அறிக்கைப் புரட்சி நடாத்திக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சம்பந்தமான பல செய்திகள் அண்மையில் வெளிவந்த போதும் குறிப்பாக இரு வேறு செய்திகள் விவாதத்தை ஏற்படுத்தி இருந்தன.
1) த. தே கூட்டமைப்பின் வேட்பாளரும் வவுனியா நகரசபைத் தலைவருமான திரு நாதன் வவுனியா நகரை சுத்தம் செய்யும் தொழிலாளரை வெளியில போங்கடா சக்கிலிய நாயளே என்று திட்டியதான செய்தி தேசம் நெற்றில் வெளியாகி இருந்தது.
”வெளியே போங்கடா சக்கிளிய நாயலே” வவுனியா நகரசபைத் தலைவரின் கூற்றும் இன்னமும் வீச்சுடன் இருக்கும் சாதிய மனோநிலையும்
த தே கூட்டமைப்பு இது சம்பந்தமான எந்தக் கருத்தையும் கூறாது மௌனம் காத்தது.
அறிஞர்களற்ற ஜாதியை வைத்து மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் கட்சி த.தே.கூட்டமைப்பு – பா உ பியசேன
2) 18வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக த தே கூட்டமைப்பின் பா உறுப்பினர் பியசேன வாக்களித்தார் என்ற செய்தி வெளிவந்தவுடனேயே பியசேன மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக பிரேமச்சந்திரன் அறிக்கை விட்டார்.
முதலாவது செய்தி பற்றி அறிவதற்காக வவுனியாவிலுள்ள சில நண்பர்களுடன் தொடர்பு கொண்டேன். யார் இந்த நாதன் என்று அறிய வேண்டும் என்பது எனது ஆவல்.
இவரது சொந்த இடம் யாழ்ப்பாணம். 1975ம் ஆண்டு காலப்பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தராக வவுனியா வந்துள்ளார். பின் பதவி உயர்வு பெற்று பொலிஸ் அதிகாரியாக இருந்துள்ளார். இந்த பொறுப்பான பதவியில் இருந்தபோது சில குடும்பங்களின் அமைதி குலைந்து போனதற்கு காரணமானவராக இருந்துள்ளார்.
போலிஸ் தலைமை இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தற்காலிகமாக வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
தென் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு செல்ல மறுத்து தொழிலை இழந்துள்ளார்.
1977ம் ஆண்டு தமிழர்கள் மீது இனப்படுகொலை நடந்தபோது வவுனியா நகரம் அரச படைகளால் எரியூட்டப்பட்டது. அதன்பின் அன்றைய அரசால் உருவாக்கப்பட்ட சன்சோனிக் கமிசனில் ஓர் முக்கியமான சாட்சியாக இருந்துள்ளார்.
இவர் அன்று தொட்டு தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர். TNA மும்மூர்திகளில் ஒருவரான சேனாதிராஜாவுக்கு மிக நெருங்கிய நண்பர். இதுதான் இவரது அரசியல் பின்புலம்.
பின் வவுனியா நகரசபை பற்றி வினவியபோது, புளட் வவனியா நகரசபையை கட்டுப்படுத்திய காலப்பகுதியில் அமைப்பின் ஒரு பகுதியினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டபோதும் புளட்டில் சிலர் குறிப்பாக லிங்கநாதன் போன்றோர் வவுனியா நகரின் அபிவிருத்திக்காக அரிய பாடுபட்டார்கள் என்றும் அவர்களால் திருத்தி அமைக்கப்பட்ட புங்காவும் நூல் நிலையமும் முன் உதாரணங்கள் என்றார்கள்.
நாதன் பதவியேற்ற பின்பு குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு எந்த நகர்புற அபிவிருத்திகளும் நடக்கவில்லை என்றும் சில குளறுபடிகள் நடந்துள்ளதாகவும் தெரிவித்தார்கள்.
அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் வவுனியா MP யாக இருந்த காலத்தைப்போல் இப்போது வவுனியா நகரசபை இருப்பதாக வேறுசிலர் கூறுகிறார்கள்.
வவுனியாவுக்கு இவர்களால் எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்றும் தவறுகள் நடக்கின்ற போது வவுனியாவினுடைய பெயர் முன் நிறுத்தப்பட்டு அத்தனை விமர்சனங்களும் பழிகளும் அவதூறுகளும் வவனியா மீது போய்ச் சேருவதாக இன்னுமொரு சாரார் குற்றம் சாட்டுகிறார்கள்.
இவ்வளவு பாரதூரமான குற்றச்சாட்டுகள் இவர்மீது வந்தும் TNA இதுவரை மௌனம் காப்பது ஏன்?
எந்த செய்தி வந்தாலும் உடனடியாக இரண்டு மூன்று தலைமுறை பின் சென்று ஆய்வு செய்யும் தேசம்நெற் ஆசிரியர்குழு இந்த விடயத்தில் அசட்டையாக இருந்ததின் காரணம் என்னவோ?
மேலும் இரண்டாவது செய்தியின் பிண்ணணியில் பியசேன கூறும் குற்றச்சாட்டுகளில் ஒன்று இந்த TNA MPக்கள் எவராவது இதுவரை அம்பாறை மாவட்டத்திற்கு வந்து மக்களின் குறைகளை கேட்டறியவில்லை என்கிறார்.
கடந்த ஆண்டு மே மாதம் மனிதப் படுகொலை நடந்த பின்பு உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் இருந்து மக்கள் தம்மாலான உதவிகளை அந்த மக்களுக்கு வழங்கி வந்த வேளையிலும் கூப்பிடு தொலைவில் நிற்கதியாக நின்ற வன்னி மக்களை ஏறெடுத்தும் பார்க்காத இந்த TNA எவ்வாறு அம்பாறை மக்களின் குறைகளைத் தீர்க்கப் போகிறது?
“அரசு அனுமதி மறுக்கிறது அங்கே செல்வதற்கு” என்று அடிக்கடி அறிக்கை விட்டுக்கொண்டார்கள்
அண்மையில் இவர்கள் வன்னிக்குச் சென்று அந்த மக்களை பார்வையிட்ட புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்தன. இந்திய அரசியல்வாதிகள் போல் நெற்றியிலே திருநீறும் மடிப்புக் குலையாத வெள்ளை உடையுமாக சென்று வந்துள்ளார்கள்.
எதை அந்த மக்களுக்கு கொடுத்தாலும் உடனே படம் எடுத்து பத்திரிகைகளுக்கு கொடுத்து விடுகிறார்கள்.
இப்படிப்பட்டவர்களை அம்பாறைக்கு வந்து மக்களின் குறைகளைக் காணுங்கள் என்று கேட்கும் MP பியசேனக்கு தமிழரசுக் கட்சியின் நயவஞ்சக அரசியலைப் புரிந்துகொள்ளும் வல்லமை இல்லை என்றே தெரிகிறது.
‘அண்ணன் எப்போ சாவான் திண்ணையைப் பிடிக்கலாம்’ என்று காத்துக்கிடக்கும் பிரேமச்சந்திரனுக்கு, பியசேனக்கு எதிராக அறிக்கை விட காட்டிய ஆர்வமும் அவசரமும் வவுனியா நகரத் தொழிலாளர்களை ‘வெளியிலே போங்கடா சக்கிலிய நாய்களே’ என்ற நாதனுக்கு எதிராக அறிக்கைவிடவோ அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவோ முடியவில்லை. இன்றுவரை மௌனம் காக்கும் அந்த நயவஞ்சக தமிழ் அரசியலின் வயது அரை நூற்றாண்டைத் தாண்டிவிட்டது.
அண்மையில் தமிழ்தேசிய ஆவணச் சுவடிகளில் பதிவாகியுள்ள 1984ம் ஆண்டு வெளியான புதியபாதை பத்திரிகையில் ஓர் துணுக்கைப் படித்தேன். தேசம்நெற் வாசகர்களும் MPபியசேனவும் படிக்கவேண்டும் என்பதற்காக இதைத் தருகிறேன்.
(நன்றி tamilarangam.net)
மேலே கொடுக்கப்பட்டுள்ள புதியபாதையின் செய்தியைப் படித்தீர்களானால் அவர்களின் ‘மக்கள்’ யார் என்பது புரியும்.
1977 ம் ஆண்டு தேர்தல் முடிந்ததும் திரு தொண்டமான் இப்படிப்பட்ட காரணங்களைக் கூறியே அன்று TULFல் இருந்து பிரிந்து JR அரசுடன் சேர்ந்து கொண்டார். அன்றய தொண்டமானிலிருந்து இன்றய பியசேன வரை ஒரே குற்றச்சாட்டு
ஈழத்தமிழரின் அடிப்படைச் சிந்தனையில் மாற்றம் ஏற்படாதவரை அவர்களின் அரசியலில் என்றுமே நேர்மை இருக்கப்போவதில்லை.
முப்படைகளையும் கொண்டிருந்த விடுதலைப் புலிகளை முள்ளிவாய்க்காலில் முடித்தது அவர்களின் நயவஞ்சக அரசியலே என்பதை தமிழ் அறியாவிட்டாலும் உலகறியும்.
விதி என்பது பொதுவானது. இதற்கென்றோ இவர்களுக்கென்றோ உருவாவதல்ல. இந்தப் பொது விதிக்குள் சடப்பொருள் மட்டுமல்ல சாதாரண வாழ்வும் அகப்படும் என்பதை இந்த TNA இன்னுமா உணரவில்லை?
வவுனியா நகரசபை தொடர்பான முன்னைய பதிவுகள்:
ததேகூ கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா நகரசபை தொடர்ந்தும் ஸ்தம்பிதம் – தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்முரண்பாடுகளே காரணமா? : விஸ்வா & த ஜெயபாலன்
”ஈழம்(தமிழ்) என்ற அடையாளத்தை இல்லாமல் பண்ணவே முயற்சிக்கிறார்கள். ” ஜி ரீ லிங்கநாதன் வவுனியா நகரசபை உறுப்பினர். – நேர்காணல் : ரி சோதிலிங்கம்
”வெளியே போங்கடா சக்கிளிய நாயலே” வவுனியா நகரசபைத் தலைவரின் கூற்றும் இன்னமும் வீச்சுடன் இருக்கும் சாதிய மனோநிலையும்
ரிஎன்ஏ யின் வவுனியா நகரசபையின் தலைமை மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டு – எட்டு நகரசபை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அறிக்கை