03

03

குற்றாலம் வெங்கடாச்சலம் நாகராஜன் – நீங்காத நினைவுகள் : இணுவையூர் நவேந்திரன்

Kutralam_Nagarajanமிகக் கனத்த மனத்துடன் இக்கடினமான செய்தியை எழுதும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன். குற்றாலம் என்றவுடன் எமக்கெல்லாம் மனதில் குதித்தோடும் எண்ணம் – இந்தியாவில் உள்ள குளுமையான இடமான குற்றாலமும் அதில் சில்லென்று ஓடும் அருவியும் மலையும் அதன் சூழலும். ஆனால் அதே குளுமையுடனும் அதே பெயரில் வாஞ்சையுடனும் எம்மிடையே ஒரு மாமனிதன் நேற்றுவரை நடமாடினான். ஆனால் அம்மாமனிதன் இன்று எம்முடன் இல்லை. (தோற்றம் 16 05 1966 – மறைவு 28 09 2010)

நாட்டியப்பாடலில் “இமயம்” என்று அழைக்கப்படக்கூடிய குற்றாலம் வெங்கடாச்சலம் நாகராஜன் செவ்வாய் (28 09 10) 6.30 மாலையில் தனது இறுதிமூச்சை நிறுத்திக் கொண்டார்.

தன்னிகரற்ற ஒரு பாடகன் பாடலாசிரியன் இசையமைப்பாளன். இம்மூன்றும் ஒருசேர அமைவது மிக அபூர்வம். ஆனால் இவை அனைத்தின் சொந்தக்காரன் கற்றாலம் நாகராஜன். இவரது பாடலில் மயங்காதவரே இலர். சிறுவர்களில் இருந்து முதியோர்வரை இவரது இசைப் பிரியர்கள்.

ஒருமுறை பழகினால் காந்தம் மாதிரி இழுக்கும் அதீத மனோபாவம் இவரது உன்னத மனித குணத்தால் இவரது குறைகளை எல்வாம் மறந்து மீண்டும் மீண்டும் இவரை நாடி ஓடும் அகஅழகு கொண்டவர்.

1992ம் ஆண்டளவில் திரு கணேசனால் லண்டனிற்கு அறிமுகம் செய்யப்பட்டார். நுhற்றுக்கணக்கான ஏன் ஆயிரக்கணக்கான என்றுகூடச் சொல்லக்கூடிய நாட்டிய அரங்கேற்றங்களில் பாடிய முடிசூடா மன்னன். பாடல் வடிவமைப்பதிலும் இசையமைப்பதிலும் ஈடு இணையற்ற தனித்திறன் கொண்டவர்.

Kutralam_Nagarajanராஜாவின் “குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா” என்ற பாடலுக்கமைய யாரையும் குறை கூற மாட்டார். எல்லோரிலும் ஒரு நிறைவுகாணும் ஒரு உன்னத மனிதப்பிறவி. இவரது குழந்தை உள்ளத்தால் யாராலும் வெறுக்கப்பட முடியாதவர்.

இசைப்பரம்பரையில் தோன்றிய காரணத்தால் சிறுவயதில் இருந்தே இயற்கைஞானம் கொண்டவர். ஆனாலும் 20 வயதுவரை சங்கீதத்தை முறையாகக் கற்கும் வாய்ப்பு இருக்கவில்லை. பின்னர் சங்கீதமேதை வி ஆர் கிருஷ்ணன் என்பவரிடம் இசையை பயிலும் அரிய வாய்ப்பைப் பெற்றார்

இவரது குரு வி ஆர் கிருஷ்ணன் தியாகராஜா சுவாமிகள் இசைப்பரம்பரையில் வந்த செம்மங்குடி சீனிவாச ஜயர் அவர்களின் மாணவர் எனடபது குறிப்பிடத்தக்கது. காலம் தாழ்த்தி 20 வயதில் இசையைப் பயின்றாலும் மிகக் குறுகிய காலத்திலேயே நாட்டியப் பாடலுக்கு குற்றாலம் நாகராஜன் என முத்திரை பதித்து தனக்கென்று ஒரு அசையா இடத்தை சென்னை மக்களிடம் பிடித்துக் கொண்டார்.

இவரது இசைத்திறன்கண்டு தனது சரித்திரத்தில் முதன்முறையாக “சிறந்த பரதநாட்டிய பாடகன் ” என்று பட்டமளித்து Music Academy madras கெளரவித்தது.

இசையின் உச்சத்தைத் தொட்ட இவர் நினைத்திருந்தால் பணத்தின் உச்சத்தையும் தொட்டிருக்கலாம். மூன்று தலைமுறைக்குத் தேவையான சொத்தை இவரால் தேடியிருக்க முடியும். ஆனால் ஆயிரக்கணக்கான இளம் இசைப்பயிர்களை உருவாக்குவதில் ஆர்வம்காட்டிய இவர் பணத்தின் பக்கம் கவனம் செலுத்தாதது இவரது மகனும் மனைவியும் செய்த துர்ப்பாக்கியமே.

வல்லவன் வகுத்ததே வாய்க்கால் என்பது இயற்கை நியதி. இருப்பினும் காலத்திற்குக் காலம் நல்லவர்களும் தோன்றத்தான் செய்கிறார்கள். வல்லவர்களை காலம் மறந்துவிடும் வரலாறு இருக்காது. ஆனால் நல்லவர்களிற்கு வரலாறு உண்டு. இவர்களை காலம் மறக்காது.

குற்றாலம் நாகராஜனின் இசைச்சேவை சாதனை மிகப்பெரியது. அவரது வெற்றிடம் இலகுவில் நிரப்ப முடியாதது.

அவரது பிரிவால் வாடும் மகன் சங்கீத்திற்கும் துணைவி கோமதிக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

இவரது பூதவுடல் ஈமக்கிரியைகளுக்காக சென்னைக்கு அனுப்பப்பட இருக்கிறது. லண்டனில் இறுதி மரியாதை இன்று (03Oct 2010) காலை இடம்பெற்றது.

இணுவையூர் பதஞ்சலி நவேந்திரன்:( 07916 134 976 – pandkassociates@aol.com)

குறைந்தபட்ச புரிந்துணர்வு செயலாக்க குழுவின் முன்மொழிவுகளும் பொதுக்கூட்டத்தின் உடன்பாடுகளும்

யூன் 21 2009ல் ‘அடுத்த நகர்வை நோக்கிய பன்மைத்துவ அரசியல் கலந்துரையாடல் : தேசம்‘ என்ற தலைப்பிலான சந்திப்பு ஒன்றை தேசம்நெற் ஏற்பாடு செய்திருந்தது. இச்சந்திப்பில் தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலம் பற்றிய உரையாடலில் குறைந்தபட்ச எல்லை வரையறை செய்யப்பட்டு அது புரிந்துணர்வுடன் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஓகஸ்ட் 2 2009ல் மற்றுமொரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஓகஸ்ட் 2 2009ல் ‘தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’என்ற தலைப்பிலான ஐந்து மணி நேரம் வரை நீடித்த இக்கலந்தரையாடலில் பின்வரும் எட்டு விடயங்களில் குறைந்தபட்ச புரிந்தணர்வு ஏற்பட வேண்டும் என உடன்பாடு காணப்பட்டது.

1. முகாம்களில் உள்ள மக்களது மீள்குடியேற்றம்
2. இராணுவ மயமாக்கலை அகற்றுவது
3. மனித உரிமைகளை மேம்படுத்துவது
4. தமிழ் மக்களின் அரசியலை ஜனநாயகப்படுத்துவது
5. வடக்கு – கிழக்கு முஸ்லீம் மக்கள்
6. குடியேற்றம் – வளங்கலும் குடிபரம்பலும்
7. மனிதவள விருத்தி – அபிவிருத்தி
8. அரசியல் தீர்வு

இவ்விடயங்கள் தொடர்பான வரையறைகளை வகுப்பதற்கு செயற்குழு உருவாக்கப்பட்டது. அவர்கள் ஒவ்வொரு விடயத்தையும் தனித் தனியாக 15 சந்திப்புக்களில் ஆராய்ந்து அதன் தொகுப்பாக இவ்வறிக்கையைத் தயாரித்து உள்ளனர். இதனை  8 2010 இல் இடம்பெற்ற பொதுச் சந்திப்பில் – MEMOMORANDUM OF UNDERSTANDING AMONG TAMIL DIASPORA IN LONDON : Victor Cherubim – அங்கு கூடியோர் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர். அவர்களின் கையொப்பங்கள் பிடிஎப் அறிக்கையில் இணைக்கப்பட்டு உள்ளது. அறிக்கையின் முழுமை இங்கு பதிவிடப்பட்டு உள்ளது.

இதன் பிரதிகள் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

மேலே குறிப்பிட்ட எட்டு விடயங்கள் தொடர்பான விரிவான கட்டுரைகள் ஒரு நூலாக வெளியிடப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
._._._._._.

புரிந்துணர்வு என்பது ஜனநாயகம் பற்றியது. ஆனால் அது குறைந்த பட்சமாக அமைய வேண்டி இருப்பது அதனுள் ஈடுபடுபவர்களிடையே அடிப்படைக் கருத்து வேறுபாடுகள் உள்ளன என்பதை வெளிப்படுத்துகிறது. சகல மக்களது முன்னேற்றத்தை வேண்டி, கூடியளவு மக்களை ஒரு பொது வேலைத் திட்டத்தில் இணைத்துக் கொள்வதே குறைந்தபட்ச புரிந்துணர்வை ஏற்படுத்த முனைவதின் பிரதான நோக்கமாகும். அவ்வாறான பொது வேலைத் திட்டத்தினை அமைப்பதாயின், அதன் முதற் கட்டமாக குறைந்தபட்ச புரிந்துணர்வின் அடிப்படைக் கொள்கைகள், விளக்கங்கள் என்பவற்றை ஐயங்கள் இல்லாது உருவாக்க வேண்டும்.

குறைந்தபட்ச புரிந்துணர்வு என்ற பார்வையில் இலங்கையின் அரசியலில் அதற்கென ஒரு சரித்திரம் உள்ளது. தேசியவாதிகளிடையே இன ரீதியான உடன்பாடு உருவாகி உள்ளதையும், அது சிங்கள மக்களிடையே மொழி – மத உணர்வுகளில் எழும் பேரினவாதமாகவும், தமிழ் மக்களிடையே அதன் எதிர்ப் – பிரதிவாதமான தமிழ்த் தேசியவாதமாக உருவாகி உள்ளது.
  
இந்த நிலைப்பாடுகளையும் கடந்து, இலங்கைத் தேசியத்திலும், வர்க்க நிலைப்பாடுகளிலும் தளம் கொண்டு இலங்கைவாழ் மக்கள் அனைவரையும் உட்படுத்தும் குறைந்தபட்ச வேலைத் திட்டங்களுக்கான தேடல்கள் எப்போதும் இருந்து வந்துள்ளன. இவை பொதுவாக இடதுசாரி அரசியல் அமைப்புகளால் சமத்துவம் – சமதர்மம் என்ற சித்தாந்த வழிமுறைகளுடன் முன்வைக்கப்பட்டன. ஆனால் இம் முயற்சிகளும் அமைப்புகளும், காலப் போக்கில் சிங்களப் பேரினவாதத்தால் பலவீனப்படுத்தப்பட்டது. இன ரீதியில் எஞ்சியோர் தமிழ் தேசியவாதத்தின் முதன்மைப்படுத்தலை ஏற்றுக்கொள்ள நேரிட்டது.  

இதன் பின்னர் எழுபதுகளின் நடுப்பகுதிகளில் இருந்து இதுவரைகாலமும் தமிழீழக் கோரிக்கையும் தமிழீழப் போரும் ஒருமுகப்பட்டது. அதன் ஏகப் பிரதிநிதிகளாக தமிழீழ விடுதலைப் புலிகள் தம்மை பலவந்தமாக நியமித்துக் கொண்டனர். அதற்கான உக்கிரமான நான்கு ஈழப் போர்களையும் அவற்றின் விளைவுகளையும் இலங்கையின் சரித்திரம் குறித்துக் கொண்டுள்ளது.

வைகாசி 2009ல் உலகநாடுகளின் உதவிகளுடன் இப்போரினை இலங்கை அரசு முடிவுக்கு கொண்டு வந்தது. அதனால் ஏற்பட்ட பலத்த அழிவுகளுக்கும் பாதிப்புக்கும் உள்ளாகிய தமிழ் மக்கள் தம்சார்பில் எடுக்கப்பட்ட இன, சமுதாய, அரசியல் நிலைப்பாடுகளை – பொருளாதார உறவுகளை அனுபவரீதியில் மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.

குறைந்தபட்ச புரிந்துணர்வு என்ற பெயரிலான எந்த முயற்சியும் அரசியல் – சரித்திர ரீதியிலும் ஆய்வு செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும். பாராளுமன்ற ஜனநாயகமுள்ள இலங்கையில் அரசியற் கட்சிகளே பெரும்பாலும் மக்களின் அபிலாசைகளை பிரதிநிதித்துவம் செய்கின்றன. அதனால் குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டுவதற்கு அக்கட்சிகளிடையே இணக்கங்களை ஏற்படுத்துவது அடிப்படையானது. இவ்வாறான முயற்சிகள் தமிழ் கட்சிகளிடையே இடம்பெறுவது வரவேற்கப்பட வேண்டியது அத்துடன் மக்களையும் அவர்களது சமுதாய அமைப்புகளையும் இந்த குறைந்த பட்ச புரிந்துணர்விற்குள் உள்ளடக்க வேண்டியதும் அவசியமானது.

அக்குறைந்தபட்ச புரிந்துணர்வு அரசியல் – பொருளாதாரம் மக்கள் – இனங்கள் என்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைப்பாடுகளில் இருந்து பெறப்பட வேண்டும். அதற்கு இலங்கை பிரித்தானியாவிடம் இருந்து சாசன அடிப்படையில் காலனித்துவ சுதந்திரம் பெற்றதில் இருந்துள்ள சரித்திரத்தை ஆராய வேண்டும். இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னான மூன்றில் இரண்டு பகுதி காலம் 1) தமிழ் மக்கள் இன ரீதியிலும், 2) சிங்கள மக்கள் வர்க்க ரீதியிலும், அரசியல் -பொருளாதார ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நடத்திய ஆயுதக் கிளர்ச்சிகள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். இவ்வாறான அடிப்படையில் எட்டப்படும் புரிந்துணர்வு பூரணமான மக்கள் வளர்ச்சியைத் தருவதற்கும் நடைமுறைச் சாத்தியமானதாய் அமைவதற்கும் 1) இலங்கை, 2) பிராந்தியம், 3) சர்வதேசம் என்ற நிலைப்பாடுகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கடந்த முப்பது வருட ஒடுக்கு முறைகள், அவஸ்தைகளுள் இருந்து வெளிவர எத்தனிக்கும் தமிழ் மக்கள் தனித்து நின்று பூரண அபிவிருத்தியை, வளர்ச்சியை கண்டுவிடமுடியாது, ஆகவே அயற் சமூகங்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்த வேண்டும்.

எனவே புரிந்துணர்வு முயற்சிகளுக்கு அரசியல் – பொருளாதார வடிவங்கள் தந்து, அவற்றிடையேயான தொடர்புகளை ஏற்படுத்த முயல வேண்டும். அவை இன, மத, பிரதேச பிரதிபலிப்புகளாக இல்லாது அனைவரினதும் அபிலாசைகளாக உருவாகிட ஒத்தாசையாக இருக்க வேண்டியது குறைந்தபட்ச புரிந்துணர்வை ஏற்படுத்த முன்வருவோர்களது பணிகளாகும்.  

அதேவேளை இலங்கையின் இன, சமூக – பொருளாதார, சமுதாயப் பிரச்சனைகளை தனித்தனியாகவோ அல்லது ஒரே தடவையிலாகவோ அணுகுவது? இவ் அணுகுமுறையில் எவை தீர்வுக்காக முதன்மைப்படுத்தப்பட வேண்டும்? எவ்வாறான நிலைப்பாடுகள் இவற்றிடையே பொதுத் தளத்தை உருவாக்க உதவும்? என்பவை பற்றிய முடிவுகளும் இங்கே அவசியம்.

இவ்வாறான பின்னணியில் தேசம் ஆசிரியர்கள் த. ஜெயபாலன், த. சோதிலிங்கம் மற்றும் சு.வசந்தி, ரவி சுந்தரலிங்கம் ஆகியோரது ஆனி 03, 2009 சந்திப்பின்போது குறைந்தபட்ச புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கான அவசியத்தை ஊர்ஜிதம் செய்வதற்கான பொதுக்கூட்டம் ஒன்று தேவை என்ற முடிவு ஏற்பட்டது. அதன்படி லண்டன், லேய்ற்றன்ஸ்ரோனில் ஆனி 21, 2009 தேசம் இணையத்தளத்தின் முக்கிய பங்குடன் ஒரு பொதுக்கூட்டம் நடாத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆவணி 02, 2009 அதே இடத்தில் இம்முயற்சியை முன்னெடுப்பதற்கான மற்றுமொரு பொதுக்கூட்டம் கூட்டப்பட்டது.

அதன் முடிவுகளாக
(1) இலங்கையில் இடம்பெறும் சர்ச்சைகளின் முக்கிய விடயங்களின் தேர்வும்
(2) அவைபற்றிய விளக்கங்களை ஆய்வு வடிவத்தில் தருவதற்கான தனிநபர்களின் பட்டியலும்
(3) அந்த தனிமனிதர்களே ஆவணி 02 புரிந்துணர்வு குழுவின் செயற்குழுவாக இயங்கவும்
(4) ஆவணி 02 புரிந்துணர்வு குழுவின் இணைப்பாளர்கள் த ஜெயபாலன், த சோதிலிங்கம், எஸ் பேரின்பநாதன் எனவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

கடந்த ஒருவருடகாலமாக தனது பல இருப்புகளின் போது ஆவணி 02, 2009 புரிந்துணர்வுக் கூட்டத்தால் தேர்வு செய்யப்பட்ட தலைப்புகளிலான ஆய்வுக் கட்டுரைகளை தம்மிடையே விவாதங்களினாலும் கலந்துரையாடல்களினாலும் பரிசீலனை செய்த அமைப்பின் செயற்குழு ஆவணி 08, 2010 லண்டன், வோல்தம்ஸ்ரோவில் தனது தேடலின் முடிவுகளாக அரசியல், பொருளாதாரம், மக்கள் வளம் என்ற வகையில் சில கருத்துக்களை மக்களது பரிசீலனைக்கும் பொது முடிவுக்கும் சமர்ப்பித்தது. அவர்களின் முடிவுகளை ஆவணி 02 குறைந்தபட்ச புரிந்துணர்வு குழுவின் மொழிவுகளாக அடிப்படை நிலைப்பாடுகள் (Principles) பிரகடனங்கள் (Proclamations), கோரிக்கைகளாக (Propositions) என வகைப்படுத்தி தரப்பட்டுள்ளது.

இவை ஆவணி 02, 2010ல் இடம்பெற்ற புரிந்துணர்வுக் குழுவின் பொதுக் கூட்டத்தில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

குறைந்தபட்ச புரிந்துணர்விற்கான முன்மொழிவுகள்

(1) அடிப்படை நிலைப்பாடுகள்
 
1. இலங்கையின் இனபபிரச்சனையால் உருவான உள்நாட்டுப் போர் இலங்கை அரசின் இராணுவத்தால் அடக்கப்பட்டுவிட்டாலும் அதற்கான இறுதித் தீர்வு அரசியல் வழியால் அமைவதாகும்.
 
2. இலங்கையின் சமூக – பொருளாதாரப் பிரச்சனைகளும் இனப்பிரச்சனைகளும் ஒரே தளத்தை கொண்டிருந்தாலும் அவையிரண்டும் வேறானவை. (ஒருதளமும், அதேவேளை இருமுகங்களும் கொண்டவை)
 
3. சர்வதேச சந்தைப்படுத்தலில் இலங்கை மக்களுக்கு சார்பான எதிரான சாராம்சங்களும், தமிழீழ விடுதலைப் புலிகளது மறைவும் இவ்விரு பிரச்சனைகளையும் பொதுமைப்படுத்திப் பார்க்கக் கூடிய, இனவரைவுகளைத் தாண்டிய குறைந்தபட்ச புரிந்துணர்வுகளை ஏற்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்களைத் தந்துள்ளன.
 
4. இச்சந்தர்ப்பம் பூரணமான ஜனநாயகம் ஏற்படுத்தும் பொது இணக்கங்களுடாக மேலெடுத்துச் செல்லக் கூடியவை.
 
5. பூரண ஜனநாயகம் (full democracy) என்பது மக்களது சமூக – சமுதாய உடமைகளையும் அவற்றின் பூரணமான வளர்ச்சியையும் நுகர்வுகளையும் எய்துவதற்கான பாரம்பரிய சொத்துகளையும் அவை சார்ந்த உரிமைகளையும் தருவது.
 
6. இவை அனைத்தையும் ஊர்ஜிதம் செய்யும் பன்முகத் தன்மைநாடாக இலங்கையை சகல மக்களும் ஏற்றுக் கொள்ளும் நிலமை அவசியம்.
 
(2) பிரகடனங்கள்
 
1. இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வு ஐக்கிய இலங்கைக்கு உள்ளேயே சாத்தியமாகும்.
 
2. இலங்கைவாழ் சகல தேசியச் சிறுபான்மை இனங்களின் உடமைப் பிரச்சனைகளின் தீர்வுக்கு அரசியல் அமைப்பினை மாற்றி அமைப்பது அவசியமானது.
 
3. மக்களின் பன்முக தேசியத் தன்மையை பிரதிபலிக்கும் வகையில் அரசியல் அதிகாரப் பரவலாக்கம் தரும் அலகுகள் கொண்டவையாக புதிய அரசியல் அமைப்பு இருக்க வேண்டும். 

4. வடக்கு கிழக்கு மாகாணங்களின் இஸ்லாமிய, சிங்கள சமுதாயங்களின் உடமைகளும், உரிமைகளும் அரசியல் ரீதியில் ஊர்ஜிதம் செய்யப்பட வேண்டும்.
 
5. இலங்கைவாழ் மக்களது சமூக, சமுதாயப் பிரச்சனைகள் இன, மத, சாதிய பாகுபாடுகள் இன்றி, அம் மக்களையொட்டிய அபிவிருத்தியின் போதே அற்றுப் போகும்.
 
6. மனிதவள வளர்ச்சிக்கு, அபிவிருத்தித் திட்டங்களுடன் கூடிய இனங்களிடையே புரிந்துணர்வை வளர்த்தெடுக்க கூடிய கல்வி சார்ந்த திட்டங்களும் இடம்பெற வேண்டும்.
 
(3) கோரிக்கைகள்
 
1. இலங்கையின் தேசிய பாதுகாப்பு என்ற வரையறுப்பு சகல இராணுவ வகைகளிலும் விஸ்தரிப்பு காண்பதைத் தவிர்த்து, மக்களின் நேரடி நிர்வாகத்தை (civil adminstration) மிகவிரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
 
2. இலங்கையின் பாதுகாப்பு படைகள், நிர்வாகம், மக்கள் சேவை என்ற சகல மத்திய, மாகாண அரச கருமங்களிலும் மக்களது விகிதாசாரம் பிரதிபலிக்கப்பட வேண்டும்.
 
3. சகல திட்டமிட்ட குடியேற்றத் திட்டங்களும் நிறுத்தப்பட வேண்டும். அவை தவிர்ந்த அபிவிருத்தி சார்ந்த குடியயேற்றத் திட்டங்கள் மக்களது மாகாண விகிதாசாரங்களை பிரதிபலிப்பவையாக அமைய வேண்டும்.
 
4. தடுப்பு முகாம்களில் உள்ளவர்களது பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டு அவர்களது ஜனநாயக உரிமைகள் உறுதிசெய்யப்பட வேண்டும். அவர்களது புனர்வாழ்வு துரிதமாக இடம்பெற வேண்டும்.
 
5. உள்நாட்டுப் போரினால் பாதிப்புற்றோருக்கு நீதி கிடைக்க வேண்டும், நிவாரணம் வழங்கப்படல் வேண்டும், தேவைக்கேற்ற அபிவிருத்திக்கான வளங்களும் வழங்கப்படல் வேண்டும். இவ்வகையில் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட இஸ்லாமிய மக்களது மீள்குடியேற்றம், நிவாரணம் என்பவையும் இடம்பெற வேண்டும்.
 
இவையே குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டுவதற்கான அடிப்படை நிலைப்பாடுகள், பிரகடனங்கள், கோரிக்கைகள் என ஆவணி 08, 2010ல் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 
ஆவணி 02 புரிந்துணர்வுக் குழு (லண்டன்). 

அறிக்கையும் அதில் கையெழுத்திட்டவர்களும்:

MoU_Report_By_MoUGroupLondon

குறைந்தபட்ச புரிந்துணர்வு தொடர்பான சந்திப்புக்களின் முன்னைய பதிவுகளுக்கு:

தமிழ் மக்களிடையே குறைந்தபட்ச புரிந்துணர்வின் அடிப்படைகள். : வி சிவலிங்கம்

MEMOMORANDUM OF UNDERSTANDING AMONG TAMIL DIASPORA IN LONDON : Victor Cherubim

குறைந்தபட்ச புரிந்தணர்வை ஏற்படுத்துவதற்கான வரையறையை நிர்ணயம் செய்தல் : சந்திப்பின் தொகுப்பு : த ஜெயபாலன்

‘தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’

அடுத்த நகர்வை நோக்கிய பன்மைத்துவ அரசியல் கலந்துரையாடல் : தேசம்

கொமன்வெல்த் போட்டி இன்று கோலாகலமாக ஆரம்பம்

commonwealt_logo.jpgகொமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகள் டெல்லியில் இன்று கோலாகலமாக தொட ங்குகின்றன. இரவு 7 மணிக்கு தொடக்க விழா நிகழ்ச்சி நடக்கிறது. எதிர்வரும் 14ம் திகதி வரை நடைபெறும்.

இன்று தொடக்க விழா நிகழ்ச்சி மட்டும் நடை பெறும். போட்டிகள் எதுவும் இல்லை. திங்கள் முதல் போட்டிகள் தொடங்குகிறது. 12 நாட்கள் நடைபெறும் இந்த காமன் வெல்த் விளையாட்டுத் திரு விழாவில் 71 நாடுகள் கலந்து கொள்கின்றன. 6700 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸ், ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஆகியோர் இணைந்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை ஆரம்பித்து வைக்கின்றனர்.

பொன்சேகா முறைப்படி மன்னிப்பு கோரினால் கவனம் செலுத்தப்படும் – ஜனாதிபதி

சரத் பொன்சேகாவிற்கு எதிரான தீர்ப்பினைத் தாம் ஏற்றுக்கொண்டமை தனிப்பட்ட பழிவாங்கலல்ல என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தாமே நியமித்த இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பை தாமே ஏற்காவிட்டால் அந்த நீதிமன்றக் கட்டமைப்பிற்கே பங்கம் ஏற்படுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சரத்பொன்சேகாவிற்கு மன்னிப்பளித்தல் சம்பந்தமாக முறைப்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டால் அப்போது அது விடயத்தில் கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

பொலன்னறுவையில் பெளத்த மதத் தலைவர்கள் பங்கேற்ற நிகழ்வொன்றில் இது தொடர்பில் (நேற்று முன்தினம்) கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இது நிதி மோசடி சம்பந்தமான குற்றமாகும். “என்னைக் கொலை செய்வதாகக் கூறிய போதும் நான் அது சம்பந்தமாக ஒரு வார்த்தையேனும் பேசவில்லை” எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி என்ற வகையில் எனக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டால் மன்னிப்பளிக்க முடியுமென அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப முறைப்படி செயற்பட்டால் அது தொடர்பில் கவனத்திற்கொள்ள முடியுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இராணுவ நீதிமன்றத்தில் இத்தீர்ப்பு ஒன்றும் புதியதல்ல. இந்த நீதிமன்றத்தின் மூலம் சுமார் 8000 பேர் தண்டனைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

சிறுவயதுத் திருமணம் பதிவாளர்கள் மீது சட்ட நடவடிக்கை

குறைந்த வயது சிறுவர்களுக்குத் திருமணம் செய்துவைக்கும் பதிவாளர்களை வேலை நீக்கம் செய்து, அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.நாட்டின் எப்பகுதியாயினும் இவ்வாறு செயற்படும் திருமணப் பதிவாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து தண்டனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

பொலன்னறுவையில் நேற்று நடை பெற்ற வடமத்திய மாகாண அபிவிருத்தி செயற்பாட்டு மீளாய் வுக் கூட்டத்தின் போது வெலிக்கந்தை பிரதேசத்தில் பெருமளவு சிறுமிகள் குறைந்த வயதில் திருமணம் முடித்து ள்ளதாகவும், 15 வயதிற்கு மேற்பட்ட ஒரு சிறுமி கூட அப்பிரதேசத்தில் தற்போது இல்லை யென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இது தொடர்பான முறைப்பாடு தமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவ்வாறு அங்கு சிறுவயதில் திருமணம் முடிந்த சிறுமிகளின் புகைப்படத்தையும் ஆதாரமாகக் காட்டினார். தனித்தனியே காணிகளைப் பெற்றுக் கொள்வது போன்ற காரணங்களுக்காக பெற்றோர் சிறு வயதிலேயே தமது பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர்.

இத்தகைய சிறு பிள்ளைகள் இன்னும் சில மாதங்களில் பிள்ளைகளைப் பெற்று எவ்வாறு அவற்றை வளர்க்கப் போகின்றார்கள் என்பதை அந்த பெற்றோர் ஏன் சிந்திக்கவில்லையெனவும் ஜனாதிபதி கேள்வியெழுப்பினார். சிறுவர் தினம் கொண்டாடப்படும் இவ் வாரத்தில் இத்தகைய அநியாயங்கள் நடப்பதைத் தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி கடுமையான உத்தரவு பிறப்பித்தார்.