“தமிழர்களுக்கு எதிராக நடக்கும் அடாவடிகளை பொறுத்து வேடிக்கை பார்ப்பதுதான் ஐநாவின், மனித உரிமை ஆணைக்குழுவின் வேலை.” – துரைராசா ரவிகரன் 

மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், முதலில் வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தீர்வை கூறுங்கள் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நேற்று(10) வடக்கு, கிழக்கில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன, இந்நிலையில் அவ்விடயம் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் குறித்து மேலதிகமாக அவர் கருத்து தெரிவிக்கையில்,

“காணாமலாக்கப்பட்ட உறவுகள் 2500 நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வீதிகளில் நின்று தம் உறவுகளுக்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் முடிவுகள் எதுவுமில்லை. இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம். மனித உரிமை ஆணையக்குழு சம்பந்தமாக அல்லது ஐ.நா சம்பந்தமாகவோ எமக்கு எந்த தீர்வும் தரவில்லை.

எங்கள் நிலங்கள் பறிக்கப்படுகின்றன, மதங்கள் அழிக்கப்படுகின்றன, கடலிலே மீன்பிடிக்க முடியவில்லை, வயலிலே பயிர்கள் , விவசாயம், தோட்டங்கள் செய்ய முடியவில்லை, காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடி கிடைக்கவில்லை, சிறையிலிருப்பவர்களை விடுவிக்கவில்லை. இவ்வாறு இலங்கை அரசாங்கம் செய்யும் போது அதனை பொறுத்து வேடிக்கை பார்ப்பதுதான் ஐநாவின், மனித உரிமை ஆணைக்குழுவின் வேலை.

இவ்வாறான சூழ்நிலையில், சர்வதேச மனித உரிமைகள் தினத்தை அனுஷ்டிப்பது பிழை என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.” என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *