சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கு அமைய வற் வரியை அதிகரிப்பதாக அரசாங்கம் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. – கலாநிதி ஹர்ஷ டி சில்வா

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கு அமைய வற் வரியை அதிகரிப்பதாக அரசாங்கம் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொது போக்குவரத்து சேவை, கல்வி, சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்கள் மீது வரி விதிக்க வேண்டாம் என நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. திரிபோஷா, முட்டை உட்பட உணவு பொருட்களுக்கு வரி விதிக்குமாறு நாணய நிதியம் எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை. புதிய வரிக் கொள்கையினால் சமூக கட்டமைப்பு மிக மோசமாக பாதிப்படையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற சேர் பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சிப் பெறுவதற்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் ஒத்துழைப்பு வழங்குவோம். ஆனால், முறையான தரப்படுத்தல்களுக்கு அமைய தீர்மானங்களை எடுக்காமல அரசாங்கம் தன்னிச்சையாக செயற்படுமாக இருந்தால் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்க முடியாது என்பதை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.

மொத்த தேசிய உற்பத்தியை 15 சதவீதமாக அதிகரித்துக்கொள்ளாவிட்டால் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் ஆட்சியில் மொத்த தேசிய உற்பத்தி 20 சதவீதமாக இருந்தது. அதனை தொடர்ந்து ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் எடுத்த தவறான தீர்மானங்களினால் பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளானது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தூரநோக்கமற்ற வகையில் எடுத்த தவறான தீர்மானத்தினால் 600 பில்லியன் ரூபா முதல் 700 பில்லியன் ரூபா வரையான வரி வருமானம் இழக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாடு வங்குரோத்து நிலைக்குச் சென்றது. பொருளாதார பாதிப்புக்கு யார் காரணம் என்ற கேள்விக்கு உயர்நீதிமன்றம் உறுதியான பதிலளித்துள்ளது.

ராஜபக்ஷர்கள், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால், லக்ஷ்மன், திறைசேரியின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்பது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டு மக்களும் தற்போது தெளிவடைந்துள்ளார்கள்.

பெறுமதி சேர் வரி (வற்) தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் நேரடியாக எதனையும் குறிப்பிடவில்லை. அடுத்த ஆண்டு முதல் 15 சதவீதமாக உள்ள வற் வரி 18 சதவீதமாக அதிகரிக்கப்படும். தற்போது பூச்சியமாக உள்ள வரி வீதம் அடுத்த ஆண்டு முதல் 18 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்பதை வெளிப்படைத்தன்மையுடன் குறிப்பிடுங்கள்.

வற் வரி தொடர்பில் அரசாங்க நிதி தொடர்பான குழுவில் கலந்துரையாடப்பட்டது. ஆனால் குழு பரிந்துரைத்த விடயங்களை அரசாங்கம் செயற்படுத்த தயாரில்லை. அடுத்த ஆண்டு முதல் திரிபோஷா, முட்டை உட்பட சகல உணவுப் பொருட்கள் மீதும் வரி விதிக்கப்படவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கு அமைய வற் வரி அதிகரிக்கப்படுவதாக குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொது போக்குவரத்து, கல்வி, சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்கள் மீது வரி விதிக்க வேண்டாம் என நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

திரிபோஷா, முட்டை ஆகியவற்றுக்கு வரி விதிக்குமாறு நாணய நிதியம் எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை.

விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்குவதாக குறிப்பிட்டுக்கொண்டு கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார். ஆனால் தற்போது வற் வரிக்குள் மண்வெட்டி கூட உள்ளடக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும நலன்புரி திட்டம் முறையற்ற வகையில் வழங்கப்படுகிறது. இத்திட்டம் தற்காலிகமானதே தவிர நிலையானதல்ல. புதிய வரிக் கொள்கையினால் அடுத்த ஆண்டு சமூக கட்டமைப்பு மிக மோசமாக நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *