::கலை இலக்கியம்

::கலை இலக்கியம்

கலை இலக்கியம் தொடர்பான விமர்சனங்களும் கட்டுரைகளும்

மழை நாடகம் – வாழ்க்கையின் தருணங்களை நவீன உளவியல் கோட்பாடுகளின் மீதாக பொருத்திப் பார்க்கும் முயற்சி : கூத்தலிங்கம்

Mazhaiலண்டன் தமிழ் அவைக்காற்றுக்கழகத்தின் நாடக நிகழ்வு ஒன்று யூலை 22 2010 சென்னையில் இடம்பெற்றது. பெசன்நகர் எலியற்கடற்கரை சாலையில் உள்ள ஸ்பேஸ் அரங்கில் ‘மழை’ ‘பிரத்தியேகக் காட்சி’ ஆகிய இரு நாடகங்கள் தமிழ் அவைக்காற்றுக்கழகத்தினால் மேடையேற்றப்பட்டது. சென்னையில் லண்டன் அவைக்காற்றுக்கழகத்தின் நாடகங்கள் மேடையேறியது இந்நாடகம் தொடர்பாக கூத்தலிங்கம் அவர்கள் ‘நட்பு’ இணையத்தில் எழுதிய கட்டுரை இங்கு மீள்பிரசுரமாகிறது.

இந்நாடகம் பற்றிய மற்றுமொரு பார்வை Psychological drama என்ற தலைப்பில் ஹிந்து பத்திரிகையில் வெளியாகி இருந்தது. அதனைப் பார்க்க: http://www.hindu.com/fr/2010/08/20/stories/2010082051230600.htm

._._._._._.

Mazhaiமிகவும் நாகரீகமடைந்து விட்டதாகச் சொல்லப்படும் ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன் அவனது உணர்வுகளை வெளிப்படையாகச் சொல்லவியலாத நிலையில் அவனது எண்ணங்கள் ஆழ்மனதில் வீழ்படிவாகி பிறகது அவனது சொற்கள், செயல்கள் மற்றும் வாழ்க்கை நகர்வுகள் யாவற்றிலும் வெவ்வேறு விதமாகப் பிரதிபலித்துக் கொண்டேயிருக்கின்றன. ‘மழை’ நாடகத்தில் புரபொசர் தன் மகளை திருமணம் செய்து கொள்ளாதபடி அவளை தன் கடைசி மூச்சு நின்று போகும் வரையில் தன்னருகேயே வைத்திருந்ததற்கான காரணம் மகள் மேல் கொண்ட பாசத்தினாலா? தன்னை கடைசி தருணம் வரையில் கவனித்துக் கொள்ள வேண்டியதற்கு ஆள் இல்லாமல் போய்விடுமே என்ற பயத்தினாலா? அல்லது மகள் மேல் அவர் கொண்ட நுட்பமான காதலினால், அவளை இன்னொருவர் தொடுவதை பொறுத்துக்கொள்ள இயலாத பொறாமையினாலா? – மழை நாடகத்தின் நான்கு முக்கிய கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களும், அவர்கள் சந்தித்து விவாதிக்கும் தருணங்களும் பார்வையாளர்கள், தங்களைத் தாங்களே மனவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்திக் கொள்ளும் சூழலுக்கு அதன் காட்சிகள் உதவி புரிவதாய் உள்ளன. உரையாடல்கள் அனைத்தும் உளவியல் கோட்பாடுகளுடன் ஏதோவொரு வகையில் தொடர்புகொண்டபடியே நகர்கின்றன. நிர்மலா டாக்டர் ஜேம்ஸிடம் ‘I NEED A MAN’ என்று சொல்ல, அவர் திகைத்து பதட்டமடைந்து, மறுத்து, தனக்கு சமூக சேவையில் மட்டும்தான் தீவிர ஈடுபாடு என்று சொல்ல, அவள் அவனைப் பார்த்து ‘நீ ஒரு Impotent’ என்றும் அதை மறைப்பதற்காகவே திருமண வாழ்க்கையிலிருந்து விலகி சமூக சேவகன் என்று சொல்லி மற்றவர்கள் கவனத்தை திசைதிருப்பி விடுகிறாய், இது ஒன்றிற்குப் பதிலாய் இன்னொன்றை பதிலீடு செய்து மறைத்துவிடும் உபாயம்’ என்ற வகையில் அவளது பேச்சு அமைவதோடு ‘ALL  Saints are impotent’ என்னும் இன்னொரு உளவியல் கோட்பாட்டை அவ்வப்போது சொல்கிறாள். அப்பா (புரபொசர்) இறந்த மறுநாளிலிருந்தே விடாத மழை தொணதொணத்து பேய்ந்து கொண்டிருப்பதை நிர்மலாவும் அவளது சகோதரன் ரகுவும் அவ்வப்போது சன்னலருகே போய் பார்க்கிறார்கள்.

Mazhaiநிராசையுடன் இறந்த அப்பாதான் இப்பொழுது வெளியே விடாத மழையாக நசநசத்துப் பேய்ந்து கொண்டிருக்கிறாரோ என மகள் நிர்மலா அய்யம் கொண்டு அச்சப்படுகிறாள். மகன் ரகுவை புரொபொசருக்கு கடைசிவரை பிடிக்காமல் போய் அவனை தந்தை வெறுத்ததற்கான காரணத்தை அவனே தங்கை நிர்மலாவிடம் சுருக்கமான கதை போலச் சொல்கிறான் – புத்தகங்களையே மனைவியாக்கிக் கொண்டவர் அப்பா. அம்மாவை இன்னொருவருடன் படுக்கையில் வைத்து அவர் பார்த்துவிடும் நிலையில் அவர் அம்மாவை திட்டுகிறார். அம்மாவோ அவரைப்பார்த்து கேலியாக விழுந்து விழுந்து சிரிக்கிறாள். அப்பா உடனே கையறுநிலையில் அழத்தொடங்குகிறார். அங்கே சிறுவனான மகன் ரகு வந்து அழும் அப்பாவை பார்த்துவிடுகிறான். அவருடைய அகங்காரம் (Ego) முற்றிலும் சூன்யமடைந்திருந்த நிலையில் அவரை அவன் நேருக்கு நேர் பார்த்துவிடுகிறான். அன்றிலிருந்து அவர் தன் மகன் மேல் வெறுப்பு கொள்கிறார். ‘மழை’யின் சின்னச் சின்ன தருணங்கள் கூட மனதின் நுட்பமான தளங்களை புலனாய்வு செய்பவை.

தனது வாழ்க்கை தந்தையின் சுயநலத்தால் தடுத்து ஒரு புள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டதன் கோபம் நிர்மலாவின் எந்த ஒரு பேச்சிலும் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது – புரபொசரின் இறப்புக்குப் பிறகும்.

Mazhaiபுரபொசரின் இறப்பு நடக்கும் இரவில், டாக்டர் ஜேம்ஸ் வந்து அவரை பரிசோதித்துக் கொண்டிருக்கையில், மின்சாரம் நின்றுபோய், நிர்மலா இரண்டு மெழுகுவர்த்திகளை அதன் தீபங்களோடு ஏந்தி வருகிறாள். தந்தை இறந்து போய் விட்டதை மருத்துவர் ஜேம்ஸ் சொல்ல, அவள் மெழுகுவர்த்திகளை தந்தையின் இரு பக்கங்களிலும் மெதுவாக வைக்கிறாள். அதுபற்றி பின்னர் அவள் சகோதரனுடன் விவாதித்துப் பேசிக்கொண்டிருக்கையில், அன்று அவர் இறந்துபோக வேண்டி, அதற்காகவே தந்தையை காலையிலிருந்தே தான் தயார்படுத்தி வந்ததாகச் சொல்கிறாள் நிர்மலா. சகோதரன் ரகு அவள் அருகே போய் அவள் படித்துக் கொண்டிருக்கும் உளவியல் நூலைப் பார்க்கிறான். அந்தப் புத்தகத்தின் பெயர் – Ethinic and Socio aspect of Murder.
அன்பு வெறுப்பாகவும் பொறாமையாகவும் பிறழ்வதை ரகு ஓரிடத்தில் அதை Sublimation என்கிறான் – ஒன்று வேறொன்றாதல்.

டாக்டர் ஜேம்ஸ் நிர்மலாவின் ‘I Need a man’ என்னும் வார்த்தையைக் கண்டு பயந்தவனாக, மக்கள் சேவை என்றெல்லாம் பேசியவனாக மறுத்துவிடுகிறான்.

அவள் சன்னலுக்கு வெளியே நசநசத்துப் பெய்யும் மழையைப் பார்த்துக்கொண்டு நிற்கிறாள். அவளது சகோதரன் ஆறதலாக அவளது முதுகில் கை வைக்கிறான். அது நாடகத்தின் கடைசித் தருணமாய் உறைந்து நிற்கிறது.

Indira_Parthasarathyவாழ்வின் சிறுசிறு அசைவுகளையும் நவீன உளவியல் கோட்பாடுகளுடன் பொருத்திப் பார்த்து, மனித மனவெளி குறித்த நுட்பமான ஆய்வு கொள்ளும் முயற்சியாக இந்திரா பார்த்தசாரதியின் எழுத்தில் உருவான ‘மழை’ நாடகம் அமைந்ததோடு அல்லாமல் பாசாங்கின் மேல்பூச்சுகளைக் கலைத்து, மனதின் நிர்வாணத்தை வெளிச்சத்தின் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.
வசனங்களால் காட்சிகளை முன்னெடுத்துச் செல்வதாய் அமைக்கப்பட்டிருக்கிறது – ‘மழை’.

சென்னையில் லண்டன் அவைக்காற்றுக்கழகத்தின் நாடகங்கள் மேடையேறியது

Balendra_Kலண்டன் தமிழ் அவைக்காற்றுக்கழகத்தின் நாடக நிகழ்வு ஒன்று இன்று (யூலை 22 2010) சென்னையில் இடம்பெற்றது. பெசன்நகர் எலியற்கடற்கரை சாலையில் உள்ள ஸ்பேஸ் அரங்கில் ‘மழை’ ‘பிரத்தியேகக் காட்சி’ ஆகிய இரு நாடகங்கள் தமிழ் அவைக்காற்றுக்கழகத்தினால் மேடையேற்றப்பட்டது. கூத்துப்பட்டறை மூன்றாம் அரங்கு என்ற இரு அரங்கியல் அமைப்புகளின் அனுசரணையோடு இம்மேடையேற்றம் இடம்பெற்றதாக அவைக்காற்றுக்கழகக் கலைஞர் வாசுதேவன் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

250 பேர் வரை இவ்வரங்க நிகழ்வை காண வந்திருந்தனர். தமிழக நாடகக்கலை மற்றும் கலைஇலக்கிய தளங்களில் அறியப்பட்டவர்களான ந முத்துசாமி இந்திரா பார்த்தசாரதி ஞானி ரங்கராஜன் பாரதிமணி சதானந்த மேனன் ரி அண்ணாமலை பிரசன்னா ராமசாமி புரசை கண்ணப்பகாசி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். மேலும் முன்னாள் கூத்துப்பட்டறை மாணவர்களாக இருந்து சினிமாவுக்குள் அறியப்பட்டுள்ள பசுபதி கலைவாணி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அரங்கியல் தொடர்பான தம் தேடலுக்காக சென்னை சென்றிருந்த தமிழ் அவைக்காற்றுக்கழகம் அங்குள்ளவர்களின் ஏற்பாட்டில் இம்மேடையெற்றங்களை மேற்கொண்டனர். மூன்றாம் அரங்கு குழுவைச் சேர்ந்த கலைஞர்கள் இந்நாடகங்களை மேடையேற்றுவதற்கான சகல ஒத்துழைப்பையும் வழங்கியதாகவும் அவர்களது நட்பு தாங்கள் தங்கள் ஊரிலேயே நாடகத்தை மேடையேற்றுவது போன்ற உணர்வையூட்டியதாகவும் வாசுதேவன் தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் கலைப் பரிமாற்றங்களை மேற்கொள்ள இப்பயணம் உதவியுள்ளதாகவும் வாசுதேவன் தெரிவித்தார். க பாலேந்திரா ஆனந்தராணி பாலேந்திரா மனோ வாசுதேவன் ஆகியோர் அடங்கிய தமிழ் அவைக்காற்றுக்கழகக் குழுவினரே சென்னை சென்றிருந்தனர்.

மரணத்தின் வாசனை: போர் தின்ற சனங்களின் கதை : என் செல்வராஜா, (நூலகவியலாளர்)

Smell_of_Death_Book_Coverஇளம் படைப்பாளி, த.அகிலன் எழுதியுள்ள மரணத்தின் வாசனை என்ற அருமையானதொரு சிறுகதைத் தொகுப்பு நூலொன்று வெளிவந்துள்ளது. “போர் தின்ற சனங்களின் கதை” என்ற உப தலைப்புடன் வெளிவந்துள்ள இந்தச் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் த.அகிலன், ஈழ விடுதலைப் போரின் ஆரம்ப காலகட்டத்தில் அதாவது 1983இல் வடபுலத்தில் பிறந்தவர். மரணத்துள் வாழ்ந்த ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக இன்று கொள்ளத்தக்கவர். தான் புலம்பெயர்ந்து வந்தபின்னர், உறவினருடன் அவ்வப்போது மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்களினூடாகத் தன் செவிகளுக்குள் வந்துசேர்ந்த பன்னிரண்டு மரணச்செய்திகளின் வாயிலாக விரியும் உறவின் பரிமாணமே இச்சிறுகதைகளாகும். ஒவ்வொரு கதையும் ஒரு மரணத்தை மட்டுமல்லாது, அந்த மரணத்துக்குரியவரின் வாழ்வு – அவ்வாழ்வினோடு தனது வாழ்வு பின்னப்பட்ட சூழல் என்பன மிக அழகாகவும் உணர்ச்சிகரமாகவும் போர்க்கால இலக்கியமாக இச்சிறுகதைத் தொகுதிக்குள் பதிவாகியுள்ளன. இந்நூல் சென்னையிலிருந்து வடலி வெளியீடாக 180 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முதலாவது பதிப்பு ஜனவரி 2009இலும், 2வது பதிப்பு மே 2009இலும் வெளியிடப்பட்டுள்ளது.

இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பன்னிரு சிறுகதைகளும், முன்னதாக அப்பால் தமிழ் என்ற இணையத்தளத்தில் மரணத்தின் வாசனை என்ற தொடராக வெளிவந்திருக்கின்றன. இச்சிறுகதைத் தொகுதிக்கான முன்னுரையையும் அப்பால் தமிழ் இணையத்தள நெறியாளரான திரு.கி.பி.அரவிந்தன் அவர்கள் பாரிசிலிருந்து வழங்கியிருக்கிறார்.

அவர் நூலுக்கு வழங்கிய தனது முன்னுரையில் குறிப்பிடும் சில வரிகளை வாசகர்களுடன் நானும் பகிர்ந்துகொள்கின்றேன்.

“மரணத்துள் வாழத்தொடங்கிய ஈழத்தமிழ் சமூகத்தில் 1983இல் பிறக்கும் த.அகிலன் எதிர்கொள்ளும் மரணங்களே, அம்மரணங்கள் வழியாக அவனுள் கிளறும் உணர்வுகளே இவ்வெழுத்துக்கு வலிமையைச் சேர்க்கின்றன. மரணத்தின் வாழ்வினுள் பிறந்து அதன் வாசனையை நுகர்ந்து வளரும் ஒரு முழுத் தலைமுறையின் பிரதிநிதியாகவே த.அகிலன் எனக்குத் தென்படுகின்றான். அந்தத் தலைமுறையின் எண்ணத் தெறிப்புகளே இங்கே எழுத்துக்களாகி உள்ளன. தந்தையைப் பாம்புகடித்தபோது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்புத் தடுக்கின்றது. அப்படி அதன் பின் அகிலன் எதிர்கொள்ளும் ஒவ்வொரு மரண நிகழ்வின் பின்னாலும் இராணுவ ஆக்கிரமிப்பின் கொடுங்கரங்கள் தடம் பதிக்கின்றன. இந்த மரணத்தின் வாசனை என்பதே ஆக்கிரமிப்பின் நெடிதான். மரணத்தினுள் வாழ்வு என்பதன் ஓரம்சம் இராணுவ ஆக்கிரமிப்பு என்றால் அதன் அடுத்த அம்சம் ஊர்விட்டு ஊர் இடம் பெயர்தல். அகிலன் ஊர்விட்டு ஊர் இடம்பெயர்கிறான் காடுகள் ஊர்களாகின்றன. ஊர்கள் காடுகளாகிப் போகின்றன. அலைதலே வாழ்வாகிப் போகின்றது.” இது கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்கள் அகிலனின் நூலுக்கு வழங்கிய முன்னுரையின் ஒரு பகுதியாகும்.

Smell_of_Death_Book_Coverத.அகிலனின் மொழிநடை வித்தியாசமானது. இடையிடையே ஈழத்தமிழரின் பேச்சு வழக்கில் கலந்து அமைந்தது. இந்த மொழி வழக்கில் இடையிடையே இயல்பாகக் கலந்துவரும் அங்கதச் சுவையே அவரது சிறுகதைகளுக்கு வெற்றியைத் தேடித்தருகின்றது என்று நம்புகின்றேன். தமிழகத்தில் வெளிவந்துள்ள இந்த ஈழத்து நூல் வெற்றிகரமான சந்தை வாய்ப்பினையும் அங்கு பெற்று இரண்டாவது பதிப்பும் வெளிவந்திருக்கின்றது என்பது அவர் பயன்படுத்தியுள்ள சுவையான ஈழத்து மொழி நடையை தமிழக வாசகர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டார்கள் என்பதை எமக்கு உணர வைக்கின்றது. இந்த நூலின் தொடக்கத்தில் சொல் விளக்கக் குறிப்புகள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். சில பிராந்திய சொற் பிரயோகங்கள் ஈழத்து வாசகர்களையே விளக்கக் குறிப்பினை நாடவைக்கும் என்பதால், தமிழகத்தில் வெளியிடப்படும் ஈழத்தமிழரின் பிராந்திய மொழிவழி நூல்களுக்கு சொல் விளக்கக் குறிப்புகள் தவிர்க்கமுடியாதவையாகும்.

இந்நூல் ஈழத்தின் போர்க்கால சமூக வரலாற்றில் ஒரு முக்கிய காலகட்டத்தினை எம் முன் கொண்டுவந்து நிறுத்துகின்றது. அந்தச் சூழலில் அகிலனுடன் வாழ்ந்துவந்துள்ள எமக்கு, இன்று சிறுகதைகளாக வாசிக்கும்போது, உணரப்படும் பகைப்புலங்கள் பல நினைவுகளை கனத்த நெஞ்சுடன் அசைபோட வைக்கின்றன. ஒவ்வொரு கதையை வாசித்த பின்னரும் நீண்டநேரம் அந்த அசைபோடல் எமது உள்ளத்தில் எங்கோ ஒரு மூலையில் நிலைத்து நின்று குறுகுறுக்கின்றது. மரணத்துள் வாழ்ந்த ஈழத்தமிழர்களின் சமூக வாழ்வின் ஒரு பக்கத்தை தமிழகத்தின் வாசகர்கள் உணர்வுபூர்வமாகத் தரிசிக்கவும் இந்நூல் வழிகோலுகின்றது. ஈழத்து இலக்கிய வரலாற்றில் – குறிப்பாக புலம்பெயர் இலக்கிய வரலாற்றின் ஒரு பரிமாணத்தை இந்நூல் பதிவுசெய்கின்றது என்றால் அது மிகையாகாது. இந்த நூல் இந்திய விலையில் 125 ரூபாவாக தமிழகத்திலும், வடலி வெளியீட்டாளர்களின் இணையத்தளத்திலும் விற்பனைக்குள்ளது.

‘தமிழியல் விருது – 2010’ படைப்பாளிகளிடமிருந்து ஆக்கங்கள் கோரப்படுகின்றன.

எழுத்தாளர் ஊக்கவிப்பு மையம் ஆண்டு தோறும் வழங்கும் தமிழியல் விருதுக்கு படைப்பாளிகள் தங்கள் ஆக்கங்களை அனுப்பிவைக்கும் படி கேட்கப்பட்டுள்ளது. ‘தமிழியல்விருது – 2010’ இற்கே படைப்பாளிகளிடமிருந்து ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன.

இலங்கையிலும், வெளிநாடுகளிலும் வாழும் படைப்பாளிகள் 2009 ஜனவரி தொடக்கம், டிசெம்பர் 31வரை வெளிவந்த தமது ஆக்கங்களை அனுப்பிவைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நாவல், சிறுகதை, கவிதை, குழந்தை இலக்கியம், நாடகம், அறிவியல், ஆய்வியல், வரலாறு, பழந்தமிழ் இலக்கியம், மொழிபெயர்ப்பு, இனமத நல்லறவு இலக்கியம். தொழில்நுட்பம், என பல்துறை சார்ந்த நூல்களையும், சுமார் 30 நிமிடம் வரை ஒளிபரப்பக்கூடிய குறுந்திரைப்படங்களின் இறுவட்டுக்களையும் தேர்வுக்காக அனுப்பி வைக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் 13 நூல்களுக்கும், மூன்று குறுந்திரப்படங்களுக்கும், இலக்கிய மேம்பாட்டிற்கு உரமிட்ட மூத்த படைப்பாளி ஒருவருக்கும் பொற்கிழியுடன் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும். படைப்பாளிகள் தங்கள் பெயர் முகவரி, தொலைபேசி இலக்கம் உட்பட்ட விபரங்களை குறிப்பிட்டு சுயமாக தயாரிக்கப்பட்ட விபரப்பட்டியலுடன், ஆக்கங்கள் நூல்களாயின் அவற்றின் நான்கு பிரதிகளையும், இறுவட்டாயின்  இரண்டு பிரதிகளையும், இணைத்து 10.08.2010 இற்கு முன்னர் அனுப்ப வேண்டும். ஒரு படைப்பாளி எத்தனை படைப்பாக்கங்களையும் அனுப்பலாம். விருது வழங்கும் விழா இவ்வருடம் ஒக்டோபர் மாதம் நடைபெறும்.

ஆக்கங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : ஓ.கே.குணநாதன், மேலாளர், எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல.64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, மட்டக்களப்பு இலங்கை. தொலைபேசி- 0776041503.

கலாபூசணம் புன்னியாமீன் இன் ‘சர்வதேச நினைவு தினங்கள்’ : முனைவர் மு. இளங்கோவன்

cover-03-1.jpgஇலங்கை மத்திய மலைநாட்டில் தலைநகர் கண்டி மாநகருக்கு அண்மையில் அமைந்துள்ள சிற்றூரில் பிறந்து வாழ்ந்துவரும் கலாபூசணம் புன்னியாமீன் அவர்கள் என் நெஞ்சங் கவர்ந்த எழுத்தாளர். உலக அளவில் நினைவுகூரப்பட வேண்டிய செய்திகளை இவர் இணையதளங்களில் எழுதியமை கண்டு வியந்துபோனேன். இணையத்தால் இணைந்தவர்கள் நாங்கள்.

தமிழில் இதுவரை 170 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். 1960 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் நாள் பீர்மொகமது, சைதா உம்மா ஆகியோரின் புதல்வராகப் பிறந்த இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமானிப் பட்டம் பெற்றவர். மேலும்,  ஊடகத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றவர். கல்லூரி ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கி, கல்லூரி முதல்வராகவும், பின்பு மத்திய மாகாண கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளராகவும், மத்திய மாகாண கலாசார அமைச்சின் உதவிப் பணிப்பாளராகவும் பணியாற்றி 45 வயதிலேயே ஓய்வுபெற்றவர். இவர், தற்போது முழுநேர ஊடகவியலாளராகவும், எழுத்தாளராகவும், சிந்தனைவட்ட வெளியீட்டகத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் பணியாற்றி வருகின்றார் என்பதறிந்து மகிழ்கிறேன்.

1970களில் சிறுகதை மூலம் இலக்கியத்துறையில் நுழைந்த இவரின் முதலாவது நூல் 1979 ஆம் ஆண்டில் “தேவைகள்” எனும் தலைப்பில் வெளிவந்தது. அன்றிலிருந்து இன்றுவரை சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், பல்கலைக்கழக மாணவர்களுக்கான அரசறிவியல் நூல்கள், தரம் 05 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல்கள், க.பொ.த.சாதாரண தரம்; மற்றும் உயர்தர மாணவர்களுக்கான வழிகாட்டி நூல்கள், ஆய்வு நூல்கள்….. என பலதுறை சார்ந்த 170 இற்கும் அதிகமான நூல்களைத் தமிழில் எழுதி, வெளியிட்டுள்ளார். இவரின் சிறுகதைகள் தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் தாமரை, தீபம், கணையாழி, கலைமகள் போன்ற இலக்கிய ஏடுகளிலும் இடம்பெற்றுள்ளன. இவரின் ஆக்கங்கள் பல்கலைக்கழக மட்டத்தில் பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த பத்தாண்டு காலமாக இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் திரட்டி அவற்றை ஈழத்து முன்ணணித் தேசிய ஏடுகளுள் ஒன்றான ‘ஞாயிறு தினக்குரலில்’ எழுதி வருகின்றார். அவற்றைத் தொகுத்து இதுவரை 15 தொகுதிகளாக நூலுருப்படுத்தியுள்ளார். தேசிய, பன்னாட்டு நிலையில் பலவற்றை ஆவணப்படுத்திவரும் இவரின் இப்பணி ஈழத்து இலக்கியப் பயணத்தின் இமயமாகத் திகழ்கின்றது.

இலங்கையில் தமிழ்மொழி மூல நூல்களை வெளியிடுவதில் வெளியீட்டுப் பணியகங்கள் குறைவு என்பதை உணர்ந்து ‘சிந்தனைவட்டம்’  எனும் பெயரில் பதிப்பகம் ஒன்றை உருவாக்கி இதுவரை 320 இற்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை இவர் வெளியிட்டுள்ளார். இந்த வெளியீட்டுப் பணியகத்தினூடாக நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் பயன்பெற்றுள்ளனர்.

பயிற்றப்பட்ட கணித,  அறிவியல் ஆசிரியையான எம். எச். எஸ். மஸீதாவின் அன்புக் கணவரான இவருக்கு சஜீர் அகமது,  பாத்திமா சம்ஹா ஆகிய இரண்டு மக்கட் செல்வங்கள் உள்ளனர்.

‘சர்வதேச நினைவு தினங்கள்’ எனும் தலைப்பில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைத் தேசிய, சர்வதேச அச்சு ஊடகங்களிலும், இணைய ஊடகங்களிலும் இவர் எழுதியுள்ளார். அவற்றைத் தொகுத்து நான்கு தொகுதிகளாக நூலுருப்படுத்தி வெளியிடும் இம் முயற்சி இவரின் தமிழ் எழுத்துப் பணியின் மற்றுமொரு பரிமாணத்தை எடுத்துக் காட்டுகின்றது. இவரின் முயற்சிகள் வெற்றிபெற மனதார வாழ்த்துகின்றேன்.

http://muelangovan.blogspot.com/

P.M.PUNIYAMEEN
P.Box 01
POLGOLLA
Srilanka.

cover-01.jpg

cover-02.jpg

cover-03.jpg

cover-04.jpg

நா சுப்பிரமணியனின் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் – ஒரு பார்வை : என்.செல்வராஜா, (நூலகவியலாளர்)

Eelathu_Tamil_Naval_Ilakkiyam_Cover“ஈழத்திலும் ஈழத்தவர் புலம்பெயர்துறையும் நாடுகளிலும் உருவாகும் தமிழிலக்கிய ஆக்கங்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இலக்கிய நெங்சங்களுக்கு” காணிக்கையாக்கி வெளியிடப்பட்டுள்ள “ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்” என்ற நூல் அண்மையில் நான் இலங்கை சென்றிருந்த வேளையில் என் கைகளுக்கெட்டியிருந்தது.

1978ம் ஆண்டு இதே தலைப்பில் கலாநிதி நா.சுப்பிரமணியன் அவர்கள் யாழ்ப்பாணம், முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் வழியாக ஒரு நூலை வெளியிட்டிருந்தார். 30 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்நூல் குமரன் புத்தக இல்லத்தினால் இரண்டாவது பதிப்பாக வெளியிடப்படுகின்றது. இப்பதிப்பு 1978ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலத்தில் நிகழ்ந்த வரலாற்றுச் செல்நெறிகளை இனம்காட்டும் பின்னிணைப்புகளுடன் வெளியிடப்படுவதாக தலைப்புப் பக்கத்திலேயே விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள். முதல் 143 பக்கங்கள் மூல நூலாகவும்  144ம் பக்கம் முதல் 309ம் பக்கம் வரை (நூலின் பாதிப்பகுதி) பின்னிணைப்புகளாகவும் நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
மூல நூல் எனக்கொள்ளப்படுவது, நூலாசிரியர் நா.சுப்பிரமணியன் அவர்கள் பேராசிரியர் சு.வித்தியானந்தனின் வழிகாட்டலில் 1970-1972 காலப்பகுதிகளில் தனது முதுகலைமாணிப் பட்டத்திற்காக மேற்கொண்ட ஈழத்துத் தமிழ் நாவல்கள் தொடர்பான ஆய்வின் அடிப்படையில் உருவானதாகும். ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றை ஐந்து முக்கிய கட்டங்களாக வகைப்படுத்தி இவ்வாய்வை இவர் மேற்கொண்டுள்ளார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ஈழத்திலே தமிழ்நாவல்கள் எழுதப்படுவதற்கான சூழலை விளக்கி அதன் ஆரம்ப முயற்சிகளை மதிப்பிடுவதாக ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றம் என்ற முதலாம் இயல் அமைகின்றது. இருபதாம் நூற்றாண்டின் முதல் நாற்பதாண்டுக் காலப்பகுதியில் எழுதப்பட்ட நாவல்கள் பற்றி சமுதாய சீர்திருத்தக்காலம் என்ற இரண்டாம் இயல் ஆராய்கின்றது. அக்காலப்பகுதியை அடுத்து எறத்தாழ 25 ஆண்டுக்காலப்பகுதி எழுத்தார்வக் காலம் என்ற தலைப்பிலும், அடுத்துள்ள 15 ஆண்டுக்காலம் சமுதாய விமர்சனக் காலம் என்ற தலைப்பிலும் வகைப்படுத்தப்பட்டு அவ்வக்காலகட்டத்தில் வெளியான ஈழத்து நாவல்கள் மதிப்பிடப்பட்டுள்ளன. பின்னைய ஐந்தாண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சியானது பிரதேசங்களை நோக்கி என்ற இறுதி இயலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

காணிக்கைப் பதிவு தந்த நம்பிக்கையினாலும், தலைப்புப் பக்கம் தந்த உந்துதலினாலும் ஆர்வத்துடன் பின்னிணைப்பைத் தட்டிப்பார்த்தேன். நூலின் அரைப்பங்கை பின்னிணைப்புகள் ஆக்கிரமித்துள்ளன. அனைத்தும் மிக முக்கியமான வரலாற்றுப் பதிவுகள். முதலாவது பின்னிணைப்பு 1977க்குப் பிற்பட்ட வரலாற்றுச் செல்நெறிகள் என்ற தலைப்பில் அமைந்துள்ளது. 1978 முதல் 1988 வரையிலான காலகட்டத்து ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியத்தின் வளர்ச்சி முதற்பிரிவில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இது தனிக்கட்டுரையாக ஏழு பகுதிகளில் மல்லிகை இதழில் ஏப்ரல் 1988 முதல் மார்ச் 1989 வரையிலான காலப்பகுதியல் வெளிவந்திருந்தது.

முதலாவது பின்னிணைப்பின் இரண்டாவது பிரிவு 1988க்குப் பின் தாயகத்திலும், புகலிடத்திலும் எழுந்த ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியம் பற்றிய விரிவான ஆய்வாக அமைகின்றது.
இரண்டாவது பின்னிணைப்பு ஆசிரியரின் தனிக்கவனத்தைப் பெற்ற இருநாவல்கள் பற்றிய ஆய்வுரையாக அமைகின்றது. மங்களநாயகம் தம்பையாவின் நொறுங்குண்ட இருதயம், தேவகாந்தனின் கனவுச் சிறை ஆகிய இரண்டு நாவல்கள் பற்றிய இக்கட்டுரை 2005இல் வெளிவந்த ஆசிரியரின் கட்டுரைத் தொகுப்பான கலாநிதி நா.சுப்பிரமணியனின் ஆய்வுகள், பார்வைகள், பதிவுகள்: தொகுதி 2இல் ஏற்கெனவே பிரசுரமாகியுள்ளது.

மூன்றாவது பின்னிணைப்பில் ஈழத்துத் தமிழ்நாவல்களின் விரிவான பட்டியல் ஒன்று பிரசுரமாகியுள்ளது. ஆசிரியர் பெயர். நாவலின் தலைப்பு, (சில இடங்களில்) வெளியீட்டாளர் விபரம், வெளியிட்ட ஆண்டும் பக்கமும், தகவல் தெரியாதவிடத்து கேள்விக்குறிகள் (?) என்றவாறாக இப்பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது.

முதலாவது பகுதியில் 1977 வரையிலான நாவல்களின் விபரங்களும், இரண்டாவது பகுதியில் 1977க்குப் பின்னைய நாவல்களின் விபரமும் இடம்பெற்றுள்ளன. இது 2007 வரை நீளுகின்றதையும் அவதானிக்க முடிகின்றது.

இவ்விடத்தில் மேலதிகமான தகவல் ஒன்றையும் குறிப்பிடப்படவேண்டும். நூலாசிரியர் நா.சுப்பிரமணியன்  1885-1977 காலப்பகுதியில் வெளியான 407 நாவல்கள் பற்றிய விபரங்களைத் தொகுத்து, சில பதிவுகளுக்கு (நூல்தேட்டத்தில் நான் குறிப்பிடுவதுபோன்று) குறிப்புரையுடன் ஒரு நூலை எழுதியிருந்தார். இது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் யாழ்ப்பாண வளாக நூலக வெளியீட்டு இலக்கம் 2 என்ற தொடரில் தமிழ் நாவல் நூற்றாண்டு நினைவாக, கல்லச்சுப் பிரதியுருவில் (ஊலஉடழளவலடநன) ஈழத்துத் தமிழ் நாவல்கள்: நூல்விபரப்பட்டியல் 1885-1976 என்ற தலைப்பில் பெப்ரவரி 1977இல் வெளிவந்திருந்தது. ஆக்கியோன் பெயர் வரிசை ஒழுங்கில் தொகுக்கப்பெற்றிருந்த இந்நூற்பட்டியலில் முதற்பகுதியில், நூல் வடிவில் வெளியான 212 நூல்களில் இடம்பெற்ற 220 நாவல்களும், இரண்டாவது பகுதியில் ஊடகங்களில் வெளியானதும் நூலுருப்பெற்றமை பற்றிய தகவல் அறியமுடியாததுமான 94 நாவல்களும் இடம்பெற்றிருந்தன. ஈழத்துத் தமிழ் நாவல் பற்றி எழுதப்பட்டு ஊடகங்களில் வெளிவந்த கட்டுரைகள், மற்றும் நூல்களின் விபரங்களும் பின்னிணைப்பில் காணப்பட்டன. (பார்க்க: நூல்தேட்டம் தொகுதி 2, பதிவு இலக்கம் 1006).

நூலின் நான்காவது பின்னிணைப்பும் ஒரு தேர்ந்த பட்டியலாகும். இதில் ஈழத்துத் தமிழ் நாவல் தொடர்பான ஆய்வுகள் பற்றிய விபரங்கள் இடம்பெற்றுள்ளன. இங்கும் 1977 வரை வெளியான விமர்சன நூல்கள், கட்டுரைகள் என்பன ஒரு பிரிவாகவும், 1977க்குப் பின்னர் வெளியான நூல்களும் ஆய்வேடுகளும், திறனாய்வுகள் மற்றும் “பட்டியல் முயற்சிகள்”, அணிந்துரைகள், அறிமுக உரைகள் மற்றும் மதிப்புரைகள் முதலியனவும் இடம்பெற்றுள்ளன. இங்கு திரு. நா.சுபபிரமணியம் அவர்களின் தீவிரமான தேடலில் அகப்படாத இரண்டு விடயங்கள் பற்றியும் நான் இங்கு குறிப்பிடவேண்டும்.
அவர் இன்று புலம்பெயர்ந்து வாழும் கனேடிய மண்ணில் 2005ம் ஆண்டில் தமிழர் தகவல் நிறுவனத்தினரால் வெளியிடப்பட்ட “தமிழர் தகவல்” ஆண்டுமலரில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். தமிழர் தகவல்- எஸ்.திருச்செல்வம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு கனடாவில் வெளிவரும் ஒரு மாத இதழ். (மலேசியத் தமிழ் நூல் வெளியீட்டில் ஈழத் தமிழர்களின் பங்களிப்பு: ஒரு வரலாற்றுப் பதிவு. தமிழர் தகவல் 14ஆவது ஆண்டு மலர்; (P.O.Box 3, Station F.Toronto, Ontario, M4Y 2LA, Canada)பெப்ரவரி 2005, ப.124-129.) அதில் ஈழத்தவர்கள் மலாயா மண்ணில் புலம்பெயர்ந்து வாழ்ந்த காலத்தில் மேற்கொண்ட படைப்பாக்க முயற்சிகள் பற்றி விரிவான தகவல்களை வழங்கியிருந்தேன். இந்த நூலில் அந்தக்கட்டுரை பற்றிய எவ்வித குறிப்பும் இல்லாததால், திரு. நா.சுப்பிரமணியனுக்கு தமிழர் தகவல் ஆண்டு மலர் கிடைக்கவில்லை போலுள்ளது. இதே கட்டுரை பின்னாளில் இலங்கையில் ஞாயிறு தினக்குரலில் 1.5.2005 முதல் 22.5.2005 வரை நான்கு இதழ்களில் தொடராகவும் வெளியிடப்பட்டது. கோலாலம்பூரில் வல்லினம் சஞ்சிகையும், மலேசிய நண்பன் பத்திரிகையும் இக்கட்டுரையை மீள்பதிப்புச் செய்திருந்தன.

புலம்பெயர்ந்த ஈழத்தவரின் நாவல்களில் பல மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல்துறை நூலகத்தில் பேணிப்பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இது பற்றி எனது மலேசிய-சிங்கப்பூர் நூல்தேட்டம் தொகுப்பில் அவற்றை நேரில் பார்வையிட்டுத் தொகுக்கப்பட்ட விரிவான விபரங்கள் உள்ளன. ஆசிரியரின் விரிந்த தேடலில் நிச்சயம் மலேசிய நூல்தேட்டம் தொகுதி கிட்டும் என்று நம்புகின்றேன். மலாயாவுக்குப் புலம்பெயர்ந்த ஈழத்தவருள் ஒருவரான புலோலியூர் க.சுப்பிரமணியம் எழுதிய நீலாக்ஷி அல்லது துன்மார்க்க முடிவு என்ற நூல் பற்றி, சுப்பிரமணியன் தனது பின்னிணைப்புப் பட்டியலில் பக்கம் 267இல் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் புலோலியூர் க.சுப்பிரமணியம் (எஸ்.கே.சுப்பிரமணியம்) மலேசிய மண்ணில் வாழ்ந்த காலத்தில் எழுதிய பிற நாவல்கள் பற்றிய வேறு பதிவுகள் எதுவும் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியத்தில் குறிப்பிடப்படவில்லை. மலேசியாவில் முசயைn டுiஉநளெiபெ டீழயசன இல் அங்கத்தவராயிருந்த இந்நாவலாசிரியர் யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்தவர். பின்னாளில் புலம்பெயர்ந்து மலாயாவுக்குச் சென்றவர்.
நீலாக்ஷி அல்லது துன்மார்க்க முடிவு என்ற நாவல் பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ளது. (நூலகப் பதிவிலக்கம்: 35334) இந்நாவலின் முன்னுரையில் ஆசிரியர் தன்னுடைய முன்னைய நூலான பலசுந்தரம் அல்லது சன்மார்க்கஜெயம் என்ற நூலின் தொடர்ச்சியே இந்நூல் என்று குறிப்பிடுகின்றார். பாலசுந்தரம் அல்லது சன்மார்க்க ஜெயம் இரண்டு பாகங்களில் வெளிவந்திருந்தது. மலேசியாவில் பினாங்கு, சி.அரிகிருஷ்ண நாயுடு பதிப்பகத்தினர் இந்நூலின் இரண்டாவது பாகத்தை 1918 இல் வெளியிட்டிருக்கிறார்கள். (அச்சகம்: எட்வார்ட் பிரஸ், இல. 80, ஊhரடயை ளுவசநநவ, பினாங்கு). முதல் 21 அத்தியாயங்கள் முதலாம் பாகத்திலும், 22ம் அத்தியாயத்திலிருந்து 36ம் அத்தியாயம் வரை இரண்டாம் பாகத்திலும் இடம்பெறுகின்றன.
அந்நாவலில்; நீலாக்ஷி ஒரு பிரதான பாத்திரமாகச் சித்திரிக்கப்படுகின்றார். துர்அதிர்ஷ்டவசமாக பாலசுந்தரம் அல்லது சன்மார்க்க ஜெயம் நாவலின் இரண்டாவது பாகத்தையே மலாயாப் பல்கலைக்கழகத்தில் என்னால் பார்வையிட முடிந்தது. இந்நூலின் முதலாம் பாகத்தை எங்கும் காணமுடியவில்லை. மலேசிய தமிழ் நாவல் இலக்கியம் தொடக்க காலத்திலேயே சமுதாய சீர்திருத்தக் கருத்துக்கள் பொதிந்தனவாக அமைய ஆரம்பித்துவிட்டன என்பதற்கு இந்நாவல் எடுத்துக்காட்டாகவுள்ளது. ஒழுக்கம் நேர்மை ஆகியவற்றால் வரும் உயர்வைப்பற்றி விளக்கும் இந்நாவலில் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிலவிய மலாயா நாடு கதைக்களமாகின்றது. பிரித்தானியர் ஆட்சி, கோலாலம்பூர் நகர உருவாக்கம், கிறிஸ்தவ சமயப் பரம்பல், இலங்கை – இந்தியத் தமிழர்களுக்கு இடையிலான பிணக்குகள் முதலிய பல வரலாற்றுத் தகவல்கள் கதையில் விதைக்கப்பட்டுள்ளன. இந்நாவலின் தொடர்ச்சியே நீலாக்ஷி அல்லது துன்மார்க்க முடிவு என்ற நாவலாக அமைந்துள்ளது.

மலேசிய தமிழ் நாவல் இலக்கிய வரிசையில் இடம்பெறும் இந்நாவல் இலங்கைக்கும் மலேசியாவுக்கும் தமிழ் இலக்கியப் பாலமாக அமைந்துள்ளது. இந்நாவலின் முதற்பாகம் வெளிவந்திருக்கக்கூடிய ஆண்டு விபரம் பற்றிய தகவல்களை அறியமுடியவில்லை. அதனால் இன்றையளவில் மலேசிய நாவல் இலக்கிய வரலாற்றில் வெளிவந்த இரண்டாவது நாவல் என்ற நிலையையே இது எய்தியுள்ளது. இன்றளவில் மலேசியாவின் முதல் நாவல் 1917இல் வெளியான “கருணாசாகரன் அல்லது காதலின் மாட்சி” என்ற நாவலாகும். இது ஒரு இந்தியரால் எழுதப்பட்டது.

ஈழத்துத் தமிழ் நாவல் வரலாறு பற்றி ஆராயப்புகும் நா.சுப்பிரமணியன் செங்கை ஆழியான் போன்றோருக்கு ஈழத்தமிழ் நாவல் வரலாறு இலங்கை என்ற பிரதேச வரம்புக்குள் மட்டும் அடங்கிவிடக்கூடியது அல்ல என்பதை இலக்கிய உலகம் வலியுறுத்தவேண்டியுள்ளது. ஈழத்தவரின் முதலாவது புலப்பெயர்வு 1870களில் மலாயாவை நோக்கி ஏற்பட்ட காலம்முதலாக ஈழத்தமிழர்கள் பலர் புலம்பெயர்ந்த நாடுகளில் வைத்து நாவல்களை எழுதியிருக்கிறார்கள். இன்றைய புகலிடத்தில் வாழும் ஈழத்து எழுத்தாளர்களின் படைப்பக்களை ஈழத்து படைப்புக்களாகவும், அவர்களை இன்னமும் (புலம்பெயர்ந்த) ஈழத்துப் படைப்பாளிகளாகவும் குறிப்பிட்டுவரும் இலக்கிய ஆய்வாளர்கள் முன்னைய தலைமுறையினரான இவர்களின் படைப்புக்களையிட்டும் அக்கறை கொள்ளவேண்டும். இவர்களையும் நாம் ஈழத்துப் படைப்பாளிகளாகவே ஏற்று அவர்களுக்கும் ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு இடத்தை வழங்கவேண்டும்.

மலேசிய இலக்கியத்துக்கு உயிர்கொடுத்த எம்மவர்கள் பற்றிய எனது விரிவான ஆய்வில் பல படைப்பாளிகள் பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளேன். இவர்களின் பெயர்களை இன்றளவில் வெளிவந்த கனக செந்திநாதன், சில்லையூர் செல்வராசன் போன்றவர்களின் பட்டியல்களில் தேடினால் எமக்கு ஏமாற்றமும் எரிச்சலுமே மிஞ்சும்.

ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியத்தின் ஆசிரியர் கலாநிதி நா.சுப்பிரமணியம் அவர்களுக்கு மற்றுமொரு தகவலையும் வழங்கக் கடமைப்பட்டுள்ளேன். நூல்தேட்டம் என்ற பெயரில் 2002ம் ஆண்டுமுதல் ஒரு பாரிய தொகுப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றேன். தாயகத்திலும் புகலிடத்திலும் வெளியிடப்பட்ட ஈழத்துத் தமிழ்நூல்களுக்கான குறிப்புரையுடன் வெளிவந்துள்ள நூல்விபரப்பட்டியல் இதுவாகும். ஏழாவது தொகுதிக்கான தொகுப்புப்பணிகள் முடிவடைந்துவிட்டன. ஒவ்வொரு தொகுதியிலும் 1000 நூல்கள் என்றவாறாக இதுவரை (உங்கள் நூல்களும் உள்ளிட்ட) 7000 நூல்கள் வரை பதிவாக்கியிருக்கின்றேன். பதிவுகள் பிரதான பதிவு தூவிதசாம்சப் பகுப்புமுறையைத் தழுவிப் பகுப்பாக்கம் செய்யப்பட்டும், பாடவாரியாகப்; பதியப்பட்டுமுள்ளது. நூல் தலைப்பு வழிகாட்டி, ஆசிரியர் வழிகாட்டி என்பவற்றுடன் இலங்கை தொடர்பான பன்னாட்டவரின் படைப்புக்களும், முன்னைய தொகுதியின் பதிவுகளுக்கான மேலதிக தகவல்களும் தரப்பட்டுள்ளமை நூலின் சிறப்பம்சமாகும்.

நூல்தேட்டம் தொகுப்பின் 800ஆவது பிரிவு இலக்கியத்துக்கானதாகும். இதில் மற்றைய பாடத்துறைகள் போன்றே நாவல்களுக்கென்றும் தனியான பிரிவொன்றை ஒதுக்கி, குறிப்புரையுடன் நூல்பற்றிய நூலியல் விபரங்களை முழுமையாகத் தந்திருக்கின்றேன். இவை அனைத்தும் நான் நேரில்சென்று நூலகங்களிலும், தனியார் இருப்புகளிலும் பார்வையிட்ட நூல்கள். (எவ்விதமான கேள்விக்குறிகளும் பதிவகளில் இல்லை) எனது ஆதங்கம் என்னவென்றால், பலநூறு நூல்களைப் பார்வையிட்டு ஆய்வுசெய்துள்ள நீங்கள் – நூல்தேட்டம் பற்றி எதுவுமே அறியாதிருப்பது நம்பமுடியாததாக உள்ளது. இரண்டாம் பதிப்பாக புத்தாக்கங்களையும் உள்ளடக்கி நீங்கள் வெளியிட்டுள்ள “ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்” என்ற நூலில் ஓரிடத்தில்கூட இதுபற்றிப் பிரஸ்தாபிக்கவில்லை என்பது மனதை நெருடுகின்றது. நீங்கள் வெளியிட்டுள்ள நூலை என்னைப் போன்றவர்களுக்காகக் காணிக்கையாக்கியிருக்கும் உங்கள் உணர்வை மதிக்கிறேன். நீங்களும் 1977இல் ஒரு பட்டியலை நாவல்களுக்காகத் தொகுத்தவர். தொகுப்பின் உழைப்பும், வலியும் உங்களுக்குப் புரியாததல்ல. நாவல்களையும், மற்றும் சிறுகதை கவிதை இலக்கியவடிவங்களையும் மாத்திரமல்லாது ஈழத்தின் முழுமையான நூலியல் வரலாற்றைப் பதிவுசெய்யும் நோக்குடன் தனிமனித முயற்சியாகத் தமிழ் நூல்களையும் பரந்த புவியியல் பரப்பை உள்ளடக்கித் தொகுத்துவரும் என்போன்றவர்களுக்கு எமது பணிபற்றிய சிறிய குறிப்பும் பேருவகைதரும் மருந்தாகும். “இருட்டடிப்பு” என்ற சொல்லை அறவே வெறுப்பவன் நான். ஆவணப்படுத்தலில் அதனை கிட்டவும் நெருங்கவிடக்கூடாது. படைப்பாளியினதும் படைப்பினதும் நம்பகத்தன்மையை வரலாறு கேள்விக்குள்ளாக்க அது வழிசமைத்துவிடும். (உங்கள் தகவலுக்காக: நூல்தேட்டம் இலங்கையில் அச்சிடப்படுகின்றது. இலங்கையின் அனைத்து பிரதான நூலகங்களிலும் புத்தகசாலைகளிலும் கிடைக்கும். நீங்கள் வாழும் கனடாவில் ஸ்கார்பரோவில், உலகத்தமிழர் நூலகத்திலும் ஒரு தொகுதி பேணப்படுகின்றது).

நன்றி : தினக்குரல்

யாழ். நாடகக் கலைஞர்கள் கௌரவிப்பு!

நெருக்கடியான காலகட்டத்தில் பணியாற்றிய யாழ்ப்பாண நாடகக் கலைஞர்கள் ‘மக்கள் களரி’ நாடகக் குழுவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கௌரவிக்கப்பட்டுள்ளனர். யுத்த நெருக்கடி காலகட்டங்களில் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து நாடகப் பாரம்பரியத்தை வளர்த்தமைக்காக இவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிகழ்வு செம்மணி வீதியுள்ள பாடசாலை ஒன்றில் நடைபெற்றது.

எஸ்.திருநாவுக்கரசு, பிரான்சிஸ் யூல்ஸ் கொலின், மரியாம்பிள்ளை, பொனிபஸ், தைரியநாதன், கேசுறி பிலிப் பேர்மினஸ், கந்தையா நாகப்பு, நவாலியூர் என். செல்லத்துரை, சரவணமுத்து சந்திரா, முருகேசு சிவப்பிரகாசம் அகியோரும், திருமறைக்கலாமன்றம், செயற்திறன் அரங்க இயக்கம், யாழ்.பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் வெறுவெளி அரங்கக் குழு ஆகிய அமைப்புக்களும் கௌரவிக்கப்பட்டன.

யாக்கையின் வாழ்க்கை!!! நோர்வே நக்கீரா

யாக்கையின் வாழ்க்கை!!!

பூக்கள் சிரிக்க
பூமகள் சிறப்பாள்
பாக்கள் பிறக்க
பாரே சிறக்கும்.

ஐரோப்பியப் பூக்கள் மலர
மகரந்தம் பறக்கும்
மகிழ்ச்சியை அழிக்கும்.
அழகிய மலர்களின் மகரந்தங்கள்
ஐரோப்பாவில் எமக்கு அலேர்ஜி
ஐரோ மட்டும் என்றும் அலாதி

சொண்டு உண்டு உண்டு என்று
சொண்டு உண்டு
சொண்டிழந்து போனவர்கள்
பொய்வாயை மெய்வாயாக்க
செவ்வாய் செய்கிறார்கள்.
அது செவ்வாயல்ல
செய்வாய்
அழகுறச் செய்வாய்
வாய்களில் மட்டுமா பொய்
வார்த்தைகள்??

கண்கெட்டுப் போனவர்கள்
கண்விட்டுப் போய்விடாது
கண்கீறிப்போகும்
காட்சிதான் அஞ்சனமோ?
கண்களின் வஞ்சகமோ?
கண்கீறிய காயங்கள்
விண்ணேறி வலித்தாலும்
பெண்மனத்தில் இல்லைப் பேதமை
கண்கனத்துக் கொண்டாது
கண்ணீரில் சாதனை

விதியின் கரங்கள்
முகத்தில் எழுதிய
வரைபடம்தானே வயது
அதன் முதிர்வு.
விதியைக் கூட
சதிசெய்து அழிக்கும்
சாதனைதானே மேக்கப்பு (ஒப்பனை)
பெண்ணே கீப்பப்பூ

ஒப்பனையில்லா ஒப்பனை கூட
வைப்பனையாகும் முகங்களிலே
செப்பனை செய்யா கற்பனைக்களத்தில்
காளியின் காட்சியின் தரிசனமே.

கண்ணுக்குக் கலர்வில்லை
கண்மயிருக்கு மஸ்காரா
தலைமுடிக்கு விலைகொடுத்து
கலர் அடித்துக் கலைகாணும்
பொய்முடி தரிக்கும்
மெய் மடிந்த பொய் வாழ்க்கை

கலர் கலராய் கலர் அடித்து- எம்மை
கலர்மனிதர்கள் எனக் கசக்கும்
நிறமிழந்த ஐரோப்பிய
நிஜமற்ற நிதவாழ்க்கை
துவேசம்.

பாசமெல்லாம்
ஆபாசமாகி
ஊர்வேசம் போடுகிறது
ஐரோப்பா

மெய்மேல் மெய் படுத்து
பொய்போகும் வாழ்க்கையை
மெய் என்றும் காட்டும்
காக்கைகளே தின்னத்துடிக்கும்
யாக்கையின் வாழ்க்கைதான்
வாழ்க்கையா?

இச்சேர்க்கையின் சீற்றம்
இலங்கையிலும் தொற்றுதே
தமிழினத்தில் ஒர் ஐரோப்பா
ஊரில் இனி உருவாகும்.

நோர்வே நக்கீரா
11.06.2010

ஐரோப்பிய பாடல் போட்டி 2010 : விமர்சனம்- நோர்வே நக்கீரா

lena.jpg2010க்குரிய ஐரோப்பிய பாடல் போட்டி நோர்வேயில் 29.05.2010 சனிக்கிழமை மாலை 200லட்சம் நோவேயியன் குரோண்கள் செலவில் வெற்றிகரமாக வெற்றிகரமாக நடந்தேறியது. இதற்கான காரணம் ஒர் அகதியின் பாடலே. அலெக்சாண்டர் றிபாக் அகதிக்குழந்தையாக நோர்வே நாட்டில் குடிபுகுந்த இந்த இரஸ்சிய இளைஞனே சென்றவருடம் நோர்வேக்கு வெற்றியைத் தேடித்தந்து நோவேயை உலகமட்டத்தில் ஒருபடி உயர்ந்தினான். நோர்வேயின் வடபகுதியில் அகதி அந்தஸ்துக் கோரியபோது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அன்றே அவன் திரும்பிப் போயிருந்தால் இன்று நோவே ஒருநல்ல திறமைசாலியை இழந்திருக்கும். அவனது பெற்றோர்கள் இசைவல்லுனர்கள். கம்பன் வீட்டுக் கைத்தறியும் கவிபாடும் என்பதுபோல் இசையுடன் கூடிவளர்ந்த காரணத்தாலும் மரபணுக்களில் இசைவாழ்ந்து கொண்டிருந்ததாலும் இசை சரளமாகவே அவனுக்கு வந்தது. அகதி என்பவர்கள் பணம், உயிர்பாதுகாப்பு மட்டும் தேடிவரவில்லை, திறமைகளுடனும்தான் வருகிறார்கள் என்பதை புலத்து நாடுகள் உணர்ந்து கொள்ளவேண்டியது அவசியம். தம்திறமைகளை வெளிப்படுத்துவதும். அத்திறமைகளை நாடுகள் நல்ல முறையில் பயன்படுத்துவதும் மனித உயர்வுக்கு இன்றியமையாதது. இது பிறந்தநாட்டுக்கும் புகுந்த நாட்டுக்கும் பெருமை சேர்க்கும்.

எந்தநாடு இப்போட்டியில் வெல்கிறதோ அந்த நாட்டில்தான் அடுத்த பாடல் போட்டி நடைபெறும். இது பெருமைக்குரியது மட்டுமல்ல வியாபார ரீதியாகப் பணம் பண்ணும் காரியமாகவும் மாறியுள்ளது. சென்றவருடம் 2009ல் நோர்வே வென்றகாரணத்தால் இந்தவருடம் இப்போட்டி இங்கே நடத்தப்பட்டது. பிரபல விமர்சகரான எஸ்பன் ஏ ஆமுன்சன் என்பவர் தனது விமர்சனத்தில் இம்முறை பெரும்பாலான பாடல்கள் உப்புச்சப்பில்லாத ஒரு சத்துக்குக் கூட உதவாதபாடல்கள் என்றும், பிரான்சின் பாடல் சரித்திரத்தைக் கறைப்படுத்துமாறு அமைந்தாகவும் தான் இம்முறை வந்தபாடல்களைக் கண்டு அதிர்ந்து போனதாக எபிசி செய்திகளுக்கு அழிந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை ஜேமனிய நாட்டு லேனா எனும் 19வயதுப் பெண் இப்போட்டியில் வெற்றி பெற்றாலும் அப்பாடலின் தரம்பற்றி பலர் தரக்குறைவாகப் பேசுவதையே கேட்கக்கூடியதாக இருந்தது. இதனால் பணம் கொடுத்து வெற்றியை வாங்கினார்களா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

பிரான்ஸ், ஸ்பெயின், சர்பியா போன்ற சிலநாடுகளே தமது மொழியில் பாடல்களைப் பாடினார்கள். 80வீதமான பாடல்கள் ஆங்கில மொழியிலேயே அமைந்திருந்தது. இந்த ஐரோப்பிய பாடல் போட்டியின் ஆரம்ப காலங்களில் தமது மொழியிலேயே பாடல்கள் பாடப்பட வேண்டும் எனும் வரையறை இருந்தது. இக்காலத்தில் ஆங்கிலத்தைத் தாய்மொழியாக் கொண்ட நாடுகளின் பாடல்கள் புள்ளிகளை அதிகமாகப் பெற்றார்கள். இதனால் வரையறை தளர்த்தப்பட்டது. இதன் காரணமாக ஆங்கிலத்தை வெறுக்கும் பழைய சோவியத்து நாடுகள் ஜேர்மனி போன்ற நாடுகள் கூட ஆங்கிலத்திலேயே பாடினார்கள். இப்போட்டிக்கு வரும் பாடல்கள் தத்தமது நாடுகளில் நடுவர்களாலும் அந்நாட்டு மக்களின் புள்ளிகளாலும் வென்ற பாடல்களே. இதனால் இந்த ஐரோப்பிய நாடுகளில் ஆங்கிலத்திலே உணர்வுகள் பாடலாக்கப்படும் நிலை தென்படுகிறது. ஆங்கிலத்தில் பாடியபாடல்களில் உச்சரிப்புப்பிழையை பலர் அவதானித்திருக்கலாம். பிறமொழியில் பாடுவதாலேயோ என்னவோ பலபாடல்களில் உயிரக்காணோம். பிறமொழிப் பாடல்களால் சுயமொழி அழிப்புடன் ஆங்கிலமொழிச் சீரழிவும் சேர்ந்தே நடைபெறுவதைக் காணலாம். இது உலகமயமாதலில் ஒரு விளைவே. ஆட்சிகளையும், அதிகாரங்களையும் தன்னகத்ததே கொண்டிருந்த நாடுகளின் மொழிகள் உ.ம் ஆங்கிலம், பிரான்ஸ், இரஸ்சிய, அராபிய மொழிகள் மற்றைய மொழிகளை விழுங்கும் நிலை உருவாகியுள்ளதை உணரமுடிகிறது.

மொழி ஆய்வாளர்களின் கூற்றுப்படி 10சதவீதமான மொழிகள் பத்து வருடங்களில் இடம் தெரியாமல் போகின்றன. ஒவ்வொரு 10 வருடத்துக்கும் ஒவ்வொரு மொழிகளிலும் 10சதவீதமான மொழி கலப்படைகிறது. உலகமயமாதலினால் ஒரு புதியகாலணித்துவமே உருவாகி வருகிறது. ஆய்வாளர்களின் கூற்றை விட மிகவேகமாகவே இவை நடந்தேறுகின்றன. இதனால் சில முக்கிய மொழிகள், கலாச்சாரங்கள், நாகரீகங்கள் ஏன் இனமே அழியும் காலவரிப்பு நடைபெறுகிறது. இக்காலவரிப்பில் தமிழ்மொழியும் ஒன்று. கொன்னைத்தமிழான சென்னைத்தமிழில் இதை அழகுறக் காணலாம்.

பூகோளரீதியாக இஸ்ரேவேல் அமைந்திருப்பது மத்தியகிழக்கிலேயே. இதை எதற்காக ஐரோப்பாவிற்குள் சேர்த்து போட்டிகளில் பங்குபற்ற வைக்கிறார்கள். இதில் இருந்து ஐரோப்பியர்களின் நட்புறவும், நடுநிலையற்ற போக்கையும் காணக்கூடியதாக இருக்கிறது. இப்படி நடுநிலையற்றவர்களே இஸ்ரேலிய பாலஸ்தீன உடன்படிக்கையை ஒஸ்லோ ஒப்பந்தம் என்று உருவாக்கினார்கள். இங்கே எப்படி பாலஸ்தீனத்தின் நலன்கள் நடுநிலையுடன் கவனிக்கப்பட்டிருக்கும் என்பது கேள்விக் குறியாகிறது. இரண்டாவது உலகயுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்பதற்காக இன்று பாலஸ்தீனத்துக்கு இழைக்கும் அநியாயங்களை நியாயப்படுத்த முடியாது. இஸ்ரவேலுக்கு ஐரோப்பிய பாடல் போட்டியில் இடம் உண்டு எனில் ஏன் பாலஸ்தீனத்துக்கு இது இல்லாமல் போனது?

பாடல்களின் பெறுபேறுகள் அறிவிக்கப்படும்போது எந்தநாட்டுக்கு தமது அதிகூடிய புள்ளிகளை அறிவிப்பார்கள் என்பதை நாம் முன்கூட்டியே சொல்லக் கூடியதாக இருந்தது. தம் உறவு நாடுகளுக்கும் அயல்நாடுகளுக்கும் புள்ளிகளை அள்ளி வளங்கியதைக் காணமுடிந்தது. இந்த ஐரோப்பிய பாடல் போட்டி என்பது திறமைகளை வெளிக்கொணரவோ அன்றேல் நல்ல தரமான பாடல்களை தரவோ முயற்சிக்கவில்லை என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.

ஸ்பானியப்பாடல் அரங்கேறி முடியும் வேளை குழுவில் இல்லாத ஒருவன் உள்ளே புகுந்து மேடையிலுள்ளவர்கள் போல் நடித்துவிட்டு இறங்கி ஓடிவிட்டான். இவ்வளவு பிரமாண்டமான பெருவிழாவில் நோவேயின் பாதுகாப்புப் போதாது என்பது பலரது குறையாக இருந்த போதிலும் நோவே போதியளவு சீரணியற்ற நகரபாதுகாவலர்களை பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்போலிப்பேர்வழி உடனடியாக சான்விக்கா நகரபாதுகாவலர் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு 15000 குரோண்கள் அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. ஒருகாலத்தில் பெயருக்கும், தமது பிள்ளைகளை மேடையேற்றுவதற்கும், விலாசத்துக்குமாக பலர் புலிகளுக்கு பணம் கொடுத்ததைப் பலர் அறிவர். அதேபோல் ஒன்றுதான் இதுவும். இந்த ஆசாமியிடம் கேட்டபோது நான் 15000 குரோண்கள் கொடுத்து விலாசம் வாங்கியுள்ளேன் என்றாராம். இவர் ஒரு பிரபல்ய உதைபந்தாட்டம் நடந்து கொண்டிருந்தபோது வெறும் உடம்புடன் நடுமைதானத்தால் ஓடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது ஒரு களியாட்ட நிகழ்வாக இருந்தாலும் பயன்படுத்தப்படும் பணத்தொகை மிகப்பெரிது என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டியது. எத்தனையோ நல்ல தரமான பாடல்கள் இருந்தும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டபடி தீர்ப்பு ஜேர்மனிக்கு வழங்கப்பட்டது போன்று அமைந்துள்ளது. தாம்விரும்பும் நாடுகளுக்கு தரம்பாராது புள்ளியிடுவது ஒருபுறம், தமக்குப் பிடிக்காத நாடுகள், இனம் என்பதை தள்ளிவைப்பது என்பது மறுபுறம். இது துவேச வளர்ச்சிக்கு ஏதுவாக அமைந்துவிடும். இனிவருங்காலங்களிலாவது இப்படியான சீர்கேடுகள் இன்றி தரமான பாடல்களை கருத்து, இசை, காட்சி, பாவம் (பாடலின் உயிர்) போன்ற காரணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து தரமான பாடல்களைத் தருவார்களா?

எதிர்பார்ப்புகளுடன்
நோர்வே நக்கீரா

ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை ஓரிடத்தில் பதிவு செய்து ஆய்வுக்கு வழங்குவதே எனது நோக்கம். தினக்குரலுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் “என். செல்வராஜா”. – நேர்காணல் புன்னியாமீன்

scan0004.jpgஇலங்கையிலிருந்து 1991இல் புலம்பெயர்ந்து சென்று லண்டனில் வசித்துவரும் நூலகவியலாளர் திரு. என். செல்வராஜா அவர்கள் தற்போது குறுகிய கால விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். இதுவரை 25 நூல்களுக்கும் மேல் எழுதி வெளியிட்டுள்ள இவரின் எழுத்துலக பணியில் ‘நூல்தேட்டம்’ எனும் ஆவணவாக்கல் நூற்றொகுதி முக்கிய இடத்தைப் பெறுகின்றது. நூல்தேட்டம் தொகுதியில் இதுவரை 06 தொகுதிகள் வெளிவந்துள்ளன. இந்த 06 தொகுதிகளினூடாகவும் இலங்கையைச் சேர்ந்த மொத்தம் 6000 தமிழ் நூல்களை பதிவாக்கியிருப்பது பெரும் சாதனையாகும். இலங்கை எழுத்தாளர்களின் இத்தனை நூல்களை ஒரே பார்வையின் கீழ் வேறு எந்த தனிப்பட்ட நபரோ, நிறுவனமோ இதுவரை பதிவாக்கவில்லை என்று துணிவாகக் குறிப்பிடலாம். தற்போது நூல்தேட்டம் தொகுதி 07க்கான தேடல் முயற்சிகளை பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் மேற்கொண்டுவரும் நூலகவியலாளரும்,  எழுத்தாளரும்,  வெளியீட்டாளரும், பன்னூலாசிரியருமான திரு. என். செல்வராஜா அவர்களுடன் ஞாயிறு தினக்குரல் வாசகர்களுக்காக மேற்கொண்ட நேர்காணல் கீழே தொகுத்து தரப்படுகின்றது.

கேள்வி: நூல்தேட்டம் என்றால் என்ன? இந்த நூல்தேட்ட நூல் வெளியீட்டின் மூலமாக நீங்கள் இதுவரை எதனை சாதித்துள்ளீர்கள்?

என்.செல்வராஜா:  நூல்தேட்டம் இலங்கையில் இதுவரை அச்சில் வெளிவந்த தமிழ் நூல்களையும்,  இலங்கையரால் தமிழாக்கம் செய்யப்பட்ட பிறமொழி நூல்களையும் உள்ளடக்குகின்றது. இலங்கை எழுத்தாளர்கள் தமது நூல்களை இலங்கையில் மட்டுமல்லாது தமிழகத்திலும், ஐரோப்பாவிலும் வேறும் புலம்பெயர்ந்த நாடுகளிலிலிருந்தும் வெளியிட்டு வருகிறார்கள். இவற்றின் இருப்பை ஓரிடப்படுத்தி பதிவு செய்து கொள்வதற்காகவும், ஆய்வாளர்களின் விரிவான ஆய்வுத் தேவைகளுக்காகவும் நூல்தேட்டம் உருவாக்கப்பட்டது. இதுவரை காலமும் துறைசார்ந்த சிறு பட்டியல்களாக மட்டுமே அறியப்பட்டு வந்த இத்தகைய நூல்விபரங்கள் நூல்தேட்டத்தின் வாயிலாகவே விரிவான பதிவுக்குள்ளாகியுள்ளமை ஒரு சாதனை என்று நான் கருதுகின்றேன்.

கேள்வி: அப்படியென்றால் இதுகால வரை இலங்கையில் இதுபோன்றதோர் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என்று கருதுகின்றீர்களா?

 என்.செல்வராஜா: ஆரம்பத்தில் எப்.எக்ஸ்.ஸி நடராஜா, கனக செந்திநாதன், சில்லையூர் செல்வராஜன் போன்றோர் சிறு நூல்களாகவும் நூல்களின் பின்னிணைப்புகளாகவும் இலங்கையில் வெளிவந்த தமிழ் நூல்களை ஆவணப்படுத்தும் முயற்சியை அவ்வப்போது மேற்கொண்டிருந்தார்கள். இவை சிறு பட்டியல் வடிவிலேயே அமைந்திருந்தன. நூலின் தலைப்பு, ஆசிரியர் பெயர்,  சிலவேளை வெளியிட்ட ஆண்டு போன்ற விபரங்களே அவற்றில் இடம்பெற்றிருந்தன. இவை எவற்றிலும் முறையான நூலியல் பதிவுகளோ, அந்த நூல்கள் பற்றிய குறிப்புகளோ இடம்பெற்றிருக்கவில்லை. இவர்கள் பெரும்பாலும் இலக்கியத்துறை தொடர்பான நூல்களையே பதிவுக்குள்ளாக்கியிருந்தார்கள்.

கேள்வி: இலக்கியத்துறைக்குப் புறம்பாக வேறு துறைசார்ந்த நூல்களையும் நீங்கள் பதிவு செய்துள்ளீர்களா? அவ்வாறு பதிவு செய்திருப்பின் அது பற்றி சற்று விரிவாக குறிப்பிட முடியுமா?

என். செல்வராஜா: இலங்கையின் நூலியல் பதிப்புத்துறை வரலாற்றில் இலக்கியத் துறைசார்ந்த நூல்களே பெருமளவில் வெளியிடப்பட்டு வந்திருக்கின்றன. இருப்பினும் இவை மட்டும்தான் இலங்கையின் நூலியல் வரலாறாகாது. உளவியல், சமயம்,  சமூகவியல்,  மொழியியல். விஞ்ஞானம், தொழில்நுட்பம், கவின்கலைகள், வரலாறு…. என்று பல்வேறு துறைகளிலும் இலங்கையில் நூல்கள் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன. நூல்தேட்டம் இவையனைத்தையும் பதிவு செய்யும் ஒரு பெரும் பணியிலேயே ஈடுபட்டிருக்கின்றது. இதன் மூலமே இலங்கையின் நூலியல் வரலாற்றை முழுமையாக தரிசிக்க முடியும்.

கேள்வி: இத்தகைய பதிவிற்கு ஏதேனும் சிறப்பான வகுப்புத் திட்டமொன்றை நீங்கள் கைகொள்கின்றீர்களா?

என். செல்வராஜா: நூல்தேட்டத்தின் நூல்கள் யாவும் 10 பிரதான வகுப்புகளுக்குள் அடங்குகின்றன. இது நூலகங்களில் பொதுவாக பயன்படுத்தப்படும் டூவி தசாம்ச பகுப்பு முறையை (Dewey Decimal Classification)  அடிப்படையாகக் கொண்டது. இப்பகுப்பு முறையின் கீழ் எமது எழுத்து வளங்கள் அனைத்தையும் பொது விடயங்கள்,  உளவியல், சமயம், சமூகவியல், மொழியியல், தூய விஞ்ஞானம், தொழில்நுட்பம், கவின்கலைகள்,  இலக்கியம், வரலாறு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாகும். ஒவ்வொரு பிரிவும் மேலும் 10 உப பிரிவுகளாக வகுக்கப்படுகின்றன. உதாரணமாக சமூகவியல் என்ற பிரிவுக்குள் புள்ளிவிபரவியல், அரசியல், பொருளியல், சட்டம், பொதுநிர்வாகம் போன்ற அறிவுத்துறைகள் உப பிரிவுகளாக உள்ளடங்கும். நூல்தேட்டத்தின் பகுப்பு இவ்வாறே அமைகின்றது.

கேள்வி: இலங்கை தமிழ் நூல்களின் ஆவணவாக்கல்களை தனிப்பட்ட நபர்கள் தவிர்ந்து நிறுவனங்களோ அல்லது அரசாங்கமோ பதிவுகளுக்கு உட்படுத்தவில்லை எனக் கருதுகின்றீர்களா?

 என். செல்வராஜா: இலங்கை தேசிய நூலக சேவைகள் சபை உருவாக்கப்பட்ட காலகட்டங்களில் தேசிய நூற்பட்டியல் என்று ஒன்று தொடங்கப்பட்டது. அதில் இலங்கையில் அச்சிடப்பட்ட மும்மொழி நூல்களில் பதிப்பகச் சட்டத்தின் கீழ் அச்சகங்களால் வழங்கப்படும் நூல்களின் தகவல்களை அடிப்படையாக வைத்து இப்பட்டியல் பதிவுசெய்யப்பட்டது. இது காலாண்டுக்கொரு முறையும் பின்னர் மாதாந்தமாகவும் இலங்கையில் இன்றளவில் வெளியிடப்பட்டு வருகின்றது. இன்று இப்பணியை இலங்கை தேசிய நூலக ஆவணவாக்கல் சபை கொழும்பிலிருந்து மேற்கொள்கின்றது. இப்பட்டியலில் தமிழ் நூல்களும் இடம்பெறுகின்றன. ஆனால்,  அவை பெரும்பாலும் அரச வெளியீடுகளையும்,  ஐளுடீN இலக்கம் பெறப்பட்ட நூல்களையுமே உள்ளடக்கி வருகின்றன. இதில் இலங்கைத் தமிழரின் அனைத்து நூல்களும் என்றுமே முழுமையாக உள்ளடக்கப்படாது என்பது எனது உறுதியான நம்பிக்கையாகும்.

கேள்வி: எந்த அடிப்படையினை வைத்து நீங்கள் இவ்வளவு உறுதியாக குறிப்பிடுவீர்கள்?

என்.செல்வராஜா: இலங்கைத் தமிழர்களின் வெளியீடுகளை நீங்கள் அவதானிப்பீர்களாயின் அவற்றில் கணிசமான அளவு தமிழகத்தில் அச்சிடப்படுகின்றன. இவை இலங்கை ISBN இலக்கம் பெறப்பட முடியாதவை. மணிமேகலை போன்ற தமிழகப் பதிப்பாளர்களால் வெளியிடப்படும் இலங்கையர்களின் நூல்களில் பெரும்பாலும் ISBN
 இலக்கங்களை காணமுடிவதில்லை. இவை இலங்கை தேசிய நூற்பட்டியலில் இடம்பெறும் தகுதியற்றவையாகி விடுகின்றது. மேலும், இலங்கை தமிழர்கள் உலகெங்கும் புலம்பெயர்ந்து பரந்து வாழும் சூழலில் அங்கெல்லாம் வெளியிடப்படும் மிகத் தரமான பல நூல்கள் இலங்கை மண்ணை அடைவதே இல்லை. இந்நிலையில் அவை பற்றிய அறிதலை தேசிய நூலகம் கொண்டிருக்குமா என்பது கேள்விக் குறியாகவேயுள்ளது.

கேள்வி: தேசிய நூலக ஆவணவாக்கல் சபையில் வெளியிடப்படும் நூற்பட்டியலில் ISBN இலக்கம் பெறப்பட்ட நூல்கள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டீர்கள். ஆனால், இலங்கையைப் பொறுத்தமட்டில் நூல்களுக்கு ISBN இலக்கம் வழங்கும் முறை 1980 களிலே அறிமுகஞ் செய்யப்பட்டது. இதற்கு முன்புள்ள நூல்களின் பதிவு நிலை குறித்து நிறுவன ரீதியான அமைப்புகளின் செயற்பாடு பற்றி எத்தகைய கருத்துக்களைக் கொண்டுள்ளீர்கள்?

என்.செல்வராஜா: ஆரம்பத்தில் பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு அச்சகம் தான் அச்சிடும் எந்தவொரு நூலிலும் குறிப்பிட்ட சில பிரதிகளை தேசிய நூலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது சட்டபூர்வமானதாகும். ஆனால்,  தமிழ் பதிப்பாளர்களைப் பொறுத்தவரையில் இது அன்று முதல் இன்று வரை முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை. இதனை அரசாங்கமும் உறுதியாக நடைமுறைப்படுத்தவும் இல்லை. இதன் காரணமாக தேசிய நூலகப் பதிவுகளில் ஆரம்ப காலம் முதல் தமிழ் நூல்கள் இடம்பெறுவது குறைவாகவே இருந்தது. இன்று கூட ISBN இலக்கமிடப்படுவதும் அச்சகங்கள் தமது நூல்களை தேசிய நூலக ஆவணவாக்கல் சபைக்கு அனுப்பி வைப்பதும் ஒழுங்காக நடப்பதில்லை. இதை நாங்கள் கண்கூடாகக் கண்டும் வருகின்றோம். இதனை கட்டாயமாக்கும் அரசாங்கத்தின் இறுக்கமான கொள்கைகள் எதுவுமில்லை. 

கேள்வி: இலங்கை எழுத்தாளர்களால் இலங்கையிலோ அல்லது உலகளாவிய ரீதியிலோ வெளியிடப்படக் கூடிய நூல்கள் யாதோ ஒரு அமைப்பின் கீழ் பதிவு செய்யப்படாமையினால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படுமெனக் கருதுகின்றீர்கள்?

என்.செல்வராஜா: நூல் வெளியீடு என்பது மிக பணச் செலவானதும், காலச் செலவானதுமான ஒரு முயற்சியாகும். ஒரு சமூகத்தின் அறிவின் அளவுகோலாக அச்சமூகத்தினால் வெளியிடப்படும் நூல்கள் அமைகின்றன. இவை வெளியிடப்படும்போது எங்காவது ஓரிடத்தில் பதிவு செய்யப்பட வேண்டியது முக்கியமானதாகும். புள்ளிவிபரத்துக்காக மட்டுமன்றி எதிர்காலத்தின் வரலாற்றுத் தேவைக்காகவும் இத்தகைய பதிவுகள் முக்கியமாகும். இத்தகைய பதிவுகளின் காரணமாக ஒரு நூலின் வரவை உலகளாவிய ரீதியில் மற்றவர்கள் அறிந்து கொள்கின்றார்கள். குறிப்பாக ஒரு ஆய்வாளர் தனது ஆய்வுத் தேடலுக்காக முனையும்போது நூலின் இருப்பை, தனது ஆய்வுத் தேவைக்குப் பொருத்தமான நூல்களின் வரவை இத்தகைய பதிவு ஆவணங்களின் ஊடாக இலகுவில் அடையாளம் கண்டு கொள்கின்றான். இன்று இலக்கியத்துறையை உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால் தமிழில் இலங்கையரால் எத்தனை நூல்கள்ää எத்தனை நாவல்கள், எத்தனை சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன என்று உறுதிபட கூற முடியாதுள்ளது. இன்றைய ஆய்வாளர்கள் இலங்கை தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்யும்போது ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள இத்தகைய முழுமையடையாத பட்டியல்களை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். இருட்டு அறைக்குள் கருப்புப் பூனையைத் தேடும் இந்நிலை மாற வேண்டுமானால் அந்த அறைக்கு படிப்படியாக ஒளியூட்ட முனையும் நூல்தேட்டம் போன்ற பாரிய தொகுப்புக்கள் மேற்கொள்வதன் அவசியத்தை படைப்பாளிகள் உணர வேண்டும்.

கேள்வி: இத்தகைய அவசியத்தினை தற்போதைய தமிழ் எழுத்தாளர்கள் ஆய்வாளர்கள்  எவ்வளவுதூரம் உணர்ந்திருக்கிறார்கள்

scan.jpgஎன்.செல்வராஜா: என்னைப் பொறுத்த வரையில் தமிழ் நூல்களை ஆவணப்படுத்தும் எனது பணியை எனது சுய தேவையின் நிமித்தமும் வர்த்தக நோக்கம் கருதியதாகவும்  மேற்கொள்வதாகவே பலரும் இன்றளவில் கருதுவதாக நான் உணர்கின்றேன். இப்பணிக்கு உலகெங்கும் திரிந்து நான் தேடலில் ஈடுபடுவதில் உள்ள பொருளாதாரää கால செலவை கணிப்பிட்டால் அது என் வாழ்வின் பெரும்பகுதியை விழுங்கி விட்டதை நான் உணர்கின்றேன். இவ்வளவு தனிப்பட்ட இழப்பின் பின்னர் ஆறு தொகுதிகளை உருவாக்கி அதில்  இலங்கை எழுத்தாளர்களின் 6000 நூல்களை பதிவு செய்து எனது இனத்திற்கு வழங்கியுள்ள இந்நிலையிலும் நூல்தேட்டம் பற்றிய உணர்வினை படைப்பாளிகள் கொண்டிருக்கிறார்களா என்ற சந்தேகமே எனக்கு எழுகின்றது. அண்மையில் கொழும்பில் ஒரு நூல் வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். அங்கு பேசிய பிரபல எழுத்தாளர் ஒருவர் ஈழத்து இலக்கியத்தை ஆவணப்படுத்தியவர்களாக சில்லையூர் செல்வராசன், கனக செந்திநாதன் ஆகியோரையே சிலாகித்து குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார். அன்று ஆவணப்படுத்தல் பற்றிப் பேசிய எவருமே தங்கள் கண்ணெதிரில் விரிந்து கிடக்கும் நூல்தேட்டத்தின் 6000 நூல்களின் தொகுப்பைப் பற்றி ஒரு வார்த்தையேனும் பேசாதது எனது சந்தேகத்தை வலுப்படுத்தியிருந்தது.

கேள்வி: ஆய்வாளர்கள் மத்தியில் நூல்தேட்டம் எவ்வளவுதூரம் உள்வாங்கப்பட்டுள்ளது.

 என்.செல்வராஜா: நூல்தேட்டம் பிரதிகள் ஐரோப்பிய நூலகங்களின் தமிழியல் பிரிவு,  அல்லது தென்னாசியப் பிரிவு இயங்கும் நூலகங்களில் இடம்பெற்றுள்ளதால் அங்கு ஓரளவு அறியப்பட்டதாக உள்ளது. லண்டனில் என்னுடன் மேற்கொள்ளப்படும் பல்வேறு தொலைபேசி உரையாடல்களிலிருந்து இதை அறிந்து கொள்ள முடிகின்றது. இலங்கையில் நிலைமை தலைகீழாக உள்ளது. நூல்தேட்டம் பிரதிகளை பிரதான நூலகங்கள் இருப்பில் கொண்டிருக்கின்றன என்று அறிகின்றேன். ஆயினும் ஆய்வாளர்கள் இதனை எவ்வளவு தூரம் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிய முடியவில்லை. ஏனெனில் அண்மையில் வெளிவந்த எந்தவொரு ஆய்வு நூலிலும் தமது உசாத்துணை பதிவுகளாக ஆய்வாளர்களினால் நூல்தேட்டம் குறிப்பிடப்பட்டதை நான் அறியவில்லை.

கேள்வி: நூல்தேட்டத்தை அடிப்படையாக வைத்து ஏதேனும் ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளனவா?

என்.செல்வராஜா: உடத்தலவின்னையிலிருந்து கலாபூஷணம் பி.எம்.புன்னியாமீன் நூல்தேட்டம் முதல் நான்கு தொகுதிகளை விரிவாக ஆராய்ந்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ‘நூல்தேட்டம்- இலங்கைத் தேசிய இலக்கிய நீரோட்டத்தில் சங்கமிக்க வேண்டிய ஒரு பெருநதி” என்ற தலைப்பில் இது 2007இல் ஒரு நூலாகவும் வெளிவந்திருந்தது. அண்மையில் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ப்பிரிவின் நூலகர் திரு. மகேஸ்வரன் இலங்கை தமிழ் நூல்களை தேசிய நூற்பட்டியலில் ஆவணப்படுத்துவது பற்றிய ஒரு ஆய்வினை மேற்கொண்டு வருகின்றார். இதில்; தேசிய நூற்பட்டியலுடன் நூல்தேட்டம் பதிவாக்கத்தையும் ஒப்பீட்டு அடிப்படையில் ஆய்வு செய்து வருகின்றார். விரைவில் அவரது ஆய்வு நிறைவுபெரும் என்று அறிகின்றேன். ஈழத்தமிழர் நூல்களை பீ.டீ.எப். வடிவில் இணையநூலகமாகப் பதிவேற்றிவரும் நூலகம் இணையத்தளத்தின் நூல் தேடுகையின் ஆரம்பப்பதிவுக்குறிப்பாக நூல்தேட்டம் பதிவுகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கியிருக்கிறேன். அதிலும் நூல்தேட்டம் விரிவான பாவனையில் உள்ளது. பல்கலைக்கழகங்களில் இலக்கிய ஆய்வுகளை மேற்கொள்ளும் மாணவர்கள் நூல்தேட்டத்தை பெருமளவில் பயன்படுத்தித் தமக்கு வேண்டிய ஆய்வுத் தேவைக்கான நூல்களின் இருப்பினை அறிந்து அந்நூல்களை தேடுவதில் ஆர்வம் கொள்வதையும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நான் தங்கியிருந்த மூன்று வார காலத்தில் நேரில் கண்டு புளங்காகிதம் அடைந்தேன்.

கேள்வி: ஆறு தொகுதிகளை வெளியிட்டுள்ள நீங்கள் சில வருடங்களுக்கு முன்னர் முதலாவது தொகுதியின் வெளியீட்டின் பின்னர் வழங்கிய ஒரு நேர்காணலில் ஆறுதொகுதிகளில் நூல்தேட்டத்தை பதிவுசெய்ய தீர்மானித்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். இன்றைய நிலையில் இன்னும் எத்தனை தொகுதிகளில் பதிவுசெய்வதாக உத்தேசித்திருக்கிறீர்கள்?

 என்.செல்வராஜா: ஆரம்பத்தில்  எனது தேடலின் வேகத்தை அனுமானித்து ஆறு தொகுதிகளுக்குள் ஈழத்து நூல்களை அடக்கலாம் என்று கனவு கண்டிருந்தேன். இன்று அந்த எண்ணம் மேலும் பல தொகுதிகளை நூல்தேட்டத்தில் காண முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டியுள்ளது. இன்றளவில் நூல்தேட்டம் ஏழாவது தொகுதிக்கான பதிவில் 80சதவீதமான பதிவுகளை சேகரித்துக்கொண்ட திருப்தியுடன் லண்டன் திரும்புகின்றேன். விரைவில் ஏழாவது தொகுதியும் முடிவடைந்து விடும். இன்றளவில் இலங்கையில் எததனை நூல்கள் வெளிவந்திருக்கின்றன என்ற உறுதியான கணிப்பினை வழங்கும் ஆவணங்கள் எதுவுமே இல்லை. அதனால் எத்தனை தொகுதிகளை நான் வெளியிடலாம் என்ற எதிர்வுகூரலை மேற்கொள்ளமுடியாது.

கேள்வி: இலங்கையில் 1800களின் முன்னரைப் பகுதியிலிருந்து தமிழ் நூல்கள் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. இந்த ஆரம்பகால நூல்களைத் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றீர்களா?

என்.செல்வராஜா: நூல்தேட்டம் ஈழத்துத் தமிழ் நூல்களின் முழுமையான ஆவணமாக அமையவேண்டும் என்பதே எனது அவா. அவ்வகையில் புராதன அச்சு நூல்களையும் பதிவாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள்ளது. எனது தேடலின் போது 1895ம் ஆண்டளவில் வெளியிடப்பட்ட சில நூல்கள் அண்மையில் பேராதனையில் கிட்டியது. இதற்கு முன்னரும் மலாயாப் பல்கலைக்கழகத்திலும் சிலநூல்கள் கிடைத்து பதிவாக்கியிருக்கிறேன்.  தற்போதுள்ள நூல்தேட்டம் பதிவுகள் யாவும் கண்ணால் கண்ட நூல்களையே பதிவு செய்வதாக உள்ளது. இன்று அழிவடைந்துவிட்ட நூல்களையிட்டு இலங்கை சுவடிகள் ஆவணக்காப்பகத்தில் தேடலை மேற்கொள்ளவிருக்கின்றேன். அதற்கான காலம் இன்னும் கனியவில்லை. முதலில் கைக்கெட்டும் நூல்களில் கவனம் செலுத்தி பதிவுகளை மேற்கொண்டபின் ஒரு கட்டத்தில் இந்த எட்டாக் கனிகள் பற்றிய தேடலுக்குள் நுழைவேன். இன்று எளிதில் பெறக்கூடிய நூல்களைப் பெற்றுக்கொள்வதிலேயே அதிக உழைப்பையும்,  நேரத்தினையும் ஒதுக்கவேண்டியுள்ளது.

கேள்வி: தங்கள் முயற்சிகள் வெற்றியடையப் பிரார்த்திக்கின்றோம். அதே நேரம் சமகால எழுத்தாளர்கள் இம்முயற்சிக்கு எந்தளவு ஆதரவு நல்குகின்றனர். உங்கள் பணிக்கு அவர்களது உதவிகளை எந்தவழியில் எதிர்பார்க்கின்றீர்கள்?

என்.செல்வராஜா: இன்று சமகால வெளியீடுகளை அச்சிடும் இலங்கைப் பதிப்பகங்களுடன் தொடர்புகளை மேற்கொண்டு வருகின்றேன். குமரன் பதிப்பகம், சேமமடு பொத்தகசாலை, ஞானம் பதிப்பகம்,  மலையக வெளியீட்டகம் ஆகியவை தாம் அச்சிடும் அல்லது வெளியிடும் நூல்களில் ஒவ்வொரு பிரதியை எனக்காக ஒதுக்கிவைத்து காலத்துக்குக் காலம் என்னிடம் சேர்ப்பிக்கிறார்கள். இதற்கான ஒழுங்குகளை கொழும்பிலுள்ள எனது சகோதரியின் வாயிலாக நான் மேற்கொண்டு வருகின்றேன். சில எழுத்தாளர்கள் தபால்மூலம் நேரடியாகவே எனக்கு லண்டனுக்கு அனுப்பிவைக்கிறார்கள். இவர்களது அக்கறையின் பயனாகவே நூல்தேட்டத்தின் தொகுப்பினை நான் நம்பிக்கையுடன் துரிதப்படுத்த முடிகின்றது. இந்தப் பணியை எனது காலத்திலேயே முடித்துவிடவேண்டும். அதற்கான பாதையை நான் உருவாக்கி, அனுபவங்களின் வாயிலாக அதனைச் செப்பனிட்டு அதில் பயணித்து வருகின்றேன். எனக்குப் பின்னர் இப்பணியைத் தொடர்பவருக்கு இலகுவாக இருக்கவேண்டும் என்பதே என் சிந்தையில் நிரந்தரப் பதிவாக உள்ளது. நூல்தேட்டம் தொகுப்பு என்பது என்னுடன் தொடங்கி என்னுடனே முடிவடையும் ஒன்றல்ல.

கேள்வி: இலங்கை நூல்தேட்டம் தவிர மலேசிய நூல்தேட்டம்,  இலங்கைத் தமிழருக்கான ஆங்கில நூல்தேட்டம், சிறப்பு மலர்களுக்கான வழிகாட்டி ஆகியவற்றையும் வெளியிட்டதாக அறிகின்றோம். இவை பற்றி சுருக்கமாக குறிப்பிட முடியுமா?

என்.செல்வராஜா: மலேசிய,  சிங்கப்பூர் தமிழர்களின் நூலியல் வரலாறு இலங்கைத் தமிழருடன் பின்னிப் பிணைந்தவை. அந்நாடுகளில் ஆரம்பகால தமிழ் நூல்கள் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்திருந்த யாழ்ப்பாணத் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்டவையாகும். இந்நூல்களைத் தேடி அந்நாட்டுக்குச் சென்றபோதுதான் முழு உலகத்தாலும் மறக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டு இருந்த மலேசிய தமிழர்களின் ஆழமான பல நூல்கள் பற்றி அறியமுடிந்தது. இவர்களது படைப்புக்கள் பற்றி இலங்கைத் தமிழர்கள் அறிந்திராதது துரதிர்ஷ்டம் என்றே கருதினேன். இதன் பயனாக 2200 பதிவுகளுடன் எழுந்ததே மலேசிய,  சிங்கப்பூர் நூல்தேட்டமாகும்.

இலங்கைத் தமிழரின் பல நூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. இலங்கை இராணுவத்தின் வரலாறு ஒரு தமிழரால் எழுதப்பட்டது. கொழும்பு மாவட்டத்தின் வரைபடம் (Street Atlas)ஒரு தமிழரால் மேற்கொள்ளப்பட்டது. இலங்கையின் சனத்தொகைக் கணிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு தமிழராலேயே மேற்கொள்ளப்பட்டது.  இத்தகைய பல வரலாற்று முக்கியத்துமான நூல்களை தந்த அந்த தமிழர்களையோ,  அவர்களது நூல்களையோ அண்மைக்காலத்தில் ஆங்கிலத்தில் வெளிநாடுகளில் வெளிவந்த இலங்கை தொடர்பான நூல் விபரப்பட்டியல்கள் உள்ளடக்கியிருக்காதது எனது கவனத்தை ஈர்த்தது. இதன் காரணமாக எழுந்ததே ஆங்கில நூல்தேட்டமாகும். இது முற்றிலும் தமிழர் அல்லாதவர்களுக்காக ஆங்கில மொழியில் உருவாக்கப்பட்ட ஒரு நூல்தேட்டம்.

இலங்கைத் தமிழரின் நூலியல் பாரம்பரியத்தில் முக்கிய இடம் வகிப்பது சிறப்பு மலர்களாகும். பல தமிழ் அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள் சிறப்பு மலர்களில் வந்து குறுகிய வட்டத்திற்குள் தங்கி விடுவதாலும் குறுகிய கால வரலாற்றைக் கொண்டதாலும் ஆய்வு மாணவர்களால் கண்டு கொள்ளாமல் போய்விடும். இதைத் தவிர்க்கும் நோக்குடன் தேர்ந்த 150 தமிழ் மொழியிலான சிறப்பு மலர்களை எடுத்து அவற்றிலிருந்த 2000க்கும் அதிகமான கட்டுரைகளை கண்டறிந்து அவற்றிற்கான ஒரு வழிகாட்டியை (சுட்டி) தயாரித்திருந்தேன். இதனை நூலுருவிலும் கொண்டுவந்து பிரதான நூலகங்களுக்கு வழங்கியிருந்தேன். இது இன்றளவில் நல்லதொரு உசாத்துணை வழிகாட்டி நூலாக பயன்படுத்தப்படுவதை அறிகின்றேன்.

கேள்வி: இலங்கைக்கு வந்து கடந்த மூன்று வாரங்களாக பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தின் நூல் தேடல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த நீங்கள் எதிர்வரும் வாரம் மீளவும் லண்டன் செல்லவுள்ளீர்கள். நூல்தேட்ட தேடல் நடவடிக்கைகளுக்குப் புறம்பாக இக்காலகட்டத்தில் வேறு ஏதாவது இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டீர்களா?

என். செல்வராஜா: கடந்த மூன்று வாரங்களாக பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் எனது பெரும் பொழுதை கழித்த வேளையில் தமிழ் துறையின் அழைப்பின் பேரில் பல்கலைக்கழக தமிழ்துறை மாணவர்களுடனும், விரிவுரையாளர்களுடனும் ஒரு கலந்துரையாடலில் பங்கேற்றேன். புலம்பெயர் வாழ்வியல் தொடர்பான பல கருத்துப் பரிமாற்றங்களை அந்நிகழ்வில் மேற்கொள்ள முடிந்தது. எதிர்வரும் 12ஆம் திகதி மட்டக்களப்பு செங்கலடி மகாவித்தியாலயத்தில் ஆசிரியை சுதாகரி மணிவண்ணன் எழுதிய ‘அரங்க அலைகள்’ என்ற நாடக நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள இருக்கின்றேன். அதன் போது 11ஆம் திகதி கிழக்கிலங்கை எழுத்தாளர்களை சந்திக்கும் ஒரு நிகழ்வும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பின்னர் 16ஆம் திகதி கொழும்பு தமிழ் சங்கத்தில் அறிவோர் ஒன்று கூடல் நிகழ்வில் உரையாற்றவும் இருக்கின்றேன். இவற்றை தவிர முடிந்தவரையில் எழுத்தாளர்களையும்,  நூல் வெளியீட்டாளர்களையும், பதிப்பகங்களையும் தொடர்பு கொண்டு நூல்தேட்டத்திற்கான நூல் சேகரிக்கும் நிகழ்ச்சிகளிலும் ஈடுபடவுள்ளேன். எனது உரையாடல்கள் அனைத்தும் பெரும்பாலும் நூல்தேட்டத்தையும்,  அதன் தேவையையும், எமது சமூகத்திற்கு அறிமுகப்படுத்துவதாகவே அமையும் என்று நம்புகின்றேன்.

கேள்வி;  மிக்க நன்றி திரு செல்வராஜா அவர்களே. தங்கள் பணிகள் தற்போதைய நிலையில் இலக்கிய ஆய்வாளர்களால் மதிப்பீடு செய்யப்படாவிடினும் கூட நிச்சயமாக எதிர்காலத்தில் இதுவொரு விலைமதிக்க முடியாத ஒரு ஆவணமாக திகழும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. இறுதியாக ஞாயிறு தினக்குரல் வாசகர்களிடம் நூல்தேட்டம் தொடர்பாக நீங்கள் ஏதாவது விசேட செய்தியை தெரிவிக்க விரும்புகின்றீர்களா?

என். செல்வராஜா: ஞாயிறு தினக்குரல் வாசகர்கள் எனக்கு புதியவர்கள் அல்ல. எனது கட்டுரைகளையும்,  எனது பணிகள் தொடர்பான செய்திகளையும்,  நேர்காணல்களையும் தினக்குரல் நிறுவனம் எப்பொழுதும் வெளியிட்டு வருகின்றது. அவர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்றைய நிலையில் எம்மக்கள் மத்தியில் நூல்தேட்டம் தொகுப்பு பற்றிய செய்தி தீவிரமாக வலியுறுத்தப்பட வேண்டும். நூல்தேட்டத்தின் இருப்பை அறிந்து கொள்ளும் எந்தவொரு ஆய்வாளரும் தனது தேடலில் செலவிடும் பெரும் பங்கு நேரத்தை சேமித்துக் கொள்ள முடியும். இலங்கையிலுள்ள படைப்பிலக்கிய வாதிகளும் உலகெங்கும் பரந்து வாழும் தமது சகோதர படைப்பாளிகள் என்ன செய்கின்றார்கள் என்பதை நூல்தேட்டத்தின் பதிவுகள் வாயிலாக எளிதில் அறிந்து கொள்ள முடியும். நூல்தேட்டத்தின் உருவாக்கத்தின் வெற்றி அதனைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையிலேயே தங்கியுள்ளது. இந்த தொடர்பாடலை தினக்குரல் வாயிலாக எமது படைப்புலக சகோதரர்களுக்கு விடுப்பதினூடாக அவர்களது பங்களிப்பினையும் நான் எதிர்பார்க்கின்றேன். நூல்தேட்டம் செல்வராஜா என்ற ஒரு தனி மனிதனுடைய ஆய்வு நூலல்ல. அவனது புகழையோ,  பொருளாதார வளத்தையோ மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படும் ஒரு சாதனமுமல்ல. இது அர்ப்பணிப்புடன் தனி மனிதனால் முழுச் சமூகத்துக்குமாக மேற்கொள்ளப்படும் ஒரு வாழ்நாள் முயற்சி. இதனால் உலகில் அடையாளப்படுத்தப்படப் போவது படைப்பாளிகளும், அவர்களது படைப்புக்களுமேயாகும். இதை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு படைப்பாளி தனது உளமார்ந்த பங்களிப்பாக எதைச் செய்திருக்கின்றான் என்ற கேள்வியை ஒவ்வொருவரது மனதிலும் தினக்குரல் வாயிலாக எழுப்ப வேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோளாகும்.