மேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக இதுவரை 77 வன்முறைச் சம்பவ முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள தேர்தலை கண்காணிப்பதற்கான கபே அமைப்பு தேர்தலுக்கு இன்னும் 8 தினங்களே உள்ள நிலையில் வன்முறைச் சம்பவங்கள் மேலும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் அவ்வமைப்பின் ஊடகப் பேச்சாளர் கீர்த்தி தென்னக்கோன் கருத்து தெரிவிக்கையில்;
நாம் தேர்தல் தொடர்புடைய முறைப்பாடுகளை கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி முதல் நேற்று புதன்கிழமை 15 ஆம் திகதிவரை பதிந்தும் அவதானித்தும் வருகின்றோம். மொத்தமாக 77 முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளோம். இதில் கம்பஹா மாவட்டத்திலே அதிகூடியதான 32 முறைப்பாடுகளை பதிவு செய்த நிலையில் இதற்கு அடுத்ததாக கொழும்பு மாவட்டம் உள்ளது. களுத்துறை மாவட்டத்தில் நாம் 15 முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளோம்.
இந்த 77 முறைப்பாட்டில் தாக்குதல் சம்பவங்கள் 54 ஆகவுள்ளதுடன் அச்சுறுத்தல் தொடர்பில் 3 இனையும் பதிவு செய்துள்ளோம். நாம் தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகமென அதிகளவான தகவலை பெற்றபோதும் எம்மால் இவ்விரண்டு தொடர்பில் முறையே 10 முறைப்பாடுகளையே எம்மால் ஊர்ஜிதப்படுத்த முடிந்தது.
தேர்தல் தொடர்பிலான பெரியளவான வன்முறைகள் 50% மானவைக்கு இரு பிரதான கட்சிகளே காரணமாகும். இந்நிலையில் இரு பிரதான கட்சித் தலைவர்களிடம் தமது கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் வன்முறையில் ஈடுபடாதிருப்பதற்கு உடனடியாக நடவடிக்கையெடுக்க வேண்டுமெனக் கபே கேட்டுள்ளது.