“இலங்கை – இந்தியா இடையேயான மீன்பிடி தொடர்பான பிரச்சினைகள் இராஜதந்திர மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டும்.” – அமைச்சர் டக்ளஸ்

இந்திய மீன்பிடி படகுகள் சட்டவிரோதமாக நாட்டின் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் பிரச்சினை இராஜதந்திர மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

 

பாராளுமன்றத்தில் நடைபெற்ற கடற்றொழில் அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்திலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

 

அமைச்சுசார் ஆலோசனை குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானமாக இந்திய மீனவ படகுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க கடற்படையின் சம்பந்தப்பட்ட பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு தொடர்பிலும் இங்கு கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

 

இது தொடர்பில் கருத்து தெரிவித்த கடற்படை அதிகாரிகள், வழங்கப்பட்ட வழிகாட்டல்களுக்கு அமைய கைதுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், சட்டவிரோதமாக நுழையும் இந்திய மீனவ படகுகளின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

தென்னிந்திய அரசியல்வாதிகளுடன் இராஜதந்திர ரீதியில் கலந்துரையாடி இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் எனவும், அதற்காக இனம், பிரதேசம் மற்றும் கட்சி என்ற பேதமின்றி அந்தந்த பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம் எனவும் கடற்படை அதிகாரிகள் இதன்போது தெரிவித்துள்ளனர்.

 

இதேவேளை, மீனவர்களுக்கான கல்முனை வானொலி மத்திய நிலையத்தை மீள அமைக்கும் செயற்பாடுகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *