கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

மும்பைத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களை எந்த நாட்டிடமும் ஒப்படைக்க முடியாது – பாகிஸ்தான் பிரதமர்

mumbai.jpgமும் பைத் தாக்குதலில் பாகிஸ்தானியர்களுக்கு தொடர்பிருப்பது கண்டறியப்பட்டாலும் அவர்களை எந்த நாட்டிடமும் ஒப்படைக்க மாட்டோமென பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி தெரிவித்துள்ளார்.  கராச்சியில் (11)செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; மும்பையில் நிகழ்ந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்தியா கொடுத்த ஆதாரங்கள் குறித்து தனியாக விசாரணை நடத்தி வருகிறோம்.

இச்சம்பவத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உண்டு என்று, கண்டறியப்பட்டாலும் அவர்கள் பிறநாடுகளிடம் ஒப்படைக்கப்படமாட்டார்கள். பாகிஸ்தான் நாட்டு சட்டப்படியே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்தியதாக சந்தேகிக்கப்படுபவர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கென தனிச் சட்டம் உள்ளது. அதன்படி விசாரணை நடத்தி உண்மையை மக்களுக்குத் தெரிவிப்போம்.

பயங்கரவாதிகளுக்கும் பயங்கரவாத இயக்கங்களுக்கும் எதிராக தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாகிஸ்தான் மண்ணில் இருந்து பயங்கரவாதிகள் செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்றார். இதற்கிடையே, பாகிஸ்தானிலுள்ள வெளிநாடுகளின் தூதர்களுக்கு ஜனாதிபதி சர்தாரி விருந்து அளித்தார். முஸ்லிம் அல்லாத நாடுகளின் தூதர்களுக்கு மட்டுமே இந்த விருந்து அளிக்கப்பட்டது. அதில், பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் சத்யபிரபாபோல் மற்றும் அமெரிக்க, சீன, இங்கிலாந்து, ரஷ்ய, பிரான்ஸ் தூதர்களும் கலந்துகொண்டனர்.

பிரதமர் கிலானியும் இதில் பங்கேற்றார். விருந்து நிகழ்ச்சி மூலமாக பாகிஸ்தான் தரப்பு நியாயத்தை வெளிநாட்டு தூதர்களிடம் சர்தாரி தெரிவிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், அந்த தகவலை சர்தாரியின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். விருந்து நிகழ்ச்சியில் சர்தாரி எந்த உரையும் ஆற்றவில்லை என்று அவர் தெரிவித்தார்.

யுத்தமற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்க ஒன்றுபடுவோம்: சேனன்

12309911698101.jpgகாசாவில் இஸ்ரேலிய இரானுவத்தின் தாக்குதலை வன்மையாக கண்டித்து உலகெங்கும் போராட்டங்கள் நடந்துவருகிறது. கடந்த 10ம் திகதி இரண்டாவது முறையாக ஆயிரக்கணக்கானவர்கள் லன்டனில் கூடி இஸ்ரேலிய தூதரகத்துக்கு எதிர்வரை சென்று தமது எதிர்ப்பை தெரிவித்தனர். அக்கூட்டத்தில் வளங்கிய பேச்சின் சுருக்கம்.
——

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து – கடந்த எட்டு வருடத்துக்குள் – மில்லியன் கணக்கான மக்களை நாம் யுத்தத்துக்கு இழந்துள்ளோம்.

கொங்கோவில் நாலு மில்லியனுக்கும் மேல், ஈராக்கில் ஒரு மில்லியனுக்கும் மேல், டாபூர் சூடானில் அரை மில்லியனுக்கு மேல் என்று உலகெங்கும் யுத்தம் பலிகொண்ட மனித உயிர்களின் எண்ணிக்கையின் தொகை அதிகரித்துகொண்டு செல்கிறது.

தற்போது காசாவில் வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் மக்கள்மேல் கற்பனை பண்ணமுடியாத கொடிய தாக்குதலை பார்க்கிறோம்.  மனிதர் படும் துன்பங்கள் புது எல்லைகளை தாண்டிக் கொண்டிருக்கிறது.

ஏன் இது? ஒரு சொற்ப – ஆயிரக்கணக்கான பணக்கார முதலைகளின் சொத்துக்களை பாதுகாக்கத்தான் இத்தனையும்.

சொத்துக்களை குவித்தலும் அதை பாதுகாத்தலும் முதலாளித்துவத்தின் இயல்பு என்பது எமக்கனைவருக்கும் தெரியும். தமது சொத்துக்களை பாதுகாக்க முதலாளித்துவ வர்க்கம் யுத்தத்துக்கு தாவுவதை வரலாறு முழுக்க நாம் பார்த்துள்ளோம்.

மத்திய கிழக்கில் அமைதி நிலவுவது பற்றி அமெரிக்க – மேற்கத்தேய பணக்கார ஆளும் வர்க்கத்துக்கு எந்த அக்கறையும் இல்லை என்பது ஆச்சரியமான விடயமில்லை. உடனடி தீர்வை எடுக்க அவர்கள் வக்கற்றவர்கள் என்பது எமக்கு நன்றாக தெரியும்.

காசாவில் வறிய மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் அதே தருனத்தில் கவலை முக பாவனை காட்டி ‘மனித இனத்துக்கு கவலைப்படுவதாக’ ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கும் அதிகார மூஞ்சிகளை நாம் ஒருபோதும் நம்புவதில்லை.

ஏனெனில் எமக்கு தெரியும் – எம் நலனில் இருந்து அவர்கள் நலன் முற்றிலும் மாறுபட்டது. எண்ணை வள மத்திய கிழக்கின் வளத்தை தமது கட்டுபாட்டில் தொடர்ந்து வைத்திருக்க இஸ்ரேலிய ஆளும் வர்க்க ஆதரவு தமக்கு தேவை என்பதில் அவர்கள் தெட்டதெளிவாக இருக்கிறார்கள். வாடும் வறிய மக்கள் நலன் சார்ந்து அவர்கள் ஒருபோதும் சிந்திக்கப் போவதில்லை. வளங்களை சுறண்டுவது சொத்துக்களை சேர்ப்பது என்பதை மடடும் குறிவைத்து இயங்குவதே அவர்கள் சிந்தனை.

முதலாளித்து பொருளாதாரம் உலகெங்கும் கடும் ஆட்டங்கண்டுள்ள நிலையில் ஆளும் வர்க்கத்தின் கோப நடவடிக்கைகளின் வேகமும் அட்டூளியமும் பல மடங்கு அதிகரிப்பதை நாம் பார்க்கடியதாக இருக்கிறது. பச்சை பொறுக்கித்தனமான செயல்களை – மிக கொடூரமான நடவடிக்கைகளை எந்த வெக்கமும் ஒளிப்பு மறைப்புமின்றி வெளிப்படையாக செய்வதில் ஆளும்வர்க்கத்தின் தெனாவட்டு அதிகரித்திருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. தங்களை கேள்வி கேட்க ஆளில்லை – கதைச்சுபேசி சடைஞ்சு எப்பிடியும் தப்பிவிடுவோம் என்ற அபார நம்பிக்கையுடன் அவர்கள் இந்த அட்டூளியங்களில் ஈடுபடுகிறார்கள்.

அடுத்த தேர்தலை வெல்ல வேண்டும் என்ற ஒரு காரணத்துக்காக பல இஸ்ரேலிய பாலஸ்தீன உயிர்களை பலிகொடுக்க தயங்காது நிற்கிறது இஸ்ரேலிய ஆளும் வர்க்கம். உலகெங்கும் வாழும் பெரும்பான்மை மக்களின் கடும் எதிர்ப்பிருந்தும் தான்தோன்றி தனமாக கடும் தெனாவட்டுடன் பட்ட பகலில் பச்சை கொலை செய்கிறது இஸ்ரேலிய ஆளும் வர்க்கம்.

ஆளும்வர்க்கம் உலகெங்கும் இதைதான் செய்துவருகிறது.  அமெரிக்க – மேற்கத்தேய – இஸ்ரேலிய ஆளும் வர்க்கம் கடும் அட்டூளியங்களை செய்தபிறகும் கேட்பாரற்று தப்பிவிடுவதை படிப்பினையாக எடுத்து முன்றாம் உலக நாடுகளை உலுப்பும் ஆளும் வர்க்கங்களும் இதே பாணியை பின்பற்றுகின்றன.

நான் இலங்கையில் இருந்து வந்தவன். காசாவை இஸ்ரேலிய இராணுவம் கடுமையாக தாக்கும் இதே தருனத்தில் இலங்கை இராணுவமும் வடக்கில் கடும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. தற்போது இராணுவம் நுழைந்த பகுதியில் வாழ்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து விட்டனர். அவர்கள் எங்கே. அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பது பற்றி யாரும் கதையில்லை.

இலங்கை இரானுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டிருக்கும் இம்மக்கள் காசா மக்களை போல்தான் கடும் பயக்கெடுதியில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்பது உறுதி. இவர்களிள் பெரும்பான்மையானவர்களை தீவிரவாதிகள் என்று இராணுவம் நம்புவதால் இவர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் விரைவில் கொல்லப்படக்கூடிய சாத்தியமுண்டு. அது மட்டுமின்றி ஒரு சொற்பன் தன்னிச்சையாக இயங்க முற்படும் ஊடகங்கள் மேல் கடும் தாக்குதல்களை செய்து வருகிறது அரசு. அண்மையில் ஒரு முக்கிய ஊடகவியலாளரை அரச கூலிகள் சுட்டு கொண்டுள்ளார்கள். வரும் இந்த கிழமை இலங்கை தூதரகம் முன்னாலும் இவற்றுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒழுங்கு படுத்தப்படவுள்ளது.

யுத்தத்தால் சிதைந்த ஒரு நாட்டில் இருந்து வந்தவன் என்ற முறையில் இன்று காசா மக்கள் படும் துன்பத்தை ஓரளவாவது என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

சா எப்ப வரும் என்று தெரியாமல் எந்த நிமிடமும் சாவை எதிர்நோக்கி வாழ்வது மிக கொடிய வாழ்வு. ஒவ்வொரு குண்டு சத்தத்திலும், ஒவ்வொரு துப்பாக்கி சத்தத்திலும், விமானம் பதிந்து பறக்கும் ஒவ்வொரு தருனத்திலும் சாவை எதிர்கொண்டு தப்பி துடிக்கும் அவர்களின் துன்பம் அளப்பரியது.

அத்துடன் அவர்களுக்கு குடிக்க தண்ணியில்லை – சாப்பிட எதுவுமற்ற கடும் பட்டிணி – இதற்குள் தமது உறவுகள் நண்பர்கள் சக மனிதர்கள் தமக்கு முன்னால் கோரத்தனமாக கொல்லப்படுவதை செய்ய வழியற்று அவர்கள் பார்த்துக் கொண்டிருக்க பணிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் இதயத்தின் அடியில் நெருப்பாக துடிக்கும் இயலாமையை எம்மால் உணர முடிகிறது. இதை உணரும் இங்கிருக்கும் யாரும் அவர்களை தனியாக துன்பப்பட விடமாட்டோம்.

ஆனால் யு. என். இன் நீண்ட கொரிடோர்களில் அங்கும் இங்குமாக நடந்து விலைகூடின கமராக்களுக்கு போஸ் குடுக்கும் மேற்கத்தேய அரசியல்வாதிகளுக்கு இந்த உணர்வுகள் ஒருபோதும் புரியப்போவதில்லை. காசா மக்களின் அடி மன வேதனையை அவர்கள் ஒருபோதும் உணரப்போவதில்லை. அவர்கள் சிந்தனை வேறு விதமானது. மக்கள் மேலும் மேலும் வறுமைப்பட அவர்கள் தமது சொத்துக்களை அதிகரித்துகொண்டு யுத்த நடவடிக்கைகளுக்கான செலவையும் அதிகரித்து வருகிறார்கள். கடந்த மாதத்தில் மட்டும் அரை மில்லயனுக்கும் மேலான அமெரிக்க மக்கள் வேலை இழந்த நிலையில் அது பற்றி எந்த அக்கறையுமற்ற அமெரிக்க அரசு தனது பாதுகாப்பு நடவடிக்கை பட்ஜெட்டை அதிகரித்து வருகிறது. மொத்த ஜி.என்.பி யில் கிட்டத்தட்ட 4 வீதத்தை பாதுகாப்புக்கு ஒதுக்கியுள்ளது அரசு. கடந்த ஆண்டில் அதிகூடிய ஆயுத விற்பனை செய்தது இந்த இங்கிலாந்து அரசுதான். மூன்றாம் உலக நாடுகளின் கொடிய ஆளும்வர்க்கங்களை ஆயுதமயப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது இஸ்ரேலிய அரசு.

நாம் இதை பார்த்து கொண்டிருக்க முடியாது. நாம் யுத்தத்துக்கு எதிராக –யுத்தத்தின் மூல காரணத்துக்கு எதிராக கடுமையாக போராட வேண்டும். யுத்தத்தின் மூல காரணம் முதலாளித்துவம்தான். முதலாளித்துவம் இருக்கும் வரைக்கும் யுத்தம் இருந்து கொண்டுதான் இருக்கும். யுத்த நடவடிக்கைகளை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றால் நாம் முதலாளித்துவத்துக்கு முற்றுபுள்ளி வைத்தாக வேண்டும்.

மில்லயன் கணக்கான நாம் – தொழிலாளர்களான நாம் – உலக சொத்துக்களை சூறையாடும் ஒரு சிறு குழுவை விட மிகப் பலம் வாய்ந்தவர்கள். முதலாளித்துவத்துக்கு எதிராக நாம் ஒன்றுபட வேண்டும்.

காசா – முழு பாலஸ்தீனம் – இஸ்ரேல் – அமெரிக்க – இலங்கை என்று ஆங்காங்கு போராடிவரும் தோழர்களுடன் இணைந்து ஒன்றுபட்ட போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். மனிதர் துன்பப்படாத – யுத்தமற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்க ஒன்றுபடுவோம்.

நாம் எமது யுத்தத்தை – இறுதி யுத்தத்தை செய்தாக வேண்டும். மனித துன்பத்துக்கு நிரந்தர தீர்வு கட்டும் இறுதி போராட்டத்திற்கு இணைவோம். எமது யுத்தத்தில் இனைந்து கொள்ளுங்கள். சோசலிஸ்டுகளுடன் சேர்ந்து கொள்ளுங்கள்.

முல்லை. மாவட்ட வைத்தியசாலை படையினர் வசம் – இராணுவப் பேச்சாளர்

_army.jpgபுலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அடிக்கடி வந்து செல்லும் முக்கிய இடமொன்றை இலக்கு வைத்து விமானப் படையினர் நேற்று கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். புதுக்குடியிருப்பு காட்டுப் பகுதியில் அமைந்துள்ள இந்த இடத்தை பிரபாகரன் இரகசியமாக மறைந்திருக்க பயன்படுத்தியுள்ளதாகவும் விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

விமானப் படைக்குச் சொந்தமான ஜெட் ரக போர் விமானங்களைப் பயன்படுத்தி நேற்று மாலை 6.00 மணியளவில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். புலிகள் இயக்கத் தலைவரும், அவரது முக்கிய சகாக்களும் புதுக்குடியிருப்பு காட்டில் அமைந்துள்ள இந்தப் பிரதேசத்தை ஒன்று கூடி ஆராயும் பிரதேசமாகவும் பயன்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவை நோக்கி முன்னேறிவரும் படையினருக்கு இராணுவ மற்றும் விமானப் படையின் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவல்களையடுத்தே உரிய இலக்குகள் மீது விமானப் படையின் ஜெட் விமானங்கள் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவித்த விங் கமாண்டர் ஜனக நாணயக்கார, தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக விமான ஓட்டிகள் உறுதி செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, முள்ளியாவலை தண்ணீரூற்று பிரதேசத்தில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையை பாதுகாப்புப் படையினர் நேற்று கைப்பற்றியுள்ளனர். முன்னேறிவரும் இராணுவத்தின் 59 வது படைப் பிரிவினர் இந்த வைத்தியசாலையை நேற்றுக் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இந்த வைத்தியசாலையின் சுற்றுப்புறம் முழுவதிலும் புலிகளின் பாரிய பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலையும் பங்கர்களாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறிகள், குளிரூட்டிகள், சிகிச்சை மற்றும் சத்திர சிகிச்சை அறையிலுள்ள உபகரணங்களையும் புலிகள் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவித்த அவர், இங்குள்ள அறைகள் முழுவதிலும் மண் மூடைகளைக் காணக்கூடியதாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

சுற்றிவர கட்டடங்களைக் கொண்ட வைத்தியசாலையை காயமடைந்த புலிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கு பாவிக்கப்பட்டுள்ள தடயங்களும் காணப்படுவதாகவும் இராணுவப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவிலிருந்து மேலும் 176 சிவிலியன்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகை

ahathi-1.jpg
முல்லைத்தீவிலிருந்து புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த 176 சிவிலியன்கள் நேற்று பாதுகாப்பு படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். 176 சிவிலியன்களில் பெருந்தொகையான சிறுவர், சிறுமிகள் அடங்குவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சோரன்பற்று, இயக்கச்சி மற்றும் வெற்றிலைக்கேணி பிரதேசங்களை நோக்கி 107 சிவிலியன்கள் வருகை தந்துள்ளனர். இவர்கள் இராணுவத்தின் 53 வது படைப் பிரிவினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். ஓமந்தை பிரதேசத்தை நோக்கி 60 சிவிலியன்கள் வருகை தந்துள்ளனர். ஒன்பது சிறுமிகள், ஏழு சிறுவர்கள், 27 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் இவர்களுள் அடங்குவர். வட்டக்கச்சி பிரதேசத்தை நோக்கி ஐந்து சிவிலியன்கள் வருகை தந்துள்ளனர். இந்த ஐவரில் 3 ஆண்களும், 2 பெண்களும் அடங்குவர்.

இதேவேளை, இரணைமடு பிரதேசத்தை நோக்கி நான்கு சிவிலியன்கள் வருகை தந்துள்ளனர். இந்த நால்வரில் இரண்டு குழந்தைகள், ஒரு பெண் மற்றும் ஒரு ஆணும் அடங்குவதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

ராஜபக்சே கூட்டத்துக்கு சமாதி கட்டும் நாள்தான் தமிழர்கள் சாப்பிட்ட சாப்பாடு செரிக்கும் நாளாகும் – வைகோ

ponkal.jpgராஜபக்சே கூட்டத்துக்கு சமாதி கட்டும் நாள்தான் தமிழர்கள் சாப்பிட்ட சாப்பாடு செரிக்கும் நாளாகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவத்தால் வெல்ல முடியாது என்று ஈரோட்டில் நடந்த ம.தி.மு.க தேர்தல் நிதியளிப்பு விழாவில் பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் ஈவு இரக்கமின்றி கொலை செய்யப்படுகிறார்கள். 4 ஆண்டுகளாக இந்திய அரசு இலங்கை அரசுக்கு அனைத்து வகையிலும் உதவி செய்து வருகிறது. அதனால் தான் இந்த அளவு பாதிப்பு இலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், விடுதலைப் புலிகளை வெல்ல முடியாது. மத்திய அரசின் கூட்டணியில் இருக்கும் எந்த கட்சிகளும் இலங்கை தமிழர் விரோத போக்கை கண்டுகொள்ளவில்லை. ஹிட்லர் ஆட்சியில் கூட நடக்காத கொடுமை இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படுகிறது. இதைத்தான் சினிமா இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் பேசினார்கள். இதில் என்ன தவறு உள்ளது?.

போபர்ஸ் பீரங்கி ஊழல் பிரச்சினையில் இருந்து விடுபட ராஜீவ் காந்தி இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பினார். ராணுவம் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டது. இதை சீமான் சொன்னதில் என்ன தவறு உள்ளது? தற்போது ராணுவ உதவி மட்டுமின்றி உளவு அமைப்பான ரா மூலமும் இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு உதவி செய்து வருகிறது. இந்தியா கொடுத்த பணத்தில் ஆயுதம் வாங்கி இலங்கை அரசு நம் இனத்துக்கு எதிராக பயன்படுத்துகிறது.

உண்மையில் விடுதலைப் புலிகள் முல்லைத்தீவில் உள்ள 6 லட்சம் தமிழர்களுக்கு அரணாக உள்ளனர். அவர்களை வீழ்த்த முடியாது. ராஜபக்சே கூட்டத்துக்கு சமாதி கட்டும் நாள்தான் தமிழர்கள் சாப்பிட்ட சாப்பாடு செரிக்கும் நாளாகும் என்றார் வைகோ.

வன்னியிலிருந்து வருபவர்களின் நலன்களை கவனிக்க ரூ.30 மில். ஒதுக்கீடு – அரசாங்கம் அவசர ஏற்பாடு

a_c_m_razik_secretary1.jpgகிளிநொச்சி முல்லைத்தீவுப் பகுதிகளிலிருந்து வவுனியாவுக்கு வருகை தரும் பொதுமக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் 30 மில்லியன் ரூபா நிதியினை வழங்கியுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் ஏ. சீ. எம். ராசிக் தெரிவித்தார்.

இதுவரை 1,200 ற்கும் மேற்பட்டவர்கள் முல்லைத்தீவு கிளிநொச்சிப் பகுதிகளிலிருந்து வவுனியாவுக்கு வந்துள்ளதுடன் தொடர்ந்தும் மக்கள் வருகை தந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்த அவர், இம் மக்களுக்கான அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சு மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை மேற்படி அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை தரும் மக்களுக்கான நலன்புரி விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் இன்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பெஷில் ராஜபக்ஷ எம்.பி. யின் தலைமையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்துகொள்ளும் முக்கிய கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் :-

விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து அரச கட்டுப் பாட்டுப் பகுதியான வவுனியாவுக்கு வந்து சேர்ந்த மக்களுக்காக வவுனியா மெனிக்பாம் மற்றும் நெலுக்குளம் பகுதிகளில் தற்காலிக வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் அடம்பன்குளம், பூசனிப்பிட்டி பகுதிகளிலும் மேலும் தற்காலிக வீடுகளை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வவுனியாவில் தங்கியிருப்போருக்கான சமைத்த உணவு, உலருணவுகள், உடைகள், மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அன்றாட தேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்த அவர் இது தொடர்பில் வவுனியாவில் உள்ள அரச அதிகாரிகளுக்கு உரிய பணிப்புரைகளும் வழங்கப்பட்டு ள்ளதாகவும் தெரிவித்தார்.

900 சதுர கிலோமீற்றருக்குள் புலிகள் முழுமையாக முடக்கம்

_army.jpgஆனையிறவுக்கு கிழக்கே அமைந்துள்ள கெவில் பிரதேசத்தை பாதுகாப்பு படையினர் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். ஆனையிறவை கைப்பற்றிய படைப்பிரிவுகளில் ஒன்றான இராணுவத்தின் 53வது படைப்பிரிவினர் இந்தப் பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனையிறவைக் கைப்பற்றி அங்கிருந்து கிழக்கை நோக்கி முன்னேறிய 53வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் கமல் குணரத்ன தலைமையிலான படையினர் கெவில் பிரதேசத்தை வந்தடைந்துள்ளனர். வெற்றிலைக்கேணிக்கு தென்கிழக்கு கரையோரத்தில் அமைந்துள்ள கெவில் பிரதேசம் புலிகளின் மற்றுமொரு பலமான நிலையாக விளங்கியுள்ளது.

கடல் மார்க்கமான சில நடவடிக்கைகளுக்கு புலிகள் இந்தப் பிரதேசத்தைப் பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர், தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ள வெற்றி லைக்கேணி முதல் கெவில் வரையான பிரதேசத்தை பலப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.  புலிகளால் இந்தப் பிரதேசங்களில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளையும், மிதிவெடிகளையும் மீட்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, வடக்கு, கிழக்கின் பெரும்பாலான பகுதிகளில் பரந்திருந்த புலிகளை தற்பொழுது படை நடவடிக்கைகள் மூலம் 900 சதுர கிலோமீற்றர் பரப்புக்குள் முடக்கி விட முடிந்துள்ளதாக தெரிவித்த பிரிகேடியர் இராணுவத்தின் ஒன்பது பிரிவினர் எஞ்சியுள்ள பிரதேசங்களை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தொடர்ந்தும் முன்னேறி வருவதாகவும் குறிப்பிட்டார்.

முகமாலை தொடக்கம் ஆனையிறவு வரையான பிரதேசம் கைப்பற்றப்பட்டதையும், ஏ-9 பிரதான வீதி முழுமையாக விடுவிக்கப்பட்டதையும் அடுத்து, யாழ். குடாநாடு முழுவதும் படையினரின் பூரணகட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாகவும் பிரிகேடியர் குறிப்பிட்டார்.

சுண்டிக்குளமும், அதனை அண்மித்த சிறியதொரு பிரதேசம் மாத்திரம் யாழ். குடாவில் கைப்பற்றப்பட வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட அவர், யாழ். குடாவில் இருந்த புலிகளின் அச்சுறுத்தல் தற்பொழுது நீங்கியுள்ள தாகவும் குறிப்பிட்டார். விடுவிக்கப்பட்ட ஏ-9 பிரதான வீதியின் முகமாலை தொடக்கம் ஓமந்தை வரையான வீதியில் நிலைக் கொண்டுள்ள படையினர், கடுமையான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் இடைக்கிடையே வீதிகளில் ஏற்பட்டுள்ள உடைவுகள் மற்றும் வெடிப்புக்களை திருத்தும் நடவடிக்கைகளை இராணுவத்தின் பொறியியல் பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, கிளிநொச்சிக்கு கிழக்கே உள்ள வட்டக்கச்சி பிரதேசத்தை கைப்பற்றும் நோக்கில் 57 வது படைப்பிரிவினர் கடுமையான தாக்குதல்களை நடத்தி முன்னேறி வருகின்றனர். அத்துடன், பரந்தனுக்கு கிழக்கே அமைந்துள்ள முரசுமோட்டை பிரதேசத்தை முழுமையாக விடுவிக்கும் நோக்குடன் முன்னேறிவரும் இராணுவத்தின் 58 வது படைப்பிரிவினர் விசுவமடு பிரதேசத்தை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

இரணைமடு பகுதியிலுள்ள புலிகளின் விமான ஓடுபாதைக்கு அண்மித்த பகுதியில் இருதரப்பினருக்கு மிடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வரும் அதேசமயம், 59வது படைப்பிரிவினர் முல்லைத்தீவுக்கு மேற்கை நோக்கி முன்னேறிவருகின்றனர். இந்தப் பிரதேசத்தில் அமைந்துள்ள புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளையும், மண் அரண்களையும் இலக்கு வைத்து கடுமையான தாக்குதல்களை படையினர் மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பெரியகுளம், புதுக்குடியி ருப்பு மற்றும் கற்குளம் பகுதிகளில் பல தடவைகள் இடம்பெற்ற மோதல்களுக்கு பின்னர் படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட புலிகளின் எட்டு சடலங்களை படையினர் மீட்டெடுத்துள்ளனர். அத்துடன் ரி-56 ரக துப்பாக்கிகள் 6 அதற்கு பயன்படுத்தும் ரவைகள் 3,850 மற்றும் காட்டுப் பிரதேசத்தில் இருப்பவர்கள் அணியும் உடைகள் படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தாக்குதலில் சதித் திட்டம் தீட்டியவர்களை பாகிஸ்தான் சட்டத்தின் முன் நிறுத்தவில்லை என்றால் இந்தியா நடவடிக்கைகளை எடுக்கும்

pranab-1312.jpgகடந்த நவம்பர் மாதம் மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் சதித் திட்டம் தீட்டியவர்களை பாகிஸ்தான் சட்டத்தின் முன் நிறுத்தவில்லை என்றால் இந்தியா மேலதிக நடவடிக்கைகளை எடுக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.  எவ்விதமான நடவடிக்கை என்பதை முகர்ஜி விபரித்துக்கூறவில்லை என்றாலும், பாகிஸ்தானிடம் ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை இந்தியா கையளித்துவிட்டது என்றும், பாகிஸ்தான் அரசு அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

 மும்பையில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு பாகிஸ்தானின் அரசு நிறுவனங்களுடைய ஆதரவு இருந்திருக்கத்தான் வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துவதை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.  இப்படியான அறிக்கைகளால் போர் பீதிதான் மேலோங்குகிறது என பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் எச்சரித்துள்ளார்.

29 பொதுமக்கள் பலி 200 பேர் காயம்

kili-01.jpgகிளி நொச்சி பகுதியில் நவம்பர் மாதம் தொடக்கம் கடந்த சனிக்கிழமை வரை ஷெல் மற்றும் விமானத் தாக்குதலினால் 29 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 200 பேர் காயமடைந்துமுள்ளதாக வன்னியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வன்னிப்பகுதியில் இடம்பெற்று வரும் தொடர்ச்சியான ஷெல் மற்றும் விமானத் தாக்குதல்கள் காரணமாக கொட்டும் மழைக்கு மத்தியிலும் கிளிநொச்சி மாவட்டத்தின் கிழக்குப் பிரதேச மக்கள் விசுவமடு பகுதியை நோக்கி பெரும் எண்ணிக்கையில் இடம்பெயர்ந்துவருகின்றனர்.  கடந்த நவம்பர் மாதத்திலிருந்து சனிக்கிழமை வரையிலான காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 6 குழந்தைகள் உட்பட 29 சிவிலியன்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதல்களில் 36 பிள்ளைகள் உட்பட 200 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதல்களினால் பொதுமக்கள் மத்தியில் உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளதுடன், பலரும் காயமடைந்துள்ளனர். இதனால், அங்கு மக்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலைமை தோன்றியிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

திருமங்கலம் இடைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் லதா வெற்றி

latha-adiyaman.jpgதமிழ் நாடு திருமங்கலம் சட்டப் பேரவை இடைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் தி. மு. க. வேட்பாளர் லதா அதியமான் 39 ஆயிரத்து 266 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தல் 190 வாக்குச் சாவடிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அ. தி. மு. க. சார்பில் முத்துராமலிங்கம், தி. மு. க. சார்பில் லதா அதியமான், தே. மு. தி. க. சார்பில் தனபாண்டியன் மற்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பத்மநாபன் உட்பட 26 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 1,38,369 வாக்குகள் பதிவாகியிருந்தன.

இதில் 67,748 ஆண்களும், 70,621 பெண்களும் வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே, தி. மு. க. வேட்பாளர் லதா அதியமான் 79,422 வாக்குகளையும், அவரைத் தொடர்ந்து அ. தி. மு. க. வேட்பாளர் முத்து ராமலிங்கம் 40,156 வாக்குகளையும் பெற்றிருந்தனர். அதாவது அ. தி. மு. க. வேட்பாளரைவிட தி. மு. க. வேட்பாளர் 39,266 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும் தே. மு. தி. க. வேட்பாளர் தனபாண்டியன் 13,136 வாக்குகளையும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் பத்மநாபன் 831 வாக்குகளையும் பெற்றனர்.