜோர்ஜ் புஸ் – ரொனி பிளேயர் அளவுக்கு இல்லாமல் விரலுக்கு ஏற்ற வீக்கமாக உருவாக்கிய திட்டமே இலங்கையில் ரெஜீம்சேன்ஞ் கொண்டுவரப்பட வேண்டும் என்பது. அதற்காக சோடிக்கப்பட்ட விடயங்களில் ஒன்று வடக்கு – கிழக்கு இணைப்பு. ஒரே மாதத்தில் சந்தேக நபர்களை விடுதலை செய்வது மற்றும் இன்னொரன்ன விடயங்கள். (அவற்றைத் தனிக் கட்டுரையில் ஆராய்வதே பொருத்தமானது.)

தமிழீழ விடுதலைப் புலிகள் பலமான நிலையில் இருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத அழுத்தத்தால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இயங்கியது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் மே 18ல் கொல்லப்படும் வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்திறன் மிக்க உறுப்பினர்களாக எம் கெ சிவாஜிலிங்கம் ஜெயானந்தமூர்த்தி, கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் செயற்பட்டனர். இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆதரவு அலைக்கு முதுகெலும்பாக நின்றனர்.

அப்போது இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கருத்துக்களுடன் எவ்விதத்திலும் முரண்படாமல் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். அல்லது முரண்படக் கூடிய கருத்துக்களை வெளியிடாமலே மௌனம் காத்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் பலவீனமடையத் தொடங்க இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் ஆளுமை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் தலை தூக்கியது. தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டே தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதாகக் குறுகிக்கொண்டது.

இதனை எம் கெ சிவாஜிலிங்கம் கடந்த பெப்ரவரியிலேயே தேசம்நெற்க்கு வெளிப்படுத்தி இருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகள் பற்றி தங்களுடன் ஆலோசிக்கப்படுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டி இருந்தார். இதனை அண்மையில் லண்டனில் நடைபெற்ற சந்திப்பிலும் எம் கெ சிவாஜிலிங்கம் தெரிவித்து இருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தரையாடி எடுக்கப்படுவதில்லை என்பது ஓரளவு ஏற்றுக்கொள்ளப்பட்ட வழமையாகவே இருந்து வந்தது. அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக பல்வேறு நாடுகளிலும் தங்கி இருந்ததும் அம்மும்மூர்த்திகளுக்கு வசதியாக அமைந்தது.

ஆனால் தேர்தலுக்கு முன்னதாகவே பெரும்பாலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை திரும்பிவிட்டனர். அதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளை எடுக்கின்ற போது ஒப்புக்காகவாவுதல் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டு ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்மதத்தைப் பெற வேண்டி இருந்தது. அதனாலேயே ஜனவரி 4 மற்றும் 5ம் திகதிகளில் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயக நாடகத்தை அரங்கேற்றியது.

ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் அதனை நேரடியாக வாக்கெடுப்பிற்கு விட்டால் மும்மூர்திகளின் நோக்கம் அடிபட்டுப் போய்விடும் என்ற அச்சம் அவர்களிடம் இருந்தது. அதனால் வாக்கெடுப்பிற்கு விடப்படும் கேள்வி தொடர்பாகவும் கடுமையான முரண்பாடுகள் விவாதங்கள் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் 22 தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் 18 பேர் நேரடியாகக் கலந்துகொண்டனர். ஒருவர் தொலைபேசியூடாகக் கலந்துகொண்டார். இரண்டு பிரதான வேட்பாளர்களில் யாரையாவது ஆதரிப்பதா? இல்லையா? என்ற அடிப்படையிலேயே வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என்ற குரல்கள் பலமானதாக இருந்தது. சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டு ரெஜீம்சேன்ஞ் வேண்டுமா இல்லையா என்ற அடிப்படையில் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்று வாதிட்டது. இறுதியில் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டின் முடிவின் அடிப்படையில் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இதன்போது சரத்பொன்சேகாவிற்கு ஆதரவாக 10 வாக்குகளும் எதிராக 9 வாக்குகளும் கிடைத்தது. ஆனால் தொலைபெசியில் கலந்துகொண்டவரின் வாக்கை கணக்கெடுக்க முடியாது என்பதில் இரா சம்பந்தன் உறுதியாக நின்றார். அதனால் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக 10 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் பதிவாகியது. பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பதில்லை என்றதன் அடிப்படையில் வாக்கெடுப்பு நடாத்தப்பட்ட போது அங்கு கூடியிருந்த அத்தனை பேரும் அத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவை ஊடகங்களுக்கு வெளியிட்ட இரா சம்பந்தன் ‘ஜனாதிபதி மேலும் ஒரு தடவை பதவியில் இருக்க அனுமதிப்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகோபித்து எதிர்ப்பதனால் பொது எதிர்க்கட்சி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.” எனத் தெரிவித்திருந்தார். தங்களுக்கு இசைவான பேரினவாதத் தலைமைகளுடன் இணைந்து தமிழ் மக்களை படுமோசமான நிலைக்குத் தள்ளிய தமிழ் தலைமைகள் குறிப்பாக தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி தற்போது மீண்டும் ஒருமுறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை வார்த்தை ஜாலங்களால் மயக்குகின்றது. ‘ஜனாதிபதி மேலும் ஒரு தடவை பதவியில் இருக்க அனுமதிப்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகோபித்து எதிர்க்கின்றது” என்பது முற்றிலும் உண்மை. அதற்காக ”பொது எதிர்க்கட்சி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.” எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கவில்லை. ஏகோபித்துத் தெரிவிக்கவேயில்லை. இவ்வளவு அழிவுக்குப் பின்னும் தமிழனைத் தமிழனே தமிழிலேயே ஏமாற்றக் கற்றுக்கொண்ட சாணக்கியத்தைத்தான் சம்பந்தர் இவ்வளவுகால அரசியலில் தெரிந்து வைத்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களும்:

தமிழர் விடுதலைக் கூட்டணி: இரா சம்பந்தன், (திருகோணமலை) மாவை சேனாதிராஜா (யாழ்ப்பாணம்)
ஈபிஆர்எல்எப்(சுரேஸ் அணி): சுரேஸ் பிரேமச்சந்திரன் (யாழ்ப்பாணம்), ஆனந்தன் நடேசு சிவசக்தி  (வன்னி)
ரெலோ: செல்வம் அடைக்கலநாதன் (மன்னார்), நோகராதரலிங்கம் சுப்பிரமணியம் (வன்னி), எம் கெ சிவாஜிலிங்கம் (யாழ்ப்பாணம்) , நல்லதம்பி சிறிகாந்தா (யாழ்ப்பாணம்) 
தமிழ் கொங்கிரஸ்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (யாழ்ப்பாணம்)

இவர்கள் ஒன்பது பேரையும் தவிர ஏனைய 13 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் சென்றவர்கள். அவர்கள் வருமாறு : சந்திரகாந்தன் சந்திரநேரு (தேசியப்பட்டியல்), ரி கனகசபை (மட்டக்களப்பு), சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி (மட்டக்களப்பு), தங்கேஸ்வரி கதிர்காமன் (மட்டக்களப்பு), பாக்கியசெல்வம் அரியேந்திரன் (மட்டக்களப்பு), சதாசிவம் கனகரட்ணம் (வன்னி), சிவநாதன் கிசோர் (வன்னி), சதாசிவம் கனகரத்தினம் (வன்னி), கெ துரைரத்தினசிங்கம் (திருகோணமலை), வில்லியம் தோமஸ் (திகாமடுல்ல), கஜேந்திரன் செல்வராஜ் (யாழ்ப்பாணம்), பத்மினி சிதம்பரநாதன் (யாழ்ப்பாணம்), சொலமன் சிறில் (யாழ்ப்பாணம்), ரசீன் மொகமட் இமாம் (தேசியப் பட்டியல்)

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவில்

பொன்சேகாவுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்: இரா சம்பந்தன் (திருகோணமலை), மாவை சேனாதிராஜா (யாழ்ப்பாணம்), சுரேஸ் பிரேமச்சந்திரன் (யாழ்ப்பாணம்), ஆனந்தன் நடேசு சிவசக்தி  (வன்னி), பாக்கியசெல்வம் அரியேந்திரன் (மட்டக்களப்பு), ரசீன் மொகமட் இமாம் (தேசியப் பட்டியல்), கெ துரைரத்தினசிங்கம் (திருகோணமலை), வில்லியம் தோமஸ் (திகாமடுல்ல), தங்கேஸ்வரி கதிர்காமன் (மட்டக்களப்பு), சொலமன் சிறில் (யாழ்ப்பாணம்).

எதிராக வாக்களித்தவர்கள்: செல்வம் அடைக்கலநாதன் (மன்னார்), நோகராதரலிங்கம் சுப்பிரமணியம் (வன்னி), எம் கெ சிவாஜிலிங்கம் (யாழ்ப்பாணம்), நல்லதம்பி சிறிகாந்தா (யாழ்ப்பாணம்) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (யாழ்ப்பாணம்) பத்மினி சிதம்பரநாதன் (யாழ்ப்பாணம்), சிவநாதன் கிசோர் (வன்னி), கஜேந்திரன் செல்வராஜ் (யாழ்ப்பாணம்)

வாக்களிப்பில் கலந்துகொள்ளாதவர்கள்: சந்திரகாந்தன் சந்திரநேரு (தேசியப்பட்டியல்) மற்றும் சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி (மட்டக்களப்பு). இருவரும் லண்டனில் தங்கியுள்ளனர். சந்திரகாந்தன் சந்திரநேரு இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கக் கூடாது என்ற முடிவைக் கொண்டிருப்பதாக எம் கெ சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அதே முடிவை ஜெயானந்தமூரத்தி தொலைபேசியூடாகக் கலந்துகொண்டு தனது கருத்தை வெளியிட்டார். ரி கனகசபை (மட்டக்களப்பு) இவர் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்ததாக இரா சம்பந்தன் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ரி கனகசபை இந்தியாவில் சுகவீனம் காரணமாகத் தங்கியுள்ளார். சதாசிவம் கனகரத்தினம் (வன்னி) இலங்கை அரச படைகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதுவரை ஈபிடிபி, புளொட், ஈபிஆர்எல்எப், கூட்டணி என்பவற்றை ஒட்டுக்குழு அரசியல் என்று விமர்சித்து வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னையவர்கள் மகிந்த ராஜபக்சவுடன் ஒட்டியதற்குப் பதிலாக இவர்கள் ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் ஒட்டியுள்ளனர். இடம் மட்டும் தான் மாறியுள்ளதே அல்லாமல் இதுவும் ஒட்டுக்குழு அரசியல் தான். தமிழ் தேசியக் கூட்டமைப்பு வே பிரபாகரனுக்குப் பதிலாக சரத் பொன்சேகாவை தேர்ந்தெடுத்த ஒட்டுக்குழு.

தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை அறிவித்து இருந்தாலும் அதன் கீழ் மூன்று அணிகளுக்கான அரசியல் ஓட்டங்களை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. சரத் பொன்சேகா, மகிந்த ராஜபக்ச சிவாஜிலிங்கம் ஆகியோரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்கின்ற நிலைகளே காணப்படுகின்றது. சிவாஜிலிங்கம் எனும் போது விக்கிரமபாகு கருணாரத்னவை ஆதரிப்பவர்களும் சிவாஜிலிங்கத்தின் அணியிலேயே அடங்குகின்றனர்.

சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டுக்கு எதிரான உணர்வலைகள் ஏற்கனவே மேலெழ ஆரம்பித்துள்ளது. இது புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் மத்தியிலும் வெளிப்படையாக வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. புலி ஆதரவாளர்களிடையே இவ்வாண்டு நடுப்பகுதியில் தமக்கு ஏற்படுத்தப்பட்ட தோல்விக்குப் பழிவாங்க வேண்டும் என்ற உணர்வில் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கின்ற போக்கு காணப்பட்ட போதும் இரு பிரதான வேட்பாளர்களும் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள் என்பதன் நியாயத்தன்மை தற்போது பலம்பெற்றுள்ளது.

டிசம்பர் 20ல் வியன்னாவில் இடம்பெற்ற தமிழ் தேசிய சக்திகளின் சந்திப்பிலும் இந்த முரண்பட்ட நிலை வெளிப்பட்டு உள்ளது. வியன்னாவில் இடம்பெற்ற சந்திப்பில் இலங்கை அரசுக்கு எதிரான தமிழ் தேசிய சக்திகள் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டு, வி ஆனந்தசங்கரி மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசு சார்ந்தவர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். மேலும் அபிவிருத்தி என்பதன் அடிப்படையில் இம்மாநாடு கூட்டப்பட்டதால் அதனுடன் தொடர்புடைய இன்னும் சிலரும் அழைக்கப்பட்டு இருந்தனர். நான்கு தினங்கள் இடம்பெற்ற இச்சந்திப்பில் நாடு கடந்த தமிழீழ அரசுடன் தொடர்புடைய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் முக்கிய பங்கெடுத்துக் கொண்டனர். கனடா: சேரன், இளங்கோ (தமிழீழ மக்கள் கட்சி), ரஞ்சன் (கனடிய தமிழ் கொங்கிரஸ்) நோர்வே: செல்வின், லண்டன்: ரூட் ரவி (பிரித்தானிய தமிழர் பேரவை), எதிர்வீரசிங்கம், சிற்றம்பலம் இவர்களுடன் இலங்கையில் இருந்து தேவநேசன் நேசையா, நோர்வேயில் இருந்து என் சண்முகரட்னம் ஆகியோரும் இன்னும் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இச்சந்திபில் தேர்தல் பற்றி குறிப்பாகக் கதைக்கப்படாத போதும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான இலங்கையில் ஒரு கட்சியின் அவசியம் பற்றிப் பேசப்பட்டு உள்ளது. வருகின்ற தேர்தலில் ரெஜீம்சேஞ் ஒன்றைக் கொண்டு வருவதன் அவசியம் பற்றியும் சிலர் கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தனர். அதே சமயம் பிரதான வேட்பாளர்கள் இருவருமே யுத்தக் குற்றவாளிகள் அவர்கள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் வெளிப்படுத்தப்பட்டு இருந்தது. இம்மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகடந்த தமிழீழ அரசு சார்பானவர்களிடையேயே ஒருமித்த கருத்து நிலவவில்லை எனவும் தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்மாநாடு மற்றும் இன்றைய தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசின் நிலை தொடர்பாக அறிந்துகொள்வதற்கு அதன் முக்கியஸ்தர்களில் ஒருவராக அறியப்படுபவரும் வியன்னா மாநாட்டில் கலந்துகொண்டவருமான சேரன் அவர்களுடன் தொடர்பு கொண்டபோது வியன்னா மாநாட்டில் கலந்து கொண்டதை உறுதிப்படுத்திய அவர் தனக்கும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது எனத் தெரிவித்தார். (அவர் தேசம்நெற் இணையம் தன்னைப் பற்றிய அவதூறை ஊடக வரைமுறைகளுக்கு அப்பால் மேற்கொண்டதாகவும் அதற்கு மன்னிப்புக் கேட்காதவரை தான் தேசம்நெற்றுடன் எதனையும் பகிர்ந்துகொள்ள முடியாது எனவும் மறுத்துவிட்டார்.)

ஆனால் நாடுகடந்த தமிழீழ அரசை ஆதரிக்கின்ற உலகத் தமிழர் பேரவை (Global Tamil Forum) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவைக் கண்டித்து உள்ளது. அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முடிவை எடுப்பதற்கு முன்னதாகவே தாங்கள் இரு பிரதான வேட்பாளர்களையும் ஆதரிக்க முடியாது என்ற நிலைப்பாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தி இருந்ததாக தமிழ்நெற் செய்தி வெளியிட்டு உள்ளது. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=30947

நாடுகடந்த தமிழீழ அரசு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினை ஏற்றுக்கொண்டு இயங்குவதால் சர்வதேச அளவில் பிளவுபட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகள் வெளி அழுத்தங்கள் காரணமாக மீண்டும் ஒரு குழுவாகச் செயற்பட முன்வந்துள்ளனர். இந்த இணைவில் ரூட் ரவியின் ஆளுமைக்கு உட்பட்டுள்ள பிரித்தானிய தமிழர் பேரவையும் (British Tamil Forum) விரைவில் இணைந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

டிசம்பர் பிற்பகுதியில் தனக்கு ஆதரவு தேடி லண்டன் வந்திருந்த எம் கெ சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவு வழங்க மறுத்த பிரித்தானிய தமிழர் பேரவை தனது முடிவை விரைவில் மாற்றிக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னால் பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன் பிரித்தானிய தேசிய நாளிதலான இன்டிபென்டனில் வெளியிட்டுள்ள கட்டுரையில் இரு பிரதான வேட்பாளர்களையும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று கோரி உள்ளார். இவர்களில் ஒருவருக்கு ஆதரவு வழங்குவது உணர்வின் அடிப்படையிலும் நியாயத்தின் அடிப்படையிலும் முடியாத விடயம் எனவும் சுரேன் சுரேந்திரன் குறிப்பிட்டுள்ளார். They (General Sarath Fonseka and President Mahinda Rajapaksa) should be brought to court to answer for their crimes and, given that, I believe it is morally and ethically impossible to throw one’s support behind either of these candidates – http://www.independent.co.uk/opinion/commentators/suren-surendiran-these-candidates-are-largely-to-blame-for-destroying-our-people-1859873.html

கனடாவில் நடராஜா முரளீதரன் போன்ற தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான உதிரிகள் மற்றும் தமிழ் படைப்பாளிகள் போன்ற மேலோட்டமான புலி ஆதரவு அமைப்புகள் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டுக்கு ஆதரவாகச் செயற்பட்டாலும் புலத்தில் இவர்களால் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மும்மூர்த்திகளின் முடிவை புலம்பெயர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகள் நிராகரித்த போதும் அவர்கள் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை இதுவரை வெளியிடவில்லை. ஆனால் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான எந்த அமைப்பும் தமிழ் மக்கள் இத்தேர்தலைப் பகிஸ்கரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள மாட்டார்கள் என்பது நிச்சயமாகத் தெரியவருகின்றது. தேர்தலைப் புறக்கணிப்பதன் மூலம் அவர்கள் ஜனநாயக நீரோட்டத்தில் இருந்து விலகி இருப்பதை மேற்கு நாடுகளும் அதன் அரசசார்பற்ற நிறுவனங்களும் அங்கீகரிக்காது என்பதனாலேயே அவர்கள் தேர்தலை பகிஸ்கரிக்க மாட்டார்கள் என்பது உறுதியாகின்றது. இவற்றின் அடிப்படையில் நாடுகடந்த தமிழீழ அரசுக்குழு, வட்டுக்கோட்டைத் தீர்மானக்குழு, பிரித்தானிய – உலக தமிழர் பேரவைகள் அனைத்தும் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டுக்கு எதிராகச் செயற்படுவதுடன் பெரும்பாலும் விக்கிரமபாகு கருணாரட்னா , எம் கெ சிவாஜிலிங்கம் அணிக்கு – தமிழ் தேசிய அணிக்கே- வாக்களிக்கக் கோருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

”ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொள்ளும்படி சிவாஜிலிங்கத்தை கேட்போம்” தமிழ் தேசியக் கூட்டமைப்பு

Selvam Adaikalanathan TNA_TELOதமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை நிலைநிறுத்த ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொள்ளும்படி எம் கெ சிவாஜிலிங்கத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்க உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று (ஜனவரி 7) தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரிக்கின்ற முடிவை முழுமையாக ஏற்றுக்கொள்கின்றீர்களா எனக் கேட்ட போது பெரும்பான்மையின் முடிவுடன் ஒத்துப் போவது மட்டுமல்ல தமிழ் மக்கள் ஒரு முகப்பட்டு அரசியலில் இயங்குவதே இன்று அவசியமானது எனத் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு களத்தில் இறங்கி பொன்சேகாவுக்காக வாக்கு வேட்டை நடத்துமா? எனக் கேட்ட போது அது பற்றிய இறுதி முடிவுகள் இதுவரை எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவு சுயாதீனமானது எனத் தெரிவித்து செல்வம் அடைக்கலநாதன் வெளிநாடுகளினதோ அல்லது புலம்பெயர் தமிழ் அமைப்புகளினதோ அழுத்தங்களினால் இம்முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவானது ஜனாதிபதியைத் தெரிவு செய்வது மட்டுமல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஒரு பரிசோதணைக் களமாக அமைய உள்ளதாகத் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் அனைவரையும் வாக்களிப்பில் கலந்துகொள்ளுமாறும் சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் தமிழ் மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் இருப்பதோ அல்லது சரத்பொன்சேகாவிற்கு எதிராக வாக்களிப்பதோ தமிழ் தேசியக் கூட்டமைப்பை நிராகரிப்பதாகவே கொள்ள வேண்டும் என தமிழ் செல்வம் அடைக்கலநாதன் தேசம்நெற் க்குத் தெரிவித்தார். தமிழ் மக்கள் எடுக்கின்ற எந்த முடிவையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இத்தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியே மீண்டும் தெரிவு செய்யப்பட்டாலும் அவருடன் தொடர்ந்தும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை நடாத்துவோம் எனக் குறிப்பிட்ட செல்வம் அடைக்கலநாதன் அதற்கு அரசு சம்மதிக்க மறுத்தால் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தி சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுப்போம் எனத் தெரிவித்தார்.

தன்னைப் போட்டியில் இருந்து விலகுமாறு யாரும் இதுவரை அணுகவில்லை எனத் தெரிவித்த எம் கெ சிவாஜிலிங்கம் தானும் மற்றைய ஜனாதிபதி வேட்பாளர் விக்கிரமபாகு கருணாரட்னாவும் தமிழ் பகுதிகளின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். சென்ற இடங்களில் எலலாம் மக்கள் நூற்றுக் கணக்கில் கூடி கைதட்டி ஆதரவு தருவது தங்களுக்கு நம்பிக்கை அளித்தள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கான உறுதியான முடிவுகளைத் தந்தாலேயொழிய இந்த சில்லறைத்தனமான உறுதி மொழிகளை தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் இந்தப் போட்டியில் இருந்து விலகிக் கொள்ளப் போவதில்லை எனவும் எம் கெ சிவாஜிலிங்கம் தேசம்நெற்றுக்கு இன்று (ஜனவரி 7) தெரிவித்தார்.

புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையின் இறுதிக் கிரியைகள் வல்வெட்டித்துறையில் நடைபெற ஏற்பாடு

prabakaeans-father.jpgஜனவரி 6ல் காலமான காலஞ்சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் இறுதிக் கிரியைகள் அவரின் பூர்வீக நிலமான வல்வெட்டித்துறையில் இடம்பெறவுள்ளது. ஜனவரி 10 ஞாயிற்றுக் கிழமை இவரது இறுதிக் கிரியைகள் வல்வெட்டித்துறையில் இடம்பெற்று வல்வெட்டித்துறை மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

கொழும்பில் இராணுவ காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் நேற்று இரவு காலமானதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாயணக்கார தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக  பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தமது 86 வது வயதில் காலமானதாக பிரிகேடியர் குறிப்பிட்டுள்ளார். இவர் இயற்கையாக உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேச்சாளார் உறுதி செய்துள்ளார்.

அன்னாரின் பூதவுடல் ஜனவரி 9ல் வல்வெட்டித்துறையில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என திரு வேலுப்பிள்ளை குடும்பத்தினரின் உறவினரும் ஜனாதிபதி வேட்பாளருமான எம் கெ சிவாஜிலிங்கம் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். திருமதி வேலுப்பிள்ளையினதும் அவர்களுடைய கனடாவில் உள்ள மகளினதும் விருப்பத்திற்கு இணங்க இறுதிக்கிரியைகளை தான் மேற்கொள்ள உள்ளதாக எம் கெ சிவாஜிலிங்கம் தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.

இவற்றுக்கு முன்பாக மரணம் இயற்கையாக நிகழ்ந்தது என்பதை உறுதிப்படுத்துவதற்கான விசாரணையை மேற்கொள்ளும்படி தான் கேட்டுள்ளதாகவும் இறுதிக் கிரியையை குடும்பத்தினர் விருப்பத்தின்படி மேற்கொள்ள அரசு சம்மதித்து உள்ளதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற இறுதிக் கட்ட மோதல்களின் போது மோதல் வலயத்திலிருந்து இரானுவத்தினரிடம் சரணடைந்த வேளை வேலுப்பிள்ளை மற்றும் அவரது மனைவி ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபபட்டிருந்தனர்.

வேலுப்பிள்ளையின் மரணத்தை அடுத்து அவரது மனைவியை விடுதலை செய்ய அரசு சம்மதித்து உள்ளதாகவும் தெரியவருகின்றது. இறுதிக்கிரியைகளில் பங்குபற்றும் திருமதி வேலுப்பிள்ளை அதன் பின்னர் தனது மகளிடம் கனடா செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

திரு வேலுப்பிள்ளை அவர்களின் மறைவு தொடர்பாக யாழ் மாவட்ட பா உ எஸ் கஜேந்திரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் ”இலங்கை அரசாங்கத்தின் தடுப்புக்காவலில் இருந்த வேளையில் எம்மை விட்டுப் பிரிந்த மதிப்பிற்குரிய திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துவதோடு அவரது பிரிவால் துயிருற்று இருக்கும் அவரது பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசியல் தலைவர்களும் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர். ”தமிழ் ஈழ தேசிய இனத்தின் தன்னிகர் அற்ற தலைவராம் மேதகு பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் உயிர் நீத்தார் என்ற செய்தி, துன்பப் பேரிடியாக, மனதை வாட்டி வதைக்கிறது.” என வைகோ தனது இரங்கலில் தெரிவித்து உள்ளார்.

._._._._._.

(இது புலிகளின் எப்பிரிவு என்பது குறிப்பிடப்படவில்லை.)

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
07/01/2010

இரங்கற் செய்தி

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவுச் செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழீழத் தேசத்தின் விடுதலைப் பயணத்தைத் தலைமைதாங்க ஒரு தவப்புதல்வனைப் பெற்றெடுத்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் தனது இறுதிக்காலத்தில் தாயகத்தில் வாழும் ஆசையோடு இந்தியாவிலிருந்து திரும்பியிருந்தார். தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட பேரழிவின்போது தனது தள்ளாத வயதிலும் மக்களோடு மக்களாக இறுதிவரை வாழ்ந்துவந்தார்.

இறுதியில் சிறிலங்கா இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு, சர்வதேச நெறிமுறைகளுக்கு மாறாக உறவினர்களைச் சந்திக்கும் வாய்ப்புக்கூட மறுக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் உரிய மருத்துவ வசதிகளின்றி சிறிலங்காப் படையினரின் தடுப்புக்காவலில் சாவடைந்த செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இவரது பிரிவால் துயருறும் இவரின் துணைவியாருக்கும் பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.