அறிக்கைகள்

அறிக்கைகள்

கட்சிகள் அமைப்புகள் நிறுவனங்கள் வெளியிடும் அறிக்கைகள்

தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியலை சுமந்திரனுக்கு வழங்கக் கோரிக்கை!

நொவெம்பர் 16, 2024

மருத்துவர் ப.சத்தியலிங்கம்
பதில் பொதுச் செயலாளர்
இலங்கைத் தமிழரசுக் கட்சி
வவுனியா.

தேசியப் பட்டியல் இருக்கையை சனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனுக்கு வழங்குமாறு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்!

வணக்கம் !

நடந்து முடிந்த தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிராக (இதஅக), அச்சு மற்றும் இலத்திரினியல் ஊடகங்களும் போலித் தேசியம் பேசிய கட்சிகளும் மிகக் கடுமையான பரப்புரையை மேற்கொண்டன. குறிப்பாக எம்.ஏ. சுமந்தின் அவர்களுக்கு எதிராக கீழ்த்தமான பரப்புரையை மேற்கொண்டன. “தமிழரசுக் கட்சிக்குப் போட்டாலும் சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாம்” என்றும் பரப்புரை செய்யப்பட்டது.
இப்படியான பரப்புரையையும் தாண்டி இதஅக 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இருந்தும் இதஅக யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் தனது பிரநித்துவத்தை இழந்துள்ளது. இதனால் இதஅகட்சியின் வெற்றியைக் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் இதஅக க்கு கிடைத்த மொத்த வாக்குகள் 63,327 ஆகும். மேலதிகமாக 3,000 வாக்குகள் கிடைத்திருந்தால் இன்னுமொரு இடம் கிடைத்திருக்கும். நியமனம் மறுக்கப்பட்டதும் சுயேட்சையாகக் களம் இறங்கிய இருவர் இதற்கு முழுக் காரணம் ஆகும்.
இதஅக இன் அடிப்படை வேட்கையான தேசியம், தாயகம், தன்னாட்சியுரிமை என்ற கோட்பாடுகளை மட்டக்களப்பு மாவட்டத் தமிழ்மக்கள் மட்டுமே எண்பித் துள்ளார்கள். மொத்தம் 96,975 (33.78%) வாக்குகளைப் பெற்று 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

நல்லாட்சிக் காலத்தில் (2015 – 2019) வரைவு வடிவில் ஒரு அரசியல் யாப்பு வரையப்பட்டது. அதனை அன்றைய பிரதமர் இரணில் விக்கிரமசிங்க வேறு சில ஆவணங்களுடன் அரசியலமைப்புச் சபையில் சனவரி 11, 2019 அன்று சமர்ப்பித்தார். இந்த ஆவணம் ஒரு விவாதப் பத்திரம் என அழைக்கப்பட்டாலும் – அது ஒரு புதிய அரசியலமைப்பின் பூர்வாங்க வரைவு என்று அழைக்கப்பட்டாலும்- அது கிட்டத்தட்ட விரிவான அரசியலமைப்புத் திட்டமாகும்.

இந்தத் திட்டம் தற்போதைய 1978 அரசியலமைப்பின் கட்டமைப்பு மற்றும் தன்மையில் இருந்து விலகிக் காணப்பட்டது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறை அகற்றப்படுவது அதன் மையப்புள்ளியாகும். இந்த அரசியலமைப்புத் திட்டத்தை உருவாக்குவதில் இருவர் முக்கிய பங்கு வகித்திருந்தனர். ஒருவர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன மற்றவர் சனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆவார்கள்.

தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் அறிக்கையில் “புதிய அரசியலமைப்பொன்றுக்கான வரைவு தயாரிக்கப்படுவதோடுஇ அது பொதுமக்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு உரையாடலுக்கு இலக்காக்கப்பட்ட பின்னர் அவசியமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, பொது வாக்கெடுப்புக்கு மக்கள் முன் வைக்கப்படும்” எனக் கூறியுள்ளது. சனாதிபதி அனுர குமார திசநாயக்க தேர்தல் பரப்புரைக் காலத்தில் நல்லாட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட அரசியல்யாப்பினை முன்னெடுக்கப் போவதாகச் சொல்லியுள்ளார்.

எனவே சட்டப் புலமை வாய்ந்த, அரசியலமைப்பு உருவாக்கத்தில் பட்டறிவும் தேர்ச்சியும் பெற்ற ஒருவர் நாடாளுமன்றத்துக்குத் தேவைப்படுகிறார். ஏற்கனவே நல்லாட்சிக் காலத்தில் வரையப்பட்ட அரசியல்யாப்பு வரைவை எழுதியதில் பெரும் பங்காற்றிய சனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அவர்களே இதற்குப் பொருத்தமானவர் என்பதில் எவருக்கும் எந்த அய்யமும் இருக்காது.

இதஅக க்கு கிடைத்த தேசியப் பட்டியல் இருக்கை ஒன்றின் மூலம் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட முன்னாள் நா.உறுப்பினரும் சனாதிபதி சட்டத்தரணியுமான சுமந்திரன்இ நாடாளுமன்றம் செல்லமாட்டேன் எனக் கூறியுள்ளார். இருந்தும் கட்சியின் மத்திய குழுவே தேசியப் பட்டியல் இருக்கைகளைத் தீர்மானிக்கும் என்றும் அதற்குத் தான் கட்டுப்படுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் இருக்கையை சுமந்திரன் அவர்களுக்கு வழங்குமாறு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

மிக்க அன்புடன்

வே. தங்கவேலு
தலைவர்

தம்பிராசா வசந்தகுமார்
பொதுச் செயலாளர்

 

‘யார் இவர்’

யார் இவர்:
இப்படிவத்தை நிரப்புவதற்கு முன் இதனைக் கவனமாக வாசித்து இதிலுள்ள வழிகாட்டலுக்கு அமைய நிரப்பவும். இதனை நிரப்புவதற்கு 30 முதல் 60 நிமிடங்கள் தேவைப்படும். சிவப்பு புள்ளியிடப்பட்ட பகுதிகள் கட்டாயமாக நிரப்பப்பட வேண்டும். அவை நிரப்பப்படாவிட்டால் நீங்கள் படிவத்தை சமர்ப்பிக்க முடியாது.

‘யார் இவர்’ அறிமுகம்: இலங்கைத் தமிழ் சமூக ஆளுமைகள் பற்றிய விபரத் திரட்டு. இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டு இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் வாழ்கின்ற; தமிழ் சமூகத்திற்குள்ளும் அதற்கு அப்பாலும் சமூக முன்னேற்றத்திற்காக உழைத்தவர்களை, உழைக்கின்றவர்களை ஆவணப்படுத்தும் ஒரு முயற்சி. தேசம் வெளியீட்டகம் மேற்கொள்ளும் இந்த விபரத்திரட்டு காலத்திற்குக் காலம் புதுப்பிக்கப்பட்டு தொகுத்து வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

நோக்கம்: எமது ஆளுமைகளை ஆவணப்படுத்துவதும் அடுத்த தலைமுறையினருக்கு எமது ஆளுமைகளை பற்றிய குறிப்புகளைக் கையளிப்பதுமே ‘யார் இவர்’ வெளியீட்டின் நோக்கம். மேலும் துறைசார்ந்த ஆளுமைகளிடையே ஒரு வலைப்பின்னலை ஏற்படுத்தவும் தமிழ் சமூகத்தின் வாழ்நிலையை மேம்படுத்த நினைப்பவர்களிடையே ஒரு வலைப்பின்னளை ஏற்படுத்தி செயற்திறனை அதிகரிப்பதும் இதன் நோக்கமாக உள்ளது.

‘யார் இவர்’ குழு: நூலகவியலாளர் என் செல்வராஜா; ஊடகவியலாளர் த ஜெயபாலன்; ஆவணப் பதிவாளர் சி ஹம்சகௌரி; சமூக செயற்பாட்டாளர் க அரிமர்த்தனா.

தகவல் பாதுகாப்பு: நீங்கள் வழங்குகின்ற தகவல்களை ‘தேசம் பதிப்பகம்’ மட்டுமே கையாளும். வேறு எந்த நோக்கங்களுக்கும் பயன்படுத்தப்படமாட்டாது. இதில் தங்களுடைய தொலைபேசி இலக்கங்கள் நீங்கள் வாழும் நாடுகளின் சர்வதேச தொடர்புக்கான இலக்கத்துடன் பதிவு செய்யப்பட வேண்டும். நீங்கள் விரும்பாத பட்சத்தில் உங்களுடைய தொலைபேசி இலக்கங்கள், மின் அஞ்சல் மற்றும் முகவரிகள் எதுவும் வெளியிடப்படமாட்டாது. ஆனால் தேசம் வெளியீட்டகம் தொடர்புகளை மேற்கொள்ள நீங்கள் மேற்கொண்ட விபரங்களை இங்கு பதிவு செய்ய வேண்டும்.

கவனிக்க: பதிவுகளை கேட்கப்பட்ட கேள்விக்கு அமைய சரியாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம். சில பகுதிகளை in English / தமிழில் என்று குறிப்பாகக் கேட்டுள்ளோம். தயவு செய்து கேட்கப்பட்ட மொழியில் பதிவை மேற்கொள்ளவும். இப்படிவத்தை சமர்ப்பிற்கு முன் மீளவும் தகவலைச் சரிபார்த்து சமர்ப்பிக்கவும்.

கால ஒழுங்கு: கல்வி, தொழில், வெளியீடுகள், விருதுகள் அனைத்தும் கால ஒழுங்கில் முன்னையவை முதலிலும் பின்னையவை இறுதியிலும் வரவேண்டும். வழங்கப்பட்ட உதாரணங்களைப் பின்பற்றி உங்கள் பதிவை ஒழுங்குமுறையில் பதிவிடவும். மேலும் காற்புள்ளி , அரைப்புள்ளி ; மற்றும் முற்றுப்புள்ளி . என்பவற்றை உதாரணத்திற்கு அமைய பயன்படுத்தவும்.

‘யார் இவர்’ ஆவணப்படுத்தல் சர்வதேச ஆவணப்பதிவு விதிமுறைக்கு அமையவே மேற்கொள்ளப்படுவதால் தயவு செய்து பதிவுகளை வழங்கப்பட்ட உதாரணங்களைப் பின்பற்றி அதற்கு அமைய மேற்கொள்ளவும். ஆங்கிலத்தில் பதிவிடும் போது சின்ன எழுத்தையே (small letters) பிரதானமாகப் பயன்படுத்தவும். முதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தில் (Capital Letters) அமையலாம்.

மேலுள்ள பதிவிடும் முறையயைப் பின்பற்றுவதன் மூலம் எமக்கு ஏற்படும் வேலைப்பழுவை நீங்கள் குறைக்க முடியும். உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி.

இறுதியாக, இப்படிவத்தை பூர்த்தி செய்து அதனைச் சமர்ப்பித்த பின்; உங்கள் புகைப்படம் ஒன்றை, உங்கள் முழுப்பெயருடன் whoiswhotamil@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.

உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி.

த ஜெயபாலன் (தேசம்)
‘யார் இவர்’ வெளியீட்டுக் குழு
whoiswhotamil@gmail.com

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeN0GSPSE8FyXiZ03VUzqAMQ5eNTIdkScXdX15q8LjGqojlUw/viewform

குறிப்பு: இப்படிவத்தை நிரப்புவதற்கு முன் கவனமாக வாசித்து இதிலுள்ள வழிகாட்டலுக்கு அமைய நிரப்பவும். இதனை நிரப்புவதற்கு 30 முதல் 60 நிமிடங்கள் தேவைப்படும். சிவப்பு புள்ளியிடப்பட்ட பகுதிகள் கட்டாயமாக நிரப்பப்பட வேண்டும். அவை நிரப்பப்படாவிட்டால் நீங்கள் படிவத்தை சமர்ப்பிக்க முடியாது.

யாழ் மேலாதிக்கம் என்பது என்ன? : எம் ஆர் ஸ்டாலின்

யாழ் -மேலாதிக்கம் என்பது முதலில் ஒரு கருத்தியல் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். சிங்கள மேலாதிக்கம் என்பது எப்படி சிங்கள மக்களை குறிக்காமல் அந்த சிங்கள சமூகத்தில் இருந்து வெளிக்கிளம்புகின்ற ஆதிக்க சக்திகள் கொண்டிருக்கின்ற இனமேலாதிக்க கருத்தியலை குறிக்கின்றதோ அதேபோலத்தான் இக்கருத்தியலை நாம் புரிந்துகொள்ள முயலவேண்டும். சிங்கள மேலாதிக்கம் என்பது சிங்கள மக்களை குறிக்கவில்லை. சிங்கள மேலாதிக்கத்துக்கு எதிரான போராட்டம் என்பது சிங்கள மக்களுக்கு எதிரானதும் இல்லை. அதேபோலத்தான் யாழ் மேலாதிக்கம் என்பதையும் அதற்கெதிரான கருத்துப்பரிமாறல்கள் என்பதையும் யாழ்ப்பாண மக்களுக்கு எதிரானதாக கொச்சையாக புரிந்துகொள்ளக்கூடாது.

ஆனால் துரதிஸ்ட வசமாக இந்த புரிதலில் சிலருக்கு சிக்கல் இருக்கின்றது மேலும் சிலர் புரிந்து கொள்ளாதவாறு திரித்து கிழக்கில் இருந்து யாழ்-மேலாதிக்கம் குறித்து கருத்திடுவோர் மீது பிரதேசவாத துரோக முத்திரை குத்த முனைகின்ற போக்கும் அதிகரித்து வருகின்றது.

தமிழ் தேசியமென்பது பரந்துபட்ட தமிழ் மக்களின் சமூக பொருளாதார பிரச்சனைகளில் இருந்து உருவாகிய கருத்துருவமா? அன்றில் தமிழ் சமூகத்தில் ஆதிக்க சக்திகளாக அகல கால்பதித்து நின்ற யாழ்-மேட்டுக்குடிகளின் நலன்களில் இருந்தே அச்சிந்தனையுருவாக்கம் நிகழ்ந்ததா? இக்கேள்விகளுக்கான விடைகளை நாம் மேலோட்டமாக பார்ப்போம். அதனுடாகவே தமிழ் தேசியம் என்பதையும் யாழ் மேலாதிக்கம் என்பதையும் விளங்கிக்கொள்ளலாம்.

ஒரு சமூகமோ அல்லது ஒரு இனமோ அதன் அசைவியக்கம் சார்ந்து தனக்கான ஒரு கருத்தியலுடனேயே பயணிப்பது வழமையாகும். அந்த கருத்தியலின் உருவாக்கத்தில் அச்சமூகத்தின் சமூக பொருளாதார பண்பாட்டம்சங்களே நிச்சயம் தாக்கம் செலுத்தும். எனவே அந்த சமூக பொருளாதார பண்பாட்டு அம்சங்களில் ஆதிக்கம் செலுத்தும் பிரிவினரின் செல்வாக்கானது அச்சமூகத்தினது கருத்தியல் உருவாக்கத்தில் பிரதான பங்கெடுக்கும்.

அந்த வகையில் தமிழ் தேசியத்தின் வேர்களாகவும் பிதாமகர்களாகவும் யார் யாரெல்லாம் இருந்தார்கள் என்பதையிட்டு ஆராய்வோமானால் பொன் இராமநாதன், ஜ ஜி பொன்னம்பலம், சுந்தரலிங்கம், எஸ் ஜே வி செல்வநாயகம், அமிர்தலிங்கம் போன்றோரை தவிக்கமுடியாது. இவர்களெல்லாம் தனவந்தர்களாகவும், பிற்போக்குவாதிகளாகவும், ஏழைகளை சுரண்டி பிழைப்போராகவும், ஆதிக்கசாதி வெறியர்களாகவும், ஆணாதிக்க மற்றும் பிரதேசவாதிகளாகவும், ஏகாதிபத்தியத்தின் முகவர்களாகவும் இருந்தார்கள் என்பது நமக்கேயுரித்தான வேதனையான வரலாறு ஆகும். இந்த பின்னணியில் இருந்துதான் தமிழ் தேசியமென்பதன் சிந்தனை மற்றும் கருத்தியல் உருவாக்கத்தில் தாக்கம் செலுத்திய வர்க்கத்தினரையும் இத்தமிழ் தேசியமென்பதன் ரிஷிமூலம் என்ன என்பதையும் நாம் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

1920களில் பள்ளிக்கூடங்களிலே அனைத்து மாணவர்களுக்கும் சம ஆசனமும் சமபந்தி போசனமும் வழங்கப்படக்கூடாதென்றும் தாழ்த்தப்பட்ட சமூக குழந்தைகளை தள்ளி வைக்க வேண்டுமென்றும் பிரித்தானிய தேசாதிபதியிடம் சென்று தலைகீழாக நின்று வாதாடியவர் பொன்.இராமநாதன் ஆகும்.

அதேபோல எல்லோருக்கும் வாக்குரிமை வழங்க கூடாது ‘வேளாளருக்கும் தனவந்தருக்கும்’ மட்டுமே வாக்குரிமை வேண்டும் என்றும் சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டால் அது கும்பலாட்சிக்கு வழிகோலும் என்று டொனமூர் ஆணைக்குழு முன் சென்று சாட்சியம் சொன்னவரும் இந்த பொன்.இராமநாதன்தான்.

1944ஆம் ஆண்டு இலவச கல்வி மசோதா முன்வைக்கப்பட்டபோது
ஜி.ஜி பொன்னம்பலம் சிறிபத்மநாதன், மற்றும் அருணாசலம் மகாதேவா போன்றோர் சட்டசபையிலே ஒருமித்து நின்று அந்த மசோதாவை எதிர்த்தார்கள்.

அதுமட்டுமல்ல ஆங்கிலத்தை அகற்றி சுயபாஷைகளை அரச கரும மொழியாக்குவோம் என்று தென்னிலங்கையில் சுயபாஷை இயக்கம் உருவானபோது அதனை கடுமையாக எதிர்த்து ‘சிங்களமும் வேண்டாம் தமிழும் வேண்டாம்’ என்று அரச கரும மொழியாக ஆங்கிலமே இருக்க வேண்டுமென்று காலனித்துவத்தின் முகவர்களாக வாதங்களை முன்வைத்தவர்கள் ஜி.ஜி.பொன்னம்பலம் போன்ற தலைமைகளேயாகும்.

1947ல் பத்து லட்ஷம் மலையக மக்களின் வாக்குரிமையை பறிக்க காரணமான பிரசா உரிமை சட்டத்தை ஆதரித்து யுஎன்பியின் மக்கள் விரோத ஆட்சிக்கு துணைபோனவரும் இந்த பொன்னம்பலம்தான்.

இன்னுமொருவர் தமிழ்த்தேசியத்தின் தத்துவவாதி என்றும் ‘அடங்கா தமிழன்’ என்கின்ற ‘பெருமைமிகு’ அடைமொழியாலும் போற்றப்படுபவர் சுந்தரலிங்கம். அந்த மனிதனைப்போல் சாதிவெறியன் இனியொருபோதும் பிறக்க முடியாது.

1957 ல் நெற்காணி சட்டம் கொண்டுவரப்பட்டபோது செல்வநாயகம் தலைமையிலான தமிழரசு கட்சியினர் அதை எதிர்த்தனர்.

ஏழை எளிய மாணவர்களுக்கு சமபந்தி போசனத்தையும் சம ஆசனத்தையும் மறுத்தவர்கள், இலவச கல்வி கூடாது ‘கண்ட கண்டவர்களுக்கு’ கல்வி எதற்கு என்று குவித்திரிந்தவர்கள், வாக்குரிமையா ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பெண்களுக்கும் கூடவே கூடாது என்று கொக்கரித்தவர்கள், சுயபாஷையா? எதற்கு? ஆங்கிலத்தை அகற்றத்தேவையில்லை என்று தமது சொந்த நலன்களில் நின்று அடித்து பேசியவர்கள், மலையக மக்களை நிர்கதிக்குள்ளாக்கியவர்கள், ஏழைமக்களுக்கு காணிகளை வழங்குவதை எதிர்த்தவர்கள் எல்லோரதும் அரசியல் பரம்பரியமே இன்று வரை தொடருகின்ற தமிழ் தேசிய அரசியலாய் இருக்கின்றது.

மக்களின் நலன் சார்ந்த திட்டங்களையும் மசோதாக்களையும் எதிர்த்தவர்கள், பிரித்தானிய-சிங்கள ஆளும் வர்க்கத்தோடு இணைந்து கொண்டு ஏழை மக்களை ஒடுக்கி பிரபுத்துவ அரசியல் செய்தவர்கள் யாரோ அவர்களே துரதிஸ்ட வசமாக எமக்கு தேசியத்தை போதித்தனர்.

1947 ல் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது ‘அங்கே ஜின்னா பாகிஸ்தானை பிரித்தார். இங்கே பொன்னா தமிழீழத்தை பிரித்து எடுப்பேன்’ என்று பேசித்திரிந்தார் பொன்னம்பலம். பாராளுமன்ற முறைமை அறிமுகமானபோது தேர்தல் அரசியலுக்கான இனவாத அணிதிரட்டல் ஒன்றை நோக்கியே அவரது இந்த பேச்சுக்கள் இருந்தன.

1956ல் அரச கருமமொழிச்சட்டம் வந்தபோது பிரித்தானியரின் அருவருடிகளாக ஆங்கிலம் கற்று அரச நிர்வாக அதிகாரிகளாக இலங்கையெங்கும் பரவியிருந்த யாழ்ப்பாணத்து அதிகார வர்க்கம் பெரும் பாதிப்பினை எதிர்கொண்டது.

1971ல் கல்வி தரப்படுத்தல் வந்தபோதும் இந்த அதிகார வர்க்கத்தின் வாரிசுகளே பாதிப்படைந்தனர். இந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளவே ‘தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிட்டது ஒட்டுமொத்த தமிழர்கள் ஒடுக்கப்படுகின்றார்கள்’ என்று ஒப்பாரிவைத்தனர் இந்த யாழ்ப்பாண அதிகார வர்க்கத்தினர்.

ஆனால் அதற்கு மாறாக கல்வித்தரப்படுத்தல் என்பது வடக்கு கிழக்கு மாகாணங்களில் யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த ஏனைய ஆறு மாவட்ட மக்களுக்கும் பெரும் வரப்பிரசாதமாய் அமைந்திருந்தன. இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குரிய இட ஒதுக்கீட்டுக்கு சமனான அந்த சட்டத்தை தமிழரசு கட்சியினர் யாழ் மேட்டுக்குடிகளின் நலன்களில் இருந்து எதிர்த்தனர்.

மூதூர் பிரதிநிதியான தங்கதுரையும் மட்டக்களப்பு பிரதிநிதியான இராஜதுரையும் கல்வி தரப்படுத்தலால் பரந்து பட்ட தமிழர்களுக்கு வரலாற்றில் முதற்தடவையாக பல்கலைக்கழக வாய்ப்புக்கள் கிடைக்கும் என்கின்ற மாற்று கருத்துக்களை தமிழரசு கட்சியில் முன்வைத்தபோது அவை புறந்தள்ளப்பட்டன. கல்வி தரப்படுத்தல் ஒட்டு மொத்த தமிழினத்துக்கும் எதிரான இனவாத செயற்பாடு என்றே தமிழரசு கட்சி பிரச்சாரத்தை முடுக்கிவிட்டது.

பிரிவினை கோரிக்கை எமது மக்களையை அழித்தொழிக்கும் என்று வட்டுக்கோட்டை மாநாட்டிலேயே வந்து சொன்னார்கள் கனவான் தேவநாயகமும் தொண்டமானும். ஆனால் கிழக்கினதும் மலையகத்தினதும் அதிருப்திகளை அமிர்தலிங்கம் போன்றோர் கருத்தில் கொள்ளவில்லை.

யாழ்-மேட்டுக்குடிகள் யாழ்ப்பாணத்துக்கு உள்ளே ஒடுக்கப்பட்ட மக்களினதும் யாழ்ப்பாணத்துக்கு வெளியே வாழும் ஏனைய பிரதேச மக்களினதும் சமூக பொருளாதார வாழ்வியல் பிரச்சனைகளை பின்தள்ளி தாமும் தமது வாரிசுகளும் எதிர்கொண்ட உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சனைகள் மட்டுமே அனைத்து தமிழருக்கும் உரியதான பிரச்சனைகளாக அரசியல் மயப்படுத்தினர். தமது நலன்களை அடிப்படையாக கொண்டே ஆயுத போராட்டத்தை முன்மொழிந்தனர். அதையே தமிழ் தேசியமென்றனர். தமிழீழ கோரிக்கையை பிறப்பித்தனர்.

இதுதான் யாழ் மையவாத சிந்தனை ஆகும். ஒரு சமூகத்தில் மேலாட்சி செலுத்துபவர்கள் தமது நலன்களில் மட்டுமே மையம்கொள்ளும் சிந்தனையின் வழியிலேயே அனைவரையும் பயணிக்க கோருவதும் அதுவே தமிழ் தேசியம் என்று முழங்குவதும் மேலாதிக்கமாகும்.

அதனால்தான் 1960-1970 காலப்பகுதியில் வடமாகாணத்தில் வெளிக்கிளம்பிய சாதி தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்களை தலைமையேற்று நடத்த அன்றைய காலத்தில் முக்கிய அரசியல் சக்திகளாக இருந்த தமிழ் காங்கிரசும் தமிழரசு கட்சியும் முன்வரவில்லை. அது முழுக்க முழுக்க வர்க்க அரசியல் பேசுகின்ற இடதுசாரி கட்சிகளாலேயே வழிநடத்தப்பட்டது. அதுமட்டுமன்றி அந்த சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை பாராளுமன்றத்தில் கிண்டலடித்து உரையாற்றினார் தளபதி அமிர்தலிங்கம். தமிழ் தேசியத்தின் தந்தை என்று விளிக்கப்படுகின்ற செல்வநாயகமோ ‘நான் கிறிஸ்தவன் இது இந்துக்களின் பிரச்சனை’ என்று ஒதுங்கிக்கொண்டார்.

ஆனால் தேசியமென்பது சமூகத்தில் ஒடுக்கப்படுகின்ற சாமானிய மக்களின் பிரச்சனைகளை புறமொதுக்கி ஆதிக்க வர்க்க நலன்களை முதனிலைப்படுத்துவது அல்ல. மேட்டுக்குடிகளின் பிரச்சனைகளை ஒட்டுமொத்த இனத்தின் அரசியல் அபிலாசைகளாக மேலிருந்து கீழ் நோக்கி திணிப்பதற்கு பெயர் தேசியமல்ல. மாறாக பரந்துபட்டு பெரும்பான்மையாக வாழும் அடித்தள மக்களிடமிருந்து அவர்களின் பிரச்சனைகளில் மையம்கொண்டு கீழிருந்து மேலாக பரந்து விரிய வேண்டியதே தேசியவாத குரலாகும். தேசியம் என்பது வெறும் சொல்லாடல் அல்ல. அது குறிக்கின்ற எல்லைக்குள் வாழும் முழு சமுதாயங்களினதும் வளர்ச்சிக்கான கருத்தியலாக இருக்கவேண்டும்.

ஒரு தேசியவாதத்தின் தொடக்கத்தில் அந்த இனத்தின் சிந்தனை மட்டத்தில் மேலாதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின் பிரச்சனைகளே முன்னிறுத்தப்படுவது சிலவேளைகளில் தவிர்க்க முடியாதது ஆகும். ஆனால் காலப்போக்கில் அனைத்து மக்களது குறைபாடுகளையும் உள்வாங்கி தன்னை முற்போக்கான தேசியமாக வளர்த்துக்கொள்வதுண்டு. ஆனால் தமிழ் தேசியத்தில் அது இம்மியளவும் சாத்தியமாகவில்லை.

ஒரு தேசிய இனத்தின் முதன்நிலை பண்பு கூறுகளான மொழி நிலம் பண்பாடு பொருளாதாரம் என்பவற்றை வெறும் சடத்துவ நோக்கில் அணுகுவதால் மட்டும் தேசிய கூட்டுணர்வை உருவாக்கி விட முடியாது. வடக்குக்கும் கிழக்குக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான (மடுவென்பது கிடங்கெனக்கொள்க) அரசியல்,பொருளாதார,பண்பாட்டு வித்தியாசங்கள் குவிந்து கிடக்கின்றன. வரலாற்று ரீதியாக ஒருபோதும் வடக்குக்கும் கிழக்குக்குமான ஒரே அரசியல் தலைமை இருந்ததுமில்லை.

அதையும் தாண்டி வடக்கில் எங்கே பொதுப்பண்பாடு காணப்படுகின்றது. யாழ்ப்பாண சமூகம் என்பது சாதிகளால் கட்டமைக்கப்பட்ட அதிகார படிநிலை சமூகமாகும். சாதிக்கொரு சவக்காலையும் சாதிக்கொரு வீதியும் சாதிக்கொரு கோவிலும் வைத்துக்கொண்டு தமிழினத்துக்கான பொதுப்பண்பாட்டை எப்படி உருவாக்க முடியும்? எல்லோருக்குமான சமூகநீதியை எங்கே தேடுவது? நாமெல்லோரும் ஓரினம் என்னும் கூட்டுணர்வு எப்படி சாத்தியமாகும்? இன்றுவரை அகமண முறையை கைவிட தயாரில்லாது சாதிகளின் பொருட்காட்சி சாலையாக தோற்றமளிக்கும் யாழ்ப்பாணத்தில் வாழுவது ஓரினமா? அன்றி ஒரே மொழி பேசும் பல பழங்குடியினங்களா என்று கேட்க தோன்றுகின்றது.

யாழ்ப்பாணத்தில் இன்றுவரை பல கோவில்கள் தலித் மக்களுக்காக பூட்டிக்கிடக்கின்றன. ‘ஊர்கூடி தேரிழுப்பதென்பது’ முதுமொழி. ஆனால் ஊரிலுள்ள ஆதிக்க சாதிகள் புலம்பெயர்ந்து போனபின்பு தேரிழுக்க உயர்குடிகள் இல்லை என்பதால் ஜெஸிபி மெசினை கொண்டு தேரிழுக்கின்றோம் எதற்காக? தலித் மக்களை தேரில் கை வைக்க விடக்கூடாதென்பதற்காகத்தானே, தேர் தீட்டு பட்டுவிடும் என்பதற்காகத்தானே. இந்த நிலையில் தமிழருக்கான பொது பண்பாடு எங்கேஇருக்கின்றது? இருப்பதெல்லாம் வெறும் சாதிய பண்பாடு மாத்திரமேயாகும். அவற்றை கட்டிக்காப்பதுவும் யாழ்ப்பாண- மேலாதிக்கம்தான் நாம் குரல் கொடுப்பது யாழ்பாணத்து மேலாதிக்கத்தால் ஒடுக்கப்படும் ஏழைகள் மற்றும் சாதியரீதியில் ஒடுக்கப்படும் தலித் மக்களுக்காகவும்தான்.

இந்த லட்ஷணத்தில் யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற கட்சிகளின் தலைவர்களில், பாராளுமன்ற உறுப்பினர்களில், மாகாண சபை உறுப்பினர்களில் யாதொருவராயினும் தாழ்த்தப்பட்ட குலத்தவர் உண்டோ என்கின்ற கேள்வியெழுப்புதல் அவசியமற்றது ஆகும். அப்படி எதுமே இன்னும் சாத்தியமாகவில்லை. ஆனால் தமிழ் மக்களின் நலன்சார்ந்து ஒரு சிறு துரும்பையேனும் நகர்த்திய வரலாற்றை கொண்டிராத கறுவாக்காட்டு பரம்பரைகளான சுமந்திரனும்,விக்கினேஸ்வரனும்,கஜேந்திரகுமாரும் மக்களின் தலைவர்களாக வலம் வர முடிகின்றது.

உண்மையில் தமிழ் தேசிய கொள்கை சார்ந்து தேர்தல் அரசியலுக்கு அப்பால் எத்தனை சிவில் அமைப்புக்கள் செயலாற்றுகின்றன? எத்தனை தன்னுரிமை செயற்பாட்டாளர்கள் களத்தில் வேலை செய்கின்றனர்? என்று கேட்டால் என்ன பதில்? வெறுமனே வாக்கு வங்கி அரசியலுக்காகவே இந்த தமிழ் தேசியவாத பிதற்றல்களை யாழ்ப்பாண கட்சிகள் காவித்திரிகின்றன என்பதே உண்மையாகும். அதனாற்தான் இந்த யாழ் மேட்டுக்குடிகள் பேசுகின்ற தேசியம் என்பது போலியானது. மக்களை ஏமாற்றி மேட்டுக்குடிகளின் நலன்களை மட்டுமே பூர்த்திசெய்கின்ற கபட நோக்கம் கொண்டது என்று சொல்லுகின்றோம்.

ஆனால் தேசியவாதமென்பது இதுவல்ல. பொங்கு தமிழ் ஆரவாரம் பண்ணி மக்களை அணிதிரட்டுவதாலோ பொங்காத தமிழ் ஆர்ப்பரிப்போ செய்து தென்னிலங்கைக்கு சவால் விடுவதாலோ தமிழ் தேசியம் தழைத்தோங்க முடியாது. பூர்வீகம் பற்றிய புல்லரிக்கும் வீர வசனங்களாலோ முள்ளி வாய்க்காலில் சத்தியப்பிரமாணம் எடுக்கின்ற ஆசாமிகளாலோ தமிழ் தேசியத்தை கட்டியெழுப்ப முடியாது.

தேசியம் என்பது பற்றி ரஷ்ய புரட்சியாளன் லெனின் என்ன சொன்னார்? ஸ்டாலின் என்ன சொன்னார்? அல்லது ரோசா லுக்சம்பேக் என்ன சொன்னார்? பெனடிக் ஆண்டர்சன் என்ன சொன்னார்? அந்தோனியா கிராம்சி என்ன சொன்னார்? எரிக் ஹாப்ஸ்வாம் என்ன சொன்னார்? என்பதெல்லாம் நமக்கு புதியவையல்ல. இவையனைத்தையும் எமது முன்னோர்களே சொல்லிச்சென்றுள்ளனர்.

‘துடியன்,பாணன் கடம்பன்,பறையன் என இந்நான்கல்லது குடியும் இலவே’ என்கின்றது புறநானுற்று அறம். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பான் கணியன் பூங்குன்றனார் என்னும் சங்ககால தமிழ் புலவன். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பார் திருவள்ளுவர்.

இவைதான் அனைவரையும் உள்ளீர்க்கின்ற தேசிய தர்மம் ஆகும். தமிழர்தம் தேசியத்தின் போற்றத்தக்க முதிசங்கள் இவையே ஆகும். இத்தகைய அரவணைப்பிலும் அகன்று விரிந்த மனப்பான்மையிலும் உருவாகின்ற தமிழுணர்வுதான் தமிழ் தேசியத்தின் அடிப்படையாக இருக்க முடியும்.

தேசியவாதமென்பது இன வெறி, மதவெறி, சாதிய ஆதிக்கம், தனவந்தரதிகாரம், பிரதேச வெறி, ஆணாதிக்கம், பரம்பரையதிகாரம், சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் சுரண்டல், ஏகாதிபத்தியம் போன்ற அனைத்துவித அதிகாரங்களுக்கும் எதிரான ஒருமித்த குரல்களின் சங்கமமாக உருப்பெறவேண்டியதாகும். அதனுடாக சுயநிர்ணயம் கொண்ட வன்முறையற்ற சமூகநீதியுடன் கூடிய சமத்துவ சமூகத்தை கட்டியெழுப்பும் இலட்சிய வேட்கை கொண்டதே தேசியவாதமாகும்.

ஆனால் நமது தமிழ் தேசியமோ யாழ்பாணத்து மேட்டுக்குடிகளின் மையத்தில் நின்றுகொண்டு இவன் பள்ளன், இவன் பறையன் அவன் வன்னிக்காட்டான், அடுத்தவன் மட்டக்களப்பு மடையன், அதற்கப்பால் சோனி, தொலைவில் இருப்பவன் தோட்டக்காட்டான் என்று வக்கணம் சொல்லி சொல்லியே தன்னை உருவாக்கியது. பன்மைத்துவ தன்னிலைகளையும் தனித்துவங்களையும் அங்கீகரித்து உள்ளீர்ப்பதற்கு பதிலாக அனைவரையும் நிராகரித்து தனிமையப்படுத்தி வெளித்தள்ளியது.

நாம் வாழுகின்ற மண்ணையும்,காற்றையும்,கடலையும், நீர்நிலைகளையும் பேணிப்பாதுகாத்தலே இந்த தேசியத்தின் அடிப்படையாகும். அதற்காகவே ஆளும் உரிமையை நாம் கோருகின்றோம் என்பதே அதன் தாற்பரியமாகும். அதேபோன்று அனைவரும் சமம் என்பதும், நாமெல்லாம் ஒரே இனமென்பதும் மனதளவிலும் செயலளவிலும் திரளாகின்ற உணர்வே தேசிய உணர்வாகும்.

செல்வநாயகம் 1949 ஆம் ஆண்டு தமிழரசு கட்சியை தொடங்கி கிழக்கு மாகாணத்துக்கு வந்து தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றாகி அணிதிரளுங்கள் சமஷ்டியை பெற்றுத்தருகின்றேன் என்று அறைகூவல் விடுத்தார். அப்போது சமஸ்டி சாத்தியமில்லாதது,கிழக்கு மூவினங்களும் வாழும் இடம் இங்கே இனவாத அரசியல் வேண்டாம், இரத்த ஆறு ஓட வழிவகுக்க வேண்டாம் என்று செல்வநாயகத்தை எச்சரித்தார் மட்டக்களப்பின் நல்லையா மாஸ்டர் என்னும் பெருந்தகை. பதிலுக்கு கிழக்குமாகாணத்தின் சமூக, பொருளாதார, கல்வி, சுகாதார, மேம்பாட்டுக்காக அயராது பாடுபட்டு சாதனை புரிந்த அந்த மகானை அரச கைக்கூலி என்று பிரச்சாரம் செய்து தோற்கடித்தது தமிழரசு கட்சி.

மறுபுறம் செல்வநாயகத்தின் அறைகூவலின் பின்னால் ஒன்றுபடுவோம் என்று சொல்லி தமிழரசு கட்சியை கிழக்கு மாகாணத்தின் மூலை முடுக்குகளெல்லாம் கொண்டு சென்று வளர்த்து 1977ல் தமிழர் தலைவராக மட்டக்களப்பிலிருந்து மேலெழுந்து வந்த இராஜதுரைக்கு என்ன நடந்தது? அவரை வஞ்சித்து, ஒதுக்கி, துரோகியாக்கி வெளியேற்றியது தமிழரசுகட்சி. சொல்லப்பட்ட காரணம் என்னதெரியுமா? 1978ஆம் ஆண்டு சூறாவளியால் அழிந்து கிடந்த மட்டக்களப்பை பார்வையிட வந்த பிரதமர் ‘பிரேமதாசாவை வரவேற்கச்சென்றது குற்றம்’ என்றது அமிர்தலிங்கத்தின் குற்றப்பத்திரிகை. அத்தனைக்கு பின்னரும் கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரலில் செல்வநாயகத்தின் 35 வது நினைவு கூட்டமொன்றுக்காக யாழ்ப்பாணம் சென்ற ராஜதுரையை ‘மட்டக்களப்பு சக்கிலியா’ ‘துரோகி’ என்று துரத்தினார் சிவாஜிலிங்கம் என்கின்ற தமிழ் தேசிய பித்தர்.

* யாழ் மேயரான செல்லன் கந்தயன் யாழ்- நூலகத்தை திறந்துவைத்தல் கூடாது என்கின்ற மேட்டுக்குடிகளுக்கு ஒத்தாசை வழங்கி திறப்புவிழாவை தடுத்து நிறுத்தினர் தமிழீழவிடுதலைப்புலிகள்.

*தமிழ் பேசும் இஸ்லாமியரை தமிழ் தேசியத்துக்கு வெளியே துரத்தியடித்தனர் தமிழீழ விடுதலைப்புலிகள்.

*2004 ல் தமிழீழத்தின் நிழல் நிர்வாக கட்டமைப்புக்கு 32 துறை செயலாளர்களை தமிழீழ விடுதலை புலிகள் நியமித்தபோது 31 செயலர்களை வடமாகாணத்துக்குள் சுருட்டிக்கொள்ளுதல் தகுமோ? என்று கேட்ட கருணாம்மானை துரோகி என்று அறிவித்து வெருகல் படுகொலைக்கு ஆணையிட்ட அன்றே அறுந்து போனது வடக்கு கிழக்கு தாயக உறவு.

பிரபாகரனது முப்பத்துவருட ஆயுதப்போராட்டம் தமிழ் பேசும் மக்களின் (சாதி,மத, பிரதேச,) பன்மைத்துவத்துவ குரல்களை அங்கீகரிக்க மறுத்து வீணாகி மண்ணோடு மண்ணாகிப்போனது..

இப்போது கிறிஸ்தவரையும் கழித்துவிட்டு இந்து கட்சிகளின் உருவாக்கத்துக்கு அத்திவாரம் இட்டுக்கொண்டிருக்கின்றது. யாழ்-மையவாத சிந்தனை முகாம். அதனை மூத்த தமிழீழவாதிகளில் ஒருவரான மறவன் புலவு சச்சுதானந்தம் கச்சிதமாகவே செய்து வருகின்றார்.

அண்மைக்காலமாக பெண்களின் குரலை உதாசீனம் செய்துவருகின்றது தமிழரசுக்கட்சி. கடந்த தேர்தலில் மட்டக்களப்பு மங்களேஸ்வரி சங்கருக்கு வேட்பாளர் வாய்ப்பு மறுக்கப்பட்டமைக்கு சுமந்திரன் சொன்ன காரணம். ‘அவர் துரோகம் செய்ய கூடியவர்’ என்று முன்னரே உணர்ந்தாராம் சுமந்திரன். இப்படி அவரே முடிவெடுப்பதென்றால் கட்சியின் செயலாளர் பதவியை துரைராசசிங்கத்துக்கு கறிவேப்பிலைக்கா கொடுத்து வைத்திருக்கின்றது தமிழரசு கட்சி? இதைத்தான் யாழ் மேலாதிக்கம் என்கின்றோம். ஒரு கணவனை இழந்த பெண் என்னும் வகையில் சசிகலா ரவிராஜை வைத்து வாக்குசேகரிக்க முயன்றது தமிழரசு கட்சி. அதன்பின்னர் அவருக்கு நடந்த அநியாயத்துக்கு விளக்கம் தேவையில்லை.

தமிழ் சமூகத்தில் மேலாதிக்கம் செலுத்துகின்ற இந்த யாழ்ப்பாண மேட்டிமை சக்திகளிடத்தில் உண்மையான தமிழ் தேசிய சிந்தனை இல்லை. இருப்பதெல்லாம் ஆதிக்க சிந்தனை மட்டுமேயாகும். அதில் சிங்களவர்களிடமிருந்து அதிகாரத்தை கைமாறி புதிய எஜமானர்களாக தங்களுக்கு முடி சூட்டி கொள்ளுகின்ற கபட நோக்கம் மட்டுமே மறைந்திருக்கின்றது. அதுவே வடமாகாண சபை முதலமைச்சர் விடயத்திலும் நடந்தேறியது.

நம்மை நாமே ஆளுதல் என்கின்ற அற்புதமான சிந்தனை ஆட்சியாளர்களை அடையாளமிட்டு மலினப்படுத்தப்பட்டுவிட்டது. சிங்கள ஆட்சியாளர்களுக்கு பதிலாக தமிழ் எம்பிக்களும் அமைச்சர்களும் முதலமைச்சரும் வந்துவிட்டால் தமிழ் தேசியம் தழைத்தோங்கும் என்று அப்பாவித்தனமாக நம்பவைக்கப்பட்டுள்ளனர் எமது மக்கள். வெறும் இனவாத வெறியை விதைத்து ஆளுவதற்கான உரிமைக்காக மட்டுமே போராட்டம் என்கின்ற எளிமைப்படுத்தப்பட்ட கருத்துருவமே சாமானிய மக்களின் மனநிலையில் ஆழமாக பதிய வைக்கப்பட்டுள்ளது..

இதுவரைகாலமும் தமிழ் தேசியத்தை தலைமையேற்று வழிநடத்தியவர்களில் அநேகமானோர் யாழ்- மேட்டுக்குடி நலன்களில் மையம்கொண்டுள்ள ஆதிக்க சிந்தனைக்கு மாற்றானவர்களாய் இருக்கவில்லை. அப்படியிருக்க முனைந்த ஒரு சிலரும் மைய நீரோட்ட அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டனர். ஒதுக்கப்பட்டனர். அல்லது துரோகிகள் என்று கொன்றொழிக்கப்பட்டனர். இத்தகைய கேடுகெட்ட யாழ்-மேட்டுக்குடி தலைமைகளுடைய ஆதிக்க சிந்தனையின் அம்மணத்தை மறைக்க தேசியம் என்றும் தாயகமென்றும் விடுதலையுணர்வு என்றும் வேசம்கட்டுவதற்கு பெயர்தான் யாழ்- மேலாதிக்கம் என்பதாகும்.

அதனால்தான் சொல்கின்றோம். இந்த யாழ்-மேட்டுக்குடிகள் பேசுகின்ற தமிழீழம் என்பது யாழ்-மேலாதிக்க தமிழீழம்தான் . இந்த யாழ்-மேட்டுக்குடிகள் பேசுகின்ற தமிழ் தேசியம் என்பது யாழ் மேலாதிக்க தமிழ் தேசியம்தான். இந்த யாழ்-மேட்டுக்குடிகள் பேசுகின்ற தமிழ் நோக்கு என்பதும் யாழ் மேலாதிக்க தமிழ் நோக்குத்தான். என்றொருநாள் தமிழ் பேசும் மக்களின் தலைமையானது யாழ்-மேட்டுக்குடிகளிடமிருந்து கைமாறுகின்றதோ அன்றுதான் தமிழர்களின் நன்னாள் தொடங்கும். (Source: padakutv.lk)

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி மாகாணசபை தேர்தலுக்கு தயாராக வேண்டும்! – முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள்

பாசமிகு சகோதர சகோதரிகளே!

அன்பார்ந்த நண்பர்களே!

ஆற்றல் மிகு தோழர்களே!

இலங்கையில் கடந்த ஆண்டு நவம்பரில் சுமார் 60 சதவீதமான மக்களின் வாக்குகளைப் பெற்று கோத்தபாய ராஜபக்ச மேன்மைதகு ஜனாதிபதியானார். தொடர்ந்து பாராளுமன்றத்தில் சிறுபான்மையான எண்ணிக்கையுடன் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த மஹிந்த ராஜபக்ச அப்போது ஆண்டு கொண்டிருந்த கட்சியினரின் ஒப்புதலுடன் கௌரவ பிரதமராகி தற்காலிகமாக மத்திய அமைச்சரவையை அமைத்துக் கொண்டார்.

இந்த ஆகஸ்ட 5ம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 60 சதவீதத்துக்கு மேற்பட்ட மக்களின் வாக்குகளைப் பெற்றதோடு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்களைப் பெற்றுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனைக்  கூட்டணி மஹிந்த ராஜபக்சவைப் பிரதமராகக் கொண்டு மிகவும் உறுதியான ஆட்சியை அமைத்துள்ளது.

கடந்த ஆறு மாதங்களாக உலகை ஆட்டிப்படைத்து வருகின்ற கொரோனா வைரஸ் இதுவரை இரண்டரை கோடி பேருக்கு மேல் பீடித்து எட்டரை லட்சம் பேரை காவு கொண்டு போய் விட்டது: உலக பொருளாதாரத்தை உலுக்கிப் போட்டுள்ளது: மனித குலம் அரண்டு போய் நிற்கின்றது: கொரோனாவின் தாக்கம் இலங்கையில் குறைவே. என்றாலும் பயமும் பதட்டமும் உலக தரத்திலேயே இங்கும் உள்ளது. இலங்கையின் பல்வேறு பொருளாதாரத் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பக்கத்து நாடுகளிலும் தூரத்து நாடுகளிடமிருந்தும் பெருந்தொகையில் கடன் வாங்காமல் நாட்டை நிர்வகிக்க முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது.

பெரும் நம்பிக்கைகளோடு இலங்கை மக்கள் புதிய அரசாங்கத்துக்கு தமது வாக்குகளை அளித்திருக்கிறார்கள். மைத்திரி – ரணில் கூட்டாட்சி மீது விரக்தியும் ஆத்திரமும் கொண்ட பெரும்பான்மையான மக்கள் ராஜபக்சக்களிடம் ஆட்சியை மீண்டும் ஒப்படைத்திருக்கிகிறார்கள்  மக்களின் எதிர்பார்ப்புகளில் கணிசமான அளவுக்காவது  ராஜபக்சக்களின் ஆட்சி அரசியல் பொருளாதார சாதனைகளை ஆற்றுவார்களா என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும.

மிகப் பெரும்பான்மையான சிங்கள மக்களின் வாக்குகளாலேயே தான் ஜனாதிபதியானதாக கோத்தபாய ராஜபக்ச தமது பதவியேற்பின் போது வெளிப்படையாகவே கூறினார். அந்தத் தேர்தலில் வடக்கு – கிழக்கு வாழ் தமிழர்களில் 12 சதவீமானவர்கள் கூட அவருக்கு வாக்களிக்கவில்லை. ஆனால் அடுத்த ஒன்பது மாதத்துக்குள் நடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் வாக்குகள் ராஜபக்சக்களின் கட்சிக்கும் அவர்களோடு அணிசேர்ந்து நிற்கும் தமிழ் அரசியற் சக்திகளுக்கும் மிகவும் மாறுபட்ட முறையில் வாக்களித்திருத்திருக்கிறார்கள்:

யாழ்ப்பாணம் மற்றும் வன்னித் தமிழர்களில் மூன்றில் ஒரு பங்கினரும்

திருகோணமலை மாவட்ட தமிழர்களில் சுமார் 25 சதவீதமானோரும்

மட்டக்களப்பு மாவட்ட தமிழர்களில் 50 சதவீதமானோரும்

அம்பாறை மாவட்ட தமிழர்களில் 55 சதவீதமானோரும்

ராஜபக்சக்களின் கட்சிக்கும் மற்றும் அவர்களுக்கு ஆதரவான கட்சிகளுக்கும் வாக்களித்திருக்கிறார்கள்.

இது சரியா பிழையா என்பதற்கப்பால் ஒரு வரலாற்று மாற்றம் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது இந்த ஆட்சி பற்றி எதிரும் புதிருமாக பல அபிப்பிராயங்கள் ஆரம்பித்துவிட்டன.

இராணுவ சர்வாதிகார ஆட்சி அமைந்து கொண்டிருக்கிறது என சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் எதிர்க் கட்சிகள் குரலெழுப்புகின்றன:

ஆட்சியில் முஸ்லிம்கள் முற்றாக ஒதுக்கப்பட்டு விட்டார்கள் என்றும் எனவே முஸ்லிம்கள் ஆபத்தான அரசியற் சூழலுக்குள் தள்ளப்படும் ஆபத்து ஏற்படுகிறது என்றும் பெரும்பான்மையான முஸ்லிம்களின் தலைவர்கள் எதிர்வு கூறி வருகிறார்கள்:

பாசிச சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சி அமைந்துவிட்டதாக தமிழர்கள் மத்தியில் உள்ள பெரும்பான்மையான அரசியற்காரர்களும் புத்திஜீவிகளும் அளவிடுகிறார்கள்.

19வது அரசியல் யாப்பு திருத்தத்தை நீக்கி புதிய அரசியல் யாப்பு கொண்டு வரப்படும் என்றும் நாட்டில் புதிய வகையான தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தமது புதிய பாராளுமன்றத்தின் முதலாவது உரையில் குறிப்பிட்டுள்ளார். 19வது திருத்தத்துக்கு திருத்தம் ஒன்றை ஆக்கப் போகிறார்கள் என்பது திட்டவட்டமாகத் தெரிகின்றது. அது எப்படிப்பட்டதாக இருக்கப் போகிறது என்பது தெரியவில்லை. இது தொடர்பாக எதிர்க் கட்சியில் இருக்கும் தமிழ்க் கட்சிகள் எவ்வாறு நிலை எடுக்கப் போகின்றன என்பதுவும் தெளிவாக இல்லை.

மாகாண சகைகள் முறையை இல்லாமற் செய்ய வேண்டும் என சிங்கள பௌத்த ஆதிக்க வாதிகள் நீண்டகாலமாகவே கோரி வருகிறார்கள். அரசாங்கத்தில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகள் தொடர்பான அமைச்சர் தான் காணி அதிகாரத்தையோ பொலிஸ் அதிகாரத்தையோ தரப் போவதில்லை என கறாராக குரலெழுப்புகிறார். ஆனால் இவை தொடர்பாக ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ இதுவரை எதுவும் கூறவில்லை. ஆனால் ஒன்று தெளிவாகின்றது இன்னும் சில மாதங்களுக்குள் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறப் போகின்றது. அதில் இந்த அரசாங்கம் மிக ஆர்வமாக உள்ளது. ஏதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர் வடக்கு கிழக்கு மாகாண சபைகள் எவ்வாறாக அமையப் போகின்றன! எவ்வாறாக செயற்படப் போகின்றன! என்பவை பற்றி இப்போதைக்கு எதையும் உறுதியாகக் கூற முடியாது.

இவையெல்லாவற்றையும் வைத்துக் கொண்டு “தமிழ்த் தேசிய” சுலோகங்களுடன் அரசியல் செய்யும் கட்சிகள் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பயக் கெடுதியை கிளப்பி மீண்டும் தமது அரசியல் ஆதரவுத் தளங்களை உறுதி செய்ய முனைவார்கள் என்பது தெளிவு. அதேவேளை அரசாங்கத்தோடு அணைந்து நின்று தங்களால் சாதிக்க முடியும் என்போர் அரசாங்கத்தின் சில பொருளாதார கட்டுமான வேலைத்திட்டங்களுக்கு அப்பால் கருத்துத் தாக்கமுள்ள அரசியல்ரீதியான செயற்பாடுகளைக் கொண்டிருப்பார்களா என்ற கேள்விக்கு இப்போதுவரை பதிலில்லை.

மாகாண சபைக்கான எதிர்வரும் தேர்தலின் முடிவுகளும் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் பிரதிபலிப்பாக இருக்குமா அல்லது வேறுபட்டதொரு மாறுபாட்டைக் கொண்டிருக்குமா என உறுதியாகக் கூற முடியாது. வடக்கு கிழக்கு மாகாண சபையை கைப்பற்றுபவர்கள் எவ்வாறு செயற்படப் போகிறார்கள்: எவற்றைச் சாதிப்பார்கள் என்பதற்கும் இப்போதைக்கு தெளிவான பதில் இல்லை.

இப்படியான சூழ்நிலைமைகளின் பின்னணியில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினராகிய நாம் எவ்வாறான அரசியல் நடைமுறை நிலைப்பாடுகளை முன்னெடுக்கப் போகின்றோம் என்பது பற்றி தெளிவாகவும் தீர்க்கமாகவும் சிந்தித்து –  முடிவுகள் செய்து – செயற்படல் வேண்டும்.

கட்சியின் பிரச்சாரங்களை விரிவுபடுத்தி முன்கொண்டு செல்ல வேண்டும். கட்சி உறுப்பினர்களை கருத்தாற்றல் மிக்கவர்களாகவும் செயற் திறன் கொண்டவர்களாகவும் வளர்த்தெடுக்க வேண்டும். கட்சியின் ஸ்தாபன கட்டமைப்புகளை பரந்துபட்ட மக்கள் தளங்களைக் கொண்டவையாக பரவச் செய்ய வேண்டும். எதிர்வரும் காலங்களிலும் தேர்தல்களைச் சந்திப்பது தவிர்க்க முடியாததே. ஏனைய அரசியற் கட்சிகள் மற்றும் அரசியற் குழுக்களுடன் இணைந்தும் அவற்றிலிருந்து தனித்துவமாகவும் செயற்பாடுகளை மேற்கொள்வதுவும் அவசியங்களே!

எமது கட்சியின் சமூக ஜனநாயக கோட்பாடுகளின் அடிப்படையிலான கொள்கைகளும்  கோரிக்கைகளும் எமது மக்கள் மத்தியில் சக்தி மிக்க கருத்துக்களாகப் பரிணமிக்க வேண்டும். அதனை அடிப்படையாகக் கொண்டு ஒரு தார்மீக அரசியல் சமூக இயக்கத்தை முனனெடுப்பதை இலக்காகக் கொண்டு செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இங்கு சுமுகமாக – எல்லோரும் கை தட்டி எப்போதும் பாராட்டும் வகையான நேர்பாதை கிடையாது. நெளிவு சுளிவுகள் தவிர்க்க முடியாதவை

புரட்சிகரமான சமூக முன்னேற்றத்துக்கான பாதையில் பயணிக்க ஒரு புரட்சிகரக் கட்சியின் அவசியத்தை நாம் எப்போதும் உணர்ந்து வந்திருக்கிறோம் – வலியுறுத்தி வந்திருக்கிறோம். அதில் இதுவரை எதிர்பார்த்த வெற்றிகளைக் காணவில்லையே என்ற விரக்தி சரியானதல்ல. இது ஒரு தொடர் பயணம். திருவிழாவுக்குப் போடப்பட்டுள்ள கடைகளில் இதுவும் ஒரு கடையே என்றால் இந்தக் கட்சி தேவையற்ற ஒன்றாகும். தன்னம்பிக்கையற்ற யானைக்கு தும்பிக்கையும் பயன் தராது.

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சிக்கு ஒரு வரலாற்றுப் பாத்திரம் இருக்கின்றது! நாம் கடந்த காலத்தில் யாராலும் மறுக்க முடியாத மறைக்க முடியாத பங்களிப்பை இலங்கைக்கும் தமிழ் மக்கள் சமூகத்துக்கும் ஆற்றியிருக்கின்றோம். இன்றும் இதன் தேவை மக்களுக்கு உண்டு! புரட்சிகரமான சமூக முன்னேற்றங்களுக்கான செயற்பாடுகளுக்கான இடைவெளி நாம் வாழும் சமுதாயத்தில் உள்ளது! எனவே கட்சியின் ஒவ்வொரு தீர்மானமும் செயற்பாடும் கட்சியை பரந்துபட்ட மக்கள் மத்தியில் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட சக்தியாக பரிணமிக்கும் நிலையை அடையும் வகையில் செயலாற்றுவோம்.

எமது ஓவ்வொரு செயற்பாடுகளும் எமது கட்சி தலையேற்றிருக்கும் சமூக ஜனநாயகக் கோட்பாடுகளுக்கும் அவற்றின் அடிப்படையிலான கொள்கைகளுக்கும் ஏற்ப ஏன்? எதற்காக? யாருக்காக? எப்படி? எங்கு நோக்கி? ஏன்ற கேள்விகளுக்கு தர்க்கபூர்வமாகவும் பகுத்தறிவு பூர்வமாகவும் தெளிவான பதில்களைக் கொண்டவையாக அமையட்டும்.

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் இந்த சமூகவலைத் தளம் கட்சியின் கருத்துக்களின் பிரச்சாரத் தளமாகும்: கட்சியின் உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்குமான அறிவூட்டல் களமாகும்: கட்சியோடு தொடர்பு கொள்பவர்களுக்கும் கட்சியின் நிலைப்பாடுகளையும் செயற்பாடுகளையும் அறிய முனைவோருக்குமான மையமாகும்: நட்புரீதியான மாற்றுக் கருத்துக்களின் முற்றமாகும். இது ஒரே வேளையில் பல்லாயிரம் பேரைச் சென்றடைய எல்லோருமாக கூட்டாக உழைப்போம்.

இது எமது பல முயற்சிகளில் ஒன்றே! ஆக்கமானதென ஊக்கம் கொள்ளும் எதிலும் விடாமுயற்சியோடு செயலாற்றுவோம்;

உங்கள் அன்பின் சகோதரன் – நண்பன் – தோழன்

அ. வரதராஜ பெருமாள்

01 – 09 – 2020

கொறோனா வைரசும் இன்றைய உலகும்: புதிய திசைகள்

கொள்ளை நோயால் மக்கள் கூட்டம் கூட்டமாக அழிந்தார்கள் என்று பண்டைய வரலாற்றில் படித்திருக்கிறோம். இதுவரை வந்த பெரும்பாலான ஆட்கொல்லி நோய்கள் (epidemic) உலகின் ஏதோ ஒரு அல்லது சில பகுதிகளை தாக்கிவிட்டு தணிந்துவிடும் அல்லது அதற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு தடுக்கப்பட்டுவிடும்.

2019 ல் சீனாவின் வுகான் பகுதியில் விலங்குகளிடம் இருந்து மனிதரை தொற்றிக்கொண்டு விட்டதாக கூறப்படும் இந்த கொவிட்-19 என அழைக்கப்படும் கொறோனா வகை வைரஸ் என்பது கண்ணுக்குத்தெரியாத மிகப்பெரிய மனித எதிரியாக பெருந்தொற்றாக (pandemic) மாறியுள்ளது.

உலகமயமாதல் என்பது மக்களை முன்னெப்போதும் இல்லாத அளவு இடநெருக்கமாக வாழவைத்துள்ள இன்றைய உலக சூழலில், உலகின் ஒரு மூலையில் உருவாகும் பிரச்சனை என்பது அதன் வீரியத்தின் அளவை பொறுத்து உலகின் சகல பாகங்களையும் சென்றடைவதற்கும், சமூகங்களுக்குள் சுற்றி சுற்றி விசச்சுழலாக நிலைத்து நின்று அழிவை ஏற்படுத்துவதற்கான சூழல் காணப்படுகிறது.

சீனாவின் வுகான் மாகாணத்தில் இந்த கொவிட் 19 வைரஸ் பரவியபோது இது வெறும் சீனர்களின் பிரச்சனையாக உலகு பார்த்தது எதோ உண்மைதான். அது மற்றைய இடங்களுக்கு தீவிரமாக பரவியபொழுது சீன மக்கள் பொதுப்புத்தி மட்டத்தில் இழிவுபடுத்தப்பட்டனர். சீன அரசு இந்த நோயின் தீவிரத்தன்மை தொடர்பான சரியான எச்சரிக்கையை உலகிற்கு அளித்ததா? பாதிக்கப்பட்ட, இறந்த சீன மக்களின் எண்ணிக்கைகள் முறையாக வெளிப்படுத்தப்பட்டனவா? என்னும் கேள்விகள் இன்று பலரிடம் இருக்கத்தான் செய்கிறது.

இந்த நோயை எதிர்கொள்வதில் வேறுபட்ட அணுகுமுறைகளை கையாளும் முகாம்களாக சீனா, இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா என பிரித்து பார்ப்பது இன்றுள்ள நிலைமையை புரிந்து கொள்வதற்கு இலகுவானதாக அமையலாம். ஒரு தொற்றுநோயை எதிர்கொள்வதில் கூட அரசுகளும், வேறுபட்ட சமூக கட்டமைப்புகளும் எப்படி பிரிந்து நிற்கிறன, வேறுபட்ட அணுகுமுறைகளை மேற்கொள்கின்றன என்பது கண்கண்ட சாட்சியாக வெளிப்பட்டு நிற்கிறது.

சீன நாடானது தனது ஒரு மாகாணத்திற்குள்ளேயே நோயை கட்டுப்படுத்தி விட்டதாக கூறிக்கொள்கிறது. மிக இறுக்கமான நிர்வாக முறைகளையும் அதிகாரங்களை மக்கள் மீது பிரயோகிப்பதில் பெரியளவு சவால்களை எதிர்கொள்ளாத சமூகக்கட்டமைப்பையும் தன்னகத்தே கொண்டதன் மூலமாக, மக்கள் அசையமுடியாத கட்டுப்பாடுகளையும் பலமான சிவில், மருத்துவ மற்றும் அதிகார பிரயோகங்களை மிக திட்டமிட்ட முறையில் மேற்கொண்டு நோயை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியிருப்பதாக தெரிகிறது. அவர்கள் பயன்படுத்தியிருக்கும் நவீன தொழில்நுட்பம் என்பது நோய் தொற்றுக்கு உள்ளானவரின் இரண்டு மூன்றுவார முழு நடவடிக்கைகளையும் கால அடிப்படையில் அவதானிக்க கூடிய வகையில் இருப்பதால் நோய்பரவலை தடுப்பது இலகுவானதாக இருக்கிறது. இது தனிமனித உரிமை மீறல் என்னும் குற்றச்சாட்டிற்கு உள்ளாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லை நாட்டில் பரவிவரும் நோயின் தீவிரத்தை குறைத்து எடைபோட்டிருந்த இந்திய அரசு இந்த நோயின் தீவிரம் தொடர்பான எச்சரிக்கையின் பின் தடாலடியாக ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து நாட்டை முழு ஊரடங்கு வாழ்விற்குள் வாரக்கணக்காக வைத்திருக்கிறது. மிக நெருக்கமான குடியிருப்பு வாழ்முறையை கொண்ட இந்திய மக்களில் குறிப்பிடத்தக்களாவான மக்கள் நெருக்கமான நகர குடியிருப்புகள், சேரிகள் ஏன் வீடற்ற வீதியோர குடிகள் என நோய்தொற்றலுக்கு ஏதுவான சிக்கலான வாழ்முறையை கொண்டிருக்கிறார்கள். நோய் தொற்று ஏற்படும் பட்சத்தில் அதன் பரவல் எல்லைமீறி சென்று பாரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தி விடும் அபாயம் உள்ளது

இந்திய சனத்தொகையுடன் ஒப்பிடும்போது அரச மருத்துவமனைகள் மிக குறைந்த மருத்துவ வசதிகளையே கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் தனியார் மயப்படுத்தப்பட்டுள்ள இந்திய மருத்தவத்துறை என்பது மக்கள் பேரவலத்தில் இருக்கும் போது வேடிக்கை பார்க்கும் ஒரு பிரிவாக இருக்கும் சாத்தியப்பாடுதான் இருக்கிறது. இந்த பலவீனத்தின் வெளிப்பாடாகவேதான் இந்திய அரசின் இந்த வாரக்கணக்கான நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவை புரிந்து கொள்ளலாம்.
நோய்தொற்றலை தடுக்கும் நோக்கு என்பதைவிட தற்போதைய அரசின் மீது பழி வந்துவிடக்கூடாது என்பதும் அது அவர்களது அரசியல் எதிர்காலத்தை பாதித்து விடக்கூடாது என்பதிலும் இந்திய, இலங்கை அரசுகள் ஆர்வம் காட்டுவதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. சர்வாதிகார அரசுகளுக்கு நெருக்கடி நிலமைகள் எப்பொழுதும் ஒரு வரப்பிரசாதமாகவே அமைகிறது. மோடி அரசுக்கும் சரி, ராஜபக்ஷ அரசுக்கும் சரி எந்த பிரயத்தனங்களும் இன்றி மக்களின் காவலன்களாக தம்மைக் காட்டிக்கொள்வதற்கு கிடைத்த அரிய சந்தர்ப்பமாகவே பயன்படுத்தப் படுகிறது.

ஊரடங்கு உத்தரவை அதிகார தோரணையில் போட்டுமுடித்த இலங்கை, இந்திய அரசுகள் என்பன, தமது நாட்டு மக்களில் அன்றாடம் உழைத்து வாழும் கிராம, நகர கூலி தொழிலாளர் குடும்பங்களுக்கும், இருப்பதற்கு வீடற்று இருக்கும் மக்களுக்குமான உணவிற்கான தீர்வாக எதை முவைத்திருக்கிறார்கள்? குறைந்த விலையில் சில குறிப்பிட்ட அரச விநியோக நிலையங்களில் அதுவும் வாரத்தில் ஒரிரு தினங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு தான் வழங்கப் படும் நிலை. ஒரு பிரிவு மக்களிடம் பொருள் வாங்க பணம் இல்லை. சிறிதளவு பணம் இருக்கும் மக்களும் பொருள் வாங்குவதற்கான ஒழுங்கான விநியோகம் இல்லை. இனம் புரியாத நோய் தொற்றலின் பயபீதியில் இருக்கும் மக்களுக்கும் சில நேரங்களில் அரசின் இந்த நடவடிக்கைகள் நியாயமாக படுவதில் ஆச்சரியமில்லை. அவகாசமற்ற திடீர் அறிவிப்புகளால் தயாரிப்பற்ற மக்களின் பதட்டங்களுக்கு பொலீசின் ஈவிரக்கமற்ற அடி உதைகள் கூட சமூகத்தால் நியாப்படுத்தப்படும் அநியாயம் கூட நடந்தேறுகிறது.

பிரச்சனை என்றால் மக்களை வீட்டிற்குள் அடைக்கும் வேலையை அதிகாரமுள்ள எந்த முட்டாள் அரசாலும் செய்ய முடியும்; இதற்கு எந்த மதிநுட்பமும் தேவையில்லை. கோவிட்-19 என்னும் வைரசின் பரவல் முறை என்ன? அதற்கு எத்தனை கட்டங்கள் இருக்கிறது? மக்களை முழுமையாக அடைத்து வைப்பதன் மூலம் நீண்டகாலம் நீடிக்கும் ஒரு வைரசின் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்ற முடியுமா? மக்கள் சில வாரங்களில் சாதாரண நிலைக்கு திரும்பும்போது மீண்டும் பரவல் ஏற்பட்டால் அதற்கான முன்னேற்பாடுகள் எவை? நீண்டகால மக்கள் நடமாட்ட தடை என்பது நோயில் இருந்து காத்து பட்டினி சாவிற்கு மக்களை இழுத்துச்செல்லாதா? கூடவே நாட்டை மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிக்கு இட்டு செல்லாதா? என்பன இன்று மக்களை வீட்டிற்குள் பூட்டி வைத்திருக்கும் அரசுகள் முன் எழும் கேள்விகளாகும்.

இலங்கையில் ஊரடங்கை படிப்படியாக கொண்டுவந்திருக்கும் அரசு, மக்களின் உணவு விநியோகத்தில் அக்கறை கொள்வதாக தெரியவில்லை. மனித நேயம் உள்ள ஊர்மக்கள், புலம்பெயர் மக்கள் என ஒரு மக்கள் கூட்டம் தமது சொந்த மக்களுக்கு உணவளித்து காப்பற்றிக்கொள்கிறது. இதன் அரசியல் பலனை கூட தனதாக்கி அறுவடை செய்வதில் இலங்கை அரசு மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. எவர் உயிர் போனால் என்ன நிலைமை பெரியளவு பாதகம் இல்லாத இன்றைய இலங்கை சூழலில் தேர்தலை நடத்தி வெற்றிவாகை சூடிவிட வேண்டும் என்பதில் ராஜபக்ச சகோதரர்கள் மிகக்குறியாக இருக்கிறார்கள்.

தமது நாட்டை கொரானா வைரஸ் எதுவும் செய்துவிட முடியாது என்று மார்பு தட்டிக்கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்பும், அமெரிக்க அரசும் சீனா மீது குற்றம் சுமத்துவதில் குறியாக இருந்தனவே தவிர அமெரிக்க மக்களுக்கு வர இருந்த ஆபத்தை உணர்ந்திருக்கவில்லை. இதன் விளைவாக கண்ணுக்கு அகப்படாத எதிரி இன்று அமெரிக்க மக்களை கொன்றொழித்துக் கொண்டிருக்கிறது. முட்டாள்தனமான தலைமை காரணமாக இன்று மாநில கவர்னர்களுக்கும், அரச அதிபருக்குமான முரண்பாடுகளாக ஒருவகை அரசியல் குழப்பமாக உருவெடுத்துள்ளது. எந்த சீனாவை குற்றம் சுமத்துவதில் குறியாக இருந்த அமெரிக்க அரசு இன்று மருத்துவ தேவைகளுக்கு சீனா போன்ற நாடுகளிடம் கையேந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

உலகின் பெரிய பொருளாதாரங்கள் சிறு தேக்கங்களுக்கும் பெரும் பொருளாதார பாதிப்புகளை அடையும் என்பது சந்தை பொருளாதாரத்தின் யதார்த்தம். இன்று ஏற்பட்டிருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தின் மிகப்பெரிய சரிவு என்பது சராசரியாக நாளுக்கு 2000 மக்களுக்கு மேல் உயிர்களை இழந்துவரும் சூழலிலும், முக்கால் மில்லியன் மக்களுக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையிலும் கூட நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவந்தே தீரவேண்டும் என்னும் அழுத்தத்தை அந்த அரசிற்கு கொடுத்துக்கொண்டிருக்கிறது.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் அணுகுமுறை என்பது, கொரோனாவை வருமுன் காப்போம் என்பதை விட எப்படியும் வரப்போகும் வைரசை எப்படி சமூகமாக கோவிட்-19 இற்கு எதிரான எதிர்ப்பு சக்தியை மக்களிடம் உருவாக்கி (herd immunity) வெற்றி கொள்வது என்னும் அணுகுமுறையில் நகர்வதாகவே உணரமுடிகிறது. அந்த நாடுகளின் சமூக ஓட்டத்தை ஓரளவு அனுமதித்துக் கொண்டு ஒருவகை சுய கட்டுப்பாட்டுடன் மக்களை நகர கோருவதாகவே பெரும்பாலான நாடுகளின் அணுகுமுறை இருக்கிறது.

மேற்கு ஐரோப்பாவின் பிரதான நாடுகளில் ஜேர்மனி தவிர்ந்த மற்றைய நாடுகள் இந்த வைரசை கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளார்களா என்பது அவர்கள் முன் உள்ள பிரதான கேள்வியாகும். ஒரு நோய்த்தொற்று என்பது Epidemic என்னும் பகுதியளவிலான பரவலை கடந்து Pandemic எனும் உலகு ரீதியான பரவல் கட்டத்தை அடையும் போது குறிப்பிட்டளவு உயிரிழப்பை தவிர்க்க முடியாது என்னும் கணக்குடன் இயங்கும் அதேவேளை தமது மருத்துவ வசதிகளை அதிகரித்து முடியுமான அளவிற்கு மக்களை காப்பாற்ற முயற்சிப்பது என்பது பல ஐரோப்பிய நாடுகளின் அணுகுமுறையாக இருப்பதாகவே பார்க்க முடிகிறது.

வயோதிபர்களை அதிகமாக கொண்ட இத்தாலி நாடு மிக அதிகமாக பாதிக்கப்பட்டு பல மரணங்களை சந்திக்க, ஸ்பெயின் நாடு வயோதிப மரணங்களுடன் மருத்துவ பிரிவின் பலவீனங்களால் மருத்துவ பிரிவில் பலரின் மரணங்கள் சம்பவித்த வண்ணம் இருக்கிறது. பிரான்சினதும், பிரித்தானியாவினதும் வைரஸ் நோயாளிகளின் இறப்பு வீதம் அதிகரித்துவர, நோய் தொற்றுள்ளவர்களை பரிசோதிப்பதிலும், தொற்றுக்கு உட்பட்டவர்களை காப்பாற்றுவதிலும் பெரும் சவால்களை இரு நாடுகளும் சந்தித்து வருகின்றன. இராணுவ பொருளாதார பலங்களுடன் இருக்கும் இவ்விரு நாடுகளும் ஒரு நோய்தொற்றில் இருந்து சொந்த நாட்டு மக்களை காப்பதில் பலவீனமாக இருக்கிறார்கள் என்பது இந்நாடுகளின் உண்மையான வளர்ச்சி நிலை தொடர்பான ஆழமான கேள்வியை முன்வைக்கிறது.

ஐரோப்பிய நாடுகள் தமது சொந்த சமூகங்களிடையே கொண்டிருக்கும் ஜனநாயக நடைமுறைகளை அளவிற்கு அதிகமாக மீறுவது பெரும் உள்நாட்டு குழப்பங்களை எதிர்காலத்தில் உருவாக்கும் என்னும் அச்சம், முழு அடைப்பு என்பது மீளமுடியாத பாரிய பொருளாதார சரிவுகளுக்கு இட்டுசெல்லும் என்னும் பாரிய பிரச்சனை, தம்வசம் வைத்திருக்கும் சில விசேட பொருளாதார சந்தை தளங்கள் இடம்மாறிவிடும் எனும் அச்சம், Pandemic என்னும் அளவிலான ஒரு வைரஸ் பரவல் பல கட்டங்களாக கூட வரமுடியும் என்னும் மேற்கு நாடுகளின் கணிப்பு என்பது அவர்களின் நீண்டநாள் சமூக முடக்கம் என்னும் முடிவு என்பதற்கு மாறாக பகுதி அளவிலான சமூக முடக்கம் என்னும் நடைமுறையை பின்பற்றி, மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் படிநிலையை வளர்த்துவிடுவது என்னும் நடைமுறைக்கு இட்டுச்செல்வது என்கின்ற விடயங்கள் தான் இந்த வைரஸ் தொற்று நோக்கிய ஐரோப்பிய அரசுகளின் அணுகுமுறையின் அடிப்படைகளாக இருக்கும் சாத்தியப்பாட்டை உருவாக்குகின்றன.

சீனாவில் இருந்து மற்றைய இடங்களுக்கு பரவியதால் சீன வைரஸ் என உள்நோக்கோடு சில நாடுகள் அழைத்ததும், சீன மக்களின் உணவுமுறைகள் காட்டுமிராண்டித்தனமானதாக பல சமூகங்களால் சித்தரிக்கப்பட்டவையும் அரசியல், சமூக பழிவாங்கல்களாக பார்க்கப்பட முடியும். ரஷ்யா, வடகொரியா,கியூபா போன்ற முன்னைய கொம்யூனிச அரசு ஆட்சியில் இருந்த நாடுகளில் கொரோனாவின் பரவல் மிக குறைவாக இருப்பதென்பதை வைத்துக்கொண்டு ஒருசாரார் இந்தவகை வைரஸ் தொற்று என்பது மேற்குலகம் மற்றும் அமெரிக்கா நோக்கிய சீனாவின் திட்டமிட்ட சதியாக இருக்கும் வாய்ப்புகள் இருக்கிறது என்னும் பொதுப்புத்தி மட்ட பிரச்சாரங்களையும் பரப்பத் தவறவில்லை.

மேற்கு ஐரோப்பாவில் ஜேர்மனி தவிர்ந்த பெரும் பொருளாதார பலம் உள்ள நாடுகள் பலவும் சமீபகாலமாக பொருளாதாரத்தில் வீழ்ச்சியை கண்டுவருகின்றன. குறிப்பாக ஸ்பெயினும், இத்தாலியும் கடும் நெருக்கடிக்குள் இருந்து வந்திருக்கின்றன. கோவிட்-19 தாக்குதல் என்பது இந்த நாடுகளை இன்னும் அதலபாதாளத்திற்குள் தள்ளிவிடப்போகிறது என்பதில் சந்தேகமில்லை. இதன் விளைவாக உற்பத்தியும் சந்தையும் வேறு பகுதிகளை நோக்கி நகர்வது நடந்தேறும் வாய்ப்பிருக்கிறது. மலிவான மனித உழைப்புடன் நவீன தொழிநுட்பங்களின் இணைவு என்பது சீனா, இந்தியா, தென்கொரியா, பிரேசில் போன்ற நாடுகளை உலகின் பொருளாதார சந்தையில் மேலே கொண்டுவந்திருக்கிறது. கோவிட்-19 ற்கு பின்னரான உலகத்தில் இது இன்னும் ஐரோப்பாவை விட்டு நகர்ந்து செல்வது தவிர்க்க முடியாததாக இருக்கும்.

வீழ்ந்து வரும் அமெரிக்க பொருளாதாரத்தின் பக்க விழைவுதான் மத்திய கிழக்கில் திட்டமிட்டு உருவாகப்பட்ட யுத்தங்களும் பேரழிவுகளும். சீனாவிடம் பொருளாதார ரீதியாக தோல்வியை சந்தித்துவிடக் கூடாது என பெரும் பிரயத்தனத்துடன் வலம் வரும் அமெரிக்க அரசு என்பது இன்று சீனா தன்னை மீறி செல்வதை பார்த்து சகித்துக்கொள்ள முடியாது சினம் கொண்டிருக்கிறது. கோவிட்-19 க்கு பிந்தய உலகில் அமெரிக்கா பொருளாதார ரீதியில் சீனாவைவிட பின் தங்கிவிடும் என்பது நிரூபிக்கப்பட்டு வருகிறது. இதன் தாக்கம் என்பது, ஐரோப்பா நோக்கிய அமெரிக்காவின் மென்மை போக்கும், இறுக்கமான கூட்டுக்களும், இந்தியா, பிரேசில், போன்ற நாடுகளுடன் கூட்டை இறுக்கமாக்கும் போக்குகளும் அதிகரிக்க, சீனா நோக்கிய அமெரிக்காவின் கடும் போக்குகள் நகர்ந்து அடங்குவது தவிர்க்கமுடியாததாக இருக்கலாம்.

மனிதனும், வாகனங்களும் அடங்கி விட்டால் உலகம் எப்படி இருக்கும் என்பதை ஒரு மனித பேரவலத்தினூடாக நாம் உணர ஆரம்பித்திருக்கிறோம். எமது காலத்தில் முன்னெப்போதும் இல்லாத இயற்கையான சுற்றாடலும், பறவைகள் மிருகங்களின் நடமாட்டமும் உலகை வியக்க வைக்கிறது. நெருக்கடிகள், அவலங்கள் மக்களை பிணைப்புற வைக்கிறது. போட்டி பொறாமை; ஓட்டமும் நடையுமான வாழ்க்கையில் இருந்து உலகமே ஓய்வு எடுக்கும் போது மதம், போதகர்கள் எதுவும் இன்றி மனிதநேயம் புது வடிவம் பெறுகிறது. அரசியலும் மதமும்,சாதியும், பிரிவினைகளும் இங்கு கோலோச்ச முடிவதில்லை. உண்மையில் மனிதனின் எதிரி எது என்பதை இந்த சூழல் மீண்டும் ஒருமுறை நிரூபித்து விடுகிறது. அதிகாரங்கள், அரசுகள், மத நிறுவனங்கள் இந்த மனித அவலத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுமா என்றால் நிச்சயமாக இல்லை. மக்கள் வாழ்முறையில், இயற்கையை நோக்கிய மக்களின் அணுகுமுறையில், சக மனிதன் பற்றிய கருத்தமைவில் சிறு மாற்றத்தை கொண்டுவருமாக இருந்தால் மட்டுமே இந்த மனித பேரவலத்தில் தமது உயிர்களை இழந்த மக்களுக்கு உலக மக்கள் காட்டும் மரியாதையாக இருக்கும்.

புதிய திசைகள்
23/04/2020

தேசம்நெற் இன் நல்லதொரு நண்பன் தமிழ் சமூகத்தை நேசித்த நல்லதொரு மனிதன் பேரின்பநாதன் காலமானார்!

Perinpanathan_EROSஈரோஸ் அமைப்பின் செயற்பாட்டாளரும் அரசியல் ஆர்வலருமான பேரி என அறியப்பட்ட பேரின்பநாதன் இன்று அதிகாலை காலமானார். தேசம்நெற் ஏற்பாடு செய்த பல சந்திப்புக்களுக்கு தலைமை தாங்கிய பேரின்பநாதன் முரண்பட்ட கருத்துக்களை உடையவர்களுடனும் நட்புடன் தனது கருத்துக்களை பரிமாறும் தன்மையால் அனைவராலும் நேசிக்கப்பட்டவர்.

இவருடைய மைத்துனர் பிரிஎப் இன் தலைவராக இருந்த சுரேன் சுரேந்திரன். அதுமட்டுமல்ல மற்றைய உறவுகளும் அவ்வாறான கருத்தையே கொண்டிருந்தனர். ஆனால் பேரின்பநாதன் மாற்றுக் கருத்தைக் கொண்டிருந்தவர். எப்போதும் தனது கருத்துக்களுக்காக உறுதியுடன் இறுதிவரை நின்றவர்.

யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான பேரின்பநாதன் லண்டனில் யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் பிளவுபட்ட போது அவற்றை மீண்டும் இணைப்பதற்கு கடும் முயற்சி எடுத்தவர். ஆயினும் அவை இணைந்து கொள்ளவில்லையானாலும் முரண்பாடுகளைத் தணிப்பதில் அவரது முயற்சி உதவியது.

இன்று அதிகாலை பேரின்பநாதனின் மறைவு அவரை அறிந்தவர்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

பேரின்பநாதன் பிரித்தானியாவில் உருவான ஈரோஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினர். கால் நூற்றாண்டுக்கும் அதிகமாக லண்டனில் வாழ்ந்த இவர் தாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்த போதும் அம்மக்களின் அரசியலுடன் தன்னை தொடர்ந்தும் ஒன்றிணைத்தவர். லண்டனில் உருவாக்கப்பட்ட ‘ஆவணி 02 புரிந்துணர்வுக் குழு’ வில் முன்நின்று அக்கூட்டங்களுக்கு தலைமை தாங்கியவர் பேரின்பநாதன்.

தேசம்நெற் நல்லதொரு நண்பனை தமிழ் சமூகத்தை நேசித்த நல்லதொரு மனிதனை இழந்துள்ளது. தேசம்நெற் நிர்வாகமும் ஆசிரியர் குழுவும் பேரின்பநாதனின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது.

சென்னை முதல் டெல்கி வரை ஈழத் தமிழர்களின் நடைபயணம்! : ஈ.என்.டி.எல்.எப்.

ENDLF_Logoஇன்று 20-12-2010 அன்று சென்னையில் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளரின் சந்திப்பில் கொடுக்கப்பட்ட அறிக்கை!

தமிழர்களைப் புறக்கணித்து, பிரித்தானியரை ஏமாற்றி இலங்கை அரசாங்கத்தைக் கைப்பற்றிய சிங்கள ஆட்சியாளர் 1948ம் ஆண்டு முதல் தமிழ் இனத்தை அழித்து வருகின்றனர்.

ஈழத் தமிழர்களின் விவசாய நிலங்களைக் கைப்பற்றி சிங்களக் குடியேற்றங்களை வடக்குக் கிழக்கு மாகாணங்களில் புகுத்தி வந்த சிங்கள அரசு இப்போது தமிழர்களின் வாழ்விடங்களையும் ஆக்கிரமித்துச் சிங்களக் குடியேற்றங்களை வலுக்கட்டாயமாகத் திணித்து வருகிறது.

இலங்கையின் மொத்தக் கடல் பரப்பில் 85 சதவீதமான கடல்பகுதிகள் தமிழர்களுக்குச் சொந்தமானவை. இன்று அனைத்துக் கடல் பகுதிகளையும் கைப்பற்றி, தென்பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்தையும் தாண்டி சிங்கள மீனவர்கள் எங்களது கடல் செல்வங்களை அள்ளிச் செல்கின்றனர். அரசாங்கம் அவர்களுக்கு (சிங்களவர்களுக்கு) நவீன படகுகளை வழங்கி கடல் வளத்தை அள்ளி தென் பகுதிக்குக் கொண்டு செல்கின்றனர். தமிழ் மீனவர்கள் தங்களது சொந்தப் பகுதியில் குறிப்பிட்ட தூரத்தைக் கடக்கக் கூடாது என்று வாய்வழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்களின் பூர்விகப் பிரதேசங்களை ஆக்கிரமிப்பது சிங்கள அரசின் கடமையாக கடந்த 62 ஆண்டுகளாக செய்து வருகிறது. 1987ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை இந்திய அமைதிப்படை இலங்கையிலிருந்த காலத்தில் மட்டும்தான் சிங்களக் குடியேற்றங்களை நடத்த முடியாமல் நிறுத்தி வைத்திருந்தது சிங்கள அரசாங்கம். ஏனைய அத்தனை ஆண்டுகளும் ஏன் இன்றும் கூட சிங்களக் குடியேற்றங்களை அரசின் சொந்தச் செலவில் தமிழர் பகுதிகளில் திட்டமிட்டுப் புகுத்தி வருகிறது.

இது தமிழ் இனத்தின் அடையாளங்களை முற்றாக அழிக்கும் நடவடிக்கைதான். தமிழ் இனத்துக்கும் சிங்கள இனத்துக்கும் பிரச்சினையே இந்தச் சிங்களக் குடியேற்றங்கள்தான். இதனைத் தடுத்து நிறுத்தும் அளவுக்கு தமிழர்கள் பலம் குறைக்கப்பட்டுள்ளது.

1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தை ஏற்படுத்தி தமிழ் இனத்தை அடித்து விரட்டிய பின்பு ஏற்படுத்தப்பட்டதுதான் வெலிஓயா (மணல் ஆறு) என்று பெயர் மாற்றப்பட்ட சிங்களக் குடியேற்றமாகும். இக்குடியேற்றம் திருகோணமலையையும் முல்லைத்தீவையும் பிரிக்கும் சிங்களக் குடியேற்றமாகும். இப் பகுதி தமிழ் இனத்தின் பூர்விகப் பகுதியாகும்.

இது போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட சிங்களக் குடியேற்றங்களை தமிழர் பகுதிகளில் திணித்து தமிழர் நிலங்களைக் கைப்பற்றியுள்ளனர். அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா மாவட்டங்களில் பல லட்சக்கணக்கானவர்களைக் குடியமர்த்திய சிங்கள அரசு இப்போது முல்லைத் தீவு, மன்னார், யாழ்ப்பாண மாவட்டங்களில் முழுவீச்சில் சிங்களவர்களைக் குடியமர்த்தி வருகிறது.

தமிழினம் கல்வி, மொழி, தொழில், வாழ்வு, உயிர் என்று அனைத்தையும் இழந்து இன்று அவர்களது பூர்விகப் பிரதேசங்களையும் சிங்களவரால் இழந்து வருகின்றனர். ஈழத்தில் வாழும் தமிழர்களால் இந்தக் கொடுமையைத் தடுத்து நிறுத்தும் பலம் சிறிதளவும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்தும் உரிமையும், தகுதியும் இந்தியாவுக்கு மட்டுமே உண்டு என்று நாங்கள் நம்புகிறோம்.

ஈழப் போராளிகள் பல குழுக்களாக ஒற்றுமையில்லாதிருந்தபடியால், இந்தியா ஈழத் தமிழர் சார்பாக இலங்கையுடன் 1987ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டது. அந்த ஒப்பந்தத்தின் வலிமை தெரியாமல் பலரும் தங்களது அரசியல் லாபங்களுக்காக எதிர்த்தனர். சிங்கள அரசும் சிங்கள இனத்தவரும் இந்தியாவை எதிர்த்தனர். தமிழ் இனத்தின் சார்பாகவும், தமிழ் இனத்தைப் பாதுகாக்கவும்தான் இந்தியா இலங்கைக்கு வந்ததாகக் கருதினர் சிங்களவர்.
இதனால் இந்திய அமைதிப்படையை வெளியேற்ற வேண்டும் என்று தீர்மானித்தனர் சிங்கள அரசும், சிங்கள இனத்தவரும். சில உண்மைகளைச் சொன்னால் பலருக்கும் கோபம் வரும். விடுதலைப் புலிகள் இந்தியாவுக்கு எதிராகத் துப்பாக்கியைத் திருப்பாது விட்டிருந்தால் நாங்கள் இப்போது ஒரு லட்சம் தமிழர்களை இழந்திருக்க வேண்டியதில்லை, தமிழர் பிரதேசங்களும் காப்பாற்றப்பட்டிருக்கும். குறைந்தபட்சம் எங்கள் அனைத்து உரிமைகளாவது மீட்;டிருப்போம்.

விடுதலைப் புலிகள் செய்துவிட்ட தவறு எங்கள் இனத்தை மொத்தமாகவே பாதித்துவிட்டது. இப்போது எஞ்சியிருக்கும் மக்களையும், தமிழரின் பூர்விகப் பகுதிகளையும் நாம் காப்பாற்ற வேண்டும் என்றால் இந்தியா ஈழத் தமிழர் விடயத்தில் நேரடியாகத் தலையிட வேண்டும். 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு சிங்கள அரசியல்வாதிகளும், பௌத்த பிக்குகளும் தமிழ் இனத்துக்கு எதிராக சிங்கள மக்களை தூண்டிவிடும் வகையில் பேசியும் செயற்பட்டும் வருகின்றனர்.

தமிழ் இனத்தை விரட்டுவதற்கும் அழிப்பதற்கும் தங்களுக்கு உரிமை உண்டு என்று பிரசாரம் செய்கின்றனர். ஈழத் தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை அழிக்கும் செயல்களை புத்தப் பிக்குகளும் இராணுவமும் இணைந்து செயற்படுத்தி வருகின்றனர். 1981ஆம் ஆண்டு யாழ்ப்பாண நூல் நிலையம் இவர்களால் எரிக்கப்பட்டது. இதுவும் தமிழினத்தின் வரலாற்றை அழிக்கும் அவர்களது பாரிய திட்டமிட்ட சதிச் செயலாகும். ஒரு இனத்தின் வரலாற்றுப் பதிவுகள் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் நூல் நிலையத்தை அரசாங்கமே தீயிட்டு அழித்த நடவடிக்கை மன்னிக்க முடியாத குற்றச் செயலாகும். அந்த இனத்தவர் இச்செயலுக்காக வருத்தப்பட்டதோ, வெட்கப்பட்டதோ கிடையாது.

இப்போது தமிழர்களது எஞ்சியிருக்கும் விவசாய நிலங்களைக் கைப்பற்ற முன்னர் S.W.R.D. பண்டாரநாயக்க “நெற்காணி மசோதா” என்று ஒரு சட்டத்தினை 1958ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து தமிழர் நிலங்களைப் பறித்தது போன்று ராஜபக்சேயும் சட்டம் கொண்டு வந்து மீதி நிலங்களையும் பறிப்பதற்கு நாடாளுமன்றத்தில் முன்மொழியவுள்ளார்.

தமிழர்களது உரிமைகளையும், பூர்விக நிலங்களையும் பாதுகாக்க வேண்டுமானால் எங்களுக்கு இந்தியாவின் துணை அவசியமாகிறது.
1987ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.)யினராகிய நாங்கள் ஏற்றுக்கொண்டோம். ஏன் ஏற்றுக்கொண்டோமென்றால்,

இந்த “ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், வடக்கு மற்றும் கிழக்கில் இருக்கும் இலங்கை இராணுவம் தங்களுடைய முகாம்களுக்குள் திரும்பிவிட வேண்டும்! ஒரு இராணுவம் கூட வெளியில் கடமையாற்றுவதற்கு முகாம்களைவிட்டு வெளியில் வரக்கூடாது! இலங்கை இராணுவம் எந்தத் தமிழரையும் கைது செய்யக்கூடாது இலங்கை இராணுவத்துக்கு அதற்கு உரிமை இல்லை! என்ன குற்றம் செய்திருந்தாலும் சரி, சிறையில் இருக்கும் அத்தனை தமிழரும் விடுதலை செய்யப்பட வேண்டும்”

வடக்குக் கிழக்கு இணைந்த ஒரு மாநிலமும் அதற்கான நிர்வாகமும் அமைக்கப்படும், அந்த மாநிலத்துக்கான அதிகாரங்கள், குறிப்பாக நிலம், தொழில், கல்வி, இது சம்பந்தமாக தீர்மானம் எடுக்கிற உரிமை, அந்த மாகாண அரசையும் தமிழ் மக்களையும் பாதுகாக்கவென பொலிஸ் மற்றும் ஆயுதம் தாங்கிய தமிழ்த் தேசிய இராணுவம் போன்ற உரிமைகள் அந்த ஒப்பந்தத்தில் இருந்தபடியால் நாங்கள் அந்த ஒப்பந்தத்தை ஒரு ஆரம்பகட்ட தீர்வாக ஏற்றுக்கொண்டோம்.

மேற்கூறிய இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் உள்ள அத்தனை சரத்துக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்தியாவால் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தான் விடுதலைப்புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் இணைந்து முறியடித்தார்கள். ஆயினும், “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் எங்கள் முழு ஆதரவையும் வழங்கினோம். இதனால் எங்கள் இயக்கத் தோழர்கள் ஆயிரக்கணக்கானவர்களை இழந்துள்ளோம்.

சிறிலங்கா அரசும், புலிகள் இயக்கமும் இணைந்து தமிழர்களுக்கு ஓரளவுக்கு உரிமையுள்ள மாகாண அரசைக் கலைக்க வேண்டும், அமைதிப்படை நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று ஒன்றாகக் கோரிக்கை வைத்தனர். இந்தியாவுக்கு அவர்கள் பெரும் அவமானத்தையும் ஏற்படுத்தினர். இதனைத் தொடர்ந்து மாநில அரசில் அங்கம் வகித்த நாமும் நாட்டை விட்டு வெளியேறினோம்.

அப்படி வெளியேறிய நாம் இன்றுவரை இந்தியாவில் வாழ்ந்து வருகிறோம். தமிழ் மக்களது ஏகப் பிரதிநிதிகள் நாங்கள் மட்டும்தான் என்று புலிகள் உரிமை கோரினர். அது தவறு என்பதைக் காலம் கடந்தும் உணர்வதாகத் தெரியவில்லை.

இந்தியா ஏற்படுத்திய ஒப்பந்தத்தினை ஏற்றுக்கொண்டவர்கள் என்ற அடிப்படையிலும், மிகவும் பாதிக்கப்பட்டுள்ள எம் மக்களிடையே மீண்டும் ஒரு யுத்தத்தைப் புகுத்தி இழப்புகளை ஏற்படுத்தாமல், எமது மக்களையும், எமது பிரதேசங்களையும் எமது உரிமைகளையும் கைப்பற்ற ஒரே வழி “இந்திய-இலங்கை” ஒப்பந்தம்தான் என்பதை நாம் உணர்ந்து, இந்தக் காலகட்டத்தில் மீண்டும் இந்தியாவைக் கோருகிறோம்.

“இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை முழுமையாக நடை முறைப்படுத்த வேண்டும். ராஜபக்சே “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தில் உள்ள தனக்கு வேண்டிய பகுதிகளை மட்டும் நடைமுறைப்படுத்தி தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான பிரிவுகளை நிராகரித்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறார்.

எனவே நாங்கள் இரண்டு கோரிக்கையினை மட்டும் முன்வைத்து சென்னை சிறிபெரும்புதூரிலிருக்கும் ராஜீவ்காந்தி நினைவு மண்டபத்திலிருந்து புது டெல்கியில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடம் வரையில் 2500 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொள்ளவிருக்கிறோம். ஈழத் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட ஈழத் தமிழர்களே நடத்தும் இந்தக் கோரிக்கை நடை பயணத்துக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
ஈழத் தமிழரது கீழ்க்காணும் கோரிக்கையினை மாண்புமிகு ஜனாதிபதி ஸ்ரீமதி. பிரதீபா பாட்டில் அவர்களிடமும், மாண்புமிகுப் பாரதப் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங் அவர்களிடமும், எதிர்கட்சித் தலைவர் திருமதி. சுஸ்மா சிவராஜ் அவர்களிடமும் காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியாகாந்தி அவர்களிடமும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் உயர்திரு. பிரகாஸ் கரத் அவர்களிடமும், யு.டீ. பரதன் அவர்களிடமும் மற்றும் அனைத்து எதிர்கட்சிகளின் தலைவர்களிடமும் கையளிக்கவுள்ளோம்.

(01) “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

(02) 1948ஆம் ஆண்டுக்குப் பின்னர் (இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர்) தமிழரது பூர்விகப் பகுதிகளில் சிங்கள அரசினால் குடியேற்றம் செய்யப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை முற்றாக வெளியேற்ற வேண்டும்.

என்ற இந்த இரு கோரிக்கைகளையும் முன்வைத்து நாங்கள் இந்த நடைபயணத்தை மேற்கொள்ளவிருக்கிறோம்.
இந்த நடை பயணத்தை காங்கிரஸ் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரும், காங்கிரசின் தமிழ் நாட்டு மூத்த தலைவருமான திரு. இரா. அன்பரசு அவர்கள் ஆரம்பித்து வைக்கிறார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தோழர். தா. பாண்டியன் அவர்கள் இந்த நடைபயணத்தை வழியனுப்பி வைப்பார்கள்.

மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் திரு. G.இராமகிருஸ்ணன் அவர்களையும் கலந்துகொள்ளும்படி நாங்கள் கோரியுள்ளோம். மேலும் தமிழகத்தின் ஏனைய அனைத்துக் கட்சிகளையும் சந்தித்து ஆதரவு கோரவுள்ளோம், அவர்களுக்கு இது தொடர்பாக கடிதங்கள் அனுப்பியுள்ளோம், ஆதரவு வழங்குவார்கள் என்று நம்புகிறோம்.

பத்திரிகைத் துறையும் எங்களது இந்த நடைபயணத்துக்கு மட்டுமல்லாமல், ஈழத் தமிழர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்தும் எம்மினத்துக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

நாள்: 16-01-2011 ஞாயிறு
நேரம்: காலை 10:00 மணி.
இடம் : இராஜீவ்காந்தி நினைவு மண்டபம், சிறிபெரும்புதூர்.

இவ்வண்ணம்,
ஞா.ஞானசேகரன்
தலைவர்,
ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி
(ஈ.என்.டி.எல்.எப்.)

கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவுக்கு ரிபிசி வானொலி வழங்கிய அறிக்கை.

TBC_Logoபிரித்தானியாவில் செயற்படும் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை 22-11-2010

கற்க வேண்டிய பாடங்களையும் நல்லெண்ணத்திற்கான வழிமுறைகளையும் கண்டறிவதற்கென நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்கழு முன்னிலையில் எமது அவதானிப்புகளை வழங்கச் சந்தர்ப்பம் தந்தமைக்கு எமது நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேற்குலக நாடான பிரித்தானியாவில் கடந்த 10 ஆண்டுகளாக செயற்பட்டுவரும் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்ற பெயரில் இயங்கும் எமது வானொலிச் சேவை ஆபிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு போன்ற பகுதிகளில் நேரடியாகவும், சர்வதேச அளவில் இணையத்தளத்திலும் தனது சேவையை வழங்கி வருகிறது. வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் தமது அடையாளங்களைப் பேணும் வகையில் செயற்படுமாறு தூண்டுதல், இன, மத, நிற, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் மனித உரிமை, மனித நேயம், ஜனநாயகம், சமத்துவம், சமஉரிமை என்ற சர்வதேச விழுமியங்களின் அடிப்படையில் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை எட்டுதல், இலங்கையின் ஐக்கியம், இனங்களுக்கிடையேயான நல்லுறவுகளை வளர்த்தல், பயங்கரவாதம், வன்முறை, மனித உரிமை மீறல் என்பவற்றிற்கெதிராக செயற்படுதல் என்பவற்றை பிரதான குறிக்கோள்களாகக் கொண்டு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தனது சேவையை வழங்கி செயற்பட்டு வருகிறது.

எமது வானொலியின் சேவைகளும் செயற்பாடுகளும் இலகுவாக அமைந்ததில்லை. இலங்கை வாழ் மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் எவ்வாறு விடுதலைப்புலிகளின் ஒடுக்கு முறைக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டார்களோ, அதே மாதிரியான அழுத்தங்களுக்கு எமது சேவையும் முகம் கொடுத்தது. எமது சேவை வெறுமனே ஒலிபரப்புடன் நிறுத்திக் கொள்ளாது மக்கள் மத்தியில் சென்று பிரச்சனைகளை நேரடியாகவும் கலந்துரையாடல்கள் மூலமும் விளக்கி வந்தது. இதனால் பலர் பல்வேறு மிரட்டல்களுக்கு உள்ளாக்கப்பட்டதோடு வானொலி நிலையமும் பல தடவைகள் தாக்குதல்களுக்கு உள்ளாகியது.

இந்தப் பின்னணியிலிருந்தே கடந்த 2002 ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஐரோப்பிய நாடுகளில் நிலமை, மக்களின் மனநிலை எவ்வாறு இருந்தது? என்பதனையும் அக் காலப்பகுதியில் மக்களின் மத்தியில் காணப்பட்ட எதிர்பார்ப்புகள் என்ன? என்பதனையும் உங்கள் கவனத்திற்கு தர விரும்புகிறோம். எமது வானொலி பல ஆயிரக் கணக்கான நேயர்களைக் கொண்டிருப்பதோடு, மிகப் பெருந் தொகையானவர்களுடன் இடையறாத தொடர்புகளையும் பேணி வருகிறது. அந்த வகையில் ஐரோப்பாவில் மற்றும் மத்திய கிழக்கில் தங்கி வாழும் தமிழ் மற்றும் இஸ்லாமிய மக்களின் மனப் போக்கினை எம்மால் ஒரளவு தர முடியும் என நம்புகிறோம்.

விடுதலைப்புலிகளுக்கும் ரணில் அவர்கள் தலைமையிலான அரசிற்குமிடையே நோர்வே நாட்டில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போது எமது வானொலிச் சேவை இலங்கை வானொலி ஊடாக தனது சேவையை அங்கும் விரிவுபடுத்தியது. இச் சேவையின் தாக்கங்கள் ஐரோப்பாவில் மட்டுமல்லாது தாயகத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தியதால் விடுதலைப்பலிகள் எமது இலங்கைச் சேவையை தடைசெய்யுமாறு இலங்கை அரசை வற்புறுத்தி அதிலும் வெற்றி கண்டார்கள்.

ஐரோப்பாவின் பல பாகங்களிலே தமிழர்கள் பலர் அகதிகளாக குடியேறினர். இவர்களில் கணிசமான தொகையினர் அரசியல் நடிவடிக்கைகளில் மற்றும் வன்முறைகளோடு ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டவர்களாக இருந்தனர். இதில் ஒரு சாரார் புலிகளுடன் தொடர்புகொண்டவர்களாக அல்லது போராளிகளின் குடும்ப உறுப்பினர்களாக அல்லது நெருக்கமான சம்பந்தம் கொண்டவர்களாக காணப்பட்டனர். மற்றொரு சாரார் தமிழ் தேசியத்தை நேசிப்பவர்களாக இருந்தனர். இவர்களில் ஒரு பகுதியினர் தமிழீழம் புலிகளால் சாத்தியமாகும் என நம்பினார்கள். மிக நீண்ட காலத்திற்கு போராட்டம் தொடர்ந்ததாலும், ஆயுதப் போராட்டம் காரணமாக கிடைத்த வெற்றிகளும், ராணுவத்திற்கு கிடைத்த தோல்விகளும், அவ்வப்போது அரசு புலிகளுடன் பேச எடுத்துக்கொண்ட எத்தனிப்புகளும் அவர்களது நம்பிக்கையை பலப்படுத்தின. தமிழ் தேசியத்தினை ஆதரித்த மற்றொரு சாரார் இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலில் இனப்பிரச்சனைக்கான தீர்வு இல்லை என்ற நிலை காணப்பட்டதாலும், ராணுவ ஒடுக்குமுறை மூலம் இனப் பிரச்சனையை நசுக்க எடுத்த முயற்சிகளால் மனமுடைந்ததாலும் வேறு வழியின்றி புலிகளை ஆதரித்தார்கள்.

இவர்கள் பிரச்சனைக்கான தீர்வு என்பது ஆயுத வன்முறை மூலமாகவோ அல்லது தமிழீழக் கோரிக்கையின் மூலமாகவோ சாத்தியமாகாது எனத் தெரிந்துள்ள போதிலும் புலிகளின் ஜனநாயக மீறலை மௌனமாக ஏற்றுக்கொள்ள புறச் சூழல்களால் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

ஐரோப்பிய நகரங்களில் பல்வேறு ஆரப்பாட்டங்கள், கூட்டங்கள் என்பவற்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குபற்றியதற்கான பிரதான காரணம் தமிழீழம் அல்லது வன்முறைக்கான ஆதரவு என்பதை விட தமிழ் மக்களின் ஜனநாயகத்திற்கான குரலை ராணுவத்தை பயன்படுத்தி ஒடுக்க விழையும் போக்கிற்கு எதிரான மன உணர்வின் வெளிப்பாடு என்றே எம்மால் குறிப்பிட முடியும். ஐரோப்பாவில் குறிப்பாக பிரித்தானியாவில் தமிழர்கள் சில உள்ளுராட்சி எல்லைகளுக்குள் கணிசமான தொகையில் வாழ்வதால் அவர்கள் தேர்தலின் போக்கை நிர்ணயிப்பவர்களாகவும் உள்ளனர். இதனால் சில பிரதேசங்களிலுள்ள தொகுதிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அதிக கவனம் செலுத்துவதோடு புலிகளுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இலங்கை அரசு இனப் பிரச்சனையில் ஆக்கபூர்வமான முடிவுகளை எடுக்காத வரை ஐரொப்பிய அரசுகள் அழுத்தங்களைப் பிரயோகிப்பது தவிர்க்க முடியாதது எனக் குறிப்பிட விரும்புகிறோம். இதனை புலிகளுக்கு ஆதரவான சக்திகளின் அரசுக்கு எதிரான பிரச்சாரமென அரசு கருதுமாயின் அது தவறாகும். ஐரோப்பாவில் வாழும் தமிழர்களில் ஒரு சாரார் குறிப்பிடத்தக்க வகையில் அமைப்பு வடிவில் செயற்படுவது குறிப்பிடத்தக்கது. இதற்கான பிரதான காரணம் புலிகளுக்கான நிதி திரட்டலுக்கு இது அவசியமாக இருந்தது. ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள் என்பவற்றை அடிக்கடி வைப்பதன் மூலம் இவர்களை உற்சாகம் குறையாமல் வைப்பதும் அவசியமாக இருந்தது. இத்தகைய நடவடிக்கைகளின்போது அரசியல் தீர்வு குறித்த அறிவுபூர்வமான கருத்துக்களோ அல்லது விவாதங்களோ இடம்பெறுவதில்லை. மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் ராணுவ அத்துமீறல்கள் வர்ணிக்கப்பட்டன. வன்னியில் முப்படைகளின் துணையுடன் அரசு ஒன்று இயங்குவதாகவும் அதனைப் பலப்படுத்த பணம் தேவை என்பதே பிரதான பேச்சாக அமைந்திருந்த போதிலும், இவ்வாறான பலம் பொருந்திய அமைப்பு ஒன்று அமைந்தால் மட்டுமே அரசு பேச்சுவார்த்தையை நோக்கித் திரும்பும் என்பதே மையப் பொருளாக அமைந்து வந்தது.

எனவே புலம்பெயர் தமிழர்களின் அரசியல் நிலைப்பாடு என்பது தனி அரசு என்பதை விட தனியான பலமான நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்படுவது ஐக்கிய இலங்கைக்குள் கௌரவமான தீர்வைப் பெறுவதற்கு ஓர் பலமான உந்துதலை அளிக்கும் என்பது பொதுவான போக்காக அமைந்திருந்தது. இதனை மே 19ம் திகதிக்கு பின்னதான நிகழ்வுகளும் எமக்கு உணர்த்திநிற்கின்றன. மேற்குலக நாடுகளில் கடந்த காலங்களில் காணப்பட்ட அரசியல் கொந்தளிப்பு நிலை என்பது புலிகளின் பண வசூலிப்புடன் பொருத்தியே அவதானிக்கப்பட வேண்டும்.

மே 19 ம் திகதிக்கு பின்னர் இடம்பெற்ற நிகழ்வுகளை அவதானிக்கும்போது புலிகளின் பினாமிகளால் செயற்கையாக தூண்டிவிடப்பட்ட போலித் தமிழ் தேசியவாதம் அதன் தோல்வியை அடைந்துள்ளது என்றே கூறவேண்டும். ஆனால் உண்மையான தமிழ்த் தேசியவாதம் தற்போது விழிப்பு நிலைக்கு வந்துள்ளதையும் நாம் குறிப்பிட்டே ஆகவேண்டும். இதற்குப் பிரதான காரணம் தமிழர் தேசியக் கூட்டமைப்பின் இயலாத் தன்மை அம்பலமாகியதும், புலிகளின் தோல்வி, முள்ளி வாய்க்கால் அனுபவங்கள், இடம் பெயர்ந்த மக்களின் அவலங்களும் அனுபவங்களும், இன்றைய அரசின் இனப் பிரச்சனை தொடர்பான போக்கு என்பன புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதேயாகும்.

ஐரோப்பா மற்றும் மேற்குலக நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களை ஒட்டு மொத்தமாக புலிகளின் ஆதரவாளர்கள் என அரசு தொடர்ந்து கூறிவரும் போக்கும், நாடு கடந்த தமிழீழம் என்ற பெயரில் இடம்பெற்று வரும் நாடகத்தினை பூதாகரமாக காட்ட முனைவதும், இவற்றினைக் காரணம் காட்டி தமிழ்ப் பிரதேசங்களில் ராணுவ முகாம்களை பலப்படுத்துவதும், அபிவிருத்தி என்ற பெயரில் மறைமுகமான குடியேற்றங்களை நிறுவ எத்தனிப்பதும், பௌத்த விகாரைகளை தனியார் நிலங்களில் நிறுவப்படுவதை பாராமுகமாக ஆதரிப்பதும் அரசின் மீதான அதிருப்தியையும், அவநம்பிக்கைiயும் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

நாம் ஏற்கெனவே குறிப்பிட்டது போல மே 19ம் திகதிக்கு பின்னர் இடம்பெற்று வரும் நிகழ்வுகள் தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள மக்கள் மத்தியிலே ஏதோ ஒரு வகையில் தாம் ஏமாற்றப்பட்டிருப்பதை உணரும் போக்கை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஏமாற்ற உணர்வு ஒரு புறத்தில் ஓர் புதிய தேசத்தை நோக்கிய அணுகுமுறையை நோக்கி ஒரு சாராரை தள்ளியுள்ள அதேவேளை இன்னொரு சாரார் சர்வதேச ஆதரவை நோக்கித் திரும்பியுள்ளதையும் நாம் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

இந்த அணுகுமுறை இலங்கை அரசுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் அணுகுமுறையாக அமையலாம் அல்லது தேசவிரோத சக்திகளுக்கு துணைபோவதாகவும் அமையலாம். இவை எந்த விதத்திலும் விரும்பத்தக்க ஒன்று அல்ல என்ற போதிலும் இவ்வாறான ஓர் நிலமைக்கு காரணம் அதிகாரத்தில் உள்ளவர்களே என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவிக்க விரும்புகிறோம்.

ஆணையாளர்களே!

வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களில் பலர் ஐக்கிய இலங்கைக்குள் கௌரவமான அரசியல் தீர்வை நோக்கி சிந்திக்கிறார்கள். செயற்படுகிறார்கள். கடந்த காலத்தில் தமிழ் மக்கள் தமிழ்த் தலைமைகளாலும் ( புலிகள்உட்பட ) சிங்களத் தலைமைகளாலும் ஏமாற்றப்பட்டுள்ளதை நன்கு உணர்கிறார்கள். மாற்று அணுகுமுறை ஒன்றின் அவசியத்தை நோக்கிச் செல்ல விழைகிறார்கள்.

2002ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர் இவர்கள் மிகுந்த நம்பிக்கையோடு தமிழ்ப் பகுதிகளிலேயும், கொழும்பிலும் நிலங்களையும், வீடுகளையும் வாங்கினார்கள். இத் தருணத்தில் புலிகள் போருக்குத் தம்மைத் தயார்ப்படுத்திய போதிலும் இத் தயாரிப்பு என்பது தமிழ்ப் பிரதேச பாதுகாப்பு சம்பந்தப்பட்டதாகவே கருதினார்கள். புலிகளும் அப் பிரதேசம் தமது கட்டுப்பாட்டிற்குள் வரப்போவதாகக் கருதி தங்களது ஒடுக்குமுறை மூலம் பூரண கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காகவே தயாரிப்புகளை மேற்கொண்டார்கள்.

புலிகளின் ஆதரவாளர்கள் பலர் வன்னியில் காணிகளை வாங்கிய நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன. எனவே போர் என்பது மணலாற்றில் ஆரம்பிக்கப்பட்டது என்ற போதிலும் அது ராணுவத்தினால் திணிக்கப்பட்ட ஒன்றாகவே கருதவேண்டியுள்ளது. போர் நிறுத்த காலத்தில் மேற்குலக நாடுகளிலிருந்து பலர் இலங்கை சென்றிருந்த போதிலும் அவர்களது அனுபவங்கள் எதிர்மறையாக இருந்தன.

கொழும்பில் தங்கியவர்கள் பொலீஸ் நிலையங்களில் பதிவு செய்யவும், உறவினர்களின் வீடுகளில் தங்கியதால் உறவினர் துன்புறுத்தப்பட்ட சம்பவங்கள், விடுதிகளின் உரிமையாளர்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டமை, வடக்கு-கிழக்கு பகுதியிலிருந்து கொழும்பில் தங்கிய இளைஞர்கள் இரவோடிரவாக வாகனங்களில் ஏற்றப்பட்டு அனுப்பப்பட்டமை, வர்த்தகர்கள், வெளியிலிருந்து சென்றவர்கள் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு பணம் பறிக்கப்பட்டமை, படுகொலை செய்யப்பட்டமை என பல நிகழ்வுகளால் பெரும் மனப் பாதிப்பிற்கு உள்ளானார்கள். தலை நகரத்தில் பாதுகாப்பற்ற தன்மையும், குற்றவாளிகள் எவருமே நீதியின் முன்னால் நிறுத்தப்படாததும் தமிழர்களின் எதிர்காலம் குறித்த அச்சங்களை அனுபவ ரீதியாக ஏற்படுத்திருந்தன. இது ஒரு புறம் தொடர மறு பக்கத்தில் குறிப்பாக வடபகுதி சென்றவர்களின் கடவுச் சீட்டுகள் பறிக்கப்பட்டு, பணம் பறிக்கப்பட்டு பயமுறுத்தப்பட்ட சம்பவங்கள் நடந்தேறின. இவை புலிகளால் மேற்கொள்ளப்பட்டன. இவை சமாதானத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்ததோடு மீண்டும் தாயகம் திரும்பும் நம்பிக்கையைச் சிதறடித்தது.

தற்போது நிலவும் சூழலும் அவ்வாறான மனநிலையையே மீண்டும் தோற்றுவித்துள்ளது என்பதனைத் தெரிவிக்க விரும்புகிறோம். நீண்ட காலம் தொடர்புகளை இழந்திருந்த தமது உறவினர் நண்பர்களை மீளச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியதாக கருதுகிறார்களே தவிர சமாதானத்தின் மீது நம்பிக்கை எழவில்லை. போரின் கொடுமைகளிலிருந்து தப்பியுள்ளதாக கருதுகிறார்களே தவிர உரிமை பெற்ற இனமாக வாழமுடியும் என்ற எதிர்பார்ப்பை இழந்தே வாழ்கிறார்கள்.

ஆணையாளர்களே!

ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்துவரும் தமிழ் மக்கள் போருக்குப் பின்னதான நிகழ்வுகள், மாற்றங்களின் அனுபவங்கள் மூலம் அரசியல் எதிர்காலம் குறித்து பரந்த அளவில் விவாதித்து வருகின்றனர். குறிப்பாக சர்வகட்சி மாநாட்டுக் குழுவின் தலைவர் திஸ்ஸ விதாரண அவர்களால் முன்வைக்கப்பட்ட தீர்வுகள் குறித்து எமது வானொலி பரந்த அளவில் விவாதங்களை நடத்தியது.

இதில் அமைச்சர் திஸ்ஸ விதாரண அவர்கள், முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் கக்கீம், மற்றும் நிசாம் காரியப்பர் போன்றோர் பங்களித்தனர். அதுமட்டுமல்லாமல் பிரான்ஸ், ஜேர்மனி, சுவிற்சலாந்து, பிரித்தானியா போன்ற நாடுகளில் பல கூட்டங்கள் நடத்தப்பட்டு விவாதிக்கப்பட்டன.

குறிப்பாக அதிகார பரவலாக்கத்திற்கான குறைந்தபட்ச அலகாக மாகாணசபைகளை ஏற்றுக்கொள்ளுதல், அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்தின் பிரகாரம் மாகாணசபைக்கு வழங்கப்பட்ட 3வது அட்டவணை ( யுnநெவசந உ) நீக்கப்படுவதை ஆதரித்தல், மாகாணசபையின் செயற்பாட்டு எல்லையை தெளிவாக வரையறுத்தலும், சட்டம் இயற்றும் அதிகாரத்தை வழங்குதலும், இரண்டாவது சபையான செனட் சபை உருவாக்கத்தின் தேவையையும் உள் நோக்கங்களையும் ஆதரித்தல் என்பவற்றில் பலத்த உடன்பாடு காணப்பட்டது. சர்வகட்சி மாநாட்டின் அமர்வுகளின்போது ஐரோப்பிய நாடுகளில் பொதுவான ஆர்வம் காணப்பட்டதும், போரின் பின்னர் அதற்கான ஆதரவு அதிகரித்து வருவதும் கவனத்தற்குரியதாகும்.

ஆணைக்குழுவின் விசாரணைக்கான கால எல்லை 2002-2009 எனக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் பிரச்சனைகள் நீண்ட வரலாற்றைக் கொண்டிருப்பதால் இக் கால எல்லை என்பது மொத்தப் பிரச்சனைகளின் ஓர் குறிப்பிட்ட பகுதியே ஆகும். எனவே 2002ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தமும் அதன் தோல்விகளும் வெறுமனே புலிகளின் திட்டமிட்ட மீறல் என்ற வரையறைக்குள் அடக்கிவிட முடியாது. சுதந்திரத்திற்கு பின்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள், அதன் காரணமாக எழுந்த ஒப்பந்தங்கள், அவை தோல்வியில் முடிந்தமைக்கான பின்னணிகள் என்பனவும் இதற்குக் காரணிகளாக அமைந்தன. பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம் என்பன முக்கியமானவை. இருந்த போதிலும் இலங்கை- இந்திய ஒப்பந்தம் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். முதன் முதலாக வெளிநாடு ஒன்றின் உதவியுடன் உள் நாட்டின் பிரச்சனைக்கு தீர்வு காண எடுக்கப்பட்ட முயற்சி ஆகும். இதற்கு சர்வதேச ஆதரவும் கிட்டியது. இந்த ஒப்பந்தத்தில் தமிழர்கள் தரப்பு ஓர் பகுதியாக அமையாத போதிலும் இரு அரசுகள் சம்பந்தப்பட்ட சர்வதேச ஒப்பந்தம் என இதனைக் கருத முடியும்.

இந்த ஒப்பந்தமும் இனங்களிடையே பரஸ்பர நல்லிணக்கத்தையும் அமைதியையும் தருவதற்குப் பதிலாக மேலும் இடைவெளியை அதிகமாக்கிய ஒன்றாகவே அமைந்தது. இலங்கை அரசு விடுதலைப்புலிகளைப் பயன்படுத்தி இந்த ஒப்பந்தத்தினை பலவீனப்படுத்திய நிலமைகளும், இந்திய சமாதானப் படைகளுக்கும், புலிகளுக்குமிடையே போர் ஏற்பட்ட வரலாறுகளும் அதன் பின்னர் ஜனாதிபதி பிரேமதாச அவர்கள் படுகொலை செய்யப்பட்ட அனுபவங்களும் 2002ம் ஆண்டின் போர் நிறுத்த ஒப்பந்தமும் வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கையை எவருக்கும் தரவில்லை.

போர் நிறுத்த ஒப்பந்தம் பலவீனப்படுத்தப்பட்டதும், இதன் குறைபாடுகளை மையமாக வைத்து ஐ தே கட்சி மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும், போருக்கான தயாரிப்புகளும் இனப் பிரச்சனை தீர்க்கப்படுவதற்காக எடுத்துகொண்ட முயற்சிகளின் உள் நோக்கங்களை இப்போது நன்கு உணர்த்துகின்றன. புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட போர் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனவும், தாய் நாட்டைப் பாதுகாப்பதற்கான போர் எனவும், போரை விமர்சிப்பவர்கள் தேசத் துரோகிகள் எனவும் வர்ணிக்கப்பட்டது. இதன் சாராம்சம் இனப் பிரச்சனைக்கான அடிப்படைக் காரணங்களை முற்றாக மறைத்தது மட்டுமல்லாமல் தமிழ் மக்களை தேச விரோத சக்திகளாக அடையாளம் காட்டும் எத்தனமும் இடம் பெற்றுள்ளது. தாய் நாட்டைக் காப்பாற்றுவதாகக் கூறும் பிரச்சாரம் அதுவாகவே அமைந்தது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் நாட்டைப் பிரிக்க உதவியதாகவும், ஐ தே கட்சி புலிகளின் தோழர்கள் என வர்ணிக்கப்பட்டதன் மூலம் தமிழர்களும் ஐ தே கட்சியும் தேசத்துரோகிகள் என அடையாளப்படுத்தப்பட்டார்கள்.

போரின்போது முன் வைக்கப்பட்ட பிரச்சாரங்கள் இனப் பிரச்சனைக்கான புதிய பாதையை அறிவிக்காமல் தீவிர சிங்கள தேசியவாத கண்ணோட்டத்தில் எடுத்துச் செல்லப்பட்டதால் அவை சிறுபான்மை இனங்கள் மத்தியிலே மிகவும் அச்ச உணர்வை ஏற்படுத்தியிருந்தன.

போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையிலிருந்த போது புலிகளின் முக்கிய தலைவர்கள் மேற்கு நாடுகளில் மேற்கொண்ட பிரச்சாரங்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் தமிழர்களுக்கான தனியான. சுயமான நிர்வாகத்தைப் பெறுவதற்கு வாய்ப்பை அளித்துள்ளதாகவம், சம பலமே இச் சந்தர்ப்பத்தை அளித்தது எனவும் கூறி பலமான ராணுவக் கட்டமைப்பிற்கான பண உதவியின் தேவையை மறைமுகமாக வலியுறுத்தினார்கள்.

இலங்கை அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட போது வன்னி நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டே பேச்சவார்த்தையில் இறங்கினார்கள் எனவும், தமது படை வலிமையையும் ஏற்றுக் கொண்டார்கள் எனவும் கூறினார்கள். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டால் போர் நிறுத்த தோல்விக்கு ஒப்பந்தம் சரியாக அமுல்படத்தப்படவில்லை. கண்காணிப்புக்குழு உரிய முறையில் செயற்படவில்லை என்ற முடிவுக்கே நாம் செல்ல முடியும். அவ்வாறானால் இரு சாராருமே சமாதானத்தைத் தரக்கூடிய வலுவான ஒப்பந்தத்தை எதிர்பார்க்கவில்லை. பெயரளவிலான ஒன்றை நோக்கியே செயற்பட்டுள்ளார்கள் என்பது வெளிப்படை.

ஐரோப்பிய நகரங்களில் புலிகளின் செயற்பாடுகள் வன்னி அரசைப் பலப்படுத்தும் போக்கை மட்டுமே கொண்டிருந்தபோது அதனால் ஏற்படக்கூடிய எதிர் விளைவுகள் குறித்து இதர ஜனநாயக சக்திகள் எச்சரிக்கை செய்து வந்தன. ஆனாலும் இவற்றின் பலம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது. இதற்கான பிரதான காரணம் இலங்கை அரசின் திட்டமிட்ட அசமந்த போக்கே எனலாம்.

வடக்கு கிழக்கில் புலிகளின் ஜனநாயக விரோத, பயங்கரவாத, வன்முறை ஒடுக்கு முறைகளுக்கு எதிராக குரல் எழுப்பிய அமைப்புகள், தனி நபர்கள் என்போரைப் பலப்படுத்தவோ அல்லது பாதுகாக்கவோ அல்லது ஒன்றிணைக்கவோ எந்தவிதமான ஆக்கபூர்வமான முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. இவர்கள் தமக்குள்ளே போரிட்டு அழிய வேண்டும் என்பதே நிலைப்பாடாகவே இருந்தது. இதே நிலமைதான் மேற்கு நாடுகளிலும் காணப்பட்டது. இலங்கை அரசுக்கு எதிரான பிரச்சாரங்கள் அதிக அளவில் இடம்பெற்றபோது கவலை அடைந்திருந்த அரசு இப் பாகங்களில் செயற்பட்ட ஜனநாயக சக்திகளை இனம் கண்டுகொள்ளவில்லை. இவர்கள் புலிகளின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக செயற்பட்ட போதும் அரசுக்கு ஆதரவாக இல்லை என்பதால் கைவிடப்பட்டார்கள்.

இவ் ஜனநாயக சக்திகள் ஜனநாயக விரோத செயற்பாடுகளை ஒட்டு மொத்தமாக எதிர்த்தார்கள். புலிகளினதும், அரசினதும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தினார்கள். உதாரணமாக புலிகள் சிறுவர்களை ஆயுதக்குழுவில் இணைக்கும் மனித உரிமை மீறல்களை ஆதாரங்களுடன் மனித உரிமை அமைப்புகளிடம் சமர்ப்பித்தார்கள். இலங்கை அரசின் தூதுவராலயங்கள் இச் செயற்பாடுகள் பற்றிய மதிப்பீட்டைமேற்கொண்டு உரிய வகையில் செயற்பட்டிருக்க வேண்டும். ஆனால் தூதுவராலயங்களும் ஆட்சியாளர்களின் கட்சி சார்பான நியமனங்களாக அமைந்ததால் அவர்களும் தமக்கு ஏற்ற வகையில் அவ்வப் பகுதிகளில் வாழும் சிங்கள மக்களுடனான உறவகளோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறார்கள்.

பிரித்தானியாவிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தின் உயர் ஸ்தானிகராக பெண்மணி ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் ராஜதந்திர சேவையில் நீண்ட கால அனுபவம் கொண்டிருந்ததால் சகல பிரிவினரும் சந்தித்து விவாதிக்கும் ஒரு தளமாக சிலகாலம் அமைந்தது. இது அதிக காலம் நீடிக்கவில்லை. இது குறுகிய கால நிகழ்வு என்ற போதிலும் புதிய அனுபவத்தை அதாவது தூதுவராலயம் இன நல்லிணக்கத்தில் வகிக்கக்கூடிய பாத்திரத்தை புரிந்து கொள்ளும் வாய்ப்பை எமக்கு அளித்தது. ஆனால் இப் பெண்மணிக்கு முதலும் அதன் பின்னரும் நியமிக்கப்பட்டவர்கள் தமிழர்களின் உறவை புலிகளுக்கு எதிரான பிரச்சாரமாக பயன்படுத்த தலைப்பட்டார்களே தவிர இன இணக்கத்தின் அவசியத்தை புரிந்துகொண்டவர்களாக இல்லை. இத் தூதுவராலயங்கள் உளவுத்துறை நிறுவனங்களாகவே செயற்படுகின்றன. புலிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பனவாக உள்ளனவே தவிர இன இணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஜனநாயக சக்திகளுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தவும் தயாராக இல்லை. அவர்கள் அரசுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எதிர்பார்க்கின்றனரே தவிர சகலரும் இலங்கையர் என்ற பொது அடையாளத்தில் இணைக்க தயாராக இருக்கவில்லை.

அடுத்து தமிழ்ப் பிரதேசங்களில் அபிவிருத்தி தொடர்பாக காணப்புடும் நிலமைகள் குறித்து மிகவும் கவலை கொண்டிருப்பதை பதிவு செய்ய வேண்டியுள்ளது. அப் பிரதேச அபிவிருத்தியில் அப் பிரதேச மக்களின் பங்களிப்பு பெறப்படாமல் அரச அதிகாரிகள், ராணுவம் என்பனவே முக்கிய தீர்மானம் எடுக்கும் கருவிகளாக உள்ளன. இது ஊழல், வீண் விரயம் என்பவற்றிற்கான வடிகால்களாக அமைவதை சர்வதேச அனுபவம் எடுத்துக் காட்டுகிறது. போரின் காரணமாக இருப்பிடங்களை விட்டு வெளியேறிய மக்கள் மீண்டும் தமது நிலங்களுக்குச் செல்வது பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு தடுக்கப்பட்டுள்ளது. ராணுவ முகாம்கள் அமைத்தல், நிலக்கண்ணி அகற்றப்படாது இருத்தல், நிலங்களின் உரிமை தொடர்பான சர்ச்சைகளைக் காரணம் காட்டி தடுத்தல், புலிகளால் சட்ட விரோதமாக மாற்றப்பட்ட நில உரிமம் தொடர்பான பிரச்சனைகள், புதிய சுதந்திர வர்த்தக வலையங்கள் அமைத்தல் என்ற போர்வையில் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்த பாரம்பரிய பகுதிகளிலிருந்து வெளியேற்றப்படுதல் என மிக நீண்ட பட்டியல் தொடர்கிறது. இத் தீர்மானங்கள் அப் பகுதி மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படுகிறது என்றால் அவை பற்றி போதிய தகவல்களை வழங்காமல் தவிர்க்கப்படுவது சந்தேகங்களை வலுப்படுத்துவதாக உள்ளது.

நிலப் பிரச்சனை என்பது உள்ளுரில் ஓர் சிவில் யுத்தத்தினை ஏற்படுத்துவதற்கான புறச் சூழலை ஏற்படுத்தியுள்ளது. ராணுவம் விலக்கப்பட்டால் சிவில் யுத்தம் தவிர்க்க முடியாமல் போகும் என்ற அச்சம் பரவலாகக் காணப்படுகிறது. எனவே இப் பிரச்சனை சட்ட ரீதியாக தீர்ரக்கப்படுவது அவசியம் என்பதால் அங்கு சிவில் நிர்வாக செயற்பாடு தேவையாகவே உள்ளது. வெளிநாடுகளில் வாழ்வோர் பலரின் நிலங்கள், வீடுகள் என்பன சட்ட விரோதமாக கையகப்படுத்தப்பட்டுள்ள நிலை குறித்து பெரும் கவலை பலரின் மத்தியில் காணப்படுகிறது. இந்த அச்சம் போக்கப்படுவதற்கு மக்களின் பங்களிப்புடனான பொது நிறுவனங்கள் செயற்பட வழி செய்யப்பட வேண்டும்.

தாயகத்தில் முதலீடுகளை எதிபார்க்கும் அரசு அம் மாதிரியான முதலீட்டீற்கு குந்தகமாக உள்ள நிலமைகளை மாற்ற உதவ வேண்டும். இதில் பிரதான தடையாக இருப்பது முதலீட்டிற்கான பாதுகாப்பு ஆகும். அரசின் மீது காணப்படும் சந்தேகங்கள் குறிப்பாக முதலீடுகள் நேரடியாக குறிப்பிட்ட பிரதேசத்திற்குப் பயன்படுத்தப்படும் என்பதற்கான நிர்வாக ஒழுங்குகள் அங்கு காணப்படவில்லை. அப் பிரதேசத்திலுள்ள மாகாண சபைகள் பூரண அதிகாரத்துடன் செயற்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டால் அதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உண்டு. மத்திய அரசு எண்பார்வைக் குழுவை நியமித்தால் அது போதுமானதாக அமையும்.

இலங்கையில் இன இணக்கம், வடக்கு கிழக்கு அபிவிருத்தி என்பன எற்பட வேண்டுமாயின் வெளிநாடுகளில் பிரஜா உரிமை பெற்றிருக்கும் இலங்கையர் இரட்டைப் பிரஜா உரிமை பெறும் வகையில் நாட்டின் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். இது முதலீட்டுககான வாய்ப்புகளை அதிகரிக்கும். மேற்கு நாடுகளில் புலம் பெயர்ந்துள்ள பலர் தமது இறுதிக் காலத்தை தமது தாயகத்தில் கழிக்க வேண்டும் என்ற விருப்போடு வாழ்கின்றனர். அத்துடன் பல கல்வியாளர்கள், முதலீட்டாளர்கள், அனுபவஸ்தர்கள் என்போரின் வருகை நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் உதவியாக அமையும்.

மேற்குலக நாடுகளில் வாழும் தமிழ்,முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களுடன் நெருங்கிய தொடர்புள்ள ஓர் ஊடகமாக உள்ள தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தனது அனுபவங்களையும், அபிப்பிராயங்களையும் பகிர்ந்து கொள்வதற்கு கிடைத்த இந்த வாய்ப்பிற்கு மீண்டும் நன்றி கூறும் அதே வேளை இலங்கையர் என்ற பொதுவான அடையாளத்தை நாட்டில் வாழும் சகல சிறுபான்மை இனங்களும் மகிழ்ச்சியோடு ஏற்று செழுமை பெறுவதற்கு பெரும்பான்மை இனத்திலிந்து காத்திரமான மாற்றங்கள் ஏற்படவேண்டும். இந்த மாற்றங்கள் ஸ்தாபன ரீதியாகவும், அரசியல், சமூக, கலாச்சார மாற்றத்தினூடாகவும் மட்டுமே சாத்தியம் என உறுதியாக நம்புகிறோம். இந்த ஆணைக்குழுவின் பணி மிகவும் காத்திரமானது என்பதால் இதன் அமர்வுகள் வெளிநாடுகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டால் நாட்டின் சகல பிரிவினரினதும் ஒட்டுமொத்தமான அபிப்பிராயத்தின் வெளிப்பாடாக அதன் அறிக்கை அமையும் என்பது எமது அவா ஆகும் என்பதை தெரிவித்து முடித்துக் கொள்கிறோம்.

வீ.இராமராஜ்
வி.சிவலிங்கம்
செ.ஜெகநாதன்

ஒக்ஸ்போர்ட் மாணவர் ஒன்றியத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்துகொள்ள இருந்த நிகழ்வு இடைநிறுத்தப்பட்டது!

MR_PresidentOfSLஒக்ஸ்போர்ட் மாணவர் ஒன்றியத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துகொண்டு உரையாற்ற இருந்த நிகழ்வு பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்டதாக ஒக்ஸ்போர்ட் யூனியன் சொசைட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டு ஆர்ப்பாட்டங்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை பாதித்துள்ள காரணத்தினால் இந்த நிகழ்வு இடைநிறுத்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

முழுமையான அறிக்கையும் ஜனாதிபதியின் செயலாளரின் அறிக்கையும் கீழே:

Statement from The Oxford Union on the visit of President Rajapaksa:

Earlier this year, The Oxford Union invited the current President of Sri Lanka, Mahinda Rajapaksa, to address our members at a date convenient to him. The Union has a policy of inviting a broad range of prominent politicians and heads of state from around the world and the invitation to Mr. Rajapaksa was made within the context of this policy.

Since the invitation was first accepted by Mr. Rajapaksa, the Union has consulted extensively with Thames Valley Police as well as the Sri Lankan High Commission in London on security arrangements for the President’s visit. Due to security concerns surrounding Mr. Rajapaksa’s visit which have recently been brought to our attention by the police, the Union has regretfully found that the talk is no longer practicable and has had to cancel his address.

This decision was not taken lightly and the Union deeply regrets the cancellation. The Union has a long tradition of hosting prominent speakers and upholding the principles of free speech. However, due to the sheer scale of the expected protests, we do not feel that the talk can reasonably and safely go ahead as planned.

The Union holds a politically neutral stance with regards to speakers and the decision was not made in relation to any aspect of Mr. Rajapaksa’s political position, the policies of his administration or any allegations against his government. As the President of Sri Lanka for the last five years, the Union felt that Mr. Rajapaksa would provide a unique insight into the political climate of the region in his speech. The Union wishes to apologise to our members for this unfortunate cancellation.

Oxford Union Society
Alistair Walker
Press Officer

Statement issued by Mr Lalith Weeratunga, Secretary to the President of Sri Lanka:

For security reasons the speech by His Excellency President Rajapaksa of Sri Lanka at the Oxford Union, the home of free speech, has been cancelled. This is a decision that has been made unilaterally by the Oxford Union, reportedly as a result of pressure applied by pro-LTTE activists.

His Excellency said:

“I am very sorry this has had to be cancelled but I will continue to seek venues in the UK and elsewhere where I can talk about my future vision for Sri Lanka.”

His Excellency went on to say:

“I will also continue in my efforts to unite all the people of our country whether they live in Sri Lanka or overseas.

As a united country we have a great future.

If we allow divisions to dominate we will not realise our true potential.

We have had thirty years of division and conflict. We must now secure peace and harmony for all Sri Lankans.”

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோள் கொடுக்கும் லிற்றில் எய்ட்

Mannar_Children_Projectலிற்றில் எய்ட் இரண்டாவது ஆண்டாகத் தனது உதவித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. தற்போது லிற்றில் எய்ட் உடன் குளோபல் மெடிகல் எய்ட் டென்மார்க் மெடிகல் சென் புரொன்ரியர்ஸ் ஆகிய சர்வதேச அமைப்புகளும் அகிலன் பவுண்டேசன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் அயர்லன்ட் ரீஸ்ரோரேசன் சொசைட்டி ஆகிய அமைப்புகள் லண்டனில் லிற்றில் எய்ட் உடன் இணைந்து உதவித் திட்டங்களை முன்னெடுக்கின்றனர். இலங்கையில் டி லா சலே பிரதேர்ஸ், சிந்தனை வட்டம், சென் அந்தோனிஸ் கல்லூரி, புனித தோமையர் கடற்தொழிலாளர் சங்கம், அகம், வோல்தம்ஸ்ரோ கற்பகவிநாயகர் ஆலயம் என்பனவும் லிற்றில் எய்ட் உடன் இணைந்து உதவித் திட்டங்களுக்கு ஒத்தாசை வழங்கி வருகின்றன.

Eluvaitheevu_Well_Project1.
2010 யூலையில் எழுவை தீவில் 130000 நிதியில் அப்பகுதி மக்களுக்கு நன்னீர் அமைக்கும் திட்டத்தை முன்னெடுக்குமாறு அயர்லன்ட் ரீஸ்ரோரேசன் சொசைட்டி சார்பில் சீறிபதி சிவனடியார் ஒரு ஒன்றுகூடலை ஏற்பாடு செய்து சேகரித்த நிதியை லிற்றில் எயட்க்கு கையளித்தார்.

ஒக்ரோபர் 19 நன்னீர் கிணறு அமைக்கும் திட்டம் முற்றுப்பெற்று மக்களுடைய பாவனைக்கு விடப்பட்டது. இத்திட்டத்தை நிறைவேற்ற புனித தோமையர் கடற்தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் தங்கள் உழைப்பை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தை நிறைவு செய்து கையளிக்கும் நிகழ்வில் லிற்றில் எய்ட் சார்பில் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரி கொன்ஸ்ரன்ரைன் லிற்றில் எயட் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளர் உதயனன் ஆகியோர் கலந்து கொண்டனர். புனித தோமையர் கடற்தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ரி செல்வதாஸ் துனைச் செயலாளர் ஜஸ்ரின் பெர்னான்டோ நிர்வாகஸ்தர் எம் ஜே ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Mannar_Children_Project2.
லண்டன் அகிலன் பவுண்டேசன் லிற்றில் எய்ட் ஏற்பாட்டில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட முன்னாள் சிறுவர் போராளிகளை டி லா சலே பிரதேர்ஸ் இன் மேற்பாவையில் பராமரித்து வருகின்றனர். இவ்வாண்டு ஜனவரியில் அகிலன் பவுண்டேசன் உத்தியோகபூர்வமாக இச்சிறுவர் போராளிகளை பொறுப்பேற்று அருட்சகோதரர்களின் மேற்பார்வையில் பராமரிக்கின்றனர். அருட் சகோதரர் கே எஸ் யோகநாதன் இவர்களுக்குப் பொறுப்பாக உள்ளார். அவர்கள் சென் எக்சேவியர் கல்லூரியில் தங்கள் கல்வியையும் தொடர்கின்றனர்.

இம்மாணவர்களுக்கு தங்குமிட வசதி இன்மையால் இவர்களுக்கு ஒரு கட்டிடதை அமைத்து ஒரு தொகுதியினரை அங்கு தங்க வைப்பதற்கு அகிலன் பவுண்டேசன் முன் வந்தது. 3000000 செலவில் அமைக்கப்பட்ட இக்கட்டிடம் ஒக்ரோபர் 20ல் திறந்து வைக்கப்பட்டது.

இத்திறப்பு விழாவில் நூற்றுக்கணக்கான மாணவர்களும் அப்பகுதி முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர். இக்கட்டிடத்தை அகிலன் பவுண்டேசன் நிறுவனர் கோபால கிருஸ்ணன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் லிற்றில் எய்ட் சார்பிர் ரி கொன்ஸ்ரன்ரைன் கலந்துகொண்டார். சென் எக்செவியர் கல்லூரியின் அதிபர் அருட் சகோதரர் ஸ்ரெயின்ஸ்லஸ உம் கலந்துகொண்டார்.

Kayts_St_Anthonys_College_Project3.
லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் உதவியுடன் லற்றில் எய்ட் ஊர்காவற்துறையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான மற்றுமொரு திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. சென் அந்தோனிஸ் கல்லூரியில் தங்கியுள்ள மாணவர்களை ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் பொறுப்பேற்று அருட் தந்தை ரொபின்சன் மேற்பார்வையில் பராமரிக்கின்றனர்.

பெரும்பாலும் சைவ சமயத்தவர்களான இந்த மாணவர்கள் தங்கள் சமய வழக்கங்களை சுயாதீனமாகப் பின்பற்றி வருகின்றனர். மத வேறுபாடுகளுக்கு அப்பால் மனித நேயத்துடன் இந்த உதவித்திட்டம் முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஒக்ரோபர் 19ல் அருட்தந்தை ரொபின் யையும் நிர்வாகஸ்தர் வின்சன் நடராஜாவையும் லிற்றில் எய்ட் குழுவினர் சந்தித்து உரையாடினர். அச்சமயம் இம்மாணவர்கள் வட்டுக்கோட்டை யாழ்பாணக் கல்லூரியுடன் விளையாட்டு போட்டிக்கு தயாராகிக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NavaJeevan_N_and_Puniyameen_PM4.
கல்முணை மற்றும் திருகோணமலையில் மாணவ மாணவிகளுக்கு கணணிப் பயிற்சிகளை வழங்கி வரும் ‘தமிழ் தகவல் தொழில்நுட்ப ஒருங்கமைப்பு’ அமைப்பிற்கு 7 கணணிகள் ஒக்ரோபர் 30 2010ல் கையளிக்கப்பட்டது. லிற்றில் எயட் சிந்தனை வட்டம் சார்பில் பிஎம் புன்னியாமீன் கணணிகளை ‘தமிழ் தகவல் தொழில்நுட்ப ஒருங்கமைப்பு’ முகாமையாளர் நவஜீவனிடம் கையளித்தார்.

ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் கேசரித்த பயன்படுத்தப்பட்ட கணணிகளை லிற்றில் இலங்கைக்கு அனுப்பி சிந்தனைவட்டம் பி எம் புன்னியாமீன் ஒருங்கிணைப்பில் திருத்த வேலைகளையும் மேற்கொண்டது. இவற்றுக்கான செலவுகளை ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் மூலம் வடக்கு கிழக்கில் உள்ள மாணவர்களுக்கு கணணிகள் வழங்கும் ஒரு நீண்ட திட்டத்தை லிற்றில் எய்ட் ஆரம்பித்து வைத்துள்ளது. இத்திட்டம் முதலில் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் அகிலன் பவுண்டேசன் கற்பகவிநாயகர் ஆலயம் என்பனவற்றினால் நடாத்தப்படுகின்ற இல்லங்களில் உள்ள 1000 வரையான மாணவர்களுக்கு கணணி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முயற்சிக்கின்றது.

Katpaga_RiceMill_Satchi_Gopal5.
ஒக்ரோபர் 16 2010 மூதூர் பாட்டாளிபுரம் கிராமத்தில் 3 கோடி ரூபாய் செலவில் ‘கற்பக அரசி ஆலை’ அமைக்கும் முயற்சி ஆரம்பித்து வைக்கப்பட்டு உள்ளது. லண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பகவிநாயகர் ஆலயத்தின் பெயரில் உருவாக்கப்பட உள்ள இந்த அரசி ஆலைக்கு ‘அகிலன் பவுண்டேசன்’ ஆதரவளிக்கின்றது. ஒக்ரோபர் 8ல் இலங்கை சென்ற அகிலன் பவுண்டேசன் நிறுவனர் எம் கோபாலகிருஸ்ணன் பல்வேறு உதவித்திட்டங்களை அங்கு மேற்கொண்டு வருகின்றார். அதன் ஒரு அங்கமாக இந்த ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தில் 1997 முதல் சிறுவர், பெண்கள், விதவைப் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சிறுதொழில், சிறு கடன் உதவிகள் வழங்கிவருகின்ற ‘அகம்’ அமைப்பின் நிர்வாகத்தின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

2010 ஏப்ரல் முற்பகுதியில் ‘லிற்றில் எய்ட்’ திட்ட இணைப்பாளர் த ஜெயபாலனிடம் ‘அகம்’ திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் பொ சற்சிவானந்தம் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தை வலியுறுத்தி விடுத்த வேண்டுகோளை அடுத்து இந்த அரசி ஆலைக்கான திட்டத்திற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட உதவித் திட்டங்கள்:

வடக்கு கிழக்கு மாணவர்களுக்கு கணணி வழங்கும் திட்டம் ஆரம்பம். – லிற்றில் எய்ட்

பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை வலியுறுத்துகிறது ‘அகம்’ திருகோணமலை இளைஞர் அமைப்பு

இலங்கை சுகாதார அமைச்சுக்கும் லிற்றில் எய்ட் க்கும் இடையே புரிந்தணர்வு உடன்பாடு
 
லிற்றில் எய்ட் காயப்பட்ட படைவீரர்களுக்கு இன்ரநெற் மையம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது
 
எழுவைதீவில் நன்னீர் கிணறு: லிற்றில் எய்ட் உம் எழுவைதீவு மீனவ சமூகமும் இணைந்த வேலைத்திட்டம்
 
மதங்களைக் கடந்து இணைந்து உதவும் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயமும் சென் அந்தனீஸ் கல்லூரியும்
 
200 000 பவுண்கள் பெறுமதியான மருந்துப் பொருட்கள் லிற்றில் எய்ட் ஆல் யாழ் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது!
 
சாதி மத இன பேதங்களைக் கடந்து லிற்றில் எய்ட் கரம் கொடுக்கின்றது.
 
புலிகள் அமைப்பில் இணைக்கப்பட்டிருந்த 200 சிறுவர்கள் விடுதலை!
 
முன்னாள் போராளிகள் உட்பட 495 பேர் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு!
 
1.54 மில்லியன் அமெரிக்க டொலர் மருந்துப் பொருட்கள் லிற்றில் எய்ட் மூலம் தமிழ் பகுதிகளுக்கு வழங்கப்பட்டது! : த ஜெயபாலன்
 
வாழ்வின் கொடுமையும்! கனவுகளின் வறுமையும்!! – சிறுவர் இல்லங்களில் சில மணிநேரங்கள் : த ஜெயபாலன்
 
துப்பாக்கியில் இருந்து இசையை நோக்கி! – முன்னாள் குழந்தைப் போராளிகள் : ரி கொன்ஸ்ரன்ரைன்
 
மறக்கப்படும் வன்னி மக்களும், மறந்து போகும் புலம்பெயர் மக்களும். – லிற்றில் எய்ட்கள் தொடர வேண்டும்!!! : த ஜெயபாலன்
 
டென்மார்க்கில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் விநியோகம் : லிற்றில் எய்ட்
 
லிற்றில் எய்ட் இன் சின்னச் சின்ன உதவிகள் : வி அருட்சல்வன்
 
வன்னி மக்களின் இன்றைய எதிர்காலத் தேவைகளும் அதை நோக்கிய செயற்பாடுகளும். மே 17 சந்திப்பு : த ஜெயபாலன்

Related Article:

லிற்றில் எய்ட் இன் தலைவியாக டொக்டர் மரினி மனுவேற்பிள்ளை நியமனம்! லிற்றில் எய்ட் 3.5 மில்லியன் மருந்துப் பொருட்களை விநியோகித்தது!வாழ்வின் கொடுமையும்! கனவுகளின் வறுமையும்!! – சிறுவர் இல்லங்களில் சில மணிநேரங்கள் : த ஜெயபாலன்

லிற்றில் எய்ட் இன் தலைவியாக டொக்டர் மரினி மனுவேற்பிள்ளை நியமனம்! லிற்றில் எய்ட் 3.5 மில்லியன் மருந்துப் பொருட்களை விநியோகித்தது!