27

27

இரண்டு தேர்தல்களும் ஒரே நாளில்? ஊடகத் துறை அமைச்சர் தெரிவிப்பு

000lakshman_yapa_abeywardena.jpgஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவது குறித்து; கவனம் செலுததுவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக ஊடகத் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார. தேசிய அபிவிருத்தி தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

ஏதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டின் போது இது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

உரிய நேரத்தில் தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருதாகவும் குறிப்பிட்ட காலத்தில் ஜனாதிபதித் தேர்தல் திட்டவட்டமாக நடத்தப்படும எனவும் குறிப்பிட்டார். ஒரே நேரத்தில் இரண்டு தேர்தல்களையும் நடத்துவதற்கு தேர்தல் திணைக்களம் தயாராக உள்ளதா? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது தேர்தல்களை நடத்த தீர்மனிப்பது அரசாங்கம் என்றும் அவற்றை நடத்துவது திணைக்களத்தின் பொறுப்பு எனவும் அமைச்சா கூறினார்.
 

லத்வியாவில் விழுந்த விண்கல்

271009lathviya.jpgலத்வியா நாட்டில் ஞாயிற்றுக்கிழமை மாலை விண்ணில்; இருந்து விழுந்த பெரிய பாறை போன்ற கல்லால் பூமியில் 15 மீட்டர் ஆழமும் 5 மீட்டர் அகலமும் உடைய பள்ளம் ஏற்பட்டுள்ளது.
 
அந்தக் கல் எஸ்தோனியாவை ஒட்டிய எல்லைப் பகுதியில் உள்ள நகர் ஒன்றில் விழுந்தது. கல் ஆகாயத்தில் இருந்து வரும் போது நெருப்புப் பிழம்பு போல் இருந்ததாகவும்,  பார்ப்பதற்கே பயமாக இருந்ததாகவும் அதை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தக் கல் விழுந்த பகுதியைச் சுற்றிலும் பாதுகாப்பு வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். கல்லை பார்ப்பதற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.

கல்லின் ரசாயனத் தன்மையை சோதித்த அந்நாட்டு ராணுவத் துறை இரசாயணவியல் விஞ்ஞானிகள், அந்தக் கல்லில் கதிர்வீச்சு அளவு குறைவாகவே உள்ளதாகத் தெரிவித்தனர்.

அந்தக் கல்லை எரிகல்லாக இருக்கலாம் என்று அந்நாட்டு அதிகாரிகள் கருதுகின்றனர். ஆனால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.  கல்லை சோதிப்பதற்காக லத்வியா நாட்டு பல்கலைக்கழக புவியியல் நிபுணர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

உருப்படுமா உலகமயமாதல்: குலன்

Iran_SL_Leadersபனிக்காடாய் கிடந்த பூமி, வெப்பம் அதிகரிப்பினால் பனி உருக நிலம் புலப்பட ஆரம்பித்தது என்கிறது விஞ்ஞானம். ஒன்றுமில்லாது இருந்து பூமியில் ஒன்றாக உயிரினங்கள் உயிர்த்தெழத் தொடங்கி கூர்ப்பு, வளர்ச்சி, கலப்பு என்று வேற்றுமை அடையத் தொடங்கியது. பூச்சியத்துக்குள்ளிருந்த பூமி, இராச்சியமாக மாறி இன்று உலகமயமாதல் என்பதில் வந்து நிற்கிறது.

ஆயிரத்தித் தொளாயிரங்களில் நாடுகள் பிரிவதும், ஆட்சிகள் அமைப்பதும், உலகமெங்கும் விடுதலை இயக்கங்கள் உருவாவதும், தனித்து நின்று போராடியதும், வென்றதும், ஒரு தலைமையின் கீழ் நாடுகள் இருந்ததும், இயக்கங்கள் அமைந்ததும், சாதாரணமான ஒன்றாக இருந்தது. தலைமை என்பதும் அதற்குப் பணிதல் என்பதும் அத்தியாவசியமான ஒன்றாகவே இருந்தது வந்தது. உலகத்தின் பாதுகாவலராக சோவியத்தும், அமெரிக்காவும் இருந்து ஒரு பனிப்போரை நடத்தினர். காலப்போக்கில் பெருந்தலைமை என்பது மறையத்தொடங்க பிராந்திய வல்லரசுகள் உ.ம் இந்தியா, சீனா, பாக்கிஸ்தான் தலைதூக்கத் தொடங்கின. அமெரிக்க இரசியப் பனிப்போர் உடைந்ததால் பிராந்தியங்களின் பாதுகாப்பு பிராந்திய வல்லரசுகளின் கையில் சென்றுள்ளது. இடதுசாரித்துவ பெருநிலப்பரப்பைக் கொண்ட சோவியத்தை உடைக்கப்போய் அமெரிக்கா பொருளாதாரம் உடைந்து சுக்கு நூறானது தான் மிச்சம்.

இந்தப் பிராந்திய வல்லரசுகள் தம்நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அயல் நாடுகளுடன் நட்புறவாகவும் அன்னியோன்யமாகவும் பரஸ்பர புரிந்துணர்வுகளுடனும் இருக்க வேண்டிய காலகட்டத்தில் வந்து நிற்கிறது. வல்லரசுகளைப் பொறுத்தவரையில் புஜபலம் பொருந்திய அயல்நாடுகள் நட்புறவுடன் தமது இராஜதந்திர நடவடிக்கைகளுடன் இருந்து வந்தன. உ.ம் ஜேர்மன் பிரான்ஸ். இந்து சமுத்திரத்தைப் பொறுத்தமட்டில் 3 பிராந்திய வல்லரசுகள் தமது எல்லை விரிவாக்கங்களைக் கருத்திற்கொண்டு செயற்படுகிறன்றன. இந்த நிலையைச் சரியாகப் பயன்படுத்தி, புலிகளின் கோட்டையை உடைத்தெறிந்தது சிங்களப் பேரினவாத அரசு.

புலிகள் இடதுசாரித்தன்மையைக் கொண்டவர்களாகவும் சீனாவின் கொள்கைகளுடன் ஒத்துப்போகும் இயல்பு கொண்டவர்களாக இருந்தும் ஏன் புலிகளுக்கு சீன உதவி கிடைக்கவில்லை? இந்தியத் துணைக்கண்டம் 6 கோடிக்கு மேற்பட்ட தமிழர்களைக் கொண்டவர்கள் ஒரேமொழியும் இரத்தஉறவும் கொண்ட துணைக்கண்டம் ஏன் புலிகளுக்கு உதவி செய்யவில்லை? பாக்கிஸ்தானைப் பொறுத்தமட்டில் தமிழ் பேசுபவர்களே முஸ்லீம்களாக மாறினார்கள் இவர்கள் தமிழ் முஸ்லீம்களே. இப்படியான எல்லா வசதிகளும் தொடர்பு வசதிகள் இருந்தும் புலிகள் நந்திக்கடலில் குதித்தது ஏன்? உலக அரசியலை நன்கு உணராமை, இராஜதந்திரம் இல்லாமை, மக்களை, மக்கள் போராட்டத்தை மதியாமை, சரியான கெரில்லாவாக இயங்காமை, முரண்டு பிடித்தமை, எல்லாவற்றையும் விட முக்கியமாக அரசியலே இல்லாமை, ஷோ காட்டி வாழ விளைந்தமை. மக்கள் சக்தியையும், அரசியலையும் சரியாக உணர்ந்து கொண்டிருந்தால் நந்தியோ நந்தியாக நின்று காப்பாற்றியிருக்கும்.

மேற்கூறிய அனைத்தையும் நன்கு ஆராய்ந்து அலசி சந்தர்பத்தைச் சரியாகப் பயன்படுத்தியது இலங்கை அரசு என்பதை யாரும் மறுக்க இயலாது. ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் ஆப்பு அறைந்து அனுப்பியது இலங்கை அரசே. இன்றைய உலகில் புஜயபலத்தை விட புத்திப்பலமே மேலோங்கி நிற்கிறது என்பதை புலிகள் ஏன் மறந்தார்கள். இந்துசமுத்திர அரசியல் சதுரங்கத்தில் பலமுள்ள சிறுநாடுகளை தன்கைக்குள் போடமுயன்றன பிராந்திய வல்லரசுகளான இந்தியா சீனா பாக்கிஸ்தான். இச்சதுரங்கத்தில் காய்களை சரியாக நகர்த்தி பிராந்திய வல்லரசுகளை ஒழுங்குபடுத்தி புலிகளுக்கு செக் வைத்தது சிங்கள அரசு. இராக்கியப் போரையும் தலிபானையும் கருத்தில் கொண்ட அமெரிக்கக் கனவில் இருந்த பிரபாகரனுக்கு புலம்பெயர் தமிழர்களின் அம்புலிமாமா கதை நிலாச்சோறாக அமைந்தது. கடைசி வேளையிலும் அமெரிக்கா வரும் ஒபாமா வருவார் என்ற நம்பிக்கையில் சரணடைந்து வாள்வெட்டு பட்டு இறந்தார் தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன். தேசியத்தலைவன் என்பவன் மக்களின் பிரதிநிதியாக மக்களுடன் இருக்க வேண்டியவன். பங்கருக்குள்ளா இருப்பான் என்றும் மக்களை மையப்படுத்தடா மடையா என்றும் எத்தனைபேர், மாற்றுக்கருத்தாளர்கள் கத்தினார்கள். கேட்டார்களா? சொந்த மக்களை நம்பமுடியாத போராட்டவீரன் எப்படி அமெரிக்காவை நம்பினார்.

உடைபட்ட பனிப்போரால் உடைபடத்தொடங்கின நாடுகள். இதேவேளை புஜபலகண்காட்சி மாயையை தொடர்ந்தும் நிலைநிறுத்த ஒரு இராக்குப்போர் நடந்தது. இப்போரால் பொருளாதார ரீதியில் வெற்றியைக் கண்டது அன்றை இடதுசாரி நாடுகளான இரஸ்சியாவும் சீனாவும்தான். சச்சேனிய தீவீரவாதத்தை முடிவுக்குக் கொண்ட வந்து தமது ஒற்றனான சச்சேனிய தீவீரவாதி ஒருவனின் கையில் அதை ஒப்படைத்து விட்டு அவர்களை அவர்களுடனே அடிபட விட்டுவிட்டு இரஸ்சியா தன் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்திக் கொண்டது. புஜபலம் காட்டப்போய் அமெரிக்கா இராக்கிலும் ஆவ்ஃக்கானிஸ்தானிலும் முடங்கிப்போய் கிடந்து இன்று பொருளாதார நெருக்கடிக்குள் முட்டி மோதிக் கொண்டு இருக்கும் வேளைதான் ஒபாமா வந்தார். இவரை நம்பியா புலிகள் சரணடைந்தார்கள். புலிகள் கூப்பிட்டவுடன் ஓடிவர ஒபாமா என்ன சித்தப்பனா?

இந்தியா சதுரங்கத்தில் தன்காய்களைச் சரியாகவே நகர்த்திக் கொண்ட இருக்கிறது. தமக்கு அயலில் தலையிடியாக இருந்துவந்த பாக்கிஸ்தானுக்கு தனிபான்களினூடாக ஒரு செக்கை இன்று வைத்துள்ளது. அன்றைய இராணுவத்தலைவர் இதன் பின்னணியில் இருப்பாரா என்பது இன்றைய கேள்வியாக உள்ளது. அமெரிக்காவால் இரஸ்சிய அரசுக்கு எதிராக உருவாக்கப்பட்ட பின்லாடனை பின் அமெரிக்காவே அழிக்க வேண்டிய நிலையானது. இப்படிப் பின்லாடன் இருக்கிறானா இல்லையா என்ற முடிவில்லாமல் போனதால் தலிபான் தொடர்ந்து போராடுகிறது. அமெரிக்கா தன் வெற்றியை உறுதிப்படுத்த முடியாமல் நிற்கிறது. இந்த நிலையையாவது பிரபாகரன் உருவாக்கி விட்டுவிட்டுப் போயிருக்கலாம். பிரபாகரன் இருக்கலாம் என்ற நம்பிக்கையில் ஒருவனாவது போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு இருந்திருப்பான். சிங்கள அரசோ பேரினவாதமோ தன் இனவெறியைக் காட்டாமலும் போரின் வெற்றியை உணராமலும் இருந்திருப்பார்கள் ஆனால் பிரபாகரன் என்ற பெயர் வாழ்ந்து கொண்டிருக்கும். சிலவேளை மக்களின் போராட்டம் தொடர்ந்திருக்கும். அமெரிக்கா வரும் என்ற புலம்பெயர் புலம்பல்களில் கனவுகண்டு உலக இயற்கை நிதர்சனங்களை விட்டுவிட்டு சரணடைந்து எம்மினத்தை முழு நிர்வாணமாக்கிச் சென்றிருக்கிறார் பிரபாகரன்.

இனிவரும் தலைவர்களாவது இன்றைய உலக அரசியல் நிலமையை உணர்வார்களா? உலகமயமாதல் எதற்காக நடக்கிறது? இதன் விளைவுகள் என்னவாகும்? இவற்றைக் கருத்தில் கொண்டு அரசியல் நடத்த முயற்சியுங்கள்.

பெருந்தலைமை உடையும்போது சிறுசிறு தலைமைகள் உருவாவது இயற்கையானது. இந்தச் சிறுதலைமைகள் சுயமாக தம்மைப் பாதுகாத்துக் கொள்வது என்பது கடினமானதே. இதனால் இணைவுகளும் உடன்படிக்கைகளும் அவசியமாகிறது. இதனால் இசைவாக்கமுள்ள தம்முடன் ஒத்துப்போகக் கூடியவர்களை இணைத்து தம்நாட்டின் ஆட்சிப்பலத்தையும் பிராந்தியப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் இருப்பதால் சிறு சிறு நாடுகளின் பங்களிப்புகள் முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் உலகமயமாதல் என்பது அவசியமாகிறது.

கணனிகளாலும் இலத்திரனியல்சார் தொழில்நுட்பங்களாலும் உலகம் ஒரு கிராமம் போல் குறுகிவிட்டது. இன்நிலையைப் பயன்படுத்திய வசதியான நாடுகள் தம் வசதிகளை மேலும் பெருக்கிக்கொள்ள வளர்முக நாடுகளை நாடுகிறார்கள். அங்கே தொழிலாளர்கூலி மிகக் குறைவாக இருப்பதுடன் தயாரிப்புகளுக்கான மூலப்பொருட்களும் மலிவாகவே கிடைக்கின்றன. தொழிற்சாலையின் இரசாயனக்கழிவுகளையும் வளியசுத்தங்களையும் அங்கேயே விட்டுவிட்டு தயாரிப்புகளை மட்டும் தமது முத்திரைகளுடன் உலகநாடுகளின் பெரும் விலையில் சந்தைப்படுத்தி பெருங்கொள்ளை இலாபம் ஈட்டமுடியும். ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் தம் முதலீடுகளை 3ம் உலகநாடுகளில் செய்வதினூடு சுமார் 200மடங்கு இலாபத்தைப் பெறலாம். மூலப்பொருட்களை 3ம் உலகநாடுகளில் இருந்து கொண்டுவந்து பொருள்களை இங்கே உற்பத்தி செய்து அதைச் சந்தைப்படுத்துவதனால் அடையும் இலாபத்தை விட எல்லாவற்றையும் அங்கேயே எடுத்து கழிவுகளையும் அங்கேயே விட்டு விட்டு அதாவது சக்கையை அங்கே எறிந்து விட்டு சாற்றை மட்டும் இங்கே எடுத்துவந்து சந்தைப்படுத்துவதை விட இலாபம் தரக்கூடிய சிறந்த வியாபாரம் என்ன இருக்கிறது.

இந்நாடுகளின் முதலீடுகள் அங்கே ஆழமாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும் என்றால் போர் எப்படியும் நிறுத்தப்பட வேண்டும். அங்குள்ள அரசின் நட்புறவு வலுப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் குறுகிய காலத்தில் பெரிய முதலீடுகளைச் செய்து பெரு இலாபம் பெறமுடியும். இவையனைத்தும் குறுகிய காலத்தில் நடந்தேறினால் மட்டுமே பெருலாபம் உறுதியாகும். இந்நிலையில்தான் தமிழர்களது தலைவிதியும் புலிகளின் ஈழக்கனவும் நந்திக்கடலினுள் கொட்டப்பட்டது.

போர்காரணமாக அகதிகளின் பெருக்கம் ஐரோப்பிய நாடுகளில் அதிகரிப்பதனால் கலாச்சாரச் சீரழிவுகளும், சட்டவிரோதச் செயல்கள் அதிகரிப்பும், பொருளாதார நெருக்கடியும் எற்படுகிறது. போர்களை முடிவுக்குக் கொண்டு வருவதனால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்றாகி விடுகிறது. அகதிகளை திருப்பி அனுப்பவும் வசதியாகிறது. தமிழ்மக்களின் அழிவையும் அரசாங்கத்தின் அஜாரகங்களையும் நேரில் நின்று பார்த்த நாடுகளே அகதிகளை அனுப்புவற்கான விண்ணப்ப நிராகரிப்புகளை பெருந்தொகையாகக் கொடுக்கத் தொடங்கி விட்டன.

புலிகளுக்கு உதவிசெய்வதூடு ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு என்ன இலாபம் ஏற்படமுடியும்? மாறாக நட்டமே ஏற்படும். புலிகளுக்கு உதவி செய்வதூடு போர் நீடிக்கும், தமது முதலீடுகள் தக்கவைக்கப்படும், ஆயுதவிற்பனையால் ஏற்படும் வருமானத்தை விட ஒரு தொழிற்சாலையூடு அள்ளப்போகும் பெருந்தொகையான இலாபத்தை யார் கைவிடத்தயார்? இதனால் இலங்கை அரசைப் பகைத்துக் கொள்ள ஐரோப்பிய, அமெரிக்க, பிராந்திய வல்லரசுகள் விரும்பவில்லை. இதுவே ஐரோப்பிய அமெரிக்க தெருக்களில் எங்கள் கண்ணீர்கள் காணாமல் போனதற்கும், எங்கள் குரல்கள் கேட்காமல் போனதற்கும் காரணமாகும்.

இது ஒரு பெரியகட்டுரையாக வளராமல் இருப்பதற்காக உலகமயமாதலினால் ஏற்படும் நன்மை தீமைகளை புள்ளிவடிவத்தில் தந்து மீதியை பின்னோட்ட எழுத்தாளர்கள் கொண்டு சென்று முடிப்பார்கள் என்ற நம்பிக்கையில் விட்டுவிடுகிறேன்.

• உலகமயமாதலினால் சிலவேளைகளில் பொருளாதாரச் சமநிலை ஏற்பட சாத்தியம் உண்டு.
• 3ம் உலகநாடுகளில் மூலவளங்கள் அழிக்கப்படும் ஆனால் தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கலாம். வெளிநாடு சென்று திரைகடலோடியும் திரவியம் தேடாமல் வெளிநாட்டவர்களே உங்களை நோக்கி வரும் காலம் கனிந்துள்ளது.
• பொருளாதார வளங்கொண்ட நாடுகளின் முதலீடுகள் உறுதியுடனும் உத்தரவாதத்துடனும் இருக்க வேண்டுமானால் போர்கள் நிறுத்தப்படும். இது இலங்கையில், பிலிப்பைந்து, சுமாத்திரா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் நடந்தேறின.
• போர்கள் நிறுத்தப்படும் போது இணைதல்கள் சாத்தியமாகும். பலமுள்ளவர்கள் இணைந்து பலவீனர்களை உண்பார்களா?
• வளர்முகநாடுகள் ஐரோப்பிய அமெரிக்கநாடுகளின் கழிவறையாக மாற்றம் பெறும்.
• வளர்முகநாடுகளிலும், படித்தவர்களுக்கும் வசதியானவர்களுக்குமே வேலைவாய்ப்பு என்று ஆகிவிடும். இதனால் கறுப்புப் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
• பொருளாதார மையமாக்கல் வலதுசாரித்துவத்துக்கு வழிகோலும். பணக்காரன் பெரும் பணக்காரனாவதும் ஏழைகள் தொடந்து கொடுமைகளை அனுபவிப்பதும் ஊக்கிவிக்கப்படும்.
• வலதுசாரித்துவம் வகுப்புவாதத்துக்கு தூபமிடும்.
• சிறுபான்மை இனங்களின் போராட்டங்கள் பிராந்திய வல்லரசுகளாலும், பெரும்பான்மை இனத்தவர்களின் இணைவுகளாலும் வெளியே வராமல் நசுக்கப்படும். உ.ம் சீனாவில் நடந்து கொண்டிருக்கும் உகுரு இனப்போராட்டம். சிறுபான்மை இனங்கள் உருந்தெரியாமால் பையப் பைய அழிக்கப்படுவார்கள் அன்றேல் தானாக அழிவார்கள்.
• ஆதிக்க மொழிகள் ஆட்சியைப் பெறும் உ.ம் ஆங்கிலம், அரேபிய மொழி இரஸ்சிய மொழிகளால் சிறுமொழிகள் சிறுபான்மை இனம்போல் உலகத்தை விட்டே விரட்டப்படும்.
• சிறுகைத்தொழில்கள் அழிக்கப்படும். பெருந்தொழில்கள் அவற்றை விழுங்கும்.
• மனிதனின் அடிப்படை தேவையான விவசாயம், பண்ணைகள் அழிக்கப்பட்டு பெருவருமானம் தரும் கைத்தொழில்கள் முதன்மைப்படுத்துப்படும். இதனால் வளியசுத்தம் அதிகரித்து உலகில் சமநிலை பாதிக்கப்படும். உணவு தயாரிப்புக்குப் பதிலாக வில்லைகள் தயாரிப்பு அதிகரிக்கும்.
• 3ம் உலகநாடுகளில் முன்பின்னறியா புதிய வியாதிகள் வில்லை வியாபாரங்களுக்காக வலம்வரும். உ.ம். தெங்குக்காச்சல், பறவைக்காச்சல், பன்றிக்காச்சல் இனி பூனைக்காச்சல், நாய்காச்சல் என்று இன்னும் எத்தனை எத்தனையோ காச்சல்களும் பேச்சல்களும் பீச்சல்களும் உருவாகும்.
• பெருந்தெருக்களாலும், போக்குவரத்து, தொழிற்சாலை போன்றவற்றினால் ஏற்படும் வளியசுத்தமும், இரசாயனக்கழிவுகளும் ஐரோப்பிய அமெரிக்க பிராந்திய வல்லரசுகளில் குறைப்பதற்காக 3ம் உலகநாடுகளுக்கு வெளிநாட்டு முதலீடு எனும் பெயரில் ஏற்றுமதி செய்யப்படும். அதாவது வளர்முகநாடுகள் பொருளாதார வல்லரசுகளின் கழிவறையாகும்.
• உலகரீதியாக பொருளாதாரச் சமநிலை ஏற்படச்சாத்தியம் இருந்தாலும் வல்லரசுகள் அவற்றை தடுக்கும். ஆனால் வளர்முக நாடுகளில் ஏற்றத்தாழ்வு மிகப்பெரிய அளவில் இருக்கும்.
• ஒருநாட்டில் இன்னொருநாடு தங்கிவாழவேண்டி அமைவதால் சிறுபான்மைகளின் கருத்துக்கள் போராட்டங்கள் பெரும்பான்மை இணைவுகளால் கொல்லப்படும். பெரும்பான்மை பெரும்பான்மையுடன் கைகோர்த்துக் கொள்ளும் உம் இந்திய இலங்கை உறவு. சீன இலங்கை உறவு.
• கணனிகளாலும் அதிவேக வாழ்வியலாலும், இரசாயனக்கழிவுகளாலும் வளியசுத்தங்களினாலும் அங்கே மக்களின் வாழ்வுக்காலம் குறையும், கூட்டுவாழ்வு குலையும். தனித்துவமான கலாச்சாரங்கள் அழியும்.
• கலாச்சாரங்கள் இணைவுகளால் பலமானதே வாழும். இயந்திரவாழ்க்கை ஒன்று மிருகவாழ்வியலுக்கு வித்திடும்
• உடன்பாடுகளுடன் நாடுகள் இணைந்து பெருலாபம் பெறும்.
• நாடுகளின் எல்லைகள் உடையும், ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு அதிகரிப்பதனால் வகுப்புவாதமும் வர்க்கபேதமும் போராட்டங்களும் அதிகரிப்பதற்கு சாத்தியம் உண்டு.
• தனித்துவமற்ற சமூகம் உருவாகி பணத்துக்காக அலையும்.
• பொருளாதாரப் பரிமாற்றம் போல் பயங்கரவாதப் பரிமாற்றமும் வெகு வேகமாக நடைபெறும். அமைதியான நாடுகளில் களவு கன்னக்கோல் பாலியல் வல்லுறவு என்பன அதிகரிக்கும்.
• நன்மை தீமைகள் இரண்டும் பொதுவானாலும் பொருளாதாரம் ஐரோப்பிய அமெரிக்க பிராந்திய வல்லரசுகளின் கையிலேயே என்றும் இருக்கும்.
• இவ்வளவு காலமும் 3ம் உலகநாடுகள் வல்லரசுகளின் ஆயுதக்கழிவகமாக இருந்தது. இன்று அவை வழியசுத்தம், இரசாயனக்கழிவகமாக மாற்றம் பெறுகின்றன. எது எப்படி வளர்ந்தாலும் மாற்றம் பெற்றாலும் ஒன்று மட்டும் உண்மை ஏதோ ஒருகழிவகத்தை எம்மக்கள் சுமப்பார்கள்.

இப்படி நன்மை தீமைகளுடனான ஒரு உலகமயமாதல் நடந்தேறும். நான் தவறவிட்ட விடயங்களை பின்நோட்டம் விடுவோர் விட்டுவைக்காது தொடருங்கள்.

அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கும் ஆற்றல் இலங்கைக்கு உண்டு – ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்

261009serje.jpgசர்வதேச அழுத்தங்களுக்கோ அல்லது குற்றச்சாட்டுகளுக்கோ முகம் கொடுக்கும் ஆற்றல் இலங்கைக்கு உள்ளது என்று ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி வி லெவ்ரோ நேற்றுத் தெரிவித்தார்.

இலங்கையின் நீதித்துறை மிகவும் ஒழுங்கான முறையில் செயல்பட்டு வருகின்றது என்றும் இதனை பயன்படுத்தி எந்தவொரு பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க முடியும் என்று தெரிவித்த அவர், இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் விடயத்தில் ரஷ்யா இலங்கைக்கு எப்போதும் ஆதரவு வழங்கி வந்துள்ளது என்றும் தெரிவித்தார். குறுகிய கால விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான அந்நாட்டின் உயர்மட்டக் குழுவினர் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பின் பின்னர் கூட்டாக நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரஷ்ய அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் சுமுகமான நிலையை ஏற்படுத்தும் வகையிலேயே ரஷ்யா இலங்கைக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி வந்தது. தேசிய ரீதியான ஒருமைப்பாடு, நல்லிணக்கம் போன்ற நடைமுறை சாத்தியமான முடிவுகளை ரஷ்யா இந்த ஒத்துழைப்புக்களின் மூலம் எதிர்பார்க்கின்றது.

இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்க ரஷ்யா தயாராக உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகள் மிகவும் வலுவடைந்து காணப்படுகின்றது. பொருளாதாரம், முதலீடு, வர்த்தகம், சுற்றுலாத்துறை மேம்பாடு, சட்டவிரோத ஆட்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் என்பன தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.

கண்ணிவெடிகளை அகற்றும் விடயத்தில் ரஷ்யா ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றது.  இந்த ஒத்துழைப்புக்களை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதுடன் மிதிவெடிகளை அகற்றும் விடயத்தில் அனுபவம் வாய்ந்த குழுவொன்றையும் அனுப்பவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் 52 வருடங்களாக ராஜதந்திர உறவுகள் காணப்படுகின்ற போதிலும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்தது இதுவே முதற் தடவையாகும்.

ம. உ. ஆணைக்குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு அரசு மறுப்பு

ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களம் காங்கிரஸ¤க்கு சமர்ப்பித்திருக்கும் அறிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் அறிக்கை சமர்பிக்க வேண்டுமென அதன் பேச்சாளர் வெளியிட்டுள்ள கருத்தை இலங்கை அரசாங்கம் வன்மையாக மறுப்பதாக மனித உரிமைகளுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்திற்கு மனித உரிமைகள் தவிர்ந்த ஏனைய விடயங்களில் தலையிடுவதற்கு எவ்வித உரிமையும் இல்லையென அதன் உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளைக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் எனவும் அமைச்சர் கூறினார். ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பில் 192 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இவர்கள் அனைத்து நாடுகளுக்கும் சேவை செய்வதை விடுத்து எப்போதும் ஒரு பிராந்தியத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருவது தவறு. ஏனைய அங்கத்துவ நாடுகளின் ஒத்துழைப்புடன் இதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளோமெனவும் அமைச்சர் சமரசிங்க நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். இதேவேளை வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியிருந்த 2 இலட்சத்து 88 ஆயிரம் பேருள் தற்போது ஒரு இலட்சத்து 96 ஆயிரத்து 88 பேரே தங்கியிருப்பதாகவும் ஏனையோர் மீளக் குடியமர்த்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

யாழ். நிவாரணக் கிராமங்களில் 6, 896 பேரும் மன்னார் நிவாரணக் கிராமங்களில் 1,590 பேரும் திருகோணமலை நிவாரணக் கிராமங்களில் 6,405 பேரும், ஆறு வைத்தியசாலைகளில் 1,626 பேரும் தங்கியிருப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். கண்ணிவெடியகற்றும் பணிகளை துரிதப்படுத்துவதற்காக புதிதாக ஆயிரம் இராணுவ வீரர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கண்ணிவெடியகற்றும் 14 இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இன்னும் இரு வாரத்தினுள் மேலும் 10 இயந்திரங்கள் கொண்டு வரப்படவுள்ளன. இவற்றுள் 05 ஐ. நா நன்கொடையாக வழங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

யசீகரனும், அவரது மனைவியும் பயங்கரவாத தடுப்பு சட்டத்திலிருந்து விடுதலை

271009jasikaran.jpgஇலங் கையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த சஞ்சிகை வெளியீட்டாளரும் அச்சக உரிமையாளருமான யசீகரனும் அவரது மனைவியும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த பயங்கரவாத தடுப்புசட்டத்தின் கீழான வழக்குகள் இரண்டையும் இலங்கை சட்டமா அதிபர் விலக்கிக்கொண்டதை அடுத்து இவர்கள் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

இனவாத உணர்வுகளை தூண்டும் வகையிலான சஞ்சிகை யொன்றை அச்சிட்டு வெளியிட்டமை, அதற்காக சதிசெய்தமை, சஞ்சிகைக்காக வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெற்றமை போன்ற குற்றச்சாட்டுகள் யசீகரன் மீதும் அவருக்கு உடந்தையாய் இருந்ததாக யசீகரன் மனைவி மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்ததது.

இதே சஞ்சிகையை பிரசுரித்தமை குறித்து மூத்த பத்திரிகையாளர் ஜே.எஸ்.திஸ்ஸநாயகத்துக்கு 20 வருட கடுழிய சிறைத்தண்டணையை கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி கொழும்பு மேல்நீதிமன்றம் விதித்திருந்தது.

அமெ. இராஜாங்க திணைக்களம் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக ஆராய சுயாதீன குழு

ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களம், அதன் காங்கிரஸ¤க்கு சமர்ப்பித்திருக்கும் அறிக்கை தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி விரைவில் அறிவிக்கவுள்ளார். இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கை தொடர்பாக ஆராயவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் ஒரு வார காலப் பகுதிக்குள் சுயாதீனக் குழுவொன்றை நியமிக்கவிருப்பதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றுத் தெரிவித்தார். காங்கிரஸ¤க்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அறிக்கையில், இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஜூன் வரையான காலப் பகுதிக்குள் இடம் பெற்ற சம்பவங்களில் எந்தவொரு இடத்திலும் போர் விதிகளை மீறியமைக்கான ஆதாரபூர்வமான சாட்சிகள் இல்லையெனவும் அவை சட்ட ரீதியாக நிரூபிக்கப்பட வில்லையெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு இந்த அறிக்கை சாதகமாக அமைந்த போதிலும் இதனை பகடைக்காயாக உபயோகித்து சில அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புக்களும் அரசியல் இலாபம் தேட முனைத்துள்ளன.

இவ்வாறான அமைப்புக்களுக்கும் கட்சிகளுக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையிலேயே ஜனாதிபதியினால் மேற்படி அறிக்கை தொடர்பாக ஆராயவென சுயாதீனக் குழு நியமிக்கப்படவுள்ளது. இக்குழு பக்கச் சார்பற்ற முறையில் அதனை ஆராய்ந்து ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கும்.

குழு முன்வைக்கும் அறிக்கையின் பிரகாரம் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு ஜனாதிபதியி னால் விரைவில் அறிவிக்கப்படும்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இம் மாநாட்டில் அமைச்சருடன் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க, ஜெனீவாவின் முன்னாள் உயர்ஸ்தானிகரும் புதுடில்லியின் புதிய உயர்ஸ்தானிகராக பதவியேற்க விருப்பவருமான பிரசாத் காரியவசம் உள்ளிட்ட ஐவர் கலந்து கொண்டனர்.

வன்னி முகாம்களிலுள்ள க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கு 5 மாதிரி வினாத்தாள்கள் விநியோகம் : பி எம் புன்னியாமீன்

261009school_child_dp.jpgவன்னி முகாம்களிலுள்ள க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான தேசம்நெட், சிந்தனைவட்ட நிவாரண உதவித்திட்டத்தின் முதற் கட்டமாக கணிதம்,  வரலாறு, தமிழ்மொழியும் இலக்கியமும், ஆங்கிலம், விஞ்ஞானம் ஆகிய ஐந்து பாடங்களுக்குமான முதலாம் கட்ட மாதிரி வினாத்தாள்களை இவ்வாரம் வழங்கவுள்ளது.

தற்போது அகதி முகாம்களிலுள்ள மக்கள் பலவிதமான தேவைகளுக்கு உட்பட்டவர்களாக இருந்த போதிலும் கூட,  நீண்ட கால அடிப்படையைக் கருத்திற்கொண்டு மாணவர்களின் கல்விநிலை பாதிப்படையக் கூடாது என்பதைக் கருத்திற்கொண்டு சிந்தனைவட்டமும்,  தேசம்நெற்உம் கல்விசார்ந்த நிவாரண நடவடிக்கைகளை முன்னேடுக்க திட்டமிட்டு சில செயற்பாடுகளை மேற்கொண்டது. முதற் கட்டமாக தரம் 05 புலமைப் பரிசில் மாணவர்களுக்கு எம்மால் மேற்கொள்ளப்பட்ட நிவாரண செயற்றிட்டம் எமக்குப் பூரண வெற்றியைத் தந்தது. குறிப்பாக எமது முதற் திட்டத்தின் கீழ் 4872 மாணவர்கள் நேரடியாகப் பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

நிவாரணக் கிராமங்களிலுள்ள மாணவர்களுக்கு பல சுயேட்சை நிறுவனங்கள் பல்வேறுபட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. ஆனால், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவது தொடர்பாகவும்,  அனைத்து முகாம்களிலுமுள்ள மாணவர்களின் கல்வித் தரத்தைக் கருத்திற் கொண்டும் பரந்துபட்ட திட்டங்களை சுயேட்சை நிறுவனங்கள் முறையாக மேற்கொண்டதாக அறியமுடியவில்லை. இதனைக் கருத்திற்கொண்டே மாணவர்களின் பௌதீக வசதிகளைவிட மாணவர்களின் கல்வித் தரத்தைக் கருத்திற் கொண்டு நாம் கல்வித் தரத்தை உயர்த்தும் முகமாக முதற் கட்டமாக புலமைப்பரிசில் பரீட்சைக்கான கல்வி உதவிகளை அனைத்து மாணவர்களுக்கும் வழங்கினோம்.

அதன் தொடர்ச்சியாகவே க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கும் கல்வி நிலையை அபிவிருத்தி செய்யக்கூடிய திட்டத்தினை வகுத்தோம். இத்திட்டம் வகுக்கப்படும் போது கல்வி செயற்பாட்டுடன் ஈடுபாடுடைய புத்திஜீவிகள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்வியதிகாரிகள், ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோர்களுடன் கலந்தாலோசித்து க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் கல்வி அபிவிருத்திற்கென விசேட திட்டமொன்றினை வகுத்தோம்.

எமது திட்டத்தை வகுக்கும்போது நாம் குறிப்பாக பின்வரும் விடயங்களை விசேடமாக கவனத்தில் கொண்டோம்.

01. நிவாரண கிராமங்களிலுள்ள மாணவர்கள் வடக்கின் யுத்தம் காரணமாக 6 மாதங்கள் மற்றும் 6 மாதங்களுக்கு மேற்பட்ட காலங்களில் பாடசாலை கல்வியை பெற முடியாது இருந்தமை

02. யுத்த பாதிப்புக்களினால் மாணவர்களின் மானசீகமான பாதிப்புக்களை கருத்திற் கொண்டமை

03. சாதாரண தர பரீட்சை தரம் 10, 11 பாடப்பரப்புக்களை உள்ளடக்கியதாக அமையும். எனவே, பாடசாலைகளில் கற்க முடியாதுபோன பாடஅலகுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருந்தமை.

04. நிவாரண கிராமங்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள் கற்கும் மாணவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் பாடப் புத்தகங்கள் தவிர, மேலதிக கல்வியைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வழிகாட்டிகளோ,  வசதிகளோ இல்லாதிருந்தமை.

05. புதிய பாடத்திட்டத்தைத் தழுவி இப்பரீட்சை நடைபெறுகின்ற போதிலும்கூட, யுத்த சூழ்நிலை காரணமாகவும் முகாம்களின் சில அசௌகரியங்கள் காரணமாகவும் கல்வித் திணைக்களத்தால் வழங்கப்படக்கூடிய பயிற்சிக் கருத்தரங்குகளில் முறையாக நலன்புரி கிராம ஆசிரியர்களுக்கு வழங்கப்படாதிருந்தமை.

இத்தகைய நிலைகளைக் கருத்திற்கொண்டு டிசம்பர் மாதம் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்காக வேண்டி எம்மால் நடத்தப்படக் கூடிய நிவாரண கல்விச் செயற்றிட்டத்தின் மாணவர்களுக்கு கற்க முடியாது போன தரம் 10,  11 பாட அலகுகளை மையமாகக் கொண்ட குறிப்பேடுகளையும்,  மாணவர்கள் அரசாங்கப் பரீட்சையை இலகுவான முறையில் எதிர்கொள்வதை கருத்திற் கொண்டும் பரீட்சைப் பற்றிய விளக்கத்தை வழங்கக் கூடிய வகையில் மாதிரி வினாத்தாள்களையும் வழங்கத் தீர்மானித்தோம். எமது திட்டப்படி மேற்குறிப்பிட்ட ஐந்து பாடங்களுக்கும் 30 மாதிரிவினாத்தாள்களையும் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற அரசாங்க வினாத்தாள் ஐந்தையும் (இம்மாணவர்களிடம் புதிய பாடத்திட்டத்தின் கீழ் இலங்கையில் முதலாவதாக நடைபெற்ற 2008 டிசம்பர் அரசாங்க வினாத்தாள்கள் இருக்கவில்லை.) இவற்றுக்கு மேலதிகமாக புதிய பாடத்திட்டத்தில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ள புதிய விடயங்களை உள்ளடக்கிய 42 குறிப்பேடுகளையும் வழங்கத் திட்டமிட்டிருந்தோம். எமது நிவாரண உதவிகள் ஒரு சில நிவாரணக் கிராம மாணவர்களுக்கு மாத்திரம் போய்ச் சேராமல் வவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ள 6290 மாணவர்களுக்கும் சென்றடையக் கூடிய வகையிலே திட்டங்களை தீட்டினோம்.

மேலும் நிவாரணக் கிராமங்களில் உள்ள மாணவர்கள் மீள்குடியமர்த்தப்படுமிடத்து அந்த மாணவர்களுக்கு எமது மாதிரி வினாத்தாள்களையும்,  பாட அலகுகளை மையமாகக் கொண்ட குறிப்பேடுகளையும் வழங்கும் போது மீள்குடியமர்த்தப்படும் இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கும், விசேட ஒழுங்குகளை செய்தோம்.  

இவ்விடத்தில் சில உண்மைகளை வெளிப்படையாக குறிப்பிட வேண்டிய ஒரு கட்டாயப்பாடுண்டு. இத்திட்டத்தை மூலமாக முன்னெடுத்த சிந்தனைவட்டம் அமைப்போ தேசம்நெற் அமைப்போ பாரியளவில் நிதியினைக் கொண்டுள்ள நிறுவனங்கள் அல்ல. இதனால் எமது திட்டத்தை நடைமுறைப்படுத்த சில பரோபகாரிகளின் உதவியைப் பெற வேண்டிய நிலையிலேயே எமது முழுமையான திட்டத்தை அவர்களிடம் வழங்கி உதவிகள் கோரினோம். கிட்டத்தட்ட எமது முழுமையான செயற்றிட்டத்தை நிறைவேற்ற எமக்கு சுமார் 30 ஆயிரம் பவுண்கள் தேவைப்பட்டன. கிட்டத்தட்ட ஒரு மாணவனுக்கு 5 பவுண்களுக்குட்பட்ட ஒரு தொகையை ஒதுக்கீடு செய்வதை அடிப்படையாகக் கொண்டு மேற்படி திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்திருந்தோம். ஒரு மாணவனுக்கு நாம் ஒதுக்கிய 5 பவுண்களிலிருந்தே 30 மாதிவினாத்தாள்களையும் 5 அரசாங்க வினாத்தாள்களையும் 42 வழிகாட்டி குறிப்பேடுகளையும் வழங்க தீர்மானித்திருந்தோம். எனவே, அறிவுபூர்வமாக சிந்திக்கும் எவருக்கும் இது இலாப நோக்கத்தைக் கருத்திற் கொண்டு மேற்கொள்ளப்பட்ட திட்டமன்று என்பதையும் மாணவர்களின் கல்வி அபிவிருத்தியை மாத்திரமே குறிக்கோளாகக் கொண்டு திட்டமிட்ட செயற்பாடு என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும். இருப்பினும்,  எமது இத்திட்டத்துக்கு லண்டனிலிருந்து 2000 பவுண்களும், கனடாவிலிருந்து 1180.00. CDN மாத்திரமே கிடைத்தன. இதனால் நாம் திட்டமிட்ட மாதிரிவினாத்தாள்களில் முதலாம் கட்ட மாதிரிவினாத்தாள்கள் ஐந்தை மாத்திரமே எம்மால் வழங்க முடியுமாக இருந்தது.

புலம்பெயர்ந்த நாடுகளில் மாத்திரமல்லாமல் இலங்கையிலும் பல தனவந்தவர்களுடனும், அரசியல் வாதிகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்தினோம். இலங்கையில் ஒருவரிடமும் நாம் பணமாகக்  கேட்கவில்லை. மாறாக எமது திட்டத்தை வழங்கி குறிப்பிட்ட மாதிரிவினாத்தாள்களை அல்லது வழிகாட்டிப் புத்தகங்களை ஓரிரண்டை அச்சிட்டு தரும்படி மாத்திரமே கோரினோம். எமது திட்டத்தை நன்றாக ஆராய்ந்து எம்முடன் பல தடவைகள் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி அவர்கள் தொடர்புகொண்டு அவரும் உச்ச முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சகல முயற்சிகளும் தோல்வியிலே முடிந்துள்ளதுடன், இலங்கையிலிருந்து எதுவிதமான உதவிகளும் எமக்குக் கிடைக்கவில்லை.

அதேநேரம், இவ்விடத்தில் மற்றும் ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். வன்னி அகதி முகாம்களிலுள்ள மாணவர்களுக்கு மாதிரிவினாத்தாள்கள் வழிகாட்டிக் குறிப்பேடுகள் தயாரித்துத் தரக்கூடிய உதவியைக் கோரி (பண உதவியல்ல) மொத்தம் 1782 பாடசாலைகளுக்கு தனிப்பட்ட முறையில் கடிதங்களை அனுப்பினோம்;.

அக்கடிதத்தின் பிரதியொன்றை கீழே தங்கள் தெளிவுக்காக இணைத்துள்ளோம். அக்கடிதப் பிரதியை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 415 பாடசாலைகளுக்கும் இலங்கையில் சகல மாவட்டங்களைச் சேர்த்த தமிழ் பாடசாலைகளுக்கும், கண்டியிலும் கொழும்பிலும் பிரபல்யம் மிக்க தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைத்தோம். ஆனால்,  வேதனைக்குரிய விடயம். ஒரு பாடசாலையிலிருந்தாவது அல்லது தனியார் கல்வி நிறுவன ஆசிரியரிடமிருந்தாவது எமக்கு ஒரு பதிலாவது வரவில்லை. இச்சம்பவத்தை வைத்து நோக்கும்போது வன்னி முகாம்களிலுள்ள மாணவர்களின் கல்வி நிலை தொடர்பாக இவர்கள் கதைப்பதன் அர்த்தத்தை எம்மால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. இந்நிலையில் சில முஸ்லிம் பாடசாலை ஆசிரியர்கள் வினாப்பத்திரங்கள் தயாரிப்பதில் எமக்கு ஒத்துழைப்பினை வழங்கினார்கள். அதே போல வத்தேகம கல்விப்பணிப்பாளர் திரு சிவநாதன் அவர்களும்,  எமக்கு ஆலோசணைகளையும் ஒத்துழைப்பையும் வழங்கினார்.  இவ்விடத்தில் இவர்களுக்கு எமது விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

விமர்சனங்கள் மேற்கொள்வது இலகு. பத்திரிகை அறிக்கைகள் வெளியிடுவது இலகு. ஆனால்,  ஆக்கபூர்வமான ஒரு செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது அதற்கு மானசீகமான முறையில் ஒத்துழைப்பு வழங்குவது மிகக் குறைவு என்பதை எமது இம்முயற்சிக்கான அனுபவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. எனவே,  ஒரு உண்மையான இலக்கை நோக்கி திட்டம் தீட்டுவதும் அதை நடைமுறைப்படுத்த முனைவதும் அர்த்தமற்ற ஒரு விடயம் என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. எவ்வாறாயினும் கூட, தரம் 05 மாணவர்களுக்கு சுமார் 15ஆயிரம் பவுண் பெறுமதிமிக்க செயற்றிட்டத்தை வெற்றிகரமாக நடத்திமுடித்தோம். ஆனால் க.பொ.த. சாதாரணதர மாணவர்களுக்கு சுமார் 2500 பவுண் பெறுமதியான உதவிகளை அதாவது ஒரு மாணவனுக்கு சுமார் 39 பென்ஸ்  பெறுமதியான உதவிகளை மாத்திரமே வழங்கக்கூடியதாக இருந்தது.

இதனையொரு தோல்வியாக நாம் கருதவில்லை. நாம் அகதி மாணவர்களுக்கு உதவ முழுமையாக முயற்சிகள் செய்தோம். எமது முயற்சியால் அம்மாணவர்களுக்கு 5 மாதிரிவினாத்தாள்கள் அனுப்புவதை இச்சந்தர்ப்பத்தில் பெருமையாகக் கொள்கின்றோம்.

மீண்டும் இவ்விடத்தில் நாம் ஞாபகமூட்ட விரும்புகின்றோம். 2009ம் ஆண்டு ஆகஸ்ட் புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு எம்மால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாதிரிவினாத்தாள்கள் வழிகாட்டிப் புத்தகங்கள், கணக்கறிக்கைகள் போன்ற விபரங்களை தேசம்நெற் வாசகர்கள் பெறவிரும்பினால் பின்வரும் மின்னஞ்சல் முகவரிகளுடன்  தொடர்புகொள்ளுமிடத்து பி.டி.எப். வடிவில் 126 பக்கங்கள் கொண்ட அவ்வறிக்கையை அனுப்பி வைப்போம்.

த ஜெயபாலன் : 0044 208 279 0354 அல்லது 0044 7800 596 786 அல்லது thesam97@hotmail.com
ரி சோதிலிங்கம் : 0044 7846 322 369 அல்லது sothi@btinternet.com
இலங்கையில்:
பி எம் புன்னியாமின் : 0094 812 493 892 அல்லது pmpuniyameen@yahoo.com

._._._._._. 

வன்னி நிவாரண முகாம் மாணவர்களுக்கு நாம் வழங்கிய அதே மாதிரி வினாத்தாள்களையும்,  வழிகாட்டிக் குறிப்பேடுகளையுமே சிந்தனை வட்டம்  அகில இலங்கை ரீதியிலும் விநியோகித்தது. அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் முதலாம் இடத்தைப் பெற்ற மாணவன் லோ. ஸ்ரீகர்சன் அவர்களும் சிந்தனை வட்ட மாதிரி வினாத்தாள்களையும், வழிகாட்டிப் புத்தகங்களையும் படித்தவரே. நிவாரணக் கிராம  மாணவர்களின் பரீட்சை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை. வெளிவந்ததும் அவற்றை பூரணமாக தங்களுக்குத் தருவோம்.

jafna-1.jpg

jafna.jpg

._._._._._. 

கடிதப்பிரதி- இணைப்பு

அதிபர் அவர்கட்கு,

வவுனியா நலன்புரிநிலையங்களில்
க.பொத. சாதாரண தரத்தில் கல்வி பயிலும்
6290 மாணவர்களின் கல்வி அபிவிருத்தி
நிவாரண நடவடிக்கைகளில்
தங்களையும் இணைத்துக் கொள்ளல்.

2009ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்காக வேண்டி சுமார் 28இலட்சம் ரூபாய் பெறுமதிமிக்க 04 வழிகாட்டி நூல்களையும் 30 மாதிரிவினாத்தாள்களையும் தனித்தனியாக 4872 மாணவர்களுக்கு வழங்கி நலன்புரிநிலைய ஆசிரியர்கள் துணையுடன் அம்மாணவர்களை வழிகாட்டி சிறந்த முறையில் பரீட்சையை எதிர்நோக்க எமது சிந்தனைவட்டம் வழியமைத்துக் கொடுத்ததை தங்களது மேலான கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

அதேபோல 2009 டிசம்பர் மாதத்தில் க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக வேண்டியும் சுமார் 56 இலட்சம் ரூபாய் நிதித்திட்டத்தின் கீழ் கல்வி நிவாரண செயற்றிட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடக்கிலுள்ள நலன்புரிநிலையங்களில் மொத்தம் 6290 மாணவர்கள் க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இம்மாணவர்கள் தற்போது கீழ்க்காணப்படும் நிவாரண முகாம்களில் பின்வரும் எண்ணிக்கையில் உள்ளனர்.

வலயம் 0 –     535 மாணவர்கள்
வலயம் 01 –   1261 மாணவர்கள்
வலயம் 02 –   1401 மாணவர்கள்
வலயம் 03 –     912 மாணவர்கள்
வலயம் 04 –     907 மாணவர்கள்
வலயம் 05 –       99 மாணவர்கள்
சுமதிபுரம் நிவாரண முகாம்    156 மாணவர்கள்
வீரபுரம் நிவாரண முகாம்    116 மாணவர்கள்
தர்மபுரம் நிவாரண முகாம்    136 மாணவர்கள்
IDP பாடசாலைகள்   583 மாணவர்கள்
புல்மோட்டை நலன்புரிநிலையம்  184 மாணவர்கள்
மொத்தம்    6290 மாணவர்கள்

பல்கலைக்கழக மட்டத்திலும் சில புத்திஜீகளுடன் இணைந்து நாம் தயாரித்த செயற்றிட்ட அறிக்கையின்படி மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு மாணவர்களுக்கும் 05 பிரதான பாடங்களை மையமாகவும் கொண்டு, ஒவ்வொரு பாடத்திற்கும் 06 மாதிரிவினாத்தாள்களையும்,  பாட அலகு ரீதியான 42 வழிகாட்டிக் கையேடுகளையும் வழங்க முடிவெடுத்துள்ளோம்.

பிரதானமாக புதிய பாடத்திட்டத்திற்கமைய கணிதம், விஞ்ஞானம்,  வரலாறு, தமிழ் மொழியும் இலக்கியமும்,  ஆங்கிலம் ஆகிய 05 பாடங்களுக்கும் இத்தகைய மாதிரிவினாத்தாள்களையும்,  கையேடுகளையும் வழங்க உத்தேசித்துள்ளோம்.

தங்கள் கல்லூரியில் அனுபவமிக்க ஆசிரியர்களின் துணையுடன் அவர்களால் தயாரிக்கப்பட்ட அல்லது புதிதாக தயாரித்துதர விருப்பமுள்ள மாதிரிவினாத்தாள்கள் –  குறிப்பிட்ட 05 பாடங்களுக்குமான கையேடுகள் அல்லது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முக்கியமான குறிப்புகள் காணப்படின் அவற்றின் புகைப்படப் பிரதிகள் ஆகியவற்றை எமக்கு அனுப்பி வைத்தால் எமது கல்வி அபிவிருத்தி சபையின் வழிகாட்டலுடன் அவற்றை வடிவமைத்து நலன்புரிநிலைய மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்ய முடியும்.

எனவே,  சுமார் 06 மாதங்களுக்கு மேல் பாடசாலை மண்ணையே மிதிக்காத நிலையில் சகலதையும் இழந்து, மிகவும் சிரமங்களின் மத்தியில் கல்வியைக் கற்றுவரும் அகதிமுகாம் மாணவர்களுக்கு இந்த சிறு உதவியை செய்யுமிடத்து அவர்களுக்கான மாபெரும் உதவியாக இருக்கலாம்.

எனவே,  இது விடயமாக கரிசனைக் காட்டி தங்கள் கல்லூரியில் திறமை வாய்ந்த,  அனுபவமிக்க ஆசிரியர்களினூடாக தயாரிக்கப்பட்ட மாதிரிவினாத்தாள்கள்,  பாட அலகு ரீதியான கையேடுகள் இருப்பின் இம்மாத இறுதிக்குள் அனுப்பி வைப்பீர்களாயின் பேருதவியாக இருக்கும். தேர்ந்தெடுக்கப்படும் வினாத்தாள்களிலும், கையேடுகளிலும் உரிய ஆசிரியர் பெயர்,  பாடசாலை முகவரி ஆகியவற்றையும் பிரசரித்தே வழங்குவோம்.

சேவைநல நோக்கில் – பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்துக்காக உதவும் இத்திட்டத்திற்கு மேற்குறித்த வகையில் தங்கள் பங்களிப்பை வழங்குவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

மாதிரிவினாத்தாள்களையும், கையேடுகளையும் அனுப்ப வேண்டிய முகவரி:

KALAPOOSHANAM  P.M. PUNIYAMEEN
14, UDATALAWINNA  MADIGE,
UDATALAWINNA – 20802

மிக்கநன்றி
தங்கள்

கையொப்பம் -கலாபூசணம் புன்னியாமீன்
(சிந்தனைவட்டம்)
02.09.2009

மேலதிக வாசிப்புக்கு
http://thesamnet.co.uk/?p=17063